|
|
28
ஆகஸ்ட் 2020 |
|
பொதுக்காலம்
21ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கிறிஸ்துவின் சிலுவை பிற இனத்தாருக்கு மடமையாகவும் அழைக்கப்பட்டவர்களுக்கு
கடவுளின் வல்லமையும் ஞானமுமாக உள்ளது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 1: 17-25
சகோதரர் சகோதரிகளே,
திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே
கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான
சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால்
கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும். சிலுவை பற்றிய
செய்தி அழிந்துபோகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும்
நமக்கோ அது கடவுளின் வல்லமை.
ஏனெனில், "ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை
வெறுமையாக்குவேன்" என்று மறைநூலில் எழுதியுள்ளது. இவ்வுலகைச்
சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக
ஞானம் மடமை எனக் கடவுள் காட்டிவிட்டார் அல்லவா? கடவுளுடைய ஞானத்தால்
அவரை அறிந்துகொள்ள முடியும். ஆனால் உலகினர் தம் ஞானத்தால் கடவுளை
அறிந்துகொள்ளவில்லை. எனவே மடமை என்று கருதப்பட்ட நற்சய்தியைப்
பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள்
திருவுளம் கொண்டார். யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று
கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள்
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம்.
அச்சிலுவை யூதருக்குத் தடைக் கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும்
இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும்,
அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்.
ஏனெனில் மனித ஞானத்தை விடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித
வலிமையை விட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 33: 1-2. 4-5. 10-11 . (பல்லவி: 5b)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
1
நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது
பொருத்தமானதே.
2
யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு
யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். - பல்லவி
4
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு
உரியவை.
5
அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால்
பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி
10
வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின்
எண்ணங்களைக் குலைத்துவிடுகின்றார்.
11
ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின்
திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 21: 36
அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு
எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: "விண்ணரசு எவ்வாறு
இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்:
மணமகனை எதிர்கொள்ள கன்னித் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை
எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து
பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள்
ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு
எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன்
கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந்
தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.
நள்ளிரவில், "இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்"
என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து
தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப்
பார்த்து, "எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள்
எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்" என்றார்கள். முன்மதியுடையவர்கள்
மறுமொழியாக, "உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு
இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான்
நல்லது" என்றார்கள்.
அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன்
வந்து விட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள்
புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும்
வந்து, "ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்" என்றார்கள்.
அவர் மறுமொழியாக, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு
உங்களைத் தெரியாது" என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில்
அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 கொரிந்தியர் 1: 17-25
"நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட
கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம்"
நிகழ்வு
கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த இளம்பெண் ஒருவர், தனக்கு நன்கு அறிமுகமான
ஒரு யூதச் சிறுவனிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தார். "உங்களுடைய
மதத்தில் மெசியா விரைவில் வரப் போகிறார் என்று சொல்கின்றார்களே!
அது உண்மையா?". இதற்கு அந்த யூதச்சிறுவன், "ஆம், இன்னும் ஆறு
ஆண்டுகளுக்குள் மெசியா வருவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்"
என்றான்.
"சரி, நீங்கள் சொல்வது போல் மெசியா வரும்பொழுது, அவருடைய கைகளிலும்
கால்களிலும் விலாவிலும் காயங்கள் இருக்குமா?" என்றார் அந்த இளம்பெண்.
இப்படியொரு கேள்வியை எதிர்பார்த்திராத அந்த யூதச்சிறுவன் ஒன்றும்
புரியாமல் அந்த இளம்பெண்ணையே பார்த்தான். அப்பொழுது அந்த இளம்பெண்,
நீங்கள் நம்பி ஏற்றுக்கொள்ளக்கூடிய இறைவாக்கினர் செக்கரியா
மெசியாவைக் குறித்துக் கூறும்பொழுது, "உன் மார்பில் இந்த வடுக்கள்
எவ்வாறு ஏற்பட்டன?" என ஒருவன் வினவினால், "என் நண்பர் இல்லத்தில்
காயமுற்றபோது இவை ஏற்பட்டன" என அவர் மறுமொழி பகர்வார்" (செக்
13:6) என்பார். அப்படியானால், நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற
மெசியா காயங்களோடு வந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்றார்.
