Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   11  ஜனவரி 2019  
                                         -திருக்காட்சி விழாவுக்குப் பின் வெள்ளி
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-13

அன்பார்ந்தவர்களே, இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.

எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ!

கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார். இறைமகன் மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை.

கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று. இறைமகனைக் கொண்டிருப் போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்; அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார்.

இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்துகொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:147: 12-13. 14-15. 19-20 (பல்லவி: 12)
=================================================================================
 பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! அல்லது: அல்லேலூயா.

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி

14 அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். 15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். 20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை. அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 04: 23

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 தொழுநோய் அவரை விட்டு நீங்கிற்று.

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 12-16

அக்காலத்தில் இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து,

"ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என மன்றாடினார்.

இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, "நான் விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக!" என்றார்.

உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று.

இயேசு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்று கட்டளையிட்டார்.

ஆயினும் இயேசுவைப் பற்றிய செய்தி இன்னும் மிகுதியாகப் பரவிற்று. அவரது சொல்லைக் கேட்கவும் தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறவும் பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்துகொண்டிருந்தார்கள்.

அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டி வந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 லூக்கா 05:12-16

(தொழு)நோயாளிமீது இரங்கிய இயேசு

நிகழ்வு

இங்கிலாந்து நாட்டில் தோன்றிய மிகப்பெரிய நாவலாசிரியரும் நாடகாசிரியருமான ஒலிவர் கோல்ட்ஸ்மித் (Oliver Goldsmith), ஆரம்ப காலத்தில் ஒரு மருத்துவராக இருந்து ஏழை எளிய மக்களுக்குப் பணிசெய்து வந்தவர்தான். அப்படி அவர் பணிசெய்யும்போது தன்னிடத்தில் வரும் நோயாளிகளிடத்தில் கட்டணம் எதுவும் வசூலிக்காமல், இலவசமாகவே பணிசெய்து வந்தார். சில சமயங்களில் மட்டும் நோயாளிகள் தரும் சொற்பக் கட்டணங்களை ஏற்றுக்கொண்டார். அவற்றைக்கூட தன்னிடம் உதவி என்று வருபவர்களிடம் கொடுத்துவிடுவார்.

ஒருசமயம் சௌத்வாக்கில் (Southwalk), குடும்பத்தாரால் கைவிடப்பட்ட நோயாளி ஒருவர் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார், அங்கு வந்து அவருக்கு சிகிச்சை அளிக்குமாறு ஒருசிலர் கேட்டுக்கொண்டார்கள். ஒலிவர் கோல்ட்ஸ்மித்தும் அவர்களுடைய அழைப்பினை ஏற்றுக்கொண்டு, குறிப்பிட்ட அந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப் புறப்பட்டுச் சென்றார்.

ஒலிவர் கோல்ட்ஸ்மித் அந்த நோயாளியின் வீட்டிற்குப் போய் பார்த்தபின்புதான் தெரிந்தது, அந்த நோயாளியை வெறும் மருந்து மாத்திரை மட்டும் குணப்படுத்திவிடாது, அதை விட வேறொன்று தேவைப்படுகின்றது என்பதை உணர்ந்தார். உடனே ஒலிவர் கோல்ட்ஸ்மித் அந்த நோயாளிக்குத் தேவையான சிகிச்சையை அளித்துவிட்டு, தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் ஒரு பையில் போட்டு, "இதில் உள்ள பணத்தை உங்களுடைய தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளவும்" என்று எழுதி அவரிடம் கொடுத்துவிட்டு வந்தார் .

இது நடந்து ஒருசில மாதங்கள் கழித்து, படுத்த படுக்கையாகக் கிடந்த அந்த நோயாளி முற்றிலுமாகக் குணமாகி ஒலிவர் கோல்ட்ஸ்மித்திடம் வந்தார். "ஐயா! கையில் ஒன்றுமில்லாமல் படுக்கையில் கிடக்கின்ற எனக்கு, யார் சிகிச்சை அளிப்பார். யார் என்னுடைய எதிர்காலதில் எனக்கு ஆதரவு தருவார் என்று எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். இந்த நேரத்தில் நீங்கள் அளித்த சிகிச்சையும், செய்த பண உதவியும்தான் நான் நோயிலிருந்து விரைவாகக் குணமடைய உதவி செய்தன. உண்மையில் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது" என்று கைகூப்பி நன்றிசொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

நம்மோடு வாழக்கூடிய நோயாளிகளை, கைவிடப்பட்டவர்களை எப்படி வேண்டுமாலும் கவனித்துக் கொள்ளலாம், குறிப்பாகப் பணம் தந்துகூட உதவலாம் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

இஸ்ரயேல் சமூகத்தில் தொழுநோயாளர்களின் அவலநிலை

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு ஓர் ஊரில் இருக்கும்போது, தொழுநோயாளர் ஒருவர் அவரிடம் வந்து தன்னுடைய நோயை நீக்குமாறு கெஞ்சிக் கேட்கின்றார். இயேசு தன்னிடம் வந்த தொழுநோயாளரை எப்படிக் குணப்படுத்தினார் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பாக, இஸ்ரேயல் சமூகத்தில் தொழுநோயாளர்களின் நிலை எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்வோம்.

