Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       12  ஐனவரி 2018  
                         பொதுக்காலத்தின் முதல் வாரம் - வெள்ளிக்கிழமை
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: "மக்கள் குரலையும், அவர்கள் உன்னிடம் கூறுவது அனைத்தையும் கேள்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 4-7,10-22

அந்நாள்களில் இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் ஒன்று கூடிச் சாமுவேலிடம் இராமாவுக்கு வந்தனர். அவர்கள் அவரிடம், "இதோ உமக்கு வயது முதிர்ந்துவிட்டது. உம் புதல்வர்கள் உம் வழிமுறைகளில் நடப்பதில்லை. ஆகவே, அனைத்து வேற்றினங்களிடையே இருப்பது போன்று ஓர் அரசனை நியமித்தருளும்" என்று கேட்டுக்கொண்டனர். "எங்களுக்கு நீதி வழங்க ஓர் அரசனைத் தாரும்" என்று அவர்கள் கேட்டது, சாமுவேலுக்குத் தீயதெனப் பட்டது. சாமுவேல் ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டார். ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: "மக்கள் குரலையும், அவர்கள் உன்னிடம் கூறுவது அனைத்தையும் கேள். ஏனெனில், அவர்கள் உன்னைப் புறக்கணிக்கவில்லை. அவர்களை நான் ஆளாதபடி என்னைத் தான் புறக்கணித்துவிட்டனர்." ஓர் அரசன் வேண்டும் என்று தம்மிடம் கேட்ட மக்களுக்கு சாமுவேல் ஆண்டவர் கூறிய அனைத்தையும் கூறினார்: "உங்கள் மீது ஆட்சிசெய்யும் அரசனின் உரிமைகளாவன: அவன் உங்கள் புதல்வர்களைத் தன் தேரோட்டிகளாகவும் தன் குதிரை வீரர்களாகவும் வைத்துக்கொள்வான். அவர்களைத் தன் தேர்களுக்குமுன் ஓடச் செய்வான். அவன் அவர்களை ஆயிரத்தினர் தலைவராகவும், ஐம்பதின்மர் தலைவராகவும், தன் நிலத்தை உழுபவராகவும், தன் விளைச்சலை அறுவடை செய்பவராகவும், தன் போர்க் கருவிகளையும் தேர்க் கருவிகளையும் செய்பவராகவும் நியமித்துக் கொள்வான். மேலும் அவன் உங்கள் புதல்வியரைப் பரிமளத் தைலம் செய்கிறவர்களாகவும், சமைப்பவர்களாகவும், அப்பம் சுடுபவர்களாகவும் வைத்துக்கொள்வான். அவன் உங்கள் வயல்களிலும், திராட்சைத் தோட்டங்களிலும், ஒலிவத் தோப்புகளிலும் சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு தன் அலுவலருக்குக் கொடுப்பான். உங்கள் தானியத்திலும் திராட்சைப் பலனிலும், பத்தில் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு தன் காரியத் தலைவருக்கும் அலுவலருக்கும் கொடுப்பான். உங்கள் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும், உங்கள் கால்நடைகளில் சிறந்தவற்றையும் உங்கள் கழுதைகளையும் தன் சொந்த அலுவலுக்காகப் பயன்படுத்துவான். உங்கள் மந்தைகளில் பத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்வான். நீங்கள் அவனுக்குப் பணியாளர்களாய் இருப்பீர்கள். அந்நாளில் நீங்களே உங்களுக்காகத் தேர்ந்துகொண்ட அரசனை முன்னிட்டு முறையிடுவீர்கள். அந்நாளில் ஆண்டவர் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டார். மக்களோ சாமுவேலின் குரலுக்குச் செவிகொடுக்க மறுத்து, "இல்லை, எங்களுக்குக் கட்டாயமாய் ஓர் அரசன் வேண்டும். அனைத்து வேற்றின மக்கள் போலவே நாங்களும் இருப்போம். எங்கள் அரசன் எங்களுக்கு நீதி வழங்குவார். எங்கள் போர்களை முன்னின்று நடத்துவார்" என்றனர். மக்கள் கூறியவை அனைத்தையும் சாமுவேல் கேட்டு, அவற்றை ஆண்டவர் காதில் போட்டுவைத்தார். ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: "அவர்கள் குரலுக்குச் செவிகொடுத்து, அவர்கள்மீது ஓர் அரசனை ஆளச் செய்"


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்  தி:பா: 89: 15-16. 17-18
=================================================================================
பல்லவி: ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்.

15 விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். 16 அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். -பல்லவி

17 ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது. 18 நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது; நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர். -பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================

அல்லேலூயா, அல்லேலூயா! "நம்மிடையே பெரிய இறைவாக்கினா் ஒருவா் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்"அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தூயமாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார். அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், "இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" என உள்ளத்தில் எண்ணிக்கொண்டிருந்தனர். உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்? முடக்குவாதமுற்ற இவனிடம் "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்பதா? "எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட" என்பதா? எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ" என்றார். அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், "இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே"

இயேசுவின் அன்புக்குரியவரே!

