Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் முதலாம் கல்லிஸ்டஸ் ✠(St. Callistus I)
   
நினைவுத் திருநாள் : (அக்டோபர் / Oct - 14)
✠ புனிதர் முதலாம் கல்லிஸ்டஸ் ✠(St. Callistus I)

 16ம் திருத்தந்தை :
(16th Pope)

பிறப்பு : ----
ரோம், இத்தாலி

இறப்பு : கி.பி. 223
ரோம், இத்தாலி
(Rome, Italy)

நினைவுத் திருவிழா : அக்டோபர் 14

பாதுகாவல் : கல்லறைத் தொழிலாளர்

திருத்தந்தை புனிதர் முதலாம் கலில்ஸ்டஸ், ரோம் ஆயராகவும், திருத்தந்தையாகவும் கி.பி. 217ம் ஆண்டு முதல், 222ம் ஆண்டுவரை ஆட்சி செய்தார். அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை செஃபிரீனஸ் (Pope Zephyrinus) ஆவார். கல்லிஸ்டசின் இறப்புக்குப் பின் அர்பன் திருத்தந்தையாகப் பதவி ஏற்றார். இவர், ரோமப் பேரரசர்கள் "எலகபலஸ்" மற்றும் "அலெக்சாண்டர் செவெராஸ்" (Roman Emperors Elagabalus and Alexander Severus) ஆகியோரது காலத்தில் வாழ்ந்தவராவார். கத்தோலிக்க திருச்சபையின் 16ம் திருத்தந்தையான புனிதர் முதலாம் கல்லிஸ்டஸ், தமது கிறிஸ்தவ விசுவாசத்திற்காக மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

வரலாறு :
முதலாம் கலிஸ்டஸ் ஆட்சி புரிந்த காலத்தில் உரோமை மன்னர்களாக இருந்தோர் எலகாபலுஸ் (Elagabalus) என்பவரும் அவருக்குப் பின் அலக்சாண்டர் செவேருஸ் (Alexander Severus) என்பவருமாவர். கலிஸ்டஸ் மறைச்சாட்சியாக இரத்தம் சிந்தி இறந்தார்.

கல்லிஸ்டசின் வரலாறு பற்றிய குறிப்புகள் அவருடைய எதிரிகளின் எழுத்துகளிலிருந்தே தெரிய வருகின்றன. "ஹிப்போலிட்டஸ்" (Hippolytus of Rome) என்னும் புகழ்பெற்ற இறையிலார் கல்லிஸ்டசின் எதிரிகளுள் ஒருவர். அவர் தம் "Philosophumena" என்னும் நூலில் கல்லிஸ்டசைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:

கல்லிஸ்டஸ் இளமைப் பருவத்தில் ஓர் அடிமையாக இருந்தார். அவரது எஜமானரான "கார்ஃபோஃபொரஸ்" (Carpophorus) என்பவர், கைம்பெண்களையும் கைவிடப்பட்ட குழந்தைகளையும் பராமரிப்பதற்காக பிற கிறிஸ்தவர்களிடமிருந்து நிதி வசூல் செய்யும் பணியை கல்லிஸ்டசின் பொறுப்பில் கொடுத்திருந்தார். ஒருமுறை, வசூல் செய்திருந்த நிதியைத் தொலைத்துவிட்ட கலிஸ்டஸ் ரோம் நகரிலிருந்து தப்பியோடினார். ஆனால் "போர்டஸ்" (Portus) என்னும் இடத்தில் பிடிபட்டார். தப்பிப்பதற்காகக் மேலிருந்து குதித்த கல்லிஸ்டசை மீட்டு, அவருடைய தலைவரிடம் ஒப்படைத்தனர். கல்லிஸ்டசிடம் தாம் கொடுத்த பணத்தை மீண்டும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் அவரை விடுதலை செய்யுமாறு கோரினார்கள். அவர் ரோமிலிருந்த சில யூதர்களிடம் பணம் கடன் வாங்கவோ திரும்பப் பெறவோ சென்றபோது எழுந்த தகராறில் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

கல்லிஸ்டஸ் கிறிஸ்தவர் என்று தெரிந்ததும் "சார்தீனியா" (Sardinia) தீவின் சுரங்கங்களில் கட்டாய வேலை செய்ய அனுப்பப்பட்டார். ரோம பேரரசன் "கொம்மோடஸ்" (Emperor Commodus) என்பவருக்கு மிகவும் பிடித்தமான "மார்சியா" (Marcia) என்னும் பெண்மணியை பிரதிநிதித்துவம் செய்யும், ஆலயங்களில் ஊழியம் செய்யும் (Presbyter) "ஹயாசிந்தஸ்" (Hyacinthus) என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க பிற கிறிஸ்தவர்களுடன் சேர்த்து கல்லிஸ்டசும் விடுதலை செய்யப்பட்டார். அப்போது கல்லிஸ்டசின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் "ஆன்ஷியம்" (Antium) என்னும் நகருக்கு அனுப்பப்பட்டார். அங்கே திருத்தந்தை "முதலாம் விக்டர்" (Pope Victor I) அவர்களிடமிருந்து பெற்ற உதவித் தொகை கொண்டு வாழ்ந்து வந்தார்.

