Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் இஞ்ஞாசியார் ✠(St. Ignatius of Antioch)
   
நினைவுத் திருநாள் : (அக்டோபர் / Oct - 17)

✠ புனிதர் இஞ்ஞாசியார் ✠(St. Ignatius of Antioch)

 ஆயர், மறைசாட்சி, திருச்சபையின் தந்தையர் :
(Bishop, Martyr and Church Father)

பிறப்பு : மே 15, 35
சிரியா பிராந்தியம், ரோமப் பேரரசு.
(Province of Syria, Roman Empire)

இறப்பு : ஜூலை 6, 108 (வயது 73)
ரோம், ரோமப் பேரரசு
(Rome, Roman Empire)

ஏற்கும் சமயம் :
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Churches)
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
லூதரன் திருச்சபை
(Lutheranism)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Churches)
கிழக்கு சிரிய திருச்சபை
(Assyrian Church of the East)
கிழக்கு கிறிஸ்தவம், ரோமன்
(Eastern Christianity, Roman)
அலெக்சான்றியாவின் காப்டிக் கிழக்கு மரபுவழி திருச்சபை
(Coptic Orthodox Church of Alexandria)

புனிதர் பட்டம் : சட்ட உருவாக்கத்துக்கு முன்
அப்போஸ்தலர் புனித யோவான்
(St. John The Apostle (Said in later writings)

முக்கிய திருத்தலங்கள் :
தூய கிளமென்ட் பேராலயம், ரோம், இத்தாலி
(Basilica of San Clemente, Rome, Italy)

நினைவுத் திருவிழா : அக்டோபர் 17

பாதுகாவல் :
கிழக்கு மத்தியத் தரைக் கடல் திருச்சபை; வட ஆப்பிரிக்க திருச்சபை

அந்தியோக்கு இஞ்ஞாசியார் அல்லது தியோபோரஸ் (அதாவது கடவுளை தாங்குபவர்) என கிரேக்க மொழியில் அறியப்படும் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார், அந்தியோக்கியா நகரின் மூன்றாம் ஆயரும், திருச்சபையின் தந்தையரும், திருத்தூதர் புனிதர் யோவானின் சீடரும் ஆவார்.

இவர் கத்தோலிக்க திருச்சபையின் தந்தை என்றழைக்கப்பட்டார். காட்டு மிருகங்களால் கடித்துக் கொல்லப்பட்ட மறைசாட்சியர்களைப் பற்றி கடிதங்கள் எழுதியுள்ள இவர், ஆதிகால திருச்சபையின் இறையியலாளர் என்று அழைக்கப்பட்டார். திருச்சபையில் ஆயர்கள் எப்படி வாழ வேண்டுமென்பதைப் பற்றியும், திவ்விய நற்கருணையைப் பற்றியும், முக்கிய கடிதங்களை எழுதியுள்ளார். இவர் அந்தியோக்கியாவின் மூன்றாவது ஆயராக பொறுப்பேற்றார்.

தமது ஐந்து வயதிலேயே கிறிஸ்தவராக மனம் மாறிய இஞ்ஞாசியாரை, அவரது நண்பரும், மறைசாட்சியும், திருச்சபையின் தந்தையரில் ஒருவரும், ஸ்மைர்னா ஆயருமான (Martyr, Church Father and Bishop of Smyrna) புனிதர் "பொலிகார்ப்புடன்" (Saint Polycarp) புனிதர் யோவானின் சீடர்களாக மரபுகள் அடையாளம் காணுகின்றன.

கி. பி. 107ம் ஆண்டில் அந்தியோக்கியா (Antioch) நகருக்கு விஜயம் செய்த பேரரசன் "ட்ராஜன்" (Emperor Trajan), அங்கிருந்த கிறிஸ்தவர்களை மரணத்திற்கும் விசுவாசத்திற்கும் இடையே தேர்வு செய்யுமாறு வற்புறுத்தினான். கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலிக்க தீர்க்கமாக மறுத்த இஞ்ஞாசியார், மரண தண்டனை அளிக்கப்பட்டார். மரண தண்டனை நிறைவேற்றும் பொருட்டு அவர் ரோம் நகரருக்கு இட்டுச் செல்லப்பட்டார்.

இவரைக் கொல்ல ரோமுக்கு இட்டு சென்ற வழியில் இவர் தொடர்ச்சியாக பல கடிதங்களை எழுதியுள்ளார். முக்கியமாக, "ஆசியா மைனர்" (Asia Minor) தீபகற்பத்தில் அவர்கள் நின்ற பல்வேறு இடங்களிலிருந்து, ஏழு கடிதங்களை எழுதினர். இவற்றில் ஐந்து கடிதங்களை திருச்சபைக்கும், ஒரு கடிதத்தை தமது நண்பரும், சக ஆயருமான "ஸ்மைர்னா" ஆயர் "பொலிகார்ப்புக்கும்" இன்னுமொரு கடிதத்தை கிறிஸ்தவ மக்களுக்கும் எழுதியுள்ளார். கிறிஸ்தவ மக்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், கடவுளுக்கு உண்மையாய் நிலைத்திருக்கவும், திருச்சபையின் தங்கள் மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படியவும் கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார். அவர் இங்குள்ள கிறிஸ்தவ மறைக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து எச்சரிக்கிறார். கிறிஸ்தவ விசுவாசத்தின் உறுதியான உண்மைகளை அவர்களுக்கு அளித்தார். தாம் மறைசாட்சியாக மரிக்கப்போவதை தடுக்கவேண்டாம் என்று கெஞ்சியுள்ளார். "நான் உங்களிடம் கேட்கும் ஒரே விஷயம், என்னுடைய இரத்தத்தை கடவுளிடம் ஒப்படைக்க என்னை அனுமதிப்பதாகும். நான் கர்த்தருடைய கோதுமை ஆவேன். நான் மிருகங்களுக்கு இறையாவதன் மூலம், கிறிஸ்து இயேசுவின் மாசற்ற உணவாக மாறுவேனாக." என்று எழுதியிருந்தார்.

இக்கடிதங்களின் மூலம் ஆதி கிறிஸ்தவர்களின் இறையியல் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவரின் கடிதங்களில் திருவருட்சாதனங்கள், ஆயர்களின் பணி முதலியவைப்பற்றி எழுதியுள்ளார். கத்தோலிக்க திருச்சபை என்னும் சொல்முறையை முதன்முதலாக எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே.

இவர் கிறிஸ்தவ மறையை பரப்ப அரும் பாடுபட்டார். இதனால் தற்போது ரோம் நகரில் உள்ள "கொலோஸ்சியம்" (Colosseum) எனுமிடத்தில் சிறைபிடித்து வைக்கப்பட்டு, பல கொடிய மிருகங்களால் கடிக்கப்பட்டு, மறைசாட்சியாக கிறிஸ்துவின் பொருட்டு தன் உயிரை ஈந்தார்.

இக்னேசியஸ், "சர்கஸ் மாக்சிமஸில்" (Circus Maximus) சிங்கங்களை தீரமுடன் சந்தித்தார்.

கத்தோலிக்க திருச்சபையில் இவரது நினைவுத் திருவிழா நாள், அக்டோபர் மாதம், 17ம் நாள் ஆகும்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா