Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       26  ஐனவரி 2019  
பொதுக்காலத்தின் 2ஆம் வாரம்  
புனிதர்கள் திமொத்தேயு, தீத்து - ஆயர்கள் நினைவு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இவ்விழாவுக்கு உரியது. மேய்ப்பர் - பொது (பக்கம் 578).


வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-8

என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது: தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்.

இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவு கூருகின்றேன். உன் கண்ணீரை நினைவிற்கொண்டு உன்னைக் காண ஏங்குகின்றேன்; கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும். வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன். உன்மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன்.

கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.

எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

அல்லது

நற்செய்தியைப் பறைசாற்றும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5

அனைவருக்கும் பொதுவான விசுவாச அடிப்படையில் என் உண்மைப் பிள்ளை தீத்துவுக்கு, கடவுளின் பணியாளனும் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதனுமாகிய பவுல் எழுதுவது: தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் மீட்பராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் நம்பிக்கை கொள்ளவும் நிலைவாழ்வை எதிர்நோக்கி இறைப்பற்றுக்கு இசைந்த உண்மை அறிவைப் பெறவும் நான் திருத்தூதனாய் இருக்கிறேன்.

இந்நிலைவாழ்வை, பொய் கூறாத கடவுள், காலங்கள் தொடங்கும் முன்னே வாக்களித்தார். ஏற்ற காலத்தில் நற்செய்தியைப் பறைசாற்றியதன் வாயிலாகத் தம் செய்தியை வெளிப்படுத்தினார். இந்நற்செய்தியைப் பறைசாற்றும் பணி நம் மீட்பராம் கடவுள் இட்ட கட்டளைப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்கு செய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  தி:பா: 96: 1-2a. 2b-3. 7-8a. 10 (பல்லவி: 3a)
=================================================================================
பல்லவி: பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். 2a ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். பல்லவி

2b அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். 3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். பல்லவி

7 மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். 8a ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். பல்லவி

10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 4: 18-19

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9

அக்காலத்தில் ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!" என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே. வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம்.

நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


சிந்தனை

பணியாட்கள் எங்கு அனுப்பப்படுகின்றார்களோ, அங்கு தங்கியிருந்து பணியாற்றுவது என்பது காலத்தின் கட்டாயம்.

ஆடுகள் இன்று சிதறி செல்கின்றார்கள் என்றால், காரணம் பல இருந்தாலும், பணியாட்கள் தங்கியிருந்து பணியாற்றாது போவதும் காரணமே.

தேடிச் செல்லும் போது, பணியாற்றாட்கள் பணித்தளத்தில் இல்லாது போகின்ற போது சலிப்பு தட்டுவது என்பது இயற்கையே.

மக்களுக்காக அர்ப்பணமானவர்கள் அனுப்பப்பட்ட இடத்தினில் மக்களோடு இருத்தலே சிறப்பானது.

தேர்தல் நேரத்தில் மட்டும், அரசியல்வாதியை தொகுதியில் காண்பது போல, ஞாயிறு மட்டும் பணியாளரை காண்கிறார்கள் என்பது வெறுப்பைத் தான் தரும் என்பதில் என்ன ஐயம்.

தங்களது தளத்திலே தங்கியிருந்து பணியாற்ற சுமூகமான சூழலை உருவாக்கி கொடுப்பது என்பது மறைப்பணித்தள மக்களின் கடமையாகவும் உள்ளது.

வரும் பணியாளரை வரவேற்று, அவர்கள் மகிழ்வுடனே தங்கியிருந்து தங்களுக்கு பணியாற்றும் நிலையை உருவாக்கி கொடுப்பதும் கடமையே.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்"

அந்த ஜென் குருவிடம், பல்வேறு சீடர்கள் ஜென் தத்துவங்களைக் கற்று வந்தனர். ஒருநாள் அவர் அவர்களிடம், "நீங்கள் அனைவரும் ஜென் தத்துவங்களைப் படித்து விட்டீர்கள். இனி மக்களுக்கு சேவை செய்வதற்காக நாடு முழுவதும் செல்ல வேண்டும்" என்றார். அதற்கு சீடர்கள், "குருவே, எந்த இடத்திற்கு யார் செல்வது என்பதை நாங்கள் முன்பே முடிவு செய்துவிட்டோம். அதன்படி நாங்கள் புறப்படுகின்றோம்" என்றனர். குருவும் அதற்குச் சரியென்று சொல்ல, சீடர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

ஓர் இளம்துறவி மட்டும் தயங்கியபடி, "குருவே, நான் வடதிசைக்குச் செல்ல விரும்புகிறேன். எனக்கு அனுமதி கொடுங்கள்" என்று கேட்டான். அதற்கு குரு, "வடதிசையில் இருப்பவர்கள் மிகவும் முரடர்கள். அவர்களிடமா போக விரும்புகிறாய்" என்றார். உடனே சீடன், "மனிதர்களிடம் பேதம் பார்க்கக்கூடாது என்பதுதானே ஜென் தத்துவம். எனவே, எனக்கு அனுமதி கொடுங்கள், குருவே" என்றான். அதற்கு குரு, "சரி, எனது கேள்விகளுக்கு நீ சரியான பதில் சொன்னால் போகலாம். முதல் கேள்வி. அவர்கள் உன்னை வரவேற்காமல் திட்டி அவமானப்படுத்தினால் என்ன செய்வாய்?" என்று கேட்டார். உடனே சீடன் தயங்காமல், "மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஏனென்றால், அவர்கள் என்னை அடிக்கவில்லை. உதைக்கவில்லை. எனவே, அந்த நல்லவர்களுக்கு நன்றி சொல்வேன்" என்று பதில் தந்தான்.

ஜென் குரு ஆச்சரியப்பட்டார். இருந்தாலும், விடாமல் அடுத்த கேள்வியைக் கேட்டார். "ஒருவேளை அவர்கள் திட்டாமல், அடித்து, உதைத்தால் உன்நிலை என்னவாகும்?". "அதற்காகக் கவலைப்படமாட்டேன். ஏனெனில் அவர்கள் மிகவும் நல்லவர்கள். என்னைக் கொன்றுவிடாமல் அடித்து, உதைத்ததோடு மட்டும் நிறுத்திக் கொண்டார்களே என்று சந்தோசப்படுவேன்" என்றான் சீடன். 'எல்லாவற்றுக்கும் சரியான பதில் வைத்திருக்கிறானே. இருக்கட்டும் முழுமையாக சோதிப்போம்' என மனதிற்குள் நினைத்துக்கொண்டே குரு, "அப்படியா? சரி, ஆத்திரத்தில் அவர்கள் உன்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வாய்?" என்று கேட்டார். "அடடா! நான் மிகவும் ஆனந்தப்படுவேன். இந்த வாழ்க்கையில் இருந்து எனக்கு சுதந்திரம் தந்து விட்டார்களே! இனி நான் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை" என்று அதற்குப் பதிலளித்தான் சீடன்.

தன் சீடனின் அறிவை எண்ணி ஜென் குரு பரவசப்பட்டார். சீடனிடம், "நீ நன்றாகத் தேறிவிட்டாய். உலகில் எங்கு சென்றாலும் நீ வாழ்ந்துவிடுவாய். எதனாலும் உன்னை வீழ்த்த முடியாது. வெற்றியுடன் திரும்பி வா" என்று சொல்லி வாழ்த்தி அனுப்பினார்.

பணித்தளங்களுக்கு அனுப்பப்படுகின்ற சீடர்கள் எத்தகைய சவால்கள் வந்தாலும், தங்களுடைய கொள்கையில் மிக உறுதியாக இருந்து, பணிசெய்யவேண்டும் என்னும் செய்தியை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எழுபத்தி இரண்டு சீடர்களைப் பணித்தளத்திற்கு அனுப்புகின்றார். அப்படி அனுப்புகின்றபோது, அவர் அவர்களுக்குக் கூறுகின்ற அறிவுரைதான் இன்றைய நற்செய்தி வாசகமாக அமைந்திருக்கின்றது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தனது சீடர்களுக்கு பல அறிவுரைகளைக் கூறுகின்றார். அவற்றில் ஒன்றுதான், "ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன் (எனவே பாம்புகளைப் போல முன்மதியுடையவர்களாகவும் புறாக்களைப் போன்று கபடற்றவர்களாகவும் இருங்கள்)" என்பதாகும்.

ஆண்டவர் இயேசு ஓநாய்கள் என்று சொல்வதை பலவிதங்களில் புரிந்துகொள்ளலாம். இயேசுவின் காலத்தில் "ஓநாய்கள்" என்பது போலி இறைவாக்கினர்களோடு அடையாளம் காணப்பட்டது. போலி இறைவாக்கினர்கள் தங்களுடைய ஆதாயத்திற்காக எதையும், ஏன் தன்னுடைய சீடர்களுக்கும் பல்வேறு விதங்களில் தீங்கு இழைப்பார்கள் என்பதால், ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம் அவர்களைக் குறித்து கவனமாய் இருங்கள் என்கிறார்.

ஓநாய்கள் என்பதை இறையாட்சிப் பணியைச் செய்கின்றபோது சீடர்கள் சந்திக்கின்ற சவால்களாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் நற்செய்தியில் இயேசு கூறுவார், "என் பொருட்டு உங்களை ஆட்சியாளர்களிடமும் அதிகாரிகளிடமும் இழுத்துச்செல்வார்கள்; உங்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்வார்கள்" என்று. இப்படிப்பட்ட சூழ்நிலையையும் நாம் ஓநாயாக எடுத்துக்கொள்ளலாம். ஆகவே, இயேசுவின் பணியைச் செய்யக்கூடியவர்கள் தங்களுடைய வாழ்வில் ஓநாய்கள் போன்று வரக்கூடிய சவால்களை, எதிர்ப்புகளைக் கண்டு மனம் கலங்கிடாமல் இறுதி வரை மனவுறுதியோடு இருக்கவேண்டும் என்பதுதான் இயேசு தன்னுடைய சீடர்களிடமிருந்து எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

எனவே, இயேசுவின் இறையாட்சியைப் பணியைக் செய்யக்கூடிய நாம், வாழ்வில் வரும் எதிர்ப்புகளைக் கண்டு மனம் கலங்கிடாமல் மனவுறுதியோடு இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 3:20-21

'இறைவாக்கினர்களுக்கு ஏச்சுகளும் பேச்சுகளும் இலவசம்'

நிகழ்வு

ஓர் இளம்பெண், திருமணம் ஆகாமலேயே ஒரு குழந்தைக்குத் தாய் ஆனாள். இதனால் அவளுடைய ஊரைச் சேர்ந்த எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர். உன்னை இந்த நிலைக்கு தள்ளியது யார்?, உன்னுடைய குழந்தையின் தந்தை யார்?" என்று கேட்டு அந்தப் பெண்ணை ஊர்மக்கள் மிகவும் நச்சரித்தனர்.

அந்தப் பெண் பதில் சொல்லத் தயங்கியதால் அவளை அடித்து, உடைத்து உண்மையைச் சொல் என்று மிரட்டினார்கள். அடி உதை தாங்கமுடியாத அந்தப்பெண், உண்மையைச் சொல்கிறேன், என்னை விட்டுவிடுங்கள்... எனது இந்த நிலைக்குக் காரணம் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் துறவிதான்" என்றாள். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள் ஆத்திரத்தோடு அந்தப்பெண்ணையும் அவளது கைக்குழந்தையையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு வெளியே இருந்த துறவியின் குடிசைக்குச் சென்றனர்.

அவர்கள் அங்கு சென்றநேரம் துறவி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அதைப் பார்த்து கடுங்கோபம் கொண்ட ஊர்மக்கள் அவரைத் திட்டித் தீர்த்தனர்; அவரை அடித்து உதைத்து அவருடைய குடிசையையும் கீழே இழுத்துப்போட்டனர். ஒன்றும் அறியாத அப்பாவிப் பெண்ணை ஏமாற்றி, இப்படிக் கர்ப்பிணியாக்கிக் குழந்தை கொடுத்துவிட்டு, நல்லவன் போட்டு நாடகமா போடுகிறாய்?" என்று ஆவேசப்பட்டனர். இன்னும் சிலரோ, அந்தப் பெண்ணைக் கெடுத்ததன் மூலம் நீ பாவம் செய்துவிட்டாய். எனவே அந்தப் பெண்ணையும் குழந்தையையும் நீதான் பராமரிக்க வேண்டும்" என்றனர். இவ்வளவு நடந்தும் துறவி எதுவும் பேசாமல் அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்தார்.

பின்னர் ஊர்மக்கள் அந்தப்பெண்ணையும் அவளது குழந்தையையும் துறவியிடம் விட்டுவிட்டுச் சென்றனர். துறவி அந்தப் பெண்ணையும் அவளது குழந்தையையும் நன்றாகக் கவனித்துக்கொண்டார்; அவர்கள்மீது அன்பைப் பொழிந்தார். துறவியின் இந்தச் செயலால் அவரது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டது. அவரிடம் இருந்த சீடர்கள் ஒவ்வொருவருமாக அவரைவிட்டு விலகினார்கள். அப்போதும் அந்தத் துறவி ஒரே மனநிலையில்தான் இருந்தார்.

நாட்கள் நகர்ந்தன, அப்போதுகூட துறவியின் அன்பான செயல்கள் மாறவில்லை. இதனால் அந்தப் பெண்ணின் மனம் கலங்கியது. 'இப்படிப்பட்ட ஒரு துறவிமீது அபாண்டமாகப் பழிசுமத்திவிட்டோமே" என்று அவளது உள்ளம் நெருஞ்சிமுள்ளாய் குத்தியது. எனவே அவள் மீண்டும் ஊர்மக்களிடம் சென்று, நான் தவறு செய்துவிட்டேன்... என்னைக் கர்ப்பிணியாக்கியது எனது பக்கத்துக்கு வீட்டுக்காரன்தான். அவனது மிரட்டலுக்குப் பயந்துதான் நான் பாவமறியாத துறவிமீது பழி சுமத்தினேன். உண்மையில் என் குழந்தையின் தந்தை அந்தத் துறவி அல்ல" என்றாள்.

இதைக் கேட்டு ஊர்மக்கள் மிகவும் வருந்தினார்கள். 'துறவிமீது இப்படி அபாண்டமாகப் பழி சுமத்தி, அவரைக் கடுமையாகத் துன்புறுத்திவிட்டோமே' என்று வருந்தினர். அதன்பிறகு ஊர்மக்கள் அனைவரும் துறவியிடம் சென்று, உண்மையைத் தெரிவித்து மன்னிப்புக் கேட்டனர். துறவியோ அவர்களிடம், ஓர் இறையடியாருக்கு இதெல்லாம் வாழ்வில் சகஜம்தான்... அந்த இளம்பெண் என்மீது அபாண்டமாகப் பழி சுமத்தியபோது, நான் பொறுமையாக இருக்கக்காரணம், என்றைக்காவது ஒருநாள் உண்மை வெளியேவரும் என்பதால்தால். இப்போது உண்மை வெளியே வந்துவிட்டது. என்மீது விழுந்திருந்த பழியும் நீங்கி விட்டது... இறைவனுக்கு நன்றி" என்று சொல்லி அவர்களை மன்னித்து அனுப்பினார்.

இறைப்பணி செய்கின்ற எல்லாருக்கும் ஏச்சுகளும் பேச்சுகளும் வரத்த்தான் செய்யும். அவற்றை நாம் பொறுமையோடு தாங்கிக்கொண்டு, தொடர்ந்து இறைப்பணி செய்வதே சாலச் சிறந்தது என்ற உண்மையை உரக்கச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

இயேசு மதிமயங்கிவிட்டார் எனப் பேசிய மக்கள்

ஆண்டவராகிய இயேசு கண் துஞ்சாமல், சரியாகச் சாப்பிடாமல் இறைப்பணியையும் மக்கள் பணியையும் ஒருசேரச் செய்துவந்தார். ஆனால், மக்களோ இவர் மதிமயங்கிவிட்டார்" என்று பேசத் தொடங்கினார்கள். மக்களோடு மக்களாக, மக்களுக்காக இருந்த இயேசுவையே மக்கள் இப்படிப் பேசினார்கள் என்பதை நினைத்துப் பார்க்கின்றபோது நமக்கே அதிர்ச்சியாக இருக்கின்றது. இயேசுவுக்கு மட்டுமல்ல, இறைப்பணியை, மக்கள்பணியைச் செய்யக்கூடிய ஒவ்வொருவருக்கும் இதுதான் நடக்கும். பவுலடியாரையும்கூட பெஸ்து 'பித்துப் பிடித்தவன்' என்றுதான் கூறினான் (திப 26:24-25) என்பதை நம்மை இங்கே கருத்தில் கொள்ளவேண்டும்.

'மக்கள் தன்னை மயங்கிவிட்டார்' என்று பேசிக்கொண்டதற்காக இயேசுவோ அல்லது பவுலோ தங்களுடைய பணியிலிருந்து விலகிக்கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து தங்களுடைய பணியைச் செய்துதான் வந்தார்கள். ஆகையால், இறைப்பணி/மக்கள்பணி செய்யக்கூடிய ஒவ்வொருவரும் தங்கள்மீது விழும் ஏச்சுபேச்சுகளைக் கண்டு கவலைப்படாமல் தொடர்ந்து இலக்கை நோக்கி செல்வதே சிறப்பு.

