Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   06  டிசெம்பர் 2018  
                                                           திருவருகைக்காலம் 1ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 மெசியாமீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 1b-6

நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்; வாயில்களைத் திறந்துவிடுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். அவர்கள் மன உறுதி கொண்டவர்கள்; உம்மீது நம்பிக்கை உடையவர்கள்; அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர்.

ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்; ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர், என்றும் உள்ள கற்பாறை! உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்; வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்; அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார். எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும் அதை மிதிக்கும்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  118: 1,8-9. 19-21. 25-27ய (பல்லவி: 26a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 8 மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! 9 உயர் குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! பல்லவி

19 நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். 20 ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர். 21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். பல்லவி

25 ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்! 26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 27a ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எசா 55: 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே விண்ணரசுக்குள் செல்வர்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21, 24-27

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


சிந்தனை

நம்பிக்கை கொண்ட மக்களினம் உள்ளே வரட்டும் என்ற அழைப்பை எசாயா வழியாக இன்று தரப்பட்டுள்ளது.

அவர் பாறையாக உள்ளார். அவரிலே நம்பிக்கை கொண்டவர்கள் பாறையின் மீது கட்டப்பட்ட வீட்டைப் போலாவார்கள். எந்த நிலையானாலும் அவர்கள் வீழ்ந்து சோர்ந்து போகமாட்டார்கள். நிலையாய் இருப்பார்கள்.

நாம் அவரை பாறையாக அரணாக கொண்டு இருக்கின்றோமா?

நம்முடைய நம்பிக்கையில் நாம் உயர்ந்து இருக்கின்றோமா?




=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 * விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களாய் வாழ்வோம்*

இரஷ்யாவைச் சேர்ந்த மிகச் சிறந்த நாவலாசியரான தாஸ்தாயோஸ்கி (Dostoevsky) எழுதிய புகழ்பெற்ற நாவல்தான் The Idiot.

இதில் வரக்கூடிய மிக முக்கியமான கதாபாத்திரம் பிரின்ஸ் மிஸ்கின் என்பதாகும். பிரின்ஸ் மிஸ்கின் தன்னுடைய நண்பர்களைப் போன்று அல்லாமல், வித்தியாசமாக வாழ்ந்து வந்தார். அவருடைய நண்பர்களோ பொருள் தேடுவதும் பணம் ஈட்டுவதும்தான் புகழ் அடைவதும்தான் தங்களுடைய வாழ்க்கையின் இலட்சியம் என்றிருந்த வேளையில், பிரின்ஸ் மிஸ்கின் எதையும் எதிர்பார்க்காமல் எல்லாருக்கு சேவைகள் செய்து வந்தார்; தன்னிடம் இருப்பதை பிறருக்குக் கொடுத்து வாழ்ந்தார்.

இதனால் அவருடைய நண்பர்கள் அவரை பிழைக்கத் தெரியாதவன்; முட்டாள் என்று கேலி செய்தார்கள்.

பிரின்ஸ் மிஸ்கினை அவருடைய நண்பர்கள் பிழைக்கத் தெரியாதவன், முட்டாள் என்று கூறினாலும், அவர் மக்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் உதவிகள் செய்ததால், மக்கள் அவரை மிக உயர்வாக பார்த்தார்கள். நிறைய இளைஞர்கள் பிரின்ஸ் மிஸ்கினைப் போன்று எல்லாருக்கும் தங்களால் இயன்ற நன்மைகளைச் செய்யத் தொடங்கினார்கள்.

ஏனோ தானோ என்ற வாழ்க்கையல்ல, எல்லாருக்கும் நன்மைகள் புரிகின்ற வாழ்க்கைதான் அனைவர்க்கும், ஏன் ஆண்டவருக்குக் கூட பிடித்தமான வாழ்க்கை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ஓர் உண்மையான கிறிஸ்தவன்/ கிறிஸ்தவள் எப்படி இருக்கவேண்டும் என்று போதிக்கின்றார். "என்னை நோக்கி, ஆண்டவரே! ஆண்டவரே! எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்" என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது.

இயேசு வாழ்ந்த காலத்தில், அவருடைய பெயரைச் சொல்லி நிறையப் பேர் பேய்களை ஒட்டினார்கள். ஆனால், அவர்களுடைய வாழ்க்கையோ இயேசுவின் போதனைக்கு ஏற்றமாதிரி இல்லை. அதனால்தான் ஆண்டவர் இயேசு மேற்சொன்ன வார்த்தைகளை உதிர்க்கின்றார். கிறிஸ்தவர்களாக இருக்கும் நாம், வெறுமனே கிறிஸ்துவை வழிபடுபவர்களாக மட்டும் இருந்து விடமால், அவருடைய போதனைக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடியவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் ஆண்டவர் இயேசு சொல்வது போன்று விண்ணகத்திற்குள் செல்ல முடியும்.

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது குறித்துப் பேசும் இயேசு, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதால், கடவுளின் கட்டளைக் கடைப்பிடித்து வாழ்வதால் என்னென்ன நன்மைகளையும், கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது வாழாததால் என்னென்ன இழப்புகளையும் சந்திக்கின்றோம் என்று எடுத்துக்கூறுகின்றார்.

முதலில் நாம் கடவுளின் திருவுளத்தை அல்லது அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதனால் என்ன ஆசிர்வாதத்தைப் பெறுகின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்போம். " நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படுகின்ற எவரும் பாறையின்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பானவர்" என்கின்றார். ஆம், நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ்கின்றபோது நம்முடைய வாழ்க்கை என்றுமே உறுதியாக இருக்கும் என்பதுதான் உண்மை.

பாறை என்று சொல்கின்றபோது விவிலியத்தில் பாறை என்ற வார்த்தை கடவுளோடு மட்டுமே தொடர்படுத்திப் பேசப்படுகின்றது (திபா 18:2). அப்படியானால், இறைவார்த்தையைக் கேட்டு நடப்பவர், ஆண்டவர்மீது தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றார் என்பது உறுதியாகின்றது. ஆண்டவர் மீது தன்னுடைய வாழக்கையை அமைத்துக்கொள்ளும்போது எந்தவொரு இன்னலும் இக்கட்டும் வரவே வாராது; நம்மை ஒரு தீங்கும் தீண்டாது.

இறைவார்த்தைக்கு செவிமடுத்து வாழ்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று சிந்தித்துப் பார்த்த நாம், இறைவார்த்தைக்கு செவிமடுக்காமல் இருப்பதனால் என்னென்ன இழப்புகளைச்பினைச் சந்திக்கின்றோம் என்று இப்போது பார்ப்போம். இயேசு கூறுகின்றார், "நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்" என்று. மணல் வீட்டைக் கட்டுவது முன்மதியில்லாமல் செயல்படுவதற்குச் சமமாகும். ஏனென்றால் வீட்டைக் கட்டுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. "வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் நடத்திப் பார்" என்று முன்னோர்கள் சாதாரணமாகச் சொல்லிவிடவில்லை. அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. ஆகவே, வீட்டைக் கட்டும்போது நல்ல இடம்பார்த்துக் கட்டவேண்டும். மணல்மீது வீட்டைக் கட்டுவோரின் வீடு, உறுதியில்லாமல் ஒருநாள் அழிந்தே தீரும் என்பது உண்மை. மணல்மீது வீட்டைக் கட்டுவோர் உலக காரியங்களை நம்பி வாழ்வோரைக் குறிப்பதாக இருக்கின்றது. இவர்கள் ஒருபோதும் நிலைத்து நிற்க மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம்.

ஆகையால், நாம் இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடந்து, பாறைமீது வீட்டைக் கட்டியவர்களுக்கு ஒப்பாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 சொல்லைவிட செயல் பெரிது!

அது ஒரு துறவுமடம். அந்த துறவுமடத்தில் இருந்த தலைமைத் துறவி, தன்னுடைய சாவு நெருங்கி வந்துவிட்டதை உணர்ந்தார். எனவே அவர் தான் மிகவும் மதித்த சீடனைக் கூப்பிட்டு பேசத் தொடங்கினார். "என் அன்புச் சீடனே! எனக்கு சாவு நெருங்கி வந்துவிட்டது என்று நன்றாகவே தெரிகின்றது. இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வேன் என்று நினைக்கிறேன். நான் இறந்தபிறகு நீதான் இந்த துறவுமடத்தை தலைமை தாங்கி வழிநடத்தவேண்டும்" என்றார். துறவி தொடர்ந்து பேசப் பேச, சீடனுடைய கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தோடியது.

அப்போது துறவி தன்னிடத்தில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து சீடனுடைய கையில் கொடுத்துச் சொன்னார், "இந்த புத்தகத்தை வாங்கிக்கொள். இந்தப் புத்தகத்தில் நம்முடைய சபை போதிக்கும் எல்லா ஞானமும் உள்ளது. கடந்த ஏழு தலைமுறையாக இது போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே, நீயும் இதை வைத்துக்கொண்டு போதனை செய். உனக்கு இந்தப் புத்தகம் மிகவும் உதவும்" என்றார். உடனே சீடன் தலைமைத் துறவியிடம், "ஐயா! வாழ்க்கையில் நாங்கள் பெறவேண்டிய ஞான வழிகள் எல்லாவற்றையும் நீங்கள் எங்களுக்குப் போதித்து விட்டீர்கள். அதன்படி வாழ்ந்தும் காட்டிவிட்டீர்கள். நீங்கள் சொல்லாத ஞானமா இந்த புத்தகத்தில் இருக்கக்போகிறது? இந்தப் புத்தகம் எனக்கு வேண்டாம்" என்றார்.

அதற்கு தலைமைத் துறவி சீடனிடம், "ஐய்யனே!, நான் உன் தட்டில் இடும் பிச்சையாக எண்ணி இதை வாங்கிக்கொள்" என்றார். இப்படிச் சொல்லிவிட்டு துறவி, சீடனின் கையில் அந்தப் புத்தகத்தைக் கொடுத்தார். சீடன் அந்தப் புத்தகத்தை வாங்கிய மறுகணம், அதை தீயில் போட்டு எரிக்கத் தொடங்கினான். அதுவோ சிறிது நேரத்தில் எரிந்து சாம்பலானது. துறவியோ அதிர்ச்சி மேலிட அதையே பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது சீடன் துறவியைப் பார்த்துச் சொன்னான், "வாழக்கையில் நாங்கள் பெற வேண்டிய எல்லா ஞானத்தையும் நீங்கள் எங்களுக்கு வாழ்ந்து காட்டிவிட்டீர்கள். அந்த ஞானம் எங்கள் நினைவுகளில், செயல்களில் நிச்சயமாகப் பிரதிபலிக்கும். வெறும் புத்தக ஞானம் எங்களுக்குத் தேவையில்லை" என்று கண்களில் ஒளி பொங்கப் பேசினான். சீடன் சொன்னதை அப்படியே அமோதித்த துறவி, அவனை மனதார ஆசிர்வதித்து அனுப்பினார்.

ஆயிரமாயிரம் வார்த்தைகள்/ போதனைகளைவிடவும் ஒரு செயல்/ வாழ்ந்து காட்டும் வாழ்க்கை சிறந்தது என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு, நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளப்படி நடப்பவரே செல்வர்" என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் ஆழமாக சிந்தித்துப் பார்க்கப் படவேண்டியவையாக இருக்கின்றன. சிலர், நாள் தவறாமல், நேரம் தவறாமல் ஆண்டவருடைய திருநாமத்தைச் சொல்லி வழிபடுவதுண்டு. ஆனால், அவர்களுடைய நடைமுறை வாழ்க்கையோ, அன்றாடம் அவர்கள் வழிபட்டதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இப்படி வாழ்க்கின்ற வாழ்க்கை ஒன்றாகவும் வழிபடுவது வேறொன்றாகவும் இருக்கிறவர்கள் ஒருநாளும் விண்ணரசுக்குள் நுழையமுடியாது என்று இயேசு கிறிஸ்து மிக அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றார்.

இயேசு இதனைச் சொல்லிவிட்டு தொடர்ந்து சொல்கின்ற உவமையும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. யாராருடைய வாழ்க்கையெல்லாம் வழிபடுவது ஒன்றாகவும் வாழ்வது வேறொன்றாகவும் இருக்கின்றதோ அவர்கள் அனைவரும், மணல்மீது வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பானவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர் நிலைத்து நிற்கமாட்டார்கள். மாறாக, எவர் ஒருவருடைய வாழ்க்கை, வழிபடுவதும் வாழ்வதும் ஒன்றாக இருக்கின்றதோ, அவர்கள் பாறையின்மீது வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பானவர்களாக இருப்பார்கள். அவர்கள் என்றுமே நிலைத்திருப்பார்கள் என்று ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார்.

இந்த இருவரில் நாம் யாராக இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பெரும்பாலான நேரங்களில் நாம் இறைவார்த்தையை கேட்டும் ஒருசில பக்திமுயற்சிகளை மேற்கொண்டுவிட்டும் அப்படியே இருந்துவிடுகின்றோம்; இறைவார்த்தை போதிப்பதை நம்முடைய வாழ்வில் கடைபிடிக்கத் தவறிவிடுகின்றோம். அதனாலேயே நம்முடைய வாழ்வு உறுதி இல்லாமல் இருக்கின்றது. தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் சொல்வார், "இறைவார்த்தையைக் கேட்பவர்களாக மட்டும் இருந்து உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். அதைக் கடைப்பிடிப்பவர்களாகவும் இருங்கள்" என்று (யாக் 1:22).

நாம், இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர்களாக இருப்போம். சொல்லை விட, செயல் உயர்ந்தது என உணர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
விண்ணரசுக்குள் நுழையத் தகுதி உள்ளவர் யார்?.

வில்லியம் மிக்கென்லி (William Mckenley 1843 - 1901) என்பவர் அமெரிக்க நாட்டின் அதிபராக இருந்தபோது நடைபெற்ற நிகழ்வு இது.

ஒருமுறை அவருக்கு யாரை வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால் அந்தப் பதவிக்குப் போட்டியிட்ட இரண்டு நபர்களும் எல்லாத் தகுதியிலும் ஒன்றாக இருந்தார்கள். படிப்பிலும் சரி, அனுபவத்திலும் சரி அவர்கள் இருவரும் ஒருவருக்கு சளைத்தவர் அல்ல என்ற விதத்தில் இருந்தார்கள். இதனால்தான் அவர்கள் இருவரில் யாரை வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிப்பது என்ற குழப்பம் அவருக்கு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் ஒரு நிகழ்வு நடைபெற்றது. அதுதான் யார் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு முழுமையான தகுதியுள்ளவர் என்பதைத் தீர்மானம் செய்தது. அந்த நிகழ்வு இதுதான்.

ஒருநாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்குப் போட்டியிட்ட இரண்டு நபர்களும் ஒரு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். பேருந்தில் சரியான கூட்டம். எல்லோரும் ஒருவர் மற்றவரை நெருக்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு நிறுத்தத்தில் வயதான பெண்மணி ஒருத்தி தலையில் சுமையுடன் ஏறினாள். ஏற்கனவே பேருந்தில் சரியான கூட்டம். இதில் இந்த பெண்மணி வேறா என்று ஒவ்வொருவரும் முணுமுணுக்கத் தொடங்கினர். எதையுமே கண்டுகொள்ளாமல் அந்த பெண்மணி தலையில் சுமையுடன் நின்றுகொண்டே பயணித்து வந்தாள்.

அந்த நேரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்குப் போட்டியிட்ட ஒருவர், எங்கே அந்த பெண்மணி தன்னிடம் உட்காருவதற்கு இடம் கேட்டுவிடுவாளோ என்ற பயத்தில், அவளைக் கண்டுகொள்ளாமல் செய்தித்தாள் படிப்பதுபோல் பாவ்லா காட்டினார். ஆனால் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்குப் போட்டியிட்ட இன்னொரு நபரோ, தான் எழுந்துகொண்டு அந்த வயதான பெண்மணிக்கு இடம்கொடுத்தார்.

இச்செய்தியானது ஒருசில வாரங்களில் அதிபரின் காதுகளை எட்டியது. உடனே அவருக்குப் பொறிதட்டியது. ஆதலால் அவர், பேருந்தில் வயதான பெண்மணிக்கு இடம் தந்த அந்த நபரையே வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்தார்.

அடுத்தவர் மட்டில் அன்பும், அக்கறையும் கொண்டுவாழும் ஒருவர்தான் தன்னுடயை வாழ்வில் மேலும் மேலும் உயர்த்தப்படுவார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுவரே செல்வர்" என்கிறார். அதாவது ஒருவர் எவ்வளவுதான் இறைவனிடத்தில் மன்றாடினாலும், அவர் அடுத்தவர் மட்டில் அன்பும், இரக்கமும் கொண்டு வாழவில்லை என்றால் அவர் விண்ணரசுக்குள் புகமுடியாது என்பதே இயேசுவின் அழுத்தம் திருத்தமான பதிலாக இருக்கின்றது.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் ஒருவர் அந்த வயதான பெண்மணி அமர்வதற்கு தன்னுடைய இருக்கையை கொடுத்தார். அதனால் அவர் பதவில் அமர்த்தப்பட்டார். வயதான பெண்மணியை கண்டுகொள்ளாத இன்னொரு நபரோ அமைச்சர் பதவியைப் பெற தகுதியற்றுப் போனார். அதேபோன்றுதான் நாமும் நம்மோடு வாழக்கூடிய சக மனிதர்களிடத்தில் அன்பும், இரக்கமும் கொண்டு வாழ்ந்தோம் என்றால் நாம் விண்ணரசுக்குள் நுழையத் தகுதி பெறுகின்றோம். இப்படியில்லை என்றால் நாம் விண்ணரசுக்குள் நுழைவதற்கான தகுதியை இழக்கிறோம். நாம் இந்த இரு வகையில் எந்த வகையைச் சார்ந்தவராக இருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு உணர்த்தும் இன்னொரு உண்மை, யாராரெல்லாம் இறைவார்த்தையைக் கேட்டு நடக்கிறார்களோ அவர்கள் அனைவரும் பாறையில் தன்னுடைய வீட்டைக் கட்டிய அறிவாளிகளுக்கு ஒப்பானவர்களாக இருக்கின்றார்கள். அவர்களை புயலோ, சுழற்காற்றோ எதுவும் தீண்டாது. மாறாக இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி தன்னுடைய வாழ்வை அமைத்துக்கொள்ளாத ஒருவர் மணல்மீது தன்னுடைய வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பானவராக இருக்கின்றார். அவரை சாதாரண சுழற்காற்றே சூறையாடிவிடும். ஆதலால் நாம் இறைவார்த்தையைக் கேட்கின்றவர்களாக இருந்து நம்முடைய வாழ்வினை எல்லாத் தீமையிலிருந்தும் காத்துக்கொள்வோம்.

திருப்பாடல் 25:10 ல் வாசிக்கின்றோம், "ஆண்டவரது உடன்படிக்கையும், ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போருக்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்" என்று.

நாம் இறைவன் நமக்குத் தந்திருக்கும் அன்புக் கட்டளைகளை நம்முடைய அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோம். வெறுமனே ஜெபிக்கின்ற மக்களாக மட்டும் வாழாமல், செயல்வீரர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் விண்ணக மகிமையைக் கொடையாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!