Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   28  டிசெம்பர் 2018  
                             புனித மாசில்லாக் குழந்தைகள் - மறைச்சாட்சியர் விழ 
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5 - 2: 2

சகோதரர் சகோதரிகளே, நாங்கள் இயேசு கிறிஸ்துவிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை.

நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; உண்மைக்கேற்ப வாழாதவர் ஆவோம்.

மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.

ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோம் என்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்.

ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர். நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யர் ஆக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும்.

என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:124: 2-3. 4-5. 7b-8 (பல்லவி: 7a)
=================================================================================
 பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.

2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது, 3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். பல்லவி

4 அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்; 5 கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். பல்லவி

7b கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம். 8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஏரோது பெத்லகேமில் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18

ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும் வரை அங்கேயே இரும். ஏனெனில் குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்" என்றார்.

யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்; ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார்.

இவ்வாறு, "எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது. ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றம் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கு ஏற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

அப்பொழுது "ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை" என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 பதினெட்டாம் நூற்றாண்டில் டென்மார்க்கில் தோன்றிய மிகச் சிறந்த சிற்பி தோர்வாட்சன் (Thorvaldsen) என்பவர்.

ஒருசமயம் அவர் இயேசுவின் உருவத்தை ஒரு சிற்பமாக வடிக்க நினைத்தார். அதற்காக அவர் ஓரிரு மாதங்கள் எடுத்துகொண்டு சிற்பத்தை வடித்து முடித்தார். தான் செய்துமுடித்த அந்த சிற்பம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, அவர் ஒரு சிறுமியை அழைத்து, "இது யார்?" என்று கேட்டார். அந்தச் சிறுமியோ, சிற்பத்தை ஒரு நிமிடம் மேலும் கீழும் பார்த்துவிட்டு, "யாரோ ஒரு பெரிய ஆள் மாதிரி தெரிகிறது. ஆனால் யார் என்று சரியாகத் தெரியவில்லை" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

ஒரு சிறுமியால் நாம் வடித்த சிற்பத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்றால், நாம் வடித்த சிற்பத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்று அவர் மீண்டுமாக சிற்பத்தை வடிக்கத் தொடங்கினார். இந்த முறை அவர் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக்கொண்டு, பொறுமையாக சிற்பத்தைச் செய்து முடித்தார். பின்பு முன்பு அழைத்த அதே சிறுமியைக் கூப்பிட்டு, "இந்த சிற்பத்தில் இருப்பவர் யார்?" என்று கேட்டார். சிறுமியோ ஒருநொடி கூடத் தாமதியாமல், "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் என்று சொன்னாரே, அந்த இயேசு" என்றாள்..

அந்தச் சிறுமி இவ்வாறு சொன்னதைக் கேட்ட தோர்வாட்சனுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. தான் வடித்திருக்கும் இயேசுவின் சிற்பம் நன்றாகத்தான் இருக்கிறது என்ற சந்தோசத்தில் அவர் அந்தச் சிறுமிக்கு, இனிப்புகள் கொடுத்து, வாழ்த்தி அனுப்பினார்.

குழந்தைகள் கள்ளம் கபடு இல்லாதவர்கள், மாசு மருவற்றவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒன்று புரிகின்றபோது அல்லது பிடிக்கின்றபோது அது எல்லாரும் பிடிக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

இன்று நாம் மாசில்லாக் குழந்தைகளின் விழாவைக் கொண்டாடுகின்றோம். வானத்தில் விண்மீன் தோன்றியதைக் கண்டு, ஓர் அரசர் பிறந்திருக்கிறார் என அறிந்துகொள்ளும் கீழ்த்திசை ஞானிகள், அவரைப் பார்ப்பதற்காக விண்மீன் வழிகாட்டுதலில் எருசலேமிற்கு வருகிறார்கள். இதற்கிடையில் அவர்கள் ஏரோதிடம் சென்று, "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரை வணங்க வந்திருக்கிறோம்" என்கிறார்கள். அவர்கள் சொன்ன செய்தியைக் கேட்டு ஏரோது கலக்கமுறுகிறான். இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், "நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாக அறிந்து எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்" என்று நயவஞ்சமாகப் பேசி அனுப்பி வைக்கிறான்.

ஆனால் ஞானிகள் கனவில் எச்சரிக்கப்பட்டத்தால், ஏரோதிடம் சொல்லிக்கொள்ளாமலே வேறு வழியாகப் போகிறார்கள். இதனால் கடுஞ்சீற்றம் கொண்டு, பெத்லேகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆட்களை அனுப்பி, இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான ஆண் குழந்தைகளைக் கொன்று போடச் சொல்கிறான்.

இந்த ஏரோது, எங்கே தன்னுடைய பதவி பறிபோய்விடும் என்பதற்காக தன்னுடைய தாயையும் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் கொன்றவன். அப்படிப்பட்டவன் யூதர்களின் அரசர் பிறந்திருக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் பதற்றமடைகிறான். அவர் வந்து தன்னுடைய பதவியைக் பறித்துவிடக்கூடாது என்பதற்காக இரண்டு வயதும் அதற்குட்பட்ட எல்லாம் ஆண்குழந்தைகளையும் கொன்றுபோடுகிறான். இதில் வேடிக்கை என்னவெனில், இயேசு பிறந்தபோது ஏரோதுக்கு வயது எழுபது. அந்த வயதில், இயேசு வளர்ந்து தன்னுடைய பதவியைப் பறித்துவிடுவார் என நினைத்து அவரைக் கொல்லமுயல்வதை என்னவென்று சொல்வது?. அவனுடைய பதவி வெறியால் ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டன. அப்படிக் கொல்லப்பட்ட மாசில்லாக் குழந்தைகளைத்தான் இன்று நாம் நினைவுகூருகின்றோம்.

மறைசாட்சிகளை நாம் மூன்று விதமாகப் பிரிக்கலாம். மறைசாட்சியாக உயிர்நீக்க வேண்டும் என்று விருப்பி, அதற்காகக் கொல்லப்பட்டவர்கள் முதல் வகையினர். ஸ்தேவன் இந்த வகையைச் சார்ந்தவர். மறைசாட்சியாக இறக்க விரும்பி, அது முடியாமல் போனவர்கள் இரண்டாவது வகையினர். தூய யோவான் இதில் அடங்குவார். மூன்றாவது வகையினர், மறையாட்சியாக இறக்கவேண்டும் என்று விரும்பாமலே கொல்லப்பட்டவர்கள். மாசில்லாக் குழந்தைகள் இந்த மூன்றாவது வகையில்தான் அடங்குவர். எந்தவோரு குற்றமும் செய்யாமல் கொல்லப்பட்ட இவர்கள், இயேசுவுக்காக உயிர்நீத்த தியாகிகள்.

இந்த மாசில்லக் குழந்தைகளைப் போன்றுதான், இன்று பல குழந்தைகள் மனிதர்களுடைய சுய நலத்திற்காக, பதவிவெறிக்காக பயன்படுத்தப்பட்டு தூக்கிவீசப்படுகிறார்கள். ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்தக் குழந்தைகளுக்கு இடறலாக, இவர்களைப் பாவத்தில் விழச் செய்பவர்களுக்கு கடுமையாக தண்டனை உண்டு என்பது உறுதி (மத் 18:6).

ஆகவே, மாசில்லக் குழந்தைகளின் விழாவைக் கொண்டாடும் நாம், அந்தக் குழந்தைகளின் நலனைப் பேணுவதற்கான முயற்சிகளை எடுப்போம். குழந்தைகளின் உள்ளம் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் ஓர் ஓட்டப் பந்தயத்திற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ரெடி, ஸ்டெடி, கோ என்றதும், விளையாட்டுத் துப்பாக்கியின் சத்தம் கேட்க குழந்தைகள் ஓடத் தொடங்கினர்.

ஒரு 15 அடி தூரம் சென்றிருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடீரென்று கீழே விழுந்தது. அடிபட்ட காரணத்தால் அந்தக் குழந்தை அழ ஆரம்பித்தது. ஏதோ சத்தம் வரவே, ஓடிக்கொண்டிருந்த அனைத்துக் குழந்தைகளும் திரும்பிப் பார்த்தனர். பின்னர் அந்தக் குழந்தையை நோக்கி அவர்கள் ஓடி வந்தார்கள். அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டுக் கேட்டது, "இப்போது வலி போயிடுச்சா". அதைப் பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர். பின்னர் எல்லாரும் அந்தக் குழந்தையைத் தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடினார்கள்.

அதைப் பார்த்த விழாக்குழுவினரும் பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார்கள்.

ஆமாம், இது ஓர் உண்மை சம்பவம். இது நடந்தது வேறு எங்குமில்லை, நம் இந்தியாவில். அதுவும் ஹைத்ராபாத்தில் நடந்த சம்பவம்தான். அந்த விழாவை நடத்தியது மனநலம் குன்றியவர்களுக்கான தேசிய நிறுவம். அதில் கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம் குன்றியவர்கள். ஆம், அவர்கள் மனநலம் குன்றியவர்கள். ஆனால், உள்ளத்தால் உயர்ந்தவர்கள்

குழந்தைகள் எப்போதும் மாசு மருவற்றவர்களாய், கள்ளம் கபடு இல்லாதவகளாய் இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டாய் இருக்கின்றது.

இன்று நாம் மாசில்லாக் குழந்தைகளின் நினைவு நாளை/ விழாவைக் கொண்டாடுகின்றோம். கொடிய மனமும் பதவி வெறியும் பிடித்த ஏரோதுவால் கொல்லப்பட்ட குழந்தைகள்தான் இந்த மாசில்லக் குழந்தைகள். இவர்கள் ஆண்டவருக்காக இரத்தம் சிந்திய மறைசாட்சிகள் என்று சொன்னால் அது மிகையாகாது.

இயேசுவின் பிறப்பை விண்ணில் தோன்றிய ஒருசில அடையாளங்களை வைத்துக் கண்டறிந்து, விண்மீன் வழிநடத்துதலால் இயேசு பிறந்த இடம் நோக்கி வந்த ஞானிகள் ஏரோதுவிடம் சென்று, "புதிதாக அரசர் ஒருவர் பிறந்திருக்கின்றார், அவர் பிறந்த இடம் எங்கே?" என்று கேட்கின்றார்கள். அரசர் பிறந்த செய்தியைக் கேள்விப்பட்டுக் கலக்கம் அடைந்த ஏரோது, அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் மிகவும் தந்திரமாக மறைநூல் வல்லுநர்களை அழைத்து மெசியா பிறக்கும் இடம் எது என்று கேட்டறிந்து, அதனை அந்த ஞானிகளிடம் சொல்லி, "நீங்கள் புதிய அரசரை வணங்கிவிட்டு, அவர் எங்கு பிறந்திருக்கின்றார் என்ற செய்தியை என்னிடத்தில் சொல்லுங்கள், அப்போது நானும் அங்கு சென்று, அவரை வணங்குவேன்" என்று மிகத் தந்திரமாகப் பேசி, அனுப்பி வைக்கின்றான். ஆனால், கனவில் வானதூதரால் எச்சரிக்கப்பட்ட மூன்று ஞானிகள் ஏரோதிடம் சொல்லிக் கொள்ளாமல், மாற்று வழியில் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிச் செல்கின்றார்கள்.

ஞானிகள் தம்மை ஏமாற்றியதை அறிந்த ஏரோது, பெத்லகேமிலும் அதனைச் சுற்றிலும் இருந்த ஊர்களில் இருந்த இரண்டு வயதுக்கும் அதற்கு உட்பட்ட குழந்தைகளையும் கொன்று போடச் சொல்கின்றான். ஏரோது செய்த இந்த பாதகச் செயல் எத்துணை கொடியது என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னதாக, அவன் எவ்வளவு கொடியவன் என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஏரோது அடிப்படையிலே பதவிவெறி பிடித்தவனாக இருந்தான். தன்னுடைய அதிகாரத்திற்கு யாராரெல்லாம் எதிராக இருந்தார்களோ, அவர்களையெல்லாம் அவன் கொன்றுபோடத் தயங்கவில்லை, முதலில் எனகரிம் என்ற நீதிமன்றத்தில் இருந்த தலைவர்களைக் கொன்று போட்டான். பின்னர் தன்னுடைய மனைவி மரியம்மேவையும், இரண்டு மகன்களையும் கொன்று போட்டான். அந்த வரிசையில் தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் அவன் குழந்தை இயேசுவைக் கொல்ல முயல்கின்றான்.

குழந்தை இயேசுவைக் கொல்வதற்காக ஏரோது எத்தனைக் குழந்தைகளைக் கொன்றுபோட்டான் என்றும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். பெத்லேகம் நகர் அளவில் சிறியது என்பதாலும் அதனைச் சுற்றி அதிகமான மக்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பதாலும் இருபதிலிருந்து இருப்பத்தைந்து குழந்தைகளுக்கு மேல் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஒரு முடிவுக்கு வரலாம். இது விவிலிய அறிஞர்கள் சொல்லுகின்ற செய்தி. ஆனால் இது விவிலியத்தைத் தவிர ஏனைய வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெற வில்லை என்பதால் இந்நிகழ்வு நடந்திருக்காது என்றும் சொல்வார்கள். எப்படி இருந்தாலும் பதவிக்காக குழந்தைகளைக் கொன்றுபோட்ட ஏரோதின் பாதகச் செயல் கண்டிக்கத் தக்கது. இன்றும் கூட நிறையப் பேர் தங்களுடைய சைக்காக, சுய விருப்பத்திற்காக குழந்தைகளைப் பலிகொடுக்கும் கொடூரங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் மனமாறவேண்டும். கொடுஞ்செயல்கள் மறைய வேண்டும்.

ஆகவே, மாசில்லா குழந்தைகளின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் குழந்தைகளைப் போன்று மாசில்லாதவர்களாக வாழ்வோம். குழந்தைகளின் நலன் காப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
"ஆகாயத்தின் இரத்தினம் சூரியன்; வீட்டின் இரத்தினம் குழந்தை"

இன்று திருச்சபையானது மாசில்லாக் குழந்தைகளின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இவர்கள்தான் ஆண்டவர் இயேசுவுக்காக முதன்முறையாக இரத்தம் சிந்தியவர்கள்; இவர்கள்தான் குழந்தை இயேசு ஏற்கவேண்டிய மரணத்தை தங்களுடைய உடலில் தாங்கிக்கொண்டவர்கள். எனவே இவர்களது தியாகத்தையும், மாசற்றதன்மையும் சிந்தித்துப்பார்த்து இவர்களைப் போன்று நாமும் மாசற்றவர்களாகவும் தியாக உள்ளத்தினராய் வாழ முயல்வோம்.

"பதவிமோகம் ஒருவனின் கண்களை மறைத்துவிட்டால், அவனால் ஏற்படும் தீமைகள் அதிகம்" ஏற்பார்கள் பெரியவர்கள். அந்தவகையில் பார்க்கும்போது ஏரோது பதவிவெறி பிடித்தவனாக இருந்தான்; அவன் தன்னுடைய பதவிக்குத் தடையாக இருந்த மனைவி, மூன்று மகன்களையும் கொன்றுபோட்டான்.

கீழ்த்திசையில் இருந்து வந்த ஞானிகள், பெத்லேகமில் அரசன் ஒருவர் தோன்றியிருக்கிறார் என்று சொன்ன செய்தியைக் கேள்விப்பட்டதும் ஏரோது மன்னன் கலங்குகிறான். அவனோடு சேர்ந்து எருசலேமே கலங்குகிறது. எனவே அவன் நயவஞ்சகத்தோடு மூன்று ஞானிகளிடம், "புதிதாகத் தோன்றியுள்ள அரசனைத் தரிசித்துவிட்டு என்னிடம் சொல்லுங்கள், நானும் அவரைச் சென்று தரிசிக்கவேண்டும்" என்கிறான். ஆனால் குழந்தை இயேசுவை தரிசித்துவிட்டு திரும்பிவருவதாகச் சொன்ன ஞானிகள், அவ்வாறு திரும்பிவராமல் வேறு வழியாகச் சென்றதால் கொதித்தெழுந்த ஏரோது எருசலேமையும், அதனைச் சுற்றியிக்கும் ஊர்களில் உள்ள இரண்டு வயதும், அதற்கு உட்பட்ட குழந்தைகளையும் கொன்றுபோடச் சொல்கிறான். இதனால் அவனுடைய பதவிவெறிக்கு ஏராளமான குழந்தைகள் பலியானார்கள்.

ஏரோதின் இந்த கொடுஞ்செயலுக்கு குழந்தை இயேசு வேண்டுமானால் தப்பித்திருக்கலாம். ஆனால் ஏராளமான குழந்தை மடிந்தார்கள், தங்களுடைய உயிரையே இழந்தார்கள்.

இன்றைக்கும்கூட பெரியவர்களின் (?) பதவிவெறிக்கு ஆசைகளுக்கு, தவறுகளுக்கு குழந்தைகள்தான் அதிகமாகப் பலியாடாக மாறுகிறார்கள். உடல்ரீதியாக, உள்ளரீதியாக ஒவ்வொருநாளும் குழந்தைகள் சந்திக்கக்கூடிய பிரச்னைகளும், சவால்களும் ஏராளம். அவற்றை எல்லாம் நம்மால் வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. எனவே குழந்தைகளுக்கு எதிரான அநீதிகளையும், வன்முறைகளையும் களைந்துவிட்டு, அவர்களை மனிதர்களாக மதித்து நடத்துவது நம்முடைய கடமையாகும்.

"ஒரு சமூகத்தின் வளர்ச்சி ஒரு குழந்தையின் வளர்ச்சியைப் பொறுத்ததே" என்பார் வோர்ட்ஸ்வொர்த் என்ற கவிஞன். ஆம், ஒரு சமூகம் வளர்ந்ததாக, முன்னேறியதாக இருக்கவேண்டுமென்றால் அங்கே இருக்கக்கூடிய குழந்தைகள் உடல்ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் வளர்ச்சியடைய வேண்டும். அப்படி இல்லையென்றால் அது உண்மையான வளர்ச்சியாக இருக்காது.

மத்தேயு நற்செய்தி 18:3 ல் ஆண்டவர் இயேசு கூறுவார், "நீங்கள் மனந்திரும்பி சிறுபிள்ளைபோல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள்" என்று. ஆம், நாம் ஒவ்வொருவரும் குழந்தைகளைப் போன்று தூய உள்ளத்தினராய், கள்ளம் கபடற்றவர்களாய், எளிய உள்ளத்தினராய் வாழவேண்டும். அப்போதுதான் நாம் விண்ணரசை உரிமையாக்கிக்கொள்ள முடியும். இப்படிச் சொல்லும் இயேசு இன்னொரு செய்தியும் சொல்வார். "என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது" என்று (மத் 18:6). ஆகவே நாம் குழந்தைகளைப் போன்று தூயவர்களாக இருக்கும் அதே நேரத்தில் அவர்களுக்கு துன்மாதிரியாக இல்லாமல், முன்மாதிரியாக இருக்கவேண்டும்.

ஆனால் அன்றாட வாழ்க்கையில் நடப்பது வேறு ஒன்று. நாம் நம்முடிய குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாக இருக்கின்றோம். அவர்களிடம் போதுமான அன்பையும், அக்கறையும் செலுத்தாமல் அவர்கள் வழிதவறிப் போக நாமே காரணமாகிவிடுகின்றோம்.

பெருநகர் ஒன்றில் குருவானவர் ஒருவர் இருந்தார். அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அருகாமையில் இருக்கும் சிறைச்சாலைக்குச் சென்று, அங்கே இருக்கும் கைதிகளுக்கு ஆறுதல் சொல்லிவந்தார்.

ஒருநாள் அவர் சிறைச்சாலைக்குச் சென்று பார்த்தபோது, அங்கே பதினான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் இருந்தான். அவனைப் பார்த்ததும் அவன்மீது இரக்கம்கொண்ட குருவானவர் அவன் தோள்மேல் கைகளைப் போட்டு அன்போடு பேசத்தொடங்கினார், "அன்பு மகனே!, நீ எப்படி இந்த சிறைச்சாலைக்கு வந்தாய்?" என்று கேட்டார். அதற்கு அவன், "உங்களைப் போன்று என்னுடைய பெற்றோர்கள் என்னிடத்தில் இப்படி அன்போடு நடந்தியிருந்தால் நான் இப்படி சிறைச்சாலைக்கு வந்திருக்கமாட்டேன்" என்றான்.

அவன் தொடர்ந்து சொன்னான், "என்னுடைய பெற்றோர்கள் எப்போதுமே வேலை வேலை என்று அலைவார்கள். என்னோடு பேசுவதற்கு அவர்கள் நேரம் ஒதுக்கமாட்டார்கள்; நான் தவறு செய்கிறபோது அதைத் தட்டிக்கேட்கமாட்டார்கள். ஒருவேளை அவர்கள் மட்டும் நான் தொடக்கத்தில் தவறுசெய்தபோது கண்டித்துத் திருத்தியிருந்தால், நான் இன்றைக்கு இந்த நிலைக்கு ஆளாகியிருக்கமாட்டேன்" என்று கண்ணீரோடு தன்னுடைய கதையைச் சொல்லிமுடித்தான்.

ஆம், ஒரு குழந்தை நல்லவராகவதற்கும், தீயவராகவதற்கும் பெற்றோர்கள் எத்தகைய பங்களிப்பைச் செய்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது. ஆகவே, மாசில்லக் குழந்தைகளின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அந்தக் குழந்தைகளிடம் விளங்கும் மாசற்றதன்மையை, எளிமையை நம்முடையதாக்குவோம். அதோடு மட்டுமல்லாம் நம்மோடு வாழும் குழந்தைகளின் நலன் பெறுவோம். அவர்களுக்கு முன்மாதிரியாய் இருப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
புத்தனாவது காந்தியாவது - அழுதுகொண்டே அடித்தவரிடமே அடைக்கலம் தேடும் குழந்தையைத் தாண்டி யாரிடம் கற்றுக்கொள்ளப் போகிறீர்கள்" என்பார் அராத்து என்ற எழுத்தாளர். குழந்தைகள் கள்ளம்படற்றவர்கள், எளிய உள்ளத்தினர் என்பதை இதைவிட யாரும் சிறப்பாகச் சொல்லமுடியாது.

இன்று திருச்சபையானது மாசில்லாக் குழந்தைகளின் விழாவைக் கொண்டாடுகிறது. இயேசுவுக்காக, இல்லை இல்லை இயேசுவுக்குப் பதிலாக தங்களது உயிரையே தியாகம் செய்த மாசில்லாக் குழந்தைகளை இன்று நாம் நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம். இவர்களை இயேசுவுக்காக உயிர் துறந்த முதல் மறைசாட்சிகள் என்று சொல்வது மிகவும் பொருத்தமானது.

பதவி ஆசை பிடித்த ஏரோது, எங்கே தன்னுடைய பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் இப்படிப்பட்ட ஓர் அரக்கத்தனமான செயலில் ஈடுபடுகிறான். இவனுடைய வரலாற்றைச் சற்றுப பின்னோக்கிப் பார்த்தால் பதவிக்காக யாரையும் கொலை செய்யக்கூடியவன் என்றே தோன்றுகிறது. தன்னுடைய இரண்டு மைத்துனர்கள், தாய், மனைவி, மகன் என்று ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. அந்தளவுக்கு பதவி ஆசை பிடித்தவனாக இருந்திருக்கிறான். அப்படிப்பட்டவன் 'யூதர்களின் அரசர் பெத்லகேமில் பிறந்திருக்கிறார்' என்று மூன்று ஞானியர்கள் வழியாகக் கேள்விப்பட்டதும், இயேசுவைக் கொல்ல வழி தேடுகிறான். அதனால் அவன் பெத்லகேம் மற்றும் அதனைச் சுற்றி இருக்கக்கூடிய ஊர்களில் உள்ள இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைக் கொன்றுபோடுகிறான்.

ஏரோதுவின் இந்த படுகொலைக்கு எத்தனைக் குழந்தைகள் இறந்தார்கள் என்று வரலாற்றில் போதிய ஆதாரம் கிடையாது. ஒருசிலர் 14,000 பேர் என்றும், இன்னும் சிலர் 64,000 பேர் என்றும், மற்றும் சிலர் 1,44,000 என்றும் சொல்வர். ஆனால் பெத்லகேம் ஒரு சிறிய கிராமமாக இருப்பதால், அதில் அத்தனை குழந்தைகள் இருக்க வாய்ப்பில்லை என்றும், 20 லிருந்து 25 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும், ஏரோது தன்னுடைய பதவி வெறிக்காக, சுயநலத்துக்காக இத்தனைக் குழந்தைகளைக் கொன்றது என்பது உண்மையிலே கண்டிக்கத்தக்கது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களாக 1036 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2013ல் இந்த எண்ணிக்கை 1228 ஆக அதிகரித்தது. மற்ற குற்றங்களுடன் ஒப்பிடுகையில் ஒரே ஆண்டில் இது 18.5 சதவீதம் அதிகம். இந்தாண்டில் மேலும் அதிகரித்துள்ளது. தமிழக அளவில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவில் குழந்தைகளின் நிலை குறித்த ஒரு புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளது.

அதில் "22 சதவீத குழந்தைகள் கடுமையான பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்படுகின்றனர். 51 சதவீத குழந்தைகள் மற்ற பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்படுகின்றனர். சாலையோரக் குழந்தைகள், வேலை செய்யும் குழந்தைகள், நிறுவனங்களில் இருக்கும் குழந்தைகள் அதிகமாக பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். இதில் ஆண், பெண் என இருபால் குழந்தைகளும் பாலியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்படும் குழந்தைகள் இந்தியா வில் அதிகம் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. 155 நிமிடத்துக்கு ஒரு முறை 16 வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தையும், 13 மணிநேரத்துக்கு ஒரு முறை 10 வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தையும் பாலியல் கொடுமைக்கு ஆளாகின்றனர். இந்த வகையில் தினமும் 10குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய பள்ளி மற்றும் வீடுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடக்கிறது. குழந்தைகளை அடித்தல், துன்புறுத்துதல் மற்றும் கொடுமைக்கு உள்ளாக்குதல் போன்றவை தொடர்ந்து நடக்கிறது. பள்ளிகளில் குழந்தைகள் மீதான வன்முறை, மாணவர் தற்கொலை மற்றும் கொலை முயற்சிகள் என குழந்தைப் பருவம் மகிழ்ச்சிக்கு பதிலாக பயத்தால் நிரப்பப்படுகிறது. (நன்றி: தினகரன் நாளிதழ்)

ஆக குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அன்று மட்டும் நடந்த ஒன்று அல்ல. இன்றைக்கும், நம்முடைய குடும்பங்களில், நாம் பணிசெய்யும் பணித்தலங்களில், சமூகங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இவற்றைக் களைவதற்கு நாம் குழந்தைகளை மனிதர்களாக மதித்தாலே போதும்.

நற்செய்தியில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை இயேசுவிடமிருந்து ஆசி பெற அழைத்துவரும்போது, அவர்களை இயேசுவின் சீடர்கள் தடுக்கிறார்கள். அப்போது இயேசு அவர்களைப் பார்த்துச் சொல்கிறார், "குழந்தைகளைத் தடுக்காதீர்கள், அவர்களை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையதோருக்கே உரியது" என்கிறார் (மத் 19:13). மேலும் சீடர்கள் தங்களுக்குள் "யார் பெரியவர்?" என்று சண்டை போட்டபோது, இயேசு அவர்கள் நடுவே ஒரு குழந்தையை நிறுத்தி, "நீங்கள் மனந்திரும்பிச் சிறுபிள்ளைகள் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள்" என்கிறார் (மத் 18:1-4). அதோடு மட்டுமல்லாமல், சிறுபிள்ளைகளுக்கு இடையூறாக இருப்போரின் கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் ஆழ்த்துவது நலம்" என்கிறார் (மத் 18:6).

எனவே இயேசுவைப் பொறுத்தளவில் குழந்தைகள் குழந்தை உள்ளம் கொண்டவர்கள் விண்ணரசில் எளிதாக நுழைந்துவிடலாம். அவர்களுக்கு எதிரான குற்றம் வன்மையானத் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

இன்று நமது குடும்பங்களில், சமூகங்களில் குழந்தைகளை எப்படி நாம் நடத்துகிறோம் என்று சிந்தித்துக் பார்க்க வேண்டும்.

