|
27
டிசெம்பர் 2018 |
|
புனித யோவான் - திருத்தூதர், நற்செய்தியாளர்
விழா |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை
உங்களுக்கு அறிவிக்கிறோம்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 1: 1-4
சகோதரர் சகோதரிகளே, தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும்
வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்;
கையால் தொட்டு உணர்ந்தோம். வெளிப்படுத்தப்பட்ட அந்த வாழ்வை
நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம். தந்தையோடு இருந்ததும்
எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த 'நிலைவாழ்வு' பற்றி
உங்களுக்கு அறிவிக்கிறோம்.
தந்தையுடனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள்
கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை,
நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம். எங்களது மகிழ்ச்சி
நிறைவடையுமாறு உங்களுக்கு இதை எழுதுகிறோம்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா: 97: 1-2. 5-6. 11-12 (பல்லவி:
12a)
=================================================================================
பல்லவி: நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.
1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான
தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2 மேகமும் காரிருளும் அவரைச்
சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம்.
பல்லவி
5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள்
மெழுகென உருகுகின்றன. 6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன;
அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி
11 நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும்
விதைக்கப்பட்டுள்ளன. 12 நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்;
அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர்
நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய்
உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மற்ற சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில்
கல்லறையை அடைந்தார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
20: 2-8
வாரத்தின் முதல் நாளன்று மகதலா மரியா சீமோன் பேதுருவிடமும் இயேசு
தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, "ஆண்டவரைக்
கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே
வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!" என்றார்.
இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.
இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக
ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது
துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப்
பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள்
நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த
துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில்
தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே
சென்றார், கண்டார், நம்பினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
நற்செய்தியாளரான தூய யோவான் விழா!
யோவானின் சீடர்களில் ஒருவரும் திருச்சபையின் வரலாற்று ஆசிரியருமான
யூசிபுஸ் யோவானைக் குறித்துச் சொல்கின்ற ஒரு செய்தி.
திருச்சபை வேகமாக வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் யோவான், ஒவ்வொரு
பகுதியாகச் சென்று, அங்கு ஆயர்களை நியமிப்பதும் அவர்களுக்கு உற்சாக
மூட்டுவதுமாக இருந்தார். ஓரிடத்திற்குச் சென்ற யோவான், அங்கே
ஏற்கனவே இருந்த ஆயரிடம் ஓர் இளைஞனை ஒப்படைத்து, அவனைப்
பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுவிட்டு, அவரிடமிருந்து
விடைபெற்றுச் சென்றார். அந்த ஆயரும் யோவான் தனக்குச் சொன்னதுபோன்று
தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த இளைஞனை நல்ல விதமாய் பராமரித்து
வந்தார்.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவன், தவறான நண்பர்களோடு
சேர்ந்து தன்னுடைய வாழ்வைச் சீரழிக்கத் தொடங்கினான். ஒரு கட்டத்தில்
வழிபறிக் கொள்ளையர்களுக்குத் தலைவனாகி, வழிப்பறி செய்வதில்
கைதேர்ந்தவனானான்.
சில ஆண்டுகள் கழித்து, யோவான் அந்த ஆயரிடம் திரும்பி வந்து,
அவரிடத்தில் தான் ஒப்படைத்த இளைஞன் எப்படி இருக்கிறான் என்று
கேட்டார். அதற்கு அந்த ஆயர், "அவனைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்?.
இப்போது அவன் கொள்ளைக் கூட்டத்திற்கே தலைவனாக இருந்துகொண்டு,
எல்லாரிடத்திலும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றான்" என்றார்.
இதைக் கேட்டு யோவான் மிகவும் கலக்கமுற்றார். அவர் அந்த ஆயரிடம்,
"இப்போது அவன் எங்கிருக்கிறான்?" என்று கேட்க, ஆயர், "அவன் ஊருக்கு
வெளியே இருக்கக்கூடிய மலையில் தங்கியிருக்கிறான்" என்று சொன்னதும்,
யோவான் அவனைத் தேடி மலைக்குச் சென்றார்.
மலையில் நீண்டநேரம் தேடியபின், ஓரிடத்தில் அவனைக் கண்டுகொண்டார்.
அவன் அவரைக் கண்டதும் ஓட்டம் பிடிக்கத் தொடங்கினான்.
யோவானுக்கு அப்போது வயது ஏறியிருந்தது. அவரால் ஓடமுடியாத சூழல்,
அப்படியிருந்தும் அவர், "என் மகனே! என்னைவிட்டு ஏன் ஓடுகிறாய்,
நீ எப்படியிருந்தாலும் பரவாயில்லை. உன்னை நான் மன்னித்து ஏற்றுக்கொள்கிறேன்"
என்று கத்திக்கொண்டே ஓடினார். இதனால் அவன் தன்னுடைய தவற்றை உணர்ந்து,
அவரிடத்தில் திரும்பி வந்து, யோவானைக் கட்டி அணைத்துக்கொண்டான்.
யோவானோ அவனை அதிகமான அன்போடு கட்டி அனைத்துக்கொண்டு, அவனைத் தன்
அன்பு மகனாய் ஏற்றுக்கொண்டார்.
ஆண்டவர் இயேசு எப்படி வழிதவறிப் போன ஆடுகளைத் தேடி அலைந்தாரோ,
அதுபோன்று அவரைக் கண்ணாரக் கண்டு, அவரைத் தொட்டு உணர்ந்த அவருடைய
அன்புச் சீடரான யோவானும் வழிதவறிப் போன ஆடுகளைத் தேடி அலைந்தார்
என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
இன்று நாம் நற்செய்தியாளரான தூய யோவானின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.
திருத்தூதர்கள் குழுவில் யோவானுக்கு என்று ஒரு தனியிடம் உண்டு.
மேலும் யோவான் பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரராக இருக்கின்றார்.
யோவான்தான் இயேசுவின் அன்புச் சீடராக விளங்கினார்.
யோவானுக்குத் தான் பல்வேறு மறை உண்மைகள் வெளிபடுத்தப்பட்டன.
குறிப்பாக வார்த்தையான இறைன் எப்படி மனுவுருவானார், இந்த உலகின்
முடிவு எப்போது? போன்றவை எல்லாம் அவருக்குத்தான் வெளிப்படுத்தப்பட்டது.
யோவானிடத்தில்தான் இயேசு தன்னுடைய அன்புத் தாயை ஒப்படைத்தார்.
யோவான்தான் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை முதன்முறையாக
நம்பினார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, திருதூதர்களிலே
யோவான்தான் அதிகமான ஆண்டுகள் வாழ்ந்து ஆண்டவர் இயேசுவுக்குச்
சான்று பகர்ந்து வந்தார்.
இப்படி பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரராக விளங்கிய
யோவான், தன்னுடைய வாழ்வின் கடைசிக் காலத்தை எபேசு நகரில் செலவழித்தார்.
அங்கு தன்னுடைய சீடர்களிடத்தில், ஒருவர் மற்றவரிடம் அன்பு
செலுத்தவேண்டும் என்று போதித்து வந்தார். இன்னும் சொல்லப்போனால்,
நற்செய்தியாளர்களில் யோவானைப் போன்று அன்பைக் குறித்து யாரும்
பேசியதில்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு அவர் அன்பைக்
குறித்து அதிகதிகமாகப் பேசினார். அதற்குச் சான்றாக இருப்பதுதான்
அவர் எழுதிய நற்செய்தி நூலும் திருமடல்களும்.
அன்பின் அப்போஸ்தலரான தூய யோவானின் விழாவைக் கொண்டாடும் இந்த
நாளில் அவர் நமக்குச் சொல்லக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான். அதுதான்.
ஒருவர் மற்றவரை அன்புசெய்து வாழவேண்டும் என்பதாகும். நாம் ஒருவர்
மற்றவரை அன்பு செய்து வாழ்கின்றபோது இந்த உலகத்தில் சண்டைச் சச்சரவுகளுக்கோ,
வன்முறைக்கோ வாய்ப்பே இல்லை.
ஆகவே, தூய யோவானின் விழாவைக் கொண்டாடும், அவர் நமக்குப்
போதிக்கின்ற போதனையின் படி ஒருவர் மற்றவரை நிறைகுறைகளோடு அன்புசெய்வோம்.
அதன்வழியாக இயேசுவின் அன்பிற்குச் சாட்சிகளாக விளங்குவோம். இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
நற்செய்தியாளரான தூய யோவான் விழா
யோவானைப் பற்றி சொல்லப்படுகின்ற ஒரு நிகழ்வு. யோவான் வயது
மிகுந்தவராகக் காணப்பட்டார். அவருடைய உடல் மெலிந்துகொண்டே போனது"
வார்த்தையும் குளறியது. இதனால் அவரால் தொலைதூரத்திற்குச்
சென்று நற்செய்தியைப் போதிக்கமுடியவில்லை. மக்கள்தான் அவரிடமிருந்து
ஆண்டவர் இயேசுவைப் பற்றி தெரிந்துகொள்ள அவரை நாடிவந்தார்.
அவர் தன்னை நாடிவந்த மக்களிடம் பெரிதாக எதையும் பேசிவிடவில்லை.
"குழந்தைகளே! நீங்கள் ஒருவர் மற்றவரை அன்புசெய்யுங்கள்" என்ற
ஓரிரு வார்த்தையைத்தான் பேசினார். இதைக் கேட்டுக் கேட்டு பழக்கப்பட்டுப்
போன மக்கள் ஒருநாள் அவரிடம், "நீங்கள் இதைத்தவிர வேறு எதையும்
எங்களுக்குப் போதிக்கமாட்டீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு
அவர் அவர்களிடம், "நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் இந்த ஒரு கட்டளையைக்
கடைப்பிடியுங்கள். அதுவே போதுமானது" என்றார்.
ஆம், இன்று நாம் அனைவரும் "அன்பின் அப்போஸ்தலர்" என்று அழைக்கப்படும்
தூய யோவானின் விழாவைக் கொண்டாடுகின்றோம். இவருடைய விழாவைக்
கொண்டாடும் இந்த நல்லநாளில் இவருடைய வாழ்வும் பணியும் நமக்கு
என்ன செய்தியைத் தருகின்றன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு
செய்வோம்.
தூய யோவான் கலிலேயாவைவைச் சார்ந்த செபதேயு மற்றும் சலோமி என்ற
தம்பதியினரின் மகன். இவருடைய சகோதர்தான் யாக்கோபு. மீன்பிடித்
தொழிலைத் செய்தவர். ஒருமுறை இவரும், இவருடைய சகோதரும், தந்தையும்
கலிலேயாக் கடலில் வலைகளைப் பழுதுபார்த்துக்
கொண்டிருக்கும்போது, அப்பக்கமாக வரும் இயேசு இவர்களிடம், "என்
பின்னே வாருங்கள், நான் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆக்குவேன்"
என்று சொல்கிறார். உடனே இவரும், இவருடைய சகோதரரும் எல்லாவற்றையும்
விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள். இந்த உலக
செல்வம் தேவையில்லை, ஒப்பற்ற செல்வமாகிய இயேசு மட்டும் போதும்
என்று அவர்கள் இயேசுவின் பின் செல்கிறார்கள்.
யோவானைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது இவர் இயேசுவால்
"இடியின் மகன் அதிகமாக சினம்கொள்பவர்" என்று அழைக்கப்படுகின்றார்.
ஒருமுறை இயேசு எருசலேமிற்கு சமாரியர்கள் வாழும் பகுதியாகச்
செல்ல முயன்றபோது அவர்கள் இயேசுவையும், அவருடைய சீடர்களையும்
போகவிடாது தடுக்கிறார்கள். இதைக் கண்ட யோவானும், அவருடைய
சகோதரரான யாக்கோபும், "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து
இவர்களை அழிக்குமாறு செய்யவா? என்று கேட்கிறார்கள். அந்தளவு
யோவானும், யாக்கோபும் அதிகமாக சினம்கொள்ளக்கூடியவர்களாக
இருக்கிறார்கள். ஆனால் இயேசுவோ அவர்கள் பக்கம் திரும்பி,
அவர்களைக் கடிந்துகொள்கிறார் (லூக் 9: 51-56).
அதேபோல யோவான் பதவிமோகம் கொள்ளக்கூடியவராகவும் இருக்கின்றார்.
யோவானின் தாயாகிய சலோமி இயேசுவிடம் வந்து, "நீர் ஆட்சி
புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது
அரியணையின் வலப்புறமும் இன்னொருவான் இடப்புறமும் செய்யும்"
என்று கேட்பதிலிருந்து இது தெளிவாகின்றது. ஆனால் இயேசுவோ,
"தலைவராக இருக்க விரும்புகிறவர் தொண்டராகவும், முதன்மையானவராக
இருக்க விரும்புகிறவர் பணியாளராக இருக்கட்டும்" என்று
சொல்கிறார் மத் (20: 20-28).
இப்படி அதிகமாக சினம்கொள்பவராகவும் பதவிமோகம் கொண்டவராகவும்
இருந்த யோவான் இயேசுவின் அன்பிற்குரிய சீடராகவும், முதன்மைச்
சீடராகவும் மாறுகின்றார்; இயேசுவின் வாழ்வில் நடைபெற்ற மூன்று
முக்கிய நிகழ்வுகளான யாயிரின் மகளைக் குணப்படுத்துதல்,
உருமாற்றம் அடைதல், கெத்சமணித் தோட்டத்தில் இரத்த வியர்வை
வியர்த்தல் போன்று நிகழ்வுகளில் யோவான் இடம் பெறுகிறார்.
யோவானைக் குறித்து தொடர்ந்து சிந்தித்துப் பார்க்கும்போது
இவர்தான் இயேசுவின் உண்மையான, பிரமாணிக்கமுள்ள சீடராக
இருந்தார் என்று சொன்னால் அது மிகையாகது. ஏனென்றால் மற்ற
எல்லாச் சீடர்களும் இயேசுவைக் கைதுசெய்த உடன் ஓடிப்போக இவர்
மட்டும்தான் இயேசுவோடு இறுதி வரைக்கும் இருந்தார். அவருடைய
தாயினை தன்னுடைய தாயைப் போன்று ஏற்றுக்கொண்டார்.
மேலும் ஆண்டவர் இயேசு உண்மையிலே உதிர்த்துவிட்டார் என்பதை
முதன்முதலாக நம்பியவர் இவர்தான். இன்றைக்குப் படிக்கக்கேட்ட
நற்செய்தியில் மகதலா மரியா ஆண்டவர் இயேசு உயிர்த்துவிட்டார்
என்று சொன்னதும் பேதுருவும், யோவானும் வேகமாக கல்லறைக்கு
ஓடுகிறார்கள். அங்கே பேதுரு முதலில் கல்லறைக்குள் சென்று
பார்கின்றார். ஆனால் யோவான்தான் எல்லாவற்றையும் கண்டார்,
நம்பினார் என்று வாசிக்கின்றோம். ஆகவே ஆண்டவர் இயேசு
உயிர்த்துவிட்டார் என்று முதன்முதலாக நம்பிய பெருமை யோவானையே
சாரும்.
ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பிறகு யோவான் தொடக்கத்தில்
எருசலேமிலும், அதன்பிறகு ஆசியா மைனர் பகுதிகளுக்கும் சென்று
திருச்சபையை நிறுவியதாகச் சொல்லப்படுகின்றது. கி.பி.49ஆம்
ஆண்டு எருசலேமில் நடைபெற்ற எருசலேம் திருச்சங்கத்தில் யோவான்
முக்கியப் பங்காற்றினார்.
அதன்பிறகு யோவான் உரோமையை தொமிசியன் என்ற மன்னன் ஆண்டபோது
அங்கே நற்செய்தியை அறிவித்தார். அவன் யோவானை எரிகின்ற எண்ணெய்
கொப்பரைக்குள் போட்டான். ஆனால் யோவானோ இயேசுவால் அதிகமாக
அன்புசெய்யப்ட்ட சீடனாதலால் அதிலிருந்து காப்பற்றப்பட்டார்.
பின்னர் அவன் யோவானை பத்மோஸ் என்ற தீவிற்கு அனுப்பிவைத்தான்.
அங்கே சில காலம் யோவான் இருந்தார். பின்னர் எபேசு நகருக்குச்
சென்று நற்செய்தியை அறிவித்தார். நூறு ஆண்டுகளுக்கும் மேல்
வாழ்ந்து அங்கேயே தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.
யோவானின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் நாம் நினைவில்
வைத்துக்கொள்ளக்கூடியது ஒன்றே ஒன்றுதான். அதுதான் யோவான்
வழியாக இயேசு தந்த அன்புக்கட்டளை அதாவது ஒருவர் மற்றவரை
அன்புசெய்யவேண்டும் என்னும் கட்டளை.
நாம் நம்மோடு வாழக்கூடியாய சகமனிதர்களை முழுமையாய்
அன்புசெய்வோம். அதன்வழியாக இயேசுவுக்கு சான்று பகர்வோம்;
இறையருள் பெறுவோம்.
"அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை, ஏனெனில் கடவுள்
அன்பாய் இருக்கிறார்" (1 யோவான் 4:8).
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
மற்றச் சீடர்
திருத்தூதரும், நற்செய்தியாளருமான தூய யோவானின்
திருநாளைக் கொண்டாடுகிறோம்.
இவர் தனது நற்செய்தி நூல்களில் தன்னை 'மற்றச் சீடர்' என்று அழைக்கின்றார்.
இது ஒரு வகையில் தன்னடக்கம் என்று சொல்லப்பட்டாலும், இவர் 'மற்ற
சீடர்' என்று சொல்வதன் வழியாக இயேசுவின் அருகில் அனைவரும் செல்வதற்கு
கதவுகளைத் திறந்துவிடுகிறார். அதாவது, நீங்கள், நான், அவர்,
இவர் என எல்லாரும் இயேசுவின் 'மற்றச் சீடராய்' இருக்க
முடியும்.
மற்றச் சீடராய் இருப்பதற்கான தகுதிகள் என்ன என்பதை நாளைய நற்செய்தி
வாசகத்தின் இறுதி வசனம் நமக்குச் சொல்கிறது: 'பின்னர் ... மற்றச்
சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்.'
செல்லுதல், காணுதல், நம்புதல் - இந்த மூன்று செயல்களின் வழியாக
எவரும் மற்றச் சீடராய் ஆக முடியும்.
அ. செல்லுதல்
இருத்தல் என்பது வேர் என்றால், செல்லுதல் அல்லது பயணித்தல் என்பது
விழுது. 'இருத்தலும்,' 'செல்லுதலும்' இருந்தால்தான் வாழ்க்கை.
வெறும் இருத்தல் மட்டும் இருந்தால் அதை நாம் இறப்பு அல்லது
தேக்கம் என்று சொல்லிவிடுகின்றோம். யோவான் தன் வாழ்வில் இயேசுவைக்
கண்ட நாள் முதல் 'சென்றுகொண்டே' இருக்கின்றார். முதல் சீடர்களை
அறிமுகம் செய்கின்றார். இயேசுவின் நெருங்கிய வட்டத்திற்குள் இருக்கின்றார்.
கானாவூர் செல்கின்றார். கல்வாரி செல்கின்றார். கல்லறைக்கு ஓடுகின்றார்.
ஆக, ஓட்டமும், நடையுமாகக் கடக்கிறது இவரது வாழ்க்கை.
ஆ. காணுதல்
காணுதல் என்பது இங்கே வெறும் கண்களைக் கொண்டு பார்த்தல் அல்ல.
மாறாக, உள்ளத்தால் பார்த்தல். வெற்றுக்கல்லறைக்குள் காண்பதற்கு
ஒன்றுமில்லை. பின் அவர் எதைக் கண்டார்? இல்லாமையில் இறைவனின்
இருப்பைக் கண்டார். அதுதான் காணுதல். இதையே தூய பவுலும், 'நாம்
இங்கே அரைகுறையாய்க் காண்கிறோம். அங்கே நிறைவாக, அவர் இருப்பதுபோல
காண்போம் என்கிறார்.' அந்தக் காணுதலை நாம் இங்கே காணுதலுக்குக்
கண்களை மூடுதல் அவசியம்.
இ. நம்புதல்
அதாவது, இயேசுவே மெசியா அல்லது இறைமகன் என்ற நம்பிக்கை அவரின்
செல்லுதல் மற்றும் காணுதலின் கனியாக இருக்கிறது. இன்று சில நேரங்களில்
நம் பயணம் முதல் இரண்டு நிலைகளில் நின்றுவிட வாய்ப்பும் இருக்கிறது.
இந்த மூன்று வினைச்சொற்களும் நம் பெயர்ச்சொற்கள் ஆனால் நாமும்
மற்றச் சீடர்களே!
- Fr. Yesu Karunanidhi, Madurai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
நிகழ்வு
யோவான் எபேசு நகரில் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப்
போதித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் அடைந்த பேரையும் புகழையும்
கண்டு பிற தெய்வங்களை வழிபடுகின்ற குரு ஒருவர் அவர்மீது
பொறாமைப்பட்டு அவரை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்று
நினைத்தார். எனவே அவர், யோவானிடத்தில் நல்லவர் போன்று பேசி,
அவர் சாப்பிடும் உணவில் விஷம் கலந்துகொடுத்தார். ஆனால், யோவானோ
அதனைத் தூய ஆவியின் வல்லமையால் உணர்ந்து, அந்த உணவின் மேல்
சிலுவை அடையாளம் வரைந்து உண்ண, அது அவரை ஒன்றுமே செய்யவில்லை.
இறுதியில் அந்த குருவின் தீச்செயல் கண்டுபிடிக்கப்பட அவர்
யோவானின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். யோவானும் அவரைப்
பெருந்தன்மையோடு மன்னித்தார்.
அன்பின் அப்போஸ்தலராக வலம்வந்த யோவான் தனக்குத் தீமை செய்தவருக்கும்
மன்னிப்பை வழங்கி அன்பைப் பொழிந்தார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு
எடுத்துக்கூறுகின்றது.
வாழ்க்கை வரலாறு
யோவான் கலிலேயாவில் உள்ள பெத்சாய்தாவில் செபதேயு, சலேமி ஆகியோரின்
மகனாகப் பிறந்தவர். இவருடைய சகோதரர்தான் யாக்கோபு. யோவானின்
தாய் சலோமி, இயேசுவின் அன்னை மரியாவின் சகோதரி என்கிறது மரபு.
தொடக்கத்தில் யோவான் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரனோடு
மீன்பிடி தொழிலைச் செய்துவந்தார். திருமுழுக்கு யோவான், "மனம்
திரும்புங்கள்" என அறைகூவல் விடுத்தபோது, யோவான் அவர் போதனைகளால்
கவரப்பட்டார். பின்னர் திருமுழுக்கு யோவான் இயேசுவை மீட்பராக
அடையாளம் காட்டியபோது இவரும் இயேசுவின்மீது மிகுந்த ஈடுபாடு
கொண்டார். இயேசு அழைத்தபோது தனது மீன்பிடித் தொழிலை அப்படியே
விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார். அதன்பின் இயேசுவின்
அன்புக்குரிய சீடர் எனும் பெயரைப் பெற்றார்.
சீமோன் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் என்னும் இம்மூன்று
பேர்தான் இயேசுவின் மிகநெருக்கமான சீடர்களாக இருந்தனர். ஒரு
முறை தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் மகள் இறந்துபோக இயேசு,
பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் மூவரை மட்டும் தன்னோடு அழைத்துக்கொண்டு
சென்று இறந்த சிறுமியை உயிரோடு எழுப்பினார். இன்னொரு முறை இவர்கள்
மூவருடனும் ஒரு உயர்ந்த மலைக்குச் சென்று இயேசு உருமாறினார்.
அவரது முகம் கதிரவனின் முகம் போல ஒளிவீசியது. மோசேயும், எலியாவும்
அங்கே தோன்றி அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள். இயேசுவின் இறப்புக்கு
முந்தையநாள் இரவில் அவர் விண்ணகத் தந்தையிடம் இறைவேண்டலில் ஈடுபட்டபோதும்
இதே மூவர் கூட்டணியைத் தான் அவர் தன்னுடன் வைத்திருந்தார். இப்படி
இயேசுவின் பயணத்தின் முக்கியமான இடங்களிலெல்லாம் கூடவே இருந்தவர்
எனும் பெயர் யோவானுக்கு உண்டு.
இன்னொரு சமயம் யோவானும், யாக்கோபும் "நீர் அரியணையில் இருக்கும்
போது எங்களை உமது இரு பக்கமும் அமர வையுங்கள்" என்று கேட்டார்கள்.
இயேசுவோ "அது தனது தந்தையின் விருப்பப்படி நடக்கும்" என்றார்.
இயேசுவின் பணி வாழ்வில் கூடவே நடந்த யோவான், இயேசு சிலுவையில்
தொங்கிக் கொண்டிருக்கையிலும் அருகே நின்றிருந்தார். இயேசுவின்
சீடர் என அடையாளப்படுத்திக் கொண்டால் படுகொலை செய்யப்படவும்
வாய்ப்பு உண்டு. ஆனாலும் யோவான் பயப்படாமல் சிலுவை அருகே
நின்றார். இயேசுவின் மீது தனக்கு இருந்த அன்பை வெளிப்படுத்தினார்.
எனவே தான் பின்னர் "அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை
அன்பு அச்சத்தை அகற்றிவிடும்" என தனது நூலில் எழுதினார். இயேசு
தனது அன்னையை இவருடைய பொறுப்பில் தான் விட்டுச் சென்றார்.
இயேசு இறந்தபின் யோவானும், பேதுருவும் மீண்டும் மீன்பிடிக்கும்
தொழிலுக்குத் திரும்பினர். ஒரு நாள் இரவு முழுவதும் வலை
வீசியும் எந்த மீனும் கிடைக்கவில்லை. காலையில் இயேசு கரையில்
தோன்றி நின்று, "வலப்புறமாய் வலையை வீசுங்கள்" என்றார். மீன்கள்
ஏராளமாய்ச் சிக்கின. இயேசுவை அடையாளம் கண்டு கொண்ட யோவான்,
பரவசத்துடன் படகிலிருந்து குதித்து ஓடி வந்தார். பெந்தேகோஸ்தே
நாளில் தூய ஆவியானவரின் வருகைக்குப் பின் "இடி முழக்கமாய்" இருந்த
யோவான், மென்மையாகவும், தெளிவாகவும் பணியாற்றும் திருத்தூதராக
உருமாறினார். கிறிஸ்தவம் வளர முக்கியப் பங்காற்றினார்; எபேசு
நகரில் பணியாற்றினார். சின்ன ஆசியாவில் இருந்த ஏழு திருச்சபைகளும்
இவரது கண்காணிப்பின் கீழ் இருந்தது. இவர் "திருச்சபையின் தூண்களில்
ஒருவர்" என இவரைப்பற்றி பவுல் குறிப்பிடுகிறார்.
விவிலியத்தில் உள்ள யோவான் நற்செய்தி, யோவான் 1, 2, 3 நூல்கள்
மற்றும் திருவெளிப்பாடு போன்றவை இவர் எழுதிய நூல்கள்தான்.
விவிலியத்தில் இடம்பெறாத பாரம்பரியத் தகவல்களின் அடிப்படையில்
இவர் ரோம பேரரசர் தொமிசியன் காலத்தில் பெரும் துன்புறுத்தலுக்கு
ஆளானார்; கொதிக்கும் எண்ணெய்த் தொட்டியில் வீசப்பட்டார். ஆனாலும்
இறைவன் அவரைக் காப்பாற்றினார். பத்மூ தீவில் சிறைவாசம்
பெற்றார். அங்கிருக்கும் போதுதான் விவிலியத்தின் மிக முக்கியமான
நூல்களின் ஒன்றான "திருவெளிப்பாடு" நூலை எழுதினார். பின்பு பேரரசர்
நெர்வா காலத்தில் விடுதலையானார். தொடர்ந்து இறைபணி செய்தார்.
வயது மூத்தவராக, எழுந்து நடக்க வலுவில்லாமல் இருந்த போதும் தன்னைச்
சந்திக்கும் அனைவரிடமும், "குழந்தைகளே ஒருவரில் ஒருவர் அன்பாய்
இருங்கள்" என்பார். கடைசியில் பேரரசர் டிரோஜன் காலத்தில் இயற்கை
மரணம் எய்தினார். இயேசுவின் சீடர்களில் படுகொலை செய்யப்படாமல்
நீண்டநாட்கள் வாழ்ந்த ஒரே சீடர் இவர்தான்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
அன்பின் திருத்தூதர் என அழைக்கப்படும் தூய யோவானின் விழாவைக்
கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்
என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. ஒருவர் மற்றவரிடம் அன்பு
யோவான் நமக்கு விட்டுச் சென்ற மிக முக்கியமான செய்தி ஒருவர் மற்றவரிடம்
அன்பு செலுத்தவேண்டும் என்பதுதான். "ஒருவர் மற்றவரிடம் அன்பு
செலுத்துவோமாக! ஏனெனில், அன்பு கடவுளிடமிருந்து வருகின்றது. அன்பு
செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள்
கடவுளை அறிந்துள்ளனர். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை;
ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கின்றார்" (1 4:7-8) என்று
சொல்லி கடவுளும் அன்பும் வேறு வேறு அல்ல
சுட்டிக்காட்டுகின்றார் யோவான். ஆகவே, தூய யோவானின் விழாவை
கொண்டாடும் இந்த நாளில் அவர் போதித்த அன்பை நம்முடைய வாழ்வில்
கடைப்பிடித்து வாழ்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பலநேரங்களில் நம்மோடு வாழக்கூடிய சக மனிதர்களிடத்தில், ஏன் உயிர்களிடத்தில்கூட
அன்பில்லாமல் இருக்கின்றோம். விவேகானந்தர் ஒருமுறை
குறிப்பிட்டார், "கடவுளை அடைய எளிய வழி, சக மனிதர்களை அன்பு
செய்வது" என்று. இது முற்றிலும் உண்மை. நாம் நம்மோடு வாழக்கூடிய
சக மனிதர்கள், உயிர்களை அன்பு செய்யும்போது இறைவன் அருளும்
விண்ணக மகிமையைப் பெறுவது உறுதி.
ஒரு மனிதன் தன் நாயுடன் ஒரு நீண்ட சாலையில் நடந்துகொண்டிருந்தான்.
அழகிய இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே சென்றுகொண்டிருந்தான்.
அப்போது திடீரென அவன் உணர்ந்தான், தான் இறந்துவிட்டோம் என்பதை!.
தன் இறப்பும், அதற்கு முன்பே நிகழ்ந்த அவன் நாயின் இறப்பும்
அவனுக்கு நினைவு வந்தது. அந்தச் சாலை எங்கு போகிறதோ எனச்
சிந்தித்தான். கொஞ்ச தூரம் சென்றதும் சாலையின் ஒரு பக்கத்தில்
உயரமான சலவை கல்லாலான மதிற்சுவரைக் கண்டான். சிறிது தூரத்தில்
மலைமேல் அந்த மதிற்சுவரில் அழகிய நுழைவாயில் ஒன்றைக் கண்டான்.
அருகில் சென்று பார்த்தபோது, அந்த வாயிலின் கதவில் ரத்தினக் கற்கள்
பதிக்கப்பட்டிருப்பதையும், அந்த வாயிலை நோக்கிச் செல்லும் பாதை
தங்கத்தால் போடப்பட்டிருப்பதையும் கண்டான். அந்த வாயிலை
நோக்கித் தன் நாயுடன் நடக்க ஆரம்பித்தான். அருகில்
செல்லும்போது அந்த வாயிலின் உள்ளே ஒரு மனிதன் தங்க மேசையின்
முன் அமர்ந்திருப்பதைக் கண்டான். அருகில் சென்ற அவன் அந்த மனிதனிடம்
கேட்டான், "இந்த இடத்தின் பெயர் என்ன?" அந்த மனிதன் சொன்னான்
"சொர்க்கம்". அவன் கேட்டான் "குடிக்கக் கொஞ்சம் தண்ணீர்
கிடைக்குமா?" "நிச்சயமாக! உள்ளே வாருங்கள் குளிர்ந்த நீர் வரவழைக்கிறேன்"
சொல்லியவாறே அவன் கதவைத் திறக்கலானான்!
வழிப்போக்கன் தன் நாயைக் காட்டிக் கேட்டான் "என் நண்பனும் என்னோடு
வரலாம் அல்லவா?", "மன்னிக்கவும்! நாய்களுக்கு இங்கு அனுமதி இல்லை"
வழிப் போக்கன் யோசித்தான். பின் தன் வந்த பாதையில் சாலையை
நோக்கி நாயுடன் நடக்க ஆரம்பித்தான். நீண்ட தூரம் நடந்தபின் மற்றொரு
வாயிலைக் கண்டான். துருப்பிடித்த கதவு. அதை நோக்கி ஒரு மண்பாதை
சென்று கொண்டிருந்தது. அந்த வாயிலை அவன் நெருங்கியதும் ஒரு மனிதன்
ஒரு மரத்தடியில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
அவனிடம் கேட்டான் "குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?" "உள்ளே ஒரு
குழாய் இருக்கிறது, வாருங்கள்" "நாயைக் காட்டிக் கேட்டான் "என்
தோழனுக்கும் நீர் வேண்டும்". அந்த மனிதன் சொன்னான்
"குழாயடியில் ஒரு குவளை இருக்கிறது .எடுத்துக் கொள்ளலாம்".
அவன் உள்ளே சென்றான். குழாயையும் குவளையையும் கண்டான். தண்ணீர்
எடுத்து நாய்க்கும் கொடுத்துத் தானும் அருந்தினான். தாகம்
தீர்ந்தது. மரத்தடி மனிதனை அணுகிக் கேட்டான் "இந்த இடத்தின் பெயர்
என்ன?" அவன் சொன்னான் "சொர்க்கம் என்றழைக்கப்படுகிறது" . வழிப்
போக்கன் திகைத்தான், "குழப்பமாயிருக்கிறதே! நான் வரும் வழியில்
ஒருவர் வேறு இடத்தையும் சொர்க்கம் என்று சொன்னாரே!" " ஓ! இந்த
ரத்தினக்கல் பதித்த கதவுள்ள இடத்தைச் சொல்கிறீர்களா? அது நரகம்!".
"அப்படியென்றால் சுவர்க்கம் என்று அவர்கள் சொல்லிக்கொள்வது உங்களுக்கு
எரிச்சலாக இல்லையா?" "இல்லை .மாறாக மகிழ்ச்சியடைகிறோம் -தங்கள்
தாகம் தீர்க்கத் தங்கள் உயிர் நண்பர்களைத் தியாகம் செய்யும் மனிதர்களை
இனம் கண்டு நிறுத்துவதற்காக!". எல்லவாற்றையும் கேட்ட அந்த வழிப்போக்கன்
மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
நம்மோடு இருப்பவர்களை, உயிர்களை அன்பு செய்யும்போது விண்ணகத்தில்
சொர்க்கத்தில் இடமுண்டு என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
ஆகவே, தூய யோவானின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் ஒருவர் மற்றவரை
அன்புசெய்ய கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் விண்ணக
மகிமையைக் கொடையாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|