Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       28  டிசம்பர் 2017  
                                        கிறிஸ்து பிறப்புக்காலம்  (புதன்)
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5 - 2: 2

சகோதரர் சகோதரிகளே, நாங்கள் இயேசு கிறிஸ்துவிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை.

நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; உண்மைக்கேற்ப வாழாதவர் ஆவோம்.

மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.

ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோம் என்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்.

ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர். நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யர் ஆக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும்.

என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.
=================================================================================
 
பதிலுரைப் பாடல்தி.பா:  124: 2-3. 4-5. 7b-8 (பல்லவி: 7ய)
=================================================================================

பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.

2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது, 3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். பல்லவி

4 அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்; 5 கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். பல்லவி

7b கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம். 8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! பல்லவி

=================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 ஏரோது பெத்லகேமில் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18

ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும் வரை அங்கேயே இரும். ஏனெனில் குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்'' என்றார்.

யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்; ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார்.

இவ்வாறு, "எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது. ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றம் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கு ஏற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

அப்பொழுது "ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை'' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
முதல் வேத சாட்சிகள்
புதிய ஏற்பாட்டில் இயேசுவிற்காய் மரித்த முதல் வேத சாட்சிகள் மாசற்றக் குழந்தைகள் தான். இவர்கள் ஏரோதின் கொடிய இரக்க மற்ற செயலால் கொள்ள படடார்கள். நம் திருமறை நூல் கூறுகின்றது இவர்கள் இயேசுவிற்காய் , இயேசுவையே காணாத இவர்கள் உயிர்விடடார்கள்

இயேசு பிறந்த போது அன்னை மரியாளுக்கு யோசேப்பும் தங்குவதற்கு பெத்தலகேமில் இடம் கிடைக்க வில்லை. அதற்க்கு காரணம் அவர்கள் தங்க இடம் இருந்தும் அன்னை மரியாள் நிறை மாத கர்ப்பிணியாக இருந்ததால் அவர்களை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. திடீர் என்று பிரசவம் ஏற்படடால் பல மக்கள் மத்தியில் பிரசவம் பார்ப்பது வெகு கடினம். மற்றும் அங்குள்ளோர் அனைவருக்கும் அது தீடடான காரியமாக மோயீசனின் கடடளை கூறுவதால் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அவர்கள் ஆள் அரவம் இல்லாத மாடடை குடிலில் அங்கிருந்த இடையர்கள் உதவியோடு தங்கினார்கள். இயேசு பிறக்கும் வேளையில் அவர்கள் மாடுகள் அடையும் குடிலில் தான் தங்கி இருந்தார்கள் . அங்கு தான் இடையர்கள் இயேசுவையும் அன்னை மரியாளை தரிசித்தார்கள்.

அப்போது தான் வானில் வின் மீன் தோன்றியது. அதை பார்த்து உலகின் பல பகுதியில் இருந்தும் மூன்று அறிஞர்களும் புறப்பட்டு, பின் அவர்கள் மூவருமே ஒன்றாய் இணைந்து விண்மீன் வழி காட்டலில் எருசலேம் வருகின்றார்கள் . அவர்கள் எருசலேமை வந்தடைய எத்தனை நாள் எடுத்துக் கொண்டார்கள் என்பது தெரியாது. ஆனால் அவர்கள் தவறான கணிப்பில் ஏரோதை சந்திக்கின்றார்கள் . அவன் ஒரு நரி என்று ஆண்டவரே கூறு கின்றார். அந்த நரி தந்திரமாய் தன்னிடம் வந்த மூன்று அறிஞர்களோடு பேசி இயேசு பிறந்து இருக்கும் இடத்தை அறிய முயல் கின்றான். ஆனால் ஏரோதை விட்டு சென்று தேடுகையில் அவர்களுக்கு மீண்டும் விண்மீன் தோன்றி இயேசு இருக்கும் இடத்தின் நேரே நிற்கின்றது . ஆனால் இப்போது இயேசுவும் அன்னை மரியாளும், யோசேப்பும் இருந்த இடம் மாட்டு தொழுவம் அன்று. அன்னை மரியாளும், யோசேப்பும் கை குழந்தையோடு தங்கி இருந்த வீட்டிற்கு செல்கின்றார்கள் ஆக மாட்டு தொழுவத்தில் இருந்து நம் திருக் குடும்பம். ஒரு இல்லத்தை வாடகைக்கு பிடித்து அங்கு தங்கி இருக்கின்றது என்பதை நாம் மத்தேயு எழுதிய நற்செய்தியில் காணலாம்.

9அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. 10அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். 11வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ( மத் 2 : 9 - 11 )

அங்கு திரு குடும்பம் எத்தனை நாள் தங்கி இருந்தது என்று தெரியாது வந்திருந்த மூன்று அறிஞர்களும் வேறு வழி காடடப பட்டு ஏரோதை காணாமல் சென்றதால் , தனக்கு தகவல் கிடைக்காத கோபத்தில், விண்மீன் தோன்றிய காலம் , மற்றும் மூன்று அறிஞர்களும் தன்னை சந்தித்து வராமல் போனதால் காத்திருந்த காலம் இவை எல்லாவற்றையும் ஏரோது கணக்கிட்டு இரண்டு வயதுக்கு உற்படட குழந்தைகளை கொல்ல உத்தரவு போடுகின்றான். ஏரோதுவின் தீய சூழ்ச்சியில் திருக் குடும்பம் காப்பாற்ற பட்டு இருந்தாலும், இயேசுவிற்காய் அநேக குழந்தைகள் பலியாக வேண்டியது ஆனது.

16ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங்கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். ( மத் 2 : 16 ) எனவே இந்த இயேசுவுக்காக கொல்லப்பட்ட மறை சாட்சிகளை நாம் மறந்து விடக்கூடாது என்பதால் தான் நாளைய தினத்தை மாசில்லாக் குழந்தைகள் திருவிழா வென்று நம் திருச்சபை கொண்டாடுகின்றது.

சிறு பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது என்று கூறும் பிற சபையினர் இந்த குழந்தைகள் தங்கள் இரத்தத்தால் ஞானஸ்நானம் பெற்று கொண்டார்களே, இப்போது என்ன சொல்ல போக்கின்றிர்கள் உங்கள் மனம் இன்னும் மாற வில்லையா ?? இதை நான் கூற வில்லை திருமறை நூல் தான் கூறு கின்றது .
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
கிறிஸ்து பிறப்புக்காலம் 
(28-12-17)

மாசில்லாக் குழந்தைகள் விழா

அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் ஓர் ஓட்டப் பந்தயத்திற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ரெடி, ஸ்டெடி, கோ என்றதும், விளையாட்டுத் துப்பாக்கியின் சத்தம் கேட்க குழந்தைகள் ஓடத் தொடங்கினர்.

ஒரு 15 அடி தூரம் சென்றிருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடீரென்று கீழே விழுந்தது. அடிபட்ட காரணத்தால் அந்தக் குழந்தை அழ ஆரம்பித்தது. ஏதோ சத்தம் வரவே, ஓடிக்கொண்டிருந்த அனைத்துக் குழந்தைகளும் திரும்பிப் பார்த்தனர். பின்னர் அந்தக் குழந்தையை நோக்கி அவர்கள் ஓடி வந்தார்கள். அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டுக் கேட்டது, "இப்போது வலி போயிடுச்சா". அதைப் பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர். பின்னர் எல்லாரும் அந்தக் குழந்தையைத் தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடினார்கள்.

அதைப் பார்த்த விழாக்குழுவினரும் பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார்கள்.

ஆமாம், இது ஓர் உண்மை சம்பவம். இது நடந்தது வேறு எங்குமில்லை, நம் இந்தியாவில். அதுவும் ஹைத்ராபாத்தில் நடந்த சம்பவம்தான். அந்த விழாவை நடத்தியது மனநலம் குன்றியவர்களுக்கான தேசிய நிறுவம். அதில் கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம் குன்றியவர்கள். ஆம், அவர்கள் மனநலம் குன்றியவர்கள். ஆனால், உள்ளத்தால் உயர்ந்தவர்கள்

குழந்தைகள் எப்போதும் மாசு மருவற்றவர்களாய், கள்ளம் கபடு இல்லாதவகளாய் இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டாய் இருக்கின்றது.

இன்று நாம் மாசில்லாக் குழந்தைகளின் நினைவு நாளை/ விழாவைக் கொண்டாடுகின்றோம். கொடிய மனமும் பதவி வெறியும் பிடித்த ஏரோதுவால் கொல்லப்பட்ட குழந்தைகள்தான் இந்த மாசில்லக் குழந்தைகள். இவர்கள் ஆண்டவருக்காக இரத்தம் சிந்திய மறைசாட்சிகள் என்று சொன்னால் அது மிகையாகாது.

