Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     19 டிசம்பர் 2019  
                         திருவருகைக்காலம் 3ம் ஞாயிறு - 2ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 
சிம்சோனின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.

நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 13: 2-7, 24-25

அந்நாள்களில் சோராவைச் சார்ந்தவரும் தாண் குலத்தவருமான ஒருவர் இருந்தார். அவர் பெயர் மனோவாகு. அவர் மனைவி மலடியாய் இருந்ததால், குழந்தை பெறவில்லை. ஆண்டவரின் தூதர் அப்பெண்ணுக்குத் தோன்றி அவரிடம், "நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தை பெற்றெடுக்கவில்லை. ஆனால், இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். இப்பொழுது கவனமாயிரு! திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே! தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். சவரக் கத்தி அவன் தலைமீது படக்கூடாது. ஏனெனில் பையன் பிறப்பிலிருந்தே கடவுளுக்கென `நாசீர்' ஆக இருப்பான். அவன் இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்" என்றார். அப்பெண் தம் கணவரிடம் வந்து கூறியது: "கடவுளின் மனிதர் என்னிடம் வந்தார். அவரது தோற்றம் கடவுளின் தூதரின் தோற்றம் போல் பெரிதும் அச்சத்திற்குரியதாக இருந்தது. அவர் எங்கிருந்து வந்தவர் என்று நான் அவரைக் கேட்கவில்லை. அவரும் எனக்குத் தம் பெயரை அறிவிக்கவில்லை. அவர் என்னிடம். `இதோ! நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். ஆகவே நீ திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே. தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் பையன் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை, கடவுளுக்கென நாசீராக இருப்பான்' என்றார்." அப்பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சிம்சோன் எனப் பெயரிட்டார். பையன் வளர்ந்து பெரியவனானான். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார். சோராவுக்கும், எசுத்தாவேலுக்குமிடையே அவன் இருக்கும்போதுதான் ஆண்டவரின் ஆவி அவனைத் தூண்டத் தொடங்கியது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 71: 3-4. 5-6. 16-17   Mp3
=================================================================================
பல்லவி: நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்;
ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.
4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். -பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை.
6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். -பல்லவி

16 தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்;
உமக்கே உரிய நீதி முறைமையைப் புகழ்ந்துரைப்பேன்.
17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்;
இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். -பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! ஈசாயின் குலக்கொழுந்தே, மக்களுக்கு ஓர் அருஞ் சின்னமே, எமை மீட்க எழுந்தருளும். தாமதம் செய்யாதேயும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.  

 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 5-25

யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள். தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார். குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது. அவர் தூபம் காட்டுகிற வேளையில், மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார். அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார். வானதூதர் அவரை நோக்கி, செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்தமாட்டார்; தாய் வயிற்றிலிருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப் படுவார். அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார். எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்" என்றார். செக்கரியா வானதூதரிடம், இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே" என்றார். அதற்கு வானதூதர் அவரிடம், நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது" என்றார். மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள். அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேசமுடியாமல் இருந்தார். ஆதலால் அவர் திருக்கோவிலில் ஏதோ காட்சி கண்டிருக்க வேண்டும் என அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார்; பேச்சற்றே இருந்தார். அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார். அதற்குப் பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார். மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்" என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
முதல் வாசகம்

சிம்சோனின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.

நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 13: 2-7, 24-25

"பையன் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை, கடவுளுக்கென நாசீராக இருப்பான்"

நிகழ்வு

பெர்சியா நாட்டு மக்களிடையே மறைப்பணியையும் மருத்துவப்பணியையும் செய்தவர் டொனால்ட் கார் (Dr. Donald Carr) என்பவர். ஒருசமயம் இவருக்கு நன்கு அறிமுகமான ஒருவர் இவரிடம், "பெர்சியாவிற்கு வந்து மறைப்பணியையும் மருத்துவப்பணியையும் செய்வதற்கான அழைப்பினை நீங்கள் எப்படிப் பெற்றுக்கொண்டீர்கள்?" என்று கேட்டதற்கு, அவர், "நான் என்னுடயை மண்ணில் மருத்துவப்பணியைச் செய்துகொண்டிருந்தபொழுது, "நீ சென்று பெர்சிய மக்கள் நடுவில் பணிசெய்" என்று ஆண்டவரிடம் அழைப்பு வந்தது. ஆண்டவரிடமிருந்து இப்படியோர் அழைப்பு வரும்பொழுது, அதனைத் தட்டிக்கழிக்க முடியுமா...? ஏற்கத்தானே வேண்டும்...! அதனால்தான் இங்கு நான் பெர்சியாவிற்கு வந்து மறைப்பணியையும் மருத்துவப்பணியையும் தொடர்ந்து செய்து வருகின்றேன்" என்றார்.