சிந்தனை

இறைவழியில் நடக்கின்றபோது, மக்களுடைய ஏச்சு பேச்சுகளை நிச்சயம் நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அப்போது அவற்றைக் கண்டு மனந்தளராமல், தொடர்ந்து நம்முடைய இலக்கை நோக்கிப் பயணிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
தூய திமொத்தேயு மற்றும் தீத்து விழா

இன்று திருச்சபையானது ஆயர்களான தூய திமெத்தேயு, தீத்து ஆகியோரின் விழாவைக் கொண்டாடுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் இருவருமே பவுலடியாரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். அவருடைய தூதுரைப் பயணங்களில் உடனிருந்தவர்கள். அப்படிப்பட்டவர்களின் விழாநாளில் அவர்கள் நமக்கு எத்தகைய முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

முதலாவதாக திமெத்தேயுவை குறித்துச் சிந்தித்துப் பார்த்தும்போது இவர் பவுலடியாரால் "வெளிவேடமற்ற நம்பிக்கைக்குச் சொந்தக்காரர்" என்று அழைக்கப்படுகின்றார் (2 திமொ1:5). லிஸ்திராவைக் சேர்ந்த இவர் புறவினத்தைச் சார்ந்த தந்தைக்கும், யூத இனத்தைச் சார்ந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தவர்.

இவர் பவுலடியாரின் இரண்டாம் தூதுரைப் பயணத்தில் உடன் சென்றவர்; அவரோடு நற்செய்தியை அறிவித்தவர். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்று சொன்னால் தெசலோனிக்கு நகரிலே பெரியப் பெரிய கலகம் ஏற்பட்டபோது, இவர்தான் அங்கே சென்று மக்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார். அதன்பிறகு கி.பி. 64 ஆம் ஆண்டு எபேசு நகரிலே ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அங்கே திருச்சபைக்கு எதிராக நிலவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்துப் போராடினார்.. அதனால் எதிரிகள் இவரை தெருவில் பிடித்து இழுத்திச் சென்று கல்லால் எறிந்து கொன்று போட்டார்கள்.

தூய பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் கூறுவார், "கடவுளின் வல்லமைக்கு ஏற்ப, நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் பங்குகொள்" என்று. திமொத்தேயு நற்செய்திக்காக, ஆண்டவர் இயேசுவுக்காக துன்பத்தில் பங்குகொண்டவர். தன்னுடைய வாழ்வையே இயேசுவுக்காக பலியாக்கிவர்..

அடுத்ததாக தூய தீத்து. இவரைக் குறித்து தூய பவுலடியார் சொல்கிறபோது சொல்வார், "நம்பிக்கையின் அடிப்படையில் தீத்து என் உண்மைப் பிள்ளை" என்று (தீத்து 1:1). தீத்து நற்செய்தி அறிவிப்பாளராக மட்டும் இருந்ததோடு மட்டும் அல்லாமல், பவுலடியாரின் உடன் உழைப்பாளராகவும் இருந்தார். அவரோடு பயணித்தார். அவருக்கு பக்கபலமாக இருந்தார்.

பவுலடியார் கொரிந்து நகர மக்களுக்கு கடிதம் எழுதியபோது அது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக பவுலடியாரைக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அத்தகைய நேரத்தில் தீத்துதான் அங்கேசென்று மக்களிடம் அமைதியை ஏற்படுத்தினார்.

மேலும் புதிதாக கிறிஸ்தவ மறையைத் தழுவும் யூதரல்லாத புறவினத்தார்கள் விருத்தசேதனம் செய்யவேண்டும் என்ற ஒரு சிக்கலைச் சந்தித்தார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க எருசலேம் நகரில் பொதுச்சங்கம் கூட்டப்பட்டது. இச்சங்கத்திற்கு பவுலடியார் சென்றார். கூடவே தீத்துவும் சென்றார் என்று விவிலியத்தில் நாம் படிக்கின்றோம். இப்படியாக தீத்து பவுலடியாரோடு எப்போதும் உடனிருந்தார்.

பவுலடியாரோடு ஒருசில ஆண்டுங்கள் இருந்து பணியாற்றிய பிறகு இவர் கிரிட் என்ற நகருக்குச் சென்று அங்கே நற்செய்தியை அறிவித்தார். தன்னுடைய 94 வயதில் இறையடி சேர்ந்தார்.

ஆகவே தூய திமொத்தேயு, தீத்து ஆகிய இவர்கள் இருவரின் விழாவைக் கொண்டாடும் நாம் அவர்களிடம் இருந்த நற்செய்தி அறிவிக்கின்ற தாகத்தை நமதாக்கிகொண்டு வாழவேண்டும். அதோடு மட்டுமல்லாமல் எந்த ஒரு பணியையும் மிகச் துணிச்சலோடு செய்யவேண்டும். 2 திமொத்தேயு 1:7 ல் வாசிக்கின்றோம், "கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும், அன்பும், கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தினை வழங்கியுள்ளார்" என்று. எனவே நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வல்லமையுள்ள உள்ளத்தினை வைத்து, வல்லமையான காரியங்களைச் செய்வோம்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவது போன்று உங்களின் நான் அனுப்புகிறேன்" என்று. ஆகவே நற்செய்தி அறிவிக்கும் பணியானது மிகவும் சவால் நிறைந்தது என்று ஆண்டவர் இயேசுவே கூறுகிறார். அத்தகைய சூழலில் நாம் இறைவனின் பாதுகாப்பை உணர்ந்து, துணிவோடு பணிசெய்யவேண்டும் என்பதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கக்கூடிய காரியமாக இருக்கிறது. ஆதலால் நற்செய்தி அறிவிப்பில் இருக்கின்ற சவால்களைக் கண்டு கலங்காமல், துணிவோடு நற்செய்தியை அறிவிப்போம்.

அரசன் ஒருவன் இருந்தான். அவனைச் சந்தித்த சோசியன் ஒருவன் "உங்களுக்கு கண்டம் இருக்கிறது" என்று சொல்லிவிட்டுச் சென்றான். இதைக்கேட்டுப் பயந்த அரசன் அரண்மனையைச் சுற்றி பெரிய பெரிய கோபுரங்கள் எழுப்பினான். அதனைச் சுற்றி ஆயிரம் படைவீரர்களை நிறுத்தி வைத்தான். வெளியே என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக மட்டும் ஒரு ஜன்னலை வடிவமைத்திருந்தான்.

ஒருநாள் அரசன் இப்படி ஜன்னல் பக்கமாக அமர்ந்துகொண்டு வெளியே என்ன நடக்கிறது என்று பார்த்துகொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஞானி அரசனிடம், "எதற்காக இப்படி உள்ளே இருந்துகொண்டு பயந்து, பயந்து சாகின்றாய்" என்று கேட்டார். அதற்கு அரசன், "ஐயா! நான் வெளியே வந்தால் சாவு நிச்சயம் என்று சோசியர் ஒருவர் சொல்லிவிட்டுப் போனார். அதனால்தான் இப்படி இருக்கின்றேன்" என்றார். அதைக் கேட்ட ஞானி, "இப்போது மட்டும் எப்படி இருக்கிறாய்? இப்போதும் ஒவ்வொருநாளும் செத்துக்கொண்டுதானே இருக்கின்றாய். என்ன ஒரு வித்தியாசம், கல்லறையில் ஜன்னல் இருக்காது. இங்கே ஜன்னல் இருக்கின்றது" என்று ஒருபோடு போட்டார்.

சாவு எல்லோருக்கும் உண்டு, அதை நினைத்து ஒவ்வொருநாளும் செத்துக்கொண்டிருப்பது முறையாகுமா? என்பதை இக்கதையானது நமக்குத் தெளிவாக விளக்குகின்றது.

ஆகவே திமொத்தேயு, தீத்து ஆகியோரின் விழாவைக் கொண்டாடும் நாம் அவர்களைப் போன்று இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழுவோம். எத்தகைய சவால்கள் வந்தாலும் அதனைத் துணிவுடன் எதிர்கொள்வோம். இறையருளை நிறைவாய் பெறுவோம். Fr. Maria Antony, Palayamkottai.



இன்றைய புனிதர் : (26-01-2018)   தூய தீமோத்தேயு, தீத்து விழா

நிகழ்வு

பவுலடியாரின் அன்பிற்குரிய உடன்பணியாளராகிய தூய தீமோத்தேயு எபேசு நகரில் ஆயராக இருந்தபோது, "ஆண்டவர் இயேசு ஒருவரே மெசியா, அவரே உண்மையான கடவுள்" என்று எல்லா மக்களுக்கும் எடுத்துத்துரைத்து வந்தார். கிபி. 97 ஆம் ஆண்டில் ஒருநாள் எபேசு நகரில் போலி தெய்வங்களை வழிபடுவோர் சிலர் தங்களுடைய தெய்வங்களுக்கு Feast of Katakogigianஎனப்படும் விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இதை அறிந்த திமோத்தேயு அங்கு சென்று, ஆண்டவர் இயேசுவே உண்மையான கடவுள் என மிகத்துணிவோடு எடுத்துரைத்தார். அவருடைய போதனையைக் கேட்ட மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தார்கள், இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். இது பிடிக்காத கயவர்கள் சிலர் அவரைக் கல்லால் எரிந்து கொன்று போட்டார்கள்.

வாழ்க்கை வரலாறு

தூய தீமோத்தேயு

திமோத்தேயு பவுலடியாரால் 'என் அன்பிற்குரிய மகன்' என்றே அழைக்கப்படுகின்றார் (1திமோ 1:1). இவர் லிஸ்திராவில் வாழ்ந்த ஒரு புறவினத்து தந்தைக்கும் யூத தாய்க்கும் மகனாகப் பிறந்தார். கி.பி. 47 ஆம் ஆண்டு பவுலடியார் தன்னுடைய முதல் திருத்தூது பயணத்தை மேற்கொண்டபோது, அவரால் திருமுழுக்குப் பெற்றார். அதன்பிறகு இவர் தன்னுடைய தாய் ஐனிகேயாள் என்பவராலும், இவருடைய பாட்டி லோவிசாள் என்பவராலும் நம்பிக்கையில் உறுதியடைந்தார். இப்படி இறைநம்பிக்கையில் உறுதியடைந்த தீமோத்தேயு பவுலடியாருடைய பயணங்களிலும், அவருடைய பணிகளிலும் உறுதுணையாக இருந்தார். இதனால் பவுலடியார் இவரை எபேசு நகரின் ஆயராகத் திருப்பொழிவு செய்கிறார்.

எபசு நகரின் ஆயராக உயர்ந்தபிறகு இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். குறிப்பாக இவர் ஆண்டவர் இயேசு பற்றிய நற்செய்தியை மிகத் துணிச்சலாக அறிவித்தார். பவுலடியாரோடும் ஏறக்குறைய 13 ஆண்டுகள் உறுதுணையாக இருந்து பணியாற்றி வந்தார். இந்த காலகட்டத்தில் போலி தெய்வங்களை வழிபடுவோருக்கும் இவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அதன்விளைவாக கி.பி. 97 ஆம் ஆண்டு கயவர்கள் சிலரால் இவர் கல்லால் எறிந்து கொல்லப்பட்டார்.

தீத்து

தீத்து அந்தியோக்கியா நகரைச் சேர்ந்த ஒரு புறவினத்துப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். ஒருசில திருச்சபை மரபுகளின்படி இவர் ஆண்டவர் இயேசுவின் எழுபத்தி இரண்டு சீடர்களில் ஒருவராகவும் இருக்கலாம் என்றும் அறியப்படுகின்றார். தீமோத்தேயுவை போன்று இவரும் பவுலடியாரின் அன்பிற்கு உரிய பிள்ளையாக, உடன் உழைப்பாளராக இருந்து பணியாற்றி இருக்கிறார். கி.பி. 52 ஆம் ஆண்டு தூய பவுல் எருசலேமிற்குச் சென்று, அங்கே நடந்த எருசலேம் பொதுச்சங்கத்தில் கலந்துகொண்டபோது, அவருக்கு உறுதுணையாக இவர் இருந்திருக்கின்றார்.

தீத்து, பிரச்சனைகளை தீர்த்து வைப்பத்தில் கைதேர்ந்தவராக இருந்திருந்தார். ஒருசமயம் கொரிந்து நகரிலே பிரச்சனை ஏற்பட்டபோது, பவுலடியார் தீத்துவைத்தான் அங்கே அனுப்பி வைத்து, பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வழிவகை செய்திருக்கிறார். அதேபோன்று இவர் ஏழை எளியவருக்கு உதவிசெய்யும் நல்ல மனத்தையும் கொண்டவராக விளங்கி இருக்கிறார். எருசலேமில் பஞ்சம் ஏற்பட்டபோது இவர் கொரிந்து போன்று நகர்களுக்குச் சென்று அங்கே இருந்தவர்களிடம் நீதி திரட்டி தேவையானவர்களுக்கு உதவி இருக்கிறார். கி.பி.64 ஆம் ஆண்டு இவர் கிரிட் என்ற நகரின் ஆயராக உயர்த்தப்பட்டார். அங்கே இறைசமூகங்களை சிறப்பாகக் கட்டி எழுப்பும் பணியினைச் செய்து வந்தார். அப்படிப்பட்டார் தனது 94 வயதில் தன்னுடைய மண்ணுலக வாழ்வைத் துறந்தார். கி.பி.823 ஆண்டு இவருடைய உடல் தூய கேத்ரீனா பேராலயத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தூய மாற்குவின் பேராலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இன்றுவரை அது அங்கேயே பத்திரமாக இருக்கின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய தீமோத்தேயு மற்றும் தீத்து ஆகியோரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

பொறுப்புகளில் உண்மையாக இருத்தல்

தூய தீமோத்தேயுவாக இருக்கட்டும், தூய தீத்துவாக இருக்கட்டும் இரண்டு பேருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் மிகவும் உண்மையாகவும் கடமை உணர்வோடும் இருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இருவருமே பவுலடியாரின் உடன்உழைப்பாளர்களாக இருந்து, அதன்பிறகு ஆயர்களாக உயர்ந்தவர்கள். அவர்கள் எத்தகைய சூழ்நிலையிலும் தங்களுடைய பொறுப்புகளிலிருந்து, கடமை உணர்விலிருந்து தவறி நடக்கவே இல்லை. இதுதான் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய படமாக இருக்கின்றது. தூய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 4:2 ல் தீமோத்தேயுவைப் பார்த்துக் கூறுவார், "இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாய் இரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு இரு". இவற்றையெல்லாம் தீமோத்தேயுவும் தீத்துவும் சிறப்பாகக் கடைப்பிடித்து, தங்களுடைய வாழ்வில் மிகவும் பொறுப்போடு இருந்தார்கள். அதனால்தான் பவுலடியார் இருவரையும் தன்னுடைய அன்புக்குரிய பிள்ளைகள் என்று அழைக்கின்றார்.

கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பொறுப்புகளில் உண்மையுள்ளவராக, நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கின்றோமா? என சிந்தத்துப் பார்க்கவேண்டும். நாம் எந்த பொறுப்பை வகித்தாலும் அது ஆசிரியப் பணியோ, குருத்துவப் பணியோ, நாட்டை வழிநடத்தும் தலைமைப்பணியோ எதுவாக இருந்தாலும், அதில் உண்மையாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்த்து, அதன்படி வாழ்வது நமது கடமையாகும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே, பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன் (மத் 25:23).

ஆகவே, நாம் நமக்குக் கொடுப்பப்பட்ட பொறுப்புகளில் தூய தீமோத்தேயுவைப் போன்று, தீத்துவைப் போன்று உண்மையுள்ளவர்களாக இருப்போம்.

இயேசுவுக்காக உயிரையும் இழக்கத் துணிதல்

"கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்" என்பார் தூய பவுல் (பிலி 3:8). அதைப்போன்று தான் தீமோத்தேயுவும் தீத்துவும் கிறிஸ்துவை ஆயத்தமாக்கிக் கொள்ள தங்களுடைய உயிரையே துச்சமாகக் கருதினார்கள். கிறிஸ்துவுக்காக தங்களுடைய உயிரையும் இழந்தார்கள். தீத்து இயற்கையான முறையில் உயிர் துறந்தாலும், தீமோத்தேயுவோ கல்லால் எறிந்து கொல்லப்பட்டார். அந்தளவுக்கு அவர் இயேசுவுக்காக எதையும் இழக்கத் துணிந்தார். கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவுக்காக நம்முடைய உயிரை இழக்கத் தயாராக இருக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

வட கொரியாவில் கம்யூனிச ஆட்சி வந்தபோது கிறிஸ்தவர்கள் அதிகமாக கொடுமைப்படுத்தப்பட்டார்கள், சித்ரவதை செய்யப்பட்டார்கள். ஒருசமயம் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஓர் ஆலயத்திற்குள் ஒன்றாகக் கூடி ஜெபித்துக்கொண்டிருந்தபொது ஆயுதம் தாங்கிய சிலர் அந்த ஆலயத்திற்குள் நுழைந்து, பீடத்தில் இருந்த இயேசுவின் பாடுபட்ட சிரூபத்தைக் கீழே இழுத்துப் போட்டு, அதில் அனைவரையும் எச்சில் துப்பச் சொன்னார்கள். அப்படி யாராரெல்லாம் பாடுபட்ட சிரூபத்தில் எச்சில் துப்புகிறார்களோ அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும், எச்சில் துப்பாதவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாவார்கள் என்று சொல்லி அவர்கள் அவர்களை எச்சரித்தார்கள்.

நிறைய கிறிஸ்தவர்கள் தங்களுடைய உயிருக்குப் பயந்து இயேசுவின் பாடுபட்ட சிரூபத்தின்மீது எச்சில் துப்பிச் சென்றார்கள். இறுதியாக வந்த ஒரு பெண்மணி எதற்கும் பயப்படாமல் சிரூபத்தின் மீது இருந்த எச்சில் அனைத்தையும் துடைத்துவிட்டு, "இயேசுவே நான் உன்னை முழுவதும் அன்புசெய்கிறேன்" என்றாள். இதைக் கண்ட ஆயுதம் தாங்கி முரடன் ஒருவன், பாடுபட்ட சிரூபத்தின்மீது எச்சில் துப்பிய மற்ற எல்லா கிறிஸ்தவர்களையும் ஆலயத்திற்கு உள்ளே போகச் சொல்லிவிட்டு, அந்தப் பெண்மணியை மட்டும் வெளியே இழுத்துச் சென்று துப்பாக்கிக் குண்டுக்கு அவளை இரையாக்கினான். அந்தப் பெண்மணியோ கிறிஸ்துவுக்காக சாவைத் துணிவோடு ஏற்றுக்கொண்டாள்.

"தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர், மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவார்" என்பார் இயேசு (மத் 16: 25). இயேசுவுக்காக அந்த வட கொரியப் பெண்மணியும், தீமோத்தேயுவும் தங்களுடைய உயிரை இழந்தார்கள். அதனால் காத்துக்கொண்டார்கள். நாமும் இயேசுவுக்காக நம் உயிரை இழக்கத் துணியும்போது அதனைக் காத்துகொள்வோம் என்பது உறுதி.

ஆகவே, தூய தீமோத்தேயு, தீத்து ஆகியோரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் அவர்களிடம் இருந்த நல்ல பண்புகளை நமதாக்குவோம். இயேசுவுக்காக நம் உயிரையும் இழக்கத் துணிவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================
இனி எல்லாம் சுகமே!
என் பிள்ள



திமோத்தேயு, தீத்து திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இவர்கள் ஆயர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டபோது, அல்லது பவுல் இவர்களை முதலில் தெரிந்துகொள்ளும்போது இவர்களுக்கு 18 முதல் 23 வயதுதான் இருந்திருக்க வேண்டும். பவுல் இருவரையும், "என் பிள்ளை" என்றே அழைக்கிறார்.

இந்த இரண்டு பெயர்களையும் நினைத்தவுடன் எனக்கு இளவல்களின் உருவங்கள்தாம் கண்முன் வருகின்றது.

தொடக்கத்திருஅவையில் பவுல் நியமித்த முதல் ஆயர்கள் இவர்கள். இவர்களுக்கு பவுல் எழுதிய, அல்லது பவுல் எழுதியதாக சொல்லப்படுகின்ற திருமுகங்கள், மேய்ப்புப்பணி திருமுகங்கள் என அழைக்கப்படுகின்றன.

1. திமொத்தேயு இருவரில் இவர்தான் பவுலுக்கு நெருங்கியவராக இருந்திருக்க வேண்டும். இரண்டு கடிதங்களில் மூன்று முறை பவுல் இவரை, "பிள்ளையே," "மகனே" என அழைக்கிறார். மேலும், இவரின் குடும்பம் - பாட்டி லோயி மற்றும் அம்மா யூனிக்கி - பவுலுக்கு தெரிந்திருக்கிறது (2 திமொ 1:5). திமொத்தேயுவிடம்தான் பவுல் தன் வாழ்வின் இறுதிகட்ட நிகழ்வுகளைப் பற்றி மனம் திறக்கிறார். இன்று பல கல்லறைகளில் எழுதப்பட்டுள்ள பவுலின் வரிகள் எழுதப்பட்டதும் திமொத்தேயுவுக்கே: "நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்" (2 திமொ 4:7).

ஒரு அருள்பணியாளராக நான் அடிக்கடி என்னையே திமொத்தேயுவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பேன். ஒரு அருட்பணியாளரின் வாழ்வு ரோஜா படுக்கை அல்ல என்பதை திமொத்தேயுவின் கடிதம் வெள்ளிடைமலையாகக் காட்டுகிறது. அருட்பணியாளரின் வாழ்வில் வரும் தனிமை, சோர்வு, உடல் உணர்வுகளின் போராட்டம், மற்றவர்களால் அவர் புறக்கணிக்கப்படுதல், உடல்நலமின்மை என அனைத்தின் உருவகமாக இருக்கிறார் திமொத்தேயு. இந்த பிரச்சினைகளைக் குறித்த இவர் தன் "அப்பாவாகிய" பவுலுக்கு எழுதியிருக்க வேண்டும். ஆகையால்தான், பவுல் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வை தன் கடிதங்களில் எழுதியிருக்கிறார்:

"நீ இளவயதின் இச்சைகளை விட்டு ஓடிவிடு!" (2 திமொ 2:22)

"அனைத்திலும் அறிவுத்தெளிவோடு இரு. துன்பத்தை ஏற்றுக்கொள். நற்செய்தியாளனின் பணியை ஆற்று. உன் திருத்தொண்டை முழுமையாகச் செய்." (2 திமொ 4:5)

"நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னை தாழ்வாக கருதாதிருக்கட்டும்" (2 திமொ 4:11)

"உன்மீது கைகளை வைத்து திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே!" (1 திமொ 4:14)

"வயது முதிர்ந்த பெண்களை அன்னயைராகவும், இளம் பெண்களை தூய்மை நிறைந்த மனத்தோடு தங்கையராகவும் கருதி அறிவுரை கூறு!" (1 திமொ 5:2)

"தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின்பொருட்டும் சிறிதளவு திராட்சை மதுவும் பயன்படுத்து!" (1 திமொ 5:23)

"உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தைவிட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது!" (1 திமொ 6:7)

2. தீத்து

தீத்து கொஞ்சம் இன்ட்டலெக்சுவல் டைப். இவருக்கான அறிவுரைகளில் "நலந்தரும் போதனை" என்ற வார்த்தையை நான்கு முறை பயன்படுத்துகின்றார் பவுல்.

திமொத்தேயு, தீத்து - இருவரும் கிறிஸ்தவ மறையின் தொடக்ககால நம்பிக்கை நட்சத்திரங்கள்.

தங்களுக்கு கொஞ்ச வயதே ஆகி, குறைவான வாழ்க்கை அனுபவமே இருந்தாலும், அர்ப்பணத்தோடும், பிளவுபடா உள்ளத்தோடும், புன்னகையோடும், முணுமுணுக்காமலும் தங்கள் பணியைச் செய்தனர்.

இந்த இளவல்கள் எல்லா அருள்நிலை இனியவர்களுக்கும் முன்னோடிகள். Fr. Yesu Karunanithi, Rome

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 6
=================================================================================
"இயேசு தாம் அனுப்பிய எழுபத்திரண்டு பேரை நோக்கி, "நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், "இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!" என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்' என்றார்" (லூக்கா 10:1-2,5-6)

இயேசுவின் பணியை ஆற்றுவதற்குச் சீடர்கள் தேவைப்பட்டார்கள். அவர் எழுபத்திரண்டு பேரை அனுப்பி இறையாட்சி பற்றிய நற்செய்தியை அவர்கள் அறிவிக்க வேண்டும் எனப் பணிக்கின்றார். அப்பணியை ஆற்றச் செல்வோர் எளிமையான முறையில் தோற்றமளிக்க வேண்டும் எனவும், ஒரு மாற்றுக் கலாச்சாரப் பாணியில் மக்கள் முன் செயல்பட வேண்டும் எனவும் ( (லூக் 10:4) இயேசு அறிவுறுத்துகிறார். மேலும் இயேசுவால் அனுப்பப்பட்ட தூதர்கள் எதிர்ப்புகளையும் தடைகளையும் சந்திக்க வேண்டி வரும் என்பதையும் இயேசு அவர்களுக்குக் கூறுகிறார். "ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப் போல" (லூக் 10:3) அவர்கள் செல்வார்கள். இவ்வாறு பணியாற்றும் போது அவர்கள் "ஊர்களுக்கும்" "வீடுகளுக்கும்" சென்று இறையாட்சி பற்றி அறிவிக்க வேண்டும். குறிப்பாக வீடுகளில் நிகழ்கின்ற பணி லூக்கா நற்செய்தியில் முதன்மை பெறுகிறது. வழியில் சந்திக்கின்றவர்களிடம் பேச்சுக் கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டாம் (லூக் 10:4) என்று கூறிய அதே இயேசு தாம் அனுப்பிய சீடர்கள் "எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறும்படி" கேட்கின்றார் (காண்க: லூக் 10:5). இங்கே குறிப்பிடப்படுகின்ற "அமைதி" என்னும் சொல் வழக்கமான வாழ்த்துச் சொல் மட்டுமல்ல. அமைதி என்பது சண்டை சச்சரவு இல்லாத நிலை என்பதும் அல்ல. மாறாக, இயேசு குறிப்பிடுகின்ற "அமைதியும்" அவர் வழங்குகின்ற "மீட்பும்" ஒன்றே. கடவுள் தம் மக்களைத் தேடி வந்து அவர்களுக்கு முழு நலன் வழங்கி, அவர்களைக் கடவுளோடு உறவாடச் செய்கின்ற நிலையே "அமைதி" ஆகும். இத்தகைய நல்ல செய்தியை மக்கள் ஒன்றில் ஏற்பார்கள் அல்லது அதை வேண்டாம் என்று ஒதுக்குவார்கள். 

இயேசு வழங்குகின்ற அமைதியும் நல வாழ்வும் மீட்பும் அவருடைய சீடர்கள் வழியாக மக்களுக்கு எப்போதும் பறைசாற்றப்படுகிறது. கடவுளின் கொடையை விரும்பி ஏற்போர் உள்ளத்தில் உண்மையான மாற்றம் நிகழும். அவர்களும் கடவுளோடு நல்லுறவில் இணைந்து மகிழ்ச்சியடைவார்கள். கடவுளின் கொடையை நன்மனத்தோடு ஏற்காத மனிதருக்கு எந்தவொரு பயனும் ஏற்படாது. "இந்த வீட்டுக்கு அமைதி" என்பது "இந்தக் குடும்பத்திற்கு அமைதி" என்றே பொருள்படும். லூக்கா எழுதிய நற்செய்தி நூலிலும் திருத்தூதர் பணிகள் நூலிலும் "குடும்பத் திருச்சபை" அல்லது "வீட்டுத் திருச்சபை" என்னும் கருத்து முக்கியமானது. அதாவது, தொடக்க காலத் திருச்சபை நற்செய்திப் பணி ஆற்றியது தொழுகைக் கூடங்களிலோ கோவில்களிலோ அல்ல, மாறாக, வீடுகளில் மக்கள் கூடி வந்து, ஒரு குடும்பமாக இணைந்து, இறைவேண்டலில் ஈடுபட்டார்கள்; கடவுளின் வார்த்தைக்குச் செவிமடுத்தார்கள்; நற்கருணை விருந்தைக் கொண்டாடினார்கள்; அன்புப் பணி ஆற்றினார்கள். இன்றைய திருச்சபையும் அடித்தள கிறிஸ்தவ சமூகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுவது போற்றற்குரியது. நற்செய்திப் பணியும் குடும்பச் சூழலில் நிகழும்போது அதிக பயன் நல்கும் என்பது அனுபவ உண்மை.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 7
=================================================================================

இறையாட்சி மலர வேண்டும்

இயேசு இறையாட்சியின் இயல்புகளைப் பற்றி இன்றைய நற்செய்தியில் விளக்க முற்படுகிறார். இறையாட்சி என்பது, கடவுளின் அரசு விண்ணகத்தில் செயல்படுவது போல, இந்த மண்ணகத்திலும் செயல்படுவதாகும். படைப்பு அனைத்திற்குமான கடவுளின் இலக்கு இதுதான். இந்த இறையாட்சி தத்துவத்தை, விதை வளர்ந்து மரமாகக்கூடிய நிகழ்வோடு ஒப்பிடுகிறார்.

ஒரு விவசாயி நிலத்தில் விதைகளைத் தூவுகிறார். அதைப் பேணிப் பராமரிக்கிறார். அதாவது, அதற்கு தண்ணீர் பாய்க்கிறார். நேரத்திற்கு உரமிடுகிறார். பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கிறார். இவ்வளவு செய்தாலும், விதை எப்படி வளர்கிறது? எப்போது வளர்கிறது? என்பது அவருக்குத் தெரியாது. நேற்றைய நாளை விட, இன்றைக்கு வளர்ந்திருப்பதை பார்த்துதான், விவசாயி, அது சரியான வளர்ச்சியில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்கிறார். ஏனென்றால், விதைத்தது விவசாயி என்றாலும், அதனைப் பேணிக்காக்கிறவர், அதற்கு வாழ்வு கொடுக்கிறவர் கடவுள் தான். அதுபோல, வாழ்வில் நடப்பதன் நிகழ்வு அனைத்திலும், கடவுளின் அருட்கரம் தங்கியிருக்கிறது என்பதை, நாம் உணர வேண்டும். கடவுளின் வல்ல செயல்களை நாம் உடனடியாக உணர முடியாது. ஆனால், நமது வாழ்வை திரும்பிப்பார்க்கிறபோது, வாழ்வின் நிகழ்வுகளை திரும்பிப்பார்க்கிறபோது, கடவுளின் அருட்கரம் நம்மை எப்படியெல்லாம் வழிநடத்தியிருக்கிறது என்பதை, நாம் புரிந்து கொள்ளலாம்.

இறையாட்சி எப்போது வரும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அது இந்த உலகத்தில் தனது வேர்களை ஊன்றிக்கொண்டு தான் இருக்கிறது. எவ்வாறு, செடியின் வளர்ச்சியை நமது ஊனக்கண்கள் பார்க்க முடியாதோ, அதேபோல, இறையாட்சியின் மலர்ச்சியை நாம் பார்க்க முடியாது. ஆனாலும், அது மலர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை நாம் உணர்வதற்கு அழைக்கப்படுகிறோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
------------------------------------------------------

இயேசு ஒரு சிறந்த போதகர்

இயேசு ஒரு சிறந்த போதகர். அதற்கு அவரது போதனையே சிறந்த சான்று. அவருடைய போதனையின் வெற்றி, தனது போதனையைக் கேட்பவர்களின் திறமைக்கேற்ப, உணர்வுகளுக்கேற்ப, புரிதலுக்கு ஏற்ப போதிப்பதில் அடங்கியிருக்கிறது. ஒரு சிறந்த போதகர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நாம், இயேசுவின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்ளலாம். முதலில், சிறந்த போதகருக்குத்தேவை பொறுமை. எனவேதான், யூதப்போதகர் ஹில்லல் கூறுகிறார்: எரிச்சல்படுகிறவர் போதிக்க முடியாது என்று. தனது சீடர்களுக்கு, தான் கூறியது விளங்கவில்லை என்றாலோ, புரியவில்லையென்றாலோ, பொறுமையோடு, எவ்வளவுக்கு தனது போதனையை எளிமையாக்க முடியுமோ, அவ்வளவுக்கு எளிமையாக்கி, பொறுமையோடு கற்றுத்தருவது சிறந்த போதகருக்கான முதல் அடையாளம். அது இயேசுவிடத்தில் நாம் பார்க்கிறோம்.

சிறந்த போதகருக்கு இருக்க வேண்டிய இரண்டாவது பண்பு: புரிதல். தான் போதிப்பது, மற்றவர்களுக்குப் புரிகிறதா? என்கிற புரிதல் இருக்கிறபோதுதான், அவரால் சிறப்பாக தனது கருத்துக்களை தொடர்ந்து எடுத்துக்கூற முடியும். கேட்கிறவர்களின் உடல் மொழிகளைப்பார்த்தே, ஒரு நல்ல போதகர், தனது போதனையை அவர்கள் புரிந்துகொள்கிறார்களா? என்பதைப்புரிந்துகொள்வார். இயேசுவுக்கு அது கைவந்த கலை. அதனால்தான், சிறந்த போதகராக, மக்கள் நடுவில் அவரால் வரமுடிந்தது. தான் சொல்ல வந்த கருத்துக்களை கேட்கிறவர் புரிந்துகொள்ளாதபோது, அவர் புரிந்துகொள்ளாததற்கான காரணத்தை, நல்ல போதகர் அறிந்திருக்க வேண்டும். அதுதான் நல்ல போதகர்க்கான அடையாளம்.

