|
24 டிசம்பர் 2017 |
|
திருவருகைக்காலம்
மூன்றாம் ஞாயிறு
(புதன்கிழமை) |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவர் என்னோடு இருக்கிறார்.
இறைவாக்கினர் சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் (2 சாமு.
7:1-5,8-12,14,16)
தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியப்பின், சுற்றிலிருந்த
எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார்.
அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, பாரும் நான்
கேதுரு மரங்களான அரண்மனையில் நான் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ
கூடாரத்தில் வாழ்கிறது என்று கூறினார். அதற்கு நாத்தான் நீர்
விரும்பிய அனைத்தையும் செய்துவிடும்: ஏனெனில் ஆண்டவர் என்னோடு
இருக்கிறார் என்று அரசனிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின்
வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது. நீ சென்று, என் ஊழியன்
தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தாக்குவதற்காக
எனக்கு கோவில் கட்டப்போகிறாயா? எனது ஊழியன் தாவீதிடம் படைகளின்
ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக
விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன்.
நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்: உன் கண்முன் உன்
எதிரிகள் அனைவரையும் அழித்தேன்: மேலும் உலகில் வாழும் பெரும்
மனிதர் போல் நீ புகழுறச் செய்தேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு
ஓர் இடத்தை அளிப்பேன். அவர்கள் அந்த இடத்திலேயே வாழ வைப்பேன்.
என் மக்களாகிய இஸ்ரயேல் மீதும் நீதித் தலைவர்களை ஏற்படுத்திய
நாள்களாகிய தொடக்கத்தில் தீயவர்கள் அவர்கள் ஒடுக்கப்பட்டது போல
இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும்
எனக்கு நான் ஓய்வு அளிப்பேன். மேலும் ஆண்டவர் தாமே என்
வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். வாழ் நாள்
நிறைவுபெற்று நீ என் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்கு
பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது
அரசை நான் நிலைநாட்டுவேன். நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன்.
அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப
அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். முன்பாக உனது
குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை
என்றுமே நிலைத்திருக்கும்!
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
தி.பா: 89: 1-2, 3-4, 26, 28
=================================================================================
பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர்
எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். உமது பேரன்பு என்றென்றும்
நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது.
பல்லவி
நீர் உரைத்தது; |நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை
செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது;
உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத்
தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன். பல்லவி
நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை| என்று அவன் என்னை
அழைப்பான். அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு
செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும்
நிலைத்திருக்கும். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக!
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் (16:2-27)
சகோதரர் சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும்
நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர்.
ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும்
வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது
தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை
கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின்
வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! விடிவிண்மீனே, முடிவிலா ஒளியின் சுடரே,
நீதியின் கதிரவனே, இருளிலும் மரண நிழலிலும் அவதிப்படுவோரைச் சுடர்வீசி
ஒளிர்விக்க வந்தருளும். அல்லேலூயா
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் (லூக். 1:26-38)
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள்
கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம்
அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும்
பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர்
மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு
இருக்கிறார்" என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி,
இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர்
அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்: கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.
இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்: அவருக்கு இயேசு என்னும்
பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்: உன்னத கடவுளின் மகன்
எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள்
அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும்
ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது " என்றார்.
அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!
" என்றார். வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத
கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்
போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய
எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார்.
கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.
ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார். பின்னர் மரியா,
"நான் ஆண்டவரின் அடிமை: உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார்.
அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
"வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்" கடவுளின்
அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப்
பெறுவீர்" அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" என்றார்"
(லூக்கா 1"30-31)
மரியாவிடம் வந்த கபிரியேல் வானதூதர் கடவுளின் செய்தியை அவருக்கு
எடுத்துரைக்கிறார். ஆனால் மரியாவுக்கோ ஒரே குழப்பமும் கலக்கமும்தான்
மிஞ்சியது. மரியாவின் வழியாகப் பிறக்கவிருக்கும் குழந்தை கடவுளின்
வல்லமையால் இவ்வுலகுக்கு வரும் என்ற செய்தி மரியாவுக்கு அதிர்ச்சியாகத்தான்
இருந்திருக்க வேண்டும். ஆனால், வானதூதர் மரியாவுக்குத் தெளிவு
வழங்குகின்றார். மரியா கடவுளின் தனிப்பட்ட அன்புக்கு உரித்தானவர்
என்றும், கடவுளின் அருள் அவரிடம் நிறைவாக உள்ளது என்றும் வானதூதர்
உறுதிகூறுகின்றார். கடவுளின் அருள் நம் எல்லோருக்கும் கொடையாக
வழங்கப்படுகிறது. ஆனால் மரியா கடவுளின் மீட்புத் திட்டத்தில்
ஒரு சிறப்பிடம் வகிக்கிறார். அவர் கடவுளின் ஒரே மகனை இவ்வுலகிற்குப்
பெற்று வழங்கினார். இப்பெரும் பேறு மரியாவுக்குக் கடவுள் வழங்கிய
சிறப்புக் கொடை எனலாம். இதனால் மரியா இயேசுவின் தாய் மட்டுமல்ல,
இயேசுவின் வழியாக அருள்நிலையில் கடவுளின் பிள்ளைகளாக
மாறியிருக்கின்ற நமக்கும் அவர் தாயாகின்றார்.
மரியா ஈந்த மகன் மரியாவுக்கு மட்டும் உரியவரல்ல, அவர் உலகின்
சொத்து. அவருடைய பெயரே இந்த ஆழ்ந்த பொருளை விளக்கிநிற்கின்றது.
"இயேசு" என்னும் பெயருக்கு மீட்பர் என்பது பொருள். இயேசு நம்மை
மீட்கின்றார் என்றால் நாம் ஏதோ அடிமைநிலையில் இருந்ததால் நமக்கு
மீட்புத் தேவைப்பட்டது என்பதை நாம் உணரலாம். மனித வாழ்க்கை அனுபவமாகிய
பாவமும் சாவும் நம்மை அடிமைப்படுத்திய நிலையில் இயேசு கொணர்ந்த
மீட்பு நமக்கு ஒரு புதிய நிலையை வழங்குகிறது. நாம் பெறும்
புதிய நிலை கடவுளின் அன்பில் நாம் நிலைத்திருப்பதைக்
குறிக்கும். கடவுளோடு நமக்குள்ள நெருங்கிய உறவு நம்மை அவரோடு
இறுகப் பிணைப்பதால் நாம் கடவுளின் வல்லமையை நம் வாழ்க்கையில்
உணரமுடிகிறது. எவ்விதத் தயக்கமும் இன்றி நாம் கடவுளின் வழியில்
நடந்தால் அவர் தரும் அருள் ஒருநாளும் குறைபடாது.
மன்றாட்டு:
இறைவா, எங்கள் வாழ்க்கையில் தோன்றுகின்ற அச்சங்களை அகற்றியருளும்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
நம்முடைய
விருப்பத்தை அல்ல, இறைவிருப்பத்தை நிறைவேற்ற முன்வருவோம்
ஒருமுறை கல்கத்தா நகரில் இருந்த ஒரு பிரபல பள்ளியில்
ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அன்னைத்
தெரசாவைச் சந்தித்து, அவரோடு நீண்டநேரம் உரையாடினார். அப்போது
அவர் அன்னையிடம், "அன்னையே! நான் இந்த நகரில் உள்ள ஒரு பிரபலப்
பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இங்கு
படிக்கக்கூடிய மாணவர்களில் பெரும்பாலானர்கள் உயர்குடி
வகுப்பைச் சார்ந்தார்கள். ஆனால் என்னுடைய பிரச்சனை அதுவல்ல.
நான் பணிசெய்யக்கூடிய இடம் இதுவல்ல, நான்
தொழுநோயாளர்களுக்குத்தான் பணிசெய்யவேண்டும் என்ற உணர்வானது
நீண்டநாட்களாக என்னுடைய மனதை தைத்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய
சூழலில் நான் என்ன செய்வது?, நீங்கள்தான் எனக்கு
வழிகாட்டுங்கள்" என்று வேண்டிநின்றான்.
அதற்கு அன்னை அவனிடத்தில், "எனக்கும் இத்தகைய ஓர் எண்ணம்
தோன்றியது. நான் ஆசிரியப் பணியைச் செய்வதா? அல்லது
சமுதாயத்தில் உள்ள ஏழை எளியவருக்கு பணிசெய்வதா? என்ற குழப்பம்
என்னையும் வாட்டியது. ஆதலால் நான் இறைவனிடத்திலே என்னை
முழுதாய் ஒப்படைத்தேன், இறுதியில் இறைவன் என்னை ஏழை
எளியவருக்குப் பணிசெய்ய அழைத்தார். நீயும் உன்னை இறைவனிடத்தில்
ஒப்படைத்து ஜெபி. இறைவன் உன்னை தொழுநோயாளர்களுக்கு மத்தியில்
பணிசெய்ய அழைத்தால், தாராளமாய் மனமுவந்து செல், இறைவனின்
விருப்பத்திற்குத் தடையாக இருக்க நாம் யார்?" என்று சொல்லி
அவரை அனுப்பி வைத்தார்.
அந்த இளைஞர் சிலநாட்கள் இறைவனிடம் தனித்திருந்து ஜெபித்து,
தொழுநோயாளர்களுக்குப் பணிசெய்வதே இறைவிருப்பம் என உணர்ந்து,
அதன்படியே தொழுநோயாளர்களுக்குப் பணிசெய்ய தன்னுடைய வாழ்வையே
முழுதாய் அர்ப்பணித்தார்.
நாம் நமது விருப்பத்தை அல்ல, இறைவிருப்பத்தை நிறைவேற்ற
வேண்டும் என்ற சிந்தனையை இந்த நிகழ்வானது நமக்கு
எடுத்துக்கிறது. திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறான இன்று
நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் சிந்தனையும் அதுவாகத்தான்
இருக்கின்றது. எனவே, நாம் இறைவனின் விருப்பத்தை எப்படி
நிறைவேற்றுவது என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
இன்றைய முதல்வாசகத்தில் தாவீது அரசர் இறைவாக்கினர்
நாத்தானிடம், "நான், கேதுரு மரங்களாலான அரண்மனையில்
வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது"
என்று சொல்லி ஆண்டவருக்காக ஆலயம் கட்டவேண்டும் என்ற தன்னுடைய
விருப்பத்தை எடுத்துத்துரைக்கின்றார். அதற்கு நாத்தான்
இறைவாக்கினரும், "நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்;
ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்கிறார். ஆனால் அன்று
இரவே கடவுள் நாத்தான் இறைவாக்கினருக்குத் தோன்றி, தாவீது ஆலயம்
கட்டவேண்டாம் என்றும், தாமே அதனைக் கட்ட இருப்பதாகும்
தாவீதிடம் சொல்லச் சொல்கிறார்.
இங்கே தாவீது தன்னுடைய விருப்பத்தின்படி நடக்க இருந்தார்.
ஆனால் ஆண்டவரின் விருப்பமோ வேறொன்றாக இருந்தது. ஆண்டவர், தாமே
என்றுமுள்ள நிலையான ஆலயத்தைக் கட்டுவதாக சொல்கிறார். எதற்காக
ஆண்டவர் தாவீதை ஆலயம் கட்டவேண்டாம் என்று சொன்னார் என்பது நமது
சிந்தனைக்கு உரியதாக இருக்கிறது. இதற்கான பதிலை 1 குறிப்பேடு
22: 7,8 வசனங்களில் வாசிக்கின்றோம், "தாவீது தம் மகன் சாலமோனை
நோக்கி, "என் மகனே, கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு ஒரு
கோவிலைக் கட்ட என் மனத்தில் நினைத்திருந்தேன். மாறாக, ஆண்டவர்
என்னோடு பேசி, நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய், பெரும்
போர்களை நடத்தினாய்; எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான
குருதியைச் சிந்தியதால், என் பெயருக்கு நீ கோவில்
கட்டவேண்டாம்" என்று கடவுள் தன்னிடத்தில் சொன்னதாகச்
சொல்கிறார். எனவே, தாவீது மிகுதியான குருதியைச் சிந்தியதாலும்,
மனித விருப்பத்தின்படி நடந்ததாலும் அவனால் ஆலயத்தைக்
கட்டமுடியவில்லை.