இயேசுவின் பிறப்பை விண்ணில் தோன்றிய ஒருசில அடையாளங்களை வைத்துக் கண்டறிந்து, விண்மீன் வழிநடத்துதலால் இயேசு பிறந்த இடம் நோக்கி வந்த ஞானிகள் ஏரோதுவிடம் சென்று, "புதிதாக அரசர் ஒருவர் பிறந்திருக்கின்றார், அவர் பிறந்த இடம் எங்கே?" என்று கேட்கின்றார்கள். அரசர் பிறந்த செய்தியைக் கேள்விப்பட்டுக் கலக்கம் அடைந்த ஏரோது, அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் மிகவும் தந்திரமாக மறைநூல் வல்லுநர்களை அழைத்து மெசியா பிறக்கும் இடம் எது என்று கேட்டறிந்து, அதனை அந்த ஞானிகளிடம் சொல்லி, "நீங்கள் புதிய அரசரை வணங்கிவிட்டு, அவர் எங்கு பிறந்திருக்கின்றார் என்ற செய்தியை என்னிடத்தில் சொல்லுங்கள், அப்போது நானும் அங்கு சென்று, அவரை வணங்குவேன்" என்று மிகத் தந்திரமாகப் பேசி, அனுப்பி வைக்கின்றான். ஆனால், கனவில் வானதூதரால் எச்சரிக்கப்பட்ட மூன்று ஞானிகள் ஏரோதிடம் சொல்லிக் கொள்ளாமல், மாற்று வழியில் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிச் செல்கின்றார்கள்.

ஞானிகள் தம்மை ஏமாற்றியதை அறிந்த ஏரோது, பெத்லகேமிலும் அதனைச் சுற்றிலும் இருந்த ஊர்களில் இருந்த இரண்டு வயதுக்கும் அதற்கு உட்பட்ட குழந்தைகளையும் கொன்று போடச் சொல்கின்றான். ஏரோது செய்த இந்த பாதகச் செயல் எத்துணை கொடியது என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னதாக, அவன் எவ்வளவு கொடியவன் என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஏரோது அடிப்படையிலே பதவிவெறி பிடித்தவனாக இருந்தான். தன்னுடைய அதிகாரத்திற்கு யாராரெல்லாம் எதிராக இருந்தார்களோ, அவர்களையெல்லாம் அவன் கொன்றுபோடத் தயங்கவில்லை, முதலில் எனகரிம் என்ற நீதிமன்றத்தில் இருந்த தலைவர்களைக் கொன்று போட்டான். பின்னர் தன்னுடைய மனைவி மரியம்மேவையும், இரண்டு மகன்களையும் கொன்று போட்டான். அந்த வரிசையில் தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் அவன் குழந்தை இயேசுவைக் கொல்ல முயல்கின்றான்.

குழந்தை இயேசுவைக் கொல்வதற்காக ஏரோது எத்தனைக் குழந்தைகளைக் கொன்றுபோட்டான்  என்றும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். பெத்லேகம் நகர் அளவில் சிறியது என்பதாலும் அதனைச் சுற்றி அதிகமான மக்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பதாலும் இருபதிலிருந்து இருப்பத்தைந்து குழந்தைகளுக்கு மேல் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஒரு முடிவுக்கு வரலாம். இது விவிலிய அறிஞர்கள் சொல்லுகின்ற செய்தி. ஆனால் இது விவிலியத்தைத் தவிர ஏனைய வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெற வில்லை என்பதால் இந்நிகழ்வு நடந்திருக்காது என்றும் சொல்வார்கள். எப்படி இருந்தாலும் பதவிக்காக குழந்தைகளைக் கொன்றுபோட்ட ஏரோதின் பாதகச் செயல் கண்டிக்கத் தக்கது. இன்றும் கூட நிறையப் பேர் தங்களுடைய சைக்காக, சுய விருப்பத்திற்காக குழந்தைகளைப் பலிகொடுக்கும் கொடூரங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் மனமாறவேண்டும்.  கொடுஞ்செயல்கள் மறைய வேண்டும்.

