|
06 டிசம்பர் 2017 |
|
திருவருகைக்காலம் முதல் வாரம்
- புதன் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவர் தமது விருந்துக்கு அழைக்கின்றார்; எல்லா முகங்களிலிருந்தும்
கண்ணீரைத் துடைத்துவிடுவார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்
25: 6-10a
படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு
விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும்,
பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப்
பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும்.
மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில்
அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத்
தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்து விடுவார்; என்
தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத்
துடைத்துவிடுவார்; தம் மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில்
அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.
அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்: "இவரே நம் கடவுள்; இவருக்கென்றே
நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்;
இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து
அக்களிப்போம்." ஆண்டவரின் ஆற்றல் இம்மலையில் தங்கியிருக்கும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 6b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரின் இல்லத்தில் நான் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும்புல்
வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு
எனை அழைத்துச் செல்வார். 3a அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்.
பல்லவி
3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 4 மேலும்,
சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம்
கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி
5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு
செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது
பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி
6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும்
எனைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில்
நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, ஆண்டவர் தம் மக்களை மீட்க வருவார்;
அவரை எதிர்கொள்ள ஆயத்தமாயிருப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
இயேசு பலரைக் குணமாக்கினார், அப்பம்
பலுகச்செய்தார்.
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 15: 29-37
அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று
அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார். அப்பொழுது பெருந்திரளான
மக்கள் அவரிடம் வந்தனர்.
அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர்,
பேச்சற்றோர் மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில்
கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார். பேச்சற்றோர்
பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர்
பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின்
கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
இயேசு தம் சீடரை வரவழைத்து, "நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது
பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன்
இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப்
பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால்
வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்" என்று கூறினார்.
அதற்குச் சீடர்கள் அவரிடம், "இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப்
போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து
கிடைக்கும்?" என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?"
என்று கேட்டார். அவர்கள், "ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும்
இருக்கின்றன" என்றார்கள்.
தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். பின்பு அந்த
ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி
செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக்
கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த
துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
பரிவும் பகிர்தலும்
அது ஒரு பிரசித்த பெற்ற கோவில். அந்தக் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள்
ஒவ்வொருநாளும் வந்து போவார்கள். இதனால் அந்தக் கோவில்
எப்போதுமே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.
அந்தக் கோவிலுக்கு முன்பாக சிறுவன் ஒருவன் காலை முதல் இரவுவரை
பூமாலை செய்து, அதனை கோவிலுக்கு வருவோரிடம் விற்றுவந்தான்.
இதற்கிடையில் ஒவ்வொருநாளும் மாலை நேரத்தில் கோவிலுக்கு ஒரு
பணக்காரப் பெண்மணி வந்து போனார். அந்தப் பெண்மணியிடத்தில்
மட்டும் பூமாலை விற்கின்ற சிறுவன் ஓடிச்சென்று, தன்னிடம்
இருக்கும் பூமாலையை வாங்கிக்கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்பான்.
ஆனால் அந்த பணக்காரப் பெண்மணி சிறுவனை ஒருபோதும்
கண்டுகொள்வதேயில்லை. அப்படியிருந்தும் சிறுவன் அவரிடம்
பூமாலையை விற்பதற்குத் தயங்குவதே இல்லை.
இதுவே வழமையாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில், சிலகாலமாக அந்த
பணக்காரப் பெண்மணி கோவிலுக்கு வரவே இல்லை. பணக்காரப்
பெண்மணிக்கு என்னவாயிற்றோ என்று ஓரிரு நாட்கள் யோசித்துப்
பார்த்த பூமாலை விற்கின்ற சிறுவன், பின்னர் அவரை மறந்துவிட்டு
தன்னுடைய வேலையில் மும்முரம் காட்டத் தொடங்கினான்.
ஓரிரு மாதங்களுக்குப் பிறகு முன்பு வந்த அதே பணக்காரப் பெண்மணி
இப்போது அதே நேரத்தில் கோவிலுக்கு வரத்தொடங்கினார். ஆனால்
இப்போதெல்லாம் பூமாலை விற்கின்ற சிறுவன் அந்த பணக்காரப்
பெண்மணிக்குப் பின்னாலேயே சென்று பூமாலை வாங்கிக்கொள்ளுமாறு
கெஞ்சிக்கேட்கவே இல்லை. சிறுவனின் நடத்தையில் இருந்த
வித்தியாசத்தைக் கண்டுணர்ந்த அவர் சிறுவனிடத்தில் சென்று,
"எதற்காக இப்போதெல்லாம் எனக்குப் பின்னாலேயே வந்து பூமாலை
வாங்கிக்கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்பதில்லை" என்று கேட்டார்.
