|
|
10
ஜனவரி 2020 |
|
|
திருக்காட்சி விழாவுக்குப்பின்
வெள்ளி |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும்
சான்று பகர்கின்றன.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்
5: 5-13
அன்பார்ந்தவர்களே, இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை
வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு
கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும்
வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.
எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும்
இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. மனிதர் தரும்
சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட
மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார்.
இறைமகன் மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள்
கொண்டிருக்கின்றனர்.
ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர்.
ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை.
கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம்
இருக்கிறது.
இதுவே அச்சான்று. இறைமகனைக் கொண்டிருப் போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்;
அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார். இறைமகனிடம் நம்பிக்கை
கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்துகொள்ளுமாறு
உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 147: 12-13.
14-15. 19-20 (பல்லவி: 12)
Mp3
=================================================================================
பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! அல்லது: அல்லேலூயா.
12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள
உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி
14 அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்;
உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். 15 அவர்
தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும்
விரைவாய்ச் செல்கின்றது. பல்லவி
19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும்
நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். 20 அவர் வேறெந்த இனத்துக்கும்
இப்படிச் செய்யவில்லை. அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத்
தெரியாது. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 23
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்;
மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தொழுநோய் அவரை விட்டு நீங்கிற்று.
+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
5: 12-16
அக்காலத்தில் இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம்
தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக்
கண்டு அவர் காலில் விழுந்து, "ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது
நோயை நீக்க உம்மால் முடியும்'' என மன்றாடினார்.
இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, "நான் விரும்புகிறேன்; உமது
நோய் நீங்குக!'' என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு
நீங்கிற்று. இயேசு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்.
நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே
கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர்
என்பதற்கு அது சான்றாகும்'' என்று கட்டளையிட்டார்.
ஆயினும் இயேசுவைப் பற்றிய செய்தி இன்னும் மிகுதியாகப் பரவிற்று.
அவரது சொல்லைக் கேட்கவும் தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறவும்
பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்துகொண்டிருந்தார்கள். அவரோ
ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம்
வேண்டிவந்தார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 யோவான் 5: 5-13
இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர
உலகை வெல்வோர் யார்?
நிகழ்வு
முதல் உலகப்போர் முடிந்திருந்த வேளை. ஒரு மாலை வேளையில் ஒரு தந்தை
தன்னுடைய மகனோடு அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கின் தெருக்களில்
நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்பொழுது ஒருசில வீடுகளின் ஜன்னலோரத்தில்
"விண்மீன்"(ஸ்டார்) தொங்கிக் கொண்டிருந்தது. அதைப்
பார்த்துவிட்டு மகன் தன் தந்தையிடம், "அப்பா! வழக்கமாக
கிறிஸ்துமஸ் நேரத்தில்தானே மக்கள் தங்களுடைய வீடுகளில்
விண்மீன்களைத் தொங்கவிடுவார்கள். இங்கு ஒருசில வீடுகளில்
கிறிஸ்துமஸ் இல்லாத இந்த வேளையிலும் விண்மீன்களைத் தொங்கவிட்டிருக்கின்றார்களே...!
அது ஏன்?" என்று கேட்டான்.
"மகனே! நம்முடைய அமெரிக்க அரசாங்கம், நடந்து முடிந்த உலகப்போரில்
யாரெல்லாம் தங்களுடைய பிள்ளைகளை இழந்தார்களோ, அவர்களைக் கெளரவிக்கும்
பொருட்டு, அவர்கள் தங்களுடைய வீடுகளில் விண்மீன்களைத் தொங்கவிட
அனுமதியளித்திருக்கின்றது. அதனால்தான் அவர்கள் கிறிஸ்மஸ் இல்லாத
இந்த நேரத்திலும் தங்களுடைய வீடுகளில் விண்மீன்களைத் தொங்கவிட்டிருக்கின்றார்கள்"
என்றார் தந்தை.
"நீங்கள் சொல்கிறது புரிகிறது அப்பா! ஆனால், ஏன் ஒருசில வீடுகளில்
இரண்டு விண்மீன்களைத் தொங்கவிட்டிருக்கின்றார்கள்?" என்று
கேட்டான் மகன். அதற்கு அவனுடைய தந்தை அவனிடம், "எந்தெந்த வீடுகளிலெல்லாம்
இரண்டு விண்மீன்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றனவோ, அந்தந்த வீடுகளில்
இருப்போர் தங்களுடைய இரண்டு மகன்களை போரில் இழந்திருக்கவேண்டும்.
அதனால்தான் அவர்கள் இரண்டு விண்மீன்களைத் தொங்கவிட்டிருக்கின்றார்கள்"
என்றார் தந்தை.
தன் தந்தை சொன்னதைக் கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்ட மகன்,
"நாட்டுக்காகத் தங்களுடைய மகன்களைக் கையளித்த இவர்களெல்லாம் மிகப்பெரியவர்"
என்றான். "ஆமாம் மகனே! நாட்டுக்காகத் தங்களுடைய மகன்களைக் கையளிப்பது
என்பது அவ்வளவு எளிதான செயலல்ல, கடின செயல். அப்படிப்பட்ட செயலைச்
செய்த இந்த மனிதர்களெல்லாம் உண்மையில் பெரியவர்கள்தான்" என்றார்
தந்தை.
தொடர்ந்து அவர்கள் இருவரும் நடந்துசென்றுகொண்டிருந்த பொழுது
வெட்டவெளி வந்தது. அந்த வெட்டவெளியில், வானத்தில் விண்மீன் ஒன்று
மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது. அதைப்
பார்த்துவிட்டு மகன் தந்தையிடம், "அப்பா! வானத்தில் விண்மீன்
ஒன்று மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்கின்றதே...! ஒருவேளை
கடவுளும் தன் மகனை இந்த நாட்டுக்காகக் கையளித்துவிட்டாரோ...?"
என்றான் மகன். "கடவுள் இந்த நாட்டுக்காக மட்டுமல்ல, எல்லா நாடுகளுக்காகவும்
தன் ஒரே மகன் இயேசுவைக் கையளித்திருக்கின்றார். அந்த மகன்மீது
நாம் நம்பிக்கை கொண்டால், நிலைவாழ்வு பெறுவோம்" என்றார் தந்தை.
தந்தை சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டு மகன் பெரிதும் மகிந்தான்.
ஆம், தன் ஒரே மகன் இயேசுவையே கையளிக்கும் அளவுக்கு இவ்வுலகின்மீது
கடவுள் மிகவும் அன்புகூர்ந்தார். அந்த மகன்மீது நம்பிக்கை
வைத்தால், நாம் நிலைவாழ்வு பெறுவோம் என்ற உண்மையை இந்த நிகழ்வு
நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகம், இயேசு இறைமகன்
என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார் என்று கூறுகின்றது.
அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு இறைமகன் இல்லை என்று மறுத்தோர்
கிறிஸ்தவம் வேகமாகப் பரவி வந்த தொடக்கக் காலக்கட்டத்தில், இயேசு
இறைமகன் அல்லது மெசியா கிடையாது... இயேசு திருமுழுக்குப்
பெறும்பொழுது, அவரிடத்தில் வந்த மெசியா, அவர் கல்வாரி மலையில்
சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டபொழுது அவரைவிட்டுச்
சென்றுவிட்டார். அதனால் அவர் இறைமகனோ மெசியாவோ அல்ல என்று
சொல்லி வந்தார்கள். இவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில்தான்
யோவான், "இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர்
யார்?" என்று கூறுகின்றார். இயேசு இறைமகன் என்பதை யோவான் எப்படி
நிரூபிக்கின்றார் என்பதைத் தொடர்ந்து நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
இயேசு இறைமகன் என்பதற்கான சான்றுகள்
பொதுவாக யூதர்கள் ஒருவர் தருகின்ற சான்றினை ஏற்றுக்கொள்வது
கிடையாது... இரண்டு பேரும் அதற்கு மேற்பட்டோரும் தருகின்ற
சான்றினைத்தான் ஏற்றுக்கொள்வார்கள் (இச 17:6, 19: 15) இயேசு இறைமகன்தான்
என்பதை யோவான், நீர் (திருமுழுக்கு), இரத்தம் (பாடுகள்) தூய ஆவியார்
(உயிர்ப்பு) ஆகிய மூன்று சான்றுகளின் வழியாக நிரூபிக்கின்றார்.
ஏற்கெனவே, தந்தைக் கடவுள், "இவரே! என்னுடைய அன்பார்ந்த மைந்தன்"
(மத் 3:16-17, 17:5) என்று இயேசுவுக்குச் சான்று பகர்வார். இங்கு
யோவான், இயேசுவே இறைமகன் என்பதற்குக் கூறும் மூன்று சான்றுகள்
கவனத்திற்கு உரியவையாக இருக்கின்றன. ஆகையால், நாம் ஒவ்வொருவரும்
இயேசுவே இறைமகன் என்று நம்பவேண்டும். அப்படி நாம் நம்பி
வாழ்ந்தால், நம்மால் இவ்வுலகை வெல்ல முடியும் என்பது உறுதி.
சிந்தனை
"இயேசுவே இறைமகன் என ஏற்றுக்கொண்டு அறிக்கையிடுபவரோடு கடவுள்
இணைந்திருக்கின்றார்"(1யோவா 4: 15) என்பார் புனித யோவான். ஆகையால்,
நாம் இயேசுவே இறைமகன் என நம்பி ஏற்றுக்கொண்டு, அதனை அறிக்கையிடுவோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 5: 12-16
"இதை யாருக்கும் சொல்லவேண்டாம்"
நிகழ்வு
ஒருசமயம் நெருங்கிய நண்பர்கள் இருவர், நான்கு சக்கர வண்டியில்
ஒரு சுற்றுலாத் தலத்திற்கு வேகமாகச் சென்றுகொண்டிருந்தார்கள்.
வழியில் ஒரு மாடு குறுக்கே வரவே, வண்டி அதன்மீது மோதாமல் இருக்க,
வண்டியை ஓட்டிச் சென்றவர் பிரேக்கை அழுத்தினார்; ஆனால், வண்டி
தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமாக இருந்த ஒரு பள்ளத்தில்
தூக்கி வீசப்பட்டது. அந்நேரத்தில் அந்த வழியாக லாரியில் வந்த
ஒருவர், தன்னுடைய வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, பள்ளத்தில் கிடந்த
வண்டியை நோக்கி ஓடினார். அவர் அங்கு சென்றபொழுது, வண்டியானது
தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. உடனே அவர் வண்டியின் கதவைத்
திறந்து, அதற்குள் கிடந்த இருவரையும் தூக்கி வெளியேபோட்டார்.
நல்லவேளை... அவர்கள் இருவரும் மயக்கமுற்றுக் கிடந்தார்களே ஒழிய,
பெரிதாக அடிபடவில்லை.
இதற்கிடையில் சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் நான்கு சக்கர
வண்டி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டுக் கிடப்பதையும் அதற்குள்
இருந்தவர்களை ஒருவர் தனியோர் ஆளாக இருந்து மீட்டு, வெளியே போடுவதையும்
கண்டு, அங்கு விரைந்து வந்தார்கள். பலர் அங்கு வருவதைப் லாரி
ஓட்டுநர், தான் வந்த வேலை முடிந்துவிட்டது என்று அங்கிருந்து
விரைவாகக் கிளம்பிப் போனார். அவர் அங்கிருந்திருந்து சென்ற
சிறிது நேரத்திற்குள் காவல்துறையினர் அங்கு வந்தனர். அவர்கள்
அடிபட்டு, மயக்கநிலையில் இருந்தவர்களுக்கு முதலுதவியைச்
செய்து, அவர்களை மயக்கம் தெளிவுறச் செய்தார்கள். பின்னர் அவர்கள்
அந்த இருவரிடமும், "உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியவர்
யார்?" என்று கேட்டார்கள். அவர்களோ, தங்களுக்கு யாரென்று தெரியவில்லை
என்றார்கள். சுற்றி இருந்தவர்களிடமும் காவல்துறையினர் கேட்டபொழுது,
அவர்களும் தெரியாது என்றே சொன்னார்கள்.