ஆகவே, மாசில்லா குழந்தைகளின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் குழந்தைகளைப் போன்று மாசில்லாதவர்களாக வாழ்வோம். குழந்தைகளின் நலன் காப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
மாசில்லாக் குழந்தைகள் விழா (டிசம்பர் 28)

நிகழ்வு

பெருநகர் ஒன்றில் வசித்து வந்த டோனிக்கு ஐஸ்கிரீம் என்றால் உயிர். ஒருநாள் அவன் ஐஸ்கிரீம் பார்லருக்குச் சென்று, "கஸாட்டா ஐஸ்கிரீம் எவ்வளவு?" என்று கேட்டேன்."இருபத்தைந்து ரூபாய்" என்றார் பணிப்பெண். கையிலிருந்த காசை எண்ணிப் பார்த்துவிட்டு, "வெண்ணிலா ஐஸ்கிரீம் எவ்வளவு?" என்று கேட்டான். "இருபது ரூபாய்" என்று பதில் வந்தது. "வெண்ணிலா ஐஸ்கிரீமே போதும்" என்று வாங்கி, பார்லரின் ஒரு மூலையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினான். "இருபது ரூபாய்தான் வைத்திருப்பான்" என்று நினைத்த பணிப்பெண், ஐஸ்கிரீம்க்கான பில்லை அவனிடத்தில் வந்து கொடுத்தார். பையன் போனபிறகு பில் பணத்தை எடுக்க வந்த அவர் அழத் தொடங்கினார்.

பையனிடம் இருப்பத்தைந்து ருபாய் இருந்தது. பணிப்பெண்ணுக்கு டிப்ஸ் வைக்க வேண்டும் என்பதற்காக "கஸாட்டா ஐஸ்கிரீம்" சாப்பிடும் ஆசையைத் தியாகம் செய்துவிட்டு, ஐந்து ரூபாய் டிப்ஸ் வைத்துவிட்டுச் சென்றிருந்தான் அந்த சிறுவன்.

பணிப்பெண்ணுக்காக தன்னுடைய ஆசையைத் துறந்த அந்த சிறுவன் டோனியின் தியாக உள்ளம் உண்மையிலே பாராட்டுக்குரியது. இத்தகைய தியாக உள்ளமும், மாசற்ற நெஞ்சமும் கொண்ட குழந்தைகளுக்குத்தான் இன்றைக்கு நாம் "மாசற்ற குழந்தைகள் விழா" என்ற பெயரில் விழா எடுத்துக் கொண்டாடுகின்றோம்.

வரலாற்றுப் பின்னணி

கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகள் மூவர், ஏரோது மன்னனிடம் சென்று, "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?, அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்" என்று சொன்னதைக் கேட்டதும், அவன் கலங்கினான். அவனோடு சேர்ந்து எருசலேம் நகர் முழுவதும் கலங்கியது. பின்னர் அவன் அவர்களைத் தனியாக அழைத்து,"நீங்கள் சென்று குழந்தையைக் குறித்து திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்" என்றான். ஆனால் ஞானிகள் மூவரும் ஏரோது மன்னனிடம் போகவேண்டாம் என்று கனவிலே எச்சரிக்கப்பட்டதால் அவர்கள் வேறு வழியாகப் போய்விடுகிறார்கள். இதனால் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை அறிந்த ஏரோது மன்னன், பெத்லகேமையும் அதைச் சுற்றிலும் உள்ள ஊர்களிலும் இருந்த இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுபோடுகிறான். அப்படி இயேசுவுக்காக, இயேசுவுக்குப் பதிலாகக் கொல்லப்பட்டவர்கள்தான் இந்த மாசில்லா குழந்தைகள் (மத் 2: 1-18).

யூத வரலாற்று ஆசிரியரான பிலாவியுஸ் ஜோசபுஸ் தன்னுடைய வரலாற்றுப் புத்தகத்தில் இந்த நிகழ்வைக் குறித்து எங்கும் குறிப்பிடாததால், ஒருவேளை இந்தக் கொடிய நிகழ்வில் நிறையக் குழந்தைகள் இறந்திருக்க மாட்டார்கள் என்று ஒருசிலர் சொல்வர். இன்னும் ஒருசிலர் பெத்லகேமையும் அதன் சுற்றுப்புறத்தையும், அங்கு வாழ்ந்த மக்கள்தொகையையும் வைத்துப் பார்க்கும்போது முப்பதிலிருந்து முப்பத்தைந்து குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சொல்வர். எப்படி இருந்தாலும் தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுவோ என்று பயந்து பச்சிளம் குழந்தைகளைக் கொன்றுபோட்ட ஏரோதின் ஈவு இரக்கமற்ற செயல் உண்மையிலே வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

