Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         10 ஆகஸ்ட் 2019  
                                    பொதுக்காலம் 18ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் திருத்தொண்டர் தூய லாரன்ஸ் விழா
=================================================================================
முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 6-10

சகோதரர் சகோதரிகளே, குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானது எல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார்.

"ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச்செய்து அறச்செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா
=================================================================================
112: 1-2. 5-6. 7-8. 9 (பல்லவி: 5ய)

பல்லவி: மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்.

1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். பல்லவி

5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். 6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். பல்லவி

7 தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். 8 அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. பல்லவி

9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 8: 12bc

அல்லேலூயா, அல்லேலூயா! என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26


அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.

எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
திருத்தொண்டர் தூய லாரன்ஸ் விழா

இன்று திருச்சபையானது தூய லாரன்ஸின் விழாவைக் கொண்டாடுகின்றது. தொடக்கத் திருச்சபையில் மிகவும் பேரும், புகழும் கொண்டு இருந்த புனிதர்களில் தூய லாரன்சும் ஒருவர் என்பதை இங்கே நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

திருத்தொண்டர் லாரன்ஸ் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புனிதர். இவர் திருத்தந்தை இரண்டாம் சிக்துஸ் என்பவரிடத்தில் திருத்தொண்டராகப் பணிபுரிந்தார். அந்நாட்களில் (கி.பி. 254) உரோமையை வலேரியான் என்பவன் ஆண்டு வந்தான். அவன் தொடக்கத்தில் கிறிஸ்தவர்கள் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தான். ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவனுடைய நண்பன் மக்ரியன் அரசனுடைய மனதை மாற்றி கிறிஸ்தவ குருக்களை சிலைகளுக்கு பலி செலுத்த வேண்டும் என்றும், அவர்களைத் துன்புறுத்தத் என்றும் கட்டாயப் படுத்தினான். அதன்படி அரசன் வலேரியான் கிறிஸ்தவர்களை துன்புறுத்தத் தொடங்கினான்.

256 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் சிக்துஸ் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அரசன், திருத்தந்தையையும், அங்கே இருந்த மற்ற ஆறு திருத்தொண்டர்களையும் வெட்டி வீழ்த்தினான். இதைப் பார்த்த திருத்தொண்டர் லாரன்ஸ், திருத்தந்தை அவர்களே, உம்மைப் போன்று நான் எப்போது மறைசாட்சியாக உயிர்துறப்பது? என்று கேட்டபோது, அவர், இன்னும் மூன்று நாட்களுக்குப் பின் என்னைப் போன்று நீ மறைசாட்சியாக் உயிர்துறப்பாய் என்றார். இது நடந்தது ஆகஸ்டு 06 ஆம் தேதி.

அதன்பிறகு மூன்று நாட்கள் கழித்து (ஆகஸ்டு 10) அரசன் வலேரியான் திருத்தொண்டர் லாரன்சிடம், திருச்சபையின் சொத்துகளையெல்லாம் என்னிடத்தில் ஒப்படை என்று ஆணையிட்டார். அதற்கு திருத்தொண்டர் திருச்சபையின் சொத்துகளை எல்லாம் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, அந்த ஏழைகளை எல்லாம் அரசருக்கு முன்பாக வந்து நிறுத்தி, இவர்களே திருச்சபையின் சொத்துகள் என்றான்.

இதைக் கேட்ட அரசன் கொதித்தெழுந்தான். திருத்தொண்டர் தன்னை இழிவுபடுத்திவிட்டார் என்று சொல்லி அவரை ஒரு இரும்புக் கட்டிலில் படுக்க வைத்து, அதற்கு கீழே நெருப்பை மூட்டினான். திருத்தொண்டர் லாரன்ஸோ எதைப் பற்றியும் கவலைப்படாது, துன்பத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். சிறுது நேரம் கழித்து, அவர் அங்கே இருந்த படைவீரர்களிடம், என்னுடைய உடம்பில் ஒரு பக்கம் நன்றாக எரிந்துவிட்டது, இன்னொரு பக்கமும் வேகும்படியாக என்னுடைய உடலைத் திருப்பிப் போடுங்கள் என்றார். அதன்படியே அவர்கள் அவரது உடலைத் திருப்பிப்போட்டார்கள். திருத்தொண்டர் லாரன்ஸ் அந்த கட்டிலிலே எரிந்து இறந்து போனார்.

