|
30 டிசம்பர் 2017 |
|
கிறிஸ்து பிறப்புக்காலம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றும்
நிலைத்திருப்பார்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் (2: 12-17)
என் பிள்ளைகளே, அவர் பெயரால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப் பட்டுள்ளன.
எனவே உங்களுக்கு எழுதுகிறேன். தந்தையரே, தொடக்கமுதல் இருக்கும்
அவரை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதுகிறேன்.
இளைஞர்களே, தீயோனை நீங்கள் வென்றுள்ளீர்கள். எனவே உங்களுக்கு
எழுதுகிறேன். சிறுவரே, நீங்கள் தந்தையை அறிந்துள்ளீர்கள். எனவே
உங்களுக்கு எழுதியுள்ளேன். தந்தையரே, தொடக்கமுதல் இருக்கும்
அவரை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன்;
இளைஞரே, நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள், கடவுளின் வார்த்தை உங்களுள்
நிலைத்திருக்கிறது; தீயோனை நீங்கள் வென்றுள்ளீர்கள். எனவே உங்களுக்கு
எழுதியுள்ளேன். உலகின் மீதும் அதிலுள்ளவை மீதும் அன்பு
செலுத்தாதீர்கள். அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால்
அன்பு இராது. ஏனெனில் உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை
நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை தந்தையிடமிருந்து வருவன
அல்ல. அவை உலகிலிருந்தே வருபவை. உலகம் மறைந்து போகிறது; அதன்
தீய நாட்டங்களும் மறைந்துபோகின்றன. ஆனால் கடவுளின் திருவுளத்தை
நிறைவேற்றுபவர் என்றும் நிலைத்திருப்பார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
தி.பா:
(96: 7-8. 8-9. 10)
=================================================================================
விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக.
மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்;
மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
8ய ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்.
-பல்லவி
8b உணவுப் படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள்
செல்லுங்கள்.
9 தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே,
அவர் திருமுன் நடுங்குங்கள்.
-பல்லவி
10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: `ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;
பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர்
மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.
-பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற
இனத்தாரே வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில், உலகின்மீது
எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் (2: 36-40)
ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும்
இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி
ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு
வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல்
நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.
அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின்
மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப்
பேசினார். ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து
முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத்
திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால்
நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் ஆண்டவரோடு
இணைந்திருப்போம்
ஒரு சிறு நகரத்தில் இளம்பெண் ஒருவர் தந்தையின் பராமரிப்பில்
வாழ்ந்து வந்தார். அவருடைய தாயானவர் அவர் பிறந்த ஓரிரு மாதங்களிலே
இறந்துபோனதால் தன்னுடைய தந்தையின் பரமாரிப்பில் வளரவேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டது. அவருடைய தந்தையும் தாயில்லாத குறையை தன்னுடைய
அளவு கடந்த அன்பினால் நிவர்த்தி செய்து வந்தார்.
அலுவலகத்திற்குச் செல்கின்ற நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில்
எங்கு சென்றாலும் அவர்கள் இருவரும் ஒன்றாகவே செல்வார்கள், ஒன்றாகவே
வருவார்கள். ஊரார் அவர்களுக்கு இடையே இருந்த உண்மையான தந்தை
மகள் உறவைக் கண்டு மெய் சிலிர்ந்து நின்றார்கள்.
நாட்கள் மெல்ல நகர்ந்து சென்றன. மகளுக்கு வயது ஏறிக்கொண்டே போனது.
ஒருசில நாட்களுக்குப் பிறகு மகள் தன்னுடைய தந்தையோடு நடைபயிற்சிக்குச்
செல்லவில்லை, வேறு எங்கேயும் அவரோடு செல்லவில்லை. தனியாகத்தான்
தந்தையானவர் எங்கு சென்றாலும் சென்றார். இதனால் தந்தைக்கு வருத்தம்.
மகளுக்கு என்னவாயிற்று? இப்போதெல்லாம் உடன்வரமாட்டேன் என்கிறாளே
என்று அவர் பலவாறாக யோசிக்கத் தொடங்கினார்.
