Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       15  ஐனவரி 2018  
                                             பொதுக்காலத்தின் 2ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================

கீழ்ப்படிதலே பலிகளை விடச் சிறந்தது.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 15: 16-23

அந்நாள்களில் சாமுவேல் சவுலை நோக்கி, "நிறுத்தும், இன்றிரவு ஆண்டவர் எனக்குக் கூறியவற்றை உமக்குச் சொல்கிறேன்" என, சவுல், "சொல்லுங்கள்" என்றார்.

சாமுவேல் கூறியது: "நீர் உமது பார்வைக்கே சிறியவராய் இருந்த போதல்லவா இஸ்ரயேல் குலங்களுக்குத் தலைவர் ஆனீர்? ஆண்டவரும் உம்மை இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்தார். ஆண்டவர் உமக்கு வழிகாட்டி, "நீ சென்று அந்தப் பாவிகளான அமலேக்கியரை அழித்துவிட்டு வா. இறுதிவரை போரிட்டு அவர்களை ஒழித்துவிடு" என்று சொன்னார். அப்படியிருக்க, நீர் ஏன் ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை? கொள்ளைப்பொருள்மீது பாய்ந்து ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்ததேன்?"

அதற்குச் சவுல், சாமுவேலை நோக்கி, "ஆண்டவரின் குரலுக்கு நான் செவிகொடுத்தேன், அவர் காட்டிய வழியிலும் சென்றேன். அமலேக்கியரின் மன்னன் ஆகாகைக் கொண்டு வந்தேன். ஆனால் அமலேக்கியரை அழித்துவிட்டேன். ஆனால் வீரர்கள் உம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கில்காலில் பலி செலுத்த, தடை செய்யப்பட்ட கொள்ளைப் பொருளினின்று சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு வந்தனர்" என்றார்.

அப்போது சாமுவேல் கூறியது: "ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரிபலிகள், பிற பலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா? கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது, கீழ்ப்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது! கலகம் சூனியத்திற்கு நிகரான பாவம்! முரட்டுத்தனம் சிலைவழிபாட்டுக்கு ஒப்பான குற்றம். நீர் ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்தீர்! அவரும் உம்மை அரச பதவியினின்று நீக்கிவிட்டார்."

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்  தி:பா: 50: 8-9. 16bc-17. 21,23 (பல்லவி: 23b)
=================================================================================

பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் எனது மீட்பைக் கண்டடைவர்.


8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. 9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக் கிடாய்களையோ, நான் ஏற்றுக்கொள்வதில்லை. பல்லவி

16bஉ என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? 17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். பல்லவி

21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்து உரைக்கின்றேன். 23 நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். பல்லவி

 
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================

எபி 4: 12

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.


=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மணமகன் விருந்தினரோடு இருக்கிறார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 18-22

யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்து வந்தனர். சிலர் இயேசுவிடம், "யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?"" என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்க முடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பு இருக்க முடியாது. ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.

எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும்.

அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற் பைகளுக்கே ஏற்றது"" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இயேசு காட்டும் நோன்பு !

 இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

யோவானுடைய சீடர்களைப் போல, இயேசுவின் சீடர்களும் ஏன் நோன்பிருப்பதில்லை என்னும் கேள்விக்கு இயேசு தரும் பதில்: அவர்களும் நோன்பு இருப்பார்கள். மணமகன் அவர்களோடு இருக்கும்வரையில் அவர்கள் நோன்பிருக்க வேண்டிய தேவையில்லை. ஆனால், மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்கள் நோன்பு இருப்பார்கள்.

கிறிஸ்தவ வாழ்வில் நோன்பு என்பது இன்றி அமையாத ஒன்று. இந்த நோன்பினை மூன்று வகைகளில் அமைக்கலாம். 
1. உணவை மறுக்கும் உண்ணா நோன்பு.
2. தொலைக்காட்சி, அலைபேசி போன்றவற்றின்மீது கட்டுப்பாடு கொள்ளும் ஊடக நோன்பு. 
3. நமது சொற்களின்மீது தன்கட்டுப்பாடு கொள்ளும் சொல்நோன்பு.

இந்த மூன்று வகையான நோன்புகளும் நம் வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம். எனவே, மணமகனாம் இயேசுவைப் பிரிந்து, அவரது இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கும், இக்காலத்தில் இந்த மூன்று நோன்புகளையும் வாரமொருமுறை கடைப்பிடிப்போமாக!

மன்றாடுவோம்: திருச்சபையின் மணமகனாம இயேசுவே, உம்மைப் Nபுhற்றுகிறோம். காலம் வரும்போது அவர்களும் நோன்பிருப்பார்கள் என்று உம் சீடர்களைப் பற்றி மொழிந்தீரே. உமக்கு நன்றி. இதோ, இந்த நாள்களில் நோன்பிருப்பதன் அவசியத்தை உணர்ந்து, நாங்கள் இந்த மூன்று வகையான நோன்புகளையும் கடைப்பிடிக்க அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

 

---------------------------------------

"யோவானுடைய சீடரும் பரிசேயருடைய சீடரும் நோன்பு இருந்து வந்தனர்"" (மாற்கு 2:18)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- நோன்பு என்பது உடலை ஓறுத்தலைக் குறிக்கும். இது உலக சமயங்களில் காணப்படுகின்ற ஒரு நல்ல பழக்கம். நோன்பு இருப்பது பல காரணங்களுக்காக நிகழலாம். தம் உடலைத் துன்புறுத்தி, ஒறுப்பது கடவுளுக்கு விருப்பமான செயல் என சிலர் நினைக்கலாம். உடலை ஓறுப்பதால் உடல் சார்ந்த தீய சக்திகளை முறியடிக்கலாம் என சிலர் நினைக்கலாம். உண்டி துறந்து உடலை வாட்டும்போது உடல் நம் உள்ளத்தின் கட்டுப்பாட்டுக்கு அடங்கியிருக்கும் என சிலர் நினைக்கலாம். எக்காரணத்திற்காக நோன்பு செய்யப்பட்டாலும் சரி அது சமய நம்பிக்கையோடு பெரும்பாலும் இணைந்துள்ளதை நாம் காணலாம். யூத சமயத்தில் நோன்பிருக்கும் வழக்கம் இருந்தது (எடுத்துக்காட்டாக, காண்க: எசா 58:3-7; யோனா 3:7; மத் 6:16-18). சமய நம்பிக்கையைத் துல்லியமாகக் கடைப்பிடித்த பரிசேயர் நோன்பிருந்தனர். அதுபோலவே திருமுழுக்கு யோவானின் சீடரும் நோன்பிருந்தனர். இவர்கள் இயேசு உணவருந்துவதைப் பார்க்கிறார்கள்; இயேசு நோன்பிருக்கவில்லை எனக் கண்டுகொள்கிறார்கள். உடனேயே இயேசுவைப் பற்றியும் அவருடைய சீடர்களைப் பற்றியும் குறைகூறத் தொடங்குகிறார்கள்: "உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?" (மாற் 2:18) என இயேசுவிடம் நேரடியாகவே கேட்டுவிடுகின்றனர்.

-- இயேசு நோன்பு பற்றி என்ன கூறினார்? நோன்பின் உட்பொருளை இயேசு நமக்கு உணர்த்துகிறார். நோன்பிருத்தல் ஒரு வெளிச்சடங்காக மட்டும் அமைந்துவிடலாகாது. மாறாக, நோன்பிருப்போர் கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும். மனிதரிடமிருந்து புகழ்மொழி எதிர்பார்க்காமல் கடவுளுக்கு மட்டுமே தெரியும் விதத்தில் நோன்பிருத்தலே உண்மையான நோன்பு (மத் 6:16-18).

மன்றாட்டு
இறைவா, உடலை ஒறுக்கும் நாங்கள் உள்ளத்தைத் திறந்து உம்மை ஏற்றிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-----------------------------

-பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை-

இயேசுவின் அன்புக்குரியவரே!

எப்பொழுது நாம் பழையதையும் புதியதையும் கலக்கிறோமோ அப்பொழுது அங்கெல்லாம் குழப்பமும் இழப்பும் எற்படுவதை அறிவோம். ஏனென்றால் இரண்டும் இணைந்து செல்வது கடினம்.கிறிஸ்தவர்கள் நாம் "புது நெறி"யைச்(தி.தூ 9 :2) சார்ந்தவர்கள். புதிய படைப்பு (1 கொரி 11 :25). புதிய மனித இனம்( எபே 2 :15). புதிய மனிதன் (எபே 4 :24). புதிய மனித இயல்பு (கொலோ 3 :10). புதிய வழி(எபி 10 :20) புதிய கட்டளை (யோவா 13 :34). புதிய உடன்படிக்கை ( கொரி; 11 :25).

தூய ஆவி அருளும் புதிய நெறியில்"(உரோமை7"6) இத்தனை புதியவைகளை உள்ளடக்கிய நாம், சட்டங்களுக்குள்ளும் சம்பிரதாயங்களுக்குள்ளும் அடைக்க முற்பட்டால், சட்டங்களும் சம்பிரதாயங்களும் சிதைந்தழியும்.கிறிஸ்தவம் என்றும் புதியது. அதற்கு முதுமை பழமை என்பது இல்லை. காலத்தின் சுழற்சிக்கு எற்ப என்றும் தன்னை புதுப்பித்துக்கொண்டு மக்களை புதிய வானகம், புதிய வையகம், புதிய எருசலேம் நோக்கி அழைத்துச் செல்வது கிறிஸ்தவம். 

ஆகவே தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, அவரால் வழி நடத்தப்படுவதற்குப் பதிலாக, "அவர் நோன்பிருந்தார், அந்த காலத்தில் அப்படி இருந்தோம்,அந்த வழிபாட்டு முறைதான் வேண்டும் என்பதெல்லாம் பழைய பாத்திரத்தில் புதிய இரசத்தை அடைக்கும் முயற்சி. அது பாத்திரத்தை உடைக்கும் முயற்சி. இரசத்தை வீணாக்கும் செயல். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது. இதைச் செய்வோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.


இயேசுவின் பார்வை

இயேசுவைப்போல எளிதான, மக்கள் பயன்பாட்டில் உள்ளவற்றை வைத்து, புரிய முடியாத விண்ணரசை புரிய வைக்கிறவர் யாரும் இருக்க முடியாது. அவருடைய போதனையை முழுவதுமாக நாம் ஒன்றுதிரட்டிப்பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புலப்படும். இன்றைய நற்செய்தியும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அறிய முடியாத, புரிய முடியாத வாழ்க்கை இரகசியங்களை இயேசு வெகுஎளிதாக நமக்குப் புரிய வைத்துவிடுகிறார். நமது வாழ்வின் வெற்றி பெற, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தாலே போதும். அதுவே நாம் அடைய வேண்டிய இலக்கை வெகு எளிதாகக் காட்டிவிடும். இயேசுவின் வாழ்க்கை ஒரு வெற்றி வீரரின் வாழ்க்கை. அவரது வெற்றிக்கு காரணம், அவர் இந்த உலகத்தையும், நடக்கும் நிகழ்ச்சிகளையும் பார்த்தவிதம் தான், என்பது அவரின் வாழ்வை சிந்தித்துப் பார்த்தால் நன்றாகத் தெரியும்.

