திருக்காட்சி பெருவிழா ஆசி பெற வந்திருக்கின்ற அன்புள்ளங்களே!
துள்ளி எழுந்து வெள்ளியைப் பின் தொடர்வோம்!.....
தலைமகன் யேசு பிறந்ததை தலைக்கு மேல் முளைத்து வழிகாட்டிய விண்மீன்
இன்றைய திருப்பலிக்கு நம்மை வரவேற்கிறது!
வெள்ளி முளைத்த காலத்தில் நாம் வாழ்ந்திருந்தால் துள்ளி எழுந்து ஆர்வமாக
அதனைத் தொடர்ந்திருப்போமா?..அல்லது . தொல்லை என நினைத்து வித விதமான
பணிகளில் மூழ்கியிருப்போமா? சிந்திப்போம்.
கலைகளை அறிந்த ஞானியர் அதைப் பின்பற்றிடத் தொலைவு கருதாமல், பயணத்தின்
துன்பம் நினையாமல், விலையென்ன கொடுத்தும் வேந்தனைக் காணவந்தனர்.
நிலைகொள்ளாத மகிழ்ச்சியுடன் நெடுநேரம் பணிந்தனர்.
விண்மீனைப் பின்பற்ற நல்ல விலைகொடுக்க வேண்டும்.
வீட்டினை வசதிகளை உறவுகளை விட்டுத்தர வேண்டும்.
காட்டின் இருட்டுக்குள் கைவிளக்கின்றி நுழையவேண்டும்.
நட்டதை வளர்த்ததை நண்பர்களை விட்டுவிட வேண்டும்.
சுட்டெரிக்கும் பாலைகளை சுழன்று வீசும் புயல்காற்றை விட்டுவிடு எனத்
தூண்டும் மனத்தை வேர்விடும் அச்சங்களை கெட்டுவிட்டதா உன் அறிவு?
எனக் கேட்கும் மக்களை பட்டும் படாமல் ஒதுக்கிப் பயணத்தைத் தொடரவேண்டும்.
ஆபரகாம் இறைவனின் குரலை உணர்ந்ததுபோல
யாரோ ஒருவர் என்னை எங்கோ அழைக்கிறார்
என்பதை இதயத்தில் நாம் உணர்ந்திட வேண்டும்.
புதிய அடிவானம் புதிய வாழ்வு நோக்கிய பயணம்.
எதுவும் என்னை நிறுத்தாது. எல்லையை அடைய எதுவும் தருவேன். இதோ புறப்புட்டுவிட்டேன்
என்போம்.
நம் வாழ்விலே நாமும் விண்மீனை நோக்கிட
ஆர்வமும் அக்கறையும் கொள்வோம்.
பளிச்சிட்டு நம்மை ஈர்க்கும் வெளிச்சங்களைப் பார்ப்போம்.
தெளிவான வெள்ளியைப் பார்த்த
திசையில் ஞானியராய் நடப்போம்.
பல நூறாக வரும் இடையூறுகளைப் புறந்தள்ளுவோம்.
பச்சிளங் கடவுளைக் கண்டு உச்சிமோந்திடுவோம்
பாரினிலே அவர் மெச்சுகின்ற வழியிலே வாழ்ந்திடுவோம். விண்மீன்
காட்டும் பாதையை திருப்பலியில் கண்டு கொள்வோம். பயணத்தின் பலனை
முழுமையாக அனுபவிக்க திருப்பலியில் அருள்கேட்போம்..!!!!
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. விண்மீன் வழியாக ஞானிகளுக்கு
தன்னை வெளிப்படுத்திய இறைவா!
தந்தையின் திருவுளத்தின்படி நீர் வழிகாட்டியது போல
திருச்சபையின் தலைவர்கள் ஒவ்வொருவரும் உம் திருவுளப்படி
திருச்சபையை வழிநடத்தக் கூடிய மனநிலை தர வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. வழிகாட்டும் விண்மீனே எம் இறைவா!
நாட்டுத் தலைவர்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையின் இருளை
நீக்கிநல வாழ்வில் ஒளிரச் செய்யும் விண்மீனாய் விளங்க
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. ஞானிகள் உம்மைத் தேடிக் கண்டு பணிந்து வணங்கச்
செய்த பாலனே!
நாங்களும் உம்மைத் தேடி கண்டு கொள்ள திருப்பலியின்
வழியாக வழிகாட்டும் எங்கள் பங்குத்தந்தை விண்மீனாய்
வலம் வர சுகம் தர வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
4. ஞானியர் விண்மீனை வழிகாட்டியாகக் கண்டிடத் தூண்டிய
தெய்வமே!
எமது அன்றாட வாழ்க்கையை வளமாக்க வழிகாட்டும்
விண்மீனைக் கண்டு பின் தொடர்ந்து அதன் பலனை முழுமையாய்
அனுபவிக்க அருள் தரவேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
5. வழித்துணையாய் விண்மீனை அனுப்பிய இறைவா!
வாழ்க்கைப் பயணத்தில் வழிதெரியாது தவிப்போர்க்கு என்ன
படிக்கலாம்? எந்த வேலையை தேர்ந்தெடுக்கலாம்? எந்த
வாழ்க்கையை அமைக்கலாம்? என்ன முடிவு எடுக்கலாம்? என
குழப்பத்தில் இருப்போர் அனைவரின் வாழ்க்கையில்
விடிவெள்ளி முளைத்து வழிகாட்ட வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்!
மறையுரை சிந்தனைகள்
நாமும் ஞானிகளாவோமா?
பேராசிரியர் ஒருவர் உலகிலுள்ள மக்களை அறிவுள்ளவர் அறிவில்லாதவர்
என்று இரு வகையாகப் பிரிக்கலாம். அறிவுள்ளவர்களைப் பண்டிதர்கள்,
ஞானிகள் என்று மேலும் இருவகையாகப் பிரிக்கலாம். பண்டிதர்கள்
எனப்படுபவர்கள் சட்டப்படிப்பு புத்தகப்படிப்பு படித்தவர்கள் ஆவார்கள்.
ஆனால் ஞானிகள் எனப்படுபவர்கள் கண்டு கேட்டு தொட்டு நுகர்ந்து
அனுபவ ரீதியாக உண்மையை அறிந்தவர்கள். என இப்படிக்
குறிப்பிடுவார்.
ஆம் நாம் எல்லோரும் பண்டிதர்கள் ஆகாவிட்டாலும் எல்லோருமே ஞானிகள்
ஆகலாம்.
பென்ஹர் என்ற ஒரு திரைப்படத்தின் கதாநாயகனான பென்ஹர்
குதிரைச் சவாரியில் இவருக்கு ஒத்தவரோ இவரை மிஞ்சியவரோ எவரும்
இருக்கவில்லை. இவருடைய தாயார் குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்டதாக
இவருக்குத் தெரிய வந்தது. பாவிகளுக்கும் ஏழை எளியவர்க்கும்
பிணியாளருக்கும் காட்சி அளிக்கின்ற தொழுநோயாளரைக் குணப்படுத்துகின்ற
முடவரை நடக்கச் செய்கின்ற இயேசுவைப்பற்றி இவர் கேள்விப்பட்டிருந்தார்.
தன் தாயாரைச் சுகப்படுத்துவதற்காக உடனடியாக அவரை எருசலேமுக்கு
அழைத்துச் சென்றார். பிலாத்தின் அரண்மனையை அடைந்ததும் மக்களின்
ஆரவாரத்தைக்கேட்டார். இயேசுவைக் கொல்வதற்காகவே இவர்கள் இப்படி
ஆரவாரம் செய்கின்றனர் என்று இவர் அறிந்து கொண்டார். இயேசு மரிப்பதற்கு
முன்பே கல்வாரிமலையை அடைய அவர் முயற்சி செய்தார். கல்வாரிமலை
ஏறுவதற்கு முன் அவருடைய தாய் மூர்ச்சை அடைந்து தாகத்திற்கு தண்ணீர்
கேட்டாள். நினைவிழந்து தண்ணீர் கேட்ட தாயிக்கு அருகிலிருந்த அருவிக்கு
ஓடிச் சென்று கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து குடிக்கக்
கொடுத்தார். தண்ணீரைக் குடித்த தாயார் அற்புதமாக உடனடியாக பூரண
சுகமடைந்தாள். அருவித்தண்ணீரில் இயேசுவின் இரத்தம் கலந்து இருந்ததே
இப்பூரண சுகத்திற்குக் காரணமாகும்.
கஷ்ட துன்பங்களும், வேதனை சோதனைகளும் நேரிடும்போதுதான் நாம் நம்
இயேசுவைக் கண்டு பிடிக்கின்றோம். கீழ்த்திசையிலிருந்து இயேசுவைக்
காண வந்த ஞானிகள் உயிருக்கே ஆபத்து வரக்கூடிய பயணத்தை கஸ்தி
வியாகுலங்கள் நிறைந்த பயணத்தை மேற்கொண்டதால் தான் இயேசுவைக்
காண முடிந்தது.
வாழும் நாட்களில் நாமும் குடும்பத்தில் வேதனை, சோதனை என துன்பங்களுக்குள்
சிக்கித் தவித்தாலும் பெற்றோரை பேணிப் பாதுகாக்கும் போது,
முதிர் வயதில் அவர்களை உதாசீனப்படுத்தாது, அவர்களது இயலாமையில்
நம் குழந்தைகளைப் போல அவர்களது தேவைகளை நிறைவேற்றும் போதும்
கிறிஸ்மஸ் திருப்பலிக்கு வர இயலாவிட்டாலும் நடமாட முடியாத அவர்களுக்கு
புத்தாடை அணிவித்து பரிசையும் பாசத்தையும் பரிமாறி அவர்களின்
ஆசீரைப் பெறும் போதும் நாமும் ஞானிகளாவோம்.
வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா
வைத்திருப்பதைக் கண்டார்கள். குழந்தையை வணங்கினார்கள்.
ஞானி என்பவர் யார்? ஹென்றி வால்டிக் என்பவர் மற்றொரு ஞானி என்ற
தனது நூலில் உண்மையான ஞானி யார் என்பதை விளக்குகின்றார்.
ஹார்த்தபான் என்பது இயேசுவைக் காண வந்த நான்காவது ஞானியின் பெயர்.
இவர் குழந்தை இயேசுவிற்கு அன்பளிப்பு கொடுப்பதற்காகத் தன் உடைமையை
எல்லாம் விற்று மூன்று விலையேறப் பெற்ற இரத்தினக் கற்களை
வாங்கிக் கொண்டார். இயேசுவைக் காணப் போகும் பாதி வழியில்
பிணியாளியான ஒரு கிழவிக்கு உதவி செய்ய ஹார்த்தபான் நிற்க
வேண்டி வந்தது. மற்ற மூன்று ஞானிகளும் இயேசுவைத் தேடிச் சென்று
விட்டனர். எனவே ஹார்த்தபான் இயேசுவைக் காண மூன்று பேருடன்
செல்ல இயலாமற் போயிற்று. அது மட்டுமல்ல வயது முதிர்ந்த
பிணியாளியுடைய மருத்துவ செலவிற்காக தன்னுடைய இரத்தினங்களில் ஒன்றை
விற்கவும் வேண்டியதாயிற்று. பின்னர் முப்பத்தி மூன்று ஆண்டுகள்
ஹார்த்தபான் பலநாடுகளிலும் இயேசுவைக் காண தேடி அலைந்தும் அவரால்
இயேசுவைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இதற்கிடையில் இரண்டாவது இரத்தினக்கல்லும்
செலவாகிகிட்டது. இயேசுவைச் சிலுவையில் அறைந்த பெரிய வெள்ளிக்கிழமை
அன்று ஹார்த்தபான் எருசலேம் அடைந்தார். அதிவிரைவாக நடந்து கல்வாரி
மலையை அடைந்தார். அப்பொழுது மாசிடோனியா பட்டாளக்காரன் ஒருவன்
ஓர் இளம் மங்கையை வலுவந்தமாகப் பிடித்து இழுத்துக் கொண்டு போவதைப்
பார்த்தார். அவளை அவர்களிடமிருந்து விடுவிப்பதற்காக மூன்றாவது
இரத்தினக்கல்லையும் விற்றார். அதற்குள்ளாக இயேசு சிலுவையில் உயிர்
நீத்தார். அப்பொழுது உண்டான நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த
கட்டிடத்தின் அடியில் ஹார்த்தபான் சிக்கிக்கொண்டார். தான்
யாரைத்தேடி கண்டடைய வேண்டுமென்று வாழ்ந்தாரோ அவரை ஒரு வினாடி
கூடப்பார்க்க இயலாமல் அவருக்குக்கொண்டு வந்த காணிக்கையைக்
கொடுக்க இயலாமல் மரண வேதனையில் கிடந்த ஹார்த்தபான் பின்வரும்
அசரீரி வாக்கைக்கேட்டார். ஹார்த்தபான்! நீ என்னைப் பார்த்து
விட்டாய். நீ எனக்கென்று காணிக்கையாக கொண்டு வந்த மூன்று இரத்தினக்கற்களையும்
நீ எனக்கே கொடுத்திருக்கிறாய். சின்னஞ்சிறு சகோதரர்கள் ஒருவருக்குச்
செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள். இந்த ஹார்த்தபான் தான்
உண்மையான ஞானி. இது வரலாற்றில் நாம் வாசிக்கும் உண்மை ஞானி.