தொழுநோயாளர்களின் நிலையைப் பற்றி லேவியர் புத்தகம் 13,14 ஆம் அதிகாரங்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அதன்படி ஒருவருக்குத் தொழுநோய் வந்திருக்கின்றது என்பதை குரு கண்டுபிடிப்பார். அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட தொழுநோயாளி ஊருக்கு வெளியே வைக்கப்படுவார். மேலும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பாவி என்றே கருதப்படுவார் (எசா 1:4-6), அவர் செத்தவருக்குச் சமமானவராக இருப்பார் (எண் 12:12). இப்படிப்பட்ட நிலையில் இருந்த ஒரு தொழுநோயாளி, இயேசுவிடம் வந்து, தன்னுடைய நோயை நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றார்.

தொழுநோயாளர்மீது இரங்கிய இயேசு

சமூகம் 'தீண்டத்தகாதவர்கள்' என்று கருதிய தொழுநோயாளரை இயேசு தொட்டுக் குணப்படுத்துகின்றார். 'தீண்டத்தகாதவர்' என்ற நிலையில் இருந்த தொழுநோயாளரைத் தீண்டுவதால், அல்லது தொடுவதால் தான் 'தீண்டத்தகாதவன் ஆவேன்' (?) என்பதை எல்லாம் நினைத்து இயேசு கவலை கொள்ளவில்லை. மாறாக அந்த மனிதர் கொண்டிருந்த தாழ்ச்சியையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பார்த்துவிட்டு, இயேசு அவரைத் தொட்டுக் குணப்படுத்துகின்றார்.

இயேசு அந்த மனிதரைக் குணப்படுத்திய பின் சொல்லும் வார்த்தைகள் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. இயேசு அவரிடம், "நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்கின்றார். இயேசு அறிவுக்கு ஒவ்வாத சட்டங்களையும் சடங்குமுறைகளையும்தான் எதிர்த்தாரே ஒழியே, நல்ல சட்டங்களை, நியமங்களை தான் கடைப்பிடித்ததோடு மட்டுமல்லாமல், மற்றவரையும் கடைபிடிக்கச் சொன்னார் என்பதற்கு இயேசுவின் இவ்வார்த்தைகள் சான்றாக இருக்கின்றன.

சிந்தனை

நோயாளிகளின்மீதும் கைவிடப்பட்டவர்கள்மீதும் அன்புகொண்டு, அவர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்யும் இயேசு நம்மையும் அவ்வாறு இருக்க அழைக்கின்றார் (மத் 25:36)

ஆகவே, நாமும் இயேசுவைப் போன்று நோயாளிகளிடம் அன்பும் பரிவும் இரக்கமும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.




- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 01யோவான் 05:05-13

இயேசுவை இறைமகன் என நம்புவோர் வாழ்வடைவர்

நிகழ்வு

தன்னுடைய ஆற்றல் மிக்க எழுத்தாலும் பேச்சாலும் பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டவர் வால்டர் (Valtaire). நாத்திகரான அவர், கடவுளையும் திருச்சபையையும் திருத்தந்தையையும் அறவே வெறுத்து வந்தார். இது மட்டுமல்லாமல், "இன்னும் இருபது ஆண்டுகளில் கிறிஸ்தவ மதத்தைக் கூண்டோடு அழித்துவிடுவேன்" என்று கொக்கரித்தார்.

ஆனால், இருபது ஆண்டுகளுக்குக்குள்ளாகவே வேறொன்று நடந்தது. ஆம், இருபது ஆண்டுகளுக்குள் கிறிஸ்தவ மதத்தையே அழித்துவிடுவேன் என்று சவடால் விட்ட வால்டர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். அவர் இறப்பதற்கு முன்பாக ஒரு குருவானரை அழைத்து, தான் செய்த தவறுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்டார். அது மட்டுமல்லாமல், மாற்கு நற்செய்தி 14:21 ல் வருகின்ற இறைவார்த்தையை மேற்கோள் காட்டி "நான் பிறவாதிருந்தால் நலமாய் இருந்திருக்கும்" என்று கண்ணீர் சிந்தி உயிர்துறந்தார்.

கடவுள்மீது நம்பிக்கை இல்லாமல், அவரைப் பற்றி அவதூறாகப் பேசுவோருடைய கதி எப்படி இருக்கின்றது என்பதற்கு வால்டரின் வாழ்க்கை ஒரு சான்று. இதற்கு மாறாக நாம் கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டு, இயேசுவை இறைமகன் என ஏற்றுக்கொண்டு வாழ்கின்றபோது நிலைவாழ்வடைவோம்

இயேசுவே இறைமகன்

இன்றைய முதல் வாசகத்தில் யோவான், "இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?" என்கின்றார். யோவான் இவ்வாறு எழுதுவதற்கான காரணத்தை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். யோவானின் காலத்தில் ஒருசிலர் இயேசு, மரியாவின் வயிற்றில் பிறந்த ஒரு சாதாரண மனிதனே என்று சொல்லிவந்தார்கள். இத்தகைய சூழலில்தான் யோவான், இயேசு இறைமகன் என்று சான்றுகளோடு எடுத்துரைக்கின்றார்.

இயேசு இறைமகன் என்பதற்கான மூன்று சான்றுகள்

இயேசு இறைமகன் எனச் சொல்லும் யோவான், தொடர்ந்து சொல்கின்றார், "நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டுமல்ல, நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கின்றார். தூய ஆவியாரே உண்மை" என்று. ஆம், இயேசு கிறிஸ்து இறைமகன் என்பதை நிரூபிப்பதற்கு நீர், இரத்தம், தூய ஆவியார் என்ற மூன்று சான்று நமக்கு முன்பாக இருக்கின்றன.

வழக்கமாக யூதர்கள் ஒருவருடைய சான்றினை ஏற்றுக்கொள்வது கிடையாது. ஒரு செயல் உண்மை என்று நிருபிப்பதற்கு இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட சான்றுகள் தேவைப்படும் (இச 19:15). அந்த வகையில் பார்க்கும்போது, இயேசு இறைமகன் என்று உறுதியாகச் சொல்வதற்கு மூன்று சான்றுகள் இருப்பது பெருமையே.

இப்போது இந்த மூன்று சான்றுகளும் இயேசுவை எப்படி இறைமகன் என நிரூபிக்கின்றன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு யோர்தான் ஆற்றில், திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெறுகின்றபோது, வானத்திலிருந்து தந்தையாம் கடவுள், "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்கின்றார் (மத் 3:17). இங்கே தண்ணீரானது இயேசு இறைமகன் என்பதை எடுத்து இயம்புவதாக இருக்கின்றது.

அடுத்ததாக, யோவான் நற்செய்தியில் இயேசு, "தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்" என்பார். அப்போது வானிலிருந்து தந்தைக் கடவுளின் குரல், "மாட்சிப்படுத்துவேன், மீண்டும் மாட்சிப்படுத்துவேன்" என்று சொல்லும் (யோவான் 12:28). இங்கே தந்தைக் கடவுள் இயேசுவை மாட்சிப்படுத்துவதாகச் சொல்வது, சிலுவையில் இரத்த வெள்ளத்தில் மாட்சிப்படுத்துவதைக் குறிப்பதாக இருக்கின்றது. இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தி உயிர்துறக்கின்றபோது, அங்கே நின்றுகொண்டிருக்கும் நூற்றுவத் தலைவனோ, "இவர் உண்மையான் இறைமகன்" என்பார் (மத் 27:54). ஆகையால், இயேசு சிந்திய இரத்தம் அவர் இறைமகன் என சான்று பகர்கின்றது என்று உறுதியாகச் சொல்லலாம்.

நிறைவாக, தூய ஆவியார், இயேசு இறைமகன் எனச் சான்றுபகர்கின்றார். யோவான் நற்செய்தி 15:26 ல் வாசிக்கின்றோம், "துணையாளர் வரும்போது அவர் இயேசுவைப் பற்றிச் சான்றுபகர்வார்" என்று. தூய ஆவியார் எப்படிச் சான்று பகர்வார் எனில், அவர் அவர் வழி நடக்கின்ற ஒவ்வொருவரின் வழியாக, சீடர்களின் வழியாக இயேசு இறைமகன் எனச் சான்று பகர்வார்.

எனவே, நீர், இரத்தம், தூய ஆவியார் என்ற இந்த மூன்று சான்றுகளின் மூலம் இயேசுவை இறைமகன் என எந்தவொரு தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்ளலாம்.

சிந்தனை

இயேசுவை இறைமகன் என நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யாரெனச் சொல்லும் யோவான், அப்படி நாம் இயேசுவை இறைமகன் என ஏற்றுக்கொண்டால் நிலைவாழ்வைப் பெறுவோம் என்றும் சொல்கின்றார்.

எனவே, இயேசுவே இறைமகன் என நம்பி ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!