ஆனால் இறைவிருப்பத்தின்படி நடந்த ஒருவர் ஆண்டவருக்காக தன்னுடைய
உடலையே கோவிலாகக் கட்டுகிறார். அவர் வேறுயாருமல்ல, அன்னை
மரியாதான். அன்னை மரியாளிடம் ஆண்டவரின் தூதர் வந்து,
"கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும்
பெயரிடுவீர். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும்
ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்று
சொல்கிறபோது அவர் குழம்பிப்போகிறார். ஆனால் வானதூதர் அவளிடம்
எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னபிறகு, "நான் ஆண்டவரின் அடிமை;
உம சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று சொல்லி இறைவிருப்பம்
நிறைவேற தன்னையே முழுமையாக இறைவனுக்குக் கையளிக்கிறார். ஆகையால், தன்னுடைய விருப்பத்தின்படி நடந்த தாவீதால்
ஆண்டவருக்கு ஆலயம் கட்டமுடியவில்லை, மாறாக இறைவிருப்பத்தின்படி
நடந்த அன்னை மரியாவால்தான் ஆண்டவருக்கு தன்னுடைய உடலால்
இறைமகன் இயேசு வாழ்வதற்கு ஆலயம் கட்ட முடிந்தது. நாம்
இறைவிருப்பத்தின்படி நடக்கின்றபோது இறைவன் நம் வழியாய்
அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்வார் என்பது.
நாம் நம்முடைய வாழ்க்கையில் இறைவிருப்பத்தின்படி நடக்கின்றோமா?
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பலநேரங்களில் நாம்
நம்முடைய விருப்பத்தின்படியே நடக்கிறோம், நம்முடைய
எண்ணத்தின்படியே வாழ்கிறோம். அதனால்தான் என்னவோ கடவுளது
அற்புதங்களும், அதிசயங்களும் இப்புவியில் நிகழாமலே
போய்விடுகின்றன. ஆதலால் நாம் அன்னை மரியாவைப் போன்று, நம்
ஆண்டவர் இயேசுகிறிஸ்துவைப் போன்று இறைவனின் திருவுளம் என்ன?
அவரது திட்டம் என்ன என்பதை உணர்ந்து அதற்கேற்ப நமது வாழ்வை
அமைத்துக்கொள்வோம்.
அடுத்ததாக நாம் இறைவனிடம் விருப்பத்தின்படி நடக்கின்றபோது
இறைவன் என்றுமே நம்மோடு இருப்பார், நமக்குத் துணையாக இருப்பார்
என்பது உறுதி. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவரின்
விருப்பத்தின்படி நடந்த மரியாவைப் பார்த்து வானதூதர், "அருள்
நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்று
வாழ்த்துகிறார். ஆகவே, நாம் இறைவிருப்பத்தின்படி நடக்கின்றபோது
இறைவனின் துணையைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.
1964 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் சுதா சந்திரன் என்பவர்.
நடனத்தையே தனது உயிர்மூச்சாக கருதி வாழ்ந்தவர்;
பக்தியுள்ள பெண்மணி. அப்படிப்பட்டவருடைய வாழ்வில் 1981 ஆண்டு
ஜூன் மாதம் ஒரு மிகப்பெரிய சோகம் நிகழ்ந்தது. ஆம், சுதா
சந்திரன் தன்னுடைய 17 வயதில் பயங்கர வாகன விபத்தில் சிக்கி தனது வலதுபாதத்தையே இழக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனினும்
அவர் தொடர்ந்து நடனப்பயிற்சியில் ஈடுபட்டு, ஆசிய
துணைக்கண்டத்தின் சிறந்த நடனத்
தாரகைகளில் ஒருவராக
புகழ்பெற்றார்.