இதைப்போல நாம் ஒருபோதும் காண முடியாது. ஏனென்றால் அங்கு நடந்தது ஒரு நிகழ்ச்சி அல்ல, பல. அன்றாட நிகழ்ச்சி அல்ல, அபூர்வமானது. முடக்குவாதம் குணமாகியுள்ளது. பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன. நல்லவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர. மறை நூல் வல்லுநரின் வெளி வேடம் வெளிச்சமிடப்பட்டுள்ளது.

நல்லவர்கள் நான்குபேர் எடுத்த முயற்சி, ஒருபோதும் காணாத அதிர்ச்சியையும் ஆனந்தத்தையும் கொடுத்துள்ளது. இந்த நான்குபேரிடமிருந்த பண்புகள் நாட்டில் பெருகும் போதெல்லாம் நம்மிடையே ஒருபோதும் காணாத அதிசயங்களைக் காண முடியும்.

இயேசுவின் குணப்படுத்தும் ஆற்றல் மீது ஆழ்ந்த நம்பிக்கை, நோயுற்ற மனிதன் குணம் பெற வேண்டும் என்ற ஆசை, தங்கள் நேரத்தையும் உழைப்பையும் அதற்காக ஒதுக்கும் தாராள மனது இவை எங்கெல்லாம் வெளிப்படுகிறதோ அங்கெல்லாம் அற்புதங்களைக் காணமுடியும்.

நல்லவைகள் நடைபெறும்போது குறைகாண்பதற்கென்றே சில அறிவாளிகள் அங்கங்கே வருவார்கள். அவர்களை இயேசுவைப்போல அலட்சியம் செய்து, நற்செயல்கள் நடைபெற நல்லவர்கள் முன்வந்தால் நாள்தோறும் நம்மிடையே இதுபோன்றவைகளை கண்டு மகிழலாம். நல்லவர்களில் ஒருவராகுங்கள். இதைப்போல எப்போதும் காண்போம். வாழ்த்துக்கள். ஆசீர்;.

_______

பாவ மன்னிப்பு

இயேசு தனது போதனையாலும், வாழ்வாலும் அதிக எண்ணிக்கையிலான மக்களை எளிதாக கவர்ந்துவிட்டார். இயேசு சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அவரைப் பின்தொடர்ந்தது. இயேசுவை அவர்கள் கடவுளின் பிரதிநிதியாகவே பார்த்தார்கள். இயேசுவிடத்தில் ஏதோ அதிசயிக்கத்தக்க ஒன்றை மக்கள் உணர்ந்திருக்க வேண்டும். அதனால் தான் அவரை ஏராளமான மக்கள் பின்தொடர்ந்தார்கள். இயேசு மக்கள் மத்தியில் பிரபலமடைந்துவிட்டார் என்பதையே மறைநூல் அறிஞர்களின் வருகை எடுத்துக்காட்டுகிறது. ஏனென்றால், போதிப்பவர்களில் உண்மையானவர் அல்லது போலியானவர் என்பதை, தலைமைச்சங்கம் முடிவு செய்தது. மக்கள் மத்தியில் இயேசு புகழ்பெற்றதனால், அவரைப்பற்றி தெரிந்து கொள்வதற்காக, அறிஞர்கள் அங்கே வந்திருந்தனர்.

இயேசு எப்படி பாவங்களை மன்னிக்கலாம்? என்பது அவர்களின் கேள்வியாக இருந்தது. ஏனென்றால், கடவுள் ஒருவர் மட்டும் தான் பாவங்களை மன்னிக்க முடியும். அப்படியிருக்க இயேசு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, என்று எப்படிச் சொல்லலாம், என்று அவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இயேசு தனக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் இருக்கிறது என்பதை, அழகாக அவர்களுக்கு, எடுத்துக்காட்டு மூலமாக விவரிக்கிறார். அவர்களால் பதில் சொல்லவும் முடியாமல், என்ன சொல்வதென்றும் புரியாமல் விழிக்கிறார்கள். இங்கே இயேசு ஒரு ஆழமான செய்தியைத்தருகிறார். தான் பாவங்களை மன்னிக்கிறேன் என்று சொல்வதை விட, தான் பாவங்களை மன்னிப்பதற்கு கடவுளின் வாய்க்காலாக இருக்கிறேன் என்பதை அவர் வெளிப்படுத்துகிறார். தாவீது தவறு செய்தபோது, நாத்தான் இறைவாக்கினர் அவரிடம் அனுப்பப்படுகிறார். தாவீது தனது தவறுக்காக மனம் வருந்தியவுடன், நாத்தான் சொல்கிறார்: "ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய்" (2சாமுவேல் 12: 13). இங்கே நாத்தான் தாவீதின் பாவங்களை மன்னிக்கவில்லை. மாறாக, கடவுளின் மன்னிப்பை எடுத்துரைக்கிறார். அதேபோலத்தான் இயேசுவும், கடவுளின் மன்னிப்பை அங்கே வெளிப்படுத்துகிறார்.

நமது வாழ்வில் நாம் கடவுளின் மன்னிப்பைப் பெறுவதற்காகத்தான் திருச்சபை, பாவ மன்னிப்பு அரும்அடையாளத்தைத் தந்திருக்கிறது. அருட்பணியாளர் என்றுமே பாவத்தை மன்னிப்பது கிடையாது. அவருக்கு அந்த அதிகாரமும் கிடையாது. மாறாக, கடவுளின் மன்னிப்பை வழங்கும் வாய்க்காலாக அவர் இருக்கிறார். அவர் வழியாக நமக்கு கடவுளின் அருளும் கிடைக்கிறது. அந்த மன்னிப்பையும், அருளையும் நிரம்பப் பெற்றுக்கொள்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

ஒருவரின் நம்பிக்கை மற்றவருக்கு இறைஅருளை பெற்றுத்தர முடியும் என்பது இன்றைய நற்செய்தியின் மூலம் தெளிவாகிறது. யூதர்களைப்பொறுத்தவரையில் உடல் நலக்குறைவுக்கும், பாவத்திற்கு தொடர்பு உள்ளதாக நம்பினர். இன்றைய நற்செய்தியிலே வருகிற முடக்குவாதமுற்ற மனிதரின் நிலைமைக்குக் காரணம் அவன் செய்த பாவம் என்பதுதான் அவர்களின் நம்பிக்கை. எனவேதான், இயேசு உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று சொல்கிறார்.

இந்த வாசகத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று, முடக்குவாதமுற்றவர்களைத் தூக்கிக்கொண்டு வந்த அந்த நால்வரின் நம்பிக்கை. இயேசு அவர்களின் நம்பிக்கையைக்கண்டு அவரைக்குணப்படுத்துகிறார். வழக்கமாக இயேசு, குணம் பெற வந்தவரின் நம்பிக்கையைப்பார்த்து, அவரின் நம்பிக்கையின் பொருட்டு குணப்படுத்துவார். ஆனால், இந்தப்பகுதியில் மற்றவர்களின் நம்பிக்கையைக்கண்டு குணப்படுத்துகிறார். நம்முடைய நம்பிக்கையின் வழியாக மற்றவர்களின் வாழ்க்கையில் கடவுளின் அருளைப்பெற்றுத்தர முடியும். புனித அகுஸ்தினாரின் தாய் மோனிக்காவின் செபம், கடவுள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை, அகுஸ்தினாரின் வாழ்வையே புரட்டிப்போடுவதாக அமைந்திருந்தது. பழைய ஏற்பாட்டிலே சோதோம் நகரை அழிக்கக் கடவுள் திட்டமிட்டபொழுது, ஆபிரகாம் அந்த நகருக்காகப் பரிந்துப்பேசுகிறார். அப்போது பத்து நீதிமான்களின்பொருட்டு, அந்த நகரை அழிக்க மாட்டேன் என்கிறார். இதனுடைய பொருள் கடவுள் நம்பிக்கையோடு நேர்மையோடு வாழும் மனிதர்கள்பொருட்டு மற்றவர்களுக்கு வாழ்வு தருகிறார் என்பதே.

நாமும் நம்முடைய குடும்பத்திலே தீய வாழ்க்கை வாழுகின்றவர்களுக்காக, கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்களுக்காக மன்றாடும்போது, அவர்களின் வாழ்வும் நிச்சயம் மாறும். அவர்களும் இறையருளைப்பெற்றுக்கொள்வார்கள். அவர்களுக்காக நாம் தொடர்ந்து செபிப்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

----------------------------------------

செயலில் வெளிப்படும் விசுவாசம்

பாலஸ்தீனத்தில் இருக்கக்கூடிய வீடுகள் எப்போதும் திறந்தவண்ணமாய் இருக்கும். அதற்கு காரணம், உபசரிப்பு. யாரும் எந்த வேளையிலும் வீட்டிற்குள் வரலாம் என்பதன் பொருள். பயணிகள், வழிதவறி வருகிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை வரவேற்று உபசரிப்பது, யூதர்களின் வழக்கம். எளிமையான வீடுகளில் உபசரிப்பு அறை என்று தனியே எந்தவொரு அறையும் கிடையாது. கதவைத்திறந்தால் தெரு முழுவதும் தெரியும். அத்தகைய எளிமையான வீட்டில் இயேசு இருந்ததால், உள்ளே யாரும் செல்ல முடியாத அளவுக்கு, கூட்டம் அதிகமாக இருந்தது.

பாலஸ்தீன வீடுகளில் மேற்கூரை பொதுவானது. மேலே இருந்து இறங்குவதற்கு வசதியாக படிக்கட்டுக்களும் இருக்கும். இயேசு அவர்களைப்பார்த்த மட்டில் ஒன்றுமே கேட்கவில்லை. அவர்களின் விசுவாசத்தை உடனடியாகப் புரிந்து கொள்கிறார். அவர்களின் செயல் விசுவாசத்தைப்பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. உடனடியாக அவனுக்கு சுகம் கொடுக்கிறார். விசுவாசம் என்பது பலவிதங்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும். அவற்றில் ஒன்று செயல் வழியாக வெளிப்படுத்துவது என்பதை இந்த நற்செய்தி நமக்குச் சொல்கிறது.

நமது வாழ்வில், நமது செயல்பாடுகள் விசுவாசத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறதா? நமது எண்ணங்களும், சிந்தனைகளும் விசுவாசத்தை அடிப்படையாகக்கொண்டு அமைந்திருக்கிறதா? சிந்திப்போம், செயல்படுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நலம் பெற தேவை பாவமன்னிப்பு !

உடல் நலத்திற்கும், பாவ மன்னிப்புக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை எடுத்துக்காட்டுகிறது இன்றைய நற்செய்தி வாசகம். முடக்குவாதமுற்ற மனிதரைக் குணப்படுத்த விரும்பும் இயேசு "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்கிறார்.

உடல், உள்ள நலம் பெறுவதற்காக தியானங்கள் நடைபெறுகின்ற இடங்களில் பாவ மன்னிப்புப் பெற ஒப்புரவு அருள்சாதனப் பங்கேற்பு மிகவும் வலியுறுத்தப்படுகின்றது. நமது ஆன்மாவையும், உள்ளத்தையும் அழுத்தும் குற்ற உணர்வு, பாவக் கறைகள் நீக்கப்பட்டால்தான் நாம் உடல் நலம் பெறமுடியும், முழுமையான குணம் பெறமுடியும் என்பதை உளவியல் அறிஞர்கள் இன்று சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, முன் எப்போதையும்விட அதிகமாக நாம் வாழும் இந்நாள்களில் ஒப்புரவு அருள்சாதனத்தின் அருமை, அவசியம் எடுத்துரைக்கப்பட வேண்டும். இறைவனின் இரக்கத்தையும், மன்னிப்பையும் அனுபவிப்பவர்களால்தான் முழுமையான நலம் பெறமுடியும் என்பதைப் பிறருக்கு அறிவிப்போமாக!

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். பாவிகளாகிய எம்மீது இரக்கம் கொண்டு, எங்களை மன்னிப்பீராக. இதனால், உமது நலமளிக்கும் ஆற்றலை நாங்கள் பெற்று, உடலிலும் உள்ளத்திலும் நலம் பெறுவோமாக. உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-பணி. குமார்ரஜா

---------------------------------------------------------

அவர்களால் இவர் குணமடைந்தார்!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் முடக்குவாதமுற்ற மனிதர் ஒருவரை நால்வர் சுமந்து இயேசுவிடம் கொண்டுவந்ததையும், இயேசு அந்த மனிதரைக் குணமாக்கி அனைவர் முன்னும் அவர் படுக்கையை எடுத்துக்கொண்டு வெளியே போகச் செய்த நிகழ்வையும் பார்க்கிறோம்.

இதில் நம் கவனத்தை ஈர்க்கும் செய்தி இதுதான்: வீட்டின் முன் மக்கள் கூட்டம் திரண்டிருந்த காரணத்தால் அவர்களால் இம்மனிதரை வீட்டுக்குள் இயேசுவிடம் கொண்டுவர முடியவில்லை. எனவே, அவர்கள் வித்தியாசமான ஒரு செயலைச் செய்கிறார்கள். வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு, திறப்பு வழியாக அந்த மனிதரை படுக்கையோடு கீழே இறக்கினார்கள். இயேசு " அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு" முடக்குவாதமுற்ற மனிதரைக் குணமாக்கினார்.

அந்த நால்வரின் நம்பிக்கைதான் இந்த மனிதருக்கு நலம் தந்தது. அவர்கள் இயேசுவின் ஆற்றலில் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகத்தான் வித்தியாசமாகச் சிந்தித்து, அவரை கூரை வழியே உள்ளே கொண்டுவந்தனர். அவர்களது நம்பிக்கையைக் கண்டுதான் இயேசு அவரை நலப்படுத்தினார்.

சில நேரங்களில் குடும்பத்தினரின், நண்பர்களின் நம்பிக்கையும், வேண்டுதலும் ஒரு மனிதருக்கு நலம் தருவதை நமது அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். எனவேதான், நமக்கு வேண்டியவர்களிடம் நமக்காக இறைவனிடம் மன்றாடக் கேட்டுக்கொள்கிறோம்.

நமக்கு வேண்டியவர்கள், நண்பர்களை இன்று நினைவுகூர்ந்து, அவர்களுக்காக நம்பிக்கையுடன் இன்று மன்றாடுவோமா!

மன்றாடுவோம்: உலகின் ஒளியான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். அந்த நான்கு மனிதர்களின் நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்ற மனிதரைக் குணமாக்கினீரே. எங்களுடைய நம்பிக்கையை, வேண்டுதலை ஏற்றுக்கொண்டு, எங்கள் உறவினர், நண்பர்.... முழு நலமும், ஆசியும் வழங்குவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

---------------------------------------------------

இணையதள உறவுகளே

எதிலும் முதலிடம் எப்போதும் முன்வரிசை எதிலும் முன்னால் என்று எல்லோருக்கும் ஒரு ஆசை இருப்பது முறையானதே. அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவும் சிறப்பாக பெரிய மனிதர்களின் கவனத்தைக் கவரவும் முதலிடத்தைத் தேடுவர். இப்படித்தான் அந்த முடக்குவாதமுற்ற மனிதனை கூரையைப் பிரித்து இயேசுவின் முன் இறக்கினார்கள். என்ன முயற்சி! என்ன சிரமம். என்ன இழப்பு. எல்லாம் இயேசுவின் கவனத்தைப்பெரும் பொருட்டு.

இயேசு அவர்களின் முயற்சியையும் நம்பிக்கையையும் பாராட்டி, அவர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக அவனைக் குணப்படுத்துவதோடு மட்டுமல்லாது அவனது பாவங்களையும் மன்னிக்கிறார். எதிர்பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மேலாகத் தருபவர் அல்லவா. எனவே உடல் நோய், மனநோய், ஆன்ம நோய் என அனைத்தையும் நீக்கி முழு மனித சுகத்தையும் கொடுக்கிறார்.

இயேசுவின் முன்னால் அமருங்கள். அவரின் சிறப்பான கவனத்தைப் பெறுவீர்கள். ஆலயத்திலும் திருப்பலியிலும் முதலிடத்தில் அமர இன்று ஆட்கள் முன்வருவதில்லை. எங்கு இயேசுவின் கவனம் நம்மீது பட்டுவிடுமோ என்ற பயமா? முன்னால் அமர்ந்து இயேசுவின் கவனத்தைக் கவர்ந்து அவரது ஆசீர் பெறுவோம். உடலிலும் உள்ளத்திலும் ஆன்மாவிலும் சுகம் பெற்று இனிது வாழ்வோம்.

-ஜோசப் லீயோன்



அந்த நாலு பேருக்கு நன்றி !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

நற்செய்தியில் பெயர் குறிப்பிடப்படாத நான்கு மனிதர்கள் இன்று நம் கவனத்தை ஈர்க்கின்றனர். இவர்கள் முடக்குவாதமுற்ற ஒரு மனிதரை சுமந்து இயேசுவிடம் கொண்டுவந்தனர். இயேசு அவரைத் தொட்டு அவரைக் குணமாக்கவேண்டுமென்ற எண்ணத்தில்தான். ஆனால், மக்கள் கூட்டத்தின் காரணமாக வீட்டிற்குள்ளே போகமுடியாதபோது, அவர்கள் வித்தியாசமான ஒரு செயலைச் செய்தனர். இயேசு வீட்டிற்குள் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி முடக்குவாதமுற்றவரை படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட அம்மனிதரைக் குணப்படுத்தினார். அவர்களுடைய நம்பிக்கையை என்று நற்செய்தியாளர் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். அந்த நான்கு மனிதர்களும் அவரது நண்பர்களாக அல்லது உறவினர்களாக இருக்க வேண்டும்.

அவர்களிடம்
1. இந்த மனிதர்மீது பரிவும்,
2. அவருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பும்,
3. இயேசுவிடம் கொண்டு சென்றால் குணமடைவார் என்ற நம்பி;க்கையும்,
4. எப்படி வீட்டிற்குள் கொண்டுசெல்லலாம் என்ற படைப்பாற்றலும் இருந்தன.

இவை அனைத்தையுமே நாமும் பின்பற்றி நாம் அன்பு செய்கிறவர்கள்மீது நமது பாசத்தை வெளிப்படுத்தலாம்.

மன்றாடுவோம்: பாசத்தின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குத் தந்திருக்கிற நல்ல நண்பர்களுக்காக, உறவினர்களுக்காக நன்றி செலுத்துகிறோம். அவர்கள்மீத நாங்கள் கொண்டிருக்கும் பாசத்தை இந்த விவிலிய மனிதர்கள் வெளிப்படுத்தியதுபோல நாங்களும் வெளிப்படுத்த அருள் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

---------------------------

இயேசுவின் அன்புக்குரியவரே!"இயேசு இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத்திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்" (மாற்கு 2:4)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- கப்பர்நாகும் ஊரில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. இயேசுவைத் தேடி மக்கள் பெருங்கூட்டமாக வருகிறார்கள். அப்போது சிலர் முடக்குவாதத்தால் துன்புற்ற ஒருவரைப் படுக்கையோடு தூக்கிவருகிறார்கள். வீட்டு வாயில் வழியே உள்ளே நுழையமுடியாத அளவு மக்கள் கூட்டம். எனவே, கூரையைப் பிரித்து நோயாளியைப் படுக்கையோடு இயேசுவின் முன்னிலையில் இறக்குகிறார்கள். இவ்வாறு தம்மைத் தேடி வருகின்ற மக்களின் நம்பிக்கையை இயேசு பாராட்டுகின்றார். நோயுற்ற மனிதரைக் குணப்படுத்துகின்றார். இயேசுவிடம் கடவுளின் வல்லமை துலங்கியது என யார் ஏற்றுக்கொண்டார்களோ அவர்களது வாழ்வில் அதிசயங்கள் நிகழ்ந்தன; பிணிகள் அகன்றன; நலம் பிறந்தது. இயேசுவை நம்பியோர் கடவுளையே நம்பினர்; அவரிடத்தில் வெளிப்பட்ட கடவுளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டனர். முடக்குவாதமுற்ற மனிதருக்கு இயேசு உடல் நலம் மட்டும் நல்கவில்லை; அம்மனிதரின் வாழ்வில் முழுநலனைக் கொணர்ந்தார். உடலும் உள்ளமும் ஆன்மாவும் நலம் பெற்றதால் அம்மனிதர் நோயிலிருந்தும் நோயின் மூல காரணமாகக் கருதப்பட்ட பாவத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

-- கடவுள் மட்டும்தானே பாவத்தை மன்னிக்க முடியும் என மறைநூல் அறிஞர் கேட்ட கேள்வி சரியானது என இயேசு ஏற்கிறார். அதே சமயத்தில் பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் தமக்கு உண்டு எனவும் இயேசு அறிக்கையிடுகிறார். இதனால் இயேசு வழியாகக் கடவுள் செயலாற்றினார் என்னும் உண்மையை இயேசு நிலைநாட்டினார்.

மன்றாட்டு
இறைவா, உம் வல்லமையால் புத்துணர்வு பெற்ற மனிதராக நாங்கள் வாழ வரமருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்



"இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம்,
"மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்" (மாற்கு 2:5)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- இயேசு இருந்த இடத்தில் மக்கள் பெருந்திரளாகக் கூடியிருக்கின்றனர். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரைப் படுக்கையோடு கொண்டுவருகின்றனர். ஆனால் இயேசுவை அணுகிச் செல்ல இயலாத அளவு பெருங்கூட்டம். படுக்கையோடு நோயாளியைக் கொண்டுவந்த ஆட்கள் வீட்டின் கூரையை உடைக்கின்றர்; திறப்பு உண்டாக்கி அந்நோயாளியைப் படுக்கையோடு கீழே இறக்குகின்றனர். திடீரென்று தம் முன்னே வந்துசேர்ந்த மனிதரை இயேசு நோக்குகின்றார். அந்த மனிதர்கள் இயேசுவின் வல்லமையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இயேசு நினைத்தால் முடக்குவாதமுற்ற மனிதர் மீண்டும் எழுந்து நடக்க முடியும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. ஆனால் இயேசு அந்த மனிதருக்கு உடல் நலம் மட்டும் நல்கவில்லை; அந்த மனிதருக்கு ஆன்ம நலத்தையும் அளிக்கிறார். அதாவது, முடக்குவாதமுற்ற மனிதருடைய பாவங்களை மன்னிக்கிறார். பாவமே நோய்க்குக் காரணம் என மக்கள் நினைத்த காலம் அது. ஆனால் இயேசு முடக்குவாதமுற்ற மனிதரின் பாவம்தான் அவருக்கு அந்நோயைக் கொணர்ந்தது என்று கூறவில்லை. மாறாக, உடல் நலம் அளிப்பதற்கு முன்னர் இயேசு ஆன்ம நலம் அளிக்கிறார்.

-- முடக்குவாதத்தால் துன்புற்ற அந்நோயாளி எதைக் குறிக்கிறார்? மனித வாழ்க்கையில் எழுகின்ற சிக்கல்களின் காரணமாகக் கூனிக் குறுகிப் போகின்ற மனிதரை நாம் அந்த முடக்குவாதமுற்றவரில் காண்கிறோம். உள்ளத்தைக் கவலை கவ்விக்கொள்ளும்போது ஒருவித செயலறுநிலை நம்மில் தோன்றிவிடுகிறது. இத்தகைய நிலையிலிருந்து நம்மை இயேசு விடுவிக்கின்றார். பாவம் என்பது நம்மைக் கடவுளிடமிருந்தும் பிறரிடமிருந்தும் பிரித்துவிடுகிறது; நாம் நன்மை செய்வதிலிருந்து நம்மைத் தடுத்துவிடுகிறது. இத்தகைய செயலறு நிலையிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் நிலவுகின்ற அடிமைத் தளைகள் அறுந்து விழ வேண்டும். உள்ளத்திலும் ஆன்மாவிலும் விடுதலையை நாம் உணரும்போது நம் இதய ஆழத்தில் கடவுளையும் பிறரையும் நாம் அன்போடு ஏற்போம்; நலமடைவோம்.

மன்றாட்டு
இறைவா, எங்களைப் பிணைத்திருக்கின்ற சுயநலத் தளைகளை அறுத்தெறிந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நாலு பேரும், நாற்பது பேரும்

"நாலு பேரு நம்மள என்ன நினைப்பாங்க?"

"நாலு பேரு நாலுவிதமா பேசுவாங்க! கவனமாக இரு!"

என்னும் சொல்லாடல்கள் நம் வழக்கில் உண்டு. இந்த நான்கு பேர் யார் என்பதற்கு விளக்கம் சொல்லும் கவியரசு கண்ணதாசன், நாம் இறந்தபின் நம்மைச் சுமந்து செல்லும் நாலு பேரே அவர்கள் என்கிறார். அதாவது, நம் இறுதியை நினைத்து ஒவ்வொரு நாளும் வாழ்ந்தால் நாம் நன்றாக வாழ்வோம் என்பது கண்ணதாசன் தரும் பொருள்.

நாளைய நற்செய்தியிலும் (காண். மாற்கு 2:1-12) ஒரு நாலு பேரை நாம் பார்க்கிறோம்.

முடக்குவாதமுற்ற ஒருவரை இந்த நான்கு பேர் இயேசுவிடம் தூக்கிக்கொண்டு வருகின்றனர். இவர்கள் என்னை ஆச்சர்யப்பட வைக்கிறார்கள். எப்படி?

முடக்குவாதமுற்ற நபர் விண்ணப்பம் செய்யாமலேயே இவர்கள் அவர்மேல் அக்கறை கொண்டு அவரைத் தூக்கி வருகின்றனர். கட்டிலில் நான்கு பேர் சுமந்து வருவதைப் பார்த்தவர்கள் கண்டிப்பாக இவர்களைக் கேலி செய்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.

மேலும், இயேசுவைச் சுற்றி கூட்டம் அமர்ந்திருந்தாலும் ஒரு மாற்று வழியை யோசிக்கின்றனர். யார் வீட்டுக் கூரையோ, இவர்கள் வேகமாக பிரித்து விடுகின்றனர். இயேசு போதனையை முடிக்கும் வரை காத்திருக்கும் பொறுமையும் இவர்களிடம் இல்லை. தாங்கள் நினைத்ததை தெளிவாகவும், வேகமாகவும் செய்து முடிக்கின்றனர்.

இந்த நான்கு பேருக்கு எதர்பதமாக அந்த வீட்டில் நாற்பது பேர் இருக்கின்றனர்.

முணுமுணுக்கின்றனர். கேள்வி கேட்கின்றனர். கடின உள்ளம் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் இயேசுவையோ, முடக்குவாதமுற்றவரையோ, தூக்கி வந்தவர்களையோ பாராட்டவில்லை. இவர்கள் பார்வை எல்லாம் எதிர்மறையாகவே இருக்கின்றது.

ஆக, ஒரே ஊரில், ஒரே குழுமத்தில், ஒரே சமூகத்தில் இரண்டு வகையான மக்களும் நம்மைச் சுற்றி இருக்கின்றார்கள்.

நாம் கூப்பிடாமலேயே நமக்கு உதவி செய்பவர்களும் இருக்கிறார்கள்.

நாம் கூப்பிடாமலேயே நமக்கு எதிரிகளாக வருபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், தனி மனிதர் என்ன செய்ய வேண்டும்?

"தன் கட்டிலைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு நடக்க வேண்டும்"

ஆக, குழுமம் என்பது நாம் உயரம் தாண்டுதல் விளையாட்டில் பிடித்திருக்கும் குச்சி போன்றது. குச்சியைப் பிடித்துக்கொண்டே இருந்தால் நாம் அந்தப் பக்கம் தாண்ட முடியாது. குச்சியை விட வேண்டிய இடத்தில் விட்டு அடுத்த கட்டத்திற்கு நகல வேண்டும்.

இன்று நான் என் குச்சியை விட்டுவிட தயரா?

குழுமத்தில் நான் யார்? நான்கில் ஒருவரா? நாற்பதில் ஒருவரா?

Fr. Yesu Karunanidhi

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 நம்பிக்கையை மட்டும் இழக்கவேண்டாம்.

ஒரு புராதன கதை.

வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பொன்றை எடுத்துக்கொண்டு வேட்டைக்குப் போனான். அவன் போனநேரம் மரத்தடியில் மான் ஒன்று படுத்துக்கிடந்தது. உடனே வேடன் தன்னிடம் இருந்த (விஷம் தோய்த்த) அம்பை எடுத்து, குறிபார்த்து மானின் மீது ஏவினான். ஆனால் குறிதவறி அம்பானது மானின்மீது படாமல், அதற்குப் பின்னால் இருந்த மரத்தின்மீது பட்டது. இதனால் ஒருசில நாட்களிலே அந்த மரமானது பட்டுப்போனது.

மரத்தில் இருந்த எல்லாப் பறவைகளும் அந்த மரத்திலிருந்து பறந்து சென்று வேறொரு இடத்திற்குச் சென்றன. ஆனால் ஒரே ஒரு கிளி மட்டும் மரம் ஒருநாள் தளிர்க்கும் என்று நம்பிக்கையோடு, நன்றியுணர்வோடு இருந்தது.

நாட்கள் சென்றன. மரம் தளிர்பதாக இல்லை, மாறாக மேலும் மேலும் அந்த மரம் காய்ந்துகொண்டே போனது. மரத்தோடு அந்தக் கிளியும் மெலிந்துகொண்டே போனது. இச்செய்தியைக் கேட்டு ஒருவர் வந்தார். அவர் அந்தக் கிளியிடம், "மரம்தான் பட்டுப்போயிற்றே, இன்னும் எதற்கு இப்படி நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருக்கிறாய்?, தயவுசெய்து இந்த மரத்தைவிட்டுப் போய்விடு, இல்லையென்றால் நீயும் மடிந்துபோய்விடுவாய்" என்றார்.

அதற்கு அந்தக் கிளி, "இல்லை இல்லை என்னால் இந்த மரத்தைவிட்டுப் போகமுடியாது. நல்ல காலத்தில் இம்மரத்தோடு இருந்த நான், இதன் துன்பகரமான நேரத்தில் இதைவிட்டுப் போனால் நான் நன்றியுணர்வு இல்லாதவன் ஆகிவிடுவேன். ஆதலால் இந்தமரம் ஒருநாள் தளிர்க்கும். அந்த நம்பிக்கை எனக்கிருக்கிறது" என்றது.

ஆனால் வானதூதரோ, "மரம் தளிர்க்கவே தளிர்க்காது" என்று உறுதியாகச் சொன்னார். இதைக் கேட்ட அந்தக் கிளி, "மரம் தளிர்க்கவே தளிர்க்காது என்று உறுதியாகச் சொல்கிறாயே, நீங்கள் யார்?" என்று கேட்டது. அதற்கு வந்தவர், "நான் வானதூதர், மேலுலகத்திலிருந்து வந்திருக்கிறேன்" என்றார். உடனே கிளி, "நீங்கள் மேலுலகத்திலிருந்து வந்திருக்கும்போதே தெரிகிறது என்னுடைய நம்பிக்கை சாதாரணமானது அல்ல என்று. இந்த மரம் தளிர்க்கிறதோ, இல்லையோ சாகும்வரை இந்த மரத்தில்தான் நான் இருப்பேன், இதைவிட்டுப் போகமாட்டேன்" என்றது.

இதைக்கேட்ட வானதூதர் கிளியின்மேல் இரக்கம்கொண்டு, "இந்த மரத்தின்மீது நீ வைத்திருக்கும் அன்பைப் பார்த்து, உனக்கு ஒரு வரம் தருகிறேன், நீ என்ன வேண்டுமானால் கேள்" என்று. அதற்கு அந்தக் கிளி, "இந்த மரம் தளிர்க்க வேண்டும் அவ்வளவுதான்" என்றது. உடனே வானதூதர் அந்த மரத்தைத் தளிர்க்கச் செய்து, அவ்விடத்திலிருந்து அகன்றார். கிளி அந்த மரத்திலேயே சாகும்வரை இருந்தது.
நம்பிக்கையோடு இருந்தால் நடக்காததுகூட நடக்கும் என்பதை இக்கதையாது நமக்கு எடுத்துக்கூறுகிறது. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு முடக்குவாதமுற்ற ஒருமனிதரைக் குணப்படுத்துகிறார். அதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது நம்பிக்கைதான்.

கப்பர்நாகுமில் உள்ள வீட்டில் இயேசு போதித்துக்கொண்டிருக்கிறார். அவர் இருந்த வீடு முழுவதும் மக்கள்கூட்டம் நிரம்பி வழிகிறது. அப்போது முடக்குவாதமுற்றவற்ற மனிதருக்கு இயேசுவிடமிருந்து தயவு கிடக்கவேண்டும் என்று நினைத்த நால்வர், அவர் இருந்த வீட்டின் கூரையில் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைக் கீழே இறக்குகிறார்கள். இயேசு அவர்களின் நம்பிக்கையைக் கண்டு, முடக்குவதமுற்றவருக்கு நலமாளிகிறார்.

இங்கே அந்த நான்கு மனிதர்களின் நம்பிக்கை அசைக்கமுடியாதது. இயேசுவால் முடக்குவாதமுற்றவருக்கு நலமளிக்கமுடியும் என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. இயேசுவின் சீடர்களாகிய நம்மிடம் அந்த நால்வரிடம் இருந்த உறுதியான நம்பிக்கை இருக்கிறதா என்று சிந்தித்துப் பாரக்கவேண்டும். வாட்ஸ் என்ற அறிஞர் இவ்வாறு குறிப்பிடுவார், "வாழ்வில் நீ முறிந்து வருந்தும் நிலையிலும் நம்பிக்கை கொண்டு, அதனை வலுவாய் பற்றிக்கொள்க" என்று. ஆம், நம்பிக்கை மட்டும் போதும் துன்பமயமாக நமது வாழ்வு இன்பமயமாகிவிடும்.

ஆதலால் நம்மீது அளவுகடந்த அன்புகொண்டிருக்கும் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கைகொண்டு வாழ்வோம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!