Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   14  ஏப்ரல்  2020  

பாஸ்கா எண்கிழமை - செவ்வாய்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 மனம் மாறுங்கள். ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 36-41

பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு யூதர்களை நோக்கிக் கூறியது:

"நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்."

அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, "சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள். அதற்குப் பேதுரு, அவர்களிடம், "நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது" என்றார். மேலும் அவர் வேறு பல சான்றுகளை எடுத்துக்கூறி, "நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்தினார்.

அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -
=================================================================================
திபா 33: 4-5. 18-19. 20,22 (பல்லவி: 5b)

பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
4
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5
அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி

18
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி

20
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
22
உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாக! - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(திபா 118: 24)

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் ஆண்டவரைக் கண்டேன்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 11-18

அக்காலத்தில்

மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், "அம்மா, ஏன் அழுகிறீர்?" என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், "என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை" என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவரிடம், "ஏன் அம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?" என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், "ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்" என்றார். இயேசு அவரிடம், "மரியா" என்றார். மரியா திரும்பிப் பார்த்து, "ரபூனி" என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு "போதகரே" என்பது பொருள். இயேசு அவரிடம், "என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், "என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்" எனச் சொல்" என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று, "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 2: 36-41

"நீங்கள் மனம்மாறுங்கள்"

நிகழ்வு


டானியேல் டெபோ (Daniel Defoe) எழுதிய மிகவும் பிரபலமான நாவல் "ராபின்சன் குருசோ (Robinson Crusoe).

இந்த நாவலில் வருகின்ற ராபின்சன் குருசோ தன்னுடைய பெற்றோரிடம் சண்டைபோட்டு, வீட்டைவிட்டு வெளியேறுவான். பின்னர் இவன் கப்பலிலேயே ஒவ்வொரு நாட்டுக்கும் பயணம் செய்வான். இவனுடைய இந்தப் பயணத்தில் இவனது வாழ்க்கை தரம்புரண்டு போகும். இதனால் இவன் எல்லாவிதமான தீய பழக்கவழக்கங்களுக்கும் உள்ளாவான். ஒருகட்டத்தில் இவன் தன்னுடைய தவற்றை உணர்வான். ஆனாலும், திரும்பி வீட்டிற்குச் சென்றால், தன்னுடைய பெற்றோர் தன்னைக் குறித்து என்ன நினைப்பார்கள் என நினைத்துக்கொண்டு, அப்படியே வாழத் தொடங்கி விடுவான்.

நாவலில் வருகின்ற ராபின்சன் குருசோ என்ற கதாப்பாத்திரத்தைப் போன்றுதான் பலர், தவறு செய்வதற்கு யோசிப்பதில்லை; ஆனால், மனம்மாறி நல்வழியில் நடப்பதற்கு மிகவும் யோசிக்கின்றார்கள். இத்தகைய ஒரு போக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில், பேதுரு மக்கள் செய்த குற்றத்தை அவர்களிடம் எடுத்துரைக்கின்றபொழுது, அவர்கள் மனம்மாறுகின்றார்கள். அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பேதுருவின் போதனை

திருத்தூதர்களின் தலைவராகிய பேதுரு, பதினொருவருடன் சேர்ந்து, பெந்தக்கோஸ்து நாளில் திரண்டிருந்த மக்களைப் பார்த்து, ஒரு குற்றமும் அறியாத இயேசுவை நீங்கள் சிலுவையில் அறைந்து கொன்றுபோட்டுவிட்டீர்கள்; கடவுளோ அவரை மெசியாவாக்கினார் என்று போதிக்கின்றார். பேதுருவின் இப்போதனைக் கேட்ட மக்கள், உள்ளம் குத்தப்பட்டவர்களாய், "சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்கின்றார்கள்.

பேதுருவின் போதனையைக் கேட்ட மக்கள், உள்ளம் குத்தப்பட்டவர்களாய் உணர்ந்தார்கள் என்பது, பேதுருவின் வழியாக வெளிப்பட்ட இறைவார்த்தைக்கு இருக்கின்ற வல்லமையை நமக்கு எடுத்துரைப்பதாக இருக்கின்றது. இறைவாக்கினர் எசாயா, ஆண்டவருடைய வார்த்தை எதற்காக அனுப்பப்பட்டதோ, அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய்த் திரும்பி வருவதில்லை (எசா 55: 10-11) என்று கூறுவார். பெந்தக்கோஸ்து நாளில் பேதுருவின் வார்த்தையைக் கேட்ட மக்கள் உள்ளம் குத்தப்பட்டவர்களாய், "நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்கின்றார்கள். இதுதான் இறைவார்த்தைக்கு இருக்கக்கூடிய வல்லமையாகும்.

மக்கள் மனம்மாறுதல்

"சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்ட மக்களிடம் பேதுரு, "நீங்கள் மனம்மாறுங்கள்... திருமுழுக்குப் பெறுங்கள்" என்று கூறுகின்றார். பேதுரு மக்களிடம் சொல்லக்கூடிய வார்த்தைகளில் நான்கு உண்மைகள் அடங்கி இருக்கின்றன. ஒன்று, பாவத்தை விட்டு விலகவேண்டும். இரண்டு, இயேசுவிடம் திரும்பி வரவேண்டும். மூன்று, இயேசுவின் பெயரால் திருமுழுக்குப் பெறவேண்டும். நான்கு, திருமுழுக்கின் வழியாய்த் தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்ட பிறகு, கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை வாழவேண்டும். இதைத்தான் பேதுரு மக்களிடத்தில் எடுத்துச் சொல்கின்றார்.

ஒருசிலர் நினைப்பதுண்டு, மனம்மாற்றம் பெறுவதற்கு, பாவத்தை விட்டுவிட்டாலேயே போதும் என்று. பாவத்தை விட்டுவிடுவது மட்டும் மனம்மாற்றம் ஆகிவிடாது. அது பாதிக் கிணற்றைத் தாண்டுவதைப் போன்றுதான் இருக்கும். மீதிக் கிணற்றைத் தாண்டுவதற்கு அவர், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருடைய வழியில் நடக்கவேண்டும். அதுதான் உண்மையான மனமாற்றமாக இருக்கும். பெந்தக்கோஸ்து நாளில் உண்மையான மனம்மாற்றம் நடந்தது. அது குறித்துத் தொடந்து நாம் சிந்தித்துப பார்ப்போம்.

திருமுழுக்குப் பெற்ற மக்கள்

பேதுரு திரண்டிருந்த மக்களைப் பார்த்து, "மனம்மாறுங்கள்... திருமுழுக்குப் பெறுங்கள்"
என்று சொன்னதும், அவர்கள் தங்களுடைய குற்றத்தை உணர்ந்தவர்களாய் மனம்மாறுகின்றார்கள்; திருமுழுக்கும் பெறுகின்றார்கள். இவ்வாறு மனம்மாறித் திருமுழுக்குப் பெற்ற மக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய மூவாயிரம். ஆம், உண்மையான மனம்மாற்றம் என்பது பாவத்தை விட்டுவிடுவது மட்டும் கிடையாது. மாறாக, இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருடைய வழியில் நடப்பது. பெந்தக்கோஸ்து நாளில் அப்படிப்பட்ட மனம்மாற்றம் நடைபெற்றது.

ஆகையால், நாம் ஒருவேளை கடவுளை விட்டு வெகுதொலையில் போயிருந்தால், நம்முடைய குற்றங்களை உணர்ந்தவர்களாய், ஆண்டவர் இயேசுவிடம் திரும்பி வந்து, அவருடைய வழியில் நடக்க முயற்சி செய்வோம். அதன்வழியாக இயேசுவின் உயிர்ப்புச் சாட்சிகளாய்த் திகழ்வோம்.