ஆண்டவர், டொனால்ட் காரைத் தன்னுடைய பணியைச் செய்வதற்கு அழைத்த நாளிலிருந்து இறுதிவரைக்கும் அவர் ஆண்டவருக்குத் தன்னை முழுவதும் ஒப்புக்கொடுத்து, அர்ப்பண உள்ளத்தோடு பணிசெய்தார்.

ஆண்டவர் எப்படி தன்னுடைய பணியைச் செய்ய டொனால்ட் காரை அழைத்தாரோ, அதுபோன்று நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார். அவர் அழைக்கின்றபொழுது, அவருடைய குரலுக்குச் செவிமடுத்து, அவருக்கு முழுவதும் நம்மை அர்ப்பணித்து, வாழ்வது நல்லது. இன்றைய முதல் வாசகம் ஆண்டவருக்குத் தன்னை முழுவதும் அர்ப்பணித்து வாழ அழைக்கப்பட்ட சிம்சோனின் பிறப்பைக் குறித்து வாசிக்கின்றோம். சிம்சோன் உண்மையாகவே தன்னை ஆண்டவருக்கு அர்ப்பணித்து வாழ்ந்தாரா? அவருடைய வாழ்க்கை உணர்த்தும் செய்தி என்ன? என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

வயது முதிர்ந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்த சிம்சோன்

நீதித்தலைவர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் வயது முதிர்ந்த தம்பதியரான மனோவாகுக்கும் அவருடைய மனைவிக்கும் (பெயர் குறிப்பிடப்படவில்லை) மகனாகப் பிறந்த சிம்சோனின் பிறப்பைக் குறித்து வாசிக்கின்றோம்.

திருவிவிலியத்தில் வயது முதிர்ந்தவர் குழந்தையைப் பெற்றெடுப்பது புதில்லை. சாரா, அன்னா, புதிய ஏற்பாட்டில் வருகின்ற எலிசபெத் இவர்கள் யாவரும் தங்களுடைய முதிர்ந்த வயதில்தான் குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். இப்படி இவர்களால் முதிர்ந்த வயதில் பெற்றெடுக்கப்பட்ட பிள்ளைகள் யாவரும் இறைவனின் மீட்புத் திட்டத்தில் ஒரு முக்கிய இடம் வகித்தார்கள்; முக்கியமான பணியை ஆற்றினார்கள் என்பதுதான் உண்மை. அந்த வகையில் சோராவைச் சார்ந்த, தாண் குலத்தில் பிறந்த சிம்சோன், பெலிஸ்தியகளிடமிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவிப்பதற்காக ஆண்டவரால் தேர்ந்துகொள்ளப்பட்டார் அல்லது ஆண்டவருக்காக அர்ப்பணிக்கப்பட்டார்.

நாசீர் என்றால் ஆண்டவருக்காக அர்ப்பணிக்கப்பட்டவர் என்பது பொருள். ஆண்டவருக்காக அர்பணிக்கப்பட்ட சிம்சோன், இறுதிவரை ஆண்டவருக்கு அர்ப்பண உள்ளத்தோடு பணிசெய்தாரா? என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவரின் ஆசியை பெற்ற சிம்சோன்

பிறப்பிலிருந்து இறக்கும்வரை நாசீராக இருக்கப் பணிக்கப்பட்ட சிம்சோன்மீது ஆண்டவர் தன்னுடைய ஆசியை அபரிமிதமாய்ப் பொழிந்தருளினார். இதனால் சிம்சோன் மிகவும் வலிமை வாய்ந்தவராய் விளங்கினார். குறிப்பாக பெலிஸ்தியர்களைப் பந்தாடினார்.

இது ஒருபுறமிருக்கையில், சிம்சோன், இஸ்ரயேல் மக்கள் எப்படி யாவே இறைவனுக்கு உண்மையில்லாமல், பிற தெய்வங்களைத் தேடி அலைந்தார்களோ, அதுபோன்று ஆண்டவருக்குத் தன்னை முழுவதும் அர்ப்பணித்து வாழவேண்டிய சிம்சோன் பெலிஸ்தியப் பெண்ணை மணந்து கொண்டும் பெலிஸ்தியப் பெண்ணான தெலிலாவைக் காதலித்தும் வந்தார். முடிவில் தெலிலாவின் மாய வலைக்குள் சிக்கி, தன்னுடைய வலிமையை இழந்து இறந்துபோகின்றார்.

பெற்றுக்கொண்ட அழைப்பிற்கு ஏற்ப வாழவேண்டும்

ஆண்டவருடைய அருளால் வயது முதிர்ந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்து, ஆண்டவருடைய அருளை நிரம்பப் பெற்ற சிம்சோனின் வாழ்க்கை நமக்குச் சொல்லக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான். அதுதான் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கு உண்மையுள்ளவராய் இருக்கவேண்டும் என்பதாகும். புனித பவுல் எபேசியருக்கு எழுதிய மடலில், "நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்" (எபே 4:1) என்று இதே கருத்தினைத்தான் வலியுறுத்திக் கூறுகின்றார்.

ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாசீரான சிம்சோன் இறுதிவரை ஆண்டவருக்கு உண்மையாய் இருந்திருக்கவேண்டும்; ஆனால், அவர் பிற இனத்துப் பெண்களைத் தேடிச் சென்று, பாவத்தில் வீழ்ந்து, தான் பெற்றுக்கொண்ட அழைப்பினைப் பாழாக்கினார். சிம்சோனைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கும் நாம், கடவுள் நமக்குக் கொடுத்த அழைப்பிற்கு ஏற்ப வாழ்கின்றோமா? அல்லது பாவத்தில் வீழ்ந்து கிடக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"நீங்கள் பெற்றுக்கொண்ட போதனையில் பிடிப்புள்ளவர்களாய் இருங்கள்" (திவெ 2:25) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கு ஏற்பவும் போதனைக்கு ஏற்பவும் பிடிப்புள்ளவர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.




- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 01: 05-25

"உமது மன்றாட்டு கேட்கப்பட்டது"


நிகழ்வு

இலண்டனில் உள்ள புனித பவுல் பெருங்கோயிலுக்குச் (St.Paul"s Cathedral) செல்பவர்கள் தவறாமல், அதற்கு அருகில் இருக்கின்ற கலைக் காட்சிக்கூடத்திற்குச் செல்வதுண்டு. இந்தக் காட்சிக் கலைக்கூடத்தின் சிறப்பு என்னவென்றால், இதனுடைய ஒரு பக்கத்தின் ஓரத்தில் மெல்லப் பேசினாலும்கூட மறுபக்கத்தில் இருப்பவருக்கு மிகத் தெளிவாகக் கேட்கும்.

இப்படித்தான் ஒருமுறை இந்தக் கலைக் காட்சிக்கூடத்தின் ஒருமுனையிலிருந்து ஒரு காலணி தைக்கும் தொழிலாளி தன்னுடைய காதலியிடம், "காலணிகளைத் தைத்துத் தருவதற்கு கைவசம் தோல்கள் இல்லை. அவற்றை வாங்குவதற்கான பணமும் என்னிடம் இல்லை. இதனால் என்னுடைய வியாபாரமே நொடிந்துபோய்விட்டது... எனக்கென்னவோ பொருளாதாரப் பற்றாக்குறைவால் நம் இருவருக்குமிடையே நடக்கவிருக்கும் அருட்சாதனம் நடைபெறாமல் போய்விடுமோ என்று பயமாக இருக்கின்றது" என்று கண்ணீர் மல்கப் பேசினான். அவன் பேசியது மறுமுனையில் இருந்த ஒரு செல்வந்தருக்கு மிகத் தெளிவாகக் கேட்டது. அது அந்த செல்வந்தரின் உள்ளத்தில் காலணி தைக்கும் தொழிலாளிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

இதற்குப் பின்பு செல்வந்தவர், காலணி தைக்கும் தொழிலாளி எங்கு வசிக்கின்றான் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவனைப் பின்தொடர்ந்து சென்றார். அவன் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டதும், ஒருநாள் இரவு அவனுக்குத் தெரியாமல், அவனுடைய வீட்டுக்கு முன்னால் மோதுமான தோல்களை வைத்துவிட்டுச் சென்றார் அந்த செல்வந்தர். மறுநாள் காலணி தைக்கும் தொழிலாளி கதவைத் திறந்து பார்த்தபோது, காலணிகள் செய்வதற்குப் போதுமான அளவு தோல்கள் இருப்பது கண்டு, "கடவுள்தான் நம்முடைய அழுகுரலைக் கேட்டு போதுமான அளவு தோல்களை இங்கே வைத்திருக்கின்றார்" என்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

இதற்குப் பின்பு அவன் அந்த தோல்களைக் கொண்டு காலணிகளைத் செய்து, விற்று, பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேறினான்; தன்னுடைய ஆசைக் காதலியையும் அருட்சாதனம் செய்துகொண்டான். இது நடந்து சில நாள்கள் கழித்துதான், தனக்கு உதவிய அந்த செல்வந்தர் வேறு யாருமல்ல, இங்கிலாந்து நாட்டின் பிரதம அமைச்சரான டபிள்யூ. இ. கிளாட்ஸ்டோன் என்ற உண்மை தெரியவந்தது. இந்த உண்மை தெரிந்ததும், அந்தக் காலணி தைக்கும் தொழிலாளி இன்னும் மகிழ்ச்சி அடைந்தான்.

ஆம், கடவுள் தன் பிள்ளைகளின் மன்றாட்டுகளைப் புறந்தள்ளிவிடுவதில்லை. அவற்றுக்குச் செவிசாய்க்கின்றார் என்ற உண்மையை இந்த நிகழ்வுவானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் ஆண்டவர் தம் அடியாரின் மன்றாட்டைக் கேட்கின்றார் என்ற செய்தியை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

செக்கரியா எலிசபெத் தம்பதியரின் மன்றாட்டைக் கேட்ட இறைவன்

நற்செய்தியில், செக்கரியா தன்னுடைய பிரிவின் முறை வந்தபோது, ஆண்டவரின் திருக்கோயிலுக்குள் சென்று, தூபம் காட்டுகின்றார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் அவருக்கு முன்பாகத் தோன்றி, "செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது ....." என்கின்றார். முதலில் இந்த செக்கரியாவும் அவருடைய துணைவியாரான எலிசபெத்தும் எப்படிப் பட்டவர்கள் எனத் தெரிந்துகொள்வது நல்லது.

லூக்கா நற்செய்தியாளர் இவர்கள் இருவரையும் பற்றிக் குறிப்பிடும்போது, நேர்மையாளர்களாகவும் கடவுளின் அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்ப குற்றமற்றவர்களாய் நடந்து வந்தவர்களாகவும் குறிப்பிடுகின்றார். மேலும் ஆண்டவரின் தூதர் செக்கரியாவிடம் பேசுகின்ற சொற்களை வைத்துப் பார்க்கின்றபோது, செக்கரியாவும் எலிசபெத்தும் தங்களுக்குக் குழந்தை வரம் வேண்டும் என்று தொடர்ந்து, இடைவிடாது மன்றாடி வந்திருக்கவேண்டும் என்பது நிரூபணமாகின்றது. அவர்கள் தங்களுக்குக் குழந்தை வரம் வேண்டும் என்று மன்றாடி வந்த சமயத்தில்தான் ஆண்டவரின் தூதர் செக்காரியாவிற்குத் தோன்றி, உமது மன்றாட்டு கேட்கப்பட்டது என்று கூறுகின்றார். இதற்கு செக்கரியா எப்படி எதிர்வினை ஆற்றினார் என்பதைக் குறித்துத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவரின் தூதருடைய வார்த்தைகளை நம்பாத செக்கரியா

ஆண்டவரின் தூதர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, செக்கரியா மகிழ்ந்திருக்க வேண்டும். காரணம், இத்தனை ஆண்டுகளும் எதற்காக அவருடைய மனைவியும் அவரும் மன்றாடி வந்தார்களோ, அந்த மன்றாட்டு இறைவனால் கேட்கப்பட்டு விட்டது; ஆனால், அவர் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல், "இது நடைபெறும் என எனக்குக் எப்படித் தெரியும்...?" என்று தன்னுடைய ஐயப்பாட்டை வெளிப்படுத்துகின்றார்.

இங்கு நாம் கவனிக்கவேண்டியது, மீட்புத் திட்டத்தில் யாரெல்லாம் முக்கிய இடம் வகித்தார்களோ அவர்களுடைய பிறப்பெல்லாம் ஆண்டவருடைய அருளால் அதிசயமாக நடந்திருக்கும் என்பதுதான். இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டும் சிம்சோன். இவர் இவருடைய பெற்றோர் வயது முதிர்ந்தவர்களாக இருந்தபோதுதான் பிறந்தார். அந்த அடிப்படையில் மீட்புத் திட்டத்தில் முக்கிய இடம் வகிக்கப்போகும் யோவானின் பிறப்பும் ஆண்டவரின் அருளால் அதிசயமாகத்தான் இருக்கும் என்பதை செக்கரியா நம்பவில்லை. அதனாலேயே யோவான் பிறக்கின்ற வரைக்கும் அவர் பேச்சற்றவராக இருந்தார்.

செக்கரியா, ஆண்டவருடைய தூதர் சொன்னதில் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கும் நாம் ஆண்டவரில் தளரா நம்பிக்கை கொண்டிருக்கின்றோமா? அல்லது ஒரு சிறு துன்பம் வந்ததும், கடலில் நடந்து செல்ல முயன்ற பேதுரு எப்படி கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பைக் கண்டு, நம்பிக்கையை இழந்து, மூழ்கத் தொடங்கினாரே, அதுபோன்று நாம் இறைவன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் தளர்ந்துபோயிருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

"அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" (மாற் 5: 36) என்று இயேசு தொழுகைக்கூடத் தலைவராம் யாயிரைப் பார்த்துச் சொல்வார். ஆகையால், நாம் இறைவனிடம் தளரா நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!