Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       05  டிசம்பர் 2017  
                                 திருவருகைக்காலம் முதல் வாரம் - செவ்வாய்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 11: 1-10

ஆண்டவருக்குரிய நாளில் ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர் விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனி தரும்.

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத் திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு - இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார். கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்; நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். நேர்மை அவருக்கு அரைக்கச்சை; உண்மை அவருக்கு இடைக்கச்சை.

அந்நாளில், ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்; அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்; பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்; பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை; கேடு விளைவிப்பார் யாருமில்லை; ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும். அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிற இனத்தார் தேடி வருவார்கள்; அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்ததாக இருக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 72: 1-2. 7-8. 12-13. 17 (பல்லவி: 7)
=================================================================================

பல்லவி: ஆண்டவருடைய காலத்தில் நீதியும் சமாதானமும் தழைத்தோங்கும்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லைவரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி

17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இதோ! நம் ஆண்டவர் வல்லமையுடன் வருவார்; தம் ஊழியரின் கண்களுக்கு ஒளி தருவார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 இயேசு தூய ஆவியால் பேருவகையடைகிறார்.

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 21-24

அக்காலத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்.

ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்'' என்றார். "என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்'' என்று கூறினார்.

பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, "நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர்.

ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
குழந்தைகளுக்கு வெளிப்படுத்தப்படும் இறைஞானம்

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் விலங்குகள் சரணாலயம் ஒன்று உள்ளது. இந்நகரில், பெரிய கட்டடங்களைக் கொண்ட பகுதியியில் கூட சிங்கம், காண்டாமிருகம் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும். சில நேரங்களில் நகருக்குள் வரும் சிங்கங்கள் அங்குள்ள பண்ணைகளில் புகுந்து ஆடு, மாடுகளை சாப்பிட்டுவிடக் கூடிய நிலை இருந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் நைநோபியைச் சார்ந்த பதிமூன்று வயதே நிரம்பிய ரிச்சர்டு டுரேரே, சிங்கங்களிடமிருந்து கால்நடைகளைக் காப்பாற்ற தந்திரமான வழியைக் கையாண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான். இது நாடு முழுவதும் மிக ஆச்சரியமாகப் பேசப்பட்டது.

இது குறித்து ரிச்சர்டு டுரேரே என்ற அந்தச் சிறுவன் கூறியதாவது, "இரவில் நாங்கள் தூங்கும் சமயத்தில் பண்ணைக்குள் நுழையும் சிங்கங்கள் மாடுகளைக் கொன்றுவிடும். ஒருமுறை கையில் டார்ர்ச் லைட்டுடன் நான் பண்ணையின் அருகில் சென்றபோது, சிங்கங்கள் வெளிச்சத்தைக் கண்டு பயந்து ஓடுவதைக் கண்டேன். அசையும் விளக்கு வெளிச்சங்கள் சிங்கங்களை மிரட்டும் என்பதை கண்டுபிடித்தேன். அதன்பின் பண்ணையைச் சுற்றிலும் விளக்குகளைப் பொருத்தி, அவை அவ்வப்போது அணைந்து எறிவது போல, அவற்றுக்கு மின் இணைப்பு கொடுத்தேன். எனது யோசனை வெற்றிகரமாக வேலை செய்தது. அதன்பின் சிங்கங்கள், எங்கள் பண்ணைக்கு அருகே வருவதில்லை. என்னுடைய இந்த யோசனையைப் பார்த்துவிட்டு, நகரில் இருந்த மற்றவர்களும் அதைக் கடைபிடிக்கத் தொடங்கினார்கள். இப்போது நைரோபியில் விலங்குகள் தொந்தரவு இல்லை" இவ்வாறு ரிச்சர்டு டுரேரே கூறினான்.

சிறுவனின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பல்கலைகழகமானது அவனை சிறப்பித்தது.