கடற்கரையில் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கிறார். போதிக்கிறபோது, அங்கே இருக்கிற மீனவர்களைப் பார்க்கிறார். மீன்களைப் பார்க்கிறார். வலைகளைப் பார்க்கிறார். அதிலிருந்து மக்களுக்கு இறையாட்சியின் தத்துவத்தை விளக்குகிறார். மரத்தின் நிழலில் அமர்ந்திருக்கிறார். பயிரிடுவதைப் பார்க்கிறார். களைகளைக் காண்கிறார். அருமையான செய்தியை மக்களுக்கு அறிவிக்கிறார். தொழுகைக்கூடத்தில் மக்கள் நடுவில் போதிக்கிறார். நோயாளிகள் வருகிறார்கள். அவர்களுக்கு சுகம் தருகிறார். அதில் பிரச்சனைகளைச் சந்திக்கிறார். ஆனால், அதன் வழியாக புதிய செய்தியை, யாரும் இதுவரை சிந்தித்திராத கோணத்தை அவர்களுக்குக் காட்டுகிறார். இவ்வாறு அவர் வாழ்வில் பேசிய அனைத்து வார்த்தைகளும், சந்தித்த நிகழ்வுகளும் மிகப்பெரிய வரலாறாக பதியப்படுகிறது. இவையனைத்திற்கும் அடிப்படை காரணம், இயேசுவின் பார்வை. ஒவ்வொன்றையும் பார்க்கிறார். கவனமாகப் பார்க்கிறார். அது கற்றுத்தரும் பாடத்தை உணர்ந்து கொள்கிறார்.

நமது வாழ்விலும் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக பார்க்க வேண்டும். அது நமக்கு தரும் படிப்பினைகளை கற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என்று, பெரும்பான்மை மக்கள் வாழும் வாழ்வை வாழாமல், துடிப்போடு, வாழ்வின் அனுபவத்தோடு, அது தரும் படிப்பினைகளோடு நாம் வாழ பழகிக்கொள்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்கட்டும்

யூதர்களின் நோன்பு என்பது ஒரு பெரிதான காரியம் அல்ல. காலை 6.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை நோன்பு நேரம். அதற்கு பிறகு வழக்கமான உணவு உண்ணலாம். பாரம்பரிய யூதர்களுக்கு நோன்பு என்பது வழக்கமான கடைப்பிடிக்கக்கூடிய ஒரு பழக்கம். ஆண்டிற்கு ஒருமுறை பாவக்கழுவாய் நாள் அன்று, அனைத்து யூதர்களும் நோன்பிருப்பார்கள். இன்னும் சில பாரம்பரிய யூதர்கள் வாரத்தில் இருமுறை அதாவது திங்களும், வியாழனும் இருந்தார்கள். இதைத்தான் இந்த நற்செய்தியிலும் பார்க்கிறோம்.

இயேசு நோன்பிற்கு எதிரானவர் அல்ல. ஏனென்றால் நோன்பு என்பது ஒருவன் தன்னையே அடக்கி ஆள, உதவி செய்கின்ற ஒன்றாகும். வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உணர்வோடு, தன்னடக்கத்தோடு வாழத்தூண்டுகின்ற ஒன்றாகும். ஆனால், பரிசேயர்களை பொறுத்தவரையில், அவர்களின் நோன்பு சுய இலாபத்திற்கானதாக இருந்தது. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளும் வாய்ப்பாக, அவர்கள் நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தங்களை மற்றவர்களைவிட உயர்வாக எண்ணுவதற்கும் நோன்பு ஒரு காரணமாக அமைந்தது. இதை இயேசு கண்டிக்கிறார்.

எந்தவொரு செயல்பாடும், நல்ல நோக்கத்தோடு, எண்ணத்தோடு அமைய வேண்டும். அப்படி அமையவில்லையென்றால், அது கேள்விக்குள்ளாக்கப்படும். நமது செயல்பாடுகள் நல்ல எண்ணத்தோடு, செயல்பாட்டோடு அமைய வேண்டும். அதற்கான அருளை ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைவனின் பிரசன்னம், மகிழ்ச்சியின் தருணம்

யூதச்சட்டப்படி ஆண்டிற்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்படும் பாவக்கழுவாய் போக்கும் நாளன்று அனைவரும் கட்டாயம் நோன்பிருக்க வேண்டும். இது தவிர, சில பழமைவாத யூதர்கள் வாரத்திற்கு இருமுறை நோன்பிருந்தனர்(திங்கள் மற்றும் வியாழன், காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை). திருமணத்தைப்பொறுத்தவரையில் யூதர்களுக்கு திருமணம் முடிந்தாலும் ஒரு வாரமோ அல்லது இன்னும் அதிக நாட்களோ தொடர்ச்சியாக விருந்து நடைபெறும். விருந்தினர்களுக்காக திருமண வீடு எப்போதும் திறந்தே இருக்கும். திருமண விருந்து மகிழ்ச்சியான விருந்து. எனவே, திருமண விருந்தில் பங்குபெறும் விருந்தினர்களுக்கு, வாரம் இருமுறை நோன்பு இருப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அவர்களின் மகிழ்ச்சிக்கு இடையூறு ஏற்படாதவாறு இந்த விலக்கு அவர்களுக்குத் தரப்பட்டிருந்தது.

இதைத்தான் இயேசு இங்கே சுட்டிக்காட்டுகிறார். "மணமகன் தங்களோடு இருக்கும் வரை நோன்பிருக்க முடியுமா?" மாற்கு 2: 19. இயேசு கிறிஸ்து நோன்பு இருப்பதை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஏனென்றால், இயேசுவே தன்னுடைய பணிவாழ்வின் தொடக்கத்தில் 40 நாட்கள் பாலைவனத்தில் நோன்பிருந்தார். மாறாக, இயேசு வழியாக கடவுள் அவர்கள் மத்தியில் இருக்கிறபோது, மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்ற செய்தியைத்தருகிறார். நம் ஒவ்வொருவருக்கும் இயேசுகிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்கிற எண்ணம் மகிழ்ச்சியைத்தர வேண்டும். "இதோ! உலகம் முடியும் மட்டும் நான் உங்களோடு இருக்கிறேன்" என்று மொழிந்த நம் அன்பு ஆண்டவர், தன்னுடைய வாக்குறுதிக்கு ஏற்ப இன்றளவும் நம்மோடு இருக்கிறார்.

வாழ்வில் துன்பங்கள், துயரங்கள் நம்மை வாட்டும்போது, நம்பிக்கையிழந்து வாடும்போது இயேசுவின் இந்த மொழிகள் நமக்கு ஆறுதலைத்தர வேண்டும். இயேசுவின் இருப்பை நம்வாழ்வில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உணர்வோம். மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

--------------------------------------

நோன்பு இருப்பார்கள் !

தமது சீடர்கள் நோன்பிருக்க வேண்டிய தேவையில்லை என்று வாதம் செய்யும் இயேசு, "மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்" என்று சொல்லத் தவறவில்லை.

அவ்வாறே, இயேசுவின் விண்ணேற்புக்குப் பிறகு, திருத்தூதர்களும், தொடக்க காலக் கிறித்தவரும் நோன்பிருந்து இறைவேண்டல் செய்ததை திருத்தூதர் பணிகள் நூலில் வாசிக்கிறோம். இறைவாக்கினரும், போதகருமான பர்னபா, லூக்கியு, மனாயீன், சவுல் ஆகியோர் நோன்பிருந்து வழிபடும்போது தூயஆவியாரின் வழிநடத்துதலைப் பெற்றுக்கொண்டார்கள் (திப 13:3). அதுபோல, மூப்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போதெல்லாம் நோன்பிருந்து செபிக்கும் பழக்கம் அவர்களிடம் இருந்தது என்பதையும் (திப 14: 23) அறிகிறோம்.

நோன்பிருந்து செபிப்பது வலிமையானது என்பதை ஆண்டவர் இயேசுவே "இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது" (மாற் 9:29) என்னும் சொற்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

இயேசுவின் சீடர்களான நாமும் நோன்பிருப்போமாக! நோன்புடன் கூடிய இறைவேண்டலினால் வலிய செயல்களை நிகழ்த்துவோமாக!

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். பல்வேறு சிக்கல்கள் நிறைந்த நாள்களில் வாழ்கின்ற நாங்கள் ஆன்ம வலிமைபெற நோன்பிருந்து மன்றாடும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கும் அருள்தருவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி. குமார்ராஜா

 

-----------------------------------------------

இணையதள உறவுகளே

கலப்படம் என்றைக்குமே வகைக்கு உதவாது. அது மட்டுமல்ல பல சிக்கல்களுக்கும் காரணமாகிவிடும். கலப்படம் தன்நிலையை இழந்துவிடும். அடுத்தவன் நிலையையும் அழித்துவிடும். பொருளில் மட்டுமல்ல கலப்படம்.சிலருக்கு வாழ்வே கலப்படம்தான். உள்ளொன்று புறமொன்று. முன்னால் ஒன்று, முகத்திற்குப் பின்னால் இன்னொன்று. கல்யாண வீட்டிற்குச் சென்று, கருமாதி வீட்டில் இருப்பதுபோல இருந்தால் ஊர் உன்னைச் சிரிக்காதா?

இயேசு இதைத்தான் இங்கு குறிப்பிடுகிறார். பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்? கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும்.

கிறிஸ்தவம் ஒரு புதிய ஆடை. ஒரு புதிய திராட்சை மது.ஒவ்வாதவற்றையும் தரம் குறைந்தவைகளையும் கலக்க வேண்டாம்.தனித்தன்மையைப் பாதுகாப்போம். பலன்கொடுப்போம்.