இது இவ்வாறு இருக்கையில், லாரியில் வந்து அடிப்படுக் கிடந்தவர்களுக்கு
உதவி செய்தவரோ, இருவரை ஆபத்திலிருந்து கப்பாற்றியிருக்கின்றேன்
என்ற சிறிதளவு மமதைகூட இல்லாமல், வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டு
சென்றார்.
தான் செய்த உதவி யாவருக்கும் தெரியவேண்டும்; எல்லாரும் தன்னைப்
பாராட்டவேண்டும் என்று நினைக்கும் மக்களுக்கு நடுவில், தான்
செய்த உதவி யாருக்குமே தெரியாமல் பார்த்துக்கொண்ட இந்த நிகழ்வில்
வருகின்ற லாரி ஓட்டுநர் நம்முடைய கவனத்திற்கு உரியவராக இருக்கின்றது.
நற்செய்தியில் இயேசு, தொழுநோயால் பாதிக்கப்பட்டவரை நலப்படுத்திய
பின்பு, அவரிடம், "இதை யாரிடமும் சொல்லவேண்டாம்" என்று
கூறுகின்றார். இயேசு கூறுகின்ற இவ்வார்த்தைகள் நமக்கு என்ன
செய்தியை உணர்த்துகின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பாப்போம்.
விளம்பரத்தை விருப்பாத இயேசு
இன்று பலர் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் மற்றும்
சதுசேயர்களைப் போன்று எதைச் செய்தாலும் அதன்மூலம் தங்களுக்கு
விளம்பரம் தேடிக்கொள்வதைக் காணமுடிகின்றது. ஒரு குழல் விளக்கைக்
கோயிலுக்குக் கொடுத்தாலும், அதில் இன்னாருடைய உபயம் என்று எழுதப்பட்டிருப்பதைக்
காணமுடிகின்றது. இப்படிப்பட்ட மனிதர்களுக்கு நடுவில் இயேசு
கிறிஸ்து சற்று வித்தியாசமானவர் என்றால் அது மிகையில்லை., இயேசு
தாம் செய்த எதையும் மக்கள் பார்த்துப் பாராட்டவேண்டும் என்பதற்காகவோ,
விளம்பரத்திற்காகவோ செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால், விளம்பரமே
இயேசுவுக்குத் தேவையில்லை. அப்படிப்பட்டவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டவரைக்
குணப்படுத்தியபின் அவரிடம், "இதை யாருக்கும் சொல்லவேண்டாம்" என்று
சொன்னதில் வியப்பேதுமில்லை.
தன்னைக் குறித்துச் சொல்வது தனது பணிவாழ்விற்குத் தடையென உணர்ந்த
இயேசு
இயேசு தொழுநோயிலிருந்து நலமடைந்தவரிடம், "இதை யாருக்கும் சொல்லவேண்டாம்"
என்று சொன்னது, அவர் விளம்பரத்தை விரும்பாதவர் என்று ஒருவிதமான
விளக்கமாக இருந்தாலும், தொழுநோயிலிருந்து நலம் பெற்ற மனிதர் தன்னைக்
குறித்து மற்றவரிடம் சொன்னால், அவர்கள் தன்னை ஒரு வல்ல செயல்களை
நிகழ்த்துபவராகவும் அருமடையாங்களை நிகழ்த்துபவராகவுமே பார்க்கக்கூடும்...
அது துன்புறும் மெசியாவாக இருந்து, இறையாட்சிப் பணியைச்
செய்யும் தனக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் என்று இயேசு அவரிடம்
அவ்வாறு சொல்கின்றார்.
ஆனால், இயேசு அந்த மனிதரிடம் சொன்னதற்கு மாறாக, அவர் எல்லாரிடமும்
சொல்கின்றார். இதனால் இயேசு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குப்
போகவேண்டிய நிலை ஏற்படுகின்றது. சில சமயங்களில் நாம் ஆர்வ
மிகுதியால் இயேசு நம்மிடம் சொல்லாததையும்
செய்துகொண்டிருக்கின்றோம். ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற
நாம் இயேசு நம்மிடம் சொன்னதன்படி நடக்கக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
"அவர் உங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்"(யோவா 2: 5)
என்று மரியா பணியாளர்களைப் பார்த்துக் கூறுவார். எனவே நாம் இயேசு
நம்மிடம் சொன்னபடி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|