சிந்தனை

"இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்" (யோவா 5:14) என்று முப்பத்து ஆண்டுகளாக நலமற்றிருந்த மனிதரைப் பார்த்து இயேசு கூறுவார். நாம் கடவுளிடமிருந்து அருளையும் இரக்கத்தையும் பாவ மன்னிப்பையும் பெற்றிருக்கின்றோம் என்றால், இனிமேல் பாவம் செய்யாமல் இருப்பதே நல்லது. ஆகையால், நாம் மனம்மாற்றம் பெற்ற மக்களாய், பாவம் செய்யாதிருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 யோவான் 20: 11-18

"அம்மா, ஏன் அழுகிறீர்?"

நிகழ்வு


அது ஒரு நகர்ப்புறப் பங்கு. அந்தப் பங்கில் பக்தியுள்ள பெண்மணி ஒருவர் இருந்தார். இவருடைய கனவு, இலட்சியம் எல்லாம் ஆன்மாக்களை மீட்டெடுப்பதுதான். அதற்காக இவர் எதையெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்தார். குறிப்பாக இவர் திருவிவிலியத்தை வாசித்துத் தியானித்தார்; திருவிவிலிய வகுப்புகள் எங்கெல்லாம் நடைபெற்றனவோ அங்கெல்லாம் சென்று, வகுப்புகளில் கலந்துகொண்டார்; இறைவனிடம் நீண்டநேரம் வேண்டினார். அப்படியிருந்தும் ஓர் ஆன்மாவைக்கூட இவரால் மீட்க முடியவில்லை.

இதனால் பொறுமையிழந்த இவர், பங்குத்தந்தையிடம் சென்று, ஆன்மாக்களை மீட்பதற்காகத் தான் எடுக்கும் முயற்சிகளையும் அதில் தான் சந்தித்து வரும் தோல்விகளையும் எடுத்துச் சொன்னார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கொண்டிருந்த பங்குதந்தை இவரிடம், "உங்களுடைய கண்களில் ஈரமில்லை; அதனால்தான் உங்களால் ஆன்மாக்களை மீட்க முடியவில்லை" என்றார் அதற்கு இவர், "சுவாமி! நீங்கள் சொன்னது எனக்கு விளங்கவில்லை; சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்" என்று சொன்னதும், பங்குத்தந்தை அந்தப் பெண்மணிடம் விளக்கத் தொடங்கினார்:

"உங்கள் கண்களின் ஈரமில்லை என்று நான் சொன்னதற்குக் காரணம், நீங்கள் ஆன்மாக்களை மீட்பதற்காகக் கண்ணீர் சிந்தி, மன்றாடியிருக்கமாட்டீர்கள். அதனால்தான் உங்களால் ஆன்மாக்களை மீட்க முடியவில்லை. திருப்பாடல் 126: 5 ஐ நீங்கள் வாசித்தது இல்லையா...? அங்கு என்ன சொல்லப்பட்டிருக்கின்றது...? கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்" என்றல்லவா சொல்லப்பட்டிருக்கின்றது. நீங்கள் ஆன்மாக்களை மீட்பதற்காகக் கண்ணீரோடு மன்றாடுங்கள். உங்களால் பல நூறு ஆன்மாக்களை மீட்க முடியும்."

பங்குத்தந்தையிடமிருந்து இப்படியொரு விளக்கத்தைப் பெற்றுக்கொண்டதில், மிக்க மகிழ்ச்சியடைந்த இவர், அவருக்கு நன்றிசொல்லிவிட்டு, வீட்டுக்கு வந்து, முழந்தாள் படியிட்டு, கண்ணீர் சிந்தி மன்றாடினார். இவர் இறைவனிடம் கண்ணீர் சிந்தி, மன்றாடத் தொடங்கிய சிறிதுநேரத்திற்குள் இவருடைய சகோதரி, இவரிடம் வேகமாக ஓடிவந்தார். அவரோ இறைவன்மீது நம்பிக்கை இல்லாதவர். அவர் இவரிடம், "அக்கா! இத்தனை நாள்களும் நான் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்ளாமல் வாழ்ந்ததை நினைத்து மிகவும் வருந்துகின்றேன். இன்றைக்கு ஏதோவோர் உந்துதல், என்னைக் கிறிஸ்துவின்மீது நம்பிக்கைகொண்டு வாழவேண்டும் என்று தூண்டியது. அதனால்தான் உன்னிடத்தில் வந்தேன்" என்றார்.

