Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         27 ஏப்ரல் 2019  
                     பாஸ்கா காலம் முதல் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21

அந்நாள்களில் பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப் படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்துகொண்டனர். நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேசமுடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள்.

"நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது. ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக்கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்" என்று கூறினார்கள்.

அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, "இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது" என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர்.

அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, "உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது" என்றனர்.

அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா: 118: 1,14-15. 16,18. 19-21 (பல்லவி: 21a)
=================================================================================

பல்லவி: ஆண்டவரே, என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் நன்றி செலுத்துகின்றேன்.

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 14 ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. 15 நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. பல்லவி

16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 18 கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. பல்லவி

19 நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். 20 ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர். 21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். பல்லவி


விரும்பினால் தொடர் பாடலைச் சொல்லலாம்.
(காண்க: பக்கம் 443)


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 118: 24

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள்.

அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.

அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை.

இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்.

இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" என்றுரைத்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

யாருக்கு மண்ணுலகிலே துணிவு உண்டு.
கல்வி அறிவு உள்ளவர்களுக்கா? இல்லை கல்வியறிவு அற்றவர்களுக்கா?

கல்வியறிவு அற்றவர்கள், அறிவில்லாது அசாத்தியமான துணிச்சல் கொள்வர் என்று அறிவுள்ளவர்கள் சொல்லுவார்கள். எனவே இத்தகைய துணிச்சல் அசட்டு துணிச்சல் என்பர்.

இன்றைக்கு இறைவார்த்தையில் பார்க்கிறோம். அறிவுள்ளவர்கிள்ன கூட்டம் சொல்லுகிறது, அறிவற்ற பேதுரு, யோவான் அவாகளின் துணிச்சல் குறித்து வியப்படைகின்றது. இயேசுவோடு இருந்ததால் வந்த துணிச்சலா? அப்படியென்றால் பேதுரு, பெண்ணிடம் அவரை எனக்கு தெரியவே தெரியாது என்று மறுத்து இருக்க வேண்டாமே?

உயிர்ப்பு தந்த துணிச்சல் தான். இவர்களும் உயிர்த்தார்கள்.
கடவுள் தந்த வல்லமை, அன்பு, கட்டுப்பாடு கொண்ட இதயத்தை பெற்றார்கள்.

2தீமோ 1:8
நாமும் உயிர்ப்போம். புதிய இதயம் பெறுவோம். துணிவு கொள்வோம். நற்செய்தியை பறைசாற்றுவோம்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மாற்கு 16: 9-15

உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை வைப்போம்

கிறிஸ்தவ இளைஞன் ஒருவன், ஒருநாள் தன்னுடைய பங்குக் குருவைச் சந்தித்து, "சுவாமி! நான் கடவுளை உடனே காணவேண்டும், அதற்கு நீங்கள்தான் எனக்கு உதவிபுரியவேண்டும்" என்று கெஞ்சிக் கேட்டான். குருவானவரோ, "கடவுளை எல்லாம் உடனே காணமுடியாது, அவரை உள்ளத்தால் உணரத்தான் முடியும்" என்று அவனுக்கு எவ்வளவோ அறிவுரை சொல்லிப் பார்த்தார். ஆனால் அவன் கேட்பதாக இல்லை.

இறுதியில் குருவானார் ஒரு பாடுபட்ட சுருபத்தை அவனிடம் கொடுத்து, "அன்பு மகனே! இந்த பாடுபட்ட சிருபத்திற்கு முன்பாக, ஒவ்வொரு நாளும் நீ பக்தியுடன் ஜெபி, கடவுள் உனக்கு நிச்சயம் காட்சிதருவார்" என்று சொல்லி அவனை அனுப்பினார். அவனும் அதற்குச் சரி என்று சொல்லிவிட்டு, குருவானவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்.

அந்த இளைஞன் ஒவ்வொருநாளும் அதிகாலையில் எழுந்து, குருவானவர் தன்னிடம் தந்த இயேசுவின் பாடுபட்ட சிருபத்திற்கு முன்பாக முழந்தாள் படியிட்டு, உருக்கமாகச் செபித்துவந்தான். ஒருமாதங்களுக்கு மேல் சென்றிருக்கும். ஆனால் கடவுள் அவனுக்குக் காட்சிதரவே இல்லை. இதனால் அவன் குருவானவரிடம் ஓடிவந்து, நடந்ததை எல்லாம் சொன்னான். உடனே குருவானவர் அவனுக்கு ஒரு மாதா சிருபத்தைக் கொடுத்து, அதற்கு முன்பாக உருக்கமாக ஜெபித்தால், கடவுள் காட்சியளிப்பார் என்று சொல்லி அனுப்பினார். அவனும் அதற்கு சரியென்று சொல்லிவிட்டு, ஒவ்வொருநாளும் மாதா சிருபத்திக்கு முன்பாக ஜெபித்துவந்தான்.

ஆனால் அந்தோ பரிதாபம். நாட்கள் சென்றாலும் கடவுள் மட்டும் அவனுக்குக் காட்சி தருவதாக இல்லை. அவன் மீண்டுமாக குருவானவரிடம் வந்து, கடவுள் இன்னும் தனக்குக் காட்சியளிக்கவில்லை என்று சொன்னான். அதற்கு குருவானார் அவனிடம் ஒரு அந்தோனியார் சிருபத்தைத் தந்துவிட்டுச் சொன்னார், "அன்பு மகனே! இந்த அந்தோனியார் சிருபத்திக்கு முன்பாக பக்தியுடன் ஜெபி, கடவுள் உனக்கு நிச்சயம் காட்சி தருவார்" என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

அவனும் தன்னுடைய வீட்டிற்குச் சென்று, அந்தோனியார் சிருபத்திற்கு முன்பாக உருக்கமாக மன்றாடி, அதற்கு தூபமிட்டான். அப்போது அவன் போட்ட தூபமானது, ஓரமாக வைக்கப்பட்டிருந்த இயேசுவின் பாடுபட்ட சிருபத்திற்குச் சென்றது. இதைப் பார்த்ததும் அவனுக்குச் சரியான கோபம். காட்சி மட்டும் தரமாட்டாராம். ஆனால் தூபத்தை மட்டும் ஏற்றுக்கொள்வாராம். இது என்ன நியாயம்?" என்று சொல்லி, ஒரு துணியை எடுத்து, இயேசுவின் பாடுபட்ட சிருபத்தை மறைத்தான்.

அவன் துணியை எடுத்து, இயேசுவின் பாடுபட்ட சிருபத்தை மறைத்த அடுத்த நிமிடம் கடவுள் அவனுக்குக் காட்சியளித்தார். அவன் கடவுளைக் கண்டதும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவன் சொல்லன்னா மகிழ்ச்சி அடைந்தான். உடனே அவன் குருவானவரிடம் ஓடிச்சென்று, நிகழ்ந்தவற்றை எல்லாம் சொன்னான். அதற்கு அவர், "நீ இத்தனை நாளும் இயேசுவின் பாடுபட்ட சிருபத்தை வெறும் சிருபமாகத் தான் பார்த்திருக்கிறாய். அதனால்தான் கடவுள் உனக்குக் காட்சியளிக்கவில்லை.

ஆனால், இன்றைக்கு நீ அந்தோனியாருடைய சிருபத்திற்கு தூபம் போட்டபோது, அது இயேசுவின் பாடுபட்ட சிருபத்திற்கு சென்றிருக்கிறது. ஏற்கனவே இயேசு உனக்குக் காட்சி தராததால், அதனை ஒரு துணியைக் கொண்டு மறைத்திருக்கிறாய். அப்போது இயேசுவின் பாடுபட்ட சிருபத்தை ஒரு சிருபமாகப் பார்க்காமல், உண்மையிலே கடவுள் அங்கே பிரசன்னமாக இருக்கிறார் என்று நம்பினாய். எந்த நொடியில் கடவுள் அந்த சிருபத்தில் இருக்கிறார் என்று நம்பினாயோ, அந்த நொடியிலே கடவுள் உனக்குக் காட்சி தந்திருக்கிறார்" என்று விளக்கம் தந்தார்.

நம்பிக்கையோடு சிருபத்தை வணங்கினால், அங்கே கடவுள் எழுந்தருளி அருள்பாலிப்பார் என்ற உண்மை இந்தக் கதையானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் இயேசு மகதலா மரியாவுக்குக் காட்சியளிக்கிறார். அவர் போய் சீடர்களித்தில் இயேசு உயிர்த்துவிட்டார் என்ற செய்தியைச் சொன்னபோது, அதை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். அதேபோன்று வயல்வெளி வழியாகச் சென்ற சீடர்கள் இருவருக்கு உயிர்த்த ஆண்டவர் காட்சி தருகிறார். அவர்களும் சீடர்களிடத்தில் ஆண்டவர் இயேசு உயிர்த்துவிட்டார் என்று சொன்னபோது, அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இறுதியாக பதினோரு சீடர்களும் கூடியிருக்கும்போது உயிர்த்த இயேசு அவர்களுக்குக் காட்சியளித்து அவர்களது நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்கிறார். இயேசு உண்மையிலே உயிர்த்துவிட்டார் என்று எத்தனையோ மனிதர்கள் சொன்னபிறகும் சீடர்கள் நம்பாது இருந்தது நமக்குச் சற்று ஆச்சரியத்தைத் தருகிறது.

பலநேரங்களில் நாமும்கூட சீடர்களைப் போன்று, கடவுளின்மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்துவருகின்றோம். நற்செய்தியில் மக்களிடத்தில் நம்பிக்கை இல்லாததைக் கண்டு, இயேசு அங்கே பல அரும்அடையாளங்களைச் செய்யவில்லை என்று படிக்கின்றோம் (மாற்கு 6:6). நம்பிக்கையின்மை கடவுளிடமிருந்து நமக்கு ஆசியைப் பெற்றுத்தராது என்பதை இந்த வசனம் நமக்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

ஆதலால் இறைவனிடம் முழுமையாக நம்பிக்கை வைத்துவாழ்வோம். அதன்வழியாக அவர் அளிக்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
முதல் வாசகம்

நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21

என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது

நிகழ்வு

'பொன் நாக்கு அருளப்பர்' என அன்போடு அழைக்கப்படுபவர் தூய ஜான் கிறிஸ்சோஸ்டம். நான்காம் நூற்றாண்டில், அந்தியோக்கில் பிறந்தவரான இவர், தன்னுடைய சொந்த மண்ணிலிருந்து ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் போதிப்பதற்காக கான்ஸ்டான்டிநோபிளுக்குச் சென்றார். அங்கிருந்த மக்களோ குறிப்பாக பணக்காரர்களும் அதிகாரம் படைத்தவர்களும் தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்துவந்தார்கள்.

இதுகுறித்து ஜான் கிறிஸ்சோஸ்டம் மிகக் கடுமையாக போதிக்கத் தொடங்கினார். இவருடைய போதனைக்கேட்டு, அங்கிருந்த பணக்காரர்களும் அதிகாரம் படைத்தவர்களும் கொதித்தெழுந்தார்கள். குறிப்பாக யூடோசியா (Eudoxia) அரசி, இவரை நாடுகடத்தவும் அங்கு இவரைக் கடுமையாகச் சித்ரவதைசெய்துக் கொலை செய்யவும் திட்டம் தீட்டினார். இதை அறிந்த ஜான் கிறிஸ்சோஸ்டம் அவரிடம், "நீங்கள் என்னுடைய உயிரை எடுக்கலாம். அதற்காக நான் பயப்படப்போவதில்லை. ஏனென்றால், வாழ்வின் ஊற்றானவரை என்னுடைய இறப்பின்மூலமாக நான் சந்திப்பேன். நீங்கள் என்னுடைய நாடுகடத்தலாம். அதற்காகவும் நான் பயப்படப்போவதில்லை. ஏனென்றால், இந்த உலகமே இறைவனின் கால்மனை. அதனால் நான் எங்கு சென்றாலும், இறைவனுடைய பாதுகாப்பிலேயே இருப்பேன். நீங்கள் என்னிடம் இருக்கின்ற என் உடைமையையோ, ஆடையையோ எதுவேண்டுமானாலும் என்னிடம் பிடுங்கலாம். அதற்காகவும் நான் பயப்படப்படப் போவதில்லை. ஏனென்றால், நான் இந்த உலகத்திற்கு வந்தபோது எதையும் கொண்டுவரவில்லை. கொண்டு போகப்போவதுமில்லை" என்றார்.

ஜான் கிறிஸ்சோஸ்டம் இவ்வாறு பேசிக்கேட்ட யூடோசியா அரசி அப்படியே மிரண்டுபோய் நின்றார். இவ்வளவு துணிச்சலான மனிதரை ஒன்றும் செய்ய முடியாது என்று அவரைக் கண்டித்து அனுப்பினார்.

ஜான் கிறிஸ்சோஸ்டம் எப்படி எதற்கும் பயப்படாமல், ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிவித்தாரோ, அதுபோன்று இன்றைய முதல் வாசகத்திலும் ஒருவர் ஆண்டவரர் இயேசுவைப் பற்றி போதிக்கின்றார். அவர் யார்? அவர் என்ன போதித்தார்? என்று இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

தூ.முவுக்கு முன்னும் தூ.பின்னும் பேதுரு

திருத்தூதர் பணிகள் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், தலைமைச் சங்கத்திற்கு முன்பாக, "என்ன ஆனாலும் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது" என்கின்றார் பேதுரு. இது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பாக மேலே குறிப்பிடப்பட்ட தூ.மு தூ.பி என்ன என்று சிந்தித்துப் பார்த்துப் பார்ப்போம்.

தூ.மு என்றால் தூய ஆவியாரின் வருகைக்கு முன் என்றும் தூய.பி என்றால் தூய ஆவியாரின் வருகைக்குப் பின் என்று சொல்லலாம். தூய ஆவியாரின் வருகைக்கு முன்னர் பேதுருவும் சரி, மற்ற சீடர்களும் சரி யூதர்களுக்கு அஞ்சி (யோவா 20:19) தாங்கள் இருந்த இடத்தின் கதவை அடைத்துக் கொண்டு இருந்தார்கள். அப்படியொரு பயம் சீடர்களிடம் இருந்தது. இதெல்லாம் தூய ஆவியாரின் வருகைக்கும் முன்புவரைதான் இருந்தது. இதே சீடர்கள் தூய ஆவியாரின் வருகைக்கு பின் யாருக்குப் பயந்துகொண்டிருந்தார்களோ, அவர்களுக்கு முன்பாகவேமிகவும் துணிச்சலாக ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எடுத்துரைக்கத் தொடங்குகிறார்கள். இதுதான் தூய அவியாரின் வருகைக்கு முன்னும் பின்னும் பேதுரு மற்றும் ஏனைய சீடர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றமாகும்.

துணிச்சலாக ஆண்டவரைப் பற்றி எடுத்துரைத்த பேதுரு

பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் செல்லும்போது அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பிறவியிலேயே கால் ஊனமுற்றவரை குணப்படுத்தியதால் இருவரும் தலைமைச் சங்கத்தாரின் விசாரணைக்கு உள்ளாகுகிறார்கள். தலைமைச் சங்கத்தார் பேதுருவிடமும் யோவானிடமும், இயேசுவைப் பற்றி போதிக்கவோ கற்பிக்கவோ கூடாது என்று சொல்லும்போது பேதுரு அவர்களிடம், "நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது" என்கின்றார். இதைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் அவர்களை ஒன்றும் செய்யமுடியாமல் அச்சுறுத்தி விடுதலை செய்து அனுப்புகிறார்கள்.

தூய ஆவியாரின் அருட்பொழிவைப் பெற்றுக்கொண்ட பிறகு பேதுரு அவ்வளவு துணிச்சலாகப் பேசுவது நமக்கு வியப்பைப் தருகின்றது. நாமும் தூய ஆவியாரால் நிரப்பப்பட்டிருக்கின்றோம். அப்படிப்பட்ட நாம் ஆண்டவர் இயேசு எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாரத்(து)ததை (திபா 34: 8) மற்றவருக்கும் அறிவிக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

சிந்தனை

'கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் உள்ள உள்ளத்தையே வழங்கியுள்ளார்' (2 திமொ 1:7) என்பார் தூய பவுல். ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வல்லமையுள்ள உள்ளத்தைக் கொண்டு ஆண்டவருடைய நற்செய்தியை பேதுருவைப் போன்று துணிவோடு அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.



Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
மாற்கு 16: 9-15

ஆண்டவரை நம்பு

நிகழ்வு

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த தூதர் (Ambassador) ஒருவர் ஸ்வீடன் நாட்டிற்கு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த புறப்பட்டுச் சென்றார். அவரோடு அவருடைய உதவியாளரும் உடன் சென்றார். பயணத்தின்போது தூதர் மிகவும் இறுக்கமாகவும் பதற்றோடும் இருப்பதை அவருடைய உதவியாளர் பார்த்தார். இருந்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தார். இரவுநேரம் வந்தது. இருவரும் ஒரு சத்திரத்தில் தங்கி ஓய்வெடுக்கத் தொடங்கினார்.

நள்ளிரவு நேரம், உதவியாளர் திடீரென்று தூக்கத்திலிருந்து எழுந்தபோது, அவருடைய தலைவர் அதாவது தூதர் தூங்காமல் ஏதோவொன்றைக் குறித்து யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே உதவியாளர் தூதரிடம், "ஐயா! உங்களிடம் ஒருசில கேள்விகளைக் கேட்கவேண்டும். நீங்கள் மனது வைத்தால் கேட்கிறேன்.. இல்லையென்றால் விட்டுவிடுகிறேன்" என்றார். அவரும், "கேள்" என்றார். மறுகணம் உதவியாளர் அவரிடம், "ஐயா! இந்த உலகம் நீங்கள் பிறப்பதற்கு முன்பு நன்றாக இயங்கிக் கொண்டிருந்ததா? இல்லையா?" என்று கேட்டார். "இதிலென்ன சந்தேகம்! நன்றாகத்தான் இயங்கிக்கொண்டிருந்தது" என்றார் தூதர். உதவியாளர் மறுபடியும் அவரிடம், "ஐயா! இந்த உலகம் நீங்கள் இறந்தபின்னும் நன்றாக இயங்குமா? இயங்காதா?" என்று கேட்டார். அதற்குத் தூதர் அவரிடம், "நான் பிறப்பதற்கு முன்பாக இந்த உலகம் எப்படி நன்றாக இயங்கிக்கொண்டிருந்ததோ, அதுபோன்று நான் இறந்தபின்னும் இந்த உலகம் நன்றாக இயங்கும்" என்றார்.

"ஐயா! நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் மிகச் சிறப்பான முறையில் பதிலளித்துள்ளீர்கள்... எப்படி நீங்கள் பிறப்பதற்கு முன்னும் இறந்தபின்னும் உலகம் நன்றாக இயங்கியதோ, இயங்குமோ அதுபோன்று நீங்கள் இந்த உலகத்தில் இருக்கின்றபோதும் அது நன்றாக இயங்கும்தானே! அப்படியானால் எதற்கு நீங்கள், போகுற இடத்தில் என்ன நடக்குமோ என்று கலக்கமுறுகிறீர்கள்? இந்த உலகத்தை இதுவரை நன்றாக இயக்கிய கடவுள்... இனிமேலும் நன்றாக இயக்கக்கூடிய கடவுள்... உங்களை மட்டும் கைவிட்டுவிடுவாரா என்ன? ஆதலால் எல்லாவற்றையும் நன்றாக இயக்குகின்ற கடவுள் உங்களையும் நன்றாக இயக்குவார், வழிநடத்துதத்துவார். என்ற நம்பிக்கையோடு பயணத்தைத் தொடருங்கள். உங்களுக்கு எந்தவொரு ஆபத்தும் வராது" என்றார் உதவியாளர்.

தன்னுடைய உதவியாளர் சொன்ன இந்த நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை நம்பி, தூதர் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து, இரண்டு நாடுகளுக்குமிடையே சுமூகமாக உறவை ஏற்படுத்திவிட்டு, மனநிறைவோடு நாடு திரும்பினார்.

மனிதர்கள் இறைவன்மீது நம்பிக்கை வாழ்கின்றபோது அல்லது இறைவனை நம்புகின்றபோது, அந்த நம்பிக்கை அவர்களுக்கு எத்தகைய ஆசியையும் ஆற்றலையும் தருகின்றது என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

உயிர்த்த ஆண்டவர் இயேசுவை நம்பாத சீடர்கள்

நற்செய்தியில், உயிர்த்த ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு ஓரிருமுறை தோன்றியும் அவர்கள் அவரை நம்பாததால், அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டிக்கின்றார்.

இயேசு தான் இறந்து உயிர்த்தெழுவேன் என்று பலமுறை தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லியிருந்தார். அதை அவர்கள் நம்பவிலை. தான் உயிர்த்தபின்பு மகதலா மரியாவுக்குத் தோன்றினார். மகதலா மரியா சீடர்களிடம் அதைச் சொன்னபோதும் நம்பவில்லை. தொடர்ந்து வயல்வழியே நடந்துசென்ற இரண்டு சீடர்களுக்கு இயேசு தோன்ற (மாற் 16: 13; லூக் 24: 33-35), அவர்கள் அதை மற்ற சீடர்களுக்கு எடுத்துச் சொன்னபோதும் நம்பாமல், கடின உள்ளத்தோடு இருந்தார்கள். இப்படிப்பட்டச் சூழ்நிலையில், சீடர்கள் அனைவரும் கூடியிருக்கையில் இயேசு அவர்களுக்கு முன்பாகத் தோன்றி, அவர்களுடைய நம்பிக்கையின்மைக் கடிந்துகொள்கின்றார்.

இந்நிகழ்ச்சியை மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றபோது, சீடர்கள் நம்பிக்கை இல்லாமல் இருந்தததால், இயேசு அவர்களுடைய நம்பிக்கையின்மைக் கடிந்துகொள்கின்றார் என்று பதிவுசெய்கின்றார். இங்கே குறிப்பிடப்படும் நம்பிக்கையின்மை என்பது, இயேசு தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்று போதித்தபோது, அவர்கள் எப்படி நம்பிக்கையின்றி இருந்தார்களோ (மாற் 6:6) அவர்களைப் போன்று இயேசுவின் சீடர்கள் இருந்தார்கள் என்று மாற்கு நற்செய்தியாளர் பதிவுசெய்கிறார். இயேசுவின் சொந்த ஊர்க்காரர்களாவது இயேசுவைக் குறித்து முழுமையாக அறியாதவர்கள். ஆனால், இயேசுவின் சீடர்கள் அப்படியில்லை. அவர்கள் அவரோடு இருந்தார்கள்; அவர்களோடு உண்டார்கள்; அவரோடு எங்கும் சென்றார்கள். அப்படியிருந்தும் அவர்கள் இயேசு உயிர்த்ததை நம்பாமல் இருந்ததுதான் வியப்பாக இருக்கின்றது.

நற்செய்தியின் தூதுவர்களாக இருக்க அழைப்பு

இயேசு சீடர்களுடைய நம்பிக்கையின்மையைக் கடிந்துகொண்ட பிறகு அவர்களிடம், உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்ற அழைப்பைத் தருகின்றார். என்னதான் சீடர்கள் குறைபாடோடு இருந்தாலும், அவர்களை நம்பி இயேசு மிகப்பெரிய பொறுப்பினை ஒப்படைப்பது என்பது அவர் அவர்கள்மீது வைத்திருக்கும் உறுதியாக நம்பிக்கையை எடுத்துக் காட்டுகின்றது. இதன்மூலம் நாம் இறைவன்மீது நம்பிக்கை வைக்கிறோமோ இல்லையோ, இறைவன் நம்மீது உறுதியாக வைத்திருக்கின்றார் என்பது உறுதியாகின்றது.

சிந்தனை

'ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்' (யோவா 20:27) என்று இயேசு தோமாவிடம் கூறுவார். இது தோமாவிற்குக் கொடுக்கப்பட்ட அழைப்பு மட்டும் கிடையாது, நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட அழைப்பு. ஆகவே, நாம் உயிர்த்த ஆண்டவரிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அது மட்டுமல்லாமல், அவர் விடுக்கின்ற அழைப்பான, 'நற்செய்தியின் சாட்சிகளாக' விளங்கும் அழைப்பினை ஏற்று, இயேசுவின் நற்செய்தி எல்லாருக்கும் அறிவிப்போம். இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
முதல் வாசகம் (திருத்தூதர் பணிகள் 4:13-21)

கல்வியறிவற்றவர்கள்


நாம் ஒருவரோடு கொள்ளும் அறிமுகம் அல்லது நெருக்கம் நம் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது நிதர்சனமான உண்மை.

எடுத்துக்காட்டாக, நான் இரயிலில் பயணம் செய்கிறேன். என் அருகில் இருப்பவர் முதலில் அந்நியராக இருக்கிறார். நான் பேச்சுக் கொடுக்க கொடுக்க அவர் பக்கத்து மாநிலத்தில் உள்ள ஒரு மறைமாவட்டத்தின் ஆயர் எனத் தெரிகிறார் என வைத்துக்கொள்வோம். என் அணுகுமுறையில் உடனடியாக மாற்றம் வந்துவிடுகிறது. நான் அவருக்குத் தேவையானவற்றைச் செய்ய ஆரம்பிக்கிறேன். அவருக்கு வசதிகள் செய்து கொடுக்கிறேன். இன்னும் பல.

அதே வேளையில், என்னைக் காண ஒருவர் வருகிறார். அவர் பார்ப்பதற்குப் பகட்டாக இருக்கிறார். நான் அவரை முக்கியமானவர் எனக் கருதி ஆவண செய்கிறேன். கொஞ்ச நேர அறிமுகத்தில் அவர் ஓர் ஏமாற்றுப்பேர்வழி எனத் தெரிந்தால், அல்லது அவர் சாதாரணமானவர் எனத் தெரிந்தால் உடனடியாக என் அணுகுமுறையிலும் மாற்றம் வந்துவிடுகிறது.

இவ்வாறாக, ஒருவரின் அறிமுகத்திற்கும் அணுகுமுறைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

எருசலேம் நகரில் போதித்துக்கொண்டிருந்த பேதுருவையும், யோவானையும் பார்த்து மக்கள் வியக்கின்றனர். அவர்கள் பெற்ற விவிலிய மற்றும் இறையயில் நுண்புலம் கண்டு பாராட்டுகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு தலைமைச்சங்கத்திற்கு அழைத்துவரப்பட்டபோது காவலர்களும் அவர்கள்மேல் மிகவே அக்கறை காட்டுகின்றனர். ஆனால், 'அவர்கள் கல்வியறிவற்றவர்கள், சாதாரண மீனவர்கள்' என்று தெரிந்தவுடன் அவர்களின் அணுகுமுறை அப்படியே மாறுகிறது. திருத்தூதர்களை நையப்புடைக்குமாறும், அடிக்குமாறும் கையளிக்கின்றனர்.

இருந்தாலும், திருத்தூதர்கள் தங்கள் மனவுறுதியில் நிலைத்துநிற்கின்றனர்.

ஆக, மற்றவர் நம்மோடு கொண்டு அறிமுகத்தால் நம்மை ஏற்றி வைத்தாலும், இறக்கி வைத்தாலும் நாம் நம் தான்மையில் உறுதியாக இருக்க நாளைய முதல் வாசகம் அழைப்பு விடுக்கிறது.


- Fr. Yesu Karunanidhi, Archdiocese of Madurai.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================
மாற்கு 16: 9-15

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள்

ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்து விண்ணகம் சென்றபோது, விண்ணகத்தில் இருந்த வானதூதர்கள் எல்லாரும் அவரை இன்முகத்தோடு வரவேற்றார்கள். அப்போது வானதூதர்களில் ஒருவர் இயேசுவிடம், "ஆண்டவரே! நீர் மண்ணகத்திற்கு எதற்காகச் சென்றீரோ, அந்தப் பணி நிறைவடைந்துவிட்டதா?" என்றார். அதற்கு இயேசு அந்த வானதூதரிடம், "இன்னும் முடிக்கவேண்டிய பணிகள் கொஞ்சம் இருக்கின்றன. அதற்காகத்தான் என்னுடைய சீடர்களை - நற்செய்திப் பணியாளர்களை அங்கு விட்டு வந்திருக்கிறேன், அவர்கள் என் சார்பாக அந்தப் பணிகளைச் செய்து முடிப்பார்கள்" என்றார்.

வானதூதரோ இயேசுவிடம் மீண்டுமாக, "ஒருவேளை நீர் நியமித்து வந்திருக்கின்ற சீடர்களாலும், நற்செய்திப் பணியாளர்களாலும் அந்த பணியைச் செய்ய முடியாது போனால், அப்போது நீர் என்ன செய்வீர்" என்றார். "ஒருவேளை நான் ஒப்படைத்து வந்திருக்கின்ற பணியை அவர்களால் செய்ய முடியாது போனால், என்னிடத்தில் வேறு திட்டங்கள் எதுவும் இல்லை" என்றார் இயேசு.

நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசு நம்மிடத்தில் விட்டுச் சென்றிருக்கின்ற நற்செய்தி அறிவிப்புப் பணியை முழு மனதோடு செய்யவேண்டும் என்பதைத்தான் இந்த நிகழ்வு எடுத்துக்கூறுகின்றது. Gisbert Kranz என்ற எழுத்தாளர் எழுதிய இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களுக்குத் தோன்றுகின்றார். அவ்வாறு தோன்றுகின்றபோது அவர் அவர்களுக்குக் கொடுக்கின்ற அழைப்புதான், "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுகள்" என்பதாகும். இயேசுவின் அழைப்பை ஏற்று சீடர்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவித்தார்கள். அவர்கள் ஆற்றிய நற்செய்திப் பணியினால்தான் இன்றைக்கு நாம் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம். சீடர்கள் செய்த அதே நற்செய்தி அறிவிப்புப் பணியை இன்றைக்கு நாமும் செய்ய வேண்டும் என்பதுதான் நமக்கு முன்பாக சவாலாக இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் நற்செய்திப் பணியை செய்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இயேசுவின் நற்செய்திப் பணியைச் செய்கின்றபோது ஆண்டவர் இயேசு தன்னுடைய பணியாளர்களுக்கு சீடர்களுக்குத் - தருகின்ற வல்லமையும் ஆற்றலும் உடனிருப்பும் மிகவும் அளப்பெரியதக இருக்கின்றது. மாற்கு நற்செய்தியின் இறுதிப் பகுதியில் இயேசு சொல்கிறார், "நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் பின் வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்". ஆம், இயேசு தன்னுடைய பணியைச் செய்கின்ற ஒவ்வொருவரும் தருகின்ற ஆசிர்வாதம் அளப்பெரியது.

அது மட்டுமல்லாமல் இயேசு தன்னுடைய பணியைச் செய்கின்ற ஒவ்வொருவரோடும் இறுதி வரைக்கும் உடனிருக்கிறார் என்ற வாக்குறிதியையும் தருகின்றார். மத்தேயு நற்செய்தி 28:20 ல் அதைதான் வாசிக்கின்றோம். ஆகையால், நற்செய்திப் பணியைச் செய்கின்ற யாரும் தனியாள் கிடையாது, அவர்களோடு ஆண்டவராகிய கடவுள் என்றும் உடனிருந்து அவர்களைக் காப்பாற்றுகின்றார் என்பதுதான் நிதர்சன உண்மை.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் குருவானவர் ஒருவர் மறைபோதகப் பணியையும் சமூகப் பணியையும் செய்து வந்தார். இதனால் நிறைய மக்கள் கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றியதோடு மட்டுமல்லாமல், சமூகத்தில் அவர்களுடைய வாழ்வு உயர்ந்தது. இது பிடிக்காத ஒருசில கயவர்கள் குருவானவர் தூங்குகின்ற நேரத்தில் அவருடைய அறைக்குள் புகுந்து அவரை கொன்றுபோட்டு விடலாம் எனத் திட்டம் தீட்டினார்கள். அதன்படியே அவர்கள் குருவானவர் தூங்கிய பிறகு கையில் ஆயுதங்களோடு அவர் இருந்த இடத்திற்கு வந்தார்கள்.

அப்போது வானதூதர் ஒருவர் கையில் பெரிய வாளை ஏந்திக்கொண்டு குருவானார் இல்லத்திற்கு முன்பாக நின்று அவரைக் காவல் காத்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த அந்த கயவர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். இது எதுவும் குருவானவருக்குத் தெரியாது. அடுத்தநாள் அவர் எழுந்து வழக்கம்போல மக்களுக்கு மத்தியில் மறைபோதகப் பணியைச் செய்யப் போகும்போதுதான் அவர்கள் இரவில் நடந்தது அனைத்தையும் சொன்னார்கள். அப்போதுதான் குருவானார் தான் இறைவனால் எப்படி காப்பற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டார்.

இறைப்பணி செய்கின்ற ஒவ்வொருவரையும் இறைவன் தன்னுடைய கரத்தில் ஏந்தி காக்கின்றார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது.

ஆகவே, இயேசு நம்மிடத்தில் விட்டுச் சென்று நற்செய்திப் பணியை தொடர்ந்து செய்வோம், இறைவனின் பாதுகாப்பு எப்போதும் நம்மோடு இருக்கின்றது என்பதை உணர்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!