இப்படியாக திருத்தொண்டர் லாரன்ஸ் கிறிஸ்துவின் விழுமியங்களின் படி வாழ்ந்து, கிறிஸ்துவுக்காக தன்னுடைய உயிரையும் துறந்தார். இவருடைய கல்லறையின் மீது பெரிய கொன்ஸ்தாந்தி நோபுள் என்ற மன்னன் ஒரு சிறிய ஆலயம் எழுப்பினான். அதன்பிறகு வந்தவர்கள் அந்த ஆலயத்தை மிகவும் அழகுற கட்டியெழுப்பினார்கள்.

திருத்தொண்டர் தூய லாரன்ஸின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவரது விழா நமக்கு என்ன செய்தியை தருகிறது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். முதலாவதாக தூய லாரன்ஸ் ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய இன்னுயிரையும் துறந்தார். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான் அது மிகுந்த விளைச்சலை அளிக்கும் என்பார். தூய லாரன்சை இயேசு சொன்னதற்கு ஏற்ப தன்னுடைய உயிரை தியாகமாகத் தந்தார். அதனால்தான் அவர் இன்றைக்கும் நமக்கு விசுவாசத்தின் சிறந்த முன்மாதிரியாக இருக்கின்றார். இயேசுவின் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் அவரைப் போன்று இயேசுவுக்காக நம்முடைய உயிரையும் துறக்க முன்வரவேண்டும்.

இரண்டாவதாக தூய லாரன்ஸ் கொடுத்து வாழ்வதற்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றார். திருச்சபையின் சொத்துகளை ஏழை, எளியவருக்கு வாரி வழங்கினார். அவர்களையே திருச்சபையின் மிகப்பெரிய சொத்து என்று அழைத்தார். அவரது விழாவைக் கொண்டாடும் நம்மிடத்தில் கொடுக்கும் மனநிலை இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம், மன வருத்தத்தோடோ, கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். கடவுள் அவர்களை எல்லா நலன்களாலும் நிரப்புவார் என்று. ஆகவே, நாம் நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுப்பதில் சிறந்தவர்களாக விளங்குவோம்.

நம்முடைய இந்தியத் திருநாட்டில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்ட ஆங்கிலேய அதிகாரிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆங்கிலப் பொறியாளரான பென்னி குயிக் என்பவர்.

இவர் மதுரை, இராமநாதபுரம் போன்ற ஐந்து மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்படுவதையும், முல்லைப் பெரியாறு ஆற்று நீர் வீணாகக் கடலில் கலப்பதையும் கண்டார். உடனே அவர் இந்த நீரை சேமித்தால் வறட்சியால் பாதிக்கப்படும் இந்த ஐந்து மாவட்டங்களும் வளர்ச்சியடையுமே என்ற நல்ல எண்ணத்தில் முல்லை பெரியாறு ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்தார். அதற்காக ராணி விக்டோரியாவிடமிருந்து நிதியுதவியும் பெற்று பணியைத் தொடங்கினார்.

ஒருகட்டத்தில் இங்கிலாந்து அரசாங்கம் பணமில்லை என்று சொல்லி மறுத்துவிடவே, பென்னி குயிக் தன்னுடைய நாட்டிற்க்கு திரும்பிச் சென்று, தன்னிடம் இருந்த பணம், தன்னுடைய மனைவியின் நகைகள் எல்லாவற்றையும் வைத்து, முல்லை பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். அதன் நினைவாக உத்தம பாளையத்திலும், மதுரையில் உள்ள தல்லார்குளத்திலும் இவருக்கு சிலைகள் நிறுவப்பட்டிருக்கிறது.

பென்னி குயிக் தன்னுடைய சொத்துகளையே மக்களின் நலனுக்காக கொடுக்க முன்வந்தார் எப்படி திருத்தொண்டர் லாரன்ஸ் திருச்சபையின் சொத்துகளை ஏழை மக்களுக்காக கொடுக்க முன்வந்தாரோ அது போன்று.

ஆகவே, தூய லாரன்சின் விழாவைக் கொண்டாடும் நாமும், கிறிஸ்துவின் மீது கொண்ட விசுவாசத்தின் வெளிப்பாடாக நமது உயிரை இயேசுவுக்காக தர முன்வருவோம், நம்மிடம் இருப்பதை ஏழைகளுக்குத் தருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2 
=================================================================================
 தூய லாரன்ஸ் (ஆகஸ்ட் 10)

நிகழ்வு

உரோமை நகரை வலேரியான் என்ற கொடுங்கோலன் ஆட்சிசெய்த தருணம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகமான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. கிறிஸ்தவத் தலைவர்களைக் கொன்றுபோட்டால் கிறிஸ்தவர்கள் சிதறுண்டு போவார்கள் என்பதுதான் அவனுடைய எண்ணமாக இருந்தது. எனவே, அவன் அப்போது திருத்தந்தையாக இருந்த இரண்டாம் சிக்ஸ்துஸ் என்பவரை அவர் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது சிறைபிடித்துச் சென்றான். இதைப் பார்த்த, அவருடைய முதன்மைத் திருத்தொண்டராகிய லாரன்ஸ் திருத்தந்தையிடம், தூய தந்தையே! வழக்கமாக நீங்கள் எங்கு சென்றாலும் என்னையும் கூடவே அழைத்துச் செல்வீர்களே, இன்றைக்கு மட்டும் ஏன் நீங்கள் தனியாகச் செல்கிறீர்கள். அப்படி நான் என்ன பாவம் செய்தேன். தயவுசெய்து சொல்லுங்கள் என்றார். அதற்கு அவர், இன்னும் மூன்று நாட்கள் கழித்து என்னைப் போன்று நீயும் மறைசாட்சியாகக் கொல்லப்படுவதற்கு இழுத்துச் செல்லப்படுவாய், அதுவரை பொறுத்திரு மகனே என்றார்.

திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் மறைசாட்சியாகக் கொல்லப்பட இழுத்துச் செல்லப்பட்ட நாள் 258 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் நாள். அதிலிருந்து மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் பத்தாம் நாள் திருத்தொண்டர் லாரன்ஸ் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.

வாழ்க்கை வரலாறு

திருத்தொண்டர் லாரன்ஸ், ஸ்பெயின் நாட்டில் உள்ள ஹுஸ்கா (Huesca) என்னும் நகரில் பிறந்து, அங்கேயே வளர்ந்தார். ஒருசமயம் திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் மறைபோதகப் பணிக்காக அங்கு சென்றபோது லாரன்சை சந்தித்தார். அவர் பக்தியுள்ள, துடிப்புள்ள இளைஞராய் இருப்பதைப் பார்த்த திருத்தந்தை அவரைத் தன்னோடு உரோமை நகருக்கு அழைத்துக்கொண்டு வந்து முதன்மைத் திருத்தொண்டராக நியமித்தார்.

திருத்தொண்டராக மாறிய லாரன்சுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகள் இரண்டு. ஒன்று இயேசுவின் திருவுடலையும் திரு இரத்தைதையும் இறைமக்களுக்குக் கொடுப்பது. இரண்டாவது திருச்சபையின் சொத்துகளுக்குப் பொறுப்பாய் இருந்து, அவற்றை தேவைப்படும் ஏழை எளிய மக்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது. இந்த இரண்டு பணிகளையும் திருத்தொண்டரான லாரன்ஸ் சிறப்பாகச் செய்தார். இத்தகைய தருணத்தில்தான் கொடுங்கோலன் வலேரியன் திருச்சபைச் சொத்துகளை, திருப்பலிக்காக பயன்படுத்தப்படும் திருப்பண்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கச் சொன்னான். இதற்கிடையில் திருத்தந்தை சிக்ஸ்துஸ் என்பவரையும் அவரோடு சேர்த்து நான்கு திருத்தொண்டர்களையும் அவன் கொன்றுபோட்டான்.

