|
29
டிசெம்பர் 2018 |
|
டிசம்பர் 29 கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 5ஆம் நாள் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு
கொள்வோர் ஒளியில் நிலைத்திருக்கின்றனர்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 2: 3-11
என் பிள்ளைகளே, இயேசுவின் கட்டளைகளை நாம் கடைப்பிடித்தால் நாம்
அவரை அறிந்துகொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும்.
"அவரை எனக்குத் தெரியும்" எனச் சொல்லிக்கொண்டு, அவருடைய கட்டளைகளைக்
கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது. ஆனால்
அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே
நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்துகொள்ளலாம்.
அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள்.
அன்பிற்குரியவர்களே! நான் உங்களுக்கு எழுதுவது புதியதொரு கட்டளை
அல்ல; நீங்கள் தொடக்கத்திலிருந்தே பெற்றிருந்த பழைய கட்டளைதான்
அது. நீங்கள் கேட்டறிந்த வார்த்தையே அப்பழைய கட்டளை. இருப்பினும்
நான் உங்களுக்கு எழுதுவது ஒரு புதிய கட்டளையே. அது புதியது என்பது
கிறிஸ்துவின் வாழ்விலும் உங்கள் வாழ்விலும் விளங்குகிறது.
ஏனெனில் இருள் அகன்று போகிறது; உண்மை ஒளி ஏற்கெனவே ஒளிர்கிறது.
ஒளியில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை
வெறுப்போர் இருளில்தான் இருக்கின்றனர்.
தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்புகொள்வோர் ஒளியில்
நிலைத்திருக்கின்றனர்; இடறி விழ வைக்கும் எதுவும் அவர்களிடம்
இல்லை. தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில் இருக்கின்றனர்;
இருளில் நடக்கின்றனர். அவர்கள் எங்குச் செல்கிறார்கள் என்பது
அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் இருள் அவர்களுடைய கண்களைக்
குருடாக்கிவிட்டது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா:
96: 1-2a. 2b-3. 5b-6 (பல்லவி: 11a)
=================================================================================
பல்லவி: விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக.
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும்
வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2 ஆண்டவரைப்
போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். பல்லவி
2b அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். 3 பிற இனத்தார்க்கு
அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும்
அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். பல்லவி
5b ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். 6 மாட்சியும் புகழ்ச்சியும்
அவர் திருமுன் உள்ளன; ஆற்றலும் எழிலும் அவரது திருத்தலத்தில்
உள்ளன. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 2: 32
அல்லேலூயா, அல்லேலூயா! இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு
அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை. அல்லேலூயா.
ஒவ்வொரு நாளும் தரப்படும் அல்லேலூயா
வசனத்திற்குப் பதிலாக, பக்கம் 148இல் தரப்பட்டுள்ளவற்றிலிருந்து
ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பிற இனத்தார்க்கு
வெளிப்பாடு அருளும் ஒளி.
+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-35
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது,
இயேசுவின் பெற்றோர் குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க, எருசலேமுக்குக்
கொண்டு சென்றார்கள்.
ஏனெனில், "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்"
என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில்
கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை
அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர்
நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட
ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.
"ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று
தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால்
அவர் கோவிலுக்கு வந்திருந்தார்.
திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்யவேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச்
செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது,
சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,
"ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன்
போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு
செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற
இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப்
பெருமை" என்றார்.
குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும்
வியப்புற்றனர்.
சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி,
"இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும்
காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.
இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும்
ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
"உமது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும்"
முன்பொரு காலத்தில் சோழநாட்டின் பூம்புகாரில் ஞானசீலர் என்றொரு
மனிதர் வாழ்ந்துவந்தார். அவர் கல்வியில் சிறந்தவர். அதுமட்டுமின்றி
ஊரார் புகழும் அளவிற்கு குணநலனிலும், தான தர்மத்திலும் சிறந்து
விளங்கினார். அவருக்குப் பல ஆண்டுகள் கழித்து ஒரு மகன் பிறந்தான்.
அவன் பிறந்த சில மாதங்களிலேயே ஞானசீலர் உயிர்நீத்தார்.
குணசீலன் என்ற பெயர்கொண்ட அவன் தன் தந்தையைப் போலவே கல்வியில்
சிறந்து விளங்கினான். ஞானசீலரின் மகன் என்பதால், அவனுக்கு ஊரில்
நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைத்தது. குருகுலத்திலும், ஊரிலும்
அவனது அறிவுத்திறமையைக் கண்டு ஞானசீலரின் மகனும் அறிவாளிதான்
எனப் பெருமையாகப் பேசினர். ஆனால் அவனது தாய்மட்டும் அவனைப் புகழ்ந்து
பேசுவதில்லை. தன் தாய் தன்னை ஒரு வார்த்தைகூட பாராட்டாமல் இருப்பது
கண்டு குணசீலன் கவலைகொண்டான்.
குருகுலவாகத்துக்குப் பின் அவனுக்கு அரண்மனையில் பொறுப்பான பதவி
கிடைத்ததால், அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. தன் தந்தையைப்
போலவே அவன் தான தர்மத்திலும் சிறந்து விளங்கினான். பூம்புகார்
முழுவதும் அவனது அறிவுக்கூர்மையைப் பற்றியும், தர்மகுணத்தைப்
பற்றியும் பெருமையாக பேசப்பட்டது. அரண்மனையில் ஒருமுறை தீர்க்கமுடியாத
சிக்கலை, தன் அறிவுக்கூர்மையால் தீர்த்து வைத்தான். இதைக்
கேள்விப்பட்ட சோழ மன்னர், குணசீலனை நேரில் அழைத்து ஊரார்
முன்னிலையில் பாராட்டினார். அப்போது, தன் தந்தையின் அறிவுக்கூர்மையை
குணசீலன் மிஞ்சிவிட்டதாக அவர் புகழ்ந்து பேசினார்.
அப்போது ஆனந்தக் கண்ணீர் வடித்த அவனது தாய், தன் மகனின்
நெற்றியில் முத்தமிட்டுப் பாராட்டினாள். இதைக் கண்டு குழப்பமடைந்த
குணசீலன், "சிறுவயதில் இருந்து என்னை அனைவரும் பாராட்டும்போது,
நீங்கள் மட்டும் எதுவும் பேசாமல் இருந்தீர்கள். இப்போது மட்டும்
பாராட்டுகிறீர்களே?" எனக் கேட்டான்.
அதற்கு பதிலளித்த அவனது தாய், "சிறுவயது முதலே உன் அறிவுக்கூர்மையைப்
பார்த்து எல்லோரும் ஞானசீலரின் மகன் என்றே பாராட்டினார்கள். அப்போதெல்லாம்
நான் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். ஆனால் அந்த பெருமை எல்லாம்
உன் தந்தைக்கே சேரும். இன்று உன்னை சான்றோன் என்றும், குணசீலனின்
தந்தை ஞானசீலர் என்றும் பாராட்டினார்கள். எனவே தான் இன்று நான்
அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இன்று தான் நான் உன்னைப்
பார்த்து பெருமைப்படுகிறேன்" என ஆனந்தக் கண்ணீரோடு கூறினாள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் மரியாவும் யோசேப்பும் குழந்தை இயேசுவை
கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும்போது அங்கிருந்த
சிமியோன் அவர்களை நோக்கி, "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான்
என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும்
காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.
இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம்
மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" என்று சொல்கிற வார்த்தைகள்
அவர்களுக்கு வியப்பைத் தருகின்றன.
பிள்ளைகளைக் குறித்து மற்றவர் பாராட்டுகிறபோது அவ்வார்த்தைகள்
கேட்கும் அப்பிள்ளைகளின் பெற்றோர்கள் நிச்சயம் மகிழ்ச்சியடையத்தான்
செய்வார்கள். ஆனால் இயேசுவின் பெற்றோர்களோ சிமியோன் இயேசுவைக்
குறித்துச் சொல்கிற வார்த்தைகள், குறிப்பாக மரியாவிடம் அவர்
சொல்லக்கூடிய "உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப்பாயும்" என்ற
வார்த்தைகள் அவரை அவர்களை -வியப்பில் ஆழ்த்துகின்றன.
மரியாள் இவ்வார்த்தைகளைக் கேட்டு கலங்கிடவில்லை. மாறாக அவற்றை
தன்னுடைய உள்ளத்தில் இருத்தி சிந்திக்கத் தொடங்குகிறாள்; அதன்படி
தன்னுடைய வாழ்வைக் கட்டி எழுப்பத் தொடங்குகிறாள்.
அன்றாடம் நாம் கேட்கக்கூடிய செய்திகள், காணக்கூடிய காட்சிகள்
நம்மை வியப்பில் ஆழ்த்தலாம் அல்லது நம்மை கலக்கமடையச் செய்யலாம்.
ஆனால், நாம் அன்னை மரியாவைப் போன்று எல்லாவற்றையும் உள்ளத்தில்
இருத்தி சிந்தித்துப் பார்க்கவேண்டும். மரியாள் நிகழ்ந்த எல்லாவற்றையும்
தன்னுடைய உள்ளத்தில் இருத்தி சிந்தித்ததன் வழியாக இறைத் திருவுளத்திற்கு
பணிந்து நடக்கக்கற்றுக் கொண்டாள்; துன்பங்களை துணிவோடு
தாங்கிக்கொள்ளும் மனத்திடம் பெற்றாள். ஆகையால் நாமும் நிகழ்கின்ற
அனைத்தையும் இறை ஒளியில் சிந்தித்துப் பார்ப்போம். பிரச்சனைகளை,
சவால்களைக் கண்டு பயந்து ஓடாமல், மனத்துணிவோடு அவற்றை எதிர்கொள்வோம்.
"துன்பம்தான் என் நண்பர் அதை நான் வெறுக்கமாட்டேன். ஏனெனில் அபார
சாதனை படைத்தவர்களுக்கு துன்பம்தான் தோழர்" என்பான் நெப்போலியன்.
ஆகவே நிகழ்பவை அனைத்தையும் உள்ளத்தில் இருத்தி சிந்தித்துப்
பார்ப்போம். எதிர்வரும் சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்வோம்.
அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
"ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன்
போகச் செய்கிறீர்"
பெருநகர் ஒன்றில் வாடகைக் கார் ஓட்டிக்கொண்டிருந்தான் தாமஸ் என்ற
இளைஞன். ஒருநாள் அதிகாலையில் அவனுடைய செல்போனுக்கு புதிய எண்ணிலிருந்து
ஓர் அழைப்பு வந்தது. அதை எடுத்து அவன் பேசியபோது, மறுமுனையில்
ஒரு மூதாட்டியின் குரல் கேட்டது. மூதாட்டி அவனிடம், நகரில் இருந்த
ஓர் இடத்திற்குச் சொல்லி, அந்த இடத்திற்கு வரமுடியுமா? என்று
கேட்டார். அவன் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல், "வருகிறேன்" என்று
சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு வேகமாகக் கிளம்பினான்.
மூதாட்டி சொன்ன இடத்திற்கு தாமஸ் சென்றபோது ஓர் அறையில் மட்டும்
விளக்கெரிந்து கொண்டிருந்தது. மற்ற இடமெல்லாம் இருட்டாக இருந்தது.
தாமஸ் அந்த வீட்டின் அழைப்பு மணியை அடித்தான். "ஒரு நிமிடத்தில்
வருகிறேன்" என்று அந்த மூதாட்டியின் குரல் கேட்டது. பின்பு எதுவோ
இழுபடுவதுபோல் ஒரு சத்தம் வந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு
மூதாட்டி ஒரு பெட்டியுடன் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார்.
தாமஸ் தற்செயலாக அந்த மூதாட்டியின் வீட்டினுள்ளே பார்த்தபோது,
அது பல வருடங்களாக யாருமே பயன்படுத்தாதுபோல் காட்சியளித்தது.
எல்லாம் பழைய பொருட்களாயிருந்தன. அவன் மூதாட்டியினுடைய
பெட்டியை எடுத்து வந்து காரில் வைத்துவிட்டு, அவரைக் கைத்தாங்கலாகப்
பிடித்துவந்து காரில் உட்கார வைத்தான். காரில் ஏறியவுடன்
மூதாட்டி ஒரு முகவரியைக் கொடுத்து, அங்கே போகச் சொன்னார். தாமசும்
காரை மெல்ல ஓட்டத் தொடங்கினான்.
கார் கொஞ்ச தூரம் நகர்ந்திருக்கும், அப்போது மூதாட்டி அவனிடம்,
"தம்பி! நகரத்தின் மையப்பகுதி வழியாக காரை ஓட்டிச் செல்ல
முடியுமா?" என்று கேட்டார். அதற்கு அவன், "அது சுற்றுவழியாயிற்றே"
என்றான். "பரவாயில்லை. எனக்கு ஒன்றும் அவசரமில்லை. நான் போவது
ஒரு முதியோர் இல்லத்திற்குத்தான் (Hospice) நான் எனது கடைசி காலத்தைக்
கழிக்க அங்கு செல்கிறேன். இந்த நகரத்தை நான் பார்ப்பது இதுவே
கடைசிமுறையாகும்" என்றார். இப்படிச் சொல்லி முடித்ததுதான் தாமதம்.
அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வரத் தொடங்கியது.
சிறுது இடைவெளிவிட்டு மேலும் தொடர்ந்தார். "எனக்கென்று
யாருமில்லை. நான் அதிக நாட்கள் தாங்கமாட்டேனென்று மருத்துவர்கள்கூட
கூறிவிட்டார்கள்".
தாமஸ் காரின் வாடகை மீட்டரை நிறுத்தினான். "வேறு எங்கெல்லாம்
போகவேண்டும் என்று நினைக்கிறீர்களோ. அங்கெல்லாம் போகலாம்
பாட்டி" என்றான். பின்னர் அந்த மூதாட்டி சொன்னதற்கு ஏற்ப, அவர்
வேலை செய்த இடம், அவர் அவருடைய கணவரைச் சந்தித்த இடம், அவர்கள்
சுற்றிய இடங்கள், அவரின் குழந்தைகள் படித்த இடங்களென்று பல இடங்களைச்
சுற்றிக் காட்டினான். போன பல இடங்களில் உற்சாகமாக தன் வாழ்வை
விவரித்தார், சில இடங்களில் கண் கலங்கினார் அந்த மூதாட்டி. கடைசியில்
பொழுது விடிந்துகொண்டிருக்கும்போது, "எனக்குக் களைப்பாக இருக்கிறது.
நாம் போகலாம்" என்றார்.
இருவரும் அமைதியாக அந்த இடத்திற்குச் சென்றனர். அங்கு இரண்டு
மருத்துவப் பணியாளர்கள் ஒரு சக்கர நாற்காலியுடன் வந்தனர்.
மெதுவாக அந்த மூதாடியை நாற்காலியில் அமர வைத்தனர். அப்போது
மூதாட்டி தாமசைப் பார்த்து, "தம்பி நான் உனக்கு எவ்வளவு தரவேண்டும்?"
என்றார். அவனோ, "ஒன்றுமில்லை" என்றான். அதற்கு மூதாட்டி,
"உனக்கு நஷ்டமாகுமே. நான் ஏதாவது தந்தாகவேண்டுமே" என்றார். அருகே
சென்ற தாமஸ், அவரைக் கட்டி அணைத்துவிட்டு, "எனக்கு இது போதும்"
என்றான். மூதாட்டியோ அவனுடைய கையை அழுத்திப் பிடித்தவாறு,
"இன்று நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். இந்த சந்தோசத்திற்கு
காரணமான உன்னை நான் என்றுமே மறக்கமாட்டேன்" என்று சொல்லிவிட்டு
முதியோர் இல்லத்திற்குள் சென்றாள்.
மூதாட்டி அவனிடமிருந்து விடைபெற்றதும் அவனுக்கு ஏதோ போல் இருந்தது.
அவன் அந்த மூதாட்டி கடைசியாகச் சொன்ன வார்த்தைகளையே அன்றைய
நாள்முழுவதும் அசைபோடத் தொடங்கினான்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வை ஏதோ ஒரு கற்பனைக் கதை என்று நம்மால்
கடந்துபோக முடியாது. கதையில் வரும் மூதாட்டியைப் போன்று எத்தனையோ
வயதானவர்கள் அன்பிற்கும் ஆறுதலான வார்த்தைகளுக்கும் ஏங்கித் தவித்துக்
கொண்டிருக்கிறார்கள். இவர்களிடத்தில் நம்முடைய அன்பையும் ஆறுதலையும்
வெளிப்படுத்துவதுதான் நாம் செய்யவேண்டிய தலையாய பணியாக இருக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பெற்றோர், அவரை எருசலேம் ஆலயத்தில்
காணிக்கையாக ஒப்புக்கொடுக்கச் செல்கின்றனர். அப்போது தூய ஆவியாரின்
உணர்த்துதலால் அங்கு வருகின்ற சிமியோன் என்ற பெரியவர் குழந்தை
இயேசுவைக் கையில் தாங்கி, "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான்
என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும்
காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன"
என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றார்.
இங்கே குழந்தை இயேசுவின் பிரசன்னம் வயது முதிர்ந்த
சிமியோனுக்கு நிம்மதியை, நிறைவு, சந்தோசத்தைத் தருகின்றது.
நாமும் இயேசுவைப் போன்று நம் குடும்பங்களில் இருக்கின்ற பெரியவர்களுக்கு,
வயதானவர்களுக்கு நம்முடைய அன்பால், ஆறுதலான வார்த்தைகளால், நமது
உடனிப்பால் சந்தோசத்தைத் தரமுடிகின்றதா? என்று சிந்தித்துப்
பார்ப்போம்.
எல்லாருக்கும், அதிலும் குறிப்பாக முதியோர்களுக்கு நம்முடைய அன்பைத்
தருவோம். அவர்களுடைய முதுமையில் தோள்கொடுப்போம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவை ஆண்டவருடைய குழந்தைகள்
ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒருநாள் தனது பத்து வயது மகனை அழைத்துக்கொண்டு
காட்டுக்கு மூங்கில் வெட்டச் சென்றார். பையனோ விடாமல் வழியெல்லாம்
அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக்கொண்டே வந்தான். அவரும்
பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டே வந்தார்.
மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். பையன் அப்போதும் கேள்விகள்
கேட்டான். "நாம அப்புறம் பேசிக்கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா
வெட்டுகின்ற மூங்கிலை எல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்" என்றார்.
பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான். அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார்.
"அப்பா, அப்பா" என்றான் பையன். "என்னடா?" என்று கோபத்துடன்
கேட்டார் அப்பா. "இந்தக் காட்டாறு எங்கே போகுது?" என்றான் பையன்.
அப்பா மிகுந்த கோபத்துடன், "நம்ம வீட்டுக்குத்தான்" என்றார்.
பையன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவில்லை.
மாலை நேரம் ஆனது. மூங்கில் வெட்டுபவர் பையனின், "வா, போகலாம்.
நான் வெட்டிய மூங்கிலை எல்லாம் எங்கே அடுக்கி
வைத்திருக்கின்றாய்?" என்று கேட்டார். பையன் மிகவும் சாதாரணமாகச்
சொன்னான், "நீங்கள் வெட்டினதை எல்லாம் ஆற்றிலே போட்டுவிட்டேன்.
இந்நேரம் அது நம்ம வீட்டுக்குப் போயிருக்கும்" என்று பதில்
சொன்னான். அப்பாவால் ஒன்றும் பேச முடியவில்லை.
குழந்தைகளுக்கு அறிவுரையோ வேறு எதுவோ சொன்னாலும் திருந்தச்
சொல்லவேண்டும், இல்லையென்றால் அது நமக்கே மிகப்பெரிய ஆபத்தைக்
கொண்டுவந்து சேர்க்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக இருக்கின்றது.
குழந்தைகள் வெற்றுத் தாள்கள். சிறு வயதில் அவர்களை எப்படி நாம்
வளர்கின்றோமோ அதன்படியே அவர்களுடைய வாழ்க்கை இருக்கின்றது என்பதை
நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
நற்செய்தி வாசகத்தில் குழந்தை இயேசுவை அதனுடைய பெற்றோர்களான
யோசேப்பும் மரியாவும் எருசலேம் திருக்கோவிலில் காணிக்கையாக ஒப்புக்
கொடுக்கின்றார்கள்; அவரை இறைவழியில் வளர்த்தெடுக்கின்றார்கள்.
அதனாலேயே அவர் கடவுளுக்கு உகந்ததாய் மாறுகின்றார் (லூக் 2:40).
ஆகையால் இயேசுவின் பெற்றோர்கள் அவரை இறைவனுக்கு உகந்த வழியில்
வளர்த்தெடுத்ததால், அவர் அப்படியே நடக்கத் தொடங்கினார் என்று
நாம் புரிந்துகொள்ளலாம்.
இங்கே இன்னொரு செய்தியையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அது
என்னவென்றால் இயேசு இறைமகனாக இருந்தபோதும், அவர் யூத சட்டங்களுக்குக்
கட்டுப்பட்டு நடந்தார் என்பதாகும். இயேசுவின் பெற்றோர் அவரை எருசலேம்
திருக்கோவில் அர்ப்பணித்தபோது மூன்றுவிதமான சட்டங்களை
நிறைவேற்றுகின்றார்.
முதலாவது சட்டம் எட்டாம் நாளில் விருத்த சேதனம் செய்துகொள்வதாகும்.
ஆண்டவர் இயேசுவுக்கு எட்டாம் நாளில் விருத்த சேதனம் நடைபெற்றது
என்று நற்செய்தி நூல் சான்று பகர்கின்றது. இரண்டாவது சட்டம் ஆண்
தலைப்பேறினை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுப்பது. இச்சட்டத்தையும்
ஆண்டவர் இயேசுவின் பெற்றோர் அவருக்கு நிறைவேற்றினார்கள் என்று
இன்றைய நற்செய்தி வாசகம் சான்று பகர்கின்றது. ஆண்டவரின் தூதர்
எகிப்தியரின் வீதிகளில் கடந்து சென்றபோது நிலைகளில் இரத்தம் தோயக்கப்பட்ட
வீடுகளில் இருந்த ஆண் தலைப்பேறினை கொல்லாமல் விட்டுவிட்டு,
நிலைகளில் இரத்தம் தோயக்கப்படாத வீடுகளில் இருந்த ஆண் மக்களைக்
கொன்று போட்டார். அதன் நிமித்தமாக ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்குச்
சொந்தம் என்ற நியதியைக் கொண்டுவந்தார்கள் (விப 13: 2, எண்
18:16). இச்சடங்கில் வசதி படைத்தவர்கள் செம்மறியாட்டினை
காணிக்கையாகக் கொடுப்பார்கள். ஆனால் இயேசுவின் பெற்றோர் இரு மாடப்
புறாக்களை காணிக்கையாகக் கொடுத்ததை வைத்துப் பார்க்கும்போது
அவர்கள் ஏழைகள் என்று புரிகின்றது. ஏனென்றால் ஏழைகள்தான் அப்படிப்பட்ட
காணிக்கையை வழங்குவார்கள்.
இயேசு நிறைவேற்றிய மூன்றாவது சடங்கு தூய்மைச் சடங்கு. யூத சட்டத்தின்படி
ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு தாய் நாற்பது நாட்களுக்கும்,
பெண் குழந்தையைப் பெற்றெடுப்பவர் 80 நாட்களுக்கும் தீட்டுப் பட்டவர்கள்
என்று கருதப்பட்டார்கள். நாற்பதாம் நாளில் ஆண்டவர் இயேசு
கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதைப் பார்க்கும்போது
அவருக்கு தூயமைச் சடங்கு நிறைவேற்றப்பட்டது என்று நாம் அறிந்து
கொள்ளலாம் (லேவி 12:8).
இவ்வாறு இயேசுவின் பெற்றோர் அவரைக் கடவுளுக்கு அர்ப்பணித்து,
கடவுளுக்கு உகந்த வழியில் நடத்தியதால் அவர் கடவுளுக்கு உகந்தவராகவே
மாறிவிடுகின்றார்.
இன்றைய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை (தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட
குழந்தைகள் என்று சொல்வதே சரியானது) எப்படி வளர்கின்றார்கள் என்று
சிந்தித்துப் பார்க்கவேண்டும். பலநேரங்களில் பெற்றோர்கள் தங்களுடைய
குழந்தைகளை அடிமைகள் போன்று நடத்துவதும், அவர்களுடைய சுய
வெறுப்புகளுக்கு மதிப்பதிக்காமல், தங்களுடைய எண்ணங்களை அவர்கள்மீது
சுமத்தி, அவர்களை அடிமைப்படுத்துவதையும் பார்க்கமுடிகின்றது.
இது சரியான வழிமுறை ஆகாது. ஆண்டவரிடமிருந்து பெற்ற குழந்தைகளை
ஆண்டவருடைய வழியில் வளர்த்தெடுப்பதுதான் சரியான காரியமாகும்.
எனவே, ஆண்டவர் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததைக்
குறித்து சிந்தித்த நாம், அனைவரும் ஆண்டவருடைய மக்கள் என்பதை
உணர்வோம், அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
நேர்மையாளர் ஆண்டவரின் திருமுகத்தைக் கண்பார்
இளைஞன் ஒருவன் கடவுளைக் காணவேண்டும் என்று ஆவல் கொண்டான். எனவே
அவன் அவ்வூரில் இருந்த துறவியைச் சந்தித்து, தனது ஆசையை வெளிப்படுத்தினான்.
அதற்கு துறவியோ, "கடவுளைக் காண்பது அவ்வளவு எளிதல்ல, அதற்கு
நிறைய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்" என்றார். ஆனால் அவனோ தன்னுடைய
கருத்தில் விடாப்பிடியாக இருந்ததால், துறவி அவனை ஊரில் இருந்த
ஆற்றங்கரைக்குக் கூட்டிக்கொண்டு போனார்.
அங்கே தண்ணீருக்குள் அவனை மூழ்கச் சொன்னார். அவனும் துறவியின்
வாக்கை தெய்வவாக்காக எடுத்துக்கொண்டு தண்ணீருக்குள்
மூழ்கினான். கரையில் நின்றுகொண்டிருந்த துறவி, அவனுடைய தலையைப்
பிடித்துக்கொண்டு, தண்ணீருக்குள் வேகமாக அழுத்தினார். அவனோ
"துறவி நமக்கு கடவுளைக் கான்பிப்பதாகச் சொல்லிவிட்டு, இப்படி
தண்ணீருக்குள் மூழ்கடித்துக் கொல்லப் பார்கிறாரே?" என்று அவருடைய
பிடியிலிருந்து தப்பிக்கப் பார்த்தான். ஆனால் அவனால் துறவியின்
பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. ஒருவழியாக அவன் எப்படியோ
துறவியின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, வெளியே வந்தான்.