ஆம் சின்னஞ் சிறு சகோதரர்களுக்கு துன்பத்தோடு போராடிக்
கொண்டிருப்பவர்களுக்கு நம்மிடம் இருப்பதை கொடுக்கும்
போதெல்லாம் நாமும் ஞானிகளாகிறோம். சமீபத்தில் வேளாங்கண்ணிக்கு
பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் ஓய்வுக்காய் வழியில்
மாதா கோவில் முற்றத்தில் தங்கினார்கள். அப்போது அருகில் இருந்த
சிறுவர் காப்பகத்தில் உள்ள ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளைக் காண
நேர்ந்தது. அந்த சிறுவர் காப்பகத்தைத்தை பராமரிக்கும் அருட்சகோதரியை
தங்கள் இரவு உணவை ஆசீர்வதித்து செபிக்க அழைத்தார்கள். செபம்
முடிந்தவுடன் திருப்பயணிகளில் ஓருவர் அன்னையின் ஆலயத்திற்கு
காணிக்கையாக சேர்த்து வைத்திருந்ந சில்லறை நாணயப் பொட்டலத்தை
எடுத்து அருட்சகோதரியிடம் ஆதரவற்ற சிறுவர்களுக்கு தாய் தந்தை
இல்லாத இந்த சிறுவர்களுக்கு பயன்படுத்துங்கள் என்று
கொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத அந்த அருட்சகோதரி மிகுந்த
நெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவிக்க எழுந்த போது
நூற்றுக்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் மிகுந்த ஏழ்மை
நிலையில் இருந்த போதும் தங்களிடம் இருந்த சொற்ப தொகையை மிகுந்த
மகிழ்ச்சியுடன் அந்த ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக கொடுத்து முகம்
மலர்ந்தனர். சிறுவர்கள் சிலர் அந்தப் பயணத்தில் இடம்
பெற்றிருந்தனர். வழியில் தங்கள் பயன்பாட்டிற்காக வாங்கிய பேனா,
பென்சில் போன்ற பொருட்களை சிறுவர்களுக்கு கொடுக்கச் சொல்லி
கொண்டுவந்து கொடுத்தனர். ஏதோ ஒரு திசையில் வாழும் இவர்கள் தாங்கள்
தங்கிய திசையில் சந்தித்த ஆதரவற்ற சிறுவர்களுக்கு கொடுத்த பரிசுகள்
பொன், மீறை, தூபம் போல விலையேறப்பட்ட ஒன்றல்லவா! இவர்கள்
திருப்பயணிகள் மட்டுமல்ல கீழ்திசை ஞானிகளாக எங்கள் குழந்தைகளின்
கண்களுக்குத் தென்படுகிறார்கள் என்று தமது நன்றி உரையில் அந்த
அருட்சகோதரி குறிப்பிட்டார்.
