|
16 ஐனவரி 2018 |
|
பொதுக்காலத்தின்
2ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தாவீதைச் சாமுவேல் திருப்பொழிவு செய்தார். ஆண்டவரின் ஆவி
தாவீதின் மேல் நிறைவாக இருந்தது.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 16: 1-13
அந்நாள்களில் ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "இஸ்ரயேலின் அரசராகச்
சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறக்கணித்ததை நீ அறிந்திருந்தும்,
நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கம் கொண்டாடுவாய்? உன்னிடமுள்ள
கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம்
உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில் அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத்
தேர்ந்துள்ளேன்" என்றார்.
அதற்குச் சாமுவேல், "எப்படிப் போவேன்? சவுல் கேள்விப்பட்டால்,
என்னைக் கொன்று விடுவானே?" என்றார். மீண்டும் ஆண்டவர், "நீ ஒரு
கன்றுக்குட்டியை எடுத்துச் செல்! "ஆண்டவருக்குப் பலியிட வந்துள்ளேன்"
என்று சொல்; ஈசாயைப் பலிக்கு அழைத்திடு. அப்பொழுது நீ செய்ய
வேண்டியது என்னவென்று உனக்கு நான் தெரிவிப்பேன்; நான் உனக்குக்
காட்டுகிறவனை நீ எனக்காகத் திருப்பொழிவு செய்" என்றார். ஆண்டவர்
கட்டளையிட்டவாறு சாமுவேல் செய்த பின் பெத்லகேமுக்குச்
சென்றார்.
அப்பொழுது அவ்வூரின் பெரியோர்கள் அஞ்சி நடுங்கி அவரை எதிர்கொண்டு
வந்து, "உங்கள் வருகையின் நோக்கம் சமாதானம் தானே" என்று கேட்டனர்.
அதற்கு அவர், "ஆம் சமாதானம் தான்; ஆண்டவருக்குப் பலிசெலுத்த வந்துள்ளேன்;
உங்களையே தூய்மையாக்கிக் கொண்டு என்னுடன் பலியிட வாருங்கள்" என்றார்.
மேலும் ஈசாயையும் அவர் புதல்வரையும் தூய்மைப்படுத்திப் பலியிட
வருமாறு அழைத்தார்.
அவர்கள் வந்தபோது அவர் எலியாவைப் பார்த்தவுடனே, "ஆண்டவரால்
திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும்" என்று எண்ணினார்.
ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், "அவன் தோற்றத்தையும் உயரத்தையும்
பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்து விட்டேன். மனிதர்
பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப்
பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்" என்றார். அடுத்து,
ஈசாய் அபினதாபை அழைத்து சாமுவேல் முன்பாகக் கடந்து போகச்
செய்தார்.
அவர், "இவனையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை" என்று
கூறினார். பிறகு ஈசாய் சம்மாகுவைக் கடந்து போகச் செய்தார்.
"ஆண்டவர் இவனையும் தேர்ந்து கொள்ளவில்லை" என்றார் சாமுவேல்.
இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து
போகச் செய்தார்.
"இவர்களையும் ஆண்டவர் தேர்ந்துகொள்ளவில்லை" என்றார் சாமுவேல்.
தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, "உன் பிள்ளைகள் இத்தனை
பேர்தானா?" என்று கேட்க, "இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன்
ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்" என்று பதிலளித்தார் ஈசாய்.
அதற்குச் சாமுவேல் அவரிடம், "ஆள் அனுப்பி அவனை அழைத்து வா; ஏனெனில்
அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்" என்றார். ஈசாய் ஆள் அனுப்பி
அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும்
கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான்.
ஆண்டவர் சாமுவேலிடம், "தேர்ந்துகொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து
இவனைத் திருப்பொழிவு செய்!" என்றார்.
உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து, அவன் சகோதரர்
முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின்
ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்குப்
புறப்பட்டுச் சென்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
தி:பா: 89:
19. 20-21. 26-27 (பல்லவி: 20a)
=================================================================================
பல்லவி: என் ஊழியன் தாவீதை நான் கண்டுபிடித்தேன்.
19 முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் காட்சி தந்து
கூறியது: வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்; மக்களினின்று
தேர்ந்தெடுக்கப்பட்டவனை உயர்த்தினேன். பல்லவி
20 என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால்
அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன். 21 என் கை எப்பொழுதும் அவனோடு
இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். பல்லவி
26 "நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன்
என்னை அழைப்பான். 27 நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்; மண்ணகத்தில்
மாபெரும் மன்னன் ஆக்குவேன். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
எபே 1: 17-18
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய
எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு நம் ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் ஞானமும்,
வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
ஓய்வு நாள் மனிதருக்காக; மனிதர் ஓய்வு நாளுக்காக அன்று.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 23-28
ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர்
கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர்.
அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், "பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை
ஏன் இவர்கள் செய்கிறார்கள்?'' என்று கேட்டனர்.
அதற்கு அவர் அவர்களிடம், "தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப்
பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள்
வாசித்ததே இல்லையா? அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது
தாவீது இறை இல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும்
உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு
இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?'' என்றார்.
