Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       18  டிசம்பர் 2017  
                                 திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு ( திங்கள்)
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீதியுள்ள "தளிர்" தாவீதுக்குத் தோன்றுவார்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 23: 5-8

ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள "தளிர்" தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார்.

அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். "யாவே சித்கேனூ" - அதாவது "ஆண்டவரே நமது நீதி" - என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.

ஆதலால் ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது, "எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை" என்று எவரும் சொல்லார்.

மாறாக, "இஸ்ரயேல் குடும்ப மரபினர் தங்கள் சொந்த நாட்டில் வாழும்படி, அவர்களை வடக்கு நாட்டிலிருந்தும் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை" என்று கூறுவர்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 72: 1-2. 12-13. 18-19 (பல்லவி: 7)
=================================================================================

பல்லவி: ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி

18 ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேலின் கடவுள் போற்றி! போற்றி! அவர் ஒருவரே வியத்தகு செயல்களைப் புரிகின்றார்! 19 மாட்சி பொருந்திய அவரது பெயர் என்றென்றும் புகழப் பெறுவதாக! அவரது மாட்சி உலகெல்லாம் நிறைந்திருப்பதாக! ஆமென், ஆமென். பல்லவி


================================================================================
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இஸ்ரயேல் குடும்பத்தின் தலைவரே, சீனாய் மலைமீது மோசேக்குத் திருச்சட்டம் ஈந்தவரே, திருக்கரம் நீட்டி எங்களை மீட்க வந்தருளும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 தாவீதின் மகனான யோசேப்புக்கு மண ஒப்பந்தமான மரியாவிடமிருந்து இயேசு பிறப்பார்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-24

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. மரியா தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.

மரியாவின் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

அவர் இவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.

"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.

இம்மானுவேல் என்றால் "கடவுள் நம்முடன் இருக்கிறார்" என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக் கொண்டார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

யோசேப்பு என்னும் நேர்மையாளர்

அந்த தம்பதியினருக்கு திருமணமாகி பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் குழந்தை பிறந்தது. அவர்கள் கடவுள் தங்களுக்குக் கொடுத்த குழந்தையை மிகவும் அன்பு செய்தார்கள்.

குழந்தைக்கு இரண்டு வயதாயிருக்கும். ஒருநாள் கணவன் தன்னுடைய அலுவலகத்திற்கு வேகவேகமாகக் கிளம்பிக்கொண்டிருந்தான். அப்போது வீட்டில், ஜன்னலோரமாக வைக்கப்பட்டிருந்த ஒரு மருந்துப் பாட்டிலின் மூடி திறந்திருப்பதைக் கண்டான். அவசர கதியில் அலுவலகத்திற்கு கிளம்பியதால் சமயலறையில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த தன்னுடைய மனைவியிடம், மருந்துப் பாட்டிலின் மூடி திறந்திருப்பதையும், அதை மூடிவிடும்படியாகும் கேட்டுக்கொண்டுவிட்டுச் சென்றான்.

சமையல் வேளையில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால் மனைவி மருந்துப் பாட்டிலை மறந்தே போனாள்.  வீட்டிற்குள் அங்குமிங்குமாகத் தவழ்ந்துகொண்டிருந்த குழந்தை திறந்திருந்த மருந்துப் பாட்டிலிருந்து மருந்து எல்லாவற்றையும் குடித்தது. பெரியவர்களே குறைந்த அளவுதான் குடிக்கவேண்டிய அந்த மருந்து பாட்டிலிருந்து குழந்தை எல்லாவற்றையும் குடித்துவிட்டதால், சிறிது நேரத்திலே அது வாயில் நுரைதள்ள சரிந்து கீழே விழுந்தது.

குழந்தையின் அலறல் சத்தம்கேட்டு சமயலறையில் இருந்து ஓடிவந்த அந்தப்பெண்மணி, குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினாள். ஆனால் அதற்குள் குழந்தை இறந்துபோயிருந்தது. செய்தியைக் கேள்விப்பட்டு அலுவலகத்திலிருந்து கணவர் ஓடிவந்தார். குழந்தையைப் இழந்து நிற்கும் இந்த வேளையில் தன்னுடைய கணவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று பதறியாவாரே இருந்தாள்.

ஆனால் அவளுடைய கணவரோ அவள் அருகே வந்து, தன்னுடைய தோளோடு தோள் சாய்த்துக்கொண்டு நான் உன்னை நேசிக்கின்றேன் என்றான். குழந்தையை இழந்து நிற்கும் வேளையில், கணவர் தன்மீது பழிபோட்டுவிடுவாரோ எனப் பயந்துகொண்டிருந்த அந்தப் பெண்மணிக்கு கணவரின் இந்த அன்பான வார்த்தைகள் அவளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. ஒரு சாதாரண குறட்டைச் சத்தத்திற்கே விவாகரத்து செய்யும் கணவருக்கு/ மனைவிக்கு மத்தியில் அந்த பெண்ணின் கணவர், இக்கட்டான நேரத்தில் அவளுக்கு ஆறுதலாக இருந்தது உண்மையில் பாராட்டுக்கு உரியது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோசேப்பு, தனக்கு மன ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மரியாள் திருமணத்திற்கு முன்பாகவே கருவுற்றிருப்பது தெரிய வந்ததும் அவரை விலக்கிவிடத் தீர்மானிகிறார். ஆனால் வானதூதர், யோசேப்பின் கனவில் தோன்றி எல்லாவற்றையும் விளக்குகின்றபோது அவர் மரியாவை ஏற்றுக்கொள்கிறார்.

Betrayel can only happen if you are in love என்று ஆங்கிலத்திலே ஒரு பழமொழி உண்டு. அதாவது காதலைவிட வேறு எந்த இடத்திலும் துரோகத்தின் வலிமை அவ்வளவு தீவிரமாகவும், கடுமையாகவும் இருப்பதில்லை என்பார்கள். இங்கே யோசேப்பு, தனக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மரியாள் தனக்குத் துரோகம் செய்துவிட்டாள் - ஏமாற்றிவிட்டாள் - என்று நிச்சயம் வருந்தியிருக்கலாம். ஆனால் அவர் மற்ற யூதர்களைப் போன்று திருமணத்திற்கு முன்பாக கருவுற்றிருக்கும் பெண்ணை கல்லால் எறிந்துகொள்ளவேண்டும் என்ற சட்டத்தைப் பின்பற்றாமல், மரியாவை தனியாக விலக்கிவிடத் தீர்மானிப்பதில்தான் அவர் தனித்து நிற்கிறார்.

யோசேப்பு மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பவில்லை. மாறாக அவரைத் தனியே விலக்கிவிடத் தீர்மானிக்கிறார். அதனால்தான் என்னோவோ அவர் நேர்மையாளர் என்று அழைக்கப்படுக்கிறார்.

ஆனால் யோசேப்பு இவ்வாறு நினைத்துக்கொண்டிருக்கும்போது வானதூதர் யோசேப்பின் கனவில் தோன்றி எல்லாவற்றையும் விளக்குகின்றபோது அதனை அவர் திறந்த மனதோடு ஏற்றுக்கொண்டு, மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்கிறார். இன்றைக்கு யோசேப்பிடம் விளங்கிய திறந்த மனது பல கணவர்களிடம் இல்லாததால்தான் மனைவியின்மீது சந்தேகம் கொள்வதும், அவளை விவாகரத்து செய்வதும் தொடர்கிறது.

ஆதலால் மன வாழ்க்கையில் மட்டுமல்லாது நமது அன்றாட வாழ்விலும் எதையும் யோசேப்பைப் திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்வோம். ஒருவர் மற்றவரது உணர்வுகளுக்கு மதிப்புத் தந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!