Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   15  ஏப்ரல்  2020  

பாஸ்கா எண்கிழமை - செவ்வாய்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 1-10


ஒரு நாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர். அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்துகொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சை கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் "அழகுவாயில்"என்னுமிடத்தில் வைப்பர். அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சை கேட்டார்.

பேதுருவும் யோவானும் அவரை உற்றுப் பார்த்து, "எங்களைப் பார்" என்று கூறினர். அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார். பேதுரு அவரிடம், "வெள்ளியும் பொன்னும் என்னிடம் இல்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்" என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப்பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்; துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார்.

அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்களனைவரும் கண்டனர். அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகுவாயில் அருகே பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துகொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்ம்மறந்து நின்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 (பல்லவி: 3b) Mp3
=================================================================================

பல்லவி: ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
2
அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! - பல்லவி

3
அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
4
ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! - பல்லவி

6
அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
7
அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. - பல்லவி

8
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9
ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(திபா 118: 24)

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

அப்பத்தைப் பிட்டு சீடர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள்.


✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 13-35


வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டே சென்றார்கள். இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும் வினவிக் கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கிவந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணரமுடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவர் அவர்களை நோக்கி, "வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?" என்று கேட்டார். அவர்கள் முக வாட்டத்தோடு நின்றார்கள்.

அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, "எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!"என்றார். அதற்கு அவர் அவர்களிடம், "என்ன நிகழ்ந்தது?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை" என்றார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, "அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சியடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!" என்றார். மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.

அவர்கள் தாங்கள் போகவேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர்போலக் காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், "எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். அப்போது, அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, "வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?" என்று பேசிக்கொண்டார்கள்.

அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், "ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்" என்று சொன்னார்கள். அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 3: 1-10

"ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்"


நிகழ்வு

மைக்கேல் பிளெமிங், லீ கூக் என்ற இரண்டு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய புத்தகம்தான் "Power in the name of Jesus: A story of hope, redemption and answered prayers

இந்தப் புத்தகம் ஒரு தாய்க்கும் அவருடைய மகனுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மிக அருமையாக எடுத்துச் சொல்லும். இதில் வருகின்ற மகன் மிகப்பெரிய கொலைகாரனாக இருப்பான். இவனுடைய தாய் இவனுக்காக இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி தொடர்ந்து மன்றாடி வருவார். மகனுடைய வாழ்க்கையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது. மாறாக, நாளுக்கு நாள் அவன் கொடியவனாக மாறிக்கொண்டு வருவான். அப்படியிருந்தும் தாய் தன்னுடைய மகனுடைய மனம்மாற்றத்திற்காக மன்றாடி வருவார்.

ஆண்டுகள் பல உருண்டோடும். இப்பொழுது தாய், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுவார். ஆனாலும், தன்னுடைய மகனின் மனமாற்றத்திற்காக, இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி மன்றாடுவதை மட்டும் விடவே மாட்டார். இப்படியிருக்கையில் ஒருநாள் மகன் தன்னுடைய கடந்த கால வாழ்வை எண்ணிப் பார்ப்பான் அது மிகவும் கேவலமாக இருப்பதை உணர்ந்து, அவன் தனக்காக இத்தனை ஆண்டுகளும் வேண்டிவரும் தன்னுடைய தாயிடம் சென்று, தன்னுடைய குற்றங்களை எடுத்துச் சொல்லி, மன்னிப்புக் கேட்பான். மட்டுமல்லாமல், தன்னுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக, ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துரைப்பதுதான் என முடிவுசெய்து, அதன்படி செய்யத் தொடங்குவான்.

இதைக் கண்டு தாய், "இத்தனை ஆண்டுகளும் இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி, இவனுக்காக வேண்டியது வீண்போகவில்லை"என்ற மகிழ்ச்சியில், தன்னுடைய ஆன்மாவை ஆண்டவரிடம் ஒப்படைப்பார்.

மிகப்பெரிய கொலைகாரனாக இருந்த ஒருவன் மனம்மாறி, ஆண்டவருடைய வார்த்தையை மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றவனாகிய மாறினான் என்றால், ஆண்டவரின் திருப்பெயர் அவனுடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம். இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவரின் திருப்பெயரால், கால் ஊனமுற்றிருந்த ஒருவர் எழுந்து நடப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கோயிலுக்கு வேண்டச் சென்ற பேதுருவும் யோவானும்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், எருசலேம் திருக்கோயிலுக்கு, பிற்பகல் மூன்றுமணிக்கு பேதுருவும் யோவானும் வேண்டச் செல்வதைக் குறித்து வாசிக்கின்றோம்.

வழக்கமாக யூதர்கள் ஒருநாளைக்கு மூன்று வேளை இறைவனிடம் மன்றாடுவார்கள். காலை ஒன்பது மணி; பிற்பகல் மூன்று மணி; பொழுது சாயும் வேளை. இவைதான் யூதர்கள் இறைவனிடம் வேண்டுகின்ற வேளைகள். இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான செய்தி, பேதுருவும் யோவானும் இயேசுவைப் பின்தொடர்ந்தபின்னும், யூத சமய முறையின்படி பிற்பகல் மூன்று மணிக்குக் கோயிலுக்கு வேண்டச் சென்றதுதான். அப்பொழுதுதான் அவர்கள் இருவரும் பிறவிலேயே கால் ஊனமுற்ற ஒருவரைக் காண்கிறார்கள்.

பிச்சை எடுப்பவர்கள் மக்கள் அதிகமாகக் கூடிவரக்கூடிய இடங்களில் அமர்ந்துகொண்டு பிச்சை எடுப்பார்கள். இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற கால் ஊனமற்ற பிச்சைக்காரரும், மக்கள் அதிகமாக வந்துபோகிற "அழகு வாயில்"என்ற இடத்தில் அமர்ந்துகொண்டு பிச்சை எடுத்து வருகின்றார். அவர் பேதுரு மற்றும் யோவானைக் கண்டதும், அவர்களிடம் பிச்சை கேட்கின்றார். அவர்களோ அவர் கேட்டதை விடவும் பெரிதாக ஒன்றைத் தருகின்றார்கள். அது என்னவென்று சிந்திப்போம்.

ஆண்டவரின் திருப்பெயரால் கால் ஊனமுற்றவர் நலமடைதல்

கால் ஊனமுற்ற மனிதர் பிச்சை கேட்டபொழுது, பேதுரு அவரிடம், "வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளத்தை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசுவின் பெயரால் எழுந்து நடந்திடும்" என்கின்றார். உடனே அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்குகின்றார்.

கால் ஊனமுற்றவரின் காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன என்பது மருத்துவரான லூக்காவின் எழுத்து நடையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கின்றது. ஆம், இயேசுவின் திருப்பெயரை பேதுரு உச்சரித்ததும் கால் ஊனமுற்ற மனிதர் எழுந்து நடக்கின்றார். அப்படியானால் இயேசுவின் திருப்பெயருக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். பல நேரங்களில் நாமும் இயேசுவின் திருப்பெயரை உச்சரிக்கின்றோம்; ஆனால், அதன் மகிமையையும் மகத்துவத்தையும் உணர்ந்துகொள்ளாமலேயே உச்சரிக்கின்றோம். ஆதலால், இயேசுவின் திருப்பெயருக்கு இருக்கின்ற வல்லமையை உணர்ந்து, அதனை உச்சரித்து, அவர் தருகின்ற ஆசியைப் பெற்றுக்கொள்வோம்.

சிந்தனை

"நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்"(யோவா 14: 14) என்பார் இயேசு. ஆகையால், நாம் எப்பொழுதும் இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 லூக்கா 24: 13-35

"நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?"

நிகழ்வு

அதிகாலை நேரம் அது. மூன்று நான்கு முறை அலாம் (Alarm) அடித்தும், அதை அணைத்துவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்த மகனைப் பார்த்து, சமயலறையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த அவனுடைய அம்மா அவனிடம் வேகமாக வந்து, "தம்பி! மூன்று நான்குமுறை அலாம் அடித்தும், அதை அணைத்துவிட்டுத் தூங்கிக்கொண்டிருப்பது நன்றாகவா இருக்கின்றது?" என்று சற்றுக் கோபத்தோடு கேட்டார்.

"படுக்கையிலிருந்து எழுந்திருப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கின்றது... மேலும் நான் படுக்கையிலிருந்து எழுந்திருப்பதற்கு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லுங்கள்" என்று அலுப்போடு சொன்னான் மகன்.

அதற்கு அவனுடைய தாய் அவனிடம், "ஒரு காரணம் என்ன... மூன்று காரணங்களைச் சொல்கின்றேன், முதலில், இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை; ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோயிலுக்குச் செல்லவேண்டும். இரண்டாவதாக, உனக்கு நாற்பது வயது ஆகின்றது. நாற்பது வயது ஆனபின்பும், இவ்வளவு நேரமாகியும் இப்படித் தூங்கிக்கொண்டிருப்பது அவ்வளவு நல்லது அல்ல. மூன்றாவது, நீ ஒரு சபையின் போதகர். நீ கோயிலுக்குப் போனால்தான் வழிபாடே தொடங்கும்" என்றார்.

தாய் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டதும், அதுவரைக்கும் அலுப்போடு படுக்கையில் கிடந்த மகன், அதாவது சபைப் போதகர், படுக்கையிலிருந்து துள்ளிக் குதித்து எழுந்தார்.

வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், தாயின் வார்த்தைகள் சோம்பலாய், சோர்வுற்றுக் கிடந்த மகனுக்கு உற்சாகமூட்டி, அவன் தன்னுடைய பணியைச் செய்ய வலுவூட்டின. நற்செய்தியில், யூதர்கள், இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றபிறகு, எல்லாமே முடிந்துபோய்விட்டது என்று நினைத்துக்கொண்டிருந்த எம்மாவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த சீடர்களுக்கு இயேசுவின் காட்சியும் அவருடைய வார்த்தைகளுக்கும் புதுத் தெம்பூட்டின. அது குறித்து இப்பொழுது நாம் சிந்திப்போம்.

இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கையில்லாத இரண்டு சீடர்கள்

நற்செய்தியில், எம்மாவு நோக்கிச் சென்ற இரண்டு சீடர்களுக்கு உயிர்த்த ஆண்டவர் இயேசு தோன்றுவதைக் குறித்து வாசிக்கின்றோம். எருசலேமிலிருந்து பதினொரு கிலோமீட்டர்த் தொலைவிலிருந்த எம்மாவு நோக்கி, இரண்டு சீடர்களும் ஏன் செல்லவேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கான பதிலை, "ஏமாற்றம்"அல்லது "நம்பிக்கையின்மை" என்று சொல்லிவிடலாம். இப்படி ஏமாற்றத்தோடும் நம்பிக்கையின்மையோடும் சென்ற இரண்டு சீடர்களுக்குத்தான் உயிர்த்த இயேசு தோன்றி, அவர்களுக்கு நம்பிக்கையையும் புதுத் தெம்பையும் ஊட்டுகின்றார்.

எம்மாவு நோக்கிச் சென்ற இரண்டு சீடர்களுடைய பேச்சும், இஸ்ரயேலுக்கு மீட்பினைத் தர வந்த இயேசுவைத் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் கொன்றுபோட்டதை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு வழிப்போக்கரைப் போன்று வரும் இயேசு, மெசியா தரவந்த மீட்பு என்பது அரசியல் மீட்பு அல்ல; மாறாக, பாவத்திலிருந்து மீட்பு என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். மேலும் இந்த இரண்டு சீடர்களும், இயேசு உயிர்த்துவிட்டார் என்று பெண்களும் பேதுருவும் சொல்லக் கேட்டபொழுதும்கூட, அதில் நம்பிக்கை கொள்ளாமல், எம்மாவு நோக்கி வருகின்றார்கள். இதனால்தான் இயேசு அவர்களை "அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே!" என்று கடிந்துகொள்கின்றார்.

இப்படி இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கையில்லாமலும் எல்லாமே முடிந்துவிட்டது என்று ஏமாற்றத்தோடும் இருந்த அந்த இரண்டு சீடர்களுக்கு இயேசு எப்படி நம்பிக்கையூட்டினார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

சீடர்களுக்கு நம்பிக்கையூட்டிய உயிர்த்த ஆண்டவர் இயேசு

இரண்டு சீடர்களோடும் பேசிக்கொண்டே செல்லும் இயேசு, மாலைவேளையானதும், அவர்களுடைய அழைப்பின் பெயரில், அவர்களோடு தங்குகின்றார். அங்கு இயேசு அப்பத்தைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கையில், அவர்களுடைய கண்கள் திறக்கின்றன. ஆம், அதுவரைக்கும் இயேசுவை யாரோ ஒரு வழிபோக்கர் என்று நினைத்துக்கொண்டிருந்த அந்த இரண்டு சீடர்களும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்ததும், அவர் இயேசுதான், அதுவும் உயிர்த்தெழுந்த இயேசுதான் என்று நம்பி, அவரைப் பற்றி, எருசலேமில் இருந்த சீடர்களுக்கு அறிவிக்க விரைகின்றார்கள்.

இயேசு எம்மாவு நோக்கிச் சென்ற இரண்டு சீடர்களுக்குத் தோன்றியது, நமக்கு இரண்டு முக்கியமான செய்திகளை எடுத்துச் சொல்கின்றது. ஒன்று, இயேசு நம்பிக்கை இழந்து, சோர்வுற்று இருக்கின்ற ஒவ்வொருவரையும் தேற்றுகின்றார் என்பதாகும். இரண்டு, இயேசுவின் ஆறுதலையும் அவருடைய நம்பிக்கையூட்டும் செய்தியையும் பெற்றுக்கொண்டவர்கள், அதைத் தங்களோடு வைத்துக்கொள்ளாமல், மற்றவர்களுக்கும் பகிரவேண்டும். நாம் இயேசுவிடமிருந்து ஆறுதலளிக்கும் செய்தியை ஒவ்வொருநாளும் இறைவார்த்தை வழியாகக் கேட்கின்றோம். அதை மற்றவரோடு பகிர்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்"(மத் 10: 8) என்பார் இயேசு. ஆகையால், இயேசு அளிக்கும் நம்பிக்கையூட்டும் செய்தியைப் பெற்ற நாம், அதை மற்றவர்களுக்கும் வழங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!