கி.பி. 199ம் ஆண்டில், திருத்தந்தை "செஃபிரினஸ்" (Pope Zephyrinus) கல்லிஸ்டஸை ஒரு திருத்தொண்டராக அருட்பொழிவு செய்வித்தார். "அபியான் வே" (Appian Way) எனுமிடத்திலுள்ள கிறிஸ்தவ கல்லறைக்கு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். தற்போதுவரை, "கல்லிஸ்டஸின் கல்லறை பூமி: (Catacombs of St. Callixtus) என்றழைக்கப்படும் இக்கல்லறை பூமியானது, திருச்சபைக்குச் சொந்தமான முதல் சொத்தாகும். அத்துடன், இக்கல்லறை நிலத்திலேயே அநேக திருத்தந்தையர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மூன்றாம் நூற்றாண்டில் ரோம் நகரின் ஒன்பது ஆயர்கள் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் இக்கல்லறை பூமியானது, "ஜியோவன்னி பட்டிஸ்டா ரொஸ்ஸி" (Giovanni Battista de Rossi) எனும் தொல்பொருள் ஆராய்ச்சியாளரால் 1849ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

கலிஸ்டஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படல் :
திருத்தந்தை "செஃபிரீனஸ்" இறந்ததும் அவருக்கு நெருங்கிய துணையாளராகவிருந்த கல்லிஸ்டஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விடுதலை பெற்ற ஓர் அடிமை திருத்தந்தையாகப் பதவி ஏற்பதற்கு அக்காலத்தில் தடையிருக்கவில்லை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில்தான் திருத்தந்தை முதலாம் லியோ சட்டம் இயற்றி, விடுதலை பெற்ற அடிமை திருத்தந்தையாக முடியாது என்று வரையறுத்தார்.

கலிஸ்டசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் :
திருத்தந்தை கலிஸ்டசைப் பற்றி அவருடைய எதிரியாக இருந்த "ஹிப்போலிட்டஸ்" (Hippolytus) என்பவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவற்றுள் சில :

✹ கலிஸ்டஸ் திருச்சபையின் உண்மையான போதனையைத் திரித்ததாகக் குற்றச்சாட்டு. ஒரே கடவுள் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் கிறிஸ்தவக் கொள்கையை கலிஸ்டஸ் "ஒரே கடவுள் மூன்று வடிவங்களில் தந்தை, மகன், தூய ஆவி என விளங்குகிறார்" என்று கலிஸ்டஸ் கூறியதாகக் குற்றம் சாட்டினார்.

✹ இருமுறை அல்லது மூன்றுமுறை திருமணம் செய்தவர்களையும் குருத்துவ நிலைபெற அனுமதித்தது தவறு என்னும் குற்றச்சாட்டு.

✹ அடிமைகளுக்கும் சுதந்திர மக்களுக்கும் இடையே நிகழும் திருமணம் செல்லுபடியாகாது என்று கல்லிஸ்டஸ் கூறவில்லை என்னும் குற்றச்சாட்டு.

✹ விபச்சாரத்தில் ஈடுபட்டோர் மனம் திரும்பி பாவப் பரிகாரம் செய்தபின் திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது தவறு என்னும் குற்றச்சாட்டு.

ஆக, ஹிப்போலிட்டஸ் கடுமையான ஒழுக்க நெறியைப் போதித்தார். கல்லிஸ்டசோ மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார். எனவே, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கல்லிஸ்டஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஹிப்போலிட்டஸின் ஆதரவாளர்கள் அவரை எதிர்-திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர். ஹிப்போலிட்டஸ் தமது கிறிஸ்தவ நம்பிக்கையின் பொருட்டு நாடுகடத்தப்பட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். இறப்பதற்கு முன் அவர் திருச்சபையோடு நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டார். அவர் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராகப் போற்றப்படுகிறார்.

மொந்தானியக் கொள்கைக்கு ஆதரவு அளித்த தெர்த்தூல்லியன் என்னும் பண்டைக் காலக் கிறிஸ்தவ அறிஞரோடும் கல்லிஸ்டஸ் மோத வேண்டியதாயிற்று.

திருத்தந்தை கல்லிஸ்டசின் இறப்பு :
"ரோம் மறைச்சாட்சியர் நூல்" (Roman Martyrology) என்னும் பழைய ஏட்டில், புனித பேதுருவுக்கு அடுத்த படியாக "மறைச்சாட்சி" என்னும் பட்டம் புனித கல்லிஸ்டசுக்கே வழங்கப்பட்டுள்ளது.

அவுரேலியா நெடுஞ்சாலையில் (Via Aurelia) அமைந்திருந்த கலிஸ்டசின் கல்லறை 1960ல் கண்டெடுக்கப்பட்டது. அக்கல்லறை திருத்தந்தை முதலாம் ஜூலியஸ் என்பவரால் கட்டியெழுப்பப்பட்டது. அதில் காணப்பட்ட குறிப்பின்படி, கலிஸ்டஸ் கிறிஸ்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். அவரைக் கம்புகளால் அடித்துக் கொன்றார்கள். அவரது உடல் ஒரு கிணற்றில் வீசப்பட்டது. அதனருகே கல்லிஸ்டசே எழுப்பியிருந்த புனித மரியாள் கோவில் (Basilica of Santa Maria in Trastevere) உள்ளது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா