|
07
ஜனவரி 2019 |
|
திருக்காட்சி விழாவுக்குப் பின் வரும் திங்கள் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா
எனச் சோதித்தறியுங்கள்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்
(3: 22 - 4: 6)
அன்பார்ந்தவர்களே, கடவுளிடம் நாம் எதைக் கேட்டாலும்
பெற்றுக்கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்;
அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள்
நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம்
நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும்.
இதுவே அவரது கட்டளை.
கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்;
கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார்
என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம்.
அன்பார்ந்தவர்களே, தூய ஆவியின் தூண்டுதல் தமக்கு இருப்பதாகச்
சொல்லிக்கொள்ளும் எல்லாரையுமே நம்பிவிடாதீர்கள்; அந்தத் தூண்டுதல்
கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள்; ஏனெனில் போலி
இறைவாக்கினர் பலர் உலகெங்கும் தோன்றியுள்ளனர்.
இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும்
தூண்டுதல் அனைத்தும் கடவுளிடமிருந்து வருவது. இவ்வாறு கடவுளிடமிருந்து
வரும் தூண்டுதல் எது என அறிந்து கொள்வீர்கள். இயேசுவை ஏற்று அறிக்கையிட
மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடமிருந்து வருவதல்ல. இதுவே
எதிர்க் கிறிஸ்துவிடமிருந்து வரும் தூண்டுதல். இந்த எதிர்க்
கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இதோ! இப்போதே
அவன் உலகில் இருக்கிறான்.
பிள்ளைகளே, நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்கள். நீங்கள் அந்தப்
போலி இறைவாக்கினர்களை வென்று விட்டீர்கள்; உங்களுள் இருப்பவர்
உலகில் இருக்கும் அந்த எதிர்க் கிறிஸ்துவைவிடப் பெரியவர். அவர்கள்
உலகைச் சார்ந்தவர்கள். எனவேதான் உலகு சார்ந்தவற்றையே
பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிசாய்க்கிறது. ஆனால்
நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; கடவுளை அறிந்துகொண்டோர் நமக்குச்
செவி சாய்க்கின்றனர். கடவுளைச் சாராதோர் நமக்குச் செவிசாய்ப்பதில்லை.
இதிலிருந்து, உண்மையான தூண்டுதல் எது, பொய்யான தூண்டுதல் எது
என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா: 2: 7-8. 10-11 (பல்லவி: 8b)
=================================================================================
பல்லவி: நான் பிற நாடுகளை உமக்கு உரிமைச்
சொத்தாக்குவேன்.
7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; `நீர் என்
மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.
8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச்
சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லை வரை உமக்கு உடைமையாக்குவேன்.
-பல்லவி
10 ஆகவே, மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்; பூவுலகை ஆள்வோரே,
எச்சரிக்கையாயிருங்கள்.
11 அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்! அவர்முன்
அகமகிழுங்கள். -பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 23
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்;
மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது.
புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் (4: 12-17, 23-25)
அக்காலத்தில் யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டு,
கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தைவிட்டு
அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய்
அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.
இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:
"செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே!
யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப் பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப்
பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்.
சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி
உதித்துள்ளது."
அதுமுதல் இயேசு, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி
வந்துவிட்டது" எனப் பறைசாற்றத் தொடங்கினார்.
அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய
தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப்
பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
அவரைப் பற்றிய பேச்சு சிரியா நாடு முழுவதும் பரவியது.
பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய நோயாளர், பேய்
பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர் ஆகிய அனைவரும்
அவரிடம் அழைத்து வரப்பட்டனர். அவர் அவர்களைக் குணமாக்கினார்.