இதைக் கண்டு மிகவும் மகிழ்ந்த இவர், தனக்கு வழிகாட்டிய பங்குத்தந்தைக்கும் தன்னுடைய உழைப்பிற்குப் பலன் கொடுத்த இறைவனுக்கும் நன்றிசொல்லிவிட்டு, இன்னும் பல ஆன்மாக்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கினார்.

ஆம், கண்ணீரோடு மன்றாடுவோருக்கு இறைவன் நிச்சயம் பலன் தருவார் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் கண்ணீரோடு இயேசுவைத் தேடிய மகதலா மரியா, இறுதியில் கண்டுகொள்கின்றார். மகதலா மரியாவின் தேடுதல் எப்படி இருந்தது, அதற்காக இயேசு அவருக்கு எத்தகைய கைம்மாறு அளித்தார் என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கண்ணீரோடு தேடி, இயேசுவைக் கண்டுகொண்ட மகதலா மரியா

வாரத்தின் முதல் நாளில் இயேசு அடக்கம் செய்துவைக்கப்பட்ட கல்லறைக்கு வருகின்ற மகதலா மரியா, அங்கு இயேசுவின் உடலைக் காணாத செய்தியை திருத்தூதர்களிடம் சொல்ல, பேதுருவும் யோவானும் அங்கு ஓடிவருகின்றார்கள். அவர்கள் இயேசுவின் உடல் கல்லறையில் இல்லாதைக் கண்டு, அவர் உயிர்த்துவிட்டார் என்று நம்பி அங்கிருந்து சென்றுவிடுகின்றார்கள். மகதலா மரியா மட்டும் அங்கிருந்து செல்லாமல், கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருக்கின்றார். அப்பொழுதுதான் அவர் முதலில் இரு வானதூதர்களையும், பின்னர் உயிர்த்த ஆண்டவர் இயேசுவையும் கண்டுகொள்கின்றார்.

மகதலா மரியாவுக்கு இயேசுவிடம் மிகுந்த அன்பு இருந்திருக்கவேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், இயேசு இவரிடமிருந்து தீய ஆவிகளை விரட்டிப் புதுவாழ்வு தந்திருந்தார் (லூக் 8:2). இதனாலேயே இவர் இயேசுவை இறுதிவரைக்கும் பின்தொடர்ந்தார்; இயேசு அடக்கம் செய்து வைக்கப்பட்ட பிறகு, அவருடைய உடலுக்கு நறுமணத் தைலம் பூச வந்தார் (மாற் 16:1). இப்படிப்பட்ட நிலையில் கல்லறையில் இயேசுவின் உடலைக் காணாது கண்ணீர் விட்டு அழுகின்றார். ஒருவர்மீது ஒருவருக்கு மிகுத்த அன்பு இருந்தால் மட்டுமே அழுகை வரும். மகதலா மரியாவுக்கு இயேசுவின் மீது மிகுந்த அன்பு இருந்தது. அதனாலேயே இவர் அழுதுகொண்டே தேடினார்; முடிவில் இயேசுவைக் கண்டுகொள்ளவும் செய்தார்.

மகதலா மரியா இயேசுவை மிகுந்த அன்போடு தேடினார், கண்டுகொண்டார்; நாமும் அவரை மிகுந்த அன்போடு தேடிக் கண்டுகொள்வோம்.

சிந்தனை

"தேடுங்கள்; நீங்கள் கண்டடைவீர்கள்" (மத் 7:7) என்பார் இயேசு. ஆகையால், நாம் மகதலா மரியாவைப் போன்று இயேசுவை மிகுந்த அன்போடு தேடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!