Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   14  ஏப்ரல்  2020  

பாஸ்கா எண்கிழமை - செவ்வாய்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 இயேசுவில் அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 1-12

அந்நாள்களில்

பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்; அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதையும் இறந்தோர் இயேசுவின்மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததையும் கண்டு எரிச்சல் அடைந்து, அவர்களைக் கைது செய்தார்கள்; ஏற்கெனவே மாலையாகி விட்டதால் மறுநாள்வரை காவலில் வைத்தார்கள். அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்ட பலரும் நம்பிக்கை கொண்டனர். இவ்வாறு நம்பிக்கை கொண்ட ஆண்களது எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.

மறுநாள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் எருசலேமில் ஒன்றுகூடினார்கள். அவர்களுடன் தலைமைக் குருவான அன்னாவும், கயபா, யோவான், அலக்சாந்தர் ஆகியோரும், தலைமைக் குருவின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கூடியிருந்தார்கள். அவர்கள் திருத்தூதர்களை நடுவில் நிறுத்தி, ""நீங்கள் எந்த வல்லமையால், அல்லது எந்தப் பெயரால் இதனைச் செய்தீர்கள்?" என்று வினவினார்கள்.

அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: ""மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, உடல் நலமற்றிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, "கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார்." இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா: 118: 1-2,4. 22-24. 25-27a (பல்லவி: 22) Mp3
=================================================================================
பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!
1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2
"என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு" என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
4
"என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு" என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக. - பல்லவி

22
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
24
ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். - பல்லவி

25
ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்!
26
ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
27ய
ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
(திபா 118: 24)

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு சீடர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-14

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், "நான் மீன்பிடிக்கப் போகிறேன்" என்றார். அவர்கள் "நாங்களும் உம்மோடு வருகிறோம்" என்று, போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.

ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், "பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இல்லை" என்றார்கள். அவர், "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்" என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், "அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்" என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.

படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், "நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்" என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், "உணவருந்த வாருங்கள்" என்றார். சீடர்களுள் எவரும், "நீர் யார்?" என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 4: 1-12

மீட்பளிக்கும் இயேசு

நிகழ்வு

மிகப்பெரிய சொகுசுக் கப்பலான டைட்டானிக் கப்பல் கடலில் சென்றபொழுது, பனிப்பாறையில் மோதி, அதில் பயணம் செய்த நூற்றுக்கணக்கானோர் இறந்துபோன செய்தியை நாம் அனைவரும் அறிவோம்.

கப்பல் கடலில் மூழ்கியபொழுது, அதிலிருந்து தப்பித்த ஒருவர், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஹாமில்டன் என்ற நகரில் நடந்த வழிபாட்டுக் கூட்டத்தில் பேசும்பொழுது, கடலிலிருந்து தப்பித்து வரும்பொழுது, தனக்கு நடந்த ஒரு ஒரு நெகிழ்ச்சியாக சம்பவத்தைச் சாட்சியாகப் பகிர்ந்துகொண்டார்:

கப்பல் உடைந்து கடலுக்குள் மூழ்கியபொழுது, எல்லாரும் தங்களுடைய உயிரைக் காத்துக்கொள்ளப் போராடினார்கள். இதில் நிறையப் பேர் தப்பிக்க வழியில்லாமல், கடலுக்குள் மூழ்கி இறந்துபோனார்கள். நானோ என்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள வேகமாக நீந்தி வந்தேன். அப்பொழுது மதபோதகர் ஒருவர், "நீங்கள் மீட்கப்பட்டுவிட்டீர்களா?" என்று கேட்டார். நானோ, "கடலிலிருந்து தப்பித்து உயிர்பிழைக்கின்றேனோ, இல்லையோ" என்று நினைத்துக் கொண்டு "இல்லை" என்றேன். உடனே அவர், "ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; நீங்கள் மீட்பபடுவீர்கள்" என்றார். நானும் அதற்குச் சரியென்று சொல்லிக்கொண்டு, வேகமாக நீந்தத் தொடங்கினேன்.

இதற்கிடையில் ஒரு பெரிய அலையடிக்க, சற்றுத் தொலைவில் இருந்த அந்த மறைப்போதகர் என்னருகில் வந்தார். வந்தவர் மீண்டுமாக அதே கேள்வியைத் திரும்பக் கேட்டார். அப்பொழுது நான், "இல்லை" என்றே சொன்னேன். அதற்கு அவர், "ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; நீங்கள் மீட்கப்படுவீர்கள்" என்றார். இப்படிச் சொல்லிவிட்டு, அவர் உடலில் வலுவில்லாமல், கடலில் மூழ்கி இறந்துபோனார். நானோ, சிரமப்பட்டு நீந்தி, கரைசேர்ந்தேன். பின்னர் அந்த மறைப்போதகர் சொன்னது போன்று, நான் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கைகொண்டு, அவருடைய வழியில் நடந்தேன். இன்று நான் அவர் தந்த மீட்பைப் பெற்றுக்கொண்டவனாய் உணர்கின்றேன்."

இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டதால் மீட்படைந்ததாக மேலே உள்ள நிகழ்வில் வருகின்ற மனிதர் சான்று பகர்ந்தது நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது. முதல் வாசகத்தில் இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர் மீட்புப் பெறுவர் என்று பேதுருவும் யோவானும் சான்று பகர்வதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சிறையில் அடைக்கப்பட்டபொழுதும் இயேசுவுக்குச் சான்று பகர்தல்

ஆண்டவர் இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி, பேதுரு கால் ஊனமுற்ற மனிதரை எழுந்து நடக்கச் செய்ததைத் தொடர்ந்து, பலரும் பேதுருவின் முன்பாகக் கூடுகிறார்கள். அப்பொழுது பேதுருவும் யோவானும் அவர்களிடம் இயேசு கிறிஸ்துவைக் குறித்து சான்று பகர்கிறார்கள். இந்நேரத்தில் அங்கு வருகின்ற குருக்களும் பரிசேயர்களும் கோயில் காவல் தலைவரும், பேதுருவும் யோவானும், இறந்தோர் இயேசுவின் மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததைக் கேட்டு, எரிச்சல் அடைகிறார்கள். மட்டுமல்லாமல், அவர்களைக் காவலில் வைக்கின்றார்.

பேதுருவும் யோவானும் அறிவித்ததைக் கேட்டு, குருக்களும் பரிசேயர்களும் கோயில் காவல் தலைவரும் ஏன் அவர்கள் இருவர்மீதும் எரிச்சலடைந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இயேசு வாழ்ந்த காலத்தில் கோயில் காவல் தலைவராக இருந்தவரும் அதிகாரத்தில் இருந்தவரும் பெரும்பாலும் சதுசேயர்களாக இருந்தார்கள். பணபலமும் அதிகார பலமும் கொண்ட இவர்கள் உயிர்ப்பின்மீது நம்பிக்கை இல்லாதவர்கள். இதனால்தான் இவர்கள் பேதுருவும் யோவானும் உயிர்த்தெழுதலைக் குறித்துப் அறிவித்ததைக் கேட்டு, எரிச்சல் அடைந்து, அவர்களைக் காவலில் வைக்கின்றார்கள்.

இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர் மீட்புப் பெறுவர்

பேதுருவும் யோவானும் கைதுசெய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்ட மறுநாள், இருவருக்கும் தலைமைச் சங்கத்தின் முன்பாக விசாரணை நடக்கின்றது. விசாரணையில் அவர்களிடம், "நீங்கள் எந்த வல்லமையால் எந்தப் பெயரால் இதனைச் செய்தீர்கள்?" என்ற கேள்வியானது கேட்கப்படுகின்றது. அப்பொழுது பேதுரு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திகொண்டு, அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றதையும் கடவுள் அவரை மூன்றாம் நாளில் உயிர்த்தெழச் செய்ததையும் எடுத்துக்கூறுகின்றார். இதோடு கூட, "இயேசுவாலேயே அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை" என்று கூறுகின்றார்.