ஆகவே கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப்
பகுதி ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்கள் பெருந்திரளாய் அவரைப்
பின்தொடர்ந்தனர்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
01யோவான் 3: 22 - 4:6
"கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து
வாழ்வோருடைய மன்றாட்டு கேட்கப்படும்"
நிகழ்வு
நகர்புறத்தில் இருந்த ஒரு பங்கில் பங்குத்தந்தையாக பணியாற்றி
வந்த குருவானவர் ஒருவர், ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் அன்பியத்
திருப்பலிக்காக ஓர் இல்லத்திற்குச் சென்றிருந்தார். அன்பியத்
திருப்பலியில் வழக்கத்திற்கு மாறாக ஏராளமான ஆண்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
அன்றைய இறைவார்த்தை ஜெபத்தை மையப்படுத்தியதாக இருந்தது. இறைவார்த்தைப்
பகிர்வின்போது பங்குத்தந்தை ஜெபத்தின் வல்லமையைக் குறித்தும்,
எத்தகைய மனநிலையோடு ஜெபித்தால், ஒருவருடைய ஜெபம் கேட்கப்படும்
என்றும் மிக அற்புதமாக எடுத்துச் சொன்னார். எல்லாரும் அதனை மிகக்
கவனமாகக் கேட்டார்கள்.
அன்பியத் திருப்பலி முடிந்தது. அப்போது அன்பியத் திருப்பலிக்கு
வந்திருந்த ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் பங்குத்தந்தையிடம்
வந்து, "தந்தையே! வணக்கம். உங்களிடத்தில் நான் ஒன்றைக் கேட்கவேண்டும்.
நீங்கள் உங்களுடைய மறையுரையில் ஜெபத்தில் வல்லமையைப் பற்றி மிக
அற்புதமாக எடுத்துச் சொன்னீர்கள். இப்போது என்னுடைய கேள்வி இதுதான்.
ஊதாரித்தனமாக அலைந்துகொண்டிருக்கும் என்னுடைய மகன் மனம்மாறி நல்ல
மனிதனாக வாழவேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக நான்
ஜெபித்துக்கொண்டு வருகிறேன். ஆனால் இறைவன் என்னுடைய ஜெபத்தை இதுவரை
கேட்கவில்லை? அது ஏன்?" என்று கேட்டார்.
பங்குத்தந்த சிறுதுநேரம் அமைதியாக இருந்துவிட்டு, அந்த மனிதரைப்
பார்த்துக் கேட்டார், "உங்களுக்கு யார்மீதும் முன்விரோதம் இருக்கின்றா?".
"ஆமாம் தந்தையே! நானும் என்னுடைய நெருங்கிய நண்பனும் ஒன்றாகச்
சேர்ந்து தொழில் செய்தோம். ஆனால், என்னுடைய நண்பன் என்னை ஏமாற்றி,
பணத்தை அபகரித்துக் கொண்டான். அதனால்தான் நான் இத்தனை நாளும்
அவனைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கின்றேன்" என்றார்.
உடனே பங்குத்தந்தை அவரிடம், "உங்களுடைய ஜெபம் கேட்கப்படவில்லை
என்று சொன்னீர்களே. அதற்கு முழுமுதற் காரணம். இப்போது நீங்கள்
சொன்னதுதான். முதலில் நீங்கள் போய் உங்கள் நண்பரோடு சமரசம் ஆகுங்கள்.
அப்போது தன்னாலே உங்களுடைய ஜெபம் கேட்கப்படும்" என்றார்.
பங்குத்தந்தை சொன்ன வார்த்தைகளை மனதில் ஏற்றுக்கொண்டு, அந்த மனிதர்
வெளியே சென்று, தன்னோடு நண்பரோடு சமரசமானார். இது நடந்து ஒருசில
மாதங்களிலேயே அந்த மனிதருடைய மகன் மனம்மாறி நல்ல மனிதனாக வாழத்
தொடங்கினான்.
கடவுளின் கட்டளைகளான அன்பு, மன்னிப்பு, கீழ்ப்படிதல் போன்ற கட்டளைகளைக்
கடைப்பிடித்து வாழ்வோருடைய ஜெபங்களை இறைவன் நிச்சயம் கேட்பார்.
அதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்தான் இந்த நிகழ்வு.
கடவுளை அன்புசெய்வோர் அவருடைய கட்டளைகளைக் கடைபிடிப்பர். அப்போது
அவர் அவர்களுடைய ஜெபங்களைக் கேட்பார்
இன்றைய முதல் வாசகத்தில் யோவான் இவ்வாறு எழுதுகின்றார்:
"அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக்கொள்வோம்; ஏனெனில் அவர்
கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றோம்". இதையே நாம் இவ்வாறு
மாற்றிச் சிந்திக்கலாம். யாராரெல்லாம் கடவுளின் கட்டளைகளைக்
கடைபிடிக்கின்றார்களோ, அவர்களுடைய ஜெபங்களை ஆண்டவர்
கேட்கிறார்" என்று.
கடவுளின் கட்டளைகளை எல்லாராலும் கடைப்பிடித்துவிட முடியுமா? என்றால்,
நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். யோவான் தன்னுடைய நற்செய்தியில்
இயேசு கூறுவதாக இவ்வாறு எழுதுவார், "நீங்கள் என்மீது அன்புகொண்டிருந்தால்
என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்" என்று (யோவான் 14:15).
கடவுளை முழுமையாக அன்பு செய்கின்ற ஒருவரால்தான் அவருடைய கட்டளைகளைக்
கடைபிடிக்க முடியும். அப்படி கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து
வாழ்வோருடைய ஜெபத்தை இறைவன் உறுதியாகக் கேட்கின்றார். இதில் எந்தவொரு
மாற்றுக்கருத்தும் இல்லை.
இன்றைக்கு பலருடைய உள்ளத்தில் எழுகின்ற கேள்வி இதுதான்.
இறைவனிடத்தில் நான் தொடர்ந்து ஜெபித்து வருகிறேனே... அப்படியிருந்தும்
இறைவன் ஏன் என்னுடைய ஜெபத்தைக் கேட்கவில்லை?. இப்படிபட்ட
கேள்வியோடு அங்கலாய்க்கின்ற ஒவ்வொருவரையும் பார்த்து இறைவன்
கேட்கின்ற ஒரு கேள்வி, "என்னிடத்தில் தொடர்ந்து ஜெபிக்கின்றீர்களே,
என்னுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்கின்றீர்களா? என்பதுதான்.
என்றைக்கு நாம் இறைவனின் கட்டளைகளைக் கடைப்பிடித்து
வாழ்கின்றோமா? அன்றைக்கு நம்முடைய ஜெபம் கேட்கப்படுவது உறுதி.
சிந்தனை
திருப்பாடல் ஆசிரியர் கூறுவார், "என் உள்ளத்தில் தீய எண்ணங்களை
வளர்த்திருந்தேனாகில், என் தலைவர் எனக்கு செவிசாய்த்திருக்க
மாட்டார்" (திபா 66:18). இவ்வார்த்தைகள் கடவுளின் கட்டளைகளுக்கு
எதிராக ஒருவர் நடக்கின்றபோது, அவருக்கு கடவுள் செவி சாய்க்கமாட்டார்
என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. ஆதலால், இறைவன்
நமக்கு செவிசாய்க்க வேண்டுமெனில், அவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடித்து
வாழவேண்டும்.
நாம் இறைவனின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 4:12-17, 23-25
பேரொளியைக் கண்ட மக்கள்
ஓரூரில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவருக்கு
ஒன்பது வயதில் மகன் ஒருவன் இருந்தான். ஒருநாள் மகன் தந்தையிடம்
வந்து, "அப்பா! நானும் உங்களோடு சேர்ந்து செருப்புத் தைக்கட்டுமா?"
என்று கேட்டான். அதற்கு அவனுடைய தந்தை, "வேண்டாம்பா! என்னோட கஷ்டம்
என்னோடேயே போகட்டும்... நீயாவது படித்து பெரியாளாய் வா" என்றார்.
"நீங்கள் சொன்னதுபோன்றே நான் பெரிய ஆளாய் வருகிறேன்பா... இப்போது
சிறுதுநேரம் மட்டும் உங்களோடு சேர்ந்து செருப்புத் தைத்து, உங்களுக்கு
ஒத்தாசை புரிகிறேனே" என்று இழுத்தான் மகன்.
மகன் சொன்னதைத் தட்டமுடியாமல் தந்தை, "சரிப்பா! உன் விரும்பம்
போல செய்" என்று சொல்லிவிட்டு, கையில் பெரிய ஊசியை எடுத்துக்கொண்டு
செருப்புத் தைக்கத் தொடங்கினார். மகனும் தன் தந்தை செய்வதுபோன்று
கையில் ஊசியை எடுத்துக்கொண்டு செருப்புத் தைக்கத் தொடங்கினான்.
