|
19 டிசம்பர் 2017 |
|
திருவருகைக்காலம்
மூன்றாம் ஞாயிறு (செவ்வாய்) |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
சிம்சோனின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.
நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 13: 2-7, 24-25
அந்நாள்களில் சோராவைச் சார்ந்தவரும் தாண் குலத்தவருமான ஒருவர்
இருந்தார். அவர் பெயர் மனோவாகு. அவர் மனைவி மலடியாய் இருந்ததால்,
குழந்தை பெறவில்லை. ஆண்டவரின் தூதர் அப்பெண்ணுக்குத் தோன்றி
அவரிடம், நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தை பெற்றெடுக்கவில்லை.
ஆனால், இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். இப்பொழுது
கவனமாயிரு! திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே! தீட்டான எதையும்
உண்ணாதே. ஏனெனில் நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்.
சவரக் கத்தி அவன் தலைமீது படக்கூடாது. ஏனெனில் பையன் பிறப்பிலிருந்தே
கடவுளுக்கென "நாசீர்' ஆக இருப்பான். அவன் இஸ்ரயேல் மக்களைப்
பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்" என்றார்.
அப்பெண் தம் கணவரிடம் வந்து கூறியது: கடவுளின் மனிதர் என்னிடம்
வந்தார். அவரது தோற்றம் கடவுளின் தூதரின் தோற்றம் போல்
பெரிதும் அச்சத்திற்குரியதாக இருந்தது. அவர் எங்கிருந்து வந்தவர்
என்று நான் அவரைக் கேட்கவில்லை. அவரும் எனக்குத் தம் பெயரை அறிவிக்கவில்லை.
அவர் என்னிடம். "இதோ! நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்.
ஆகவே நீ திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே. தீட்டான எதையும்
உண்ணாதே. ஏனெனில் பையன் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை,
கடவுளுக்கென நாசீராக இருப்பான்' என்றார்." அப்பெண் ஒரு மகனைப்
பெற்றெடுத்து அவனுக்குச் சிம்சோன் எனப் பெயரிட்டார். பையன் வளர்ந்து
பெரியவனானான். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார். சோராவுக்கும்,
எசுத்தாவேலுக்குமிடையே அவன் இருக்கும்போதுதான் ஆண்டவரின் ஆவி
அவனைத் தூண்டத் தொடங்கியது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 71: 3-4. 5-6. 16-17
=================================================================================
பல்லவி: நாளெல்லாம் நான் பேசுவது உமது
பெருமையே.
3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து
என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும்
அரணாகவும் இருக்கின்றீர்.
4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். -பல்லவி
5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே
என் நம்பிக்கை.
6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து
நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். -பல்லவி
16 தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்;
உமக்கே உரிய நீதி முறைமையைப் புகழ்ந்துரைப்பேன்.
17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்;
இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். -பல்லவி
================================================================================
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! ஈசாயின் குலக்கொழுந்தே, மக்களுக்கு ஓர்
அருஞ் சின்னமே, எமை மீட்க எழுந்தருளும். தாமதம் செய்யாதேயும்.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
திருமுழுக்கு யோவானின் பிறப்பு
முன்னறிவிக்கப்படுகிறது.
+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 1: 5-25
யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச்
சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார்.
அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. அவர்கள்
இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள்.
ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக்
குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள்.
அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய்
இருந்தார்.
மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.
தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன்
குருத்துவப் பணி ஆற்றி வந்தார். குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப,
ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று
அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது அது செக்கரியா பெயருக்கு
விழுந்தது.
அவர் தூபம் காட்டுகிற வேளையில், மக்கள் கூட்டத்தினர் அனைவரும்
வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஆண்டவருடைய
தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத்
தோன்றினார். அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார்.
வானதூதர் அவரை நோக்கி, "செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு
கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப்
பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீர் மகிழ்ந்து
பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர்.
அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ
வேறு எந்த மதுவோ அருந்தமாட்டார்; தாய் வயிற்றிலிருக்கும்போதே
தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப் படுவார். அவர், இஸ்ரயேல் மக்களுள்
பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார். எலியாவின்
உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன்
செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்;
நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச்
செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம்
செய்வார்" என்றார்.
செக்கரியா வானதூதரிடம், "இது நடைபெறும் என எனக்கு எப்படித்
தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே"
என்றார்.
