|
10 ஐனவரி 2018 |
|
பொதுக்காலத்தின் முதல் வாரம் - புதன் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 1-10,19-20
அந்நாள்களில் சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு
ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக
இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை. அப்போது ஒரு நாள் ஏலி தம்
உறைவிடத்தில் படுத்திருந்தார். கண்பார்வை மங்கிவிட்டதால் அவரால்
பார்க்க முடியவில்லை. கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை.
கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில்
சாமுவேல் படுத்திருந்தான்.
அப்பொழுது ஆண்டவர், "சாமுவேல்" என்று அழைத்தார். அதற்கு அவன்,
"இதோ! அடியேன்" என்று சொல்லி, ஏலியிடம் ஓடி, "இதோ! அடியேன். என்னை
அழைத்தீர்களா?" என்று கேட்டான். அதற்கு அவர், "நான் அழைக்கவில்லை.
திரும்பிச் சென்று படுத்துக்கொள்" என்றார். அவனும் சென்று படுத்துக்கொண்டான்.
ஆண்டவர் மீண்டும் "சாமுவேல்" என்று அழைக்க, அவன் எழுந்து ஏலியிடம்
சென்று, "இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டான்.
அவரோ, "நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக் கொள்" என்றார்.
சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின்
வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
மூன்றாம் முறையாக ஆண்டவர், "சாமுவேல்" என்று அழைத்தார். அவன்
எழுந்து ஏலியிடம் சென்று, "இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?"
என்று கேட்டான்.
அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி
தெரிந்துகொண்டார். பின்பு ஏலி சாமுவேலை நோக்கி, "சென்று படுத்துக்கொள்.
உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ, "ஆண்டவரே பேசும், உம்
அடியான் கேட்கிறேன்" என்று பதில் சொல்" என்றார். சாமுவேலும் தன்
இடத்திற்குச் சென்று படுத்துக்கொண்டான்.
அப்போது ஆண்டவர் வந்து நின்று, "சாமுவேல், சாமுவேல்" என்று
முன்புபோல் அழைத்தார். அதற்குச் சாமுவேல், "பேசும், உம் அடியான்
கேட்கிறேன்" என்று மறுமொழி கூறினான். சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர்
அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை.
சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டுவிட்டார் என்று,
தாண் முதல் பெயேர்செபா வரையிலும் அனைத்து இஸ்ரயேலரும் அறிந்து
கொண்டனர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 40: 1,4. 6-7a. 7b-8. 9 (பல்லவி: 7a.8a)
=================================================================================
பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன் ஆண்டவரே!
1 நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என்
பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். 4 ஆண்டவர்மீது
நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்; அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்;
பொய்யானவற்றைச் சாராதவர். பல்லவி
6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும்
பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள்
திறக்கும்படி செய்தீர். 7ய எனவே,
"இதோ வருகின்றேன்" பல்லவி
7b என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; 8
என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;
உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான்.
பல்லவி
9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில்
அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே!
நீர் இதை அறிவீர். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! "என் ஆடுகள் எனது குரலுக்குச்
செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்
பின்தொடர்கின்றன," என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
இயேசு பல்வேறு பிணிகளால் வருந்தியவரைக் குணப்படுத்தினார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39
இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து
யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள்
சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார்.
உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில்
சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை
விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.
மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள்,
பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள்.
நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால்
வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்;
அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.
இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப்
புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக்
கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத்
தேடிச் சென்றார்கள்.
அவரைக் கண்டதும், "எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்"
என்றார்கள். அதற்கு அவர், "நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம்,
வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில்
இதற்காகவே நான் வந்திருக்கிறேன்" என்று சொன்னார்.
