Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     20 நவம்பர் 2019  
                                    பொதுக்காலம் 33ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 உலகைப் படைத்தவரே உங்களுக்கு உயிரையும் மூச்சையும் மீண்டும் கொடுப்பார்.

மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1, 20-31

அந்நாள்களில் சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைது செய்யப்பட்டார்கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

எல்லாருக்கும் மேலாக, அவர்களுடைய தாய் மிகவும் போற்றுதற்குரியவர், பெரும் புகழுக்குரியவர். ஒரே நாளில் தம் ஏழு மைந்தர்களும் கொல்லப்பட்டதை அவர் கண்ட போதிலும், ஆண்டவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவை அனைத்தையும் மிகத் துணிவோடு தாங்கிக் கொண்டார்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் தாய்மொழியில் அறிவுரை கூறினார்.

பெருந்தன்மை நிறைந்தவராய்ப் பெண்ணுக்குரிய பண்பையும் ஆணுக்குரிய துணிவையும் இணைத்து அவர்களிடம், "நீங்கள் என் வயிற்றில் எவ்வாறு உருவானீர்கள் என நான் அறியேன்; உங்களுக்கு உயிரும் மூச்சும் அளித்ததும் நான் அல்ல; உங்களுடைய உள்ளுறுப்புகளை ஒன்றுசேர்த்ததும் நான் அல்ல. உலகைப் படைத்தவரே மனித இனத்தை உருவாக்கியவர்; எல்லாப் பொருள்களையும் உண்டாக்கியவர்; அவரே தம் இரக்கத்தினால் உங்களுக்கு உயிரையும் மூச்சையும் மீண்டும் கொடுப்பார்; ஏனெனில் அவருடைய சட்டங்களை முன்னிட்டு நீங்கள் இப்போது உங்களையே பொருட்படுத்துவதில்லை"என்றார்.

தாம் இகழப்படுவதாக அந்தியோக்கு நினைத்தான்; அந்தத் தாயின் கூற்றில் ஏளனம் இருப்பதாக ஐயுற்றான்; எல்லாருக்கும் இளைய சகோதரர் இன்னும் உயிரோடு இருக்கக் கண்டு, "உன் மூதாதையரின் பழக்க வழக்கங்களை நீ கைவிட்டு விட்டால், உன்னைச் செல்வனாகவும் பிறர் அழுக்காறு கொள்ளும் வகையில் உயர்ந்தவனாகவும் ஆக்குவதோடு, என் நண்பனாகவும் ஏற்றுக் கொண்டு உனக்கு உயர்பதவி வழங்குவேன்'' என்று சொன்னது மட்டுமன்றி உறுதியும் கூறி ஆணையிட்டான்.

அவ்விளைஞர் மன்னனின் சொற்களுக்குச் சிறிதும் செவிசாய்க்காததால், அவருடைய தாயை அவன் தன்னிடம் அழைத்து அந்த இளைஞர் தம்மையே காத்துக் கொள்ளும்படி அறிவுரை கூறுமாறு வேண்டினான். மன்னன் அவரை மிகவும் வேண்டிக்கொண்டதனால், அந்தத் தாய் தம் மகனை இணங்க வைக்க இசைந்தார்.

ஆனால் அந்தக் கொடுங்கோலனை ஏளனம் செய்தவராய், அவர் தம் மகன் பக்கம் குனிந்தவாறு தம் தாய்மொழியில், "மகனே, என்மீது இரக்கங்கொள். ஒன்பது மாதம் உன்னை என் வயிற்றில் சுமந்தேன்; முன்று ஆண்டு உனக்குப் பாலூட்டி வளர்த்தேன்; இந்த வயது வரை உன்னைப் பேணிக்காத்து வந்துள்ளேன்.

குழந்தாய், உன்னை நான் வேண்டுவது: விண்ணையும் மண்ணையும் பார்; அவற்றில் உள்ள அனைத்தையும் உற்று நோக்கு. கடவுள் இவை அனைத்தையும் ஏற்கெனவே இருந்தவற்றிலிருந்து உண்டாக்கவில்லை. இவ்வாறே மனித இனமும் தோன்றிற்று என்பதை அறிந்து கொள்வாய். இக்கொலைஞனுக்கு அஞ்சாதே; ஆனால் நீ உன் சகோதரர்களுக்கு ஏற்றவன் என மெய்ப்பித்துக் காட்டு. இறைவனின் இரக்கத்தால் உன் சகோதரர்களோடு உன்னையும் நான் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி இப்போது சாவை ஏற்றுக்கொள்'' என்று சொல்லி ஊக்கமூட்டினார்.

தாய் பேசி முடிப்பதற்குள் அந்த இளைஞர் பின்வருமாறு கூறினார்: `"எதற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? மன்னனின் கட்டளைக்கு நான் கீழ்ப்படியமாட்டேன். மோசே வழியாக எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தின் கட்டளைகளுக்கே கீழ்ப்படிவேன். எபிரேயருக்கு எதிராக எல்லா வகைத் துன்பங்களையும் திட்டமிட்ட நீ, கடவுளின் கைக்குத் தப்பமாட்டாய்'' என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 17: 1. 5-6. 8,15 (பல்லவி: 15a) Mp3
=================================================================================
பல்லவி: நானோ விழித்தெழும்போது, உம் உருவம் கண்டு நிறைவடைவேன்.

1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். பல்லவி

5 என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை. 6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும். பல்லவி

8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். 15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 11-28


அக்காலத்தில் இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள்.

அப்போது இயேசு மேலும் ஓர் உவமையைச் சொன்னார்: `"உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப் புறப்பட்டார்.

அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, "நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்' என்று சொன்னார்.

அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, "இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை' என்று சொல்லித் தூது அனுப்பினர். இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார்.

பின்னர் தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.

முதலாம் பணியாளர் வந்து, "ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்' என்றார்.

அதற்கு அவர் அவரிடம், "நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்' என்றார்.

இரண்டாம் பணியாளர் வந்து, "ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன்' என்றார்.

அவர், "எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்' என்று அவரிடமும் சொன்னார்.

வேறொருவர் வந்து, "ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர்; நீர் விதைக்காததை அறுக்கிறவர்' என்றார்.

அதற்கு அவர் அவரிடம், "பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன்; வைக்காததை எடுக்கிறவன்; விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா? அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே' என்றார்.

பின்பு அருகில் நின்றவர்களிடம், "அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்' என்றார்.

அதற்கு அவர்கள், "ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவே' என்றார்கள்.

அவரோ, "உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிட மிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்.

மேலும் அவர், "நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்குக் கொண்டு வந்து என்முன் படுகொலை செய்யுங்கள்' என்று சொன்னார்.''

இவற்றைச் சொன்ன பின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

மனிதன் உழைக்க வேண்டும். உண்மையாய் இருக்க வேண்டும்.

சோம்பித் திரிவது சுகம் தராது என்கின்றார்.

தலைவனைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும், உழைக்காது இருந்த, பெருக்காது இருந்த ஊழியன் புறந்தள்ளப்படுவான் என்பதனை தெளிவுற அறிவுறுத்துகின்றார்.

திறமைகளை தந்த கடவுள், அதன் பலனை எதிர்பார்க்கின்றார் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

எதிர்ப்பார்ப்புக்கு மாறாக செயல்படும் போது, உள்ளதும் இல்லாத நிலையேற்படும்.

உணர்வோம். உயர்வோம்.




=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
முதல் வாசகம்

உலகைப் படைத்தவரே உங்களுக்கு உயிரையும் மூச்சையும் மீண்டும் கொடுப்பார்.

மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1, 20-31

"மன்னனின் கட்டளைக்கு அல்ல, திருச்சட்டத்தின் கட்டளைகளுக்கே கீழ்ப்படிவேன்"

நிகழ்வு

பேரரசன் லிசினியுஸ் உரோமையை ஆண்டுவந்த காலத்தில், அவனுடைய பன்னிரண்டாவது படைப்பிரிவில் 'நாற்பது படைவீரர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள்' என்ற செய்தியைக் கேள்விப்பட்டான். உடனே அவன் தன்னுடைய படைத்தளபதியை அவர்களிடம் அனுப்பி, "நீங்கள் கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு என்னுடைய தெய்வத்திற்குத் தூபம் காட்டவேண்டும், இல்லையெனில் கொல்லப்படுவீர்கள்" என்று சொல்லச் சொன்னான். அவனும் அவ்வாறே சொல்ல, அவர்கள், "நாங்கள் கிறிஸ்துவைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டோம்" என்று தங்களுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார்கள். மேலும் அவர்கள் அந்தப் படைத்தளபதியிடம், "நீங்கள் எங்களுடைய உடலை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; ஆனால் எங்கள் உள்ளத்தை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது" என்று தீர்க்கமாய்ச் சொன்னார்கள்.

இச்செய்தியைப் படைத்தளபதி அரசன் லிசினியுஸிடம் சொன்னபோது அவன் வெகுண்டெழுந்தான். உடனே அவன் தன்னுடைய படைத்தளபதியிடம், "இவர்கள் கிறிஸ்துவை மறுதலிக்க மறுப்பதால், செபஸ்டியில் உள்ள உறைந்து போய் இருக்கும் ஆற்றில், இவர்களுடைய உடலில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் நிற்க வைத்துக் கொல்லுங்கள்" என்று உத்தரவு பிறப்பித்தார். அவனுடைய உத்தரவுக்குப் பணிந்து படைத்தளபதி, அந்த நாற்பது கிறிஸ்தவப் படைவீரர்களையும் செபஸ்டியில் இருந்த உறைந்திருந்த ஆற்றுக்கு இழுத்துக் கொண்டு போனான். அவனோடு ஒருசில அதிகாரிகளும் சென்றார்கள்.

இது நடந்தது 320 ஆம் ஆண்டில் வந்த குளிர்காலத்தில். குளிரகாலம் என்பதால், ஆறு உறைந்து போய் இருந்தது. நாற்பது படைவீரர்களையும் இழுத்துக்கொண்டு போன படைத்தளபதி அவர்கள்மீது பரிதாபப்பட்டு (பல ஆண்டுகள் அவர்கள் தன்னோடு பணியாற்றியவர்கள் என்பதற்காக) அவர்களிடம், "உங்களுக்கு இன்னொரு வாய்ப்புத் தருகிறேன், நீங்கள் கிறிஸ்துவை மறுதலித்து விடுங்கள். உங்களுக்காக நான் அரசனிடம் பரிந்துபோசி, உங்களை நான் காப்பாற்றுகிறேன்" என்றான். அவர்களோ தங்களுடைய நம்பிக்கையில் கடுகளவுகூடத் தளர்வடையாமல் மிக உறுதியாக இருந்தார்கள். இதனால் சினம்கொண்ட படைத்தளபதி அந்த நாற்பது படைவீரர்களையும் அவர்கள் அணிந்திருந்த உடைகளைக் கழற்றிவிட்டு, உறைந்திருந்த ஆற்றுக்குள் தள்ளினான்.

அவர்களோ, "நாற்பது பேரும் இயேசுவுக்கே... நாற்பது பேரும் இயேசுவுக்கே" என்று உரக்கக் கத்திக்கொண்டே இயேசுவைப் புகழத் தொடங்கினார்கள். நேரம் செல்லச் செல்ல குளிர் மிகுதியால் ஒருவர் பின் ஒருவராக செத்துக் கீழே சரிந்தார்கள். இதைப் பார்த்த படைத்தளபதி, 'இவர்களை ஒன்றும் செய்ய முடியாது' என்று சொல்லிக்கொண்டு தன்னோடு அதிகாரிகளையும் கூட்டிக்கொண்டு அரண்மனைச் சென்றான். அவனோடு வந்திருந்த ஒரே ஓர் அதிகாரி மட்டும் அரண்மனைக்குத் திரும்பிச் செல்லாமல், அங்கேயே இருந்து, நடப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தார்.

பகல் முடிந்து இரவு நேரம் வந்நது. அதற்குள் நாற்பது படைவீரர்களில் முப்பத்தொன்பது படைவீரர்கள் குளிர் தாங்கமுடியாமல், உடல் விரைத்து இறந்து போயிருந்தார்கள்; ஒரே ஒரு படைவீரர் மட்டும் மிஞ்சியிருந்தார். நேரம் ஆக ஆக அவரால் குளிரைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போகவே, அவர் இயேசுவை மறுதலித்து விட்டு, உறைந்திருந்த ஆற்றைவிட்டு வெளியே வந்தார். இவற்றையெல்லாம் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அதிகாரி (அவரும் ஒரு கிறிஸ்தவர்தான்) முப்பத்து ஒன்பது பேர் இயேசுவின் மேல் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையைக் கண்டு வியந்து தன்னுடைய ஆடைகளைக் கழற்றி எறிந்துவிட்டு, உறைந்திருந்த ஆற்றுக்குள் இறங்கி, இயேசுவுக்காகத் தன்னுடைய உயிரை மாய்த்தார்.

மறுநாள் நாற்பது பேருக்கும் என்னவாயிற்று என்று பார்க்க வந்த படைத்தளபதி, நாற்பது பேர் செத்துக்கிடப்பதையும் அந்த நாற்பது பேரில் தன்னோடு இருந்த அதிகாரியும் செத்துக்கிடப்பதைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டார்.

கிறிஸ்துவுக்காக தங்களுடைய உயிரையும் இழக்கத் துணிந்த இந்த நாற்பது பேருடைய நம்பிக்கை நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்திலும் திருச்சட்டத்தின் கட்டளைகளுக்காக தங்களுடைய உயிரையும் இழக்கத் துணிந்த ஒரு தாயையும் அவர்களுடைய ஏழு மகன்களையும் குறித்து வாசிக்கின்றோம். அவர்களிடம் இருந்த துணிச்சல், ஆண்டவர்மீதுகொண்டிருந்த நம்பிக்கை எத்தகையது என்பவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

திருச்சட்டத்தின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தவர்கள்

முதல் வாசகத்தில் மன்னன், ஒரு தாயிடமும் அவளுடைய ஏழு மகன்களிடமும், யூதர்களால் தீட்டு என்று கருதப்பட்ட பன்றி இறைச்சியை உண்ணுமாறு (இச 14: 8) கட்டாயப்படுத்துகின்றான். அவர்களோ திருச்சட்டத்தின் கட்டளைகளை மீறுவதை விடவும் சாவதே மேல் என்று தங்களுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள். இதனால் மன்னன் வெகுண்டெழுந்து, அவர்களை ஒருவர் பின் ஒருவராக கொன்றுபோடுகின்றான். கடைசியாக எல்லாரிலும் இளையவனும் அவனுடைய தாயும் மட்டும் மிஞ்சியிருக்க, மன்னன் இளைஞனிடம் பசப்பு வார்த்தைகளைப் பேசி, அவனைத் தன்னுடைய வழிக்குக் கொண்டு வர முயற்சி செய்கின்றான். அப்படியும்கூட அவனால், அந்த இளையவனை வழிக்குக் கொண்டுவர முடியாமல் போகவே, அவனையும் அவனுடைய தாயையும் கொன்றுபோடுகின்றான்.

மக்கபேயர் இரண்டாம் நூலில் இடம்பெறும் இந்த நிகழ்வு, நாம் கடவுளுக்கும் திருச்சட்டத்திற்கும் உண்மையாய், நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்கவேண்டும் என்ற செய்தியை மிக அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது. நாம் இந்தத் தாயையும் அவளுடைய ஏழு மகன்களையும் போன்று இறுதிவரை ஆண்டவரோடு நிலைத்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம். பல நேரங்களில் நாம் ஒரு துன்பத்திற்கும் சவாலுக்கும்கூட ஆண்டவரை மறுத்துவாழும் நிலையில் இருக்கின்றோம். இந்நிலையில் நாம் முதல் வாசகத்தில் வருகின்ற ஒரு தாயையும் அவளுடைய ஏழு மகன்களையும் போன்று நம்பிக்கையில் உறுதியாய் இருப்பது நல்லது.

சிந்தனை

"என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது" (திபா 108:1) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் அந்தப் தாயைப் போன்று, அவளுடைய ஏழு மகன்களைப் போன்று நம்பிக்கையில் மிக உறுதியாய் இருந்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 19: 11-28

பொறுப்புள்ளவர்களாக வாழ்வோம்

நிகழ்வு

ஒருசமயம் மிகச்சிறந்த நடிகரும் நகைச்சுவையாளரும் பேச்சாளருமான ஜோ.இ.ப்ரௌன், படைவீரர்கள் நடுவில் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அவரும் வந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு, அவர்கள் நடுவில் பேசுவதற்குச் சென்றார். அவர் சென்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படைவீரர்கள் இருந்தார்கள். பொறுமையாகப் பேசத்தொடங்கிய ஜோ, நேரம் செல்லச் செல்ல அங்கிருந்த அனைவரும் மெய்ம்மறந்து கேட்கின்ற அளவுக்குப் பேசத் தொடங்கினார்.

நடுவில் ஒரு படைவீரர், "பெரும் மதிப்பிற்குரிய ஜோ அவர்களே! இவ்வளவு நேரம் மிக அற்புதமாக உரையாற்றினீர்கள்... கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்பொழுது ஒருசில கெட்ட நகைச்சுவைகளைச் (Dirty Jokes) சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்" என்றார். அவர் சொன்னதைக் கேட்டு ஜோ ஒருநிமிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் மட்டுமல்ல, அங்கிருந்த படைவீரர்கள்கூட அமைதியாக இருந்தார்கள். "இதற்கு இவர் என்ன சொல்லப்போகிறாரோ...?" என்று எல்லாரும் நினைத்துக்கொண்டிருந்த தருணத்தில், ஜோ படைவீரர்களைத் தன்னுடைய பிள்ளைகளைப் போன்று நினைத்துப் பேசத் தொடங்கினார்:

"அன்பிற்கினியவர்களே! நான் பத்து வயதிலிருந்து மேடைகளில் பேசிவருகின்றேன்; பலதரப்பட்ட குழுக்களிடமும் மக்களிடம் பேசியிருக்கின்றேன். ஆனால், ஒருநாளும் கெட்ட நகைச்சுவைகளை என்னுடைய உரையில் பயன்படுத்தியதே இல்லை. நான் பொதுமேடைகளில் பேசத் தொடங்குவதற்கு முன்னம் ஒரு முடிவெடுத்தான். நான் எடுத்த முடிவு இதுதான்: "எனக்கென்று ஒரு பொறுப்பு இருக்கின்றது. அந்தப் பொறுப்பினால் என்னைப் பெற்றெடுத்த என் தாய்க்குப் பெருமை சேர்ப்பேனே ஒழிய, எந்தச் சூழ்நிலையிலும், "இப்படிப்பட்ட ஒருபிள்ளையைப் பெற்றெடுத்திருக்கிறாளே இவள்?" என்று என்னுடைய தாய்க்கு அவப்பெயரைக் கொண்டுவரமாட்டேன்." இதனை நான் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றேன்."

ஜோ இவ்வாறு சொன்னதைக் கேட்டு அங்கிருந்த படைவீரர்கள் அனைவரும், "கெட்ட நகைச்சுவைகளைச் சொல்லுங்கள்" என்று சொன்ன படைவீரர் உட்பட, தங்களுடைய கைகளைத் தட்டி அவரை வாழ்த்தினார்கள். இதைவிடவும் இன்னொரு முக்கியமானதொரு செயலைச் செய்தார்கள். அது என்னவெனில், அவர்கள் அனைவரும் சேர்ந்து ஜோவின் தாயார்க்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதத்தில், "அம்மா! ஜோவைப் போன்று ஒரு பொறுப்புள்ள பிள்ளையை மகனைப் - பெற்றெடுத்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்" என்று அனுப்பிவைத்தார்கள். அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்து ஜோவின் அம்மா மிகவும் மகிழ்ச்சியடைத்தார்.

நம் ஒவ்வொருவர்க்கும் கடவுளால் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது, இதில் நாம் பொறுப்புள்ளவர்களாகவும் நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருக்கவேண்டும் என்ற செய்தியை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் இதே செய்தியைத்தான் நமக்கு கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

மினாக்கள் உவமையின் பின்னணி

இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருக்கின்றார். அப்பொழுதுதான் அவர் இந்த மினாக்கள் உவமையைச் சொல்கின்றார். மினாக்கள் உவமையும் தாலந்து உவமையும் (மத் 25: 14-30 ஒன்றுபோல் இருந்தாலும், அவற்றில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தாலந்து உவமையில் கொடுக்கப்படும் தாலந்துகள் வேறுபடுகின்றன; வெகுமதியோ ஒன்றுபோல் இருக்கின்றது. ஆனால் மீனாக்கள் உவமையில் கொடுக்கப்படும் மினாக்கள் ஒன்றுபோல் இருக்கின்றன; வெகுமதிதான் பத்துநகர்கள், ஐந்து நகர்கள் என்று வித்தியாசமாக இருக்கின்றன. இப்படி ஒருசில வித்தியாசங்கள் அவைகளில் உண்டு.

இயேசு சொல்லும் இந்த மினாக்கள் உவமைக்குப் பின்னால் அரசியல் காரணம் ஒன்று இருக்கின்றது. அது என்னவெனில், பெரிய ஏரோது தன்னுடைய சாவு நெருங்கி வந்ததை உணர்ந்து, யூதேயாவிலிருந்து உரோமைக்குச் சென்று, தன் மகன்களில் ஒருவனான அர்க்கெலாவைத் தனக்குப் பின் அரசனாக நியமிக்குமாறு அகுஸ்து சீசரைக் கேட்டுக்கொண்டான். ஆனால் யூதர்கள் ஐம்பது பேரைச் சீசரிடம் அனுப்பி, அவனைத் தங்களுக்கு அரசனாக நியமிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். இந்த வரலாறு நிகழ்வை இயேசு உவமையில் பயன்படுத்துகின்றார். இப்பொழுது உவமையின் வழியாக இயேசு சொல்லும் செய்தியைச் சிந்தித்துப் பார்ப்போம்.

பொறுப்போடு செயல்வோர்க்கு ஆசி; பொறுப்பின்றி செயல்படுவோர்க்குத் தண்டனை

இயேசு சொல்லும் மினாக்கள் உவமையில் இருவிதமான மனிதர்கள் வருகின்றார்கள். தங்களிடம் கொடுக்கப்பட்ட மினாக்களைப் பொறுப்போடு பயன்படுத்தியவர்கள் ஒருவிதமானவர்கள். கொடுக்கப்பட்ட மினாக்களைப் பொறுப்பின்றிப் பயன்படுத்தியவர்கள் இன்னொரு விதமானவர்கள். கொடுக்கப்பட்ட மினாக்களைப் பொறுப்போடு பயன்படுத்தியவர்களை அரசர் பத்து மற்றும் ஐந்து நகர்கட்கு அதிகாரியாக நியமிக்கின்றார். கொடுக்கப்பட்ட மினாவை பொறுப்பின்றிப் பயன்படுத்தியவனை, அவன் பயன்படுத்திய சொற்கட்கு ஏற்றவாறு தண்டிக்கின்றார்.

இயேசு சொல்லும் உவமையில் வரும் இன்னொரு வகையினர், அவரை அரசராக ஏற்க விரும்பாதோர் (லூக் 19:14). இவர்கள் யாரென்றால் இயேசுவை வெறுத்தோர், அவரை உதறித்தள்ளியோர் (யோவா 1:11, 15:25) இவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்கின்றார் இயேசு.

ஆகையால், நம் ஒவ்வொருவர்க்கும் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது... இந்தப் பொறுப்புக்கு நாம் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்தால், கடவுளின் ஆசியைப் பெறுவோம் என்ற உண்மையை உணர்ந்து, பொறுப்போடு வாழக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனை

பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்படவேண்டும்" (1 கொரி 4:2) என்பார் புனித பவுல். ஆகையால், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
லூக்கா 19: 11-28

இறைவன் கொடுத்த தாலந்தை நாம் என்ன செய்தோம்?

ஆங்கிலேய ஆட்சியில் கடைசி வைஸ்ராயாக இருந்தவர் மவுண்பேட்டன் பிரபு அவர்கள். தனது சாதூயர்த்திற்கும், புத்திக்கூர்மைக்கும் பேர்போனவர். எப்படிப்பட்ட பிரச்சனையையும் தனது புத்திக்கூர்மையால் தீர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்.

ஒருமுறை பத்திரிக்கையாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்விகேட்டார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் அவர் மிகவும் பொறுமையாக, அறிவுத்தெளிவோடு பதிலளித்தார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் எழுந்து நின்று அவரை வாழ்த்திவிட்டு கேட்டார், " உங்களுடைய இந்த வெற்றிக்குக் காரணம் என்ன?" என்று.

அதற்கு அவர், "நான் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய பெற்றோர்கள்கூட விவசாயிகள்தான். ஆனால் என்னுடைய இந்த வெற்றிக்குக் காரணமாக இருப்பது என்னுடைய கடின உழைப்புதான். உழைப்பால்தான் நான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறேன்" என்றார்.

அதைக் கேட்ட பத்திரிக்கையாளர்கள் அவரை வெகுவாக வாழ்த்திவிட்டுச் சென்றனர்.