அதற்கு வானதூதர் அவரிடம், "நான் கபிரியேல்; கடவுளின் திருமுன்
நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும்
அனுப்பப்பட்டேன். இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும்
என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும்
வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது" என்றார்.
மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர்
காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள். அவர்
வெளியே வந்தபோது அவர்களிடம் பேசமுடியாமல் இருந்தார். ஆதலால்
அவர் திருக்கோவிலில் ஏதோ காட்சி கண்டிருக்க வேண்டும் என அவர்கள்
உணர்ந்துகொண்டார்கள்.
அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார்; பேச்சற்றே
இருந்தார். அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு
திரும்பினார்.
தற்குப் பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும்
பிறர் கண்ணில் படாதிருந்தார். "மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை
நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு
செய்தருளினார்" என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
"இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும்
என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும்
வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்' உம்மால் பேசவே இயலாது'
என்றார்" (லூக்கா 1:20)
கபிரியேல் வானதூதர் மரியாவிடம் சென்று கடவுளின் செய்தியை
வழங்கியதுபோல செக்கரியாவிடமும் ஒரு செய்தி வழங்குகிறார். மரியா
தமக்க வழங்கப்பட்ட செய்தியை உடனடியாக ஏற்கத் தயங்கினார். ஆனால்
அவர் தயங்கவேண்டியதில்லை என வானதூதர் உறுதியளித்ததும் மரியா
கடவுளின் திருவுளத்திற்கு அமைந்தார். செக்கரியாவின் அனுபவம்
சிறிது வேறுபட்டிருப்பதைக் காண்கின்றோம். இங்கேயும் கடவுளின்
செய்தி செக்கரியாவுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் அவர் தமக்கு
வழங்கப்பட்ட செய்தி உண்மையாக இருக்க முடியாது என்று
வாதாடுவதுபோலத் தெரிகியது. எனவேதான் வானதூதர் அவரைப் பார்த்து,
"என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை" என்று இடித்துக்
கூறுகின்றார். செக்கரியாவுக்கு ஒரு சிறு தண்டனையும்
வழங்கப்படுகிறது. அதாவது, சிறிது காலம் அவர் பேச்சற்றவராக
இருப்பார்.
நம் வாழ்க்கை அனுபவத்திலும் நாம் கடவுளின் வார்த்தைக்கு
எதிர்ப்புத் தெரிவிக்கின்ற நேரங்களை உணரலாம். அப்போது கடவுளை
விட நாம் அதிகம் தெரிந்தவர்கள் போல நாம்
நினைத்துக்கொள்வதுண்டு. ஆனால் கடவுள் நமக்குச் சில வேளைகளில்
ஒரு பாடம் புகட்டத் தவறுவதில்லை. நாம் நினைப்பதே சரி என்னும்
மன நிலை நம்மிடம் இருத்தல் ஆகாது. பிறர் கூறுகின்ற சொற்களிலும்
நமக்கென ஒரு கருத்துப் புதைந்திருப்பதை நாம் காணத் தவறலாகாது.
இவ்வாறு பிறர் நமக்கு ஒரு கருத்தை உணர்த்தும்போது கடவுளே
அவர்கள் வழியாக நம்மோடு பேசுகின்ற அனுபவத்தையும் நாம்
சிலவேளைகளில் பெறுகிறோம். கடவுளின் செயல்பாடு எப்போதும்
நேரடியாக நிகழ்வதில்லை. சிலவேளைகளில் பிற மனிதர் வழியாகக்
கடவுள் நம்மை வழிநடத்துவார். அப்போது கடவுளின் குரலுக்குச்
செவிமடுக்க நாம் தவறிவிடல் ஆகாது. கடவுள் நமக்கு ஒரு பாடம்
புகட்டும் வேளையிலும் நாம் நம்பிக்கை இழத்தல் ஆகாது
என்பதற்கும் செக்கரியா ஓர் உதாரணமாகிறார். வயதில் முதிர்ந்த
அவருக்கும் அவருடைய மனைவி எலிசபெத்துக்கும் யோவான் என்றொரு
குழந்தை பிறந்த பிறகு செக்கரியா பேசும் திறனைப் பெறுகின்றார்.
நாமும் துன்ப நேரத்திற்குப் பிறகு மகிழ்ச்சியைப் பெறுவதும்
உண்டு. அதுவும் கடவுளின் அருளே.
=================================================================================
|
|