ஆம் ஏதோ ஒரு திசையில் வாழும் இவர்கள் நாம் வாழும் நாளில் நம்மோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை ஞானிகள்;. இப்படியான சின்னசெயலை
செய்து கீழ்திசை ஞானிகள் போல யேசுவுக்கு அன்பளிப்பு அளிக்கும்
ஞானிகளாக பேசப்படும் வாய்ப்பை நமக்கு நாமே உருவாக்கிக்
கொள்வோம்.
The man from la mancha
ஆங்கிலத் திரைப்படம்.
அதன் கதைத்தலைவன் டான்குயிக்சோட்.
முடிவே இல்லாத ஆனால் தன்னை
முற்றிலும் ஈர்க்கின்ற பயணம் ஒன்றிலே முனைந்திருக்கிறான்.
முழுமையான அவனது பாடல். காணவே முடியாத கனவு.
விண்மீனைப் பின்சென்று தொடவேண்டும்!
என் தேடுதல் பயணம் என்பது இதுதான்!
எத்துணை தொலைவு என்பது என் கவலையில்லை. இது நடக்குமா? என்ற
கேள்வி என்னில் இல்லை.
நான் புறப்பட்டுவிட்டேன் -
நடக்கவே முடியாத கனவினை நடத்திவைக்க!
நொறுக்கவே முடியாத பகைவனை நொறுக்கிவிட.
நேராக்கவே முடியாத தவறுகளை நேராக்கிவிட
நேர்மையானதை நிலைநாட்ட நரகத்திற்கும் சென்றிட!
தொலைக்கவே முடியாத துன்பத்தைத் தொலைத்துவிட.
தொடவே முடியாத விண்மீனைத் தொட்டுவிட.
துணிந்தவரும் துணியாத தூரத்தைக் கடந்துவிட.
காணவே முடிந்திராத காதலியை அன்புசெய்ய.
கடுகளவும் நிறுத்தாமல் நீதிக்காகப் போராட.
பெருமைமிகு இந்தப் பயணத்தைப் பொருத்தவரை
பொறுமையும் உண்மையும் உள்ளவனாக நான் இருப்பின்
இறக்கும்போது எனக்கு மனநிறைவு கிடைக்கும்.
ஏராளமான தழும்புகளுடன் ஏளனங்களைத் தாங்கிக்கொண்டு
போர்க்குணம் மிக்க ஒருவன் எட்டாத விண்மீனைத் தொட்டிடப்
போராடினான். துணிச்சலின் கடைசித் துளிவரை! என்பதால்
ஓரடியாவது உலகம் முன்னேறிவிடாதா என்ன?
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி.
ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா
எசாயா 60:16
எபேசியர் 3:23 அ, 56
மத்தேயு 2:112
அவரது விண்மீன்!
கடைசியா எப்போ நட்சத்திரம் பார்த்தீங்க? தன் வீட்டுக்கு
வெளியே கட்டிலில் படுத்துக்கொண்டு அண்ணாந்து பார்க்கும்
திருப்பாடல் ஆசிரியர், "உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும்
அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான்
நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள்
யார்?" (திபா 8:3) என்று வியந்து பாடுகின்றார். எபிரேயத்தில்
"கோகாவ்," கிரேக்கத்தில் "அஸ்டேர்" என அழைக்கப்படும்
விண்மீன் அல்லது நட்சத்திரம் விவிலியத்தில் பல இடங்களில்
வருகிறது. பண்டைக்காலத்தில் வானுடல்கள் (கதிரவன், நிலா, நட்சத்திரங்கள்)
கடவுளர்களாக வணங்கப்பட்டன. பகலில் ஒளி கொடுக்கின்ற கதிரவன்
மண்ணுலகில் வாழும் தாவரங்களுக்கு உயிர் கொடுக்கிறது. இரவில்
வலம் வரும் நிலா பயணத்திற்கும் ஓய்வுக்கும் வெளிச்சம் தருகிறது.
ஆனால், விண்மீன்களே அன்று முதல் இன்று வரை மனிதர்களுக்குப்
பெரிய ஈர்ப்பாக இருக்கின்றன. இவற்றைச் சுற்றி நிறைய புனைகதைகளும்
மரபுக் கதைகளும் உள்ளன. மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு
மின்விளக்குகள் வந்தவுடன் வான் பார்க்கும் பழக்கம் வெகுவாகவே
குறைந்துவிட்டது. சிறிய வயதில் நிலாவுடன் ஓடிய பொழுதுகள்,
நம் அன்புக்குரியவரின் முதலெழுத்தை நட்சத்திரக் கூட்டங்களில்
தேடிய பொழுதுகள் மறக்க முடியாதவை.