அப்போது அவர் அவனிடம், "தண்ணீரில் உன்னை நான் அழுத்தியபோது உனக்கு
எப்படி இருந்தது?" என்றார். அதற்கு அவன், "என்னுடைய உயிரே போவது
போன்று இருந்தது. அதனால்தான் உங்கள் பிடியிலிருந்து எப்படியாவது
தப்பித்து விடவேண்டும் என்று முயன்று, என்னுடைய உயிரைக்
காத்துக்கொண்டேன்" என்றான்.
உடனே அவர் அவனிடம், "கடவுளைக் காணவேண்டும் என்ற உன்னுடைய முயற்சியில்,
இதுபோன்று நீ தொடர்ந்து முயன்றால் ஒருநாள் கடவுளை நிச்சயம் கண்டுகொள்வாய்"என்று சொல்லி அவனை வாழ்த்தி, வழியனுப்பினார்.
இடைவிடாது கடவுளைத் தேடுவோருக்கு கடவுள் நிச்சயம் தரிசனம் தருவார்
என்ற உண்மையைக் இக்கதையானது அழகாக எடுத்துக்கூறுகிறது. இன்றைய
நற்செய்தி வாசகத்தில் குழந்தை இயேசுவின் தரிசனம் சிமியோனுக்கு
கிடைப்பதைப் படிக்கக் கேட்கின்றோம். சிமியோனைக் குறித்துப்
பார்க்கின்றபோது அவர் நேர்மையாளர்; இறைபற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு
வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியைப்
பெற்றவர் என்று படிக்கின்றோம். அப்படிப்பட்ட ஒரு மனிதர்
"ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் சாகப்போவதில்லை என்று தூய ஆவியால்
உணர்த்தப்பட்டிருந்தார். அதன் பொருட்டு அவர் எருசலேம்
திருக்கோவிலுக்கு வருகிறார். குழந்தை இயேசுவைக் கண்டுகொள்கிறார்.
இங்கே நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு காரியம்.
சிமியோனைக் குறித்து படித்துப் பார்க்கும்போது அவர்
"நேர்மையாளர்" என்று அறிகிறோம். நற்செய்தி வாசகத்தில் இயேசுவின்
வளர்ப்புத் தந்தை யோசேப்பு (மத் 1:19), திருமுழுக்கு யோவானின்
பெற்றோர்களான செக்கரியா மற்றும் எலிசபெத்தை (லூக் 1:6) அடுத்து,
சிமியோனே நேர்மையாளர் எனச் சுட்டிக்காட்டப் படுகின்றார். அப்படியானால்
அவர் நேரிய வழியில் நடந்திருக்க வேண்டும், இறைவனுக்கு உகந்த
வாழ்வு வாழ்ந்திருக்க வேண்டும். அதனால்தான் அவர் குழந்தை இயேசுவைக்
காணும் பேறுபெற்றார். திருப்பாடல் 11:7 ல் வாசிப்பதுபோல
நேர்மையாளரான சிமியோன் ஆண்டவரின் திருமுகத்தைக் காணும்
பேறுபெற்றோர்.
இன்றைக்கு நம்முடைய வாழ்வு இறைவனுக்கு உகந்த நேர்மையான வாழ்வாக
இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். "எல்லோரும்
நேர்மை தவறி வாழ்கிறார்கள், அதனால்தான் நான் அப்படி
வாழ்கிறேன் என்று சொல்வது உண்மையான கிறிஸ்தவ வாழ்வாக இருக்காது.
நாம் கடவுளுக்கு உகந்த நேர்மையான வாழ்வு வாழவேண்டும்.
"நெருப்பைக் கரையான் அழிக்க முடியாது, நேர்மையாளரை பழியும், பாவமும்
நெருங்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் நேர்மையுடன் நடந்தால் சமூகத்தின்
பொது வாழ்வும் தானாகத் தூய்மையாகும்" என்பார் தமிழ்நாட்டின் முதல்
முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி. எனவே நாம் நேர்மையான வாழ்வுவாழ
முயல்வோம். அதன் வழியாக இறைவனைக் காணும் பேறுபெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai. |
|