இயேசுவைப் பற்றி அறிவித்தால் தலைமைச் சங்கத்தார் தன்னைத் துன்புறுத்துவர் என்பதைப் பற்றி எல்லாம் பேதுரு கவலைப்படவில்லை. மாறாக, அவர் ஆண்டவர் இயேசுவைப் பறைசாற்றுகின்றார்; அவரால் அன்று வேறு எவராலும் மீட்பு இல்லை என்று சொல்கின்றார். ஆம், இயேசு ஒருவராலேயே நமக்கு மீட்பை வழங்கவேண்டும். அதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம், அவரிடம் நம்பிக்கை கொள்வதுதான் (மாற்கு 16: 16). எனவே, நாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு, அவர் வழங்கும் மீட்பினைப் பெற்று மகிழ்வோம்.

சிந்தனை

"ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர் (உரோ 10: 13) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, அவருடைய திருப்பெயரைச் சொல்லி, மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 யோவான் 21: 1-14

சீடர்களுக்கு ஊக்கமூட்டிய உயிர்த்த இயேசு


நிகழ்வு


ஃபோர்ட் வாகன நிறுவனத்தின் நிறுவனர் ஹென்றி ஃபோர்ட் என்பவர். இவர் 1896 ஆம் ஆண்டு, ஒரு விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதே விருந்திற்கு தாமஸ் ஆல்வா எடிசனும் வந்திருந்தார். தாமஸ் ஆல்வா எடிசனையும் ஹென்றி ஃபோர்ட்டையும் நன்கு அறிந்த ஒருவர், ஹென்றி ஃபோர்டைத் தாமஸ் ஆல்வா எடிசனிடம், "இவர்தான் பெட்ரோலால் இயங்கக்கூடிய வாகனங்களைத் தயாரிப்பவர்" என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார். இதைக் கேட்டு தாமஸ் ஆல்வா எடிசன், ஹென்றி ஃபோர்டை வெகுவாகப் பாராட்டிவிட்டு, "மின்சாரத்தால் வாகனங்களை இயக்கத்தை விடவும், பெட்ரோலால் வாகனத்தை இயக்குவது மிகவும் நல்லது" என்று ஊக்கமூட்டிவிட்டுச் சென்றார்.

அதுவரைக்கும் பெட்ரோலால் ஓடக்கூடிய வாகனங்களைத் தயாரிப்பது சரியாக இருக்குமா என்று குழம்பிக்கொண்டிருந்த ஹென்றி ஃபோர்ட், தாமஸ் ஆல்வா எடிசன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும், உற்சாகமடைந்து, தான் சென்றுகொண்டிருக்கின்ற பாதை சரியானதுதான் என்று அந்தப் பாதையிலேயே தொடர்ந்து பயணம் செய்யத் தொடங்கினார்.

இது நடந்து பல ஆண்டுகள் கழித்து, ஹென்றி ஃபோர்ட் ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்பொழுது, "என்னுடைய இந்த வளர்ச்சிக்கு தாமஸ் ஆல்வா எடிசனையும் ஒரு முக்கியமான காரணமாகச் சொல்வேன். ஏனென்றால், வாகனங்களைப் பெட்ரோலில் ஓடும்படி தயாரிப்பதா? வேண்டாமா? என்று குழம்பிக் கொண்டிருந்த சூழ்நிலையில், அவர், "பெட்ரோலில் ஓடும்படி வாகனங்களைத் தயாரிப்பது மிகவும் நல்லது" என்று சொல்லி, எனக்கு ஊக்கமூட்டினார். அவர் அளித்த ஊக்கமும் உற்சாகமும்தான், என்னை மோட்டார் வாகனத் துறையில் இவ்வளவு சாதிக்க முடிந்தது" என்றார்.

ஆம், ஒருவர் மற்றவருக்கு அளிக்கக்கூடிய ஊக்கமூட்டும் வார்த்தைகள், அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டுபோகும். அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, சோர்வுற்று இருந்த சீடர்களுக்குத் தன்னுடைய உடனிருத்தல் மூலமாக, வார்த்தைகள் மூலமாக ஊக்கமூட்டி, அவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு போகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பழைய வேலைப் பார்க்கப்போன சீடர்கள்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, திபேரியக் கடலருகே தன் சீடர்களுக்குத் தோன்றுவதைக் குறித்து வாசிக்கின்றோம். ஆண்டவர் இயேசு உயிர்த்த பின் தன்னுடைய சீடர்களுக்கு எருசலேமையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்த்து, ஆறுமுறைக்கும் மேல் தோன்றினார். அதன் பிறகு அவர் தன் சீடர்களுக்குக் கலிலேயாவில் தோன்றுகின்றார்.