நமது வாழ்வே மற்றவர்களுக்கு போதனையாக இருக்க வேண்டும். அதற்கு நம்மிடத்தில் மற்றவர்களைப்பற்றிய புரிதலும், பொறுமையும் நமக்குத்தேவை. எங்கே புரிதலும், பொறுமையும் இருக்கிறதோ, நிச்சயமாக, அவரது வாழ்க்கை சிறப்பான ஒரு வாழ்வாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இறைவனின் அரசு

இறையரசு என்பது கடவுளுடைய அரசைக்குறிக்கிறது. கடவுள் விண்ணகத்தை ஆண்டு வருகிறார் என்பது அனைவரின் நம்பிக்கை. விண்ணகம் என்றாலே, மகிழ்ச்சி, அன்பு, அமைதி போன்றவை தான் நமது நினைவுக்கு வருகிறது. ஏனென்றால், அங்கே கடவுள் ஆட்சி செய்கிறார். கடவுளின் ஆட்சியில் இருளுக்கு வேலையில்லை. துன்பங்கள், துயரங்கள் அங்கே இல்லை. அத்தகையதொரு நிலைதான் மண்ணகத்திலும் வர இருக்கிறது. மண்ணகமும் கடவுளால் ஆளப்பட இருக்கிறது என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு விதை மனித இயலாமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. விதையை மனிதன் வளர்க்க முடியும். ஆனால், அந்த விதையை உருவாக்க முடியாது. அதற்கு உரமிடலாம், அதை அழகுபடுத்தலாம். அதிலிருந்து பயனைப்பெறலாம். ஆனாலும், விதையை உருவாக்குவது மனிதனால் முடியாதது. கடவுளின் வல்லமை அங்கே வெளிப்படுகிறது. மனித இயலாமையை, மனித ஆளுமையின் எல்கையை அங்கு நாம் காண முடிகிறது. ஏனென்றால், படைப்பு கடவுளுக்குரியது. கடவுளுடைய படைப்பின் மேன்மையையும், கடவுளின் அதிகாரத்தையும், வல்லமையையும் இது பறைசாற்றுவதாக இருக்கிறது.

கடவுளின் அரசு இந்த உலகத்தில் வருவதற்கு நாம் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். நாம் நாமாக வாழ வேண்டும். நாம் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். நாம் அடுத்தவர்க்காக வாழ வேண்டும். அப்படி வாழ்கிறபோது, கடவுளின் அரசு நம்மிலும் செயல்பட ஆரம்பிக்கிறது.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இறையாட்சி நம்பிக்கையின் செயல்வடிவம்

இயேசுகிறிஸ்து இறையரசை ஒப்பீட்டுப்பேசுகிற நிகழ்ச்சி தரப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து தனது பணியைத் தொடங்கும்போது காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது"(மாற்கு 1: 15) என்று கூறுகிறார்.

இறையாட்சி என்றால் என்ன? யூதர்களைப்பொறுத்தவரை, இந்த உலகத்தைப்பற்றிய அவர்களுடைய பார்வை இதுதான்: இந்த உலகத்தில் தீய ஆவிகளுக்கும், கடவுளுக்கும் இடையே போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. மெசியா வந்து தீமைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற்று, தன்னுடைய அரசை நிலைநாட்டுவார் என அவர்கள் நம்பினர். மெசியா வரக்கூடிய காலத்தில் ஒருசில அருங்குறிகள் தோன்றும் என்பதும் அவர்களின் நம்பிக்கையாய் இருந்தது. இத்தகைய நம்பிக்கையைத்தான் இயேசு அவர்களுக்கு உறுதிப்படுத்துகிறார். இறையரசு எப்படி இருக்கும் என்பதை உவமைகளால் அவர் எடுத்துரைக்கிறார். இறையரசு என்பது நம்பிக்கை செயல்வடிவம் பெறுகிற நிகழ்வு. இயேசுவின் வாழ்வு, துவண்டுபோயிருந்த மக்களுக்கு, காத்திருந்து காத்திருந்து அழுது வீங்கிய விழிகளோடு 'தங்கள் பிரச்சனைகளுக்கு கடவுள் ஒரு முடிவு தரமாட்டாரா?' என்ற நம்பிக்கையோடு காத்திருந்த ஏழை, எளியவர்களுக்கு கடவுளின் அன்பை உணரச்செய்வதாக இருந்தது.

நாம் ஒவ்வொருவரும் மற்றவர் வாழ்வில் இறையரசை மலரச்செய்ய முடியும். எப்போது? நம்முடைய வார்த்தைகளால், செயல்பாடுகளால் மற்றவர் வாழ்வில் ஒளி ஏற்றும்போது. அனைவரும் இறையரசை அனுபவிக்க நம்மால் இயன்றதை, கடவுள் காட்டும் வழியில் செய்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

"தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது" !

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இறையாட்சியின் இயல்பைப் பற்றி நமக்கு எடுததுரைக்கின்றார். இறையாட்சி எப்படி வளர்கின்றது? மனித முயற்சிக்கு அங்கு இடமுண்டா?

இயேசு கூறுகிறார்: "நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறையத் தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது".

ஆம், இறையாட்சி இத்தகைய விதைக்கு ஒப்பானது. இறைவனே விதைக்கிறார், இறையாட்சி தானாகவே வளர்கிறது, இறுதியில் இறைவனே இறையாட்சியை நிறைவுசெய்வார்.

அப்படியானால், நமது பங்கு என்ன? நமக்கு இறையாட்சிப் பணி என்று எதுவுமே இல்லையா? நமது பணிகளெல்லாம் வீணா? இல்லை, நமது பணிகள் அவசியம் தேவை. இருப்பினும், நமது சொந்த முயற்சியினால், உழைப்பினால் இறையாட்சி மலரப்போவதில்லை. இறைவனின் அருளே அதை நடைபெறச் செய்கிறது.

"ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில், காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்" (திபா 127:1) என்னும் திருப்பாடல் வரிகளை மனதில் கொண்டு, நமது கடமைகளை, பணிகளை நன்கு ஆற்றுவோம்.

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்களுடைய உழைப்பினால் அல்ல, இறைத் தந்தையின் திருவுளத்தின்படியே நன்மைகள் நிகழ்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டு, தாழ்மையான மனத்துடன் பணியாற்ற அருள்தாரும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-பணி. குமார்ராஜா



இணையதள உறவுகளே

நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. அறிவியல் ஒரு எல்லைவரை எட்டிச்சென்று, பயிர் வளர்வதற்கும், வளர்ந்த பயிர் விளைச்சலுக்கான காரணத்தை விளக்கலாம். அந்த எல்லைக்குப் பின், அறிவியலும் மௌனம் சாதித்துவிடுகிறரது. மனிதனின் கையை மீறிய ஒரு சக்தி அந்த பயிறுக்குள் இருந்து, நிலம் தானாக விளைச்சல் கொடுக்கச் செய்கிறது.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தன் கையை மீறிய ஒரு ஆற்றல் நம்மை அறியாமல் நமக்குள்ளும் புறமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதுதான் இறை ஆட்சி. சில விசித்திரமான நிகழ்ச்சிகள் நம்மில் குருக்கிடும்போது, ஆச்சரியமாக அந்த தெய்வீக சக்தி நம்மை பத்திரமாக பாதுகாத்த சம்பவங்கள், நமக்கும் நம்மைச் சுற்றியிருக்கும் நண்பர்களுக்கும் நிகழ்ந்தது நாம் அறியாததல்ல.

வாசிக்கும் அனைவரும் உங்கள் வாழ்வில் உங்களை அறியாமல் இறையாட்சி செயல்பட்டு உங்களை பாதுகாத்த நிகழ்வுகளை மின் அஞ்சலில் எழுதுங்கள். இறை ஆட்சியின் செயல்பாட்டை அனைவரும் அறிய வாய்ப்பாகும். இறை ஆட்சி வெளிப்படையாக ஒருநாள் வெளிப்படும். அதுவரை காத்திருப்போம், விழிப்போடு செபிப்போம்.

-ஜோசப் லீயோன்



விதையுங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையாட்சியைத் தானாகவே முளைத்து வளரும் விதைக்கு ஒப்பிடுகிறார். நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அத்துடன், அவரது பணி முடிந்துவிடுகிறது. பின்னர், அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. பின்னர், விளைச்சல் அளிக்கிறது.

இந்த உவமை நம் அனைவருக்கும் ஊக்கமூட்டுவதாக அமைந்திருக்கிறது. நமது பணிகளுக்கு நேரடியாக வெற்றியோ, பலனோ கிடைக்கவில்லை என்று நாம் வருந்தினால், இந்த உவமை நமக்கு உற்சாகம் தருவதாக அமைந்திருக்கிறது. நாம் விதை விதைப்பவர்கள். அதை வளரச் செய்து, பலன் தருபவர் இறைவனே. எந்த நேரத்தில், எத்தகைய பலன் தரவேண்டும் என்பது அவரது திருவுளமே என்பதை ஞானத்தோடு ஏற்றுக்கொள்வோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் நல்ல எண்ணங்களை, நல்ல திட்டங்களை விதையாகத் தூவுவது மட்டுமே. மற்ற அனைத்தையும் இறைவன் பார்த்துக்கொள்வார். இந்த நம்பி;க்கையில் நம் பணிகளை ஆர்வமுடன் செய்வோம்.