ஆனால் எதிர்பாராத விதமாக அவனுடைய கையில் இருந்த பெரிய ஊசி அவனுடைய
கண்களில் பட்டு, பார்வையை இழந்தான்.
தன் சொல் பேச்சைக் கேட்காமல் பார்வையை இழந்து நின்ற தன் மகனை
நினைத்து தந்தை பெரிதும் வருந்தினார். இருந்தாலும் மகனின் எதிர்காலம்
பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவனை நகரத்தில் இருந்த
பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். அக்காலத்தில்
பார்வையற்றோர் மரப்பலகையில் செதுக்கப்பட்ட எழுத்துகளைத் தடவித்
தடவித்தான் படிக்கவேண்டும். அது அவனுக்கு மிகவும் கடினமாக இருந்தது.
இருந்தாலும் மனந்தளராமல் படித்தான். அதேநேரத்தில் அவனுக்குள்,
தன்னைப் போன்று பார்வை இழந்து நிற்கின்றவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்ள
ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதற்கான சோதனை முயற்சிகளில்
அவன் தொடர்ந்து ஈடுபட்டான்.
இப்படிப் பல சோதனைகளுக்குப் பின்னும் போராட்டங்களுக்குப்
பின்னும் அந்த பார்வையற்ற மாணவன், பார்வையற்ற குழந்தைகள் எளிதாகப்
பாடம் கற்றுக்கொள்கின்ற அளவுக்கு ஒன்றைக் கண்டுபிடித்தான். அதான்
ப்ரெயில் முறை. அதைக் கண்டுபிடித்த மாணவ(ர்)ன்தான் லூயிஸ்
ப்ரெயில்.
இன்றைக்கு உலகமெங்கிலும் உள்ள பார்வையற்றவர்கள் எளிதாகப் பாடம்
கற்றுக்கொள்கின்ற அளவுக்கு அவர்களுடைய வாழ்வில் ஒளியை ஏற்றிவைத்த
லூயிஸ் ப்ரெயிலை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்
யோவான் கைதுசெய்யப்பட்டதை அறிந்து, இயேசு கப்பர்நாகுமுக்கு வந்து
அங்கு தன்னுடைய பணியைச் செய்யத் தொடங்குகின்றார். எப்போதுமே இயேசுவின்
வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும், பழைய ஏற்பாட்டில்
சொல்லப்பட்ட இறைவார்த்தை நிறைவேறுவதாக எழுதும் மத்தேயு நற்செய்தியாளர்,
இயேசு புறவினத்தார் அதிகமாக வாழும் கலிலேயாப் பகுதியில் தன்னுடைய
நற்செய்திப் பணியை செய்யத் தொடங்கியதும், "காரிருளில் இருந்த
மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள
நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது" என்று எழுதுகின்றார்.
இயேசுவும் அவருடைய பணிவாழ்வும் காரிருளில் இருந்த மக்களுக்கு
எப்படிப் பேரொளியாக இருந்தது என்று இப்போது சிந்தித்துப்
பார்ப்போம். இயேசுவின் வருகைக்கு முன்பாக மக்கள் ஆயனில்லாத ஆடுகள்
போன்று இருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மக்களுக்கு
நல்லவற்றைப் இறைவார்த்தையைப் போதிக்கவும், அவர்களைக் கரிசனையோடு
வழிநடத்துவதற்கும் நல்ல தலைவர்கள் இல்லை. இதனாலே மக்கள்
"காரிருளில்" இருந்தார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இயேசு வருகின்றார். அவர் மக்களுக்கு
ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துரைத்து, அவர்களிடமிருந்த பல்வேறுவிதமான
நோயாளிகளையும் குணப்படுத்துகின்றார். பல்வேறு விதமான நோய்கள்
என்று சொன்னால் உடல், உள்ள, ஆன்ம நோய்கள் அத்தனையும் அடங்கும்.
இயேசு மக்களிடமிருந்த பல்வேறுவிதமான நோய்களால் பாதிக்கப்பட்ட
மக்களைக் குணப்படுத்துவதன் வழியாக அவர்களுக்கு பேரொளியாக விளங்குகின்றார்.