பெரியவர்கள் யாருக்குமே தோன்றாத ஒரு யோசனை சிறுவன் ஒருவனுக்குத் தோன்றியது மிகச் சிறப்பான ஒரு காரியம் ஆகும். இதுதான் சிறு குழந்தைகளுக்கும், எளிய மனத்தவருக்கும் கடவுளின் ஞானம் அதிகமாக வெளிப்படும் என்ற உண்மையின் வெளிப்பாடும்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகின்றேன். ஏனெனில், ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்" என்கிறார்.

இயேசுவின் வார்த்தைகள் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியவை. கடவுளின் ஞானம் குழந்தைகளுக்கும் - குழந்தை உள்ளத்தவருக்கும் - வெளிப்படுத்தப்பட்டு, ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைக்கப்பட்டிருக்கின்றது என்றால், அது குழந்தைகளிடம் இருக்கக்கூடிய தாழ்ச்சியும், மாசுமருவற்ற தன்மையும், ஞானிகள் அறிஞர்களிடம் இருக்கக்கூடிய எல்லாம் தெரியும் என்ற ஆணவமும் அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்?. பள்ளத்தை நோக்கி வரும் வெள்ளத்தைப் போல, தாழ்ச்சியோடு வாழக்கூடிய குழந்தைகளுக்கும், தூய மனத்தவருக்கும்தான் இறை ஞானமானது வெளிப்படுத்தப்படும், எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்று காட்டிக்கொள்ளும் அறிவாளிகளுக்கு அல்ல. ஆண்டவர் இயேசு இவ்வாறு சொல்வதன் வழியாக நாம் ஒவ்வொருவரும் உள்ளத்தில் தாழ்ச்சியோடும் மனத்தூய்மையோடும் வாழ அழைப்புத் தருகின்றார்.

தாழ்ச்சியும் மனத்தூய்மையும் எந்தளவுக்கு முக்கியமானவை என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். மத்தேயு நற்செய்தி 5:8ல் ஆண்டவர் இயேசு கூறுவார், "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பார்கள்" என்று. அது போன்று மத் 18:4 ல் இயேசு கூறுகின்றார், "இந்தக் சிறுபிள்ளைப் போன்று தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணகத்தில் மிகப் பெரியவர்" என்று. ஆம். தூய்மையும் தாழ்ச்சியும் குழந்தைகளுக்கும், குழந்தை மனம்கொண்டவர்களுக்கும் சொந்தமானவை. யாராரெல்லாம் இப்படி தாழ்சியுள்ளவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் இருகின்றார்களோ அவர்களுக்கு இறைஞானம் நிச்சயம் வெளிப்படுத்தப்படும். இது நிச்சயம் உண்மை.

இன்னொருபுறம் ஆணவத்தோடும் அகந்தையோடும் செயல்படக்கூடியவர்களுக்கு என்னென்ன நடக்கின்றது என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கவிக்கோ அப்துல் ரகுமான் கூறுவார், "ஒரு சிறிய வெளிச்சம் வீட்டிற்குள் நிலவொளியை வரவிடாமல் தடுப்பது போல, உள்ளத்தில் இருக்கும் ஆணவம் கடவுளை உள்ளே வரவிடாமல் தடுத்துவிடுகின்றது" இது எவ்வளவு பெரிய உண்மை. ஆணவம் கொண்டவன் ஆண்டவனை இழந்து விடுகின்றான். இதைத்தான் ஆங்கிலத்தில் Edging God Out (Ego) என்று சொல்கின்றோம். நாம் எப்போதெல்லாம் உள்ளத்தில் செருக்குடன் இருக்கின்றோமோ அப்போதெல்லாம் ஆண்டவரின் ஞானத்தை அடையாமலே போய்விடுகின்றோம் என்பது மிகக் கசப்பான உண்மை.

ஆகவே, குழந்தைகளுக்குப் போன்று தாழ்ச்சியும், மனத்தூய்மையும் உள்ளவர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!