மன்றாடுவோம்: விளைச்சலின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் பணிகளை எந்த எதிர்பார்ப்போ, ஏமாற்றமோ இன்றி ஆற்ற இன்றைய நற்செய்தி வாசகம் மூலமாக அழைப்பு விடுக்கிறீர். உமக்கு நன்றி. எங்கள் பணிகளை ஆசிர்வதித்து, உமது திருவுளப்படியே பலன் தருவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா

--: அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------



"நிலத்தில் ஒருவர் விதைக்கிறார்...
அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது" மாற்கு (4:27)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- விவசாயப் பின்னணியிலிருந்து இன்னொரு உவமையை எடுத்துக் கூறுகிறார் இயேசு. வயலில் விதைக்கச் செல்லுமுன் மண் நன்றாகப் பண்பட்டிருக்க வேண்டும். ஆனால் விதைத்த பிறகு அவ்விதை நிலத்தில் வேரூயஅp;ன்றுகிறது; தளிர் தோன்றுகிறது; இலை வளர்கிறது; பூ மலர்கிறது; கதிர் வெளியாகித் தானியம் உருவாகிறது. இச்செயல்களில் எதையுமே விவசாயி செய்வதில்லை; மாறாக, இயற்கையே செய்கிறது. மனித கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விதத்தில் இயற்கையின் செயல்கள் நிகழ்ந்து, மனிதருக்கு வளமான விளைச்சல் கிடைக்கிறது. இந்த இயற்கை நிகழ்வைப் பின்னணியாகக் கொண்டு இயேசு மக்களுக்கு ஓர் ஆழ்ந்த உண்மையை விளக்குகிறார். அதாவது, கடவுளாட்சியை இவ்வுலகுக்குக் கொணர்வதில் முக்கிய பங்காற்றுபவர் கடவுள்தாம். மனிதர் தம் சொந்த முயற்சியால், கடவுளின் துணையின்றி, கடவுளாட்சியை மலரச் செய்ய இயலாது.

-- இதனால், கடவுளாட்சியை மலரச் செய்வதில் மனிதருக்குப் பங்கே இல்லை என்று நாம் தவறாக முடிவுகட்டிவிடல் ஆகாது. கடவுளோடு இணைந்து மனிதர் உழைக்கும் போது கடவுள் ஆட்சி அங்கே மலர்கின்றது. அப்போது கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ற வாழ்க்கைமுறை மனிதருக்கு இயல்பான ஒன்றாக மாறும். அதுவே இறையாட்சியின் மலர்ச்சி. அத்தகைய ஆட்சியைக் கொணர்வதுதான் தம் பணி என்று இயேசு முழங்கினார். அவரோடு இணைந்து மனிதர் செயல்படும்போது அவருடைய இறையாட்சிப் பணி விரிவடையும்; மனித சமுதாயம் கடவுள் விரும்பும் சமுதாயமாக, கடவுளின் ஆட்சி நிலவும் குழுவாக மாறும். இத்தகைய புதிய சமுதாயம் இங்கே தொடங்கிவிட்டது என்றாலும் அதன் நிறைவு இறுதிக்காலத்தைச் சார்ந்தது என இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார்.

மன்றாட்டு
இறைவா, இறையாட்சி மலர நாங்கள் உம்மோடு ஒத்துழைக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"இறையாட்சி கடுகு விதைக்கு ஒப்பாகும்" (மாற்கு 4:31)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- கடுகு விதை சிறிய வகையது; ஆனால் பாலஸ்தீனத்தில் கடுகுச் செடி நடுத்தர மரம்போலவே வளரும் தன்மையது. இதை இயேசு பின்னணியாகக் கொண்டு இறையாட்சி பற்றி விளக்குகிறார். இறையாட்சியின் தொடக்கம் சிறிதாக இருக்கலாம்; ஆனால் அதன் வளர்ச்சியோ மிகப் பெரிதாக இருக்கும். தமிழ் இலக்கியப் பாணியில் கூறுவதாக இருந்தால் கடுகைவிடச் சிறிய ஆல விதை நிலத்தில் விழுந்து வளர்ந்து ஓங்கும்போது வானளாவ எழுந்து, பரந்து விரிந்து எண்ணிறந்த படைவீரருக்கு நிழலளித்துக் காப்பதைக் காட்டலாம். சிறிய தொடக்கம் என்றாலும் எதிர்பார்ப்புகளை விஞ்சிய வளர்ச்சியைப் பெற்று உயர்வது கடவுளின் ஆட்சி. இதிலிருந்து இயேசு இரு பாடங்களைப் புகட்டுகின்றார். முதலில், கடவுளாட்சியின் தொடக்கம் சிறிதாக இருக்கிறதே என நாம் நம்பிக்கை இழத்தல் ஆகாது. ஏனென்றால் கடவுளின் திட்டத்தில் அவரது ஆட்சி ஒருநாள் மனிதர் அனைவரையும் உள்ளடக்குகின்ற பரந்த ஆட்சியாக மலர்ந்து விரியும். இரண்டாவது, கடவுளோடு மனிதர் ஒத்துழைப்பதால் கடவுளாட்சி வரும் என்பதால் சிறிய தொடக்கம் என்றாலும் தயக்கமின்றி நாம் செயல்பட வேண்டும் என இயேசு நமக்கு உணர்த்துகிறார்.

-- மரம்போல வளர்கின்ற கடுகுச் செடியில் பறவைகள் வந்து தங்கும் என இயேசு கூறுவது கடவுளாட்சியில் யாவருக்கும் இடம் உண்டு என்பதைக் காட்டுகிறது. பறவைகளுக்குப் பாதுகாப்பான இடம் ஒதுக்க இயற்கையன்னை மறப்பதில்லை. அதுபோல, கடவுளாட்சியில் எல்லா மக்களும் இடம் பெற வாய்ப்புண்டு என்னும் கருத்தை இயேசு நமக்கு வழங்குகிறார்.

மன்றாட்டு
இறைவா, சிறிய அளவு என்றாலும் உம்மோடு இணைந்து பெரிய மனதோடு செயல்பட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்



---------------------------

"கடுகு விதை .. ..பெருங்கிளைகள் விடும்."

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

கடுகு விதை முளைத்து வளர்ந்து பெருங்கிளைகள் விடுமாம். வானத்துப் பறவைகள்; அதன் கிளைகளில் தங்குமாம். அறிவியல் கடுமையாக உதைக்குதல்லவா! நண்பர்களே, இது அறிவியல் ஆராய்ச்சி புத்தகம் அல்ல. இறைவனைப்பற்றியும் மனித மீட்பும்பற்றிய வெளிப்படுத்துதல் அடங்கிய புத்தகம்.

கடுகு விதையிலிருந்து பெரிய மரம் தோன்றுகிறது, அதற்கு பெரிய பல கிளைகள் இருக்கிறது, இவை சொல்லும் செய்தி என்னவென்றால் - 'கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை' கடுகிலிருந்து மரமும் வளரும். கடவுளும் மனிதனாவார். கன்னியின் வயிற்றில் மனினாகவும் பிறப்பார். நாம் செயல்படுகிறோம். நாம் வல்லமையுள்ள இறைவன்.

இறையாட்சியை கடுகு விதையிலிருந்து கிளைகள் உள்ள மரத்தை உண்டாக்கும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடுகிறார். இறை அரசு அத்தனை வியப்புமிக்கது. இறை ஆற்றல் அதிர்ச்சிiயுயம் ஆச்சரியத்தையும் தரும் வல்லமைகொண்டது. எத்தனை கிளைகள், வேர்கள், விழுதுகள் வெட்டப்பட்டும், இறையரசின் செயல்பாடுகளில் தயக்கமோ தடுமாற்றமோ இருப்பதில்லை. ஏனென்றால் செயல்படுவது இறைவன். அவரது ஆற்றலின் வெளிப்பாடுகள் அதிசயமானவை.

இறையரசின் செயல்பாடு கடவுளின் வல்லமைக்குச் சான்று. இறைவன் ஆற்றலோடு திருச்சபையில் செயலாற்றுகிறார் என்பதற்குச் சொல்லப்பட்டதே இவ்வுவமை. உம் திருச்சபையை இறைவா நீர் வழிநடத்தும் விதம் ஆச்சரியமானதே. இதை ஏற்றுக்கொள்வோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!