திருச்சபையின் சொத்துகள், உடைமைகள் அனைத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்று அரசன் சொன்னதால், திருச்சபையின் உடமைகளுக்குப் பொறுப்பாய் இருந்த திருத்தொண்டர் லாரன்ஸ் வித்தியாசமான ஒரு காரியத்தைச் செய்தார். அது வேறொன்றுமில்லை, திருச்சபையின் உடைமைகள் அனைத்தையும் ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர், உடல் ஊனமுற்றோருக்குப் பகிர்ந்து கொடுத்தார். அரசன் திருத்தொண்டர் லாரன்சை அழைத்து, திருச்சபையின் சொத்துக்கள் எங்கே என்று கேட்டபோது, அவர் ஏழைகள், அனாதைகள், வறியவர்கள் போன்றோரை அழைத்து வந்து, இவர்கள்தான் திருச்சபையின் சொத்துக்கள் என்றார். இதைக் கேட்டு சினமடைந்த அரசன், அவரை ஒரு இரும்புக் கட்டிலில் கிடத்தி, அதன் அடியில் தீமூட்டச் சொன்னான். திருத்தொண்டர் லாரன்ஸ் தீயில் எரிந்தபோது, எதற்கும் பயப்படாமல் கடவுளைப் போற்றி புகழ்ந்துகொண்டிருந்தார். அவருடைய உடல் நன்றாக எரிந்துவிட்ட வேளையில், அங்கிருந்தவர்களைப் பார்த்து, என்னுடைய உடல் ஒரு பக்கம் நன்றாக எரிந்துவிட்டது. இன்னொரு பக்கம் சரியாக எரியவில்லை, அதனால் என்னுடைய உடலைத் திருப்பிப் போடுங்கள் என்றார். இதைக் கேட்ட அரசனும் அங்கிருந்தவர்களும் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். லாரன்ஸ் இறுதி வரைக்கும் இறைவனைப் போற்றி புகழ்ந்துகொண்டே தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

இறந்த லாரன்சை காம்போ வேறோனாவில் அடக்கம் செய்தார்கள். இந்த இடத்தில் மன்னன் கான்ஸ்டாண்டிநோபல் என்ற மன்னன் ஓர் ஆலயம் எழுப்பினான். ஆறாம் நூற்றாண்டில் திருத்தந்தை மூன்றாம் கொனோரியஸ் என்பவர் அதனை அழகுபடுத்தி மிகப்பெரிய பேராலயமாக மாற்றினார். இன்றைக்கு உரோமை நகரில் உள்ள ஏழு பேராலயங்களில் திருத்தொண்டர் லாரன்சின் பேராலயமும் ஒன்று.

கி.பி.4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியரான புருடேன்சியஸ், திருதொண்டராகிய லாரன்சின் மன்றாட்டினால்தான் உரோமை நகரானது ஒளிபெற்றது எனச் சொல்வார். அந்தளவுக்கு இவரின் வேண்டுதல் வல்லமை மிக்கதாக இருந்தது. அதேபோன்று தொடக்க திருச்சபையில் திருத்தொண்டர் லாரன்ஸ் திருத்தூதர்களான தூய பேதுரு, பவுல் போன்றோருக்கு இணையாக வைத்துப் பார்க்கப்பட்டர். அந்தளவுக்கு இவர் தொடக்க திருச்சபையில் மிகவும் பிரபலமாக இருந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

திருத்தொண்டரான தூய லாரன்சின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


இறைவன்மீது அன்பு

தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார், கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை பிரிக்கக்கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்கமுடியும்? (உரோ 8:35). ஆம், பவுலிடம் இவ்வார்த்தைகளுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கியவர் தூய லாரன்ஸ். அவர் ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட அன்பினால் எதையும், ஏன் தன்னுடைய உயிரையும் இழக்கத் துணிந்தார். கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படும் நாம், நம் திருத்தொண்டராகிய தூய லாரன்சை போன்று, கிறிஸ்துவுக்காக நம்முடைய உயிரையும் இழக்கத் துணிந்திருக்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தூய பேதுரு தன்னுடைய முதல் திருமுகத்தில் கூறுவார், எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைத்திருக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கின்றார். சிறுதுகாலத் துன்பங்களுக்குப் பின் அவர் உங்களைச் சீர்படுத்தி, உறுதிபடுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார் (1 5:10-11). ஆம், நாம் கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பினால் அவருக்காக நாம் துன்பங்களை ஏற்றுகொள்ளும்போது அவர் நம்மை மகிமைப்படுத்துவார் என்பது உறுதி.


அடுத்தவர்மீது அன்பு

திருத்தொண்டரான தூய லாரன்ஸ் இறைவன்மீது மட்டும் அன்பு கொண்டிருக்கவில்லை. அவர் தன்னோடு வாழ்ந்த சக மனிதர்களிடத்திலும் குறிப்பாக ஏழை எளிய மக்களிடத்திலும் அன்பு கொண்டிருந்தார். அவர்களுக்காக திருச்சபையின் உடைமைகளைப் பகிர்ந்து கொடுத்தார். தூய லாரான்சைப் போன்று நாம் நம்மோடு வாழும் ஏழை எளிய மக்களிடத்தில் அன்பு கொண்டு வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் இயேசு சொல்வார், மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று (மத் 25:40). ஆகவே, நாம் எளியவருக்கு ஒன்று கொடுக்கின்றபோது, அது இறைவனுக்கே கொடுப்பதற்கு சமமாக இருக்கின்றது. எனவே, நாம் எளியவருக்கு கொடுத்து வாழ்ந்து அதன்வழியாக இறைவனுக்கு கொடுத்துவாழும் மக்கள் ஆவோம்.

2016 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 15 ஆம் தேதி பத்திரிகையில் வந்த செய்தி. மோடி அரசாங்கம் 500, 1000 நோட்டுங்களை செல்லாது என்று அறிவித்திருந்த தருணம். அப்போது கொச்சி அருகே காக்கநாடு மார்ட்டின் சீரோ மலபார் கிறிஸ்தவ ஆலயத்தில் பங்குத்தந்தையாக இருந்தவர், ஞாயிறு காலைத் திருப்பலி முடிந்த பின் ஆலயத்தில் கூடி இருந்த மக்களை உற்று நோக்கினார். அவர்கள் முகத்தில் வெளிப்படையாக தெரிந்த கவலையை அவர் கண்கள் கண்டுகொண்டன. அப்போது அவர் அவர்களிடம் அன்பானவர்களே! நமது ஆலயத்தின் உண்டியல் இன்று பிற்பகலுக்கு பின் திறக்கப்படும், பணம் தேவைப்படுபவர்கள், தங்கள் தேவைக்கு ஏற்ப உண்டியலில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம், நீங்கள் எடுத்த பணத்தை உங்களுக்கு எப்போது பணம் கிடைக்கிறதோ, அப்போது உண்டியலில் போட்டால் போதும். அவ்வளவுதான்! என்றார்.

பங்குத்தந்தையின் இவ்வறிவிப்பைக் கேட்ட அனைத்து மக்களும் ஒன்று திரண்டனர் .
உண்டியல் திறக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களுக்குள், உண்டியலில் இருந்த ரூ.500, 1000 நோட்டுகள் தவிர மீதி இருந்த அத்தனை பணமும் காலியாகிவிட்டது. ஏன் சுவாமி இப்படி செய்தீர்கள்? என்று ஒருசிலர் அவரிடம் கேட்டதற்கு, அவர் கண் கலங்க சொன்ன பதில்: என்ன செய்வது? இந்த பகுதியில் உள்ள சாதாரண மக்கள் அரிசி வாங்கக்கூட சில்லறை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அரிசி இல்லாமல் சிரமப்படும்போது, ஆண்டவருக்காக உண்டியலில் லட்சக்கணக்கான பணம் இருந்து என்ன பயன்?. மீண்டுமாக அவர்கள் அவரிடம் சரி சுவாமி யார் யார் எவ்வளவு எடுத்துச் சென்று இருக்கிறார்கள் என்பது எப்படித் தெரியும்? என்று கேட்டதற்கு அவர், தெரியாதுதான். அதற்கான கணக்கையும் நான் வைத்து கொள்ளவில்லை. இறை நம்பிக்கை உள்ள எல்லோரும், தாங்கள் எடுத்த பணத்தை உண்டியலில் திரும்பவும் கொண்டுவந்து போடுவார்கள் என்ற நம்பிக்கை
எனக்கு இருக்கிறது என்றார்.

இக்கட்டான சூழலில் ஏழைகள்மீது கரிசனையோடும் அன்போடும் செயல்பட்ட அந்த பங்குத்தந்தையின் செயல்பாடு உண்மையிலே பாராட்டுக்குரியது. நம்மிலும் அத்தகைய எண்ணம் வளரும்போது நாமும் உண்மையான கிறிஸ்தவர்கள் ஆவோம்.

ஆகவே, தூய லாரன்சின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நாமும் அவரைப் போன்று இறைவனையும் நம்மோடு வாழும் சக மனிதர்களையும் அன்பு செய்யக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!