|
|
11
ஏப்ரல் 2020 |
|
|
ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு |
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
முதல் ஆண்டு
இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார். உங்களுக்கு
முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
28: 1-10
ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில்
மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச்
சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின்
தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த
கல்லைப் புரட்டி அதன்மேல் உட்கார்ந்தார்.
அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை
போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச்
செத்தவர் போலாயினர்.
அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, ``நீங்கள் அஞ்சாதீர்கள்;
சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத்
தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார்.
அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.
நீங்கள் விரைந்து சென்று, 'இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்'
எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப்
போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே
நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்'' என்றார்.
அவர்களும் கல்லறையை விட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள்.
அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய்
அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.
திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள்
அவரை அணுகி, அவர் காலடிகளைப் பற்றிக்கொண்டு, பணிந்து நின்றார்கள்.
அப்பொழுது இயேசு அவர்களிடம், "அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம்
சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே
அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
|
|