|
21 ஜனவரி 2019 |
|
பொதுக்காலம் இரண்டாம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இறைமகனாய் இருந்தும், துன்பங்கள்
வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-10
சகோதரர் சகோதரிகளே, தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும்
பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய
ஏற்படுத்தப் படுகிறார்.
அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாகியிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும்
நெறி தவறி நடப்போருக்கும் பரிவு காட்டக் கூடியவராய் இருக்கிறார்.
அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவதுபோல,
தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்.
மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை.
ஆரோனுக்கு வந்ததுபோன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வரவேண்டும்.
அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக்கொள்ளவில்லை.
"நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்" என்று
அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார்.
இவ்வாறே மற்றோரிடத்தில், "மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும்
குருவே" என்றும் கூறப்பட்டுள்ளது. அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில்,
தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி,
கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று
கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார்.
அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.
அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும்
மீட்படையக் காரணமானார். "மெல்கிசதேக்கின் முறைப்படி வந்த தலைமைக்
குரு" என்று கடவுள் அவருக்குப் பெயர் சூட்டினார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா: 110: 1. 2. 3. 4 (பல்லவி: 4a)
=================================================================================
பல்லவி: `மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும்
குருவே.'
1 ஆண்டவர் என் தலைவரிடம்,
'நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை
நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார். பல்லவி
2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச்
செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! பல்லவி
3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன்
உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல
உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். பல்லவி
4 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்று
ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை
மாற்றிக்கொள்ளார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
எபி 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல்
வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும்
சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மணமகன் விருந்தினரோடு இருக்கிறார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 18-22
யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்து வந்தனர். சிலர்
இயேசுவிடம், "யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும்
நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?"
என்று கேட்டனர்.
அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்கும்வரை
மணவிருந்தினர்கள் நோன்பு இருக்க முடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும்
காலமெல்லாம் அவர்கள் நோன்பு இருக்க முடியாது. ஆனால் மணமகன் அவர்களை
விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு
இருப்பார்கள்.
எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு
ஒட்டுப்போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்;
கிழிசலும் பெரிதாகும்.
அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி
வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச்
செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத்
தோற் பைகளுக்கே ஏற்றது" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எபிரேயர் 05: 01-10
தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் மீட்படையக் காரணமான இயேசு
நிகழ்வு
சிறுவன் ஒருவன் தன்னுடைய வீட்டுக்குப் பின்னால் இருந்த தோட்டத்தில்
அங்கும் இங்கும் ஓடியாடி, மரத்தில் ஏறி இறங்கி விளையாடிக்
கொண்டிருந்தான். மகன் தோட்டத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறான்
என்று பார்ப்பதற்காக, தற்செயலாக அங்கு வந்த அவனுடைய தந்தை,
"பிலிப்! சத்தம் போடாமல் இங்கு ஓடிவந்துவிடு" என்றார். அவனுக்கு
ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் தந்தை சொல்லிவிட்டாரே என்பதற்காக,
அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, மரத்திலிருந்து வேகமாகக்
கீழே இறங்கி, அவரிடத்தில் ஓடி வந்தான்.
அவரை அடைந்ததும் அவன் மூச்சிரைக்க அவரிடம், "ஏன்பா! என்னை ஓடிவரச்
சொன்னீர்கள்" என்று கேட்டான். அதற்கு அவனுடைய தந்தை அவனிடம்,
"தம்பி நீ நின்றுகொண்டிருந்த இடத்தை சற்று திரும்பிப் பார்" என்றார்.
அவன் திரும்பிப் பார்த்தபோது, பத்தடிக்கும் பெரிதான ஒரு மலைப்பாம்பு
அங்கே தொங்கிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்து மிரண்டுபோன அவன்,
"அப்பா! நான் மட்டும் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடந்திருக்காவிட்டால்,
இப்போது நான் உயிரோடு இருந்திருக்கமாட்டேன். என் உயிரைக்
காப்பாற்றியதர்காங்க ரொம்ப தேங்க்ஸ் பா" என்றான். அதற்கு அவனுடைய
தந்தை, "இன்றைக்கு மட்டுமல்லாம், என்றைக்கும் நீ என்னுடைய
வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அது உனக்கு நலம் பயக்கும்"
என்றார்.
எப்படி சிறுவன் பிலிப், தந்தையின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து,
சாவிலிருந்து தன்னைக் காத்துக்கொண்டானோ, அதுபோன்று நாமும் ஆண்டவரின்
வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவர் வழி நடந்தால், வாழ்வடைவது
உறுதி.
இயேசு - கீழ்ப்படிதலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு
கடவுளோடு, கடவுளாக இருந்த வார்த்தையாகிய இயேசு கிறிஸ்து, இந்த
உலகை மீட்கவேண்டும் என்ற தந்தையின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்தார்.
அதற்காக மனுவுரு எடுத்து, பாடுகள் பட்டு, சிலுவையில் அறையுண்டு
கொல்லப்பட்டார். தான் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதற்கு
முன்பாக, கெத்சமணித் தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்த்து,
"தந்தையே, உமக்கு விருப்பமானால் இந்த துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து
அகற்றும். ஆனாலும் என் விருப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்"
என்று ஜெபித்தார் (லூக் 22:42). இவ்வாறு கடைசிவரைக்கும் கடவுளின்
திருவுளத்திற்கு, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்து,
இயேசு கீழ்ப்படிதலுக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றார்.
தமக்குக் கீழ்ப்படிவோர் மீட்படையக் காரணமான இயேசு
தந்தைக் கடவுளின் திருவுளத்திற்கு/ அவருடைய வார்த்தைக்குக்
கீழ்ப்படிந்து நடந்து, கீழ்ப்படிதலுக்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாக
விளங்கும் இயேசு, தனக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் மீட்படையக்
காரணமாக இருக்கின்றார். இங்கே எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர்,
கீழ்ப்படிதல் என்று எதைச் சுட்டிக்காட்டுகின்றார்?, இயேசுவுக்குக்
கீழ்ப்படிந்து நடப்பதால் நாம் எப்படி மீட்பினைக்
பெற்றுக்கொள்கின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் நல்லது.
இங்கே கீழ்ப்படிதல் என்று சொல்லப்படுவதை, இறைவனின் வார்த்தையை
நம்பி, அதனை வாழ்வாக்குதல் என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம்.
இதை ஒட்டி தூய பேதுரு ஒரு செய்தியைச் சொல்வார், "உண்மைக்குக்
கீழ்ப்படிந்து உங்கள் ஆன்மா தூய்மையடைந்துள்ளதால், நீங்கள்
வெளிவேடமற்ற முறையில் அன்பு காட்ட முடியும்" என்று. (1 பேதுரு
1:22). இதன்மூலம் பேதுரு சொல்லக்கூடிய செய்தி, நாம் இறைவனுக்குக்
கீழ்ப்படிந்து நடப்பதன்மூலம் நம்முடைய ஆன்மா தூய்மை அடைகின்றது.
அதன்மூலம் நாம் ஒருவர் மற்றவரை உள்ளார்ந்த விதமாய் அன்பு காட்ட
முடியும்" என்று. எப்போது நாம் உண்மையான அன்பு காட்டுகின்றோமோ,
அப்போது நாம் இறைவன் வழங்குகின்ற மீட்பினைப் பெறுவதற்குத் தகுதி
உள்ளவர்கள் ஆகிவிடுவோம். ஆகையால், கீழ்ப்படிதல் என்ற ஒரு பண்பு,
நம்முடைய மீட்பிற்குக் காரணமாக இருக்கின்றது என்று சொன்னால் அது
மிகையாது.
தொடக்கத்தில் ஆதிப் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் ஆண்டவருடைய
வார்த்தைக்குக் கீழ்படியாமல் போனதால், பாவம் இந்த உலகத்திற்குள்
நுழைந்தது. ஆனால், அது மரியா ஆம் என்று சொல்லி, இறைவனுடைய
வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தனால், அவர் மகன் இயேசுவின்
வழியாக பாவத்திற்கும் சாவிற்கும் சாவுமணி அடிக்கப்பட்டது.
சிந்தனை
இன்றைக்கு யாரையும் மதிக்காமல், யாருக்கும் கீழ்ப்படியாமல் நடக்கின்ற
போக்கானது நிலவிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய போக்கு
முடிவுக்கு வரவேண்டும்; நாம் ஒவ்வொருவரும் இறைவனின்
வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்கின்றவர்களாக மாறவேண்டும்.
ஆகவே, நாம் இறைவனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்போம்.
அதன்வழியாக அவர் தருகின்ற மீட்பினையும் அருளையும் நிறைவாய்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 2:18-22
இயேசு எழுதிய புதிய சாசனம்
நிகழ்வு
ஒருசமயம் ஆராய்ச்சியாளர் ஒருவர் ஓர் அறையில் எட்டுக் குரங்குகளை
வைத்தார். பின்னர் அந்த அறையின் நடுவே கூரையிலிருந்து ஒரு
வாழைப்பழத் தாரைத் தொங்கவிட்டார். குரங்குகள் அந்த வாழைப்பழத்
தாரிலிருந்து பழங்களை எடுப்பதற்கு மிகவும் வசதியாக கூடவே ஒரு
ஏணியையும் வைத்தார்.
வாழைப்பழத் தாரைப் பார்த்ததும் ஒரு குரங்கு ஏணியில் வேகமாக ஏறியது.
அந்நேரத்தில் ஆராய்ச்சியாளர் மற்ற ஏழு குரங்குகளின்மீதும்
குளிர்ந்த நீரைப் பீய்ச்சியடித்தார். இது அவற்றைத் துன்பத்திற்கு
உள்ளாக்கியது.
ஒரு குரங்கு ஏணியில் ஏறி, வாழைப்பழத் தாரிலிருந்த பழங்களைப் பறித்துக்கொண்டு
வந்ததைப் பார்த்த இன்னொரு குரங்கு, ஏணியில் ஏறி வாழைப்பழத்
தாரிலிருந்து பழங்களைப் பறிக்க விரைந்தது. அப்போதும் ஆராய்ச்சியாளர்
மற்ற குரங்குகளின்மீது குளிர்ந்த நீரைப் பீய்ச்சியடித்தார். இது
அவற்றை இன்னும் அதிகமாக துன்பத்திற்கு உள்ளாக்கியது. இப்படியே
மூன்று நான்கு முறை அவர் தொடர்ந்ததும், ஏதாவது ஒரு குரங்கு ஏணியில்
ஏறி, பழத்தைப் பறிக்கத் தொடங்கினால், ஏனைய குரங்குகளின்மீது
குளிர்ந்த நீரானது பீச்சி அடைக்கப்படும் என்ற ஒருவிதமான பய உணர்வானது
அவைகளைத் தொற்றிக்கொண்டது. இதனால் ஒரு குரங்கு பழத்தைப் பறிக்க
முயற்சித்தால், மற்ற குரங்குகள் அதை அடித்து பழங்களை எடுக்கவிடாமல்
தடுக்கத் தொடங்கின.
சிறிதுநேரத்திற்குப் பின்பு ஆராய்ச்சியாளர் அந்த எட்டுக் குரங்கில்
ஒரு குரங்கை வெளியே எடுத்துவிட்டு புதிதாக ஒரு குரங்கை உள்ளே
விட்டார். இப்போது புதிதாக உள்ளே வந்த குரங்கு வாழைப்பழத்
தாரைக் கண்டதும், அதிலிருந்து பழங்களை எடுக்க ஏணியில் வேகமாக
ஏறத்தொடங்கியது. இதைக் கண்டதும் மற்ற குரங்குகள் அந்த புதிய குரங்கை
அடித்துக் கீழே இறக்கின (குளிர்ந்த நீர் பீய்ச்சி அடிக்கப்படாமலே).
தன்னை எதற்கு மற்ற குரங்கு அடிக்கின்றன என்று புரியாமலே அந்த
புதிய குரங்கு கீழே வந்தது. ஆனால் வாழைப்பழத்தை எடுத்தால் அடிவிழும்
என்பது மட்டும் அதற்கு நன்றாகப் புரிந்தது.
மீண்டும் ஆராய்ச்சியாளர் பழைய குரங்குகளிலிருந்து ஒரு குரங்கை
எடுத்து வெளியே விட்டுவிட்டு புதிய குரங்கு ஒன்றை உள்ளேவிட்டார்.
அதுவும் பழத்தைக் கண்டதும் பறிப்பதற்கு ஏணியில் வேகமாக ஏறியது.
ஆனால் அந்தக் குரங்கு பழத்தைப் பறித்தால், தங்கள்மீது
குளிர்ந்த நீர் பீய்ச்சப்படும் என்ற பயத்தில் புதிய குரங்கை மற்ற
குரங்குகள் அடித்துக் கீழே இறக்கின. இப்படியே பழைய குரங்குகள்
ஒவ்வொன்றாக வெளியே எடுத்துவிடப்பட்டு, புதிய குரங்குகள் உள்ளே
கொண்டுவரப்பட்டன. இப்போது ஏதாவது ஒரு குரங்கு பழத்தைப் பறிக்க
ஏணியில் ஏறினாலும்கூட, குளிர்ந்த நீர் பீய்ச்சியடிக்கப்படாமலே
அவை அந்தக் குரங்கை அடித்துக் கீழே தள்ளின.
குரங்குகளை வைத்து இப்படியோர் ஆராய்ச்சியைச் செய்து முடித்த அந்த
ஆராய்ச்சியாளர், "மனிதர்களும் இப்படித்தான் ஒரு விஷயத்தை ஏன்
செய்கிறோம், எதற்காகச் செய்கின்றோம் என்று தெரியாமல்
செய்கிறார்கள்" என்று ஆராய்ச்சி முடிவை எழுதி முடித்தார்.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
நற்செய்தி வாசகத்தில் இயேசுவிடம் சிலர், நோன்பு பற்றிய
கேள்வியைக் கேட்டபோது, அவர் அவர்களிடம் இருவேறுவிதமான உருவகங்களைச்
சொல்லி அவர்களுக்கு அவர்களுக்குப் பதிலளிக்கின்றார். இதில் இயேசு
பயன்படுத்திய இரண்டாவது உருவகத்தை மட்டும் எடுத்து இன்றைய
நாளில் சிந்தித்துப் பார்ப்போம்.
எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு
ஓட்டுப்போட்டால் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும்
பெரிதாகும். இது மறுக்க முடியாத உண்மை. ஆண்டவர் இயேசு தான் ஏற்படுத்த
இருந்த புதிய உடன்படிக்கையின் வழியாக (லூக் 22: 19-20) பழையதும்
அதேநேரத்தில் நாள்பட்டதுமான உடன்படிக்கையை மறையச் செய்ய இருந்தார்(எபி
8:13). மேலும் இந்த உடன்படிக்கை முந்தைய உடன்படிக்கையைப்
போன்று கல்லில் எழுதப்படும் ஒன்றல்ல, மாறாக மனித இதயத்தில் எழுதப்படும்
உடன்படிக்கை (2 கொரி 3:3). ஆகவே, இத்தகைதோர் உடன்படிக்கையை
தான் ஏற்படுத்த இருப்பதால்தான் இயேசு பழைய ஆடை என்னும்
மோசேயின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை புதிய துணி என்னும் தன்னுடைய
உடன்படிக்கையோடு ஓட்டுப்போட்டுவது நல்லதல்ல, என்று
கூறுகின்றார்.
ஆகையால் கண்மூடித்தனமாகவும் அர்த்தம் புரியாமலும் கடைபிடிக்கப்பட்டு
வருகின்ற நோன்பும் இன்ன பிற சடங்குமுறைகளும் இயேசுவின்மீது நம்பிக்கைகொண்டு,
புதுப்படைப்பாக மாற்றப்பட்ட ஒருவருக்குத் தேவையில்லை என்பதுதான்
இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது (2
கொரி 5:17)
சிந்தனை
சடங்குகள், சம்பிராதயங்கள் இவற்றை விடவும், ஆண்டவர் இயேசு நமக்குக்
கொடுத்திருக்கும் அன்புக் கட்டளை பெரியது. ஆகவே, நாம் ஆண்டவரின்
அன்புக் கட்டளையின் படி நடந்து, புதுப்படைபாக மாறுவோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|