Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் (சித்திரைக்குள்ளர்) ஜான் ✠(St. John the Dwarf)
   
நினைவுத் திருநாள் : (அக்டோபர் / Oct - 17)
✠ புனிதர் (சித்திரைக்குள்ளர்) ஜான் ✠(St. John the Dwarf)

 எகிப்திய பாலைவனத் தந்தை :
(Egyptian Desert Father)

பிறப்பு : கி.பி. 339
தீப்ஸ், எகிப்து (Thebes, Egypt)

இறப்பு : கி.பி. 405
மவுன்ட் கொல்ஸிம், எகிப்து
(Mount Colzim, Egypt)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபைகள்
(Eastern Orthodox Churches)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபைகள்
(Oriental Orthodox Churches)

நினைவுத் திருநாள் : அக்டோபர் 17

"புனிதர் ஜான் கொலாபஸ்" (Saint John Colobus) என்றும், "தந்தை சித்திரைக்குள்ளர் ஜான்" (Abba John the Dwarf) என்றும் பலவித பெயர்களில் அழைக்கப்படும் இப்புனிதர் "சித்திரைக்குள்ளர் ஜான்" (John the Dwarf), ஆதி கிறிஸ்தவ திருச்சபையின் பாலைவனத்து தந்தை (Egyptian Desert Father) ஆவார்.

ஜான், எகிப்து (Egypt) நாட்டின் தீப்ஸ் (Thebes) நகரில், ஏழை கிறிஸ்தவ பெற்றோருக்குப் பிறந்தவர் ஆவார். பதினெட்டு வயதில், அவர் மூத்த சகோதரருடன், "ஸ்கேட்டிஸ்" பாலைவனத்திற்கு (Desert of Scetes) குடிபெயர்ந்தார். அங்கே, அவர் புனிதர் "பம்போவின்" (Saint Pambo) சீடராகவும், புனிதர் பிஷோயின் (Saint Pishoy) ஒரு நல்ல நண்பராகவும் ஆனார். அங்கே, கடின எளிய வாழ்க்கையை வாழ்ந்த அவர், அங்கே சுற்றிலுமுள்ள துறவியர்க்கு தமது வாழ்க்கை முறையை கற்றுக்கொடுத்தார். அவர்களுள், ரோமன் அரச ஆசானும், பாலைவனத்து தந்தையுமான புனிதர் "பெரிய அர்சேனியசும்" (St. Arsenius the Great) ஒருவர் ஆவார்.

புனிதர் "பம்போ" (Saint Pambo) அங்கிருந்து புறப்பட்டதன் பின்னர், திருத்தந்தை "தியோபிலஸ்", (Pope Theophilus) ஜானுக்கு குருத்துவ அருட்பொழிவு செய்வித்தார். பின்னர், சுற்றுவட்டாரத்திலுமுள்ள "கீழ்படியும் மரங்களினூடே" (Tree of Obedience) தாம் நிறுவிய துறவு மடத்தின் மடாதிபதியானார். கி.பி. 395ம் ஆண்டு, வட ஆபிரிக்காவின் பெர்பெர் (Berbers) இனத்தவர்கள், "ஸ்கேட்டிஸ்" பாலைவனத்தை (Desert of Scetes) முற்றுகையிட்டபோது, ஜான் அங்கிருந்து "நைட்ரியன்" பாலைவனத்திலிருந்து (Nitrian Desert) வெளியேறி, ஓடிப்போன அவர், தற்போதைய சூயஸ் (Suez) நகரத்திற்கு அருகே கொல்சிம் (Mount Colzim) மலைக்குச் சென்றார். மீதமுள்ள வாழ்நாளை அங்கேயே கழித்த அவர், அங்கேயே மரித்துப்போனார்.

515ம் ஆண்டு, புனித ஜானுடைய உடலின் மீதங்கள், "நைட்ரியன்" (Nitrian Desert) பாலைவனத்திற்கு மாற்றப்பட்டன.

புராணங்களின்படி, ஜான் கீழ்படிதலுக்கு மிகவும் பெயர் போனவர். அவரது கீழ்ப்படிதலைப் பற்றி மிகவும் பிரபலமான கதை ஒன்று உண்டு. ஒரு நாள் புனிதர் பாம்போ, அருட்தந்தை ஜானிடம் ஒரு உலர்ந்த மரக் குற்றியைக் கொடுத்து, அதனை நட்டு, நீரூற்றி வளர்க்குமாறு கட்டளையிட்டார். அதனை நட்டுவைத்த ஜான், தினமும் இரண்டுமுறை, தாங்கள் வசிக்குமிடத்திலிருந்து பன்னிரெண்டு மைல் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்துவந்து அதற்கு ஊற்றினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மரத்தின் குற்றி துளிர்த்து முளைத்து, ஒரு பழம் தரும் மரமாக வளர்ந்தது. புனிதர் பாம்போ, இந்த மரத்தின் சில பழங்களை எடுத்துச் சென்று, சுற்றிலுமுள்ள துரவியருக்குக் கொடுத்து, "எடுத்துக் கொள்ளுங்கள், கீழ்ப்படிதலின் கனியை சாப்பிடுங்கள்" என்று கூறி கொடுத்தார். கி.பி. 402ம் ஆண்டு, எகிப்தில் இருந்த போஸ்டுமியன் (Postumian), மடாலயத்தின் முற்றத்தில் வளர்ந்த இந்த மரத்தை காட்டினார், அதில் அவர் தளிர்கள் மற்றும் பச்சை இலைகள் ஆகியவற்றைக் கண்டார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா