Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   17  டிசெம்பர் 2018  
                                                           திருவருகைக்காலம் 3ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 யூதாவை விட்டுச் செங்கோல் நீங்காது.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 49: 1-2, 8-10

யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது: என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழ இருப்பதை நான் அறிவிக்கப்போகிறேன். கூடிவந்து உற்றுக்கேளுங்கள்; யாக்கோபின் புதல்வர்களே! உங்கள் தந்தையாகிய இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள்.

யூதா! உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர். உன் கை உன் எதிரிகளின் கழுத்தில் இருக்கும். உன் தந்தையின் புதல்வர் உன்னை வணங்குவர். யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி, என் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்!

ஆண் சிங்கமென, பெண் சிங்கமென அவன் கால் மடக்கிப் படுப்பான்; அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்? அரசுரிமை உடையவர் வரும்வரையில், மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது; அவன் மரபைவிட்டுக் கொற்றம் மறையாது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  72: 1-2. 3-4ab. 7-8. 17 (பல்லவி: 7b)
=================================================================================
 பல்லவி: ஆண்டவருடைய சமாதானம் என்றென்றும் நிலவுவதாக.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி

3 மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும். 4ab எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக. பல்லவி

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி

17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதரின் ஞானமே, ஆற்றலுடன் அனைத்தையும் அன்பாய் நடத்துகின்றவரே, எங்களுக்கு உண்மையின் வழி காட்ட வந்தருளும். அல்லேலூயா.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தரப்பட்டிருக்கும் அல்லேலூயா வசனத்திற்குப் பதிலாக, 98ஆம் பக்கத்தில் உள்ளவற்றிலிருந்து ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம். யா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணை.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-17

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர். தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும்.

இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.

ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 வரலாற்றில் இயேசு

ஒருமுறை பண்டித ஜவஹர்லால் நேரு, இந்திய நாட்டின் முதல் பிரதமராக ஆனபிறகு, பள்ளியில் தனக்கு வரலாற்றுப் பாடம் சொல்லிக்கொடுத்த வலாற்று ஆசிரியரைப் பார்த்து, அவருக்கு நன்றி சொல்லச் சென்றார்.

ஆசிரியரைப் பார்த்ததும், நேரு அவருடைய காலில் விழுந்து, வணங்கினார். பின்னர் அவர் தன்னுடைய ஆசிரியரைப் பார்த்து, "நீங்கள் மட்டும் எனக்கு அறிவு புகட்டவில்லை என்றால், இன்றைக்கு நான் நமது நாட்டின் பிரதமராக வந்திருக்கமாட்டேன்" என்றார்.

அதற்கு அவருடைய ஆசிரியர், "யார் வேண்டுமானால் வரலாற்றுப் பாடத்தை உனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கலாம். ஆனால் வரலாற்றில் இடம் பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. நான் வரலாற்றுப் பாடத்தைப் போதிக்கத்தான் செய்தேன். ஆனால் நீயோ வரலாற்றில் இடம்பிடித்து விட்டாய். உண்மையில் நீ மிகப் பெரியவன்" என்று சொல்லி அவர் நேருவை வாழ்த்தினார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரலாற்றில் இடம்பிடித்த ஆண்டவர் இயேசுவின் தலைமுறை அட்டவணை வாசிக்கின்றோம். யூதரல்லாத நமக்கு வேண்டுமானால் தலைமுறை அட்டவணை பெயர்களின் தொகுப்பாக இருக்கலாம். ஆனால் யூதர்களைப் பொருத்தமாட்டில் இது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் யூதர்கள் தங்களை இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களினம் என்றும், ஆபிரகாமின் வழிவந்தவர்கள் என்றும் நினைத்தார்கள். இதனை மனதில் கொண்டுதான் மத்தேயு நற்செய்தியாளர் இயேசு ஆபிரகாமின் வழிவந்தவர், யூதர் என்பதை உறுதி செய்வதற்காக இயேசுவின் தலைமுறை அட்டவணையைத் தருகிறார்.

இயேசுவின் தலைமுறை அட்டவணைப் படித்துப் பார்க்கும்போது ஒரு சில உணமைகளை நாம் உணர்ந்து கொள்ளலாம். அதில் முதலாவது இயேசு என்னும் மெசியா யூதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, மாறாக அவர் எல்லா மக்களுக்கும் சொந்தமானவர் என்பதாகும். தலைமுறை அட்டவணையில் இடம்பெறும் தாமார், ரூத்து, பர்சபா, இராக்காபு யாவரும் புறவினத்தவரே. இறைவன் எல்லார் வழியாகவும் செயலாற்றுவார், எல்லாருக்கும் தனது மீட்பைத் தருவார் என்பதை இங்க நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

அடுத்ததாக இயேசு என்னும் மெசியா பாவத்திலிருந்து மக்களை மீட்டு, மீட்பை தரக்கூடியவர் என்பது இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. தலைமுறை அட்டவணையானது பதினான்கு பதினான்கு தலைமுறை வீதம் மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் முதல் பதினான்கு தலைமுறையானது அதாவது ஆபிரகாமிற்கும், தாவீதிற்கும் இடைப்பட்ட தலைமுறையில் வாழ்ந்தவர்கள் கடவுளுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள். ஆனால் அதற்கு அடுத்த தலைமுறையினரோ கடவுளது கட்டளையைக் கடைப்பிடிக்காமல் வேற்று தெய்வத்தை வழிபட்டு, கடவுளை விட்டு வெகுதொலைவில் போனார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் அவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள், பாபிலோனியருக்கும், அசிரியர்களுக்கும் அடிமையாய் வாழ்ந்தார்கள்.

எனவே தங்களுடைய தவறான வாழ்வால் தாங்கள் நாடு கடத்தப்பட்டதையும், அடிமைப்படுத்தப்பட்டதையும் உணர்ந்த இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய தவற்றை உணர்கிறார்கள்; தங்களை மீட்குமாறு இறைவனை நோக்கி மன்றாடுகிறார்கள். ஆதலால் பாவத்தாலும், தவறான வாழ்வாலும் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை மீட்க இறைவன் தன்னுடைய ஒரே மகனை அனுப்பி மீட்கிறார்.

ஆக மெசியா என்னும் இயேசு எல்லாம் மக்களுக்கும் பொதுவானவர் என்பதோடு மட்டுமல்லாமல், அவர் மக்களைப் பாவங்களிலிருந்து மீட்பார் (மத் 1:20) என்பதும் உறுதியாகிறது.

எனவே இயேசுவின் வருகைக்காக தயாரித்துக் கொண்டிருக்கும் நாம் நமக்கு மீட்பை, விடுதலையைத் தர வரும் இயேசுவை திறந்த மனதோடு ஏற்போம். அவர் வழங்கும் அருளை நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 *இயேசு எல்லாருக்கும் பொதுவானவர் *

கடந்த நூற்றாண்டில் ஆப்ரிக்காவில் உள்ள கிழக்கு கடற்கரைப் பகுதியில் மறைபோதகப் பணியாற்றிய ஒரு குருவானவர் வாழ்வில் நடந்த நிகழ்வு இது.

ஒருநாள் அந்த குருவானவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அங்கே இருந்த மக்களுக்குப் போதித்துவிட்டு, தன்னுடைய இருப்பிடத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது ஓர் இளைஞன் அவரைச் சந்தித்தான். அவன் அவரிடம், "தந்தையே! இயேசு கிறிஸ்துவைப் பற்றி நீங்கள் மிகத் தெளிவாகப் போதித்தீர்கள், ஆனால் அவர் கருப்பா? வெள்ளையா? என்று எங்களுக்குச் சொல்லவில்லையே?" என்றான்.

இதைக் கேட்ட அந்த குருவானவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று பலவாறாக யோசித்தார். ஏனென்றால் இயேசுவை அவர் வெள்ளையினத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னால், அவன் சோகமாகச் செல்லக்கூடும். மேலும் நல்லது எல்லாமே வெள்ளையினத்தவரிடமிருந்துதான் வரும்போல என்று அவன் வருத்தப்படக் கூடும். ஆதலால் அவனுக்கு எப்படி பதில் சொல்வது என்று தீவிரமாக யோசித்தார்.

பின்னர் உள்ளத்தில் தெளிவு பெற்றவராய், இயேசு வாழ்ந்த பூமி வெப்பம் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு பூமியாகும். ஆதலால் அங்கு இருப்பவர்கள் யாவருமே இயேசு உட்பட வெள்ளை நிறமும் இல்லாமல், கருநிறமும் இல்லாமல் மாநிறமாக இருப்பார்கள்" என்று பதிலளித்தார். இதைக் கேட்ட அந்த இளைஞன் மிகுந்த மகிழ்ச்சியோடு, "இயேசு வெள்ளையாகவோ, கருப்பாகவோ இல்லாமல் மாநிறமாக இருப்பாரா? அப்படியென்றால் அவர் எல்லாருக்கும் பொதுவானவரா?" என்று சொன்னான்.

ஆண்டவர் இயேசு ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட மொழி பேசுபவருக்கோ சொந்தமானவர் அல்ல, அவர் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவின் தலைமுறை அட்டவனையை நாம் வாசிக்கின்றோம். இந்த தலைமுறை அட்டவணையை நாம் கூர்ந்து நோக்கும்போது நிறைய உண்மைகளை உணர்ந்துகொள்ளலாம். குறிப்பாக இயேசு கிறிஸ்து யூதர்களுக்கோ, நேர்மையாளர்களுகோ மட்டுமல்ல, மாறாக அவர் எல்லா இனத்தாருக்கும், எல்லா மக்களுக்கும் பொதுவானவர் என்பதை உணர்ந்துகொள்ளலாம். இயேசு எப்படி எல்லாருக்கும், எல்லா இனத்தாரும் பொதுவானவர் என்பதை இப்போது சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

பொதுவாக யூதர்களின் தலைமுறை அட்டவணையில் ஆண்களின் பெயர்களே இடம்பெற்றிருக்கும். பெண்களுக்கு அங்கு இடம்கிடையாது. ஆனால் இயேசுவின் தலைமுறை அட்டவணையில் தாமார், ராகாப், உரியாவின் மனைவி பெத்சபா, ரூத்து, மரியா போன்றோரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதை வைத்துப் பார்க்கும் இயேசு ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஓர் இணைப்பாளராக இருந்து செயல்படுகிறார் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

அடுத்ததாக யூதர்கள் தங்களை "தூய இனமாக" நினைத்துக்கொள்ளக்கூடியவர்கள். அவர்களது தலைமுறையில் அட்டவணையில் பிற இனக்கலப்பு இல்லாமல் இருக்கவேண்டும் என்று நினைக்கக்கூடியவர்கள். ஆனால் இயேசுவின் தலைமுறை அட்டவணையில் இராகாப், ரூத்து போன்ற புறவினத்தாரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன. இதன்வழியாக இயேசு யூதருக்கும், புறவினத்தாருக்கும் இடையே ஓர் இணைப்பாளராக இருந்து செயல்பட்டார் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகம் 2:16 ல் வாசிக்கின்றோம், "ஆண்டவராகிய இயேசு சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஒருடலாக்கினார்" என்று. ஆம், இயேசு கிறிஸ்து யூதர்களையும் பிற இனத்தாரையும் தன்னுடைய சிலுவையின் வழியாக ஒன்று சேர்த்தார். இது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

நிறைவாக இயேசு கிறிஸ்து நேர்மையாளர்களின் மீட்புக்காக மட்டுமல்லாமல் பாவிகளின் மீட்புக்காகவும் இந்த மண்ணுலகிற்கு வந்தார் என்பதையும் இந்த தலைமுறை அட்டவணை வழியாக நாம் புரிந்துகொள்ளலாம். இயேசுவின் தலைமுறை அட்டவணையில் தாமார், இராகாப் போன்று பாவிப்பெண்களும் இடம்பெறுவதைப் பார்க்கும்போது அத்தகைய சிந்தனைதான் மேலோங்கி இருப்பதை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

மத்தேயு நற்செய்தி 9:13ல் இயேசு கூறுவார், "நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்கவந்தேன்" என்று. ஆகவே, இயேசுவின் வருகை எல்லாருக்கும், எல்லா மக்களுக்கும் பொதுவானது என்பதை உணர்வோம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். எவரையும் இழிவானவராக, தரம் குறைந்தவராகப் பார்க்கும் பார்வையை விடுவோம். அனைவரும் கடவுளின் மக்கள் என்பதை உணர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
வரலாற்று நாயகன் இயேசு!

1978 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட Roots - வேர்கள் - என்ற தொடர் பெருவாரியான மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்ட ஒரு தொடர்.

இந்தத் தொடர், சிந்தியா என்ற கறுப்பினத்தைச் சார்ந்த மூதாட்டி, அலெக்ஸ் ஹைலி (Alex Hailey) என்ற தன்னுடைய பேரனுக்கு கதை சொல்வது போன்று இருக்கும். இந்தத் கதையில், மூதாட்டி தன்னுடைய முன்னோர் யார் யார், எப்படி அவர்கள் எல்லாம் அமெரிக்காவிற்கு வந்தார்கள் என்பதைப் பற்றி மிகவும் சுவாஸ்ரமாகச் சொல்வார்.

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்கும் அலெக்ஸ் ஹைலிக்கு, தன்னுடைய முன்னேர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அப்போதே துளிர்விடும். சில ஆண்டுகள் கழித்து, அவன் வளர்ந்து பெரியவனாகும்போது தன்னுடைய முன்னோர்களைப் பற்றிய தேடலிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபடுவான். அப்படி ஆராய்சியில் ஈடுபடும்போது தன்னுடைய முன்னோர்கள் அனைவரும் ஆப்ரிக்காவைகச் சார்ந்தவர்கள் என்பதும் அவர்கள் அனைவரும், வெள்ளையர்களால் கப்பலில் வைத்து இழுத்துவரப்பட்டு, அமெரிக்காவில் அடிமைகளாக விற்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையையும் அறிந்து மிகவும் மனவேதனை அடைவான்.

இதற்குப் பின்பு அலெக்ஸ் ஹைலி, ஆப்ரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்று, அங்கு தன்னுடைய பாட்டி, தனக்குச் சொன்ன தனது முன்னோரான "கன்றே குவின்டோ"வை (Kanre Quinto) யாருக்காவது தெரிந்திருக்கிறதா? என்று விசாரித்துப் பார்ப்பான். அப்படி விசாரித்துப் பார்க்கும்போது, அவர் ஓர் இனத்துக்கே தலைவர என்பதும், மக்களுக்காக அவர் எதையும் செய்யத் துணிபவர் என்பதும் கேட்டு இன்னும் ஆச்சரியப்படுவான். இப்படிப்பட்ட ஒரு தலைவரையா இந்த ஆங்கிலேயர்கள் பிடித்துவந்து அடிமையாக்கினார்கள்?, இவரைப் போன்று இன்னும் எத்தனை எத்தனை தலைவர்களை இந்த ஆங்கிலேயர்கள் பிடித்துவந்து அடிமையாக்கினார்களோ? என்று யோசித்துப் பார்த்து மிகவும் மிகவும் வேதனையடைவான். இத்தோடு அந்தத் தொடர் நிறைவு பெறும்.

ஆங்கிலேயர்களுடைய அடிமைச் சந்தையை இந்தத் தொடர் மிகவும் கேள்விக்குள்ளாக்கியதால், இது வந்த காலத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

Roots தொடரில் வரும் அலெக்ஸ் ஹைலியைப் போன்று நாமும் நம்முடைய மூதாதையர்களைப் பற்றிய ஆராய்சியில் ஈடுபட்டால், நாம் அனைவரும் ஒரு தாய் பெற்ற (ஆதாம் - ஏவாள்) மக்கள் என்ற உண்மை தெரியவரும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் தலைமுறை அட்டவணையைக் குறித்து வாசிக்கின்றோம். இன்னாருக்கு இன்னார் பிறந்தார், அவருக்கு இவர் பிறந்தார் என்று வரும் இந்தத் தலைமுறை அட்டவணை நமக்கு வேண்டுமானால் வாசிக்கின்றபோது "சலிப்பூட்டலாம்". ஆனால் யூதர்களைப் பொருத்தவரைக்கும் இது மிகவும் முக்கியமான ஒன்று. யூதர்கள் எப்போதும் தங்களைத் "தூய இரத்தம்" "ஆபிரகாமின், தாவீதின் வழிவந்தவர்கள்" என்று சொல்லி பெருமையடிக்கக் கூடியவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ம தலைமுறை அட்டவணையானது மிகவும் முக்கியத்தும் வாய்ந்த ஒன்று. . மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் தலைமுறை அட்டவணையைக் கொடுப்பதன் வழியாக அவர் ஆபிரகாமின், தாவீதின் வழிவந்தவர் என்ற உண்மையை எடுத்துச் சொல்கின்றார்.

அடுத்ததாக, இயேசுவின் தலைமுறை அட்டவணை நமக்குச் சொல்கின்ற செய்தி, இறைவனானவர் வான் மேகங்களில் உறைந்துகொண்டிருப்பவர் அல்ல, அவர் வையகத்தில் மக்களோடு மக்களாக இருப்பவர் என்பதாகும். இதைத் தான் தூய யோவான் தன்னுடைய நற்செய்தியில், "வார்த்தை மனுவுருவானார், நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14) என்று கூறுகின்றார். ஆம் இயேசு தாவீதின் ஊரில், மரியாவின் வயிற்றில் பிறந்ததால், அவர் வரலாற்று நாயகனாகின்றார்.

நிறைவாக, இயேசுவின் தலைமுறை அட்டவணையைப் படித்துப் பார்க்கின்றபோது இறைவனின் எல்லையற்ற இரக்கமும் அன்பும் வெளிப்படும். வழக்கமாக யூதர்களுடைய தலைமுறை அட்டவணையில் பெண்களின் பெயர் இடம்பெறவே பெறாது. ஆனால், இயேசுவின் தலைமுறை அட்டவணையில் மரியாவைத் தவிர்த்து "தாமார், ராகாப், உரியாவின் மனைவி பெத்சபா" என்ற மூன்று பெண்களுடைய பெயர்கள் இடம்பெறுகின்றன. இந்த மூன்றுபேருமே "பாவிகள்" என்று முத்திரை குத்தப்பட்டவர்கள். இப்படிப்பட்டவர்களும் இயேசுவின் தலைமுறை அட்டவணையில் வருவதால், இறைவன் எல்லார்மீதும் இரங்குபவர், எல்லாருக்குமானவர் என்ற செய்தியானது மிக அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்படுகின்றது.

ஆம், கடவுளுக்கு யாரும் வேண்டாதவர்களோ, தீண்டத் தகாதவர்களோ கிடையாது. எல்லாரும் அவருடைய மக்கள். எல்லாரும் அவருடைய அன்புக்கு உரியவர்கள்.

ஆகவே, எல்லாருடைய மீட்பிற்காக இந்த மண்ணுலகிற்கு வருகின்ற இயேசுவை திறந்த மனதுடன் வரவேற்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!