சில நாட்கள் கழித்து தந்தைக்குப் பிறந்தநாள் வந்தது. அப்போது
மகள் தந்தைக்கு ஒரு ஜோடிச் செருப்பை பரிசளித்து, "அப்பா இந்த
செருப்பினை அணிந்துகொள்ளுங்கள். இதனை நான் என்னுடைய கைகளாலேயே
செய்தேன்" என்றாள். அப்போதுதான் தந்தைக்குத் தெரிந்தது தன்னுடைய
மகள் எதற்காக தன்னோடு இத்தனை நாட்களும் கூட வரவில்லை என்று.
சிறுது நேர மவுனத்திற்குப் பிறகு தந்தை மகளிடத்தில் இவ்வாறு பேசத்
தொடங்கினார். "அன்பு மகளே! நீ எனக்கு பிறந்த நாள் பரிசாக உன்னுடைய
கைகளாலேயே செய்த செருப்பினைப் பரிசாகத் தந்தது மகிழ்ச்சி அளிக்கின்றது.
ஆனால், இந்த செருப்பினை விடவும் நீ எப்போதும் போல் என்னோடு இருந்தால்
எனக்கு அதைவிட மகிழ்ச்சி வேறொன்றும் இல்லை".
தந்தை இவ்வாறு சொன்னதைக் கேட்ட மகள், அன்றிலிருந்து தன்னுடைய
தந்தையை விட்டுப் பிரியாது இருந்தார்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் மகளைப் போன்று வாழ்க்கையில் எத்துணை
துன்பங்கள், வேதனைகள், கலக்கங்கள், சந்தோசமான தருணங்கள் வந்தாலும்
ஒருபோதும் நாம் ஆண்டவரை விட்டு பிரியக்கூடாது என்கிற பாடத்தை
நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
நற்செய்தி வாசகத்தில் தன்னுடைய கடைசி காலம் வரைக்கும் ஆண்டவரோடு
(இணைந்து) இருந்த ஆசேர் குலத்தைச் சார்ந்த பானுவேலின் மகளாகிய
அன்னாவைக் குறித்து படிக்கின்றோம். அன்னாவைக் குறித்து நாம்
நிறைய தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும், நற்செய்தியில் அவரைக்
குறித்து சொல்லப்படுகின்ற செய்திகளைக் கொண்டு அவர் எப்படிப்பட்டவர்
என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
அன்னாவைக் குறித்து நாம் அறிந்து கொள்கின்ற முதல் செய்தி அவர்
ஒரு கைம்பெண் என்பதாகும். யூத சமூகத்தில் கைம்பெண்களின் நிலை
மிகப் பரிதாபமானது. கணவனை இழந்து நிற்கின்ற அவர்களுக்கு
துணைக்கு என்று யாரும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட
நிலையில் இருக்கும் அவர்களை யார்வேண்டுமாலும் வஞ்சிக்கக்கூடிய
அபாயம் அதிகமாக உண்டு. அன்னா தன்னுடைய கணவனை இழந்து நின்றபோது
அவர் நிறைய வேதனைகளையும் மன வருத்தங்களையும் அடைந்திருக்கக்கூடும்,
அதனால் அவர் கடவுளையே சபித்திருக்கக்கூட்டும். ஆனால் அவர் அப்படிச்
செய்யவில்லை. அவர் கடவுளின் திருச்சன்னிதானத்தில் தஞ்சம் அடைகின்றார்.
அன்னாவைக் குறித்து நாம் அறிந்துகொள்ளும் இரண்டாவது செய்தி.
அவர் தன்னுடைய 84 வயது வரைக்கும் கோவிலை விட்டு நீங்காமல்
நோன்பிருந்தும் இறைவேண்டல் செய்தும், ஆலயத் திருப்பணிகளைச்
செய்தும் கடவுளோடு இணைந்திருந்தார் என்பதாகும். கைம்பெண்ணாகிய
அவர் தன்னுடைய வாழ்வை கடவுளை சபித்துக்கொண்டே
கழித்திருக்கலாம். அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக, அவர்
இறைவனிடம் வேண்டிக் கொண்டும், இறைப்பணி செய்துகொண்டும்
இருந்தார். இதுதான் நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடமாக
இருக்கின்றது. நம்முடைய வாழ்க்கையில் நடைபெறக் கூடிய பல்வேரறு
நிகழ்வுகள் நம்மை கடவுளிடமிருந்து பிரித்து வைக்க தூண்டலாம்.