அந்த இளம்பெண் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், அவரிடமிருந்து
விடைபெற்றுத் தன்னுடைய வீட்டிற்குச் சென்றான். சிறுவன். மறுநாள்
அவன் அவரிடம் வந்தான். "நேற்று நீங்கள் சொன்னதைக் தீவிரமாக
யோசித்தான். அப்பொழுது எனக்குள் ஒரு கேள்வி மீண்டும் மீண்டுமாக
எழுந்தது. எனக்குகுள் மீண்டும் மீண்டுமாக எழுந்த அந்தக் கேள்வி
இதுதான்: "மெசியா வரும்பொழுது காயங்களோடு வருவார் எனில், அவருக்கு
எப்படிக் காயங்கள் ஏற்பட்டிருக்கும்?" இந்தக் கேள்விக்கான பதிலைத்
தெரிந்துகொள்வதற்குத்தான் நான் உங்களிடம் திரும்பி வந்திருக்கின்றேன்.
இப்பொழுது சொல்லுங்கள், மெசியா வரும்பொழுது காயங்களோடு வந்தார்
எனில், அவருக்கு அந்தக் காயங்கள் எப்படி ஏற்பட்டிருக்கும்? என்று"
என்றான்.
இதற்காகவே காத்திருந்ததுபோல் அந்த இளம்பெண், "மெசியாவுக்கு அவருடைய
உடலில் ஏற்பட்ட காயங்கள், நம்முடைய பாவங்களுக்குக் கழுவாயாக,
அவர் சிலுவையில் அறையப்பட்டபொழுது ஏற்பட்டவை; இயேசுதான் அந்த
மெசியா" என்றார். "என்ன! நம்முடைய பாவங்களுக்குக் கழுவாயாக
மெசியா சிலுவையில் அறையப்பட்டபொழுதுதான் அவருடைய உடலில் காயங்கள்
ஏற்பட்டனவா! அப்படியானால் மெசியாவாம் இயேசுவை நான் நம்பி ஏற்றுக்கொள்கின்றேன்"
என்றான் அவன். அவனோடு சேர்ந்து அவனுடைய நண்பர்களும் சிலுவையில்
அறையப்பட்ட இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொண்டார்கள்.
யூதர்களுக்குச் சிலுவை தடைக்கல்லாக இருந்தது. அப்படிப்பட்ட
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை, இந்த நிகழ்வில் வருகின்ற யூதச்
சிறுவர்கள் நம்பி ஏற்றுக்கொண்டது நமக்கு வியப்பாக இருக்கின்றது.
இன்றைய முதல்வாசகத்தில் புனித பவுல், நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட
கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகின்றோம் என்கின்றார். புனித பவுல்
சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக்
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சிலுவை ஏன் யூதர்களுக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு
மடமையாகவும் இருந்தது
யூதர்கள், மெசியா ஒரு பெரிய அரசராக இருப்பார்; அவர் உரோமையர்களை
வென்று தன்னுடைய ஆட்சியை நிறுவுவார்; விண்ணகத்திலிருந்து பல அருமடையாளங்களை
நிகழ்தத்துவார் என்று எதிர்பார்த்தார்கள். இயேசு யூதர்கள் நடுவில்
பல்வேறு அருமடையாளங்களைச் செய்திருந்தார் (மத் 12: 38-39; மாற்
8: 11-12; லூக் 11:16). அப்படியிருந்தும் அவர்கள் அவரை நம்பவில்லை;
மாறாக "தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன் (இச 21:
23) என்பதற்கு ஏற்ப, இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதால்
அவரை மெசியா என்று அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; அவர்
சிலுவையில் அறையப்பட்டதால் அது அவர்களுக்குத் தடைக்கல்லாகவே இருந்தது.
பிற இனத்தவர், குறிப்பாக கிரேக்கர்களைப் பொறுத்தளவில், உயிர்ப்பு
என்ற ஒன்று கிடையவே கிடையாது. மட்டுமல்லாமல், அவர்கள் தங்களுடைய
புராணங்களில் வருகின்ற கடவுளைப் போன்று இயேசு சாகசங்களைச் செய்யவில்லை
என்பதால், அவரை மெசியா என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்
சிலுவையில் அறையப்பட்டதால் அது அவர்களுக்கு மடைமையாகவே இருந்தது.
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பறைசாற்றி வந்த பவுல்
யூதர்களும் கிரேக்கர்களும் சிலுவையைப் பற்றி இப்படிப்பட்ட கருத்துகளைக்
கொண்டிருந்தாலும், புனித பவுல் சிலுவையில் அறையப்பட்ட
மெசியாவைப் பற்றியே பறைசாற்றுகின்றார். காரணம், அது கடவுளின்
வல்லமை. ஆகையால், மற்றவர்களுக்குச் சிலுவை மடமையாகத்
தோன்றினாலும், நமக்குக் கடவுளின் வல்லமையாக விளங்கும்
சிலுவையைப் பற்றி, அதில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப்
புனித பவுலைப் போன்று மக்களுக்கு அறிவிக்கவேண்டும். அதுதான்
நாம் செய்யவேண்டிய தலையாய செயல். இச்செயலை நாம் செய்யத் தயாரா?
