|
|
16 ஆகஸ்ட்
2020 |
|
|
பொதுக்காலம் 20 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
பிற இன மக்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 56: 1, 6-7
ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைப்பிடியுங்கள்;
நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும்
வெற்றி விரைவில் வெளிப்படும்.
ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்புகூர்வதற்கும்,
அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு
ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, தம் உடன்படிக்கையை
உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர்
கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல்
செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள்
படைக்கும் எரிபலிகளும் மற்றப் பலிகளும் என் பீடத்தின்மேல் ஏற்றுக்
கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும்
உரிய இறைமன்றாட்டின் வீடு" என அழைக்கப்படும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 67: 1-2. 4. 5,7 .
(பல்லவி: 3) Mp3
=================================================================================
பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.
1
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக
ஒளியை எம்மீது வீசுவீராக!
2
அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும்
நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். - பல்லவி
4
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில்,
நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை
வழிநடத்துகின்றீர். - பல்லவி
5
கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும்
உம்மைப் போற்றுவார்களாக!
7
கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர்
அவருக்கு அஞ்சுவராக! - பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும்
திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
11: 13-15, 29-32
சகோதரர் சகோதரிகளே,
பிற இனத்தாராகிய உங்களுக்குச் சொல்கிறேன்: உங்களுக்குத்
திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமை
கொள்கிறேன். இதன் வழியாய், என் இனத்தாருள் பொறாமையைத்
தூண்டிவிட்டு அவர்களுள் சிலரையேனும் மீட்க முடியும் என நம்புகிறேன்.
யூதர்கள் தள்ளப்பட்டபோதே உலகம் கடவுளோடு ஒப்புரவாகியது என்றால்,
அவர்கள் அவரால் ஏற்றுக்கொள்ளப்படும் போது எப்படி இருக்கும்!
இறந்தோர் உயிர் பெற்று எழுவர் என்று சொல்லலாம் அல்லவா?
ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள் கொடைகளையும்
திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை. ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக்
கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல்
இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக் கொண்டீர்கள்.
அதுபோல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்கு உரியவர்களாக இருக்கிறீர்கள்;
அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களும்
விரைவில் இரக்கம் பெற்றுக் கொள்வார்கள்; அதன் பொருட்டே இவ்வாறு
நடந்திருக்கிறது. ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே
கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 23
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்;
மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அம்மா, உமது நம்பிக்கை பெரிது.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28
அக்காலத்தில்
இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின்
எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம்
வந்து, "ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய்
பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" எனக் கதறினார். ஆனால்
இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை.
சீடர்கள் அவரை அணுகி, "நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே,
இவரை அனுப்பிவிடும்" என வேண்டினர். அவரோ மறுமொழியாக, "இஸ்ரயேல்
குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்"
என்றார்.
ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, "ஐயா, எனக்கு உதவியருளும்"
என்றார். அவர் மறுமொழியாக, "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து
நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார். உடனே அப்பெண்,
"ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும்
சிறு துண்டுகளை நாய்க் குட்டிகள் தின்னுமே" என்றார். இயேசு மறுமொழியாக,
"அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்"
என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
I எசாயா 56: 1, 6-7
II உரோமையர் 11: 13-15, 29-32
III மத்தேயு 15: 21-28
நம்பிக்கை, தாழ்ச்சி, விடாமுயற்சி
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பு, இளைஞன் ஒருவன் தனக்குப் பிடித்த ஓர்
எழுத்தாளர் எழுதிய குறிப்பிட்ட ஒரு நூலை எடுத்து வாசிப்பதற்காக,
வத்திகானில் உள்ள நூலகத்திற்குச் சென்றான். அங்கு சென்றதும்,
அவன் நூலகரிடம் நூலாசிரியரின் பெயரையும், அவர் எழுதிய நூலின்
பெயரையும் சொல்லி, அந்த நூலை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தான்.
இதில் வியப்புக்குரிய செய்தி என்னவெனில், அந்த நூலை அதுவரைக்கும்
யாரும் வாங்கிப் படித்ததே இல்லை. இதனால் இளைஞன் அந்த நூலை மிகவும்
உற்சாகமாகப் படிக்கத் தொடங்கினான்; ஆனால், அவன் எதிர்பார்த்த
அளவுக்கு அந்த நூல் விறுவிறுப்பாக இல்லை; கொஞ்சம் சலிப்பூட்டுவதாக
இருந்தது. இருந்தாலும் அவன் அந்த நூலை விடாமுயற்சியோடு
முழுமூச்சில் படித்தான். அவன் அந்த நூலின் கடைசிப் பக்கத்திற்கு
வந்தபொழுது, அதில் இப்படியொரு குறிப்பு இருந்தது. "இங்கு உள்ள
குறிப்பை எடுத்துக்கொண்டு, வங்கிக்குச் சென்று, அங்கிருக்கும்
வங்கி மேலாளரிடம் காண்பியுங்கள். அவர் உங்களுக்கு ஒரு
கோப்பினைத் (File) தருவார். அதைப் பொறுமையாக வாசியுங்கள். கட்டாயம்
உங்களுக்கு வெகுமதி இருக்கின்றது."
இளைஞன் இந்தக் குறிப்பை வாசித்ததும், மிகுந்த மகிழ்ச்சியோடு வங்கிக்குச்
சென்று, வங்கி மேலாளரிடம் அந்தக் குறிப்பைக் காட்டினான். அவர்
அந்தக் குறிப்பினை வாசித்துவிட்டு, ஒரு கோப்பினை எடுத்து அவனிடம்
கொடுத்தார். அவன் அந்தக் கோப்பினைத் திறந்து பார்த்தபொழுது, அதில்
ஓர் உயில் இருந்தது. அந்த உயிலில், குறிப்பிட்ட நூலில் எழுதப்பட்டிருக்கும்
குறிப்போடு வருபவருக்கு என்னுடைய உடைமைகள் அனைத்தும் சொந்தம்"
என்று எழுதப்பட்டிருக்கின்றது. இதற்குப் பின்பு அந்த இளைஞன் எழுத்தாளரின்
உடைமைகளுக்கெல்லாம் அதிபதியானான் (Aiming At Excellence
George Kaitholil).
இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன், எழுத்தாளரின் நூல்
விறுவிறுப்பாக இல்லாமல், சலிப்பூட்டுவதாக இருக்கின்றது என்பதற்காக
அதைப் பாதிலேயே விட்டுவிடாமல், விடாமுயற்சி தொடர்ந்து படித்தான்.
அதனால் அவன் அதற்கான வெகுமதியைப் பெற்றான். பொதுக்காலம் இருபதாம்
ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில், விடாமுயற்சியோடு
இயேசுவைப் பின்தொடர்ந்த கானானியப் பெண்மணியின் மகளிடம் பேய்
நீங்குவதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த நற்செய்திப் பகுதியும்,
இன்றைய இறைவார்த்தையும் நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றன என்பதைக்
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கானானியப் பெண்மணியின் நம்பிக்கை
பரிசேயர்களும் இயேசுவுக்கும் இடையே மூதாதையர் மரபு பற்றிய சிக்கல்
ஏற்பட்டதைத் தொடர்ந்து, இயேசு பிற இனத்தார் வாழ்ந்து வந்த
தீர், சீதோன் ஆகிய பகுதிகளுக்கு வருகின்றனர். இந்த இரண்டு நகரங்களும்
மத்தியத் தரைக்கடலை ஒட்டியிருந்த துறைமுக நகரங்கள். அதனால் இந்த
இரு நகரங்களில் செல்வமும், அத்தோடு பாவமும் பெருகியிருந்தன. இப்படிப்பட்ட
நகரங்களுக்குத்தான் இயேசு வருகின்றார். இயேசு அங்கு வந்த
செய்தியைக் கேள்விப்பட்டு, கானானியப் பெண்மணி ஒருவர்,
பேய்பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கும் தன்னுடைய மகளிடமிருந்து
இயேசு எப்படியும் பேயை ஓட்டிவிடுவார் என்ற நம்பிக்கையோடு வருகின்றார்.
அவர் இயேசுவின்மீது மிகுந்த நம்பிக்கை வந்தார் என்பதை, "ஐயா,
தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று அவர் இயேசுவைப்
பார்த்துச் சொல்லக்கூடிய சொற்களிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.
இங்கு இந்தக் கானானியப் பெண்மணியின் நம்பிக்கையைக்
குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இவர் இயேசுவை நேரில் கண்டதில்லை;
அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்தார். அவ்வளவுதான். ஆனாலும்,
இவர் இயேசுவை நேரில் கண்டவர்களை விடவும், இயேசுவின்மீது
மிகுந்த நம்பிக்கைகொண்டு, அவரிடம் தனக்குக் இரங்குமாறு வருகின்றார்.
இயேசு தோமாவிடம் "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர்
பேறுபெற்றோர்" (யோவா 20: 29) என்பரே, அதுபோன்று இந்தக் கானானியப்
பெண்மணி, இயேசுவைக் காணாமலே, அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு
அவர்மீது நம்பிக்கை கொள்கின்றார். அதனால் அவருடைய நம்பிக்கை
உயர்ந்ததாக இருக்கின்றது.
கானானியப் பெண்மணியின் தாழ்ச்சி
கானானியப் பெண்மணி இயேசுவிடம் நம்பிக்கையோடு வந்தபொழுது, அவரோ
அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழி சொல்லாமல் செல்கின்றார். இதைப்
பார்த்துவிட்டு, சீடர்கள்கூட அவரிடம், "நமக்குப் பின்னால் கத்திக்கொண்டே
வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்" என்கிறார்கள். இதற்கு இயேசு ஒருசில
வார்த்தைகளைப் பேசியபொழுது, கானானியப் பெண்மணி இயேசுவின் முன்
பணிந்து "ஐயா, எனக்கு உதவியருளும்" என்கின்றார்.
கானானியப் பெண்மணியிடம் நம்பிக்கை மட்டும் இருக்கவில்லை;
தாழ்ச்சி இருந்தது. தாழ்ச்சி என்பது சாதாரண பண்பு அல்ல, அது ஆண்டவருடைய
அருளைப் பெற்றுத் தருகின்ற பண்பு. இயேசு சொல்லும் பரிசேயர்
வரிதண்டுபவர் உவமையில் வரும் வரிதண்டுபவரின் வேண்டுதல் கேட்கப்பட்டதற்குக்
காரணம், அவரிடம் இருந்த தாழ்ச்சியே (லூக் 18: 14). தங்களைத்
தாழ்த்துவோரின் வேண்டுதலோ முகில்களை ஊடுருவிச் செல்லும் (சீஞா
35: 17) என்கிறது சீராக்கின் ஞானநூல். இத்தகைய சிறப்புமிக்க
தாழ்ச்சியோடு கானானியப் பெண்மணி இயேசுவின் அருளை வேண்டி
நிற்கின்றார்.
கானானியப் பெண்மணியின் விடாமுயற்சி
நற்செய்தியில் வருகின்ற கானானியப் பெண்மணி நம்பிக்கையோடும்
தாழ்ச்சியோடும் மட்டுமல்ல, விடாமுயற்சியோடும் இருக்கின்றார்.
ஆம். இவர் "தாவீதின் மகனே எனக்கு இரங்கும்" என்று
சொல்லும்பொழுது, இயேசு கண்டுகொள்ளாமல் போனபோதும், சீடர்கள்,
"நமக்குப் பின்னால் கத்திக்கொண்டே வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்"
என்று சொன்னபோதும், "இஸ்ரயேல் குலத்தாருள் காணமல்போன ஆடுகளாய்
இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்" என்றும்,
"பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுவது
முறையல்ல" என்று இயேசு சொன்னபோதும், மனந்தளராமல், விடாமுயற்சியோடு
இயேசுவைப் பின்தொடர்கின்றார். இப்படி இவர் நம்பிக்கையோடும்
தாழ்ச்சியோடும் விடாமுயற்சியோடும் இருந்ததைப்
பார்த்துவிட்டுத்தான் இயேசு, "அம்மா, உமது நம்பிக்கை பெரிது,
நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்கின்றார்.
