|
24 ஐனவரி 2018 |
|
பொதுக்காலத்தின்
3ஆம்
வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உன் வழித்தோன்றலை உனக்குப்பின் உயர்த்தி, அவனது அரசை நான்
நிலைநாட்டுவேன்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-17
அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது:
"நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச்
சொல்: "நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப் போகிறாயா?"
இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து நான் அழைத்துவந்தது முதல் இந்நாள்வரை
நான் ஒரு நிலையான இல்லத்தில் தங்கவில்லை; மாறாக, ஒரு நடமாடும்
கூடாரமே எனக்குத் தங்குமிடமாய் இருந்தது. இஸ்ரயேலர் அனைவரும்
சென்ற இடமெல்லாம் நானும் உடன் சென்றேன்.
அப்பொழுது என் மக்கள் இஸ்ரயேலைப் பேணும்படி குலத் தலைவர்களுக்குக்
கட்டளையிட்டிருந்தேன், அவர்களுள் எவரிடமாவது "எனக்காகக் கேதுரு
மரங்களால் ஒரு கோவில் கட்டாதது ஏன்?" என்று ஒரு வார்த்தை
சொல்லியிருப்பேனா? எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு
கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க
புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன்.
நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன்
எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும்
மனிதர்போல் நீ புகழுறச் செய்வேன்.
எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த
இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது
நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால்
அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட
மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன்.
மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார்.
உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு
துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின்
நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். எனது பெயருக்காக
கோவில் கட்ட இருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலை
நிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு
மகனாக இருப்பான். அவன் தவறு செய்யும்போது மனித இயல்புக்கேற்ப
அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். உன் முன்பாக
நான் சவுலை விலக்கியதுபோல், என் பேரன்பினின்று அவனை விலக்க
மாட்டேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும்
உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!"
மேற்கூறிய வெளிப்பாட்டின் வார்த்தைகள் அனைத்தையும் நாத்தான்
தாவீதுக்கு எடுத்துரைத்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
தி:பா:
89: 3-4. 26-27. 28-29 (பல்லவி: 28)
=================================================================================
பல்லவி: எனது பேரன்பு என்றும் நிலைக்கச் செய்வேன்.
3 "நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்து கொண்டேன்; என்
ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: 4 உன் வழிமரபை என்றென்றும்
நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக
நிலைத்திருக்கச் செய்வேன்." பல்லவி
26 "நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை" என்று அவன்
என்னை அழைப்பான். 27 நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்; மண்ணகத்தின்
மாபெரும் மன்னன் ஆக்குவேன். பல்லவி
28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு
நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும்
நிலைத்திருக்கும். 29 அவனது வழிமரபை என்றென்றும்
நிலைநிறுத்துவேன்; அவனது அரியணையை வான்வெளி உள்ளவரை நிலைக்கச்
செய்வேன். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையே விதை; அதை விதைப்பவர்
கிறிஸ்துவே; அவரைக் கண்டடைந்தவரோ என்றென்றும்
நிலைத்திருப்பார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-20
அக்காலத்தில் இயேசு மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார்.
மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில்
நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும்
கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக்
கற்பித்தார்.
அவர் அவர்களுக்குக் கற்பித்தது: "இதோ, கேளுங்கள். விதைப்பவர்
ஒருவர் விதைக்கச் சென்றார்.
அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள்
வந்து அவற்றை விழுங்கிவிட்டன.
வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில்
விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன.
ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப்
போயின.
மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள்
வளர்ந்து அவற்றை நெருக்கி விடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை.
ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை
முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும்
சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச்
செவியுள்ளோர் கேட்கட்டும்.""
அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து
இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்துகொண்டு, உவமைகளைப் பற்றி
அவரிடம் கேட்டார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், "இறையாட்சியின் மறைபொருளை அறிய
உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே
இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன.
எனவே அவர்கள் "ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி
கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமலும் காதால்
தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்" என்று கூறினார்.
மேலும் அவர் அவர்களை நோக்கி, "இந்த உவமை உங்களுக்குப்
புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள்
புரிந்துகொள்வீர்கள்?
விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த
விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால்
அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட
வார்த்தையை எடுத்துவிடுகிறான்.
பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள்
இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு
ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே
நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ
இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள்.
முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு
ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டும், உலகக் கவலையும் செல்வ
மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை
நெருக்கிவிடுவதால், பயன் அளிக்க மாட்டார்கள்.
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள்
இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள்.
இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும்
சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போம்
ஒரு ஜெபக்கூட்டத்தில் போதித்துக் கொண்டிருந்த போதகர், அங்கு வந்திருந்த
பெண்கள் பக்கம் திரும்பி, "இங்குள்ள பெண்களில் ஒருவர் தன் கணவனுடைய
வார்த்தைகளைக் கேட்டு நடப்பதில்லை, அவருக்கு சரியாகக் கீழ்ப்படிவதில்லை.
அவளை இப்போது உலகுக்கு அடையாளம் காட்டப்போகிறேன்... இந்த ஜெபமாலையை
இந்த கூட்டத்தில் வீசப்போகிறேன். அது அப்பெண்ணின் கழுத்தில்
சென்று விழும்" என்று கூறி செபமாலையைக் கையில் எடுத்தார். மறுகணம்
அக்கூட்டத்தில் இருந்த அனைத்துப் பெண்களும் ஜெபமாலை எங்கே தங்களுடைய
தலையில் விழுந்து விடுமோ என்று பயந்து தலையைக்
குனிந்துகொண்டார்கள். இதைப் பார்த்து போதகர் மட்டுமல்லாமல், அந்த
ஜெபக்கூட்டத்திற்கு ஆண்களும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்கள்
கணவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் மட்டுமல்ல, கடவுளுக்கும் கீழ்படியாத
மக்கள் இன்றைக்கு பெருகிப் போய்விட்டார்கள் என்பதுதான் வேதனை
கலந்த உண்மை.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விதைப்பவர் உவமையைப் பற்றிப்
பேசுகின்றார். விதைப்பவர் உவமை இறைவனின் வல்லமையுள்ள
வார்த்தையைக் குறித்தும் அதற்கு செவிமடுத்து வாழ்வோர் தங்களுடைய
வாழ்வில் எத்தகைய ஆசிர்வாதங்களைப் பெறுகிறார்கள் என்பதைக்
குறித்தும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. நாம் அதைக்
குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம். விதைப்பவர் உவமையில்
வழியோரம், பாறை நிலம், முட்செடி நிலம், நல்ல நிலம் என்று
நான்கு விதமான நிலங்கள் இடம்பெறுகின்றன. இந்த நான்குவிதமான நிலங்களும்
நான்குவிதமான மனிதர்களைக் குறித்துப் பேசுகின்றது.
முதலில் வருகின்ற வழியோர நிலம். இறைவார்த்தைக்கு சிறிதளவேனும்
செவி கொடுக்காத மக்களினத்தைக் குறித்துப் பேசுகின்றது. இந்த வழியோர
நிலம் போன்று இருக்கக்கூடிய மக்களுக்கு உதாரணமாக இருப்பவர்கள்
பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் ஆவர். இவர்கள் இயேசுவின்
வார்த்தையைக் கேட்டாலும் கேளாதவர்களாகவே இருந்தார்கள். அது எப்படி
கேட்டும் கேளாமல் இருந்தார்கள் என்று பார்த்தோமென்றால், அவர்கள்
இயேசுவின் போதனைகளில் குற்றம் காண்பதற்காக அவருடைய போதனையைக்
கேட்டார்களே ஒழிய, உண்மையான மனநிலையோடு போதனைக் கேட்கவில்லை.
எனவே, அவர்களுக்கு இறைவார்த்தை பயனளிக்கவில்லை.
உவமையில் வருகின்ற இரண்டாவது நிலம் மண்ணில்லா பாறை நிலம். இந்த
நிலத்தில் விழுகின்ற விதைகள் தொடக்கத்தில் நன்றாக வளர்ந்தாலும்
நிலத்தில் வேரூன்ற முடியாததினால் அவை விரைவிலே கருகிப்போய்விடும்.
இந்தப் பாறைநிலம் போன்றவர்களுக்கு மிகப் பெரிய உதாரணம் இயேசுவின்
போதனையைக் கேட்டு வந்த மக்களைச் சொல்லலாம். இம்மக்கள் இயேசு எங்கு
சென்றாலும் அவருடைய போதனையைக் கேட்கச் சென்றார்கள், ஆனால் அவர்கள்
வேரற்றவர்களாக இருந்தார்கள். இல்லையென்றால் இவர்கள்,
"எங்களுக்குப் பரபாதான் வேண்டும், இவனைச் சிலுவை அறையுங்கள்"
என்று சொல்லியிருக்கமாட்டார்களே!
விதைப்பவர் உவமையில் வருகின்ற மூன்றாவது நிலம் முட்செடி நிலம்.
இந்நிலத்தில் விழுகின்ற விதைகள் தொடக்கத்தில் நன்றாக வளர்ந்து
உயரும். ஆனால் கூடவே வருகின்ற முட்செடிகள் வளர்ந்து வருகின்ற
செடிகளைத் தாக்கி அவற்றை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.
முட்செடி நிலம் போன்று மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள்
இறைவார்த்தையைக் கேட்டு தியானிப்பார்கள். ஆனால், உலகக் கவலைகள்
அவர்களை வாட்டுவதால் அவர்கள் பலன் தரமுடியாமலே போய்விடுவார்கள்.
நற்செய்தியில் இடம்பெறுகின்ற இயேசுவைப் பின்பற்ற விரும்பிய பணக்கார
இளைஞன் இதற்கு நல்லதொரு உதாரணம். அவன் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து
வந்தான். அதே நேரத்தில் அவன் பணத்தையும் சிக்கெனப்
பிடித்துக்கொண்டிருந்தான். அதனால் அவனால் இயேசுவைப் பின்பற்றி
வரமுடியவில்லை.
உவமையில் வரக்கூடிய நான்காவது நிலம் நல்ல நிலம். நல்ல நிலத்தில்
விழுகின்ற விதைகள் முளைத்து வளர்ந்து, முப்பது மடங்காக, அறுபது
மடங்காக, ஏன் நூறு மடங்காகக்கூடப் பலன் கொடுக்கின்றன. நல்ல நிலம்
போன்று நிறையப் பேர் இருக்கின்றார்கள். அவர்கள் இறைவார்த்தையைக்
கேட்டு அதன்படி வாழக்கூடியவர்கள். இப்படிப்பட்டவர்களில் தலைசிறந்தவராக
இருக்கக்கூடியவர் நம் அன்னை மரியாதான். அன்னை மரியா இறைவார்த்தையைக்
கேட்டு, அதனை தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்
சிந்தித்து, அதனையே தன்னுடைய வாழ்வாக அமைத்துக்கொண்டார். அதனால்
இறைவனின் தாயாகின்ற பேற்றினைப் பெற்றார். நாமும் இறைவார்த்தைக்
கேட்டு, அதன்படி நம்முடைய வாழ்வை அமைத்துக்கொள்ளும்போது நூறு
மடங்கு பலன்தர முடியும் என்பது உறுதி.
ஆகவே, இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நம்முடைய வாழ்வை அமைத்துக்கொள்வோம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் ஆவோம்
அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்கு மூன்று மகன்கள். அவன் மக்கள்மீது
அளவுகடந்த அன்பும், பாசமும் கொண்டவன். இதனால் அவனுடைய ஆட்சியில்
மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று மகிழ்ந்திருந்தார்கள்.
ஒருநாள் அவன் நாட்டை ஆளுகின்ற பொறுப்பை தன்னுடைய மூன்று மகன்களிடமும்
(இளவரசர்களிடமும்) கொடுத்துவிட்டு, வெளிநாட்டுக்குப் பயணமானான்.
ஒருசில நாட்கள் கழித்து வெளிநாடு சென்ற அரசன் இறந்துவிட்டதாக
செய்தி வந்தது. இதைக்கேட்டு மூன்று இளவரசர்களும் கதறி அழுதார்கள்.
தந்தை இறந்த துக்கம் தாளாமல் ஒருவன் துறவியாகிப்போனான். இன்னொருவன்
தந்தையின் நினைவாக அவர் சிலை ஒன்று செய்து, அதை அனுதினமும் வணங்கிவந்தான்.
மற்றொருவன் தந்தை விட்டுச்சென்ற அறப்பணிகளைத் தொடர்ந்து செய்து
வந்தான். மக்களை ஒடுக்குகின்ற கொடிய சட்டங்களைத் தளர்த்தினான்.
எல்லா மக்களுக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைக்கும்படி
பார்த்துக்கொண்டான். இது தொடர்ந்தது.
ஆண்டுகள் பல உருண்டோடின. ஒருநாள் இறந்துபோனதாகச் சொல்லப்பட்ட
அரசர் திரும்பி வந்தார். அவரைப் பார்த்த மக்கள் அனைவரும் மகிழ்ந்து
களிகூறினார்கள். பின்னர் அரசர் தன்னுடைய மூன்று மகன்களும் என்ன
செய்கிறார்கள் என்று பார்க்க விரும்பினார். ஒருவர் துறவியாகப்
போனதையும், இன்னொருவர் தன்னுடைய உருவத்தை சிலையாய் வடித்து,
வணங்கி வருதையும் எண்ணி மனம் வருந்தினார். ஆனால் இளைய மகன் மட்டும்
தான் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்து செய்துவருவதை எண்ணி மகிழ்ச்சியடைந்தார்.
உடனே அரசர் தனக்குப்பின் நாட்டை ஆளக்கூடிய எல்லாப் பொறுப்பும்
அவனுக்கே இருக்கிறது என்று சொல்லி, அவனை அரசராக மணிமுடி
சூட்டினார்.
தந்தையின் விருப்பத்தை, அவருடைய வார்த்தைகளைக் கடைப்பிடிக்கின்றவருக்கே
எல்லா ஆசிர்வாதமும் கிடைக்கும் என்பதை இக்கதையானது அருமையாக எடுத்துரைக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கூறுகின்ற விதைப்பவர் உவமையும்
கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடப்போரை கடவுள்
நிறைவாய் ஆசிர்வதிப்பார் என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் நடைமுறை வாழ்வில் நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி
நடக்கின்றோமா? என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்று.
பலநேரங்களில் வழியோரத்தில் விழுந்த விதை போன்றோ, அல்லது பாறைநிலத்தில்
விழுந்த விதை போன்றோ அல்லது முட்செடி நடுவே விழுந்த விதைபோன்றோ
அதிக பலன்தரமால் போய்விடுகின்றோம். அதற்கு அடிப்படைக் காரணம்,
நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதை அப்படியே காற்றோடு காற்றாக
விட்டுவிடுவதுதான். அதனால்தான் நாம் கடவுள் தரும் ஆசிர்வததைப்
பெறமுடியாமல் போய்விடுகின்றோம்.
யாக்கோபு புத்தகம் 1:22 ல் வாசிக்கின்றோம், இறைவார்த்தையைக்
கேட்பவர்களாக மட்டும் இருந்து உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்ள
வேண்டும். அதன்படி நடப்பவர்களாகவும் இருங்கள் என்று. நாம் ஒவ்வொருவருமே
இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடப்பவர்களாகவும் இருப்போம்.
ஆகவே நாம் இறைவார்த்தையை மறந்து, உலகக் காரியங்களில் மூழ்கிப்
போகாமல், இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போம். அப்போது இறைவன்
நம்மை முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காக ஆசிர்வதிப்பார்.
இறையருள் நிறைவாய் தருவார்.
Maria Antony, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
இனி எல்லாம் சுகமே!
மனித வழக்கம்
மனித வழக்கம் இதுவல்லவே!
தாவீது இறைவனுக்கு ஆலயம் கட்ட வேண்டும் என நினைத்துக்
கொண்டிருக்க, நாத்தான் இறைவாக்கினரை அவரிடம் அனுப்புகின்ற கடவுள்,
தானே தாவீதுக்கு வீடு ஒன்றை, அதாவது சந்ததி ஒன்றைக் கட்டி எழுப்புவதாக
வாக்களிக்கின்றார்.
இதைக் கேட்டவுடன் ஆண்டவரின் இல்லத்திற்கு ஓடிச் செல்கின்ற
தாவீது பாடும் நன்றிப்பாடலே நாளைய முதல் வாசகம் (2 சாமு
7:18-27)
ஆண்டவர் இதுவரை தமக்கும், தம் வீட்டாருக்கும் செய்த அனைத்தையும்
பட்டியல் போடுகின்றார் கடவுள்.
தாவீதின் பாடலை கொஞ்சம் அரசியல் கலந்து பார்ப்போம்.
நேற்று 67ஆம் குடியரசு தின விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.
கடந்த வருடம் நம்ம பிக் பிரதர் ஒபாமா. இந்த வருடம் பிரெஞ்சு அதிபர்
ஹாலந்தே.
நம் இந்திய பாதுகாப்பின் மேல் நம்பிக்கை இல்லாததால் என்னவோ,
தானே தன் இராணுவத்தை அழைத்துவந்திருந்தார். மேலும், அந்த இராணுவத்தை
நம் இராணுவத்தின் அணிவகுப்பில் சேர்த்ததுதான் கேலிக்கூத்து.
இன்னொரு கேலிக்கூத்து நம்ம ரஜனிக்கு பத்ம விபூஷன் விருது
கொடுத்தது. அவர் நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார். அவ்வளவுதான்.
மடையனுக! இதற்கெல்லாமா விருது கொடுப்பார்கள்? என்ன டயலாக் தனக்கு
கொடுக்கப்படுகிறதோ, அதை வாசித்து சம்பளம் வாங்கப்போகிறவர் அவர்.
அவர் பேசும் டயலாக்கினால் என் வீட்டில் அல்லது உங்கள் வீட்டில்
சோற்றுப்பானை பொங்கி வழியுமா? இன்னொரு கூத்து கேரளாவில். நடிகை
ஊர்வசியின் அக்கா கல்பனாவின் (அவரும் நடிகைதான்) அடக்கத்தின்
போது 21 குண்டுகள் முழங்க அரச மரியாதை வழங்கப்படுமாம். கலைக்கூத்தாடிகளின்
உலகம் ஆகிவிட்டது கண்ணம்மா!
திரிபுரா குடியரசு தின விழாவில் பங்கேற்ற பெண் அமைச்சர் ஒருவர்,
'எல்லாருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்' என முக்கா, முக்கா
மூணு தடவை சொல்லிவிட்டார். பாவம் புள்ள. பாதித்தூக்கத்துல
விழாவுக்கு வந்துருச்சு போல.
கடந்த வாரம் எஸ்.வி.எஸ். ஓமியோபதி கல்லூரி வளாக கிணற்றில்
குதித்து தற்கொலை செய்து கொண்ட மூன்று மாணவியர், நாம் வாழும்
குடியரசு என்னும் குட்டிச்சுவற்றைக் காட்டிவிட்டார்கள். தங்கள்
உரிமைக்காக அவர்கள் 19 அரசு எந்திரங்களிடம்
முறையிட்டிருக்கிறார்கள். யாரும் கண்டுகொள்ளவில்லை?
குடியரசு என்பது நம்ம ஊரில் தேர்தலோடு மட்டும் முடிந்துவிடுகிறது.
குடிமக்கள் ஓட்டு போடுகிறார்கள். ஆனால், அரசு என்னவோ விளம்பரதாரர்களுக்கும்,
வியாபாரிகளுக்கும்தான் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் இப்போது தேர்தல் காய்ச்சல் அடிக்கிறது. திராவிட கட்சிகள்
வழக்கம்போல ஒருவர் மற்றவரை வசைபாடிக்கொண்டும், தங்களைத் தாங்களே
துதி பாடிக்கொண்டும் இருக்கின்றனர். இந்த இரண்டு கட்சிகளும்
குடும்ப ஆட்சி நடத்துபவை என குற்றம் சுமத்துகின்றார் திருமா.
விஜயகாந்த் இன்னும் ஸ்டெடி ஆகவில்லை. சீமான் போன்றவர்கள் எப்படியாவது
அரசாண்டு பார்க்க நினைக்கிறார்கள்.
நம் எல்லாருக்கும் நடப்பது என்னவோ வேடிக்கையாகவே இருக்கிறது.
மேலே மோடி அடுத்த எந்த நாட்டிற்கு சுற்றுலா போவது என்று தெரியாமல்
விழித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் 60 ஆயிரம் கோடி
ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க பிரான்சுடன் ஒப்பந்தமாம்.
குடியரசு என்பது எட்டாக்கனியாக இருக்கிறது.
இந்த உலகிற்கு வருகிறோம். கொஞ்ச நாள் இருக்கிறோம். சுவடுகளே இல்லாமல்
சென்று விடுகிறோம்.
கொஞ்ச நாள் இருக்கும் இந்த கொஞ்சப் பொழுதில் எவ்வளவு பிரச்சினைகள்?
ரொம்ப பாவம் நாம்!
தாவீதுக்கு தானே ஒரு வீட்டைக் கட்டுவதாக வாக்களித்த இறைவன் ஏனோ,
நம் குடியரசை இந்த அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்றி நமக்கே
தர மறுக்கின்றார்.
Yesu Karunanidhi, Madurai. |
|