இயேசு இப்படி மக்களிடமிருந்து எல்லா விதமான நோயாளிகளையும் குணப்படுத்தியதைத்
தொடர்ந்து, அவருடைய பெயரும் புகழும் எங்கும் பரவுகின்றது. அதனால்
எல்லாத் திசையிலிருந்தும் மக்கள் அவரைப் பின்பற்றத் தொடங்குகிறார்கள்.
சிந்தனை
"நானே உலகின் ஒளி" என்று சொல்லும் (யோவான் 8:12) இயேசு,
"நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கிறீர்கள்" என்கின்றார் (மத்
5:14). அப்படியானால், இயேசு தன்னுடைய நற்செயல்களால் உலகிற்கு
ஒளியானது போன்று, நாமும் நம்முடைய நற்செயல்களால் உலகிற்கு ஒளியாக
வேண்டும். அதைத் தான் இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றார்.
ஆகவே, நாம் இயேசுவைப் போன்று நமது நற்செயல்களால் உலகிற்கு ஒளியாவோம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
"இயேசு, 'மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு
நெருங்கி வந்துவிட்டது'
எனப் பறைசாற்றத் தொடங்கினார்" (மத்தேயு 4:17)
இயேசுவின் அன்புக்குரியவரே!
-- இயேசு திருமுழுக்குப் பெற்று, பாலைநிலத்தில் சோதிக்கப்பட்ட
நிகழ்ச்சியை விவரித்தபின், மத்தேயு இயேசுவின் பணித் தொடக்கம்
பற்றிப் பேசுகிறார். கடவுளிடமிருந்து பணிப்பொறுப்புப் பெற்ற இயேசு
அப்பணியினை முழுமையாக நிறைவேற்றுவதையே தம் குறிக்கோளாகக்
கொண்டு புறப்பட்டுச் செல்கின்றார். அவருடைய பணி அவர் உரைக்கின்ற
சொல், புரிகின்ற செயல், நினைக்கின்ற எண்ணம், உணர்கின்ற மனநிலை
போன்றவை வழியாக வெளிப்படுகிறது. இவ்வெளிப்பாட்டினை நற்செய்தி
நூல்கள் பதிவுசெய்துள்ளன. இயேசு தம் பணியைத் தொடங்கிய முதல் கட்டத்திலேயே
ஓர் அறிவிப்போடு மக்களை அணுகுகிறார். அதாவது, "மனம் மாறுங்கள்...
விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" (மத் 4:7) என்னும் அறிவிப்பு
இயேசுவின் வாயிலிருந்து வெளிப்படுகிறது. விண்ணரசு என்பது இறையாட்சியைக்
குறிக்கும். விண்ணில் உறைபவர் கடவுள் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில்
விண் என்றாலே கடவுளைக் குறிக்கும் சொல் ஆயிற்று. ஆக, கடவுளின்
ஆட்சி நெருங்கி வந்துவிட்டது என இயேசு மக்களுக்கு அறிவிக்கிறார்.
-- மக்கள் தம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், கடவுளின்
பார்வையைப் பெற வேண்டும், கடவுளின் திருவுளம் யாதென அறிந்துணர்ந்து
அதைத் தம் வாழ்வில் செயல்படுத்த வேண்டும் - இதுதான் இயேசு கடவுளாட்சி
பற்றி அறிவித்த நற்செய்தியின் சாரம். மனம் மாற வேண்டும் என்றால்
மனித சிந்தனை நன்னெறிக்கு ஏற்ப அமைய வேண்டும் எனப் பொருள்படும்.
சிந்தனை நலமாக மாறும்போது அதிலிருந்து பிறக்கின்ற செயல் நலமாக
இருக்கும். செயல் நலமாகும்போது அது பிறருக்கு நலம் பயக்கும்.
மனம் உள்ளிருந்து செயலாற்றும் சக்தி. எனவே மனம் மாறும்போது நம்மில்
உள்ளார்ந்த மாற்றம் ஏற்படும். உள்ளத்தில் புத்துணர்ச்சி ஏற்பட
வேண்டும்; உள்ளம் கடவுளிடம் திரும்பவேண்டும்; தீமையை எண்ணுகின்ற
போக்கு மறைந்து நன்மையை நாடுகின்ற வேட்கை வளர வேண்டும். இவ்வாறு
நாம் மனம் மாறினால் கடவுளின் ஆட்சியில் பங்கேற்க கடவுள் நமக்கு
அருள்வார்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|