இராணுவத்தில் உயர்ந்த பொறுப்பில் வகித்த கமாண்டோ ஒருவர் இருந்தார். அவர், தான் பணிபுரியும் இடத்தில் மிகவும் கண்டிப்புள்ளவர். இராணுவ வீரர்கள் அவரைப் பார்த்ததும் நடுங்குவார்கள். அந்தளவுக்கு மிகவும் கண்டிப்புள்ளவர். அதே நேரத்தில் நேர்மையானவரும்கூட. ஆனால் வீட்டில் அதற்கு முற்றிலும் எதிர்ப்பதம். தன்னுடைய பத்து வயதுப்பெண் குழந்தையிடம் அவர் மிகவும் செல்லமாக இருந்தார்.

அவர் இப்படி இருப்பதைப் பார்த்துவிட்டு அவருடைய மனைவி ஒருநாள், "குழந்தைக்கு இவ்வளவு செல்லம் கொடுத்தால், பிறகு அவள் கெட்டுச் சீரழிந்துவிடுவாள். நீங்கள் அவளிடம் கண்டிப்புடன் இருங்கள்" என்று கடிந்துகொண்டாள். எதற்கு வீண் வம்பு என்று நினைத்துக்கொண்டு அவரும் தன்னுடைய குழந்தையிடம் மிகவும் கண்டிப்புடனே நடந்துகொண்டார்.

தன்னுடைய மகளை தன்னிடம் அழைத்த அவர் அவளிடம், "இனிமேல் நீ என்னை டாடி என்று எல்லாம் கூப்பிடக்கூடாது. சார் என்றுதான் கூப்பிடவேண்டும். ஏனென்றால் நான் ஒரு கமாண்டோ. சரியா?" என்றார். அதற்கு அவருடைய மகள், "சரி சார்" என்று சொல்லி அவர் சொல்லுக்கு கீழ்படிந்து நடக்க ஆரம்பித்தாள்.

ஒருநாள் மகளுக்கு பள்ளியில் விடுமுறை விடவே, அவள் தன்னுடைய தந்தையிடம் சென்று, "சார், இன்றைக்கு எனக்கு பள்ளி விடுமுறை, நாம் வெளியே ஷாப்பிங் போகலாமா சார்?" என்றார். அதற்கு அவர், "சரி, நீ காரில் என்னுடைய பக்கத்துக்கு இருக்கையில் உக்காராமல், பின்புறமாக உள்ள இருக்கையில் உட்கார சம்மதித்தால் நான் உன்னை ஷாப்பிங் கூப்பிட்டுப் போகிறேன்" என்றார். அதற்கு அவள், "சரி சார், நான் பின்இருக்கையிலே உட்கார்ந்துகொள்கிறேன்" என்று சொல்லி காரின் பின் இருக்கையில் போய் அமர்ந்துகொண்டாள்.

காரில் அவர்கள் இருவரது பயணம் தொடர்ந்து. தந்தை மகளிடம் ஒன்றுமே பேசாமல் ரொம்ப இறுக்கமாக இருந்தார். அப்போது பின்னால் இருந்து மகள், "சார், ஐ லவ் யு சார்" என்றாள். இதைச் சற்றும் எதிர்ப்பாராத தந்தை தன்மீது இத்தனை அன்பு கொண்டிருக்கும் மகளிடம் எதற்காக வீம்புக்கு கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று, தன்னுடைய இறுக்கத்தைத் தூர எறிந்துவிட்டு அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு அவளிடம், "மகளே! இனிமேல் நீ என்னை டாடி என்று கூப்பிட்டாலே போதும். சார் எல்லாம் வேண்டாம்" என்றார்.

குழந்தையும் அதைகேட்டு மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்து எழுந்து, தன்னுடைய தந்தையைக் கட்டி அணைத்துக்கொண்டது.

குழந்தைகள் எப்போதும் அன்பானவர்கள், மாசற்றவர்கள் என்பதற்கு இந்த ஒரு நிகழுவு போதும். ஆதலால் மாசில்லாக் குழந்தைகள் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் நாமும் குழந்தைகள் உள்ளம் கொண்டு வாழுவோம். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை நமது குடும்பங்களில், சமூகத்திலிருந்து களைவோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5 
=================================================================================

புனித மாசில்லாக் குழந்தைகள் - மறைச்சாட்சியர் விழ

நிகழ்வு

பெருநகர் ஒன்றில் வசித்து வந்த டோனிக்கு ஐஸ்கிரீம் என்றால் உயிர். ஒருநாள் அவன் ஐஸ்கிரீம் பார்லருக்குச் சென்று, "கஸாட்டா ஐஸ்கிரீம் எவ்வளவு?" என்று கேட்டேன். "இருபத்தைந்து ரூபாய்" என்றார் பணிப்பெண். கையிலிருந்த காசை எண்ணிப் பார்த்துவிட்டு, "வெண்ணிலா ஐஸ்கிரீம் எவ்வளவு?" என்று கேட்டான். "இருபது ரூபாய்" என்று பதில் வந்தது. "வெண்ணிலா ஐஸ்கிரீமே போதும்" என்று வாங்கி, பார்லரின் ஒரு மூலையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினான். "இருபது ரூபாய்தான் வைத்திருப்பான்" என்று நினைத்த பணிப்பெண், ஐஸ்கிரீம்க்கான பில்லை அவனிடத்தில் வந்து கொடுத்தார். பையன் போனபிறகு பில் பணத்தை எடுக்க வந்த அவர் அழத் தொடங்கினார்.

பையனிடம் இருப்பத்தைந்து ருபாய் இருந்தது. பணிப்பெண்ணுக்கு டிப்ஸ் வைக்க வேண்டும் என்பதற்காக கஸாட்டா ஐஸ்கிரீம் சாப்பிடும் ஆசையைத் தியாகம் செய்துவிட்டு, ஐந்து ரூபாய் டிப்ஸ் வைத்துவிட்டுச் சென்றிருந்தான் அந்த சிறுவன்.

