Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     26 ஏப்ரல் 2020  
                                              பாஸ்கா 3ஆம் வாரம் - ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
மரணம் இயேசுவைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14, 22-33

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: "யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்துகொள்ளுங்கள்; எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள்.

இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்ல செயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே. கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார்மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. தாவீது அவரைக் குறித்துக் கூறியது:

"நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு."

சகோதரர் சகோதரிகளே, நமது குலமுதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்கமாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார். அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, "அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்" என்று கூறியிருக்கிறார். கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். அவர் கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 16: 1-2,5. 7-8. 9-10. 11 (பல்லவி: 11a) Mp3
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே, வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்.
1
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
2
நான் ஆண்டவரிடம் "நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை" என்று சொன்னேன்.
5
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. - பல்லவி

7
எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
8
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி

9
என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
10
ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். - பல்லவி

11
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-21

அன்பார்ந்தவர்களே,

நீங்கள் "தந்தையே" என அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின்படியே தீர்ப்பு வழங்குகிறார். ஆகையால் இவ்வுலகில் நீங்கள் அன்னியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி வாழுங்கள். உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல; மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும். உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார். அவர் வழியாகத்தான் நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர் நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(திபா 118: 24)

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.
 
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு அப்பத்தைப் பிட்டு சீடர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 13-35

வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டே சென்றார்கள். இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கிவந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவர் அவர்களை நோக்கி, "வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?" என்று கேட்டார். அவர்கள் முக வாட்டத்தோடு நின்றார்கள்.

அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, "எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!"என்றார். அதற்கு அவர் அவர்களிடம், "என்ன நிகழ்ந்தது?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை" என்றார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, "அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சியடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!" என்றார். மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.

அவர்கள் தாங்கள் போகவேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர்போலக் காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், "எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, "வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?" என்று பேசிக்கொண்டார்கள்.

அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், "ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்" என்று சொன்னார்கள். அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
I திருத்தூதர் பணிகள் 2: 14, 22-33
II 1 பேதுரு 1: 17-21
III லூக்கா 24: 13-35

பெறுவோம், தருவோம்

நிகழ்வு

சிறுவன் ஒருவன் ஒரு யூத இரபியிடம், "முன்பெல்லாம் மக்கள் கடவுளைக் கண்கூடாகக் கண்டார்கள். இப்பொழுது அது ஏன் முடியவில்லை" என்றான். உடனே இரபி அவனிடம், "முன்பு வாழ்ந்தவர்கள் மிகுந்த தாழ்ச்சியோடு இருந்தார்கள். அதனால் அவர்கள் கடவுளைக் கண்கூடாகக் கண்டார்கள்; இப்பொழுது உள்ளவர்களுக்குத் தாழ்ச்சி இல்லை. அதனால்தான் கடவுளைக் கண்கூடாகக் காண முடியவில்லை" என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு அவர் அந்தச் சிறுவனிடம் தொடர்ந்து சொன்னார்: "இன்றைக்கு இருக்கக்கூடியவர்களுக்கு தாழ்ச்சி இல்லாவிட்டாலும்கூட, இறைவனே தன்னை வெளிப்படுத்துகின்றார்."

ஆம், மக்களுடைய உள்ளத்தில் தாழ்ச்சி இல்லாவிட்டாலும், இறைவன் தன்னை வெளிப்படுத்துகின்றார். இன்றைய நற்செய்தியில் எம்மாவு நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்ற இரண்டு சீடர்களுக்கு இயேசு தன்னை வெளிப்படுத்துவதைக் குறித்து வாசிக்கின்றோம். பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளில் நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு என்ன சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தேடி வரும் இயேசு

நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் இருவர் எருசலேமிலிருந்து எவ்வாவு நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றார்கள். முன்னதாக இவர்கள் இருவரும் அன்று விடியற்காலையில் கல்லறைக்குச் சென்ற பெண்கள் கல்லறையில் இயேசுவின் உடல் இல்லாததையும் வானதூதர்கள் தோன்றி இயேசு உயிர்த்துவிட்டார் என்று அவர்களிடம் சொன்னதையும் சொல்லக் கேட்டிருந்தார்கள். அப்படியிருந்தாலும் உயிர்த்தெழுந்த இயேசுவைத் தேடவேண்டும் என்ற எண்ணம் சிறிதளவுகூட இல்லாமல், எம்மாவு நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் இயேசுவே இவர்களைத் தேடிவந்து, இவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்துகின்றார். இதன்மூலம் கடவுள் தன் மக்களைத் தேடி வந்திருக்கின்றார் (லூக் 7: 16) என்ற இறைவார்த்தையானது உண்மையாகின்றது.

இங்கு நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான செய்தி, தங்களைத் தேடி வந்த இயேசுவை சீடர்கள் இருவரும் கண்டுகொண்டது, இறைவார்த்தை விளக்கத்திற்குப் பின்பு வந்த அப்பம் பிடிக்கின்ற நிகழ்வில்தான். அப்படியானால் இறைவன் நம்மைத் தேடிவருவதை இறைவார்த்தையிலும் நற்கருணைக் கொண்டாட்டத்திலும் கண்டுகொள்ளலாம் என்று உறுதி.

பெற்ற இறையனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்வோம்

உயிர்த்த அண்டவர் இயேசுவை, அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கையில் கண்டுகொண்ட இரண்டு சீடர்களும் அங்கேயே இருந்துவிடவில்லை. மாறாக, அவர்கள் தாங்கள், அனுபவித்தத்தை மற்றவர்களுக்கு அறிவிக்க எருசலேமிற்கு விரைந்து செல்கின்றார்கள. ஆம், உயிர்த்த ஆண்டவர் இயேசு நமக்குக் கொடுக்கும் மிக முக்கியமான கட்டளை, நற்செய்தி அறிவிப்பாகும். இன்றைய முதல் வாசகத்தில் பெந்தகோஸ்து நாளில் திருத்தூதர்களின் தலைவராகிய பேதுரு மற்ற பதினொருவருடன் சேர்ந்து ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிவிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம்.

இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதும், யூதர்களுக்கு அஞ்சி வாழ்ந்த சீடர்கள், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்பு அவர்கள் துணிவோடு அவரைப் பற்றி அறிவிக்கின்றார்கள். அப்படியானால், நாம் இயேசுவைப் பற்றியை நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கவேண்டும். இந்த உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது.

ஒருமுறை வில்லிங்டனை ஆண்டுவந்த மன்னன் ஒருவன் தனக்குத் தெரிந்த ஓர் அருள்பணியாளரிடம், "கிறிஸ்துவைப் பற்றி அறியாமல் பலர் இங்கு இருக்கின்றபொழுது, எதற்காக ஒருசில குருக்கள் எங்கோ இருக்கின்ற ஒரு நாட்டிற்குச் சென்று நற்செய்தி அறிவிக்கவேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அந்த அருள்பணியாளர், "இயேசு தம் சீடர்களை விட்டுச் செல்வதற்கு முன்பாக, "நீங்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவியுங்கள் சொன்னார். அதனால்தான் குருக்கள் உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிக்கின்றார்கள். மேலும் இயேசு ஒன்றைச் சொல்கின்றார் என்றால் அதைக் காரணமில்லாமல் சொல்வதில்லை. எல்லா மக்களும் இயேசுவை அறிந்துகொள்ளவேண்டும். அதற்காகத்தான் குருக்கள் உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிக்கின்றார்கள்" என்றார்.

ஆம், இயேசு நமக்குக் கொடுத்திருக்கும் மிக முக்கியமான கட்டளை, அவருடைய நற்செய்தியை எல்லாருக்கும் அறிவிக்கவேண்டும் என்பதுதான். எனவே, நாம் அவரைப் பற்றி அறிந்து, அடுத்தவருக்கு அறிவிப்பது மிகவும் இன்றியமையாதது என்பதை மறந்துவிடக்கூடாது.

இவ்வுலகில் வாழும் காலமெல்லாம் ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோம்

இன்றைய இறைவார்த்தை நமக்குச் சொல்லும் மூன்றாவது மிக முக்கியமான் செய்தி. ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வதாகும். புனித பேதுருவின் முதல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் அவர், "இவ்வுலகில் நீங்கள் அன்னியராய் வாழும் காலமெல்லாம் ஆண்டவருக்கு அஞ்சி வாழுங்கள்" என்கின்றார். ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வது என்றால், ஓர் ஆபத்தை அல்லது ஒரு கொடியவரைக் கண்டு அஞ்சி வாழ்வதைப் போல் வாழ்வதா என்ற கேள்வி எழலாம். ஆண்டவருக்கு அஞ்சி வாழ்ந்தால் என்றால், அவரை முழுமையாக அன்புசெய்து, அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாகும். இக்கருத்தினை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு தொடக்க நூல் 22 ஆம் அதிகாரத்தில் வருகின்ற ஒரு நிகழ்வோடு இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

இப்பகுதியில் ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமிடம் தன்னுடைய மகன் ஈசாக்கைப் பலியிடுமாறு சொல்வார். ஆண்டவருக்கு அஞ்சி வாழ்ந்த அபிரகாம் சிறிதும் தயங்காமல் தன் மகன் ஈசாக்கைப் பலியிடத் துணிவார். இதுதான் ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வதாகும். ஆபிரகாம் ஆண்டவருக்கு அஞ்சி வாழ்ந்தார் என்றால், அவரை முழுமையாய் அன்பு செய்து அவருடைய கட்டளையைக் கடைப்பிடித்து நடந்தார். நாம் அவருக்கு அஞ்சி வாழ்கின்றோம் என்றால், அவருடைய இறையன்பு, பிறரன்புக் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அதிலும் குறிப்பாக இன்றைய நாளில் அவர் தருகின்ற எல்லாருக்கும் நற்செய்தியை அறிவிக்கின்ற கட்டளையைக் கடைப்பிடித்து வாழவேண்டும்.

நீதிமொழிகள் நூல், ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம் (நீமொ 9: 10) என்றும் ஒருவரைத் தீமையின்று விலகச் செய்யும்" (நீமொ 16:6) என்றும் சொல்கின்றது. எனவே, நாம் ஆண்டவருக்கு அஞ்சி நடக்கின்றோம் என்பதை தீமையிலிருந்து விலகி நின்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிப்பதை நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் காட்டுவோம். அதன்வழியாக இயேசுவின் உண்மையான சீடர்களாய்த் திகழ்வோம்.

சிந்தனை

ஜான் வெஸ்லி அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள இவை: "மண்ணுலகில் நமக்கென்று இருக்கின்ற தலையாய கடமை, ஆன்மாக்களை மீட்பதுதான்." ஆகவே, நாம் கடவுள் நமக்குக் கொடுத்த இந்த வாழ்க்கையை அவரைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் அறிந்தவற்றை மற்றவர்களுக்கு நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் அறிவிக்கப் பயன்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!