மேலும் அவர் அவர்களை நோக்கி,
"ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது;
மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஆதலால் ஓய்வு
நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே'' என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
"சட்டம் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் சட்டத்திற்காக
உண்டாக்கப் படவில்லை"
கிரேக்க நாட்டில் அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்கு கொஞ்சம்
கிறுத்துத்தனமும், நிறைய முரட்டுத்தனமும் உண்டு. அவன் தங்கத்தால்
கட்டில் ஒன்று செய்தான். தங்கம் என்று சொன்னால், முழுவதும் தங்கம்.
சிறிதளவுகூட அதில் மரம் என்பதே கிடையாது. அப்படிப்பட்ட தங்கக்
கட்டிலினை தன்னுடைய அரண்மனைக்கு வந்துபோகக்கூடிய விருந்தினர்
படுத்துறங்கிவிட்டுச் செல்லப் பயன்படுத்தினான்.
விலைமதிக்கப் பெறாத அந்த தங்கக் கட்டிலில் விருந்தினர் நிம்மதியாகப்
படுத்துறங்கிவிட்டுப் போய்விடலாம் என்றெல்லாம் நினைக்கவேண்டாம்.
அந்த தங்கக் கட்டிலில் விருந்தினர் படுத்துறங்குவதற்கு அரசன்
விதிமுறை ஒன்றை விதித்தான். அந்த விதிமுறை யாதெனில், கட்டிலின்
உயரத்திற்கு ஏற்றாற்போல் வரக்கூடிய விருந்தினர் இருக்கவேண்டும்.
ஒருவேளை கட்டிலின் உயரத்தை விட வரக்கூடிய விருந்தினர் உயரம் அதிகமாக
இருந்தார் என்றால், கட்டிலின் உயரத்திற்கு ஏற்றார் போல் அவருடைய
உடலின் ஒரு பாகம் வெட்டி எடுக்கப்படும். ஒருவேளை கட்டிலின்
உயரத்தை விட வரக்கூடிய விருந்தினர் என்றால் குறைவு என்றால்,
அவரை அரண்மனையில் இருக்கக்கூடிய பயில்வான்கள் கையையும்
காலையும் பிடித்து இழுத்து, கட்டிலின் உயரத்திற்குப்
பொருந்துகிறார்போல் செய்வார்கள் (உடலை மேலும் கீழும் இழுப்புதற்கு
அது என்ன ரப்பரா?). இதனால் அந்த அரசரின் அரமனைக்கு வருவதற்கே
விருந்தினர்கள் யோசித்தார்கள்.
கட்டிலானது விருந்தினர்களின் தேவைக்கும் வசதிக்கும்தானே தவிர,
விருந்தினர்கள் கட்டிலுக்காக அல்ல என்ற எளிய உண்மையை அறியாத அந்த
அரசனை என்ன சொல்வது?. மேலே சொல்லப்பட்டதுபோல் கட்டில் எப்படி
மனிதருடைய தேவைக்கும் வசதிக்குமோ அதுபோன்று சட்டங்களும் மனிதருடைய
தேவைக்கும் வசதிக்கும்தான். சட்டங்களுக்காக மனிதர்கள் என்னும்
நிலையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் சீடர்களும் வயல்வழியே நடந்து
செல்கின்றபோது, சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்கிறார்கள். இதைக்
காணும் பரிசேயர் இயேசுவிடம், "பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை
ஏன் இவர்கள் செய்கிறார்கள்?" என்று முறையிடுகின்றார்கள். கதிர்களைக்
கொய்து உண்பது தவறில்லைதான். ஆனால் சீடர்கள் அதனை ஓய்வுநாளில்
செய்ததுதான் பரிசேயர்களுக்குத் தவறாகத் தெரிகின்றது. ஏனென்றால்,
ஓய்வுநாளில் எந்த வேலையும் செய்யக்கூடாது என்பது சட்டம். அந்த
விதத்தில் சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டதில் கதிர்களை அறுத்தல்,
அவற்றைக் கசக்குதல், வாயில் போடுதல், உண்ணுதல் என்னும் நான்கு
வேலைகள் இருந்ததினால் அவர்கள் சீடர்களின் செயலில்
குறைகாணுகின்றார்கள்.
பரிசேயர் சீடர்களின் செயலில் குறைகண்டதால், இயேசு அவர்களிடம்
தாவீதும் அவருடைய சாகாக்களும் குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய
அர்ப்பண அப்பங்களை உண்டதைச் சுட்டிக்காட்டி, மனிதரின் தேவைக்கு
முன்பாக (ஓய்வுநாள்) சட்டங்கள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்பதை
மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார்கள். பரிசேயர்கள்களிடம் இருந்த
மிகப் பெரிய தவறே அவர்கள் மக்களிடம் குறை காண்பதற்காக சட்டங்களைப்
பயன்படுத்தினார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ சட்டங்களை மானுட நேயத்தைக்
காப்பதற்காகப் பயன்படுத்துகின்றார். இன்னும் சொல்லப்போனால், ஆண்டவர்
இயேசு சட்டங்களின் முதன்மையான நோக்கத்தை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார்.
"ஓய்வுநாள் மனிதருக்காகஉண்டாக்கப்பட்டது;மனிதர் ஓய்வுநாளுக்காக
உண்டாக்கப்படவில்லை" என்னும் இயேசுவின் வார்த்தைகளை நாம் அப்படித்தான்
புரிந்துகொள்ளவேண்டும்.