பணிப்பெண்ணுக்காக தன்னுடைய ஆசையைத் துறந்த அந்த சிறுவன் டோனியின் தியாக உள்ளம் உண்மையிலே பாராட்டுக்குரியது. இத்தகைய தியாக உள்ளமும், மாசற்ற நெஞ்சமும் கொண்ட குழந்தைகளுக்குத்தான் இன்றைக்கு நாம் மாசற்ற குழந்தைகள் விழா என்ற பெயரில் விழா எடுத்துக் கொண்டாடுகின்றோம்.

வரலாற்றுப் பின்னணி

கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகள் மூவர், ஏரோது மன்னனிடம் சென்று, "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?, அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்" என்று சொன்னதைக் கேட்டதும், அவன் கலங்கினான். அவனோடு சேர்ந்து எருசலேம் நகர் முழுவதும் கலங்கியது. பின்னர் அவன் அவர்களைத் தனியாக அழைத்து, "நீங்கள் சென்று குழந்தையைக் குறித்து திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்" என்றான். ஆனால் ஞானிகள் மூவரும் ஏரோது மன்னனிடம் போகவேண்டாம் என்று கனவிலே எச்சரிக்கப்பட்டதால் அவர்கள் வேறு வழியாகப் போய்விடுகிறார்கள். இதனால் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை அறிந்த ஏரோது மன்னன், பெத்லகேமையும் அதைச் சுற்றிலும் உள்ள ஊர்களிலும் இருந்த இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுபோடுகிறான். அப்படி இயேசுவுக்காக, இயேசுவுக்குப் பதிலாகக் கொல்லப்பட்டவர்கள்தான் இந்த மாசில்லா குழந்தைகள் (மத் 2: 1-18).

யூத வரலாற்று ஆசிரியரான பிலாவியுஸ் ஜோசபுஸ் தன்னுடைய வரலாற்றுப் புத்தகத்தில் இந்த நிகழ்வைக் குறித்து எங்கும் குறிப்பிடாததால், ஒருவேளை இந்தக் கொடிய நிகழ்வில் நிறையக் குழந்தைகள் இறந்திருக்க மாட்டார்கள் என்று ஒருசிலர் சொல்வர். இன்னும் ஒருசிலர் பெத்லகேமையும் அதன் சுற்றுப்புறத்தையும், அங்கு வாழ்ந்த மக்கள்தொகையையும் வைத்துப் பார்க்கும்போது முப்பதிலிருந்து முப்பத்தைந்து குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சொல்வர். எப்படி இருந்தாலும் தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுவோ என்று பயந்து பச்சிளம் குழந்தைகளைக் கொன்றுபோட்ட ஏரோதின் ஈவு இரக்கமற்ற செயல் உண்மையிலே வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

இந்த ஏரோதைக் குறித்து முன்பு சொன்ன அதே வரலாற்று ஆசிரியர் பிலாவியுஸ் ஜோசபுஸ், "ஏரோதுக்கு பிள்ளையாகப் பிறப்பதை விட, அவனுடைய வீட்டில் பன்றியாகப் பிறப்பது நலம்" என்பார். அந்தளவுக்கு ஏரோது தன்னுடைய பதவிக்கு பங்கம் வந்துவிடுமோ எனப் பயந்து தன்னுடைய பிள்ளைகளைக்கூட கொன்றுபோட்ட அரசன். கிமு. 35 ஆம் ஆண்டு தன்னுடைய மருமகனையும், கிமு 34 ஆம் ஆண்டு தன்னுடைய சகோதரன் ஜோசப்பையும், கிமு 29 ஆம் ஆண்டு தன்னுடைய மனைவி மரியம்மையும், அதே ஆண்டில் தன்னுடைய மனைவியின் அன்னை அலெக்ஸாண்ட்ரா என்பவரையும், கிமு 25 ஆம் ஆண்டில் தன்னுடைய இன்னொரு மருமகன் செஸ்டோபர் என்பவரையும், கிமு 4 ஆம் ஆண்டில் மகன் அந்திபத்தார் என்பவரைக் கொன்றுபோட்டான். இப்படியாக ஏரோது மன்னன் தன்னுடைய பதவியைக் காத்துக்கொள்ள, அதற்குத் தடையாக இருக்கும் யாரை வேண்டுமானாலும் கொன்றுபோடும் அரக்கனாக இருந்தான். இப்படிப்பட்டவன் இயேசுவைக் கொல்வதற்காக இரண்டு வயதுக்கு உட்பட்ட ஆண்குழந்தைகளைக் கொன்றுபோட்டதில் வியப்பேதும் இல்லை.

ஏரோது நிகழ்த்திய இந்தக் கொடிய நிகழ்வு பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பாரவோன் மன்னன் மோசேயைக் கொல்வதற்காக ஏனைய யூதக் குழந்தைகளைக் கொன்றுபோட்டதை நியாபகப்படுத்துகின்றது (விப 1:22). ஆனால் மோசே எப்படி பாரவோனின் கையிலிருந்து தப்பித்தாரோ அதுபோன்று குழந்தை இயேசுவும் அவருடைய தாய் மரியாவும் ஏரோதின் கைகளில் சிக்கிக்கொள்ளாமல் யோசேப்பு வந்த கனவில் மூலம் எச்சரிக்கப்பட்டு எகிப்துக்கு தப்பி ஓடுகிறார்கள். அவன் இறந்தபிறகே தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிவருகின்றார்கள்.

இயேசுவுக்காக தங்களுடைய இன்னுயிரைத் துறந்த மாசற்ற குழந்தைகளுக்கு விழா எடுத்துக்கொண்டாடும் வழக்கம் எப்போது தொடங்கப்பட்டது என்று அறிய முற்படும்போதும் முதல் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது என்பதை அறிந்துகொள்ளலாம். பீட்டர் கிறிசோஸ்லோகுஸ் என்பவர் தான் இதனைத் தொடங்கினார். தூய அகுஸ்தினாரோ "மாசற்ற குழந்தைகளின் இறப்பை விண்ணில் மொட்டுகள் மலருகின்றன" என்பார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

மாசற்ற குழந்தைகளின் விழாவை கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. குழந்தைகளைப் பேணுவோம்

"உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவர்கள் உங்கள் மூலம் இந்த உலகிற்கு வந்துள்ளார்களே தவிர, உங்களில் இருந்து அல்ல. உங்களுடனேயே இருந்தாலும் அவர்கள் உங்களுடையவர்கள் அல்ல. அவர்களுக்கு உங்கள் அன்பை வழங்கலாமே தவிர, உங்கள் சிந்தனையை வழங்கவே முடியாது. ஏனெனில் அவர்கள் அவர்களுக்கான சிந்தனையை வழங்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் தேகங்களுக்கு ஒரு இல்லத்தை நீங்கள் வழங்கி இருக்கலாம்; ஆன்மாக்களுக்கு அல்ல" என்பான் லெபனான் நாட்டுக் கவிஞன் கலீல் கிப்ரான். குழந்தைகள் கடவுளால் அனுப்பட்டவர்கள்; அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். எனவே அவர்கள்மீது நம்முடைய சிந்தனையைத் திணிக்காமல் அவர்களை அவர்களாகவே வாழவிட வேண்டும் என்பதுதான் கவிஞர் கூறும் செய்தியாக இருக்கின்றது.

இன்றைக்கு குடும்பங்களில், சமூக வெளியில் குழந்தைகள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு உரிமை மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; அதைவிடவும் இந்த சமூகத்தில் நடைபெறும் பெரும்பாலான வன்முறைகள் குழந்தைகளுக்கு எதிராகக் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பாலியல் வன்கொடுமைகள், கடத்தல்கள், குழந்தைத் தொழிலாளர் முறை இவையும், இன்ன பிறவும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் ஆகும். இவற்றிற்கு எதிராக பெரியவர்களாகிய (?) நாம் அணிதிரல்வதோடு மட்டுமல்லாமல், நம்மோடு வாழக்கூடிய குழந்தைகளின் நலன்களைப் பேணுவதும் நம்முடைய கடமையாகும். ஏனென்றால் எழுத்தாளர் திரு. சி.எம்.செந்தில்குமார் சொல்வது போன்று, "ஒரு சமூகத்தின் வளர்ச்சி, அந்தச் சமூகம் குழந்தைகளைப் பராமரிக்கின்றது என்பதில் அடங்கியிருக்கின்றது".

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, தன்னிடம் ஆசிர்வாதம் வாங்க வந்த குழந்தைகளைத் தடுத்த சீடர்களைக் கடிந்துகொள்கிறார்; சிறு குழந்தைகளைகளுக்கு இடரலாக இருப்போரின் கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி கடலில் ஆழ்த்துவது நலம் என்று சொல்கிறார் (மத் 18: 6). இதைவிட மேலாக "சிறுபிள்ளையைப் போல தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப்பெரியவர் என்கிறார் (மத் 18:4). ஆகவே, நாம் ஒவ்வொருவரும் குழந்தைகளின் நலனைப் பேணுகின்றவர்களாகவும் அவர்களுக்கு தகுந்த மதிப்புத் தருகின்றவர்களாகவும் குழந்தை உள்ளம் கொண்டவர்களாகவும் வாழ முயற்சி எடுக்கவேண்டும்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஜெர்மனியில் உள்ள ஒரு மழலையர் பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்து வந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பறைக்குள் நுழைந்ததும் அங்கிருக்கும் மாணவர்களைத் தலைதாழ்த்தி வணங்குவார். இவ்வழக்கம் நீண்ட நாட்களாக தொடர்ந்துகொண்டிருந்தது. இதனைக் கூர்ந்து கவனித்து வந்த ஒரு பணியாளர் அந்த ஆசிரியரிடம், "ஐயா! வழக்கமாக மாணவர்கள் தானே ஆசிரியர்களைத் தலைதாழ்த்தி வணங்குவார், ஆனால் நீங்களோ மாணவர்களைத் தலைதாழ்த்தி வணங்குகிறீர்களே, அது ஏன்?" என்று கேட்டார். அதற்கு அந்த ஆசிரியர், "இந்த மாணவர்களிடமிருந்து பிற்காலத்தில் பெரிய பெரிய தலைவர்கள் தோன்றலாம். அப்போது அவர்களை வணங்குவதற்கு நான் உயிரோடு இருக்கிறேனா என்று தெரியவில்லை, அதனால்தான் நான் இப்போதே வணங்குகிறேன்" என்றார்.

அந்த ஆசிரியர் சொன்னதுபோன்று அந்த வகுப்பறையிலிருந்து ஒரு மிகப்பெரிய ஆளுமை தோன்றினார். அவர் வேறுயாருமல்ல திருச்சபையில் பெரும் மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்த மார்டின் லூதர்.

இன்றைய குழந்தைகள், நாளைய உலகின் தலைவர்கள் என்பது எவ்வளவு உண்மை. அதைத் தான் மேலே சொல்லப்பட்ட நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது.

ஆகவே, மாசில்லாக் குழந்தைகளின் விழாவை கொண்டாடும் நாம் நாம் வாழும் இந்த சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் வன்கொடுமைகளைத் தடுக்க அணியமாவோம்; நம்மோடு வாழும் குழந்தைகளின் நலன் பேணுவோம்; குழந்தை உள்ளம் கொண்டு வாழுவோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!