|
|
11
ஏப்ரல் 2020 |
|
|
ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும்
நன்றாய் இருந்தன.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 1 - 2: 2
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தபொழுது,
மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள்
பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக்
கொண்டிருந்தது.
அப்பொழுது கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று.
கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும்
வெவ்வேறாகப் பிரித்தார். கடவுள் ஒளிக்குப்
'பகல்' என்றும் இருளுக்கு
"இரவு' என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல்
நாள் முடிந்தது.
அப்பொழுது கடவுள், "நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக!
அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்" என்றார். கடவுள் வானத்தை
உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள
நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் வானத்திற்கு
'விண்ணுலகம்' என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று
இரண்டாம் நாள் முடிந்தது.
அப்பொழுது கடவுள், "விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில்
ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!" என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
கடவுள் உலர்ந்த தரைக்கு
'நிலம்' என்றும் ஒன்றுதிரண்ட
நீருக்குக் "கடல்' என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று
கண்டார்.
அப்பொழுது கடவுள், "புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும்,
கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம்
விளைவிக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. புற்பூண்டுகளையும்
விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த
அந்த இனத்தின் படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று
கண்டார். மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.
அப்பொழுது கடவுள்,"பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப் பதற்கும்
காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும்
விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! அவை மண்ணுலகிற்கு ஒளி
தர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்" என்றார்.
அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் இருபெரும் ஒளிப் பிழம்புகளை உருவாக்கினார்.
பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச்
சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.
கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்;
பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப்
பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.
அப்பொழுது கடவுள், "திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்று விப்பதாக!
விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!" என்றார்.
இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில்
நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும்
அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது
என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி, "பலுகிப்
பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்
டும்" என்றுரைத்தார். மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம்
நாள் முடிந்தது.
அப்பொழுது கடவுள், "கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை
அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக" என்றார். கடவுள்
காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும்
அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று
கண்டார்.
அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம்.
அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும்,
மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்"
என்றார்.
கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே
அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்;
அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப்
பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்"
என்றார்.
அப்பொழுது கடவுள், "மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள்,
பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை
உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப்
பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான
செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்" என்றார். அது
அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும்
நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும்
நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.
விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப்
பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம்
நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும்
நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
அல்லது
குறுகிய வாசகம்
கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும்
நன்றாய் இருந்தன.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 1, 26-31b
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தார். அப்பொழுது
கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம்.
அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவை களையும், கால்நடைகளையும்,
மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்"
என்றார்.
கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே
அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்;
அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப்
பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்"
என்றார்.
அப்பொழுது கடவுள், "மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள்,
பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை
உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப்
பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான
செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்" என்றார். அது
அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும்
நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 104: 1-2a. 5-6. 10,12. 13-14. 24,35c (பல்லவி: 30)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப்
புதுப்பிக்கின்றீர்.
1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர்
எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.
2ய பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர். பல்லவி
5 நீவிர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது
என்றென்றும் அசைவுறாது. 6 அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது;
மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது. பல்லவி
10 பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்; அவை
மலைகளிடையே பாய்ந்தோடும். 12 நீரூற்றுகளின் அருகில் வானத்துப்
பறவைகள் கூடுகட்டிக் கொள்கின்றன; அவை மரக்கிளைகளினின்று இன்னிசை
இசைக்கின்றன. பல்லவி
13 உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்; உம்
செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது. 14 கால்நடைகளுக்கெனப்
புல்லை முளைக்கச் செய்கின்றீர்; மானிடருக்கெனப் பயிர்வகைகளை
வளரச் செய்கின்றீர். பல்லவி
24 ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும்
ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
35உ என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! பல்லவி
அல்லது
திபா 33: 4-5. 6-7. 12-13. 20,22 (பல்லவி: 5b)
Mp3
பல்லவி: ஆண்டவருடைய பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு
உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்;
அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி
6 ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால்
வான் கோள்கள் எல்லாம் உருவாயின. 7 அவர் கடல்நீரைக் குவியல்போல்
சேர்த்து வைத்தார்; அந்நீரை ஆழ் நிலவறைகளில் சேமித்து
வைத்தார். பல்லவி
12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது
உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். 13
வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும்
காண்கின்றார். பல்லவி
20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும்
கேடயமும் ஆவார். 22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு
எங்கள் மீது இருப்பதாக! பல்லவி
|
|