ஒருமுறை ரஷ்ய அதிபர் லெனின் இவ்வாறு சொன்னார், "நாடு முன்னேறத் தேவையான மூன்று: உழைப்பு, கடின உழைப்பு, ஓயாத உழைப்பு இவைதான்" என்று. ஒருமனிதன் தன்னுடைய வாழ்வில் கடுமையாக உழைத்தால் மட்டுமே உயர முடியும் என்பதை இந்நிகழ்வுகள் நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மினா உவமையைக் குறித்துப் பேசுகிறார். (மத்தேயு நற்செய்தியில் இது தாலந்து உவமையாக வருகின்றது). உயிர்குடிமகன் ஒருவர் தன்னுடைய பணியாளர்களை அழைத்து அவர்களிடம் பத்து மினாக்களைக் கொடுத்துவிட்டு தொலைதூரம் செல்கிறார். சில நாட்களுக்குப் பிறகு தன்னுடைய பணியாளர்களை அழைத்து, அவர்களிடம் கணக்குக் கேட்கிறபோது ஒருவன் பத்து மினாக்களையும், இன்னொருவன் ஐந்து மினாக்களையும் ஈட்டியதாக கொண்டுவந்து தருகிறான். கடைசியில் வந்தவனோ தலைவன் தனக்குக் கொடுத்த மினாவை கைகுட்டையில் முடிந்துவைத்து அப்படியே கொடுக்கிறான். இதனால் தலைவனுடைய சினத்துக்கு ஆளாகிறான்.

இங்கே மினா தாலந்து என்பதை கடவுள் நமக்குக் கொடுத்தாக திறமைகள், வாய்ப்பு, வசதிகள் என்பதாக புரிந்துகொள்ளலாம். கடவுள் யாரையுமே திறமையற்றவராகவோ அல்லது ஜடமாகவோ படைக்கவில்லை. அதை நாம் எசா 43:4 ல் வாசிக்கின்றோம், "என் (கடவுள்) பார்வையில் நீ விலையேற்றப் பெற்றவன்; மதிப்பு மிக்கவன்" என்று. ஆம், நாம் ஒவ்வொருவரும் திறமையானவர்கள், ஆற்றல்மிக்கவர்கள்.

ஆனால் பலர் இன்று தங்களிடம் இருக்கும் திறமையை உணராமல்; தங்களுடைய மதிப்பை அறியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். "உன்னையே நீ அறிவாய்" என்பான் தத்துவஞானி சாக்ரடிஸ். நாம் நம்மிடம் என்ன திறமை இருக்கிறது, என்ன ஆற்றல் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டால் வாழ்வில் உயர்ந்த இலட்சியங்களை அடையலாம். உவமையில் வரும் முதல் இரண்டு பணியாளர்களும் தங்களிடம் இருந்த திறமையை, உழைப்பைப் பயன்படுத்தி பத்து, ஐந்து மினாக்கள் முறையே ஈட்டினார்கள். அதனால் அவர்கள் தங்களுடைய தலைவரிடமிருந்து அதற்கான வெகுமதியைப் பெற்றார்கள். நாம் நமது திறமையை, உழைப்புப் பயன்படுத்தினால் என்றும் உயர்வுதான்.

அதேவேளையில் உழைக்காமல் சோம்பித்திரிவது என்பது கடவுளின் தண்டனைக்கு உரியதாக கருதப்படுகிறது. உவமையில் வரும் கடைசிப் பணியாளர் தலைவன் தனக்குக் கொடுத்த மினாவை வைத்து மேலும் செல்வம் ஈட்டாமல் கைகுட்டையில் பொதிந்து வைத்திருக்கிறான். அதனால் தலைவனின் சினத்திற்கு உள்ளாகிறான். நாமும்கூட பலவேளையில் உழைக்காமல், ஏனோதானோ என்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். "சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவர், அது நின்றாலும் ஓடினாலும் ஒன்றுதான்" என்பார் கூப்பர் என்ற அறிஞர். ஆம், சோம்பேறி ஒன்றுக்கும் உதவாதவன். அதனால் அவன் அழிவையே சந்திப்பான்.

ஆதலால் கடவுள் நமக்குக் கொடுத்த தாலந்துகளை, திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தி வாழ்வோம். அதன்வழியாய் இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!