ஆண்டவர் இயேசு சட்டங்களுக்கு அல்ல, மனிதர்களுக்குத்தான் முக்கியத்துவம்
கொடுத்தார் என்று சிந்தித்துப் பார்க்கும் இவ்வேளையில் நாம்
யாருக்கு, எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்று
சிந்தித்துப் பார்க்கவேண்டும். சட்டங்கள் மனிதருடைய
தேவைக்காகவும் வசதிக்காகவும் உண்டாக்கப்பட்டவை. அவற்றைக்
கொண்டு மனிதர்களை ஒடுக்குவதும் அடக்குவதற்கும் ஏற்றுக்கொள்ள
முடியாத ஒன்றாக்கும். இன்றைக்குப் பலர் சட்டத்தை மிக
நுணுக்கமாகக் கடைபிடிக்கிறேன் பேர்வழி என்று சொல்லக்கொண்டு
சாமானியர்களையும் சாதாரண மக்களையும் ஒடுக்குவதை எந்த விதத்தில்
ஏற்றுக்கொள்வது. இங்கே இன்னொரு வேடிக்கையும் இருக்கின்றது. அது
என்னவெனில் சாதாரண மக்களிடம் சட்டம் தன்னுடைய கடமையைச்
செய்கின்றபோது அதிகாரம் படித்தவர்களிடமும் ஆட்சியாளர்களிடமும்
பணிந்து போகிறது. சட்டத்திற்கு முன்னால் எல்லாரும் சமம் என்று
சொன்னால் உயர்ந்தவருக்கு ஒரு நீதியும் தாழ்ந்தவனுக்கு ஒரு
நீதியும் இருப்பது எந்த விதத்தில் நியாயம்.
ஆகவே, சட்டத்தில் இருக்கின்ற இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் களையப்
படவேண்டும். அதே நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் பரிசேயர்களைப்
போன்று சட்டத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிரால், ஆண்டவர்
இயேசுவைப் போன்று மனிதனுடைய தேவைகளுக்கும், மனித மாண்பிற்கும்
முக்கியத்துவம் கொடுத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
சட்டங்கள் மனிதருக்காக
புனித நாள் ஒன்றில் முனிவர் ஒருவர் கங்கை நதியில் குளிக்கச்
சென்றார். அவர் எப்போதும் தன்னுடன் செம்பு ஒன்றை
தூக்கிக்கொண்டே அலைபவர். குளிக்கும்போது செம்பை எங்கே வைப்பது
என்று யோசித்த அவர், கங்கை நதிக்கரையில் ஒரு குழிதோன்றி, அதிலே
புதைத்துவைக்கலாம் என்று தீர்மானித்தார். புதைத்த செம்பை
எளிதாக அடையாளம் கண்டுபிடிப்பதற்காக ஒரு மணல் கோபுரமும்
எழுப்பி வைத்து ஆற்றிலே குளிக்கச்சென்றார்.
ஆற்றிலே அவர் சந்தோசமாகக் குளித்துவிட்டு, வெளியே வந்தபோது
அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. ஏனென்றால்
கரையிலே நூறுக்கணக்கான மணல் கோபுரங்கள் இருந்தன. குளிப்பதற்கு
முன்பாக சம்பிரதாயத்திற்கு மணல் கோபுரங்கள் எழுப்ப வேண்டும்
என்று முனிவரைப் பார்த்து மக்கள் செய்ததால் அப்படி ஒரு
விபரீதம் ஏற்பட்டிருந்தது.
கரையில் தான் புதைத்து வைத்திருந்த செம்பை எப்படி எடுப்பது
என்று யோசித்த முனிவர் ஒவ்வொரு மணல் கோபுரத்தையும் சிதைக்கத்
தொடங்கினார். இதைப் பார்த்த மக்கள், முனிவர் தாங்கள்
சம்பிரதாயத்திற்காக எழுப்பியிருக்கும் கோபுரத்தை இப்படி
சிதைக்கிறாரே என்று அவரை ஓடிவந்து அடிக்கப் பார்த்தனர்.
அதற்குள் அவர் தன்னுடைய செம்பு போனாலும் பரவாயில்லை,
அவர்களிடமிருந்து தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து நகரத்
தொடங்கினார்.
எதற்காக முனிவர் மணல் கோபுரம் எழுப்பினார் என்பதுகூடத்
தெரியாமல் மக்கள் செயல்பட்டதால் ஏற்பட்ட விளைவை இந்தக்
கதையானது நமக்கு தெளிவாக எடுத்துக்கூறுகிறது. இன்றைக்கு நாம்
பின்பற்றும்/கடைப்பிடிக்கும் பெரும்பாலான சாத்திர
சம்பிரதாயங்கள் எதற்காக ஏற்படுத்தப்பட்டன என்பதுகூடத்
தெரியாமல் கடைப்பிடிக்கிறோம். அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்,
குழப்பங்களும் ஏராளம், ஏராளம்.
நற்செய்தி வாசகத்தில் இயேசுவும், அவருடைய சீடர்களும் வயல்வழியே
நடந்து செல்கிறபோது பசியில் சீடர்கள் கதிர்களைக் கொய்து
உண்கிறார்கள். இதைப் பார்க்கும் பரிசேயர்கள் இயேசுவிடம்,
"பாரும்! உம்முடைய சீடர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறுகிறார்கள்"
என்கிறார்கள். அதற்கு இயேசு தாவீதின் வாழ்வில் நிகழ்ந்த
நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி, "ஓய்வுநாள் மனிதருக்காகப்
படைக்கப்பட்டவை, மனிதர்கள் ஓய்வுநாளுக்காகப் படைக்கப்படவில்லை"
என்று தெளிவாக விளக்குகிறார்.
விடுதலைப் பயணநூல் அதிகாரம் 20: 8 முதல் 11 வரையுள்ள
வசனங்களில் படிக்கின்றோம், "ஓய்வுநாளைத் தூயதாகக்
கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறுநாள்கள் நீ உழைத்து உன்
அனைத்து வேலையையும் செய்வாய்.
ஏழாம்நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வுநாள்.
எனவே அன்று நீயும், உன் மகனும் மகளும்
உன் அடிமையும், அடிமைப்பெண்ணும், உன் கால்நடைகளும்
உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய
வேண்டாம். ஏனெனில், ஆண்டவர் ஆறுநாள்களில் விண்ணுலகையும்,
மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து
ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வுநாளுக்கு
ஆசிவழங்கி
அதனைப் புனிதப்படுத்தினார்" என்று.
ஆகவே ஓய்வுநாள் என்பது வேலைகளிலிருந்து ஓய்ந்திருக்கவும்,
கடவுளோடு இணைந்திருக்கவுமே கொடுக்கப்பட்டது. ஆனால் திருச்சட்ட
அறிஞர்களும், மறைநூல் அறிஞர்களும் ஓய்வுநாள் என்றாலே எந்த
வேலையும் செய்யக்கூடாது என்று சொல்லி மக்களை வதைத்தனர்.
இதைதான் ஆண்டவர் இயேசு கடுமையாகக் கண்டிக்கிறார்.
பலநேரங்களில் நாமும் ஒரு சட்டம்/விதிமுறை/ஒழுங்குமுறை எதற்காக
ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுகூடத் தெரியாமல் அதைக்
கடைப்பிடிக்கிறோம். இன்னும் ஒருசில நேரங்களில் சட்டத்தைக்
கடைப்பிடிக்கிறேன் பேர்வழி என்றுசொல்லிக்கொண்டு எல்லாரையும்
வதைகிறோம். இது தவறான அணுகுமுறை.
"சட்டம் ஒரு கழுதை முன்னால் போனால் கடிக்கும், பின்னால்
வந்தால் உதிக்கும்" என்பார் பெர்னாட்ஷா என்ற அறிஞர். ஆம்,
இன்றைக்கு சட்டத்தின் பெயரால் சாதாரண மக்கள்
வஞ்சிக்கப்படுவதுதான் வேதனையான ஒரு காரியமாக இருக்கிறது.
ஆதலால் சட்டத்தின் உட்பொருளை உணர்ந்து செயல்படுவோம். அதைவிட
சட்டத்தை விடவும், மனித நேயம் முக்கியம் என்ற மனநிலையில்
செயல்படுவோம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antony,
Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
இனி எல்லாம் சுகமே!
வியப்புக்களின் இறைவன்
சவுலைப் புறக்கணிக்கும் கடவுள், அடுத்த அரசராக தாவீதை
திருப்பொழிவு செய்ய சாமுவேலை அனுப்புகிறார்.
நாளைய முதல் வாசகத்தில் இரண்டு இடங்களில்
"பயம" இருக்கிறது:
அ. சாமுவேல் சவுல் இருக்கும் நாட்டிற்குள் செல்லப்
பயப்படுகின்றார். ஓர் அரசன் ஏற்கனவே இருக்கும்போது, இன்னொரு
அரசனை திருப்பொழிவு செய்வது எப்படி என்பதுதான் இவரது
பயத்திற்கான காரணம். இந்த பயத்தை போக்க கடவுள் அவரை பலி
செலுத்த செல்வதுபோல அனுப்புகிறார்
ஆ. சாமுவேலைக் கண்டவுடன் மக்கள் பயப்படுகின்றனர். அதாவது,
இறைவாக்கினரின் வருகை அவர்களுக்கு சமாதானத்தைக் கொண்டு
வருகிறதா அல்லது போரைக் கொண்டுவருகிறதா என்ற பயம்.
தான் சமாதானத்திற்காக வந்ததாகச் சொல்கிறார் சாமுவேல்.
பலியிட எல்லாரும் வரும்போது, தாவீது மட்டும் தூர
இருக்கின்றார்.
ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தவர் அருள்பொழிவு பெறுகின்றார்.
இறைவன் வியப்புக்களின் இறைவன் என்பது மீண்டும் இங்கே
புலனாகிறது.
Yesu Karunanidhi, Madurai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 4
=================================================================================
"ஓய்வுநாள் மனிதருக்காக; மனிதர் ஓய்வு நாளுக்காக அல்ல"
இயேசுவின் அன்புக்குரியவரே!
பயிர் முக்கிமா? வேலி முக்கியமா? மனிதனா? சட்டமா? பயிர்தான்
முக்கியம். மனிதன்தான் முக்கியம். இவற்றில் வேறுபட்ட கருத்து
இல்லை. ஒரே நிகழ்ச்சியைப் பார்க்கின்ற இருவரின் கண்ணேட்டத்திற்கு
ஏற்ப, கருத்துக்கள் வெளிப்படுகின்றன. ஒருவன் வேலிதான் முக்கியம்
என்று வாதிடுகின்றான். மற்றவன் பயிர்தான் முக்கியம் என்று
சாதிக்கின்றான்.
எதிலும் நல்லதையும் சிறந்ததையும் முக்கியமானதையும் பார்க்கும்
கண்ணேட்டம் இருந்தால் எதிலும் நல்லது மட்டுமே தெறிய வரும். சீடர்கள்
கதிர்களைக் கொய்து தின்றது, இயேசுவைப் பொருத்தமட்டில் பெரிய பிரச்சனை
அல்ல. ஏனென்றால், பசியிலும் வரப்பில் வழி நடந்தும் களைத்திருந்த
சீடர்களின் நிலைமையை அவர் அறிவார். சட்டமும் சம்பிரதாயமும் அறிவார்.ஆகவே
கேட்டார்: "தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய்
இருந்தபோது தாவீது என்ன செய்தார்" (வாசிக்க, 1சாமு 21:1-6) "அபியத்தார்
தலைமைக் குரவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று,
குரக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத்
தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?"(வாசிக்க,லேவி
24:9).
இயேசுவின் பார்வையில் சீடர்களின் நீண்ட பயணம், கழைப்பு, பசி
தெறிந்தது. இடமும் வயல்வெளி. செய்த செயலும் பசிக்கு சாப்பிட்டதுதான்.
அருவடைசெய்து உழைத்து சம்பாதிக்கவில்லை. இவற்றுள்
புதைந்திருக்கும் மனிதனைப் பார்த்தார். பரிசேயர்கள் மனிதனையும்
மனிதத்தையும் புதைக்கும் சட்டத்தைப் பார்த்தனர். வேலியைக்
காக்கும் முயற்சியில் இறங்கினர். பயிரை விட வேலியைப்
பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இயேசுவின்; கண்ணேட்டம்
நமக்கிருந்தால் பயிரை வளர்த்துப் பாதுகாப்போம். பலரை அது
வாழ்விக்கும். வாழ்த்துக்கள். ஆசீர்;.
:- ஜோசப் லியோன்
________
இயேசுவின் பார்வையில் புனிதம்
புனிதம் என்ற பெயரில் மனிதத் தேவையை பொருட்படுத்தாது விடுவது,
அந்த புனிதத்தை மாசுபடுத்துகின்ற செயல் என்பதை, இன்றைய நிகழ்ச்சி
மிக அழகாக நமக்கு எடுத்துரைக்கிறது. புனித பொருட்களை மற்றவர்களின்
தேவைக்கு பயன்படுத்துவது தான், அந்த புனிதப்பொருட்களுக்கான உண்மையான
விலை. இன்றைய நாளில் ஓய்வுநாளில் பசியாயிருந்த சீடர்கள் கதிர்களைப்
பறித்து உண்கிறார்கள். பரிசேயர்கள், ஓய்வுநாளை மீறிய செயலாகப்
பார்க்கிறார்கள். அதனைக் கண்டிக்கிறார்கள். குற்றம் காண
துடிக்கிறார்கள். ஆனால், இயேசு புனிதம் என்கிற வார்த்தையின் உண்மையான
அர்த்தத்தை நமக்கு எடுத்துரைக்கிறார்.
பொதுவாக, குழந்தைகள் மத்திய கிழக்குப் பகுதிகளில் ஆலயத்திற்குள்
நுழைவதற்கு தடைசெய்யப்பட்டனர். காரணம், ஆலயங்களும், அதனைச்சார்ந்த
இடங்களும் பாரம்பரியத்தையும், புனிதத்தையும் பறைசாற்றுவதாக
நினைத்தனர். அங்கே குழந்தைகள் அதன் புனிதத்தன்மையை
கெடுத்துவிடுவார்கள் என்று மக்கள் நினைத்தனர். எனவே, அவர்கள்
தடைசெய்யப்பட்டனர். ஆனால், புனித நாளோ, புனித பொருட்களோ மனிதத்தேவையை
நிறைவு செய்கிறபோதுதான், புனிதத்தன்மையைப் பெறுகிறது. பலிக்கு
வைக்கப்படுகிற அப்பம், பசியாயிருக்கிறவனுக்குக் கொடுக்கப்பட்டால்,
அதுதான் உண்மையான பலி. அதுதான் உண்மையான புனிதம். ஓய்வுநாள்,
தேவையில் இருக்கிறவனுக்கு உதவி செய்கிறநாளாக இருந்தால், அதைவிட,
அந்த ஓய்வுநாளை புனிதமாக அனுசரித்துவிட முடியாது.
இன்றைக்கு புனிதம் என்ற பெயரில், நாம் மனிதத்தேவைகளை புறந்தள்ளி
விடுகிறோம். புனிதம் நிச்சயமாக பேணிக்காக்கப்பட வேண்டும். ஆனால்,
அந்த புனிதத்தன்மை சரியான முறையில் புரிந்து கொள்ளப்பட
வேண்டும், என்பதுதான் இயேசுவின் ஆசை.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------
சட்டத்தை அனைவருக்கும் சமமாக்குவோம்
ஓய்வுநாள் என்பது எபிரேய மொழியின் "ஷாவத்" என்கிற வார்த்தையின்
பொருளை மையப்படுத்தியதாகும். அதன் பொருள் "இளைப்பாறுதல்", "தவிர்த்தல்",
"ஓய்வெடுத்தல்" என்பதாகும். யூதர்களின் ஓய்வுநாள் என்பது
வெள்ளிக்கிழமை மாலை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை மாலை சூரிய
மறைவு வரை இருக்கும். கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு
ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள். ஏனென்றால், அன்றைய தினம் நம் ஆண்டவரின்
உயிப்புநாள். இந்த ஓய்வுநாளில் செய்யக்கூடாதவை என்று, யூதர்களின்
மறைநூல் அறிஞர்கள் பல ஒழுங்குமுறைகளை வகுத்திருந்தனர். இந்த ஒழுங்குகளில்
ஒன்றுதான் இன்றைய நற்செய்தியில் வரும் ஓய்வுநாளில் கதிர்கொய்தல்
பற்றியது ஆகும்.
அடுத்தவருக்கு சொந்தமான வயலில் கதிர்களைப்பறிப்பது தவறானது அல்ல.
அது ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டது. அரிவாளால் பறிக்காதவரைக்
குற்றமில்லை. எனவே, சீடர்களின் இந்த செயல் நியாயமானதாக, ஒழுங்குமுறைகளுக்கு
உட்பட்டதாக இருந்திருக்கும். ஆனால், அவர்கள் கதிர்களைப்பறித்தது
ஓய்வுநாளில். அதுதான் ஒழுங்குமுறைகளுக்கு எதிரானது. இதைத்தான்
பரிசேயர் குற்றப்படுத்துகின்றனர். சீடர்களுக்கும் இது நன்றாகத்தெரியும்.
இருந்தும் அவர்கள் அதைப்பறிக்கிறார்கள் என்றால், அதற்குக்காரணம்,
தாங்கமுடியாத பசி. பொறுத்து, பொறுத்துப் பார்த்துதான் சீடர்கள்
இந்த முடிவுக்கு வந்திருப்பார்கள். நமது வழக்கிலே, "ஆபத்திற்கு
பாவமில்லை" என்ற ஒரு சொல்லாடல் பயன்படுத்தப்படும். இதைத்தான்
சீடர்கள் செய்கிறார்கள்.
சட்டத்தை மீறுவது பாவம். ஆனால், ஒட்டுமொத்தமாக நாம் ஒரு
முடிவுக்கு வந்துவிட முடியாது. இன்றைக்கு அதிகாரமிக்கவர்கள்
பணத்தால், பதவியால், அதிகாரத்தால் சட்டத்தில் காணப்படும் ஓட்டைகளைப்பயன்படுத்தி
குற்றத்திலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். ஆனால், சாதாரண ஏழைகளை
சட்டத்திற்கு பலிகடாவாக மாற்றிவிடுகிறார்கள். இந்த நிலை மாற
வேண்டும். சட்டத்தை ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் நீதி
கிடைப்பதற்காகப் பயன்படுத்த வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------
மனிதத்தின் முழுமை இறைமை
இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல் வழியே செல்கின்றபோது அவருடைய
சீடர்கள் கதிர்களைக் கொய்து கொண்டே வழிநடக்கின்றனர். சாதாரண
நாட்களில் செல்லும்போது கதிர்களைக் கையால் கொய்வது குற்றம்
கிடையாது. "உனக்கு அடுத்திருப்பவனுடைய விளைநிலத்திற்குச்சென்றால்
உன் கையால் கதிர்களைக் கொய்யலாம்: ஆனால் கதிர் அரிவாளை உனக்கு
அடுத்திருப்பவனின் கதிர்களில் வைக்காதே" (இணைச்சட்டம் 24: 25).
இங்கே சீடர்கள் செய்த தவறு ஓய்வுநாளில் கதிர்களை பறித்தது. ஓய்வுநாளை
முழுமையாகக் கடைப்பிடிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்கங்களை
யூத மதத்தலைவர்கள் வகுத்திருந்தனர். அந்த ஒழுங்குமுறைகளுக்கு
எதிராக அமைந்திருந்தது சீடர்களின் செயல்பாடு. சட்டம், மனிதம்
இரண்டில் இயேசு மனிதத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார். அதற்கு
அவர்களின் மொழியிலேயே விளக்கமும் தருகிறார். பழைய ஏற்பாட்டிலே
1 சாமுவேல் 21: 1 6 ல் பார்க்கிறோம்: குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய
தூய அப்பத்தை (லேவியர் 24: 9 அது ஆரோனுக்கும் அவன் மைந்தர்க்கும்
உரியது. அதைத்தூயகத்திலே உண்ண வேண்டும்) தானும் உண்டு, தன்னோடு
உடன்வந்தவர்களுக்கும் தாவீது உண்ணக்கொடுக்கிறார். எப்படி இங்கே
மனிதத்திற்கு தாவீது முக்கியத்துவம் தந்தாரோ, அதேபோல் தான் இயேசுவின்
போதனையும் மனிதத்தை ஒட்டி அமைந்திருந்தது. இயேசு சட்டத்திற்கு
எதிரானவர் அல்ல:
ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்கக்கூடாது என்பது அவருடைய எண்ணம் அல்ல.
ஆனால், மனிதம் எப்போதும் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதுதான்
அவரது விருப்பம். அதுதான் கடவுளின் விருப்பம். சடங்குகள், சம்பிரதாயங்கள்
கற்றுத்தரும் பொருளை அறிந்து, அதனை முன்னிலைப்படுத்துவோம்.
- அருட்பணி. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------
தாவீது என்ன செய்தார் ?
பசியின் காரணமாகச் சீடர்கள் கதிர்களைக் கொய்தபோது, பரிசேயர்
அதனை ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதாக இயேசுவிடம் குற்றம் சுமத்தினர்.
அதற்கு இயேசு பழைய ஏற்பாட்டு நிகழ்வு ஒன்றை மேற்கோள்
காட்டுகிறார். சட்டத்தைவிட மாந்தநேயமே மேலானது என்கிறார்.
1 சாமுவேல் 21ஆம் அதிகாரத்தில் இந்த நிகழ்வை வாசிக்கிறோம்.
தாவீது குரு அகிமெலக்கிடம் வந்து உண்பதற்கு ஏதாவது வேண்டும் என்று
கேட்டபொழுது குரு அவரிடம் "தூய அப்பமே என்னிடம் உள்ளது. சாதாரண
அப்பங்கள் இல்லை. இளைஞர்களான நீங்கள் பெண்களோடு உறவுகொள்ளாமல்
இருந்தால் நீங்கள் அதை உண்ணலாம்" என்றார். தாவீது குருவை
நோக்கி, "சாதாரண பயணத்தின்போதே இவ்விளைஞர்கள் பெண்களுடன் உறவுகொள்வதில்லை.
இன்றோ சிறப்புப் பணியை மேற்கொண்டுள்ளதால் நேற்றும் முந்தின
நாளும் தூய்மை காத்துள்ளனர்" என்றார். ஆதலால் குரு தூய அப்பத்தை
அவருக்கு அளித்தார் (1 சாமு 21: 1-6) என்று வாசிக்கிறோம்.
இயேசுவின் இந்த மேற்கோளிலிருந்து மூன்று சுவையான தகவல்களைப்
பெறுகின்றோம்:
1. இயேசு மறைநூலை நன்றாக அறிந்திருந்தார். இப்பகுதி மட்டுமல்ல,
புதிய ஏற்;பாட்டின் இதர பகுதிகளிலும் இயேசு பழைய ஏற்பாட்டைத்
தெரிந்திருந்த செய்தியை அறிகிறோம். எனவேதான், தம்மிடம் வாதிட
வந்தவர்களிடம் "உங்களுக்கு மறைநூலும் தெரியாது. கடவுளின் வல்லமையும்
தெரியாது. எனவேதான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்" (மத்
22: 29) என்று துணிவுடன் சொல்ல முடிந்தது.
2. இயேசு மறைநூலைத் தெரிந்திருந்ததோடு, அந்த மறைநூலை எப்படிப்
புரிந்துகொள்ளவேண்டும் என்னும் ஞானத்தையும் பெற்றிருந்தார்.
எனவேதான், மறைநூல் நிகழ்வை மாந்தநேயப் பார்வையில் பார்க்க
முடிந்தது, பரிசேயர் இறைவார்த்தையை சட்டநோக்கில் பார்த்தனர்.
இயேசு மாந்தநேயத்தோடு பார்த்தார்.
3. மறைநூலோடு, கடவுளின் வல்லமை, பேரன்பு, பேரிரக்கம் இவற்றையும்
இணைத்தே நாம் பார்க்க வேண்டும். "இறைவாக்கு உரைக்கும் ஆற்றல்
எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும்,
அறிவெல்லாம் பெற்றிருப்பினும்,... என்னிடம் அன்பு இல்லையேல்,
நான் ஒன்றுமில்லை" (1 கொரி 13: 2) என்னும் பவுலடியாரின்
வாக்கையும் நினைவுகூர்வோம்.
மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இறைவார்த்தையின்மீது
ஆர்வம் கொண்டுள்ள நாங்கள், அந்த ஆர்வத்தோடு மாந்தநேயமும்
கொள்ளும் அருளைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே
மாட்சி, ஆமென்..
- பணி. குமார்ராஜா
-------------------------------------------------------------------------------
இணையதள உறவுகளே
அப்பாடா. இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. ஓய்வு நாள். காலையில நல்லா
தூங்கலாம். மதியம் நல்ல ஒரு விருந்து சாப்பிடலாம். சாயுங்காலம்
அப்படியே கடல்காற்று வாங்கப்போவோம். வந்து நல்ல ஒரு திறைப்படம்
பார்ப்போம். ஞாயிற்றுக்கிழமை இப்படித்தான் விடிந்து முடிகிறது.
ஞாயிறு ஒரு ஓய்வுநாள். அது ஆண்டவரின் நாள் என்பதை மறந்து
விடுகிறோம். இது ஆண்டவருக்காக செலவிடவேண்டிய நாள். நாள் முழுவதையும்
ஆண்டவருக்காகவும் அவரது பணிக்காவும், ஆண்டவரின் பெயரால் அயலானுக்காகவும்
அறச்செயல்கள் செய்ய வேண்டிய நாள். "ஆறு நாள்கள் நீங்கள் வேலை
செய்யலாம். ஏழாம் நாளோ முழுமையாக ஓய்வெடுக்கும் நாள்; புனித சபை
கூடும் நாள். அன்று நீங்கள் ஒரு வேலையும் செய்யவேண்டாம். நீங்கள்
வாழும் இடமெங்கும் அது ஆண்டவருக்கான ஓய்வுநாள்"(லேவி 23 : 3)
எனவே ஆண்டவரின் நாளில் திருப்பலி, செபக்கூட்டங்கள், குழந்தைகளுக்கு
மறைக்கல்வி, அன்புப்பணி இவற்றிற்கு முதலிடம் கொடுங்கள்.
திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும்
நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.ஆண்டவர் உங்களை
எக்குறையுமின்றி ஆசீர்வதிப்பார்.
-ஜோசப் லீயோன்
-----------------------------------------------
ஓய்வுநாளில் செய்யக்கூடாதது !
இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
பசியாய் இருந்த இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்துகொண்டே
நடந்ததைக் குற்றப்படுத்துகின்றனர் பரிசேயர்கள். பாரும், ஓய்வுநாளில்
செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்? என்று கேட்டனர். ஓய்வுநாளில்
செய்யக்கூடாதது எது என்பதைப் பற்றிய அவர்களின் அறியாமையை ஆண்டவர்
போக்குகிறார்.
ஓய்வுநாளில் செய்யக்கூடாதவை: தீமை, அநீதி, அன்புக்கெதிரான செயல்கள்.
செய்ய வேண்டிவை: இறைவழிபாடு, அன்புறவாடல் மற்றும் பிறரன்புப்
பணிகள். இந்த ஞானத்தைப் பரிசேயர்கள் பெற்றிருக்கவில்லை. எனவேதான்,
பசியைப் போக்க கதிர்களைக் கொய்ததைக் குற்றப்படுத்தினர். நாம்
பரிசேய மனநிலையைக் களைந்து, இயேசுவின் மனநிலையில் வளர்ந்து, நன்மையைச்
செய்வதற்கு நாள், நேரம் பாராமல் இருப்போமாக. எந்நேரமும்
தீமையைத் தவிர்ப்போமாக.
மன்றாடுவோம்: அன்பின் தெய்வமே இறைவா, நீர் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக
இருப்பதற்காக உம்மைப் போற்றுகிறோம். ஓய்வுநாளில் நாங்கள் உம்மைத்
தொழுது, உமக்காக வாழ்கின்ற அருளைத் தாரும். எதையும் சட்டத்தின்
பார்வையில் நோக்காமல், அன்பின் பார்வையில் காணும் ஆற்றலைத்
தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
--: அருள்தந்தை குமார்ராஜா
-----------------------------
இயேசு ''ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது;
மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை" என்றார் (மாற்கு
2:27)
இயேசுவின் அன்புக்குரியவரே!
-- இயேசு ஓய்வு நாள் பற்றிக் கூறிய கருத்தின் அடிப்படையில் அவர்
ஓய்வுநாளை எதிர்த்தார் என்று சிலர் முடிவுகட்டிவிடுகின்றனர்.
இது தவறு. இயேசு ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பது தவறு என்று கூறவில்லை;
மாறாக, ஓய்வு நாளின் உண்மையான பொருள் எதில் அடங்கியிருக்கிறது
என்பதை அவர் வெளிப்படுத்தினார். யூத வழக்கப்படி ஓய்வு நாள் கடவுளை
வழிபடுவதற்கும், வேலை செய்வதிலிருந்து ஓய்வு பெறுவதற்கும்,
குடும்பக் கடமைகளில் கவனம் செலுத்துவதற்கும் பயன்பட்டது. ஆனால்
நாளடைவில் ஓய்வு நாள் பற்றிய சட்டதிட்டங்கள் பலுகிப் பெருகின.
ஓய்வு நாளில் எந்த வேலை செய்யலாம், எந்த வேலை செய்யத் தகாதது
என வரையறுப்பதில் சட்ட நுணுக்கங்கள் புகுந்தன; மக்கள்மீது
பெரிய சுமை சுமத்தப்படலாயிற்று. இதையே இயேசு கண்டித்தார். ஓய்வுநாளின்
உண்மைப் பொருளை மறந்தது தவறு என்று சுட்டிக்காட்டிய இயேசு, ஓய்வு
நாள் மனிதரின் நன்மைக்காகவே உருவாக்கப்பட்டது என்னும் கருத்தை
ஆழமாக எடுத்துரைத்தார். எனவே அவர் ஓய்வு நாள்களில் குணமளித்தார்.
இது ஓய்வுநாள் பற்றிய சட்டதிட்டங்களுக்கு எதிராக அமைந்தது என
இயேசு அறிந்திருந்த பிறகும் மனிதரின் நலனை முன்னிட்டு சட்ட மீறலில்
ஈடுபட்டார்.
-- கிறிஸ்தவர்களுக்கு ஓய்வுநாளாக இருப்பது ஞாயிற்றுக் கிழமை ஆகும்.
யூதர்களின் ஓய்வு நாளாகிய சனிக்கிழமை கிறிஸ்தவ வழக்கில்
ஞாயிறாக மாறியதற்கு ஒரு வரலாறு உண்டு. இயேசு சாவிலிருந்து உயிர்பெற்று
எழுந்தது ஞாயிற்றுக் கிழமை என்னும் அடிப்படையில் கிறிஸ்தவ வழக்கில்
ஞாயிறு சிறப்புப் பொருள் பெறலாயிற்று. ஞாயிறு என்பது வாரத்தின்
முதல் நாள். இயேசு உயிர் பெற்றெழுந்த அந்த நாளைச் சிறப்பித்து,
வழிபாட்டு நாளாகக் கொண்டாடுவது பொருத்தம் எனத் தொடக்க காலத்
திருச்சபை முடிவு செய்தது. எனவே, கடவுளை வழிபடுவதற்கும், அன்றாட
வேலையிலிருந்து ஓய்வு பெற்று, சமூக மற்றும் குடும்ப உறவுகளைப்
புதுப்பிப்பதற்கும் ஏற்ற நாளாக நாம் ஞாயிற்றுக் கிழமையைக் கருதலாம்.
கிறிஸ்தவ ஓய்வு நாளின் உட்பொருளை உணர்ந்து வாழ்ந்திட நாம் அழைக்கப்படுகிறோம்.
மன்றாட்டு
இறைவா, உம்மை வழிபட்டு உம் வழியில் நடந்திட எங்களுக்கு அருள்தாரும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல் |
|