|
|
12 நவம்பர்
2019 |
|
|
பொதுக்காலம்
32ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் இருந்தவர்கள் அமைதியாக
இளைப்பாறுகிறார்கள்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 23 - 3: 9
கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின்
சாயலில் அவர்களை உருவாக்கினார்.
ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச்
சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர். நீதிமான்களின் ஆன்மாக்கள்
கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத்
தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் அவர்கள்
தோன்றினார்கள்.
நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள்
நம்மை விட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ
அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.
மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில்
அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சிறிதளவு அவர்கள்
கண்டித்துத் திருத்தப்பட்டபின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள்.
கடவுள் அவர்களைச் சோதித்தறிந்தபின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள்
என்று கண்டார். பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவது போல் அவர் அவர்களைப்
புடமிட்டார்; எரிபலி போல் அவர்களை ஏற்றுக் கொண்டார்.
கடவுள் அவர்களைச் சந்திக்க வரும்போது அவர்கள் ஒளிவீசுவார்கள்;
அரிதாள் நடுவே தீப்பொறி போலப் பரந்து சுடர்விடுவார்கள்; நாடுகளுக்குத்
தீர்ப்பு வழங்குவார்கள்; மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள்.
ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார். அவரை நம்புவோர்
உண்மையை அறிந்துகொள்வர்; அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு
நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து
கொண்டோர்மீது இருக்கும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 34: 1-2. 15-16. 17-18 (பல்லவி: 1a)Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்.
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ்
எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப்
பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.
பல்லவி
15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள்
அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. 16 ஆண்டவரின் முகமோ
தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே
உலகில் அற்றுப்போகச் செய்வார். பல்லவி
17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;
அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். 18
உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த
நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான்
சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு
கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்,
என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 7-10
அக்காலத்தில் ஆண்டவர் உரைத்தது: "உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ
மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம்,
`நீர் உடனே வந்து உணவருந்த அமரும்' என்று உங்களில் எவராவது
சொல்வாரா?
மாறாக, `எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை
வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப்
பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்' என்று
சொல்வார் அல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம்
பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?
அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும்
செய்தபின், `நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான்
செய்தோம்' எனச் சொல்லுங்கள்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
லூக்கா 17: 7-10
கடமையைச் செய்வோம்; கடமைக்காக எதையும் செய்யாதிருப்போம்.
நிகழ்வு
ஒருமுறை இங்கிலாந்து நாட்டில் போக்குவரத்து அதிகமாக இருந்த ஒரு
சாலையோரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமயச் சொற்பொழிவுக்
கூட்டத்தில், குருவானவர் ஒருவர் நின்றுகொண்டு சமய உரையை ஆற்றிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது அந்த வழியாகத் தன்னுடைய நான்கு சக்கர வண்டியில் வேகமாக
வந்த முரடன் ஒருவன் வண்டியை நிறுத்துவிட்டு குருவானவரை நோக்கி,
"நீர் செய்யும் இந்தப் பணிக்குக் கடவுள் உமக்கு எந்தவொரு
கைம்மாறும் தரமாட்டார்" என்று கத்தினான். அதற்குக் குருவானவர்
அவனிடம், "கைம்மாறு கருதி நான் இந்தப் பணியைச்
செய்துகொண்டிருக்கவில்லை; ஆண்டவர் இயேசுவைப் பற்றி மக்கட்கு அறிவிப்பது
என்னுடைய கடமை. அந்தக் கடமையை நான் செய்துகொண்டிருக்கின்றேன்.
கைம்மாறு தருவதும் தராததும் அவருடைய கையில் இருக்கின்றது" என்றார்.
இதைக் கேட்டுவிட்டு அந்த முரடன் வந்த வழியில் திரும்பிச்
சென்றுவிட்டான்.
ஆம், நாம் ஒவ்வொருவரும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும்
பொறுப்பினை எந்தவொரு கைம்மாறையும் எதிர்பாராமல், கடமையுணர்வோடு
செய்யவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு
நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியிலும் ஆண்டவர் இயேசு
கைம்மாறு கருதாமல், நம்முடைய கடமையை ஆற்றவேண்டும் என்ற
செய்தியை எடுத்துச் சொல்கின்றார். அதுகுறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
கைம்மாறு கருதியே எதையும் செய்யும் உலகம்
நாம் வாழும் இந்த உலகில், மக்கள் எதைச் செய்தாலும் அதில் பலன்
இருக்கின்றதா? இலாபம் கிடைக்குமா? கைம்மாறு கிடைக்குமா? என்ற
எதிர்பார்ப்போடு செய்வதைக் காணமுடிகின்றது. நடைமுறை
வாழ்க்கையில் இப்படி எதிர்பார்ப்போடு அல்லது கைம்மாறு கருதி ஒன்றைச்
செய்கின்ற எண்ணம் இருந்தாலும், ஆன்மீக வாழ்க்கையில் அதிலும்
குறிப்பாக நற்செய்திப் பணியில் இத்தகைய எண்ணம் இருக்கக்கூடாது
என்பதை இயேசு மிகவும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார். அதற்காக
அவர் கூறுகின்ற உவமைதான் பயனற்ற பணியாளர் உவமையாகும்.
இயேசு சொல்லும் இவ்வுமையில் வருகின்ற பணியாளர் வயலை உழுபவராகவும்
மந்தையை மேய்ப்பவராகவும் இருக்கின்றார். இரண்டு பணிகளுமே நற்செய்திப்
பணியோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. எப்படியென்றால், உழவர்
எவ்வாறு நிலத்தை உழுது விதையை விதைக்கின்றாரோ அவ்வாறு நற்செய்திப்
பணியைச் செய்கின்றவர் மனிதர்களுடைய உள்ளம் என்னும் நிலத்தை உழுது,
இறைவார்த்தை என்னும் விதையை அவர்களுடைய உள்ளத்தில்
விதைக்கின்றார்; மந்தையை மேய்கின்றவர் எவ்வாறு தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட
ஆடு மாடுகளை நல்லமுறையில் மேய்கின்றாரோ, அவ்வாறு நற்செய்திப்
பணியாளரும் இறைமக்கள் சமூகம் என்ற மந்தையை நல்லமுறையில் பராமரிக்கின்றார்.
அப்படியானால், இயேசு சொல்லும் இந்தப் பயனற்றப் பணியாளர் உவமையில்
வருகின்ற பணியாளர் வேறு யாருமல்ல, இயேசுவின் பணியைச் செய்யக்கூடியவர்தான்
என்று உறுதியாகச் சொல்லலாம்.
மேலும் உவமையில் வருகின்ற பணியாளர் வயலை உழுததற்காகவும் மந்தையை
மேய்த்ததற்காகவும் தலைவர் அவரைப் பாராட்டவில்லை. மாறாக, அவர்க்கு
மேலும் பணிகளைத் தருகின்றார். இதன்மூலம் இயேசு தன்னுடைய சீடர்கட்குச்
சொல்லும் மிக முக்கியமான செய்தி: பலனையோ, பாராட்டையோ,
கைம்மாறையோ எதிர்பாராமல் செய்யாமல், கடமையுணர்வோடு பணிவிடை
செய்யவேண்டும் என்பதாகும்.
உள்ளார்ந்த அன்போடு பணிவிடை செய்யவேண்டும்
இயேசு சொல்லும் இந்தப் பயனற்ற பணியாளர் உவமை நமக்கு உணர்த்தும்
இன்னொரு முக்கியமான செய்தி, இயேசுவின் சீடர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட
பணிகளை கடமைக்காக அல்ல, உள்ளார்ந்த அன்போடு செய்யவேண்டும்" என்பதாகும்.
இன்றைக்குப் பலர் தங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை ஏதோ கடமைக்காக
செய்வதைக் காணமுடிகின்றது. சீடத்துவ வாழ்வில் இத்தகைய
கடமைக்காகப் பணிசெய்கின்ற எண்ணம்" முற்றிலுமாகத் தவிக்கப்படவேண்டும்.
புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு
கூறுவார்: "கிறிஸ்துவின் பணியாளாராய்க் கடவுளின் திருவுளத்தை
உளமார நிறைவேற்றுங்கள்." (எபே 6:6) ஆம், இயேசுவின் சீடராக இருக்கின்ற
ஒவ்வொருவரும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை அது நற்செய்திப்
பணியாக இருக்கலாம்; ஆற்றுப்படுத்தும் பணியாக இருக்கலாம். வேறு
எந்தப் பணியாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தப் பணியை அவர்
கடமைக்காக அல்லாமல், உளமார நிறைவேற்றவேண்டும். அப்பொழுது அவர்
இயேசுவின் சீடராக இருக்கமுடியும். இதை இயேசு, என்னை அன்புசெய்பவர்
என்னுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பார்" (யோவா 14:15) என்ற
வார்த்தைகளில் இன்னும் அழகாகக் கூறுவார்.
ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும், நம்மிடம்
ஒப்படைக்கப்பட்ட பணிகளை கைம்மாறு கருதாமல், கடமைக்காகச் செய்யாமல்
உள்ளார்ந்த அன்போடு செய்ய முயற்சி செய்வோம்.
சிந்தனை
கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே" என்பது மிகப் பிரபலமான ஒரு
பொன்மொழி. நாம் இவ்வாக்கிற்கு ஏற்ப, பலனை எதிர்பாராமல், நம்முடைய
கடமையைச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
முதல் வாசகம்
அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் இருந்தவர்கள் அமைதியாக
இளைப்பாறுகிறார்கள்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 23 - 3: 9
"நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன"
நிகழ்வு
ஒரு சிற்றூரில் பெரியவர் ஒருவர் இருந்தார்; அவர் மக்களால்
பெரிதும் மதிக்கப்பட்டார். ஒருநாள் அவருடைய மனைவி திடீரென இறந்துபோனார்.
அவருடைய மனைவி இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு, அந்தப் பெரியவருக்கு
ஆறுதல் சொல்வதற்காக அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அவருடைய
வீட்டிற்கு வந்தார்.
அவர் அங்கு வந்தநேரம் பெரியவர் தன்னுடைய மனைவி இறந்த துக்கம்
சிறிதுகூட இல்லாமல், வீட்டுக்கு முன்னால் இருந்த தகரப்பெட்டியில்
தாளம் போட்டுப் பாடிக்கொண்டிருந்தார். அதைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்ட
பெரியவரின் நண்பர் அவரருகே சென்று, "என்ன மனுசன் நீ...? உம்முடைய
மனைவி இறந்து கிடக்கின்றார்... அந்த வருத்தம் கொஞ்சம்கூட இல்லாமல்,
நீ இப்படித் தாளம் போட்டுக்கொண்டிருக்கின்றாயே...!" என்று சத்தம்
போட்டார்.
சிறிதுநேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த பெரியவர் தன்னுடைய
நண்பரிடம், "என்னுடைய மனைவி இறந்தவுடன் எல்லாரையும் போல நானும்
அழுதுகொண்டுதான் இருந்தேன். அதன்பிறகுதான், பிறந்த ஒருவர் இறப்பதுதான்
முறை. என்னுடைய மனைவி பிறந்தார். இன்று இறந்துவிட்டார்... எனக்கு
நம்பிக்கை இருக்கின்றது, நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்து இறந்த இவர்
இப்பொழுது ஆண்டவரோடு இருப்பார் என்று.. பின்னொரு நாளில் நானும்
இறப்பேன்... நானும் என்னுடைய மனைவியைப் போன்று ஆண்டவரோடு இருப்பேன்.
அப்படியிருக்கையில் நான் எதற்கு அழுது ஒப்பாரி வைக்கவேண்டும்...?"
என்றார். இதைக் கேட்ட அந்தப் பெரியவரின் நண்பர் எதுவும் பேசாமல்
அமைதியானார்.