இயேசு தன் சீடர்களைக் கலிலேயாவில் சந்திப்பதாகச் சொல்லியிருந்தார் (மத் 28:10; மாற் 14: 28). அதன்படி சீடர்கள் கலிலேயாவிற்கு வந்திருந்தார்கள்; ஆனால், கலிலேயாவிற்கு வந்தபின்பு அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால்தான் அவர்கள் முன்பு செய்த மீன்பிடித் தொழிலைச் செய்யத் தொடங்குகின்றார்கள். சீடர்கள் முன்புசெய்த மீன்பிடித் தொழிலைச் செய்யத் தொடங்கியது என்பது, அவர்களிடம் இருந்த சோர்வையும் உற்சாகமின்மையும் காட்டுவதாக இருக்கின்றது. இப்படிப்பட்ட சூழலில் இயேசு அவர்களுக்குத் திபேரியக் கடலருகே தோன்றுகின்றார்.

தன்னுடைய உடனிருப்பினால் சீடர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டிய இயேசு

உயிர்த்த ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு ஏற்கெனவே இரண்டு முறை தோன்றி, அவர்களை ஊக்கமூட்டியபொழுதும், அவர்கள் இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை இல்லாமலேயே இருந்தார்கள். இதனால் இயேசு மீண்டுமாக அவர்களுக்குத் தோன்றுகின்றார். இயேசு அவர்களுக்குத் தோன்றுவதற்கு முன்பாக, அவர்கள் இரவெல்லாம் பாடுபட்டு மீன் ஒன்றும் கிடைக்காமல் இருந்தார்கள். இந்நிலையில் இயேசு அவர்களிடம், "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்" என்று சொல்கின்றார். அவர்களும் அவர் சொன்னது போன்று வலையை வீச, வலை கிழிகின்ற அளவுக்கு மீன் கிடைக்கின்றது.

இந்நிகழ்வு சீடர்களுக்கு லூக்கா நற்செய்தி 5 ஆம் அதிகாரத்தில் இடம்பெறும் நிகழ்வினை (லூக் 5: 1-11) நிச்சயம் நினைவுபடுத்தியிருக்கும். மட்டுமல்லாமல், தங்களோடு பேசுபவர் இயேசுதான் என்பதை அவர்களுக்கு உணர்த்தி இருக்கும். இதன்மூலம் அவர்களுக்கு இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். ஆம், உயிர்த்த ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு மீண்டும் மீண்டுமாக தோன்றியதற்குக் காரணம், அவர்கள் இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொள்ளவேண்டும்; அவர்கள் தங்களிடம் இருக்கின்ற அச்சத்தையும் நம்பிக்கையின்மையும் போக்கி, நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் இருக்கவேண்டும் என்பதற்குத்தான்.

இயேசுவின் வார்த்தைகளும் அவர் சீடர்களுக்கு மீண்டும் மீண்டும் தோன்றியதும் சோர்வுற்றிருந்த சீடர்களுக்குக் உற்சாகமூட்டி, அவர்கள் இயேசுவின் உயிர்ப்பை மக்களுக்கு மிகுந்த வல்லமையோடு அறிவிக்கச் செய்தன. நாமும் இயேசுவின் வார்த்தைகளால் உற்சாகமடைந்து, அவரைப் பற்றி மக்களுக்கு மிகுந்த வல்லமையோடு எடுத்துரைப்போம். அவரது உண்மையான சீடர்கள் ஆவோம்.

சிந்தனை

"தளர்ந்து போன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்" (எரே 12: 12) என்பார் இறைவாக்கினர் எரேமியா. ஆகையால், நாம் உடலளவிலும் உள்ளத்தளவிலும் தளர்ந்துபோய் இருக்கின்ற மக்களைத் திடப்படுத்துவோம். அதற்கு முன்பு நாம் திடமாய் இருப்போம். இயேசுவுக்கு மிகுந்த வல்லமையோடு சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!