Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       06  ஐனவரி 2018  
                                                           கிறிஸ்து பிறப்புக்காலம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-6, 8-13

அன்பார்ந்தவர்களே, இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.

எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார். இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை. கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று.

இறைமகனைக் கொண்டிருப்போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்; அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார். இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்துகொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்தி.பா: 147: 12-13. 14-15. 19-20 (பல்லவி: 12ய)
=================================================================================

பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! அல்லது: அல்லேலூயா.

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி

14 அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். 15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். 20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மாற் 9: 7

அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது, தந்தையின் குரலொலி கேட்டது: "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.'' அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 
நீயே என் அன்பார்ந்த மகன், உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்.  

+ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 7-11

அக்காலத்தில் யோவான், "என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்'' எனப் பறை சாற்றினார்.

அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.

அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார்.

அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்'' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்."


பிரிவினை சபையைச் (Protestant) சார்ந்த போதகர் ஒருவர் இருந்தார். அவர் எப்போது பார்த்தாலும் முழுக்கு ஞானஸ்நானத்தைப் பற்றியே போதித்துக்கொண்டு வந்தார். தொடக்கத்தில் அவருடைய போதனையைக் கேட்ட மக்கள், "முழுக்கு ஞானஸ்நானத்தைக் குறித்து இவர் எவ்வளவு அருமையாகப் போதிக்கின்றார்" என்று வியந்து பாராட்டி வந்தார்கள். ஆனால், நாட்கள் ஆக ஆக தொடர்ந்து அவருடைய போதனைக் கேட்டு வெறுப்படைந்த மக்கள் "இவருக்கு முழுக்கு ஞானஸ்நானத்தைத் தவிர வெறும் எதுவும் தெரியாது போலும்" என்று நக்கலாக பேசத் தொடங்கினார்கள்.

மக்கள் இவ்வாறெல்லாம் பேசத் தொடங்கியதைக் கேட்ட அந்த போதகருடைய உதவியாளர் அவரிடம் சென்று, "நீங்கள் எப்போதும் பார்த்தாலும் முழுக்கு ஞானஸ்நானத்தைப் பற்றியே போதித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று மக்கள் கேலியாகப் பேசிக்கொள்கிறார்கள். அதனால் தயவுசெய்து நீங்கள் முழுக்கு ஞானஸ்நானத்தைப் பற்றி போதிப்பதை நிறுத்துங்கள், வேறு எதையாவது, வேண்டுமானால் தொடக்க நூல் 1:1,2 ப் பற்றிப் போதியுங்கள்" என்றார். தன்னுடைய உதவியாளர் சொன்னதை கருத்தில் எடுத்துகொண்டு அடுத்த நாள் அவர் தொடக்க நூல் 1:1,2 ப் பற்றிப் போதிக்கத் தொடங்கினார்.

"தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது" என்று அந்த விவிலியப் பகுதியை வாசித்துவிட்டு நீர்த்திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது என்றால், இந்த உலகம் ஒருபகுதி நிலப்பரப்பாலும் மூன்று நீரினாலும் சூழப்பட்டிருக்கின்றது என்பது எவ்வளவு உண்மையாக இருக்கின்றது. உலகம் மூன்று பகுதி நீரினால் சூழப்பட்டிருக்கின்றது என்றால், தண்ணீரால் வழங்கப்படும் முழுக்கு ஞானஸ்நானம் எவ்வளவு முக்கியத்தும் வாய்ந்தது என்று அதைப் பற்றி மீண்டுமாகப் பேசத் தொடங்கினார். இதைக் கேட்டு மக்கள் தங்கள் நிலைமையை நினைத்து நொந்து கொண்டார்கள்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் போதகர் (முழுக்கு) ஞானஸ்நானத்த்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்து பேசினாரோ இல்லையோ, ஆனால் நற்செய்தி வாசகத்தில் வரக்கூடிய திருமுழுக்கு யோவான் ஞானஸ்நானம் அல்லது திருமுழுக்கின் முக்கியத்துவம் எத்தகையது என்பதை உணர்ந்து அதனை தன்னிடத்தில் வந்த மக்களுக்கு வழங்கிக்கொண்டு வருகின்றார்.

திருமுழுக்கு என்பது பிற சமயத்திலிருந்து யூத சமயத்தில் சேரக்கூடியவர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற ஒன்றாகும். பொதுவாக இதில் புறவினத்தவர்தான் பங்கு பெறுவார்கள். ஆனால், திருமுழுக்கு யோவான் தந்த திருமுழுக்கில் எல்லா மக்களும் கலந்துகொண்டார்கள். அப்படியானால் யோவான் தந்த திருமுழுக்கினை  ஒரு புகுமுக சடங்காக மட்டும் பார்க்காமல், மக்கள் அதனை தங்களை தங்களுடைய பாவங்களிலிருந்து கழுவி ஆண்டவரோடு ஒப்புரவாக்கும் ஒரு கருவியாகத்தான் பார்த்தார்கள். அதனால்தான் யோவானிடத்தில் புறவினத்தார் மட்டுமல்லாமல் எல்லா மக்களும் திருமுழுக்குப் பெற்றார்கள். இவ்வாறு யோவான் தான் வழங்கி வந்த திருமுழுக்கின் வழியாக மக்களை ஆண்டவருடைய வருகைக்காகத் தயார் செய்தார்.

யோவான் திருமுழுக்குக் கொடுக்கின்றபோது சொல்கின்ற வார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. "என்னைவிட வலிமைமிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாராய் அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியஈல்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்கு தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்". இவ்வார்த்தைகள் திருமுழுக்கு யோவான் யார்? அவருடைய பணியென்ன? அவர் கொடுக்கின்ற திருமுழுக்கின் அர்த்தம் என்ன?, இயேசுவின் பணியென்ன என்பதையெல்லாம் நமக்குத் தெளிவாக எடுத்துக் கூறுக்கின்றன. "என்னைவிட வலிமைமிக்க ஒருவர் எனக்குப் பின் வருகின்றார் என்ற வார்த்தைகள், யோவான் மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயார்செய்யக்கூடியவர் என்பதையும் அதற்காக அவர் பயன்படுத்திய ஒரு கருவிதான் திருமுழுக்கு என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேலும் அவர் உங்களுக்கு தூய ஆவியினால் திருமுழுக்கு கொடுப்பார் என்னும் வார்த்தைகள், ஆண்டவர் இயேசு தூய ஆவியினால் நிரப்பப்பட்டு, தன்னுடைய பணியைச் செய்வார் (திப 10: 38) என்பதையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

இங்கே நாம் நம்முடைய கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய செய்தி ஒன்றே ஒன்றுதான். அது யோவான் தான் வழங்கிய திருமுழுக்கின் வழியாக மக்களை ஆண்டவருடைய வருகைக்காகத் தயார் செய்தார் என்பதுதான். அவரைப் போன்று நாமும் மக்களை ஆண்டவரின் வருகைக்காகத் தயார் செய்யவேண்டும். அதுதான் நாம் செய்யவேண்டிய தலையாய பணியாக இருக்கின்றது.

ஆகவே, நாமும் திருமுழுக்கு யோவானைப் போன்று தாழ்ச்சியோடும் பணிவோடும் மக்களை ஆண்டவரின் வருகைக்காகத் தயார் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!