மனித வாழ்வு சாவோடு முடிந்துவிடக்கூடிய ஒன்று அல்ல; சாவுக்குப்
பின்னும் வாழ்வு இருக்கின்றது; நீதிமான்களாக இறந்தவர்களுடைய ஆன்மாக்கள்
ஆண்டவரோடு அவருடைய கையில் - உள்ளன என்ற செய்தியை இந்த நிகழ்வானது
நமக்கு எடுத்துரைக்கின்றது. இன்றைய முதல் வாசகமும் நமக்கு இதே
செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
அழியாமைக்கென்று படைக்கப்பட்ட மனிதர்கள்
சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம்,
ஆண்டவர்மீது நம்பிக்கை வாழ்வோர் பெறும் நிலைவாழ்வைக் குறித்து
பேசுகின்றது. அவர்கள் எப்படி நிலைவாழ்வை பெறுவர் என்பது
குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவராகிய கடவுள் மனிதர்களைப் படைத்தபோது, தம் உருவிலும்
சாயலிலும் படைத்தார் (தொநூ 1:26) இன்னும் சொல்லப்போனால்,
ஆண்டவர் அவர்களை அழியாமைக்கென்றே படைத்தார். ஆனால், ஆதாமும்
ஏவாவும் கடவுள் கொடுத்த கட்டளையை மீறி, விலக்கப்பட்ட மரத்தின்
கனியை உண்டு பாவம் செய்தனர் (திவெ 12: 9, 20:2). இதனால்
பாவத்திற்குத் தலைவனாகிய சாத்தனுக்கு (யோவா 8: 44) அவர்கள்
அடிமையானார்கள்.
கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதால் கிடைக்கும் அழியாமை
எங்கிருக்கின்றது? சாத்தானுக்கு கீழ்ப்படிந்து நடப்பதால்
கிடைக்கின்றன தண்டனை எங்கிருக்கின்றது என்பதை நாம்
சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
நீதிமான்கள் அமைதியாக இளைப்பாறுவார்கள்
உலகைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாவர்
என்று சொல்லும் சாலமோனின் ஞான நூல் ஆசிரியர், நீதிமான்களின்
ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன என்று கூறுகின்றார்.
இவ்வார்த்தைகள் நம்முடைய சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன.
கிமு முதலாம் நூற்றாண்டில் சாலமோனின் ஞான நூலை எழுதிய
ஆசிரியர், திருப்பாடலில் சொல்லப்பட்ட கருத்துகளை நன்கு
அறிந்திருக்கவேண்டும். அதனால்தான் அவர் "என் இதயம்
அக்களிக்கின்றது; ஏனெனில் என்னைப் பாதாளத்திடம்
ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர்"
(திபா 16: 9-10) என்று திருப்பாடல் ஆசிரியர் கூறிய கருத்துகளை
உள்வாங்கியவராய், நீதிமான்கள் உலகினரின் பார்வைக்கு
இறந்தவர்கள் போன்று தோன்றலாம். உண்மையில் அவர்கள் அமைதியாக
இளைப்பாறுவார்கள் என்று கூறுகின்றார்.
நீதிமான்கள் ஆன்மாக்கள் ஆண்டவரின் கையில் இருக்கவும் அவர்கள்
அமைதியில் இளைப்பாறவும் முக்கியமான காரணம், அவர்கள்
ஆண்டவர்மீது நம்பிக்கைகொண்டு வாழ்ந்துவந்ததால்தான் என்று
உறுதியாகச் சொல்லலாம். ஏனென்றால், இன்றைய வாசகத்தின்
இறுதியில், அவரது அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு
நிலைத்திருப்பர் என்று வாசிக்கின்றோம். அப்படியானால், நாம்
ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு, நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து
வந்தால், அவர் தரும் அன்பில் நிலைத்திருப்போம் என்பது உறுதி.
ஆகையால், ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வாழ்ந்து, அவர் தரும்
எல்லா ஆசியையும் பெற்று மகிழ்வோம்.
சிந்தனை
மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு
பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்" (யோவா 6: 40)
என்பார் இயேசு. ஆகையால், நாம் ஆண்டவரிடமும் அவர் மகன்
இயேசுவிடமும் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|