|
20
டிசெம்பர் 2018 |
|
திருவருகைக்காலம்
3ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இதோ, கன்னிப் பெண் கருத்தாங்குவார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14
அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச்
சொல்லியது: "உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு
கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு
கேட்டுக்கொள்ளும்" என்றார்.
அதற்கு ஆகாசு, "நான் கேட்கமாட்டேன். ஆண்டவரைச் சோதிக்கமாட்டேன்"
என்றார். அதற்கு எசாயா: "தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக்
கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச்
செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப்
பார்க்கிறீர்களோ?
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ,
கன்னிப் பெண் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு
அவர் "இம்மானுவேல்' என்று பெயரிடுவார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா: 24:
1-2. 3-4ab. 5-6 (பல்லவி:7c,10b காண்க)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே.
1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும்
அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்களின்மீது
அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே.
பல்லவி
3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில்
நிற்கக்கூடியவர் யார்? 4ab கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்;
பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி
5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து
நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர்
இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! வானக அரசின் வாயிலைத் திறக்கும்
தாவீதின் திறவுகோல் நீரே. இருளிலே இருக்கும் கைதிகள் தளையைக்
களைந்திட எழுந்தருள்வீரே. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.
+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
1:26-38
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள
நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர்
தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு
மண ஒப்பந்தமானவர்.
அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்
நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார்.
இவ்வார்த்தைகளைக் கேட்டு மரியா கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ
என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக்
கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு
இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத
கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை
ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்
மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு
முடிவே இராது" என்றார்.
அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!"
என்றார்.
வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை
உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது.
அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம்
முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற
இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில்,
கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.
பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு
நிகழட்டும்" என்றார்.
அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
அன்பின் வெளிப்பாடு தன்னை அர்ப்பணிப்பது. உண்மை அன்பு எங்குள்ளதோ
அங்கு அர்ப்பணிப்பு இருக்கும். இந்த அர்ப்பணிப்பிலே தான் தியாகம்,
விட்டுக் கொடுத்தல் போன்ற மேலான குணநலன்கள் அடங்கியுள்ளன.
மரியாள் தன்னை அர்ப்பணித்து தரணிக்கு மீட்பை தேடித் தந்தார்கள்.
இதற்காய் அவர்கள் வியாகுலங்களை சந்திக்க நேர்ந்தது. அர்ப்பணிப்பு
அதனையெல்லாம் ஏற்றுக் கொள்ள துணிவு தந்தது.
திருச்சபையிலும், நாட்டினிலும் இதே போல அர்ப்பணித்து, அந்த அர்ப்பணிப்பின்
குணநலன்களை வாழ்வாக்கி, நடைமுறைப்படுத்தியவர்கள் ஏராளம் உண்டு.
அந்தமான் சிறைச்சாலைகள் இன்றைக்கும் அடையாளங்களாக உள்ளன.
இத்தகைய அர்ப்பணிப்போடு கூடிய அன்பு நமதாகும் போது தரணி சிறக்கும்.
இத்தகையோரின் எண்ணிக்கை இன்றைக்கு உயர்ந்திட வேண்டும்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
இறை விருப்பம்
ஓர் ஊரில் புகழ்பெற்ற சன்னியாசி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரிடம்
அறிவுரை கேட்பதற்காகவும் ஆலோனை கேட்பதற்காகவும் அவ்வூரில் இருந்த
மக்கள் அனைவரும் செல்வார்கள். அவரும் அவர்களுக்கு நல்ல அறிவுரைகூறி
அவர்களுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்தார். சில சமயங்களில் குழந்தைகளுக்கு
நல்ல நல்ல கதைகள் சொல்லி ஊக்கப்படுத்துவார், நோயாளிகளுக்கு
மூலிகை மருந்து கொடுத்து உதவுவார். அவர் அம்மக்களில் ஒருவரானவர்.
அவருக்கு வயது வேறு ஏறிக்கொண்டே இருந்தது. இப்போது அவரால்
முன்புபோன்று போதிக்க முடியவில்லை, ஏன் தன்னுடைய அன்றாடக் கடமையைக்கூட
செய்ய முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டார். இதைப் பார்த்த ஊர்மக்கள்,
"நமக்கு இவ்வளவு காலம் உதவியாக இருந்த சன்னியாசியை கவனித்துக்கொள்ள
ஒவ்வொருநாளும் ஒரு வீட்டார் பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டும்"
என்று தீர்மானித்தனர். அதன்படியே அவர்கள் அந்த சந்நியாசிக் கவனித்துக்
கொண்டார்கள்.
ஒருநாள் அந்த ஊரில் கொள்ளைநோய் ஒன்று பரவியது. அதில் ஏராளமான
கால்நடைகள், பறவையினங்கள் மடிந்துபோயின. மக்களோ செய்வதறியாது
திகைத்து நின்றனர். உடனே அவர்களில் ஒருசிலர் சன்னியாசியை அணுகி,
அதற்கான காரணத்தைக் கேட்டனர். அதற்கு அவர், "எல்லாம் கடவுளின்
விருப்பம், நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள்" என்று சொன்னார்.
இதைக் கேட்ட மக்கள், "என்ன இந்த சன்னியாசிக்கு மூளை குழம்பிவிட்டதா?
என்று பேசத் தொடங்கினர்.
நாட்கள் சென்றன. அவ்வூரில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உண்பதற்குக்
கூட வழியில்லாமல், பக்கத்து ஊர்களுக்குச் சென்று, பிச்சை எடுத்து,
பிழைக்கத் தொடங்கினார். அப்போது ஒருசிலர் சன்னியாசியைச் சந்தித்து,
"ஏன் இவ்வாறு நடக்கிறது?" என்று காரணத்தைக் கேட்டனர். அதற்கு
அவர், "எல்லாம் கடவுளின் விரும்பம், நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள்"
என்று சொல்லி அனுப்பிவைத்தார். சன்னியாசியின் வார்த்தைகள் மக்களுக்கு
இன்னும் அதிகமான கோபத்தை ஏற்படுத்தியது. "வயது ஏற ஏற இவருக்கு
புத்தி பேதலித்துப் போய்விட்டதா?" என்று பலவாறு பேசத் தொடங்கினர்.
இது நடந்து ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு அவ்வூரில்
கொள்ளையடிப்பதற்காக ஒரு கொள்ளைக்கூட்டம் இரவு நேரத்தில் வந்தது.
அவர்கள் ஊருக்குள் வந்து பார்த்தபோது ஆங்காங்கே கால்நடைகள்
செத்துக்கிடந்தன. ஊரில் பஞ்சம் தலைவிரித்து ஆடியிருக்கிறது என்று
அவர்கள் விரைவிலே கண்டு கொண்டார்கள். அதனால் ஊரிலிருந்து எதையுமே
எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டுப் போனார்கள். அடுத்தநாள்
காலையில் ஊர்மக்கள் எழுந்து பார்த்தபோது, கொள்ளைக்கூட்டம் வந்துபோன
தடயம் இருப்பதைக் கண்டும், அவர்கள் ஊரிலிருந்து எதையுமே எடுத்துக்கொண்டு
போகவில்லை என்பதை அறிந்தும் மக்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு
நின்றார்கள்.
எனவே மக்கள் அனைவரும் இச்செய்தியை சன்னியாசியிடம் சென்று, எடுத்துச்
சொன்னார்கள். அப்போதும் அவர், "எல்லாம் கடவுளின் விருப்பம்" என்றார்.
முன்பு அவரை இவருக்கு புத்தி பேதலித்துப் போய்விட்டது என்று
சொன்னவர்கள் எல்லாம், இப்போது சன்னியாசி உண்மையிலே பெரிய மனிதர்
என்று அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள். சில நாட்களில் அவ்வூரில்
நல்ல மழை பெய்தது. அதிலிருந்து மக்களுடைய வாழ்வு மாறியது.
எல்லாம் கடவுளின் விரும்பம் என்று செயல்படுகின்றபோது வாழ்வில்
மகிழ்வுதான் என்ற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.
நற்செய்தி வாசகத்தில் வானதூதர் கபிரியேல் மரியாவுக்குத்
தோன்றி, அவரை வாழ்த்துகிறார். பின்னர் அவர் ஒரு மகனைப்
பெற்றெடுக்கப் போவதாகக் கூறுகிறார் இதைக் கேட்ட மரியா, "இது எங்கனம்,
நானோ கன்னியாயிற்றே?" என்கிறார். பின்னர் வானதூதர் அவளிடம் எல்லாவற்றையும்
விளக்கிக்கூறிய பின்பு, "இதோ ஆண்டவரின் அடிமை, உமது விருப்படியே
ஆகட்டும்" என்கிறார். மரியா சொன்ன ஆம் என்ற சொல்லும், அதன்வழியாக
அவர் கடவுளின் விரும்பத்தை ஏற்று நடந்ததுதான் நமக்கு மிகப்பெரிய
பாடமாக இருக்கிறது.
மரியா, தான் மட்டும் கடவுளின் விருப்பத்தை ஏற்று நடக்கவில்லை,
தன்னுடைய ஒரே மகனையும் அவர் கடவுளின் விருப்பத்தை ஏற்று நடக்கக்
கற்றுக்கொடுத்தார். அவர் மகனாகிய இயேசு நம்மிடம், "என்னை
நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள்
நுழைவதில்லை. மாறாக விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் விருபத்தின்
நடப்போரே செல்வர்" என்கிறார் (மத் 7:21).
ஆகவே நாம் அன்னை மரியாவைப் போன்று இறை விருபத்தின் படி நடப்போம்;
அப்போது எதிர்வரும் சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்வோம். அதன்வழியாக
இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே
எனக்கு நிகழட்டும்
இறைத்திருவுளம் எது என்பதை அறிந்துகொள்வதற்கு பிரபல ஆன்மீக எழுத்தாளரான
எப்.பி.மேயர் தன்னுடைய வாழ்க்கையிலிருந்து சுட்டிக்காட்டுகின்ற
ஒரு நிகழ்ச்சி.
ஓரிரவு கப்பலில் அவர் ஐரிஸ் கால்வாயைக் கடந்து ஹோலிஹெட் என்ற
துறைமுகத்தை நோக்கிப பயணம் சென்றுகொண்டிருந்தபோது, அவர் அந்தக்
கப்பலில் இருந்த தளபதியைச் சந்தித்தார். அவர் அந்த கப்பல் தளபதியிடம்,
"இந்த கும்மிருட்டில் துறைமுகம் இருப்பதை நீங்கள் எப்படிக் கண்டு
கொள்வீர்கள்?" என்று கேட்டார். அதற்கு கப்பல் தளபதி, "அதோ தூரத்தில்
தெரிகின்றதே மூன்று விளக்குகள், அந்த மூன்று விளக்குகளும் ஒரே
புள்ளியில் இணைந்திருந்ததென்றால், அதுதான் துறைமுகம் என அறிந்து,
அதை நோக்கி கப்பலைச் செலுத்துவோம். இவ்வாறு நாங்கள் துறைமுகத்தை
அடைவோம்" என்றார். அந்தக் கப்பல் தளபதி சொன்ன பதிலைக் கேட்டு
எப்.பி. மேயர் ஒரு கணம் ஆச்சரியபப்பட்டு நின்றார்.
இரவு நேரத்தில் துறைமுகம் எங்கு இருக்கின்றது என்பதைக் கண்டுகொள்வதற்கு
கப்பல் தளபதி மூன்று விளக்குகள் ஒரே புள்ளியில் இணைவதை அடிப்படையாகக்
கொண்டு செயல்பட்டது போன்று, இறைத்திருவுளம் எது என்பதை அறிந்துகொள்வதற்கு
உள்ளுணர்வு, இறைவார்த்தை, காலச் சூழல் ஆகிய மூன்றும் ஒத்திருப்பதை
அடிப்படையாகக் கொண்டு செயல்படவேண்டும். எப்போது இந்த மூன்றும்
ஒரு காரியத்தில் / எடுக்கும் முடிவில் ஒத்திருக்கின்றதோ அதை இறைத்திருவுளமாக
நாம் ஏற்றுக்கொள்ளலாம்.
நற்செய்தி வாசகத்தில் இறைத்திருவுளத்தை ஏற்று நடந்த அன்னை மரியாவைக்
குறித்துப் படிக்கின்றோம். மரியா தாவிதின் குடும்பத்தைச்
சார்ந்த யோசேப்புக்கு மணஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நேரம். அப்படிப்பட்ட
தருணத்தில்தான் ஆண்டவரின் தூதர் மரியாவுக்குத் தோன்றி,
"அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார்"
என்று வாழ்த்துகின்றார். இவ்வாழ்த்தொலியைக் கேட்டு இந்த
வாழ்த்து எத்தகையதோ என்று மரியா கலங்குகின்றார். மறைவல்லுநராகிய
பெர்னார்டின் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு இவ்வாறு
சொல்வார், "ஒருவேளை வானதூதர் கபிரியேல் மரியாவிடம் நீதான்
உலகத்தில் இருக்கின்ற மிகப்பெரிய பாவி என்று
சொல்லியிருந்தால்கூட மரியா அதனை ஏற்றிருப்பார். மாறாக, வானதூதர்
அவரிடம் அருள்மிகப் பெற்றவரே, ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார்
என்று சொல்லி வாழ்த்தியதால் அவர் கலங்குகின்றார் என்று
கூறுவார். ஆகையால், வானதூதரின் வாழ்த்து, மரியாவிற்கு ஒருவித
கலக்கத்தை, அச்சத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது
மிகையாகாது.
வானதூதர் தொடர்ந்து மரியாவிடம், "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின்
அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப்
பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" என்கிறார். வானதூதர்
இவ்வாறு சொன்னதைக் கேட்ட மரியா, "இது எங்கணம் ஆகும். நானோ கன்னியாயிற்றே"
என்று தன்னுடைய ஐயப்பாட்டை வெளிப்படுத்துகின்றார்.
மரியா வானதூதரிடம் எழுப்பிய சந்தேகம் மிகச் சரியானது என்றே
சொல்லலாம். ஏனென்றால் அவர் ஒரு கன்னி. கன்னி ஒருவர் கருத்தரித்து,
குழந்தை பெற்றுக்கொள்வது என்பது இயலாத காரியம். திருமறை
நூலில்கூட அதனை ஒட்டிய செய்திகளே கிடையாது. அதனால்தான் வானதூதரிடம்
மரியா இப்படியோர் கேள்வியை எழுப்புகின்றார். ஆனால் செக்கரியாவின்
நிகழ்வில் இது முற்றிலும் மாறாக இருக்கின்றது. வானதூதர் கபிரியேல்
செக்கரியாவிற்குத் தோன்றி எலிசபெத் தனனுடைய முதிர்ந்த வயதில்
ஒரு குழந்தையை பெற்றுத் தருவார் என்று சொல்கின்றபோது மரியாவைப்
போன்று செக்காரியாவும் இது எப்படி என்று கேள்வியை எழுப்புகின்றார்.
ஆனால் மரியாவைத் தண்டியாமல் செக்கரியாவைத் தண்டிக்கின்றார்.
அவருடைய நாவை திருமுழுக்கு யோவானின் பிறப்பு வரை கட்டிப்
போட்டுவிடுகின்றார்.
இதற்கு விவிலிய அறிஞர்கள் சொல்லும் செய்தி "திருமறையில் வயது
முதிர்ந்தவர்கள் குழந்தையைப் பெற்றெடுத்த நிகழ்வுகள் இருக்கின்றன.
சாரா தன்னுடைய முதிர்ந்த வயதில்தான் ஈசாகைப் பெற்றெடுத்தார்.
ஆனால் கன்னியானவர் குழந்தையைப் பெற்றெடுத்த நிகழ்வு திருமறையில்
இல்லவே இல்லை. அதனால்தான் வானதூதர் அவருக்கு ஒன்றும் செய்யவில்லை.
வானதூதர் கபிரியேல் மரியா எழுப்பிய கேள்விக்கு தகுந்த பதிலைத்
தந்ததும், "நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே என்னக்கு நிகழட்டும்"
என்கின்றார். மரியாவின் வாழ்வில் அவருடைய உள்ளுணர்வும், இறைவார்த்தையும்
காலச் சூழலும் ஒருசேர இருந்தது. அதனால் அவர் இது இறைத்திருவுளம்தான்
என்று ஏற்று நடக்கின்றார்.
நம்முடைய வாழ்க்கையில் நாம் இறைத்திருவுளம் எது என்பதை அறிந்து,
அதனை ஏற்று நடக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
எப்போது நாம் இறைத்திருவுளத்தை ஏற்று நடக்கின்றோமா அப்போது
நாம் கடவுளால் மரியாவைப் போன்று மேலும் மேலும் உயர்த்தப்படுவோம்
என்பது உறுதி.
எனவே, இறைத்திருவுளம் எது என உணர்ந்து, அதன்படி நம்முடைய
வாழ்க்கையை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
நற்செய்தி (லூக் 1:26-38)
கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை
நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பு
நிகழ்வை வாசிக்கின்றோம். எருசலேம் திருக்கோவிலுக்கு வந்து சக்கரியாவை
சந்தித்த வானதூதர் ஆறு மாதங்கள் கழித்து நாசரேத்தூரில் உள்ள ஒரு
கன்னியிடம் வருகின்றார்.
'வாழ்த்து' ('அருள்நிறைந்த மரியே வாழ்க,' 'ஆண்டவர் உம்மோடு')
'கலக்கம்' ('இந்த வாழ்த்து எத்தகையதோ?')
'வாக்குறுதி' ('அஞ்ச வேண்டாம்')
'தயக்கம்' ('இது எப்படி நிகழும்?')
'இறையுணர்வு' ('உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்')
'சரணாகதி' ('நான் ஆண்டவரின் அடிமை')
என்று ஆறு உணர்வுகளாக கபிரியேலுக்கும், மரியாளுக்கும் இடையே நிகழும்
உரையாடல் நிகழ்கிறது. கபிரியேல் - சக்கரியா நிகழ்வில் இறுதி
வார்த்தை கபிரியேலுடையதாக இருக்கிறது. ஏனெனில் சக்கரியா ஊமையாக்கப்படுகின்றார்.
இந்நிகழ்வில் இறுதி வார்த்தை மரியாளின் வார்த்தையாக இருக்கிறது.
இங்க ஒரு லைஃப் சீக்ரெட் கற்றுக்கொள்ளலாம்: 'எங்கே இறுதி
வார்த்தை பெண்ணின் வார்த்தையாக இருக்கிறதோ அங்கே எவ்வளவு பெரிய
உறவுப் பிரச்சினையும் தீர்க்கப்பட்டுவிடும். ஆக, நட்பில், அன்பில்
ஆண்-பெண் பிரச்சினை வரும்போது ஒரே தீர்வு பெண்ணின் வார்த்தையை
இறுதி வார்த்தையாக வைத்துக்கொள்வது!
கபிரியேல் - மரியாள் உரையாடல் சீக்கிரம் முடிய, அல்லது மரியாளின்
சரணாகதியை தூண்டும் வார்த்தை என்னவாக இருக்கும் என்று
யோசித்தால், அது 'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்பதுதான் என
நினைக்கிறேன்.
ஒருவேளை 'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்று கபிரியேல் வந்தவுடனேயே
சொல்லியிருந்தால் மரியாள் உடனடியாக சரணாகதி அடைந்திருப்பார்.
ஏனெனில் யூத இளவலான அவருக்கு தங்களின் கடவுள் வரலாற்றில் ஆற்றியிருக்கும்
அரும்பெரும் செயல்கள் தெரியும் - படைப்பு, குலமுதுவர்கள்
வாழ்வு, எகிப்தின் அடிமைத்தனம், பாஸ்கா கொண்டாட்டம், செங்கடல்,
பாலும் தேனும் பொழியும் நாடு, மோசே, ஆரோன், நீதித்தலைவர்கள்,
அரசர்கள், இறைவாக்கினர்கள், அசீரிய படையெடுப்பு, பாபிலோனிய படையெடுப்பு,
சமாரியர்கள், பாபிலோனியர்கள், ஆலயம் இடிப்பு, மறு கட்டமைப்பு,
பாரசீக, கிரேக்க, உரோமை படையெடுப்பு - என எல்லாம் அவர் தன்
பெற்றோர் சொல்லக் கேட்டிருப்பார். இது எல்லாவற்றிலும் 'கடவுளால்
இயலாதது ஒன்றுமில்லை' உணர்ந்திருப்பார் அவர்.
ஆக, கபிரியேலின் இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், 'நான் ஆண்டவரின்
அடிமை' என்று சரணாகதி அடைகின்றார். இதுமுதல் கடவுளே என்னை ஆட்கொள்ளட்டும்
என்ற திறந்த மனத்தையே இது காட்டுகிறது.
இந்த இடத்தில் மாற்கு 9:14-29 என்ற நற்செய்திப் பகுதியை
நினைவுகூறுவோம்:
தீய ஆவி பிடித்திருந்த சிறுவனை நலமாக்கும் நிகழ்வில் சிறுவனின்
அப்பா, 'உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு
கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்' என்று சொல்ல, இயேசு அவரை
நோக்கி, 'இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்!' என்றார்.
'கடவுளுக்கு எல்லாம் நிகழும்'
'நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்'
ஆக, 'நம்புகிறவர்' அனைவரும் 'கடவுளே'
மரியாள் நம்பினார். நம்பும் அந்த நொடி அவர் கடவுள் ஆனார்.
கடவுள் ஆகிவிட்ட அவரின் வயிற்றில் மனுவுருவாதல் சாத்தியமாகிறது.
- Fr. Yesu Karunanidhi, Madurai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|