"உங்களிடத்தில் நான் எதற்கு பூமாலை வாங்கிக்கொள்ளுமாறு
கெஞ்சிக்கேட்க கேட்க வேண்டும்?. இப்போது அதற்கான தேவையும்
இல்லை" என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து சொன்னான், "என்
தங்கைக்கு புற்றுநோய் இருந்தது. அவளை ஒரு நல்ல மருத்துவமனைக்கு
கூட்டிச்சென்று, சிகிச்சை அளிக்கத்தான் பணக்காரராகிய உங்களிடம்
பூமாலை விற்று பணமீட்ட நினைத்தேன். ஆனால், நீங்களோ ஒரு பத்து
ரூபாய்க்குக்கூட பூமாலை வாங்கவில்லை. கடந்த வாரம்தான் என்
தங்கை சிகிச்சை அளிக்க போதிய பணமில்லாமல் இறந்து
போனாள்... அவளே இந்த உலகத்தை விட்டு போனபின்பு, உங்களிடத்தில்
"பூமாலை
வாங்கிக்கொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கேட்பதில் என்ன நியாயம்
இருக்கின்றது. அதனால் உங்கள் பின்னால் இப்போது வருவதில்லை".
சிறுவன் சொன்னதைக் கேட்ட பணக்காரப் பெண்மணிக்கு மிகுந்த
அதிர்ச்சியாக இருந்தது. தன்னால் அந்த சிறுவனுக்குக் கொடுத்து
உதவ முடியவில்லையே என்று அவருடைய மனம் அவரை வாட்டி எடுத்தது.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் பணக்காரப் பெண்மணியைப்
போன்றுதான் நம்மில் நிறையப் பேர், இருப்பதை இல்லாதவருக்குக்
கொடுத்து உதவ மறுக்கின்றோம்.
ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, இன்றைய நற்செய்தி வாசகத்தில்
தங்களிடத்தில் இருப்பதை பிறருக்குக் கொடுத்து வாழ்ந்த
-
பிறரோடு பகிர்ந்து வாழ்ந்த
- மாமனிதர்களைக் குறித்துப்
படிக்கின்றோம். அவர்களுடைய இத்தகைய இரக்கமிக்க செய்கை நமக்கு
என்ன பாடத்தைக் கற்றுத் தருகின்றது என்று சிந்தித்துப்
பார்த்து நிறைவு செய்வோம்.
ஆண்டவர் இயேசு புறவினத்தார் வாழும் பகுதிக்குச் சென்று,
அங்கிருந்த ஒரு மலையில் ஏறி அமர்கின்றார். அவருடைய போதனையைக்
கேட்பதற்காகவும், அவரிடமிருந்து நலம் பெறவும் மக்கள் கூடி
வருகின்றார்கள். அப்போது இயேசு அவர்களிடமிருந்த நோயாளிகளைக்
குணப்படுத்துகின்றார். அது மட்டுமல்லாமல் அத்தனை மக்களுக்கும்
உணவு கொடுத்து உதவுகின்றார். மக்களின் பசியைப் போக்க சீடர்கள்
தங்களிடமிருந்த ஏழு அப்பங்களைக் கொடுத்து உதவுகின்றார்கள்.
இயேசு அதில் தன்னுடைய வல்லமையைத் தந்து, எல்லா மக்களுக்கும்
உணவு கொடுத்து உதவுகின்றார்.இவ்வாறு அவர்கள் தங்களிடம்
இருந்ததை பிறருக்குக் கொடுத்ததால், பகிர்ந்து வாழ்ந்ததால்
குறைவாய் இருந்த இடம் நிறைவானதாக மாறியது.
இயேசு செய்த அற்புதச் செயலுக்கு மிகவும் அடிப்படையாக இருந்தது
அவரிடமிருந்து பரிவு என்று சொன்னால் அது மிகையாகாது. பரிவு
என்றால் உடன் துன்புறுதல் என்று அர்த்தமாகும். ஆண்டவர் இயேசு
மக்களின் துன்பத்தை தன்னுடைய துன்பமாகப் பார்த்தார்.
அதனால்தான் அவர்களுடைய துன்பத்தை (நோய்கள், களைப்பு, உணவின்மை)
தன்னுடைய துன்பமாகப் பார்த்து, அதனைப் போக்குவதற்கு உதவி
செய்தார். உள்ளத்தில் பரிவு கொண்டு வாழும்போது எவ்வளவு பெரிய
வல்ல செயலும் நடக்கலாம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரிடத்தில் இருந்த
பரிவை நம்முடைய உள்ளத்திலும் தாங்கி வாழ்வோம்; இருப்பதை
இல்லாதவருக்குக் கொடுப்போம், தேவையில் இருப்பவரோடு நம்மிடம்
இருப்பதை பகிர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
=================================================================================
|
|