இந்த பெருமைக்கும் புகழுக்கும் அடிப்படைக் காரணமாக அவர்
சொல்வது: கடவுளின் துணை என்பதாகும். இதைக் குறித்து அவர்
பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
நான் திருச்சியிலிருந்து பஸ் ஒன்றில் பயணம்
செய்துகொண்டிருந்தபோது பெரிய விபத்தொன்று ஏற்பட்டு,
எனது வலது காலில்
முறிவுகளும் வெட்டுக் காயங்களும்
ஏற்பட்டன. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல
மாதங்கள் சிகிச்சை பெற்றுவந்தேன். அந்தநாட்களில் எல்லாம்
என்னுடைய வாழ்க்கையே முடிந்துபோய்விட்டது என நினைத்தேன்.
பின்னர் எனக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. அந்தக் காலை
வைத்துக்கொண்டு என்னால் நடப்பதற்கே கடினமாக இருந்தது. ஆனாலும்
எனக்குள் நான் ஒரு நடனமங்கையாக உருவாகவேண்டும் என்ற எண்ணமும்,
கடவுள் பக்தியும் அதிகமாக இருந்தது, அது என்னைத் திடம்கொள்ள
வைத்தது.
இரண்டு மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் ஒருநாள் நான் மேடை
ஏறுவதற்கு முன்னால் எனக்கு பதற்றம் ஏற்பட்டது. அப்போது
எனது பாட்டி, "கவலை வேண்டாம், கடவுள் உன்னோடு இருக்கிறார். அதிசயம் நடக்கட்டும்" என்று சொல்லி என்னை வாழ்ந்த்தினார்.
அவளது வார்த்தைகள் எனக்கு இன்னும் திடமளித்தது. நம்ப
முடிந்தால் நம்புங்கள். நிகழ்ச்சி எந்தவொரு கஷ்டமும் இல்லமால்
நிறைவடைந்தது. அப்போது அரங்கிலிருந்தவர்கள் எழுந்து
நின்று பாராட்டினர். நான் வீட்டுக்குச் சென்றவுடன், எனது
தந்தை எனது பாதத்தை தொட்டு, "நீ சாத்தியமில்லாத ஒன்றை
சாதித்துவிட்டாய்" என்று பாராட்டினார். அந்தக் கணம் என்னை
மிகவும்தொட்டது. அதன் பின்னர்தான் ஊடகங்களிடம் எனக்கு அதிக
மதிப்பு கிடைத்தது. ஆகையால் இறைவன் எனக்கு என்றும் துணையாக
இருக்கிறார் என்ற நம்பிக்கைதான் எனக்கு வாழ்வளித்தது என்ற
உண்மையை எங்கும் எடுத்துச் சொல்வேன்".
நாம் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்கின்றபோது இறைவனின் துணை
எப்போதும் ஏன், துன்பவேளையிலும் உண்டு என்ற உண்மையை நமக்கு
எடுத்துக்கூறுகின்றது. ஆகவே, நாம் எல்லா சூழ்நிலையும்
இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழவும், இறைத்திட்டத்தின்படி
வாழவும் முயற்சி எடுக்கவேண்டும்.
இறைவிருப்பத்தின்படி வாழவேண்டும், அப்படி வாழும்போது இறைவனின்
துணை எப்போதும் உண்டு என்று சிந்தித்த நாம், இறைவனின்
பேரன்பைக் குறித்தும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஏனென்றால் உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து
எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், "ஊழி
காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது
வெளிப்படுத்தப்பட்டுள்ளது" என்கிறார். அதாவது பலநூறு ஆண்டுகளாக
அறிவிக்கப்பட்ட மெசியா மக்களைத் தேடிவந்துவிட்டார் என்கிறார்.
மெசியாவின் வருகை கடவுள் இந்த உலகத்தின்மீது கொண்ட பேரன்பைக்
காட்டுகிறது. அதனால்தான் திருப்பாடல் ஆசிரியர், "ஆண்டவரின்
பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்" என்கிறார் (திபா 89).
எனவே, கடவுள் இந்த மனுகுலத்தின்மீது கொண்டிருக்கும் பேரன்பை
நினைத்துப் பார்ப்போம். அவரது திருவுளத்தை எப்போதும் நிறைவேறத்
துணிவோம். அதன்வழியாக அவர் அளிக்கும் உடனிப்பையும்,
அரவணைப்பையும் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
|
|