இந்த ஏரோதைக் குறித்து முன்பு சொன்ன அதே வரலாற்று ஆசிரியர் பிலாவியுஸ் ஜோசபுஸ், "ஏரோதுக்கு பிள்ளையாகப் பிறப்பதை விட, அவனுடைய வீட்டில் பன்றியாகப் பிறப்பது நலம்" என்பார். அந்தளவுக்கு ஏரோது தன்னுடைய பதவிக்கு பங்கம் வந்துவிடுமோ எனப் பயந்து தன்னுடைய பிள்ளைகளைக்கூட கொன்றுபோட்ட அரசன். கிமு. 35 ஆம் ஆண்டு தன்னுடைய மருமகனையும், கிமு 34 ஆம் ஆண்டு தன்னுடைய சகோதரன் ஜோசப்பையும், கிமு 29 ஆம் ஆண்டு தன்னுடைய மனைவி மரியம்மையும், அதே ஆண்டில் தன்னுடைய மனைவியின் அன்னை அலெக்ஸாண்ட்ரா என்பவரையும், கிமு 25 ஆம் ஆண்டில் தன்னுடைய இன்னொரு மருமகன் செஸ்டோபர் என்பவரையும், கிமு 4 ஆம் ஆண்டில் மகன் அந்திபத்தார் என்பவரைக் கொன்றுபோட்டான். இப்படியாக ஏரோது மன்னன் தன்னுடைய பதவியைக் காத்துக்கொள்ள, அதற்குத் தடையாக இருக்கும் யாரை வேண்டுமானாலும் கொன்றுபோடும் அரக்கனாக இருந்தான். இப்படிப்பட்டவன் இயேசுவைக் கொல்வதற்காக இரண்டு வயதுக்கு உட்பட்ட ஆண்குழந்தைகளைக் கொன்றுபோட்டதில் வியப்பேதும் இல்லை.

ஏரோது நிகழ்த்திய இந்தக் கொடிய நிகழ்வு பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பாரவோன் மன்னன் மோசேயைக் கொல்வதற்காக ஏனைய யூதக் குழந்தைகளைக் கொன்றுபோட்டதை நியாபகப்படுத்துகின்றது (விப 1:22). ஆனால் மோசே எப்படி பாரவோனின் கையிலிருந்து தப்பித்தாரோ அதுபோன்று குழந்தை இயேசுவும் அவருடைய தாய் மரியாவும் ஏரோதின் கைகளில் சிக்கிக்கொள்ளாமல் யோசேப்பு வந்த கனவில் மூலம் எச்சரிக்கப்பட்டு எகிப்துக்கு தப்பி ஓடுகிறார்கள். அவன் இறந்தபிறகே தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிவருகின்றார்கள்.

இயேசுவுக்காக தங்களுடைய இன்னுயிரைத் துறந்த மாசற்ற குழந்தைகளுக்கு விழா எடுத்துக்கொண்டாடும் வழக்கம் எப்போது தொடங்கப்பட்டது என்று அறிய முற்படும்போதும் முதல் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது என்பதை அறிந்துகொள்ளலாம். பீட்டர் கிறிசோஸ்லோகுஸ் என்பவர் தான் இதனைத் தொடங்கினார். தூய அகுஸ்தினாரோ "மாசற்ற குழந்தைகளின் இறப்பை விண்ணில் மொட்டுகள் மலருகின்றன" என்பார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

மாசற்ற குழந்தைகளின் விழாவை கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.


குழந்தைகளைப் பேணுவோம்


"உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவர்கள் உங்கள் மூலம் இந்த உலகிற்கு வந்துள்ளார்களே தவிர, உங்களில் இருந்து அல்ல. உங்களுடனேயே இருந்தாலும் அவர்கள் உங்களுடையவர்கள் அல்ல. அவர்களுக்கு உங்கள் அன்பை வழங்கலாமே தவிர, உங்கள் சிந்தனையை வழங்கவே முடியாது. ஏனெனில் அவர்கள் அவர்களுக்கான சிந்தனையை வழங்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் தேகங்களுக்கு ஒரு இல்லத்தை நீங்கள் வழங்கி இருக்கலாம்; ஆன்மாக்களுக்கு அல்ல" என்பான் லெபனான் நாட்டுக் கவிஞன் கலீல் கிப்ரான். குழந்தைகள் கடவுளால் அனுப்பட்டவர்கள்; அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். எனவே அவர்கள்மீது நம்முடைய சிந்தனையைத் திணிக்காமல் அவர்களை அவர்களாகவே வாழவிட வேண்டும் என்பதுதான் கவிஞர் கூறும் செய்தியாக இருக்கின்றது.