இயேசு கானானியப் பெண்மணியின் மகளுக்கு நலமளித்த இந்த நிகழ்வு,
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில்
இடம்பெறுகின்ற, "பிற இனத்து மக்களை நான் என் திருமலைக்கு அழைத்து
வருவேன்...." என்ற சொற்களுக்கு அர்த்தம் தருவதாக இருக்கின்றது.
இதன்மூலம் கடவுள் யூதருக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமானவர் என்பது
உறுதியாகிறது (திப 22:27; மத் 28: 19; உரோ 15: 19-21). மேலும்
உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறும், (பிற இனத்து மக்களாகிய)
நீங்கள் இப்பொழுது கடவுளுக்குக் கீழ்ப்படிவதால், அவரது இரக்கத்திற்கு
உரியவர்களாக இருக்கிறீர்கள் என்ற வார்த்தைகளுக்கும் அர்த்தம்
தருவதாக இருக்கின்றது. பிற இனத்து மக்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
அந்தக் கீழ்ப்படிதல் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையால் வருகின்றது.
ஆகையால், நாம் யூதருக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் இரங்கும் இறைவனுக்குக்
கீழ்ப்படிந்து, அவரிடத்தில் கானானியப் பெண்மணியைப் போன்று நம்பிக்கைகொண்டு
தாழ்ச்சியோடும் விடாமுயற்சியோடும் வாழ்வோம். அதன்மூலம் அவர் தரும்
அருள்வாழ்வைப் பெற்றுக்கொள்வோம்.
சிந்தனை
நான் மெதுவாக நடப்பவனாக இருக்கலாம்; ஆனால், பின்னால்
திரும்பிப் பார்க்காமல், தொடர்ந்து, விடாமுயற்சி நடக்கக்கூடியவன்"
என்பார் ஆபிரகாம் லிங்கன். ஆபிரகாம் லிங்கனின் வெற்றிக்குக் காரணமாக
இருந்தது, அவரிடம் இருந்த விடாமுயற்சி. நாம் இறைவனிடம் வேண்டுவதைப்
பெற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருப்பதும்தான் இந்த (நம்பிக்கையுடன்
கூடிய) விடாமுயற்சிதான். எனவே, நாம் இறைவனிடம் நம்பிக்கையோடும்
மிகுந்த தாழ்ச்சியோடும், விடாமுயற்சியோடும் வேண்டுவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு - திருப்பலி முன்னுரை
=================================================================================
பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு திருப்பலியில் பக்தியோடு பங்குபெற வந்திருக்கும்
இறைமக்களாகிய உங்களை இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய பெயரால்
வாழ்த்துக் கூறி, வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இன்றைய திருப்பலியின் வாசகங்கள் வாயிலாக ஓர் பேருண்மையை இறைவன்
நமக்கு இன்று வெளிப்படுத்துகின்றார். சமுதாயத்தின்
ஏற்றத்தாழ்வுகளுக்கு சவுக்கடி கொடுக்கின்றார். இறைவாக்கினர்
எசாயா வழியாய் "என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய
இறை மன்றாட்டின் வீடு என அழைக்கப்படும்" என்றுரைத்து சமத்துவ,
சமதர்ம சமுதாயத்தின் மேன்மையை நமக்கு கற்றுத் தருகின்றார்.
அதே போன்று தேர்ந்து கொள்ளப்பட்ட இனத்தார் இயேசுவின் மீட்பை
நிராகரித்த நிலையில் அந்த மீட்பின் பங்காளிகளாக
புறவினத்தாரையும் மாற்றுகின்றார் பவுலடியார்.
இஸ்ரயேலரில் காணாமல் போன ஆடுகளிடம் மட்டுமே தான்
அனுப்பப்பட்டதாக கூறிய இயேசு, கானானியப் காணப்பட்ட உறுதியான
நம்பிக்கைக்கு கைம்மாறு அளிக்கின்றார். இவ்வாறு ஒற்றுமையையும்
ஒன்றிணைப்பையும் வலியுறுத்துகின்ற இறை வார்த்தைகளை ஏற்றுக்
கொள்ள மறுத்து, சாதிக்கொரு கோவிலும் கல்லறையும் உருவாக்கும்
மனிதனின் இழிநிலை மாறவும், யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற
உயரிய நிலைக்கு மனித சமுதாயம் முன்னேறவும் வரம் வேண்டி,
இத்தெய்வீக திருப்பலியில் பங்கு பெறுவோம்; பயனடைவோம்.
இறைமக்களின் மன்றாட்டுகள்
1. எங்கள் அன்பின் இறைவா!
எங்கள் ஆன்மீக வாழ்வில் வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை,
ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர், நற்செய்திப்
பணியாற்றும் பொதுநிலையினர் அனைவரையும் இரக்கத்தோடு கண்ணோக்கிப்
பாரும். அவர்களது நற்செய்திப் பணி நிறைவான பலன் தரவும்,
அவர்களுக்கு உடல், உள்ள, ஆன்ம சுகமளிக்க வேண்டுமென்றும் இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. ஞானத்தின் உறைவிடமே எம் இறைவா!
எங்களை ஆளும் தலைவர்கள், அரசியல்வாதிகள் அனைவரையும் உம்
திருப்பாதத்தில் ஒப்படைக்கிறோம். ஊழலற்று, தன்னலமற்று
மக்களுக்காக உழைக்கவும், எம் தாய்நாட்டை நேரிய வழியில்
வழிநடத்திச் செல்லக்கூடிய ஞானத்தையும் அவர்களுக்கு அருள
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. ஆறுதலின் ஊற்றானவரே எம் இறைவா!
கொரோனா" என்ற கொடிய நோயால் அவதிப்படும் எங்கள் சகோதர,
சகோதரிகளைக் கண்ணோக்கிப் பாரும். அவர்கள் விரைவில்
குணமடையவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவத்
துறையினரை ஆசீர்வதித்து, உமது வல்லமையுள்ள வலது கரத்தால் தாங்க
வேண்டுமென்றும், இறைவா உம்மை நோக்கித் தயவாய் மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
4. மனுக்குலத்தின்மேல் பரிவு கொண்ட எம் இறைவா!
எங்களைச் சூழ்ந்துள்ள இத்துன்பச் சூழலில், தங்கள்
வாழ்வாதாரத்தை இழந்து, வேலையிழந்து, நிர்க்கதியாய் நிற்கும்
ஏழை மக்களையும், தங்கள் படிப்பைத் தொடர வழியின்றி, நேரலை
வகுப்பில் பங்குபெற தேவையான உபகரணங்கள் வாங்க முடியாமல்
தவிக்கின்ற எங்கள் மாணவச் செல்வங்களையும் இரக்கத்தோடு
கண்ணோக்கிப் பாரும். அவர்களின் தேவைகள் சந்திக்கப்படவும்,
இழந்த வேலைகள் மீண்டும் கிடைக்கப்பெற்று, அவர்கள் ஏழ்மை நீங்க
வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
5. இரக்கத்தின் நாயகனே இறைவா!
கோழிக்கோடு விமான விபத்திலும், மூணாறு மண் சரிவில் மறைந்து
போனவர்களுமான எங்கள் சகோதர சகோதரிகளுக்கு நித்திய
இளைப்பாற்றியைத் தரவேண்டுமென்றும், அவர்களை இழந்து தவிக்கின்ற
மக்களுக்கு ஆறுதலையும் அருள வேண்டுமென்றும் இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நன்றி: திருமதி ஜோதி காசி, தென்காசி.
|
|