சிந்திப்போம்.
சிந்தனை
"சிலுவையிலிருந்து இயேசு, "நான் உன்னை மிகவும் அன்பு
செய்கிறேன்" என்று உரக்கச் சொல்கின்றார்" என்பார் பில்லி கிரஹாம்.
ஆகையால், நாம் அன்பின் சின்னமாகவும், கடவுளின் வல்லமையாகவும்
விளங்கும் சிலுவையைப் பற்றி, அதில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றி
மக்களுக்குப் பறைசாற்றுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 25: 1-13
"எனவே விழிப்பாயிருங்கள்"
நிகழ்வு
அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டு இந்தக் காலக்கட்டத்தில்,
எந்த நேரத்தில் நாம் தூங்கி எழ நினைகின்றோமா, அந்த நேரத்தை
நாம் கடிகாரத்திலோ அல்லது அலைபேசியிலோ பொருத்தி, அதன்படி எழுந்துகொள்ளலாம்;
ஆனால், அறிவியலும் தொழில்நுட்பமும் இந்தளவுக்கு வளராத காலக்கட்டத்தில்
அல்லது கடிகாரம் கண்டுபிடிக்காத காலக்கட்டத்தில் மக்கள் சேவல்
கூவுகின்ற சத்தத்தைக் கேட்டே தூங்கி எழுந்தார்கள். இப்படிப்பட்ட
காலச் சூழ்நிலையில் நடந்த நிகழ்வு இது.
பெண்மணி ஒருவருக்குப் பெரிய பண்ணை நிலம் ஒன்று இருந்தது. அதில்
வேலை பார்ப்பதற்குப் பணியாளர் ஒருவர் இருந்தார். இந்தப்
பெண்மணியிடம் சேவல் ஒன்று இருந்தது. இது கூவுகின்ற சத்தத்தைக்
கேட்டுத்தான் இவர் விழித்தெழுந்தார். மட்டுமல்லாமல்,
இதன்பிறகுதான் இவர் தன்னிடத்தில் வேலைபார்த்து வந்த
பணியாளருக்கு வேலை கொடுத்து வந்தார். சேவலோ அதிகாலை நான்கு
மணிகெல்லாம் கூவி, தன்னுடைய முதலாளி அம்மாவை எழுப்பிவிட, அவர்
பணியாளருக்கு அதிகாலையிலேயே வேலை கொடுத்தது, அந்தப்
பணியாளருக்குக் கொஞ்சம்கூட பிடிக்கவே இல்லை. இதனால் அந்தப்
பணியாளர், "சேவல்தானே நம்முடைய முதலாளி அம்மாவை அதிகாலையிலயே
எழுப்பி, அவர் நம்மை அதிகாலையிலேயே வேலை வாங்குவதற்குக்
காரணமாக இருக்கின்றது. இதை நாம் கொன்றுவிட்டால், இன்னும்
நன்றாகத் தூங்கி எழலாமே!" என்று சிந்தித்தார். அவர் இவ்வாறு
சிந்தித்ததற்குக் காரணம், அவர் "தூக்கப் பிரியராக இருந்தார்"
என்பதால்தான்.
இதைத்தொடர்ந்து ஒரு நாள் இரவு அந்தப் பணியாளர் தன்னுடைய
முதலாளி அம்மா தூங்கிக்கொண்டிருந்தபொழுது எழுந்து, சேவலைப்
பிடித்துக் கொன்று புதைத்து விட்டார். மறுநாள் காலையில் சேவல்
கூவாததால், முதலாளி அம்மா காலை ஏழு மணிக்குத்தான் எழுந்தார்.
அவர் தூங்கி எழுந்ததும், முதல் வேலையாக, "என்ன நாம் இன்றைக்கு
இவ்வளவு தாமதமாக எழுந்திருக்கின்றோம்...? இந்தச் சேவலுக்கு
என்னவாயிற்று...?" என்று சேவலைத் தேடியலைந்தார். அப்பொழுது
அங்கு வந்த பணியாளர், "நேற்று இரவு நான்
தூங்கிக்கொண்டிருந்தபொழுது, தற்செயலாக எழுந்து பார்த்தேன்.
அப்பொழுது காட்டுப் பூனை ஒன்று, நம்முடைய பண்ணையிலிருந்த
சேவலைக் கவ்விக்கொண்டு ஓடியது. நான் அதை விரட்டிப்
பிடிப்பதற்குள் அந்தக் காட்டுப் பூனை நம்முடைய சேவலை
கவ்விக்கொண்டு ஓடிவிட்டது. அதனால்தான் நம்முடைய பண்ணையிலிருந்த
சேவலைக் காணவில்லை" என்றார்.
இதைக் கேட்ட முதலாளி அம்மாவிற்கு கோபமாய் வந்தது. இருந்தாலும்
அவர் ஒன்றும் செய்ய முடியாதவராய், தன்னுடைய வேலைகளைப்
பார்க்கத் தொடங்கினர். இதையடுத்து வந்த நாள்களில், முதலாளி
அம்மா தாமதமாகத்தான் தூங்கி எழுந்தார். இது தூக்கப் பிரியரான
பணியாளருக்கு மிகவும் வசதியாய் இருந்தது. அதனால் அவர் நன்றாகத்
தூங்கி எழுந்தார்; ஆனால், சில நாள்கள் மட்டுமே இது தொடர்ந்தது.
இதற்குப் பின் வந்த நாள்களில் முதலாளி அம்மா அதிகாலை மூன்று
மணிக்கும், இரண்டு மணிக்கும்கூட எழுந்து, பணியாளரை எழுப்பி
அவருக்கு வேலை கொடுக்கத் தொடங்கினார். இதனால் அந்தப் பணியாளர்,
"இதற்கு அந்தச் சேவல் உயிரோடு இருந்திருக்கலாம்" என்று
நொந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் பணியாளர் அதிகாலையிலேயே எழுந்து அல்லது
விழிப்பாய் இருந்து வேலை பார்க்க விருப்பம் இல்லாமல்
இருந்ததால், கடைசியில் அவர் தன்னுடைய முதலாளி அம்மாவால்
அதிகாலை இரண்டு மணிக்கும், மூன்று மணிக்கும் எழுப்பப்பட்டு
வேலை செய்யப் பணிக்கப்பட்டார். இந்த நிகழ்வில் வருகின்ற
பணியாளரைப் போன்றுதான் பலரும் விழிப்பாகவும், எதற்கும்
ஆயத்தமில்லாமலும் இருக்கின்றார்கள். இத்தகையோருக்குக்
கிடைக்கும் தண்டனை என்ன...? விழிப்பாய் இருப்போர்
இறைவனிடமிருந்து பெறும் வெகுமதி என்ன...? என்பன குறித்து
இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துக் கூறுகின்றது. நாம் அதைக்
குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
விழிப்பாய் இருப்போர் பேறுபெற்றோர்
நற்செய்தியில் இயேசு விண்ணரசை மணமகனை எதிர்கொள்ளக்
காத்திருக்கும் மணமகளின் பத்துத் தோழியருக்கு ஒப்பிடுகின்றார்.
இந்தப் பத்துத் தோழியரில் ஐந்து பேர் தங்களுடைய விளக்குகளில்
போதிய எண்ணெயுடன் மணமகனை வரவேற்க ஆயத்தமாக இருக்கின்றார்கள்.
இதனால் இவர்கள் முன்முதியுள்ள தோழியர் ஆகின்றார்கள்; மணமகன்
வருகின்றபொழுது, அவரோடு திருமண மண்டபத்திற்குள் நுழையும் பேறு
பெறுகின்றார்கள்.
இதற்கு முற்றிலும் மாறாக, பத்துத் தோழியரில் மீதமிருக்கும்
ஐந்து தோழியர், தங்களுடைய விளக்குகளில் போதிய எண்ணெய்
இல்லாமலும், மணமகனை வரவேற்க ஆயத்தமில்லாமலும் விழிப்பாய்
இல்லாமல் இருக்கின்றார்கள். இதனால் திடீரென்று மணமகன்
வருகின்றபொழுது, இவர்கள் திருமண மண்டபத்திற்குள் நுழையும் பேறு
பெறாமலே போய்விடுகின்றார்கள்.
ஆம். மானிடமகன் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். ஆதலால், அவர்
வருகின்றபொழுது, அவரை எதிர்கொள்ளும் விதமாய், நாம் நம்முடைய
கடமைகளைச் செய்து, விழிப்பாய் இருந்தால், அவர் நமக்குத் தக்க
கைம்மாறு தருகின்றார். நாம் நம்முடைய கடமைகளைச் செய்வதன்மூலம்
விழிப்பாய் இருந்து, மானிட மகனை எதிர்கொள்ளத் தயாராக
இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"ஆண்டவரை விழிப்புடன் நோக்கியிருப்பேன்; என்னை மீட்கும் என்
கடவுளுக்காகக் காத்திருப்பேன் " (மீகா 7:7) என்பார்
இறைவாக்கினர் மீக்கா. எனவே, நாம் எந்த நேரத்திலும் வரக்கூடிய
மானிடமகனை விழிப்புடன் எதிர்நோக்கி இருப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|