பின்பு அவர் கலிலேய நாடு முழுவதும் சென்று அவர்களுடைய
தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி
வந்தார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
ஜெபமே நமது வலிமை
இருபதாம் நூற்றாண்டில் மறக்க முடியாத ஒரு மனிதர் ஹென்றி போர்டு
என்பவர். தொழில்நுட்ப அறிவை கைவரப் பெற்றிருந்தவர். "அசம்பளி
லைன்" என்ற புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி கார் உற்பத்தியில்
புரட்சி நிகழ்த்தியவர். அதோடு மட்டுமல்லாமல் தானியங்கிகள்
(Automobiles) தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து, முதன்முதலில்
மிகக்குறைந்த விலையில் காரை விற்பனை செய்தவர்.
இப்படி பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான ஹென்றி போர்டிடம்
அவருடைய எழுபத்தைந்தாவது பிறந்தநாளில், அவருடைய வெற்றியின் ரகசியம்
என்ன என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "நான் எதிலும் நூறு சதவீத உழைப்பைச்
செலுத்துவேன்; எதைக் குறித்தும் கவலைப்படமாட்டேன்; இதைவிட
மேலாக நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். அதனால் இறைவனிடம்
இடைவிடாது ஜெபிப்பேன். அந்த ஜெபமே எனக்கு எல்லா வெற்றியையும்,
மகிழ்ச்சியையும் தருகிறது" என்று சொல்லி முடித்தார்.
மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான ஹென்றி போர்டே தன்னுடைய
வெற்றிக்குக் காரணம் அவர் ஒவ்வொருநாளும் சொல்லக்கூடிய ஜெபம்
என்று சொல்வது நமக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தருகிறது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பல்வேறு பணிகளைச்
செய்கிறார். சீமோனின் மாமியாரைக் குணப்படுத்துகிறார்;
நோயாளிகளைக் குணப்படுத்துகிறார்; பேய்களை ஓட்டுகிறார்;
ஊர்கள்தோறும் நற்செய்தி அறிவிக்கிறார். இத்தகைய பணிகளுக்கு
மத்தியில் இறைவனிடம் தனிமையான இடத்தில் ஜெபிக்கிறார். இந்த
ஜெபமே அவருக்கு எல்லா ஆற்றலையும், வல்லமையையும் தருகிறது என்று
சொன்னால் அது மிகையாகாது.
இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவனிடம்
ஜெபித்தார் என்று பார்க்கும்போது ஜெபம் எந்தளவுக்கு இயேசுவின்
வாழ்வில் முக்கியப் பங்காற்றி இருக்கிறது என்பதை நாம்
உணர்ந்துகொள்ளலாம்.
இன்றைக்கு நாம் நமது வாழ்வை சற்று ஆழமாக சிந்தித்துப்
பார்க்கவேண்டும். ஆண்டவரும், இறைமகனுமாகிய இயேசு கிறிஸ்துவே
இறைவனிடம் தனிமையாக ஜெபித்தார் என்று சொன்னால் நமது வாழ்வில்
ஜெபம் எந்தளவுக்கு முதலிடம் பெறவேண்டும் என்பதை நாம்
சிந்தித்துப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
தூய அகஸ்டின் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார்,
"வேண்டுபவர்களுக்கு உதவி வழங்க இறைவன் எப்போதும் தயாராகவே
இருக்கின்றான்" என்று. ஆம், இது முற்றிலும் உண்மை. திருப்பாடல்
118:5 ல் வாசிக்கின்றோம், "நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை
நோக்கி மன்றாடினேன். அவரும் என்னுடைய மன்றாட்டைக் கேட்டு,
என்னை விடுவித்தார்" என்று.
ஆகவே நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் தொடர்ந்து மன்றாட வேண்டும்.
அதுவே நமக்கு அடைக்கலமும், ஆறுதலும் ஆகும்.
மேலும் ஜெபம் அல்லது இறைவேண்டல் என்றால் என்ன என்று
சிந்தித்துப் பார்க்கவேண்டும். முதல் வாசகத்தில் சிறுவன்
சாமுவேலை ஆண்டவர் அழைக்கின்றபோது அவன், "ஆண்டவரே பேசும், உம்
அடியவன் கேட்கின்றேன்" என்கிறான். இதைவிட சிறந்த ஜெபம்
வேறேதும் இருக்கப் போவதில்லை. எனவே ஜெபம் என்ற பெயரில் வெறுமனே
வேண்டுதல்களையும், மன்றாட்டுகளையும் எழுப்பி, அவரை சோர்வுறச்
செய்யாமல், அவர் பேச நாம் கேட்கவும், நாம் பேச அவர் கேட்கவுமாக
இருக்கவேண்டும். அதுவே உண்மையான் ஜெபமாக இருக்கும்.
ஆதலால் இவ்வளவு வேலைகளுக்கு மத்தியில் நான் எப்படிச்
ஜெபிப்பதற்கு நேரம் ஒதுக்குவது? என்று சாக்குப்போக்குச்
சொல்லாமல், ஜெபமே நமது வாழ்விற்கான ஆற்றல் என்பதை உணர்ந்து,
இறைவனிடம் ஜெபிப்போம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
இனி எல்லாம் சுகமே!
சாமுவேல்
சிறுவன் சாமுவேல் இப்போது ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவரின் இல்லத்தில்
வளர்கிறான்.
அவனுக்கு கடவுளின் வெளிப்பாடு அருளப்படுவதை நாளைய முதல்வாசகத்தில்
நாம் வாசிக்கின்றோம்.
மூன்று விஷயங்களை நாம் இங்கே கவனிக்க வேண்டும்:
அ. விளக்கும் கண்களும். கடவுளின் ஆலயத்தில் விளக்கும் அணைந்தும்,
அணையாமல் மின்னிக் கொண்டிருக்கிறது. ஏலியின் கண்பார்வையும் மங்கிக்
கொண்டிருக்கிறது.
ஆ. 'ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்!' - இப்படி போய்
நீ சொல்! என சாமுவேலுக்கு கட்டளையிடுகிறார் ஏலி. ஆனால், சிறுவன்
என்ன சொல்கிறான் கவனித்தீர்களா? 'பேசும்! உம் அடியான்
கேட்கிறேன்!' என்கிறான். 'ஆண்டவரே' என்னும் வார்த்தையை
விட்டுவிடுகிறான்.
இ. ஆண்டவர் பேசுகிறார். சாமுவேலும் கேட்கிறான். ஆனால், என்ன
பேசினார் என்பது நமக்கு கொடுக்கப்படவில்லை.
சாமுவேலின் இறைவாக்குப் பணி வாழ்வில் இது முக்கியமான கட்டம்.
வீட்டிலிருந்து புறப்பட்டு ஆலயத்திற்கு வந்து இருந்தால் மட்டும்
ஒருவருக்கு கடவுளின் இறைவாக்கு வந்துவிடாது. மாறாக, அவர், தானாகவே
இறைவனின் குரலைக் கேட்க வேண்டும்.
அருட்பணியாளர்கள் மற்றும் பயிற்சி வாழ்விற்கும் இது
பொருந்தும்.
(ஜனவரி 12)
விவேகானந்தரின் பிறந்தாள் விழா.
அவரைப் பற்றிய ஒரு அழகான கட்டுரையை விகடன் இணையதளத்தில்
வாசித்தேன்.
அ. துறவு என்பது அனைவரையும் சகோதர, சகோதரிகளாகப் பார்க்கும்
பரந்த நிலை.
ஆ. மனதை ஒருமுகப்படுத்துவது. ஒருமுறை முடிவு செய்துவிட்டால்
அதிலிருந்து பின்வாங்காமல் இருப்பது.
இ. தேக்க நிலையை அடையாமல் முன்னேறிக்கொண்டு இருப்பது. அறிவோ,
ஆன்மீகமோ தொடர் தேடல் அவசியம்.
இந்த மூன்றும் சாமுவேலின் வாழ்வில் தொடங்குகிறது.
Yesu Karunanidhi, Madurai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
|
|