|
21
டிசெம்பர் 2018 |
|
திருவருகைக்காலம்
3ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இதோ, மலைகள்மேல் தாவி என் அன்பர்
வருகின்றார்.
இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 2: 8-14
தலைவி கூறியது: என் காதலர் குரல் கேட்கின்றது; இதோ, அவர் வந்துவிட்டார்;
மலைகள்மேல் தாவி வருகின்றார்; குன்றுகளைத் தாண்டி வருகின்றார்.
என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர்.
இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்; பலகணி வழியாய்ப்
பார்க்கின்றார்; பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார். என் காதலர்
என்னிடம் கூறுகின்றார்: "விரைந்தெழு, என் அன்பே! என் அழகே!
விரைந்து வா.
இதோ, கார்காலம் கடந்துவிட்டது. மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.
நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன; பாடிமகிழும் பருவம் வந்துற்றது;
காட்டுப்புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது.
அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன; திராட்சை மலர்கள் மணம் தருகின்றன;
விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.'' பாறைப் பிளவுகளில்
இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே!
காட்டிடு எனக்கு உன் முகத்தை; எழுப்பிடு நான் கேட்க உன் குரலை.
உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
அல்லது
இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்.
இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-17
மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்;
மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர்
உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்;
இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி
எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.
அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: "சீயோனே, அஞ்சவேண்டாம்;
உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில்
இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு
அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப்
புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்."
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா: 33: 2-3. 11-12. 20-21 (பல்லவி: 1a, 3a காண்க)
=================================================================================
பல்லவி: நீதிமான்களே, புதியதொரு பாடல் ஆண்டவர்க்குப் பாடுங்கள்.
2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு
யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். 3 புத்தம்புது பாடல் ஒன்றை
அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள்.
பல்லவி
11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது
உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.
12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது
உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். பல்லவி
20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும்
கேடயமும் ஆவார். 21 நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில்,
அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இம்மானுவேலே, சட்டம் இயற்றும் எம் அரசே,
இறைவனாம் எம் ஆண்டவரே, எம்மை மீட்க எழுந்தருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45
அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டில் உள்ள ஓர் ஊருக்கு
விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை
வாழ்த்தினார்.
மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த
குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று.
எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது
எலிசபெத்து உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்;
உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின்
தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும்
என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.
ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர்
பேறுபெற்றவர்'' என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
சிந்தனை
அன்பின் வெளிப்பாடு - ஆதரவும், உடன் இருப்பதுவும், உதவுவதும்.
இதனை அன்னை நல்மாதிரிகையாய் நமக்கும் முன் உணர்த்துகின்றனர்.
தாயின் வழி பிள்ளையும் இயேசுவும் மண்ணுலகில் மனிதனாக
அவதரித்தவர் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக உதவினார்,
உடன் இருக்கும் மனிதனானார், ஆதரவற்ற எத்தனையோ பேருக்கு
ஆதரவானார்.
இதனை நம்பும் நம்முடைய அன்பின் வெளிப்பாடு எப்படியுள்ளது?
சொல்லிலும், பேச்சிலும் அல்ல மாறாக செயலிலே விளங்குகின்ற
உண்மையான அன்பாக இருக்கும் போதே வாழ்வின் அர்த்தம் பெற
முடியும். வாழும் காலத்தை இறையரசின் காலமாக்கிட முடியும்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
விரைந்து சென்று உதவுவோம்
(2014) ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், மௌலிவாக்கத்தில்
ஆதாரமில்லாமல் கட்டப்பட்ட கட்டிடம் சரிந்து விழுந்து, ஏராளமான
மக்கள் உயிரிழந்ததை செய்தித்தாளில் வாசித்திருப்போம்.
அம்மக்களுக்கு உதவுவதற்காக ஏராளமான மக்கள் வந்தார்கள். அதிலே
ஒரு இளைஞனும் அடங்கும். அந்த இளைஞன் இடிபாடுகளில்
சிக்கிக்கிடந்த மக்களை அப்புறப்படுத்துவதுமாக, அவர்களுக்கு
தேவையான மருத்துவ சேவைகள் செய்வதுமாக எந்த ஒரு
எதிர்பார்ப்புமின்றி உதவி செய்துகொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்த ஒரு டீக்கடைக்காரார் நிவாரணப் பணிகளை
மேற்கொண்டிருந்த மக்களுக்கு எல்லாம் டீ வழங்கினார். இதைப்
பார்த்த அந்த இளைஞன் தன்னுடைய பையிலிருந்து ஐநூறு ரூபாயை
எடுத்து அவருக்குக் கொடுத்து வைத்துக்கொள்ளுமாறு சொன்னான்.
ஆனால் அவரோ அவனிடம், "தம்பி நீயே எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி
மக்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறாய், அப்படி
இருக்கும்போது, ஏன் நான் மட்டும் அப்படி உதவி செய்யக்கூடாது.
இரு இங்கு நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருக்கும் எல்லா
மக்களுக்கும் டீ கொண்டுவருகிறேன்" என்று சொல்லி விரைந்தார்.
தேவையில் இருக்கின்ற மக்களுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி
உதவி செய்யும் நல்ல உள்ளங்கள இன்றைக்கும் இருக்கத்தான்
செய்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு
எடுத்துரைக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் மரியாள் பேறுகால வேளையில்
இருக்கக்கூடிய தன்னுடைய உறவுக்காரப் பெண்மணியாகிய
எலிசபெத்துக்கு உதவச் செல்வதை படிக்கக் கேட்கின்றோம். மரியாள்
எலிசபெத்துக்கு உதவி செய்யச் செல்லவேண்டும் என்று யாரும்
கட்டாயப்படுத்தவில்லை. இருந்தாலும் எலிசபெத்துக்கு உதவி
செய்வதற்காக காடு, மலை என்று எல்லாம் பாராமல், ஏறக்குறைய
எழுபது மைல்களுக்கு மேல் பயணம் செய்து உதவி செய்கிறாள்.
இதுதான் மரியாளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாக
இருக்கிறது.
இன்றைக்கு நாம் நம்மோடு வாழும், குறிப்பாக தேவையில் இருக்கும்
மக்களுக்கு ஓடோடிச் சென்று உதவுகிறோமா? என்று சிந்தித்துப்
பார்க்கவேண்டும். அன்னைத் தெரசா ஒருமுறை இவ்வாறு
குறிப்பிட்டார் "உன்னால் நூறு பேருக்கு உணவளிக்க
முடியாவிட்டாலும், நால்வரின் பசியையாவது தீர்த்துவை". நாம்
மக்களுக்கு பெரிய பெரிய உதவிகளைச் செய்யும் வேண்டும்
என்றில்லை. சிறு சிறு உதவைகளைச் செய்தாலே போதும். அதுவே
அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும்.
இன்றைக்கு ஆங்காங்க பிறருக்கு உதவி செய்யும் நல்ல உள்ளங்களைப்
நாம் பார்க்க நேர்ந்தாலும், பெரும்பாலான மக்கள் சுயநலவாதிகளாக
இருப்பதுதான் வேதனை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. அன்னை
மரியாள், பிறர் கேட்டுத்தான் உதவி செய்யவேண்டும் என்றில்லாமல்,
தாமாகவே முன்வந்து உதவுவதை இன்றைய நற்செய்தியில் மட்டுமல்லாது,
கானாவூர் திருமணத்திலும் பார்க்கிறோம். கானாவூர் திருமணத்தில்
மணவீட்டார் உதவி வேண்டும் என்று கேட்காமலே, அவர்களின் நிலையைக்
குறிப்பால் அறிந்து, அவர்களுக்கு உதவி செய்கிறார்.
ஆக, நாம் மரியாவை போன்று பிறரின் தேவைகளைக் குறிப்பால்
அறிந்து, அவர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்.
"நாம் அன்பு மயமாக மாறுகிறபோது, நம் எதிரே இருப்பவர்களும்
அன்பு மயமாக மாறுவார்கள். நாம் புன்னகைக்கிறபோது, எதிரே
வருபவரும் புன்னகைத்தே தீருவார். அப்போதுதான், உலகம்
முழுவதிலும் இருக்கின்ற வன்முறைகள், வன்மங்கள் குறையும்"
என்பார் எழுத்தாளர் வெ. இறையன்பு. எனவே பிறருக்கு உதவி
செய்யும் மக்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம் அன்பு
மயமானவர்களாக மாறுவோம். அந்த அன்பை எல்லா மக்களுக்கும்
மரியாவைப் போன்று நமது வாழ்வாலும், வார்த்தையாலும்
எடுத்துரைப்போம். அதன் வழியாக இறையருள் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
ஒருவர் மற்றவருக்கு ஒத்தாசையாய்
இருப்போம்!
அடர்ந்த காட்டிற்குள் வாழ்ந்து வந்த ஒரு கண்பார்வையற்ற
மனிதனும், கால் நடக்க இயலாத மனிதனும் அக்காட்டில் ஏற்பட்ட
திடீர் தீ விபத்தில் சிக்கிக் கொண்டார்கள். இருவரும் அந்தத் தீ
விபத்திலிருந்து எப்படியாவது தங்களைக் காப்பாற்றிக்
கொள்ளவேண்டும் என்று நினைத்தார்கள். அப்போது கண்பார்வையற்ற
மனிதர் தீ விபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள
ஒருதிசையை நோக்கி ஓடினார். ஆனால் அவர் ஓடிய திசையில் தீயானது
கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருபதைப் பார்த்த கால் நடக்க
இயலாத மனிதன், "நண்பா! அந்தப் பக்கம் வழியாக ஓடாதே, ஏனென்றால்,
அந்தப் பக்கம் தீயானது கொழுந்துவிட்டு
எரிந்துகொண்டிருக்கின்றது" என்றார். "அப்படியானால் நான் எந்தப்
பக்கம் நோக்கி ஓடவேண்டும்?" என்று கேட்டான் பார்வையற்ற மனிதன்.
"நீ இந்தத் தீ விபத்திலிருந்து உன்னைக் காப்பாற்றிக்கொள்ள
வேண்டுமானால், நடக்க இயலாத என்னை உன்னுடைய தோளில்
சுமந்துகொள்ளவேண்டும். அப்படி என்னை நீ உன்னுடைய தோளில்
சுமப்பாயானால், நான் உனக்கு எந்தப் பக்கம் போகவேண்டும் என்ற
வழியைச் சொல்லித் தருவேன். அப்போது நாம் இருவரும் இந்தத் தீ
விபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்" என்றான்.
கால் நடக்க இயலாத மனிதன் சொன்னதைக் கேட்ட கண் பார்வையற்ற
மனிதன், அவனைத் தன்னுடைய தோள்மேல் சுமந்துகொண்டு, அவன் தனக்கு
சுட்டிக்காட்டிய வழியில் நடந்து, இரண்டு பேரும்
தீவிபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.
உலகில் இருக்கும் மனிதர்கள் யாவரும் இப்படி ஒருவர் மற்றவருக்கு
உதவிக்கரம் நீட்டி, ஒருவர் மற்றவருக்கு ஒத்தாசையாக
இருந்தார்கள் என்றால், இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்!.
நற்செய்தி வாசகத்த்தில் அன்னை மரியா எலிசபெத்தை சந்திக்கின்ற
நிகழ்வினைக் குறித்து படிக்கின்றோம். இந்த நிகழ்வு நமக்கு
உணர்த்தும் செய்தி என்ன, இதன்வழியாக நாம் என்ன பாடத்தைக்
கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு
செய்வோம்.
மரியா எலிசபெத்தைச் சந்திக்கின்ற இந்த நிகழ்வு நமக்கு
உணர்த்தும் முதலாவது உண்மை ஒருவர் மற்றவருக்கு உதவி செய்ய
விரைந்து செல்லவேண்டும் என்பதாகும். வானதூதர் கபிரியேல் வழியாக
எலிசபெத் கருவுற்றிருக்கும் செய்தியைக் கேள்விப்படும் மரியா
அவருக்கு உதவி செய்வதற்கு விரைந்து செல்கின்றார். இத்தனைக்கும்
எலிசெபத், தனக்கு உதவி செய்ய வரவேண்டும் என்று கேளாமலே மரியா
எலிசபெத்துக்கு உதவி செய்வதை நாம் படிக்கின்றோம். மரியாவிடம்
விளங்கிய இத்தகைய குறிப்பறிந்து உதவி செய்யும் பண்பை நாம்
ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளவேண்டும். நிறைய நேரங்களில் நாம்
நம்மிடம் உதவி என்று வந்தால் கூட, உதவி செய்வதில்லை.
அப்படிப்பட்ட தருணத்தில் மரியா தாமாகவே முன்சென்று
எலிசபெத்துக்கு உதவி செய்கின்றார்.
எலிசபெத்தும் மரியாவுக்கு தன்னுடைய அன்பான, ஆறுதலளிக்கும்
வார்த்தைகளால் உதவி செய்திருக்க வேண்டும். ஏனென்றால் மரியாவோ
திருமணத்திற்கு முன்னதாகவே கருவுற்றிருக்கின்றார்.
அப்படிப்பட்ட தருணத்தில் மரியாவுக்கு ஆதரவும், சக மனிதர்களின்
உடனிருப்பும் தேவைப்பட்டிருக்கும். எலிசபெத்து மரியாவுக்கு
அத்தகைய உடனிருப்பையும் ஆதரவையும் தந்திருப்பார் என்பதை
நம்மால் உறுதியாக நம்ப முடிகின்றது.
மரியாவும் எலிசபெத்தும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு உணர்த்தும்
இரண்டாவது பாடம் ஒருவர் மற்றவரை வாழ்த்தவேண்டும் என்பதாகும்.
மரியா, எலிசபெத்தை அவர் முதிர்ந்த வயதில் கருவுற்றிப்பதை
எண்ணிப் பாராட்டுகின்றார். எலிசபெத்தும் மரியாவை
'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" என்று
பாராட்டுகின்றார், வாழ்த்துகின்றார். இத்தகைய வாழ்த்துகளால்
அந்த இடமே மகிழ்ச்சியால் நிரம்பி வழிகின்றது. குறிப்பாக
எலிசபெத்தின் வயிற்றின் உள்ளே இருக்கும் குழந்தை அக்களிப்பால்
துள்ளுகின்றது. நாம் ஒருவர் மற்றவரை வாழ்த்துகின்றபோது அந்த
இடமே மகிழ்ச்சியால் நிரம்பி வழியும் என்பதை இதன்வழியாக நாம்
அறிந்துகொள்ளலாம்.
மரியாவிடமும் எலிசபெத்திடமும் இருந்த இந்த உதவி செய்யும் நல்ல
மனமும், ஒருவரிடம் இருக்கின்ற நல்ல பண்பை, குணத்தை
பாராட்டக்கூடிய நல்ல மனப்பான்மையும் இருக்கின்றதா என்று
சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் அடுத்தவர்களிடம்
இருக்கின்ற குறைகளைப் பெரிதுபடுத்தும் நாம், அவர்களிடம்
இருக்கும் நல்ல பண்புகளைப் பாராட்டுவதில்லை. மாறாக ஒருவர்
மற்றவர்மீது பொறாமையோடும் காழ்புணர்ச்சியோடும் இருக்கின்றோம்.
நாம் அவ்வாறு இல்லாமல், மரியா மற்றும் எலிசபெத்தைப் போன்று
ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வோம், அடுத்தவரிடம் இருக்கும் நல்ல
பண்பைப் பாராட்டுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
வாழ்த்துங்கள், வாழவையுங்கள்; பாராட்டுங்கள், பரிசுத்த
அன்பினைப் பெற்றிடுங்கள்
ஒருமுறை டால் கார்னெகி (Dale Carnegie) என்ற எழுத்தாளர்
தன்னுடைய படைப்புக்களை பதிப்பகம் ஒன்றிற்கு அனுப்புவதற்காக
அஞ்சல் நிலையத்திற்குச் சென்றிருந்தார். ஆனால் அங்கே இருந்த
அஞ்சல்நிலையப் பணியாளர் மிகவும் கடுகடுவென இருந்தார்; அதோடு
மட்டுமல்லாம் அவர் அங்கே வந்தவர்மீதெல்லாம் எரிந்து எரிந்து
விழுந்தார்.
அவரைப் பார்த்த கார்னெகிக்கு சற்று பயமாகவும், அதே நேரத்தில்
வருத்தமாகவும் இருந்தது.
'இப்படிக் கடுகடுவென இருப்பவரிடம்
நம்முடைய படைப்புகளைக் கொடுக்க, அவர் அதைச் சரியாக அனுப்பாமல்
தூக்கி எறிந்துவிட்டால், இத்தனை ஆண்டுகள் நாம் உழைத்த
உழைப்பெல்லாம் வீணாகிப் போய்விடுமே' எனத் தீவிரமாக யோசித்தார்.
பின்னர் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய் அந்த அஞ்சலகப் பணியாளரிடம்
பேச்சுக் கொடுத்தார்.
"ஐயா உங்களுடைய சிகை அலங்காரம் மிகவும் அருமையாக இருக்கின்றது.
நீங்கள் செய்திருக்கின்ற சிகையலங்காரத்தைப் போன்று நானும்
வைத்துக்கொள்ள விரும்புகின்றேன்" என்றார். இதைக் கேட்ட அந்த
அஞ்சலகப் பணியாளருக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. ஏனென்றால்
இத்தனை ஆண்டுகள் எவருமே அவருடைய சிகையலங்காரத்தைப்
பாராவிட்டவில்லை. கார்னெகிதான் முதல்முறையாக அவரைப்
பாராட்டினார்.
கார்னெகியின் பாராட்டு மொழியைக் கேட்ட அந்த அஞ்சலகப் பணியாளர்
அவரிடம், "ஐயா! இப்போது உங்களுக்கு நான் என்ன செய்து
தரவேண்டும்? சொல்லுங்கள்" என்று கேட்டார். அதற்கு கார்னெகி,
"ஐயா! என்னுடைய இந்த படைப்பை பதிப்பகத்திற்கு அனுப்பி வைத்தால்
போதும்" என்றார். அவரும் அதனை உடனே செய்து தந்தார். விரைவிலே
தான் வந்த காரியம் நடந்ததை நினைத்து கார்னெகி சந்தோசப்பட்டுக்
கொண்டே சென்றார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியைக் குறித்து கார்னெகி தன்னுடைய
நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டபோது, அவருடைய நண்பர்களில் ஒருவர்,
"எதற்காக நீங்கள் அவரைத் தேவையில்லாமல் பாராட்டவேண்டும்?"
என்று கேட்டார். அதற்கு கார்னெகி, "நான் அந்த மனிதரைப்
பாராட்டியதால் இரண்டு நன்மைகள் நடைபெற்றன. ஒன்று அவருக்கு
ஒருவிதமான சந்தோசம். இன்னொன்று என்னுடைய வேலை மிக விரைவாக
நடைபெற்றது" என்றார்.
ஒருவரை, அவரிடம் இருக்கும் திறமையை, நல்ல பண்புகளைப்
பாராட்டுவதால் எத்தகைய நன்மைகள் விளைகின்றன என்பதை இந்த
நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தியில் வாசகத்தில் எலிசபெத்தும், மரியாவும்
சந்தித்துக்கொள்கிறார்கள். அப்படி அவர்கள் இருவரும்
சந்திக்கும்போது ஒருவர் மற்றவரை வாழ்த்துகிறார்கள்/
பாராட்டுகிறார்கள். மரியாவோ எலிசபெத்தை முதிர்ந்த வயதில்
கருத்தரித்ததற்காக வாழ்த்துகிறார். எலிசபெத்தோ மரியாவை,
"பெண்களுக்குள் ஆசிபெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும்
ஆசி பெற்றதே" என வாழ்த்துகிறார். மரியாவும், எலிசபெத்தும்
ஒருவர் மற்றவரை வாழ்த்தியது ஏதோ காரியம் நடைபெற வேண்டும்
என்பதற்காக அல்ல, மாறாக அவர்கள் உள்ளார்ந்த விதத்தில்
பாராட்டுகிறார்கள். அதனால் அங்கே பெருமகிழ்ச்சி உண்டாகின்றது.
ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப் பணித்தளத்திற்கு
அனுப்புகிறபோது, "நீங்கள் எந்த வீட்டிற்குள் சென்றாலும் அந்த
வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்" என்கிறார் (மத் 10:13).
அதேபோன்று தன்னுடைய உயிர்ப்புக்குப் பின் சீடர்களிடம்
"உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று வாழ்த்துகிறார் (யோவான்
20:20). இப்படியாக ஆண்டவர் இயேசு மக்களைச் சந்திக்கின்றபோது
அவர்களை வாழ்த்தவும், பாராட்டவும் செய்கிறார். பவுலடியாரும்
கூட, தன்னுடைய ஒவ்வொரு திருமுகத்தை எழுதும்போதும்,
முடிக்கும்போதும் .... "நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும்,
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும், அமைதியும்
உரித்தாகுக" என்று வாழ்த்துகிறார்/ பாராட்டுகின்றார் ( 1 கொரி
1:3).
ஆகவே நாமும் நம்முடைய அன்றாட வாழ்வில் ஒருவர் மற்றவரைச்
சந்திக்கும்போது வாழ்த்துக் கூறவேண்டும், அவர்களிடம் இருக்கும்
நல்ல பண்புகளைப் பாராட்டவேண்டும்.
பல நேரங்களில் நம்முடைய சந்திப்புகளில் அடுத்தவரைப் பற்றிய
புறணியும், குறைசொல்லும்தான் அதிகமாக இருக்கின்றது. இவை நம்மை
பாதாளம் வரை தாழ்த்துமே ஒழிய, உயர்த்தவே செய்யாது. "உண்மையான
பாராட்டும், வாழ்த்தும் அற்புதங்களைச் செய்யவல்லது; அது
ஒருவரிடம் இருக்கும் திறமைகளை வெளிகொணர வல்லது; நம்முடைய
நட்பையும், அன்பையும் வளர்த்தெடுக்கக்கூடியது" என்பார்
உளவியலாளரான சிக்மென்ட் பிராய்டு.
ஆகவே நாம் மரியாவையும், எலிசபெத்தையும் போன்று ஒருவர்
மற்றவரிடம் இருக்கும் நல்ல பண்புகளைப் பாராட்டுவோம், நம்முடைய
வாழ்வில் உண்மையான அன்பும், நட்பும் வெளிப்பட துணையாய்
இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
"Appreciate Loudly; Criticise Sofly" Anonymous
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
"ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர்
பேறுபெற்றவர்"
மாணவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு சிறுகதை எழுதுவது கைகூடி
வந்தது. அவனுடைய திறமையைப் பார்த்துவிட்டு, அவனுக்குக்
கற்றுக்கொடுத்து வந்த ஆசிரியர்கூட, "தம்பி! எதிர்காலத்தில் நீ
மிகச்சிறந்த எழுத்தாளராய் வருவாய். அதனால் தொடர்ந்து
எழுதிக்கொண்டே இரு" என்று அவனை உற்சாகப்படுத்தினார்.
ஆசிரியர் சொன்ன இவ்வார்த்தை அவனுக்கு இன்னும் உற்சாகத்தைக்
கொடுத்தது. அவன் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தான்.
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, அவன் கல்லூரிக்குச்
சென்றபோதும் எழுதிக்கொண்டே இருந்தான். இப்போது அவன் தான்
எழுதிய சிறுகதைகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்பத் தொடங்கினான்.
ஆனால் பத்திரிக்கைகளோ அவன் எழுதிய கதைகளை, "இவற்றையெல்லாம்
எங்களால் பிரசுரிக்க முடியாது" என்று சொல்லி திருப்பி
அனுப்பின. இவற்றைக் கண்டு அவன் மனந்தளராமல், தொடர்ந்து தான்
எழுதிய கதைகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்பிக்கொண்டே இருந்தான்.
அப்போதும் பத்திரிக்கைகள் அவன் எழுதிய சிறுகதைகளை திருப்பி
அனுப்பிக் கொண்டே இருந்தன.
இதனால் அவனுடைய நெருங்கிய நண்பர்கள்,
'பிரசுரமாகாத கதைகளை
எழுதும் எழுத்தாளன்' என்று அவனைக் கிண்டல் செய்யத்
தொடங்கினார்கள். அவர்களுக்குப் பயந்து அவன், தான் எழுதிய
கதைகளை இரவில் போய் அஞ்சலகத்தில் போஸ்ட் செய்துவிட்டது
வந்தான். அப்போதும்கூட அதே நிலைதான் ஏற்பட்டது. அப்படிப்பட்ட
சமயத்தில் நாம் எழுதுவதைக் கைவிட்டு விடலாமா என்ற எண்ணம்கூட
அவனுக்கு ஏற்பட்டது. இருந்தாலும் தன்னுடைய ஆசிரியருடைய
வார்த்தைகளிலும் தன் மீதும் உறுதியான நம்பிக்கை வைத்து
தொடர்ந்து எழுதி, பத்திரிக்கைகளுக்கு அனுப்பிக் கொண்டே
இருந்தான்.
இப்படிப்பட்ட சமயத்தில் அவனுடைய ஒரு சிறுகதை ஒரு
பத்திரிக்கையில் வந்தது. அதைப் பார்த்துவிட்டு அவன் மிகவும்
மகிழ்ச்சி அடைந்தான். தொடர்ந்து அவனுடைய ஒருசில சிறுகதைகள்
ஒருசில பத்திரிக்கைகளில் வரத்தொடங்கின. ஆனால், அவன் எழுதிய
சிறுகதைகளுக்கு ஒருபைசா கூட சன்மானமாகக் கிடைக்கவில்லை.
தன்னுடைய சிறுகதைகளைத்தான் மக்கள் விரும்பி வாசிக்கத்
தொடங்கிவிட்டார்களே, அதுவேபோதும் என்ற மனநிறைவில் தொடர்ந்து
அவன் எழுதிக்கொண்டே இருந்தான். நாட்கள் செல்லச் செல்ல
அவனுக்கென்று பெரிய வாசகர்கூட்டம் உருவானது. பின்னாளில் அவன்
எழுதிய ஒவ்வொரு வார்த்தைக்கும் மூன்று பவுண்டுகள் சம்மானம்
பெறும் வண்ணம் மிகவும் பிரபலம் ஆனான். அவன்(ர்)தான்
இங்கிலாந்தில் பிறந்த உலகப் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளரான
சார்லஸ் டிக்கன்ஸ்.
சார்லஸ் டிக்கன்ஸ், தன்னுடைய ஆசிரியர் சொன்ன வார்த்தைகளையும்
தன்னையும் உறுதியாக நம்பி எழுதினார். அதனால் உலகப் புகழ்
பெற்றார். நாமும் நம்மையும் நம்மைப் படைத்த இறைவனையும் நம்பி
வாழ்கின்றபோது அதிசயங்களைச் செய்யலாம் என்பது உண்மை.
நற்செய்தி வாசகத்தில், மரியா தன்னுடைய உறவினரான எலிசபெத்தின்
வீட்டிற்கு விரைந்து செல்கின்றார். அங்கே அவரை வாழ்த்துகிறார்.
அதற்கு பிறகு எலிசபெத்தும் மரியாவை வாழ்த்துகின்றார். அப்படி
எலிசபெத் மரியாவை வாழ்த்துகின்றபோது, "ஆண்டவர் உமக்குச்
சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்று
வாழ்த்துகின்றார். இந்த வார்த்தைகளை மட்டும் நாம் இன்றைய
சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
வானதூதர் கபிரியில் மரியாவிடத்தில் வந்து, வாழ்த்துச்
சொல்லிவிட்டு, இறைவனின் மீட்புத் திட்டத்தைச் சொல்கின்றபோது,
நானோ கன்னியாயிற்றே, இது எப்படி நடக்கும்? என்று மரியா
கலங்கினாலும், ஆண்டவர் சொன்னவை நிச்சயம் நடக்கும் என்று
உறுதியாக நம்புகிறார். அவர் நம்பியதோடு மட்டுமல்லாமல்,
நம்பியத்தை தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்
வாழ்வாக்கின்றார்.
ஒருமுறை ஆண்டவர் இயேசு மக்கள் கூட்டத்திற்குப் போதித்துக்
கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து ஒரு பெண் எழுந்து,
"உம்மைக் கருத்தாங்கி, பாலூட்டி வளர்த்த உம் தாய்
பேறுபெற்றவர்" என்பார். இயேசுவோ அவரிடம், "இறைவார்த்தையைக்
கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்"
என்பார் (லூக் 11: 27- 28). இயேசு சொல்லும் இவ்வார்த்தைகளின்
வழியாக மரியா இரண்டு விதங்களில் பேறுபெற்றவர் ஆகின்றார்.
ஒன்று, அவர் இயேசுவைப் பெற்றேடுத்தனால், இரண்டு.
இறைவார்த்தையைக் கேட்டு, அதனை நம்பிக்கை வாழ்வாக்கியதால்.
இப்படிப்பட்ட சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் ஆனதால், மரியா
பெண்களுக்குள் ஆசிபெற்றவர் ஆகின்றார்.
நாம் மரியாவைப் போன்று இறைவார்த்தை நம்பி, அதனை வாழ்வாக்க
முயற்சிக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம். ஒருவேளை
நாம் இறைவார்த்தையை நம்பி வாழ்வாக்காமல் இருந்தால், இனிமேலாவது
அதை நம்பி வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
|
|