______________
இயேசுவைப் போல மன்னியுங்கள்!

மன்னிப்பு கிறித்தவ வாழ்வின் அடிப்படை மதிப்பீடுகளுள் ஒன்று. மன்னிப்பின் அருமையை, அவசியத்தைப் புதிய ஏற்பாடு பல வழிகளில் எடுத்துரைக்கிறது:

1. மன்னிப்பு ஒரு நிபந்தனை: 
இறைவனிடமிருந்து மன்னிப்பைப் பெறுவதற்கான நிபந்தனையாக நாம் பிறரை மன்னிக்க வேண்டும் என்று மொழிந்தார் இயேசு. "மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்"(மத் 6:14-15)

2. மன்னிப்பு ஓர் இறைச்செயல்: 
நாம் பிறரை மன்னிக்கும்போது, இறைவனின் சாயலில் நாமும் பங்குபெறுகிறோம். இறைவனைப் பின்பற்றுகிறோம். எனவேதான், பவுலடியார் இவ்வாறு கூறினார்: "கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்" (எபே 4:32). "ஒருவரைப் பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல நீங்களும் மன்னிக்க வேண்டும்" (கொலோ 3:13)

3. மன்னித்தல் ஓர் அழைப்பு: 
பிறரை மன்னிக்கவேண்டும் என்பது இயேசுவின் சீடர்கள் அனைவருக்கும் அவர் தந்த கட்டளை, அழைப்பு. "மன்னியுங்கள். மன்னிப்பு பெறுவீர்கள்"(லூக் 6:37)

4. மன்னித்தல் ஓர் அன்புச் செயல்: 
"உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துகொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள்."(லூக் 17:3)

5. மன்னிப்பு செபத்தை எளிதாக்குகிறது:
"நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார்மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள். அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்" (மாற் 11:25). எனவேதான், நாள்தோறும் திருப்பலியின் தொடக்கத்திலேயே மன்னிப்பு வழிபாட்டை அமைத்திருக்கிறது திருச்சபை.

6. மன்னிப்பு ஒரு பழக்கம்:
"ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பிவந்து "நான் மனம் மாறிவிட்டேன்" என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள்" (லூக் 17:4). எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று பேதுரு கேட்டபோது, இயேசு தந்த பதில்: "ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்" (மத் 18:22)

எனவே, மன்னித்தலை நம் அன்றாடப் பழக்கமாக மாற்றிக்கொள்வோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நோன்பெனப்படுவது யாதெனில்...

1814 ஆம் ஆண்டு, பிரான்சுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையாகப் போர் நடந்துமுடிந்த தருணம். பிரான்சு நாடானது சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்கக் கைதிகளை அவர்களுடைய நாட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தது. அந்த காலக்கட்டத்தில் கப்பல் போக்குவரத்துதான் பிரதானப் போக்குவரத்தாக இருந்தது. எனவே அமெரிக்க இராணுவ வீரர்களை அவர்களுடைய நாட்டிற்கு கப்பல் மூலம் ஏற்றி அனுப்பிவைத்துவிடலாம் என பிரான்சு அரசாங்கம் முடிவுசெய்தது. அதன்படி ஒரு கப்பலானது ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்தக் கப்பல் தயாராவதற்கு ஒரு வாரம் ஆகும் என்றொரு நிலை ஏற்பட்டது. இதனால் பிரான்சு அரசாங்கம் அமெரிக்க இராணுவ வீரர்களை பக்கத்தில் இருந்த ஒரு கிராமத்திற்கு அனுப்பி, அங்கிருந்தவர்களிடம் அமெரிக்க இராணுவ வீரர்களை விருந்தினர்களைப் போன்று கவனித்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லியது. கிராமத்து மக்களும் அவர்களை விருந்தினர்களைப் போன்று கவனித்துக் கொண்டார்கள்

இது நடந்து இரண்டு நாட்கள் கழித்து, அமெரிக்க இராணுவத்தைச் சார்ந்த அதிகாரி ஒருவர் பிரான்சு நாட்டு அரசாங்கத்திடம், "ஐயா! நீங்கள் எங்களை கப்பல் வரும்வரைக்கும் உங்கள் நாட்டில் இருக்கின்ற சிறையிலேயே வைத்துவிடுங்கள்" என்று கெஞ்சிக் கேட்டார். அதற்கு பிரான்சு அரசாங்கம், "ஏன்?, என்ன ஆயிற்று?, கிராமத்து மக்கள் உங்களுக்கு உணவு கொடுக்கவில்லையா?" என்று கேட்டது. அதற்கு அந்த அமெரிக்க அதிகாரி, "அப்படியில்லை, நாங்கள் தங்கியிருக்ககூடிய வீடுகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். போரினால் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டினால் அவர்களுக்கே போதுமான உணவு இல்லை. அப்படி இருக்கும்போது அவர்கள் தங்களுடைய உணவை எங்களுக்குக் கொடுத்துவிட்டு, அவர்கள் பசியாய் இருக்கின்றார்கள். இதனை எங்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அதனால்தான் சொல்கின்றோம் நீங்கள் எங்களை சிறையில் அடைத்துவிடுங்கள்" என்று.

இதைக் கேட்டு பிரான்சு நாட்டு அரசாங்கம் உள்ளம் குளிர்ந்து போனது. தங்களுடைய வறிய நிலையிலும் தங்களை நாடி வந்த இராணுவ வீரர்களுக்கு உணவு கொடுக்கவேண்டும் என்று நினைத்துச் செயல்பட்ட அந்த கிராமத்து மக்களை எண்ணிப் பெருமை கொண்டது. அதே நேரத்தில் கப்பல் வரும்வரைக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு போதுமான ஏற்பாடுகளைச் செய்துதந்து, கப்பல் வந்தபிறகு அவர்களை நல்ல முறையில் வழியனுப்பியது.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் கிராமத்து மக்கள் தாங்கள் உணவு உண்ணாமல், பட்டினி கிடந்து தங்களை நாடி வந்த வீரர்களுக்கு உணவு கொடுத்து உதவியது என்பது பாராட்டுக்குரியதாக இருக்கின்றது.

உண்ணாமல் இருப்பதினால் அல்லது உண்ணா நோன்பிருப்பதினால் மூலம் நாம் பிறருக்கு நன்மை செய்யவேண்டுமே ஒழிய, நாம் இருக்கும் உண்ணா நோன்பு நம்முடைய ஆணவத்தை, அகங்காரத்தை வளர்ப்பதாக இருக்கக்கூடாது என்னும் உண்மையை இந்த நிகழ்வானது மிக அழகாக எடுத்துக் கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஒருசிலர் ஆண்டவர் இயேசுவிடம், "யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருக்கவில்லை?" என்றொரு கேள்வியைக் கேட்கின்றார்கள். இயேசு அவர்களுக்குச் சொல்லக்கூடிய பதிலைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னதாக அவர்கள் எப்போது எப்படி நோன்பிருந்தார்கள் என்று சிந்தித்துப் பார்ப்பது சாலச் சிறந்தது. வழக்கமாக யூதர்கள் பாவப் பரிக்கார நாளில் ஆண்டுக்கு ஒருமுறைதான் நோன்பிருந்து வந்தார்கள். ஆனால் பரிசேயர்களோ தங்களை நேர்மையாளர்களாகக் காட்டிக்கொள்ள வாரத்தில் இரண்டு நாட்கள் நோன்பிருந்தார்கள். இந்த இரண்டு நாட்கள் சந்தை கூடும் நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யூதர்கள் மெசியாவின் வருகைக்காக நோன்பிருந்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் மெசியாவாகிய இயேசு வந்தபிறகும் அவர்கள் நோன்பிருந்து வந்ததுதான். ஆகவே, பரிசேயர்கள் மற்றும் யோவானின் சீடர்கள் அடிக்கடி நோன்பிருந்ததன் உள்நோக்கம் அவர்கள் மக்களுடைய கவனத்தைப் பெறுவதற்காகவே அன்றி வேறொன்றுமில்லை.

இந்தப் பின்னணியில் வைத்து இயேசு சொல்லக்கூடிய பதிலை நாம் புரிந்துகொள்ளவேண்டும். "மணமகன் மணவீட்டாரோடு இருக்கும்போது அவர்கள் நோன்பிருக்கத் தேவையில்லை, மாறாக அவர் அவர்களை விட்டுப் போனபின்பு அவர்கள் நோன்பிருக்கலாம்" என்று சொல்வதன் மூலம் இயேசு நோன்பிருக்க ஒரு காலம் இருக்கின்றது அந்த காலத்தில் நோன்பிருந்தால் போதுமானது, மக்களுடைய கவனத்தை ஈர்க்க செய்யப்படும் நோன்பு நோன்பாக இருக்காது என்று இயேசு சொல்லாமல் சொல்கின்றார். நாம் எத்தகைய மனநிலையோடு நோன்பிருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்த்துக்கொள்ளவேண்டும். நாம் இருக்கும் நோன்பு பிறருக்கு நன்மை தருகின்றதா? அல்லது நாம் நோன்பின் அர்த்தத்தை உணர்ந்து இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். உண்மையான மனநிலையோடு செய்யப்படும் நோன்பிற்கு வல்லமை அதிகம்.

ஆகவே, நோன்பின் அர்த்தத்தை உணர்ந்து நோன்பிருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.

வெளியடையாளங்களைவிட உள்ளார்ந்த பற்றும், பக்தியுமே சிறந்தது

ஓர் ஊரில் விவசாயி ஒருவர் இருந்தான். அவன் நாள்முழுவதும் காட்டில் வேலைபார்த்துவிட்டு, மாலைநேரத்தில் கோவிலில் நடைபெறக்கூடிய தீப ஆராதனையில் தவறாதுவந்து கலந்துகொள்வான்.

ஒருநாள் விவசாயி தன்னுடைய வேலையை முடித்துவிட்டு சற்றுக் காலதாமதமாக  கோவிலுக்கு வந்தான். அதற்குள் கோவில்பூசாரி தீப ஆராதனை எல்லாம் முடித்துவிட்டு, வீட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார். அவசர அவசரமாக ஓடிவந்த விவசாயி, பூசாரி தீப ஆராதனையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவதைப் பார்த்து அவரிடம், "எனக்காக தீப ஆராதனை நடத்த முடியுமா? என்று கேட்டான். அதற்கு பூசாரி, "நீ உன்னுடைய பெருமூச்சையும், வேதனையையும் எனக்குக் கொடு, நான் உனக்காக தீப ஆராதனை நடத்துகிறேன்" என்றார்.

தீப ஆராதனையை இழக்க விரும்பாத விவசாயி தன்னுடைய பெருமூச்சையும், வேதனையையும் கொடுத்துவிட்டு, தீப ஆராதனையில் கலந்துகொண்டான்.