அன்னாவிற்கு அப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டாலும் அவர் கடவுளோடு
இணைந்திருந்தார். அதனாலே அவர் குழந்தை இயேசுவைக் காணும் பேறு
பெறுகின்றார்.
இன்றைக்கு நாம் கடவுளோடு ஜெபத்திலும் தவத்திலும் செயலிலும்
இறைவனோடு இணைந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப்
பார்க்கவேண்டும். யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு
கூறுவார், "என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய
முடியாது" என்று (யோவா 15:5)
எனவே, நாம் அன்னாவை[ப் போன்று ஆண்டவரோடு எப்போதும், வாழ்வின்
எல்லாச் சூழ்நிலைகளிலும் இணைந்திருப்போம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம். Fr.
Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
''அன்னா கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும்
பகலும் திருப்பணி செய்துவந்தார்'' (லூக்கா 2:37)
அன்னா என்னும் இறைவாக்கினர் கோவிலில் திருப்பணி செய்துவந்தார்
என்னும் செய்தியை லூக்கா தருவதில் ஆழ்ந்த பொருள் உள்ளது.
லூக்கா நற்செய்தியில் பெண்களுக்குத் தனி இடம் உண்டு. அவர்கள்
கடவுளின் திட்டத்திற்கு ஏற்ப ஒழுகுவதில் நிலைத்திருந்தார்கள்
எனவும், கடவுளுக்கு அஞ்சி நடந்து, கடவுளாட்சியின் கோரிக்கைகளுக்கு
ஏற்பத் தங்கள் வாழ்வை வடிவமைத்துக் கொண்டார்கள் என்றும் லூக்கா
தம் நற்செய்தி நூலில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். கோவிலை
விட்டு அன்னா நீங்காதிருந்தார்; அல்லும் பகலும் திருப்பணி
செய்துவந்தார் (லூக் 2:37). அன்னா புரிந்த திருப்பணி எதில் அடங்கியிருந்தது
எனத் துல்லியமாக வரையறுக்க இயலவில்லை. ஆனால், அந்த திருப்பணி
கோவில் வழிபாட்டோடு தொடர்புடைய ஒன்றே. கடவுளை வழிபடுவதற்கு ஒரு
சிலரால் மட்டுமே இயலும் என்னும் கொள்கை இங்கே கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது.
கடவுளை அணுகிச் செல்ல எல்லாருக்குமே உரிமை உண்டு.
அன்னா நோன்பிருந்தார் எனவும் லூக்கா கூறுகின்றார். பலிகளில்
கலந்துகொள்வதோடு நோன்பிருத்தலும் கடவுளின் மட்டில் பக்தியை
வெளிப்படுத்துகின்ற செயலாகக் கருதப்பட்டது. நோன்பிருக்கும் பழக்கம்
சமயம் சார்ந்த வழக்காக நெடுங்காலம் இருந்துவந்துள்ளது.
நோன்பின் வழியாக அடியார்கள் தங்கள் உடலையும் உள்ளத்தையும் ஒறுத்து,
கடவுளுக்குத் தம் உள்ளத்திலும் வாழ்விலும் முழு இடத்தை அளிக்க
முன்வருகின்றனர். நோன்பு எப்போதுமே சமுதாய அர்த்தம் கொண்ட ஒரு
செயலாகத்தான் இருக்கமுடியும். நோன்பின் வழி நம்மை ஒறுக்கும்போது
அதன் பயனாகப் பிறர் பயனுற வேண்டும் என்னும் சிந்தனையும் நம்மிடமிருந்து
அகன்றுவிடலாகாது. இவ்வாறு நோன்பு கடவுளுக்கு உகந்ததாக இருக்கும்;
நமக்கு நன்மை பயக்கும்; பிறருக்கு நாம் உதவிட நமக்கு வழியாகவும்
அமையும். அன்னா மீட்பின் அனுபவம் பெற்றதுபோல நாமும் நம்பிக்கையின்
அடியில் எழுகின்ற இறை அனுபவத்தைப் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
|
|