|
16 டிசம்பர் 2017 |
|
திருவருகைக்காலம்
இரண்டாம் ஞாயிறு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எலியா மீண்டும் வருவார்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11
இறைவாக்கினர் எலியா நெருப்புப்போல் எழுந்தார்; தீவட்டிபோல் அவருடைய
சொல் பற்றியெரிந்தது. மக்கள்மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால்
அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம்
பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார்.
எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை
மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்?
தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர்.
ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின்
உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை
மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்துகொள்வீர்
என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில்
துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 80: 1,2b. 14-15. 17-18 (பல்லவி: 3)
=================================================================================
பல்லவி: கடவுளே, உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்.
1 இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச்
செல்கின்றவரே! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!
2b உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! பல்லவி
14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப்
பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது
வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்!
பல்லவி
17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே
நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 18 இனி நாங்கள்
உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள்
உமது பெயரைத் தொழுவோம். பல்லவி
================================================================================
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 3: 4,6
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்;
அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள்
அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
எலியா
ஏற்கெனவே வந்துவிட்டார்; அவரை மக்கள் கண்டுணரவில்லை.
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 17: 10-13
இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து இறங்கி
வந்தபோது சீடர்கள் அவரிடம், "எலியாதான் முதலில் வரவேண்டும் என்று
மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?" என்று
கேட்டார்கள்.
அவர் மறுமொழியாக, "எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப்
போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச்
சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை.
மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள்.
அவ்வாறே மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்" என்றார்.
திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை
அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
எலியா ஏற்கனவே வந்துவிட்டார், மக்கள்தான்
அவரைக் கண்டுணரவில்லை
ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்த பாதையில் ஏதோ ஒன்று பளபளப்பாக
தெரிய, அவர் அதை எடுத்துப் பார்த்தார். அவருக்கு அது என்ன என்று
தெரியவில்லை. ஆனால், அவர் அருகில் இருந்தவர், அதை வைரம் என்று
உடனே கண்டுபிடித்துவிட்டார். அதனால், அதை வைரம் என்று சொல்லாமல்,
வியாபாரம் பேச ஆரம்பித்தார்.
"நான் உனக்கு 100 ரூபாய் தருகிறேன், எனக்கு இந்த கல்லைக்
கொடுத்துவிடு" என்றார். முதலாமவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ
ஒரு கல். அதற்கு ஏன் இவர் காசு தருகிறார் என்று யோசித்து
விட்டு, சரி விலையை ஏற்றி பார்ப்போம் என்று கருதி, "எனக்கு 200
ரூபாய் கொடு" என்றார். இரண்டாமவர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
"100 ரூபாயே இதற்கு அதிகம்" என்று பேரம் பேசினார்.
இந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த ஒரு பொற்கொல்லர், "எனக்கு
அந்த கல்லைக்கொடு. நான் உனக்கு 2000 ரூபாய் தருகிறேன்"
என்றார். முதல் ஆளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், அந்த பணம்
அப்போது அதிகமாக தெரிந்ததால், அவர் ஒத்துக் கொண்டார், வைரமும்
கை மாறியது.
இப்போது அந்த இரண்டாமவர் முதலாமவரைப் பார்த்து, "முட்டாள், உன்
கையில் இருந்தது சாதாரண கல் இல்லை. அது ஒரு வைரக்கல். அதன்
மதிப்பு தெரியாமல், வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்று
விட்டாயே, முட்டாள், முட்டாள்" என்று கடிந்து கொண்டார். அதற்கு
சிரித்தபடி முதலாமவர் சொன்னார், "எனக்கு அது வைரம் என்றோ,
அதன் மதிப்போ, எதுவுமே தெரியாது. ஆனால், அது அத்தனையும்
தெரிந்தும் ஒரு நூறு ரூபாய்க்கு கஞ்சத்தனம்பட்டு இழந்து
விட்டாயே, உண்மையில் நீதான் மிகப் பெரிய முட்டாள்"
வைரத்தின் மதிப்பை அறியா முதல் மற்றும் இரண்டாம் மனிதர்களைப்
போன்றுதான் நாமும் கடவுள் மற்றும் அவருடைய அடியார்கள்
நம்மத்தியிலே இருக்கின்றார்கள் என்பதை அறியா பேதைகளாக
இருக்கின்றோம் என்பது மிகவும் வேதனையான ஒரு விசயமாகும்.
நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய முதன்மைச் சீடர்களான
பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோரும் உருமாற்ற நிகழ்விற்குப்
பிறகு மலையிலிருந்து கீழே இறங்கி வருகின்றார்கள். அப்போது
சீடர்கள் இயேசுவிடம், "எலியாதான் முதல் வரவேண்டும் என்று
மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி? என்று கேட்க,
இயேசு அவர்களிடம் மறுமொழியாக, "எலியா வந்து எல்லாவற்றையும்
சீர்படுத்துவார் என்று கூறுவது உண்மையே. ஆனால் எலியா ஏற்கனவே
வந்துவிட்டார். அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக,
தாங்கள் விரும்பியதெல்லாம் அவருக்குச் செய்தார்கள்" என்கிறார்.
இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவேண்டுமானால் எலியாவைக்
குறித்த யூதர்களின் புரிதலையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
இறைவாக்கினர் எலியா நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில்
விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். எனவே, அவர் மீண்டுமாக
வருவார் என்று யூதர்கள் நம்பினார்கள். காலங்கள் செல்லச் செல்ல
எலியாவைக் குறித்த பார்வை யூதர்களிடம் இன்னும் விசாலமடைந்தது.
இறைவாக்கினர் மலாக்கி புத்தகம் 4:5 ல் வாசிப்பது போன்று,
"பெரிதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள்
வருமுன், இறைவாக்கினர் எலியா வருவார் என்றும் அவர்
ஆண்டவருக்கான வழியை ஆயத்தமாக்குவார் என்றும் மக்கள்
நம்பினார்கள். அதனால்தான் ஒவ்வொரு பாஸ்கா விழாவின்போது
எலியாவிற்கென்று ஒரு இருக்கையானது தனியாக
வைக்கப்பட்டிருக்கும்.
எலியாவைக் குறித்து யூதர்கள் என்ன புரிதலை வைத்திருந்தார்கள்
என்று அறிந்த நாம், இயேசு எலியாவைக் குறித்து என்ன
சொல்கின்றார் என்று பார்ப்போம். இறைவாக்கினர் எலியா
திருமுழுக்கு யோவானின் உருவில் வந்துவிட்டார். மக்கள்தான் அவரை
ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியதெல்லாம்
அவருக்குச் செய்தார்கள் என்பதுதான் எலியாவைக் குறித்த
இயேசுவின் வார்த்தைகளாக இருக்கின்றது.
பல நேரங்களில் நாம் மாமனிதர்களும் ஏன் அவர்களை விட
மேலானவர்களும் நம்மத்தியில் இருந்து பணிசெய்த போதும் அவர்களை
ஏற்றுகொள்ளாமல், அவர்களுக்கு நாம் விரும்பியவாறு செய்வதுதான்
மிகவும் வேதனையான ஒரு காரியமாக இருக்கின்றது. அதனால் நாம்
மீட்படைய கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வாய்ப்புகள்
அனைத்தையும் இழந்து நிற்கின்றோம்.
எனவே, இயேசுவின் சீடர்களாகிய நாம், நம்மோடு வாழக்கூடிய
இறையடியார்களை அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து
ஏற்றுகொள்வோம், ஆண்டவரைக் குறித்து அவர்கள் போதிக்கின்ற
போதனைக்கு செவிசாய்த்து, அதன்படி வாழ முயற்சிப்போம்,
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
|
|