இன்றைக்கு குடும்பங்களில், சமூக வெளியில் குழந்தைகள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு உரிமை மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; அதைவிடவும் இந்த சமூகத்தில் நடைபெறும் பெரும்பாலான வன்முறைகள் குழந்தைகளுக்கு எதிராகக் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பாலியல் வன்கொடுமைகள், கடத்தல்கள், குழந்தைத் தொழிலாளர் முறை இவையும், இன்ன பிறவும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் ஆகும். இவற்றிற்கு எதிராக பெரியவர்களாகிய (?) நாம் அணிதிரல்வதோடு மட்டுமல்லாமல், நம்மோடு வாழக்கூடிய குழந்தைகளின் நலன்களைப் பேணுவதும் நம்முடைய கடமையாகும். ஏனென்றால் எழுத்தாளர் திரு. சி.எம்.செந்தில்குமார் சொல்வது போன்று,"ஒரு சமூகத்தின் வளர்ச்சி, அந்தச் சமூகம் குழந்தைகளைப் பராமரிக்கின்றது என்பதில் அடங்கியிருக்கின்றது".

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, தன்னிடம் ஆசிர்வாதம் வாங்க வந்த குழந்தைகளைத் தடுத்த சீடர்களைக் கடிந்துகொள்கிறார்; சிறு குழந்தைகளைகளுக்கு இடரலாக இருப்போரின் கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி கடலில் ஆழ்த்துவது நலம் என்று சொல்கிறார் (மத் 18: 6). இதைவிட மேலாக"சிறுபிள்ளையைப் போல தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப்பெரியவர் என்கிறார் (மத் 18:4). ஆகவே, நாம் ஒவ்வொருவரும் குழந்தைகளின் நலனைப் பேணுகின்றவர்களாகவும் அவர்களுக்கு தகுந்த மதிப்புத் தருகின்றவர்களாகவும் குழந்தை உள்ளம் கொண்டவர்களாகவும் வாழ முயற்சி எடுக்கவேண்டும்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஜெர்மனியில் உள்ள ஒரு மழலையர் பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்து வந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பறைக்குள் நுழைந்ததும் அங்கிருக்கும் மாணவர்களைத் தலைதாழ்த்தி வணங்குவார். இவ்வழக்கம் நீண்ட நாட்களாக தொடர்ந்துகொண்டிருந்தது. இதனைக் கூர்ந்து கவனித்து வந்த ஒரு பணியாளர் அந்த ஆசிரியரிடம்,"ஐயா! வழக்கமாக மாணவர்கள் தானே ஆசிரியர்களைத் தலைதாழ்த்தி வணங்குவார், ஆனால் நீங்களோ மாணவர்களைத் தலைதாழ்த்தி வணங்குகிறீர்களே, அது ஏன்?" என்று கேட்டார். அதற்கு அந்த ஆசிரியர்,"இந்த மாணவர்களிடமிருந்து பிற்காலத்தில் பெரிய பெரிய தலைவர்கள் தோன்றலாம். அப்போது அவர்களை வணங்குவதற்கு நான் உயிரோடு இருக்கிறேனா என்று தெரியவில்லை, அதனால்தான் நான் இப்போதே வணங்குகிறேன்" என்றார்.

அந்த ஆசிரியர் சொன்னதுபோன்று அந்த வகுப்பறையிலிருந்து ஒரு மிகப்பெரிய ஆளுமை தோன்றினார். அவர் வேறுயாருமல்ல திருச்சபையில் பெரும் மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்த மார்டின் லூதர்.

இன்றைய குழந்தைகள், நாளைய உலகின் தலைவர்கள் என்பது எவ்வளவு உண்மை. அதைத் தான் மேலே சொல்லப்பட்ட நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது.

ஆகவே, மாசில்லாக் குழந்தைகளின் விழாவை கொண்டாடும் நாம் நாம் வாழும் இந்த சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் வன்கொடுமைகளைத் தடுக்க அணியமாவோம்; நம்மோடு வாழும் குழந்தைகளின் நலன் பேணுவோம்; குழந்தை உள்ளம் கொண்டு வாழுவோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். Fr. Maria Antonyraj, Palayamkottai.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!