அன்றிரவு கடவுள் விவசாயின் கனவில் தோன்றி, "இன்றைக்கு நீ நடந்துகொண்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு தீப ஆராதனைக்காக உன்னுடைய ஆர்வத்தையும், பெருமூச்சையும், வேதனையையும் பூசாரிக்குக் கொடுத்துவிட்டாயே, அவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் செய்த பூசைகளுக்கும், பலிகளுக்கும் உன்னுடைய பெருமூச்சும், ஆர்வமும் ஈடாகாது" என்றார். கடவுள் அவரிடம் தொடர்ந்து சொன்னார், "நான் ஒருபோதும் வெளியடையாளங்களை விரும்புவதில்லை, உள்ளார்ந்த பக்தியும், பற்றும்தான் எனக்குப் பிடித்தமான ஜெபம்" என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

உண்மையான ஜெபம்/வழிபாடு எப்படி இருக்கவேண்டும் என்பதை இந்தக் கதையானது நமக்கு அழகாக எடுத்துரைக்கிறது.

நற்செய்தி வாசகத்தில் ஒருசிலர் இயேசுவிடம், "பரிசேயர்களின் சீடர்களும், யோவானின் சீடர்களும் நோன்பிருக்க உம்முடைய சீடர்கள் மட்டும் ஏன் நோன்பிருப்பதில்லை?" என்று கேட்கின்றனர். அதற்கு இயேசு, "மணமகன் மனவீட்டாரோடு இருக்கும்போது அவர்கள் நோன்பிருப்பதில்லை. மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம்வரும். அப்போது அவர்கள் நோன்பிருப்பார்கள்" என்கிறார். அதாவது நோன்பிருப்பதற்கு என்று ஒருகாலம் இருக்கிறது, அந்த நேரத்தில் அவர்கள் நோன்பிருப்பார்கள் என்று இயேசு மிகத் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

இவ்வாசகம் நமக்கு ஒருசில உண்மைகளை தெளிவாக விளக்குகிறது. முதலாவதாக கடவுளை வழிபடுவது மட்டும், ஒருசில சடங்குமுறைகளைச் செய்வது எல்லாம் ஒருவரின் தனிப்பட விஷயம். அதை மற்றவர்கள்மீது திணிக்கக்கூடாது. இன்றைக்கு நமது நாட்டில் ஒரே நாடு, ஒரே மதம் (இந்து மதம்) என்ற கொள்கையை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று திணிக்கப்பார்க்கிறார்கள். இது ஒருவரின் தனக்குப் பிடித்த மதத்தை பின்பற்றலாம் என்ற கொள்கைக்கு எதிரானது. நற்செய்தியில்  இயேசுவிடம் வந்தவர்கள், "பரிசேயரின் சீடர்களும், யோவானின் சீடர்களும் நோன்பு இருக்கும்போது, உம்முடைய சீடர்களும் நோன்பு இருக்க வேண்டியதுதானே" என்று சொல்லி ஒரு கருத்தைத் திணிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் இயேசு அவர்களுக்கு தகுந்த பதிலைச் சொல்லி வாயடைக்கிறார்.

இரண்டாவதாக நாம் செய்யக்கூடிய வழிபாடு யாவும் பெயரளவுக்கு இல்லாமல், உள்ளார்ந்த விதமாகவும், நம்முடைய வாழ்வையே மாற்றுவதாகும் இருக்கவேண்டும். இதனை இயேசு மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறார், "பலிகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத் 9:13) என்று இயேசு சொல்வதன் வழியாக இயேசு வழிபாடு என்பது நம்முடைய வாழ்வில் பிறரன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தவேண்டும் என்று விரும்புகிறார்.

ஆகவே நாம் நமது அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் பக்தி முயற்சிகள் (நோன்பு உட்பட) யாவையும் உள்ளார்ந்த விதத்தில் மேற்கொள்ளுவோம்; இரக்கத்திலும், அன்பிலும் மேலும் மேலும் வளருவோம். அதோடு மட்டுமல்லாமல் எவ்வகை பக்தி முயற்சிகளையும் பிறர்மீது திணிக்காமல் வாழ்வோம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.


- Fr. Maria Antony, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
இனி எல்லாம் சுகமே!
எலய எடுடான்னா


நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு:

"எலய எடுடான்னா, தலய எண்ணுற வேலை உனக்கெதுக்கு?"

அதாவது, திருமண விருந்து முடித்து இலையை எடுடான்னு ஒருவனுக்கு வேலை கொடுக்கப்பட, அவன் அத்தோடு சேர்ந்து தலையையும் எண்ணிக் கொண்டிருந்தானாம்!

அதாவது, நமக்குச் சொல்லப்படும் வேலை ஒன்று. ஆனால் நாம் செய்யும் வேலை வேறொன்று.

இதை நம்ம ஊர் கடைகளில் நிறைய பார்க்கலாம்.

"நாம் "ரின் சோப" கொடுங்கள்!" என்று கேட்டால், கடைக்காரர், "ஏரியல" சோப் கொடுத்து, "இது நல்லா இருக்கும் தம்பி!" என்பார். கடைக்காரர்கள் வாடிக்கையாளர்கள் கேட்பதை தரவேண்டுமே தவிர, தங்களிடம் இருப்பதை தரக்கூடாது. இல்லையா?

இப்படித்தான் நடக்கிறது நாளைய முதல்வாசகத்தில் (1 சாமு 15:16-23).

சவுலிடம், "இலையை எடுடா" என ஆண்டவர் சொல்ல, அவரோ, "தலையை எண்ணிக்கொண்டு" நிற்கிறார்.

அமலேக்கியருக்கு எதிரான போர். இதுதான் சவுலின் முதல் போர்.

அமலேக்கிய நாட்டிலுள்ள உடைமைகள், ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், பாலகர்கள், மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்றுவிடுமாறு சவுலுக்கு கட்டளையிடுகின்றார் இறைவன்.

இந்த இடத்தில் நமக்கு ஒரு கேள்வி வரலாம். அன்பும், இரக்கமும் உள்ள இறைவன் எப்படி எல்லா உயிர்களையும் கொல்லுமாறு சொல்லலாம்? வாக்களிக்கப்பட்ட நாட்டில் இஸ்ரயேலர் குடியிருக்கும்போது, அது நன்றாக அழித்து, சுத்தம் செய்யப்பட்ட புதிய கரும்பலகை போல இருக்க வேண்டும். இதற்காகத்தான் இந்தக் கட்டளை.

சவுல் அமலேக்கியரை வென்றாலும், தான் கண்டதில் சிறந்தவற்றையெல்லாம், தனக்கும், தன் வீரர்களுக்கும் என வைத்துக்கொள்கிறார் - பெண்கள், ஆடுகள், மாடுகள் போன்றவற்றில் சிறந்தவற்றை வைத்துக்கொண்டு, பயனற்றவற்றை அழித்துவிடுகின்றனர்.

இது ஆண்டவருக்குப் பிடிக்கவில்லை. சாமுவேலை அனுப்பி, "தம்பி! ராசா! ஏம்ப்பா இப்படி செய்தாய்?" என்று கேட்டபோது, சவுல் ரொம்ப கூலா, "இது எனக்கா! இல்லை கடவுளுக்கு பலி செலுத்த!" என்கிறார்.

ஆனால், இந்தக் காரணத்தை ஆண்டவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

சவுல் புறக்கணிக்கப்படுகிறார். மூன்று காரணங்கள்:

அ. தனக்கு எல்லாம் தந்தவர் கடவுள். இன்னும் தனக்கு தரவல்லவர் அவர் என்பதை சவுல் மறந்துவிட்டு, தன் கையிருப்பை பார்க்கத் தொடங்குகிறார்.

ஆ. "அவர் சொன்னதைச் செய்துவிட்டு அமைதி காண்போம" என்று இருப்பதற்கு பதிலாக, தானே ஒரு புதிய செயலைச் செய்து, அதை பலி என்ற பெயரில் நியாயப்படுத்துகிறார்.

இ. சவுல், கடவுளை மகிழ்ச்சிப்படுத்துதலை விட்டு, தனக்கு கீழ் இருக்கும் படைவீரர்களுக்கு அன்பளிப்பு கொடுத்து குஷிப்படுத்த நினைக்கிறார்.

இலையை எண்ணச் சொன்னாலோ, எடுக்கச் சொன்னாலோ,
இலையை மட்டும் எண்ணலாமே! எடுக்கலாமே!

Yesu Karunanithi, Madurai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
இணக்கத்தன்மை

"இணக்கத்தன்மை" ("compatibility") என்பது உறவுகள் மேலாண்மையியல் அதிகமாக பேசப்படும் ஒரு சொல்லாடல்.

இந்த இணக்கத்தன்மை இருக்கும்போது மனித உறவு நிலைகள், குடும்பம், வேலை, படிப்பு - என அனைத்து தளங்களிலும் இலகுவாக அமைகின்றன.

இயேசுவின் சமகாலத்து யூத சமயச் சடங்கான நோன்பிருத்தலில் இருந்த இணக்கத்தன்மை இயேசுவின் வருகையால் - புதிய மணமகனின் வரவால் - கெடுவதாக யோவானின் சீடர்களும் மற்றவர்களும் நினைக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் தான் ஒரு புதிய துணி என்றும், தன்னால் பழைய துணியோடு தன்னை ஒட்டிக்கொள்ள முடியாது என்றும், தான் ஒரு புதிய இரசம் என்றும், இந்தப் புதிய இரசத்தை பழைய தோற்பைகள் கொள்ளாது எனவும் உருவகமாகப் பேசுகின்றார் இயேசு.

ஆக, பழையது பழையதோடும், புதியது புதியதோடும் இணக்கத்தன்மை கொண்டிருக்கும் என்பது இயேசுவின் கருத்து.

இந்த இணக்கத்தன்மையை எப்படி வளர்த்துக்கொள்வது?

"பழைய துணியோடு புதிய துணியை எப்படி இணைப்பது?"

"பழைய தோற்பையில் புதிய மதுவை எப்படி ஊற்றி வைப்பது?"

பழையவற்றை அழிப்பதன் வழியாகவே இது சாத்தியமாகும். பழைய துணி கிழிக்கப்பபட வேண்டும். பழைய தோற்பையின் மது கொட்டப்பட வேண்டும்.

பழையது கழிந்தவுடன் புதியது வரும். புதியது அடுத்தவற்றுடன் இணக்கத்தன்மை கொண்டிருக்கும்.

பழையதை தூக்கி எறிய மிகப் பெரிய துணிச்சல் வேண்டும். சின்ன உதாரணம், நம்ம வேலை பார்க்கும் டேபிளை, அல்லது நாம் முக அலங்காரம் செய்யும் கண்ணாடிக்கு அருகில் உள்ள மேசையை பார்ப்போம். "இதை மாற்ற வேண்டும்!" "இதைத் தூக்கி எறிய வேண்டும்" என நாம் நினைத்து அவற்றை தூக்கி எறியாமல் வைக்கக் காரணம் என்ன?

புதியவற்றோடு இணக்கத்தன்மை கொண்டிருக்க தடையாக இருப்பது எது?

Fr. Yesu Karunanidhi

Madurai
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!