எகிப்தியர்கள், அசீரியர்கள், மற்றும் பாபிலோனியர்கள் வானவியலை
மிகவே வளர்த்தனர். நட்சத்திரங்களின் நகர்வை அறிவதற்கான
நுணுக்கத்தைக் கற்றிருந்தனர். விண்மீன்களை வழிபடவும் செய்தனர்.
இறந்த நம் முன்னோர்கள் வானத்தைக் கிழித்துக்கொண்டு மறு உலகிற்குச்
சென்றனர். மறுவுலகின் ஒளி இந்த உலகத்திற்கு வருகின்ற துவாரமே
நட்சத்திரம் என்கின்றனர் செல்டிக் நாகரீக மக்கள். விவிலியம்
வான்கோள்கள் வழிபாட்டை எதிர்க்கிறது. இஸ்ரயேல் மக்கள் தங்கள்
சமகாலத்தில் வழிபடப்பட்ட வான்கோள்கள் மேல் அதிகம் நாட்டம்
கொண்டிருந்தனர். இதைத் தடுக்கவே, ஆண்டவராகிய கடவுளால் படைக்கப்பட்டவையே
வான்கோள்கள் என்றும், அனைத்துக் கடவுளர்களும் தங்கள் கடவுளுக்குக்
கட்டப்பட்டவர்கள் என்றும் படைப்புக் கதையாடலை உருவாக்குகின்றனர்.
ஏன் இவ்வளவு நீளமான முன்னுரை? "விண்மீன்" - இதுதான் இன்றைய
திருநாளின் மையமாக இருக்கிறது. "விண்மீன் வழிநடத்த, உம்
திருமகனை இன்று பிற இனத்தாருக்கு வெளிப்படுத்திய நீர்" என்று
இன்றைய நாளின் சபை மன்றாட்டு தொடங்குகிறது. "அவரது
விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்தோம்" என்று தங்களின்
தொடக்கத்தையும் இலக்கையும், "கண்டோம், வந்தோம்" என்னும் இரு
சொற்களில் பதிவு செய்கின்றனர் கீழ்த்திசை ஞானியர்.
"விண்மீன்" அவர்களுக்கு முன்னே செல்கின்றது. "விண்மீன்"
அவர்களுக்கு மகிழ்ச்சி தருகின்றது.
ஞானியருக்கு வழிகாட்டிய விண்மீனைப் புரிந்துகொள்வதற்குப்
பின்புலமாக முதல் ஏற்பாட்டில் உள்ள மூன்று விண்மீன் பாடங்களைப்
புரிந்துகொள்வோம்: (அ) ஆபிரகாமின் விண்மீன், (ஆ)
யோசேப்பின் விண்மீன், மற்றும் (இ) பிலயாமின் விண்மீன்.
(அ) ஆபிரகாமின் விண்மீன் (தொநூ 15:5). நிகழ்வின்படி ஆபிராம்
(ஆபிரகாம்) தன் சொந்த ஊரை விட்டு வெளியேறி ஆண்டவர் கட்டளையிட்டபடி
கானானில் குடியேறுகின்றார். "உனக்கு ஒரு மகன் பிறப்பான்"
என்னும் வாக்குறுதியை நிறைவேற்ற ஆண்டவர் காலம் தாழ்த்துவதாக
எண்ணி, தானே தன் அடிமை எலியேசரை உரிமை மகனாக எடுத்துக்கொள்ளலாம்
எனத் திட்டம் தீட்டுகின்றார். அந்த நேரத்தில் ஆண்டவர் ஆபிராமுக்குக்
காட்சி தருகின்றார். கூடாரத்திலிருந்து ஆபிராமை வெளியே அழைத்து
வருகின்ற கடவுள், "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால்,
விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும்
இருப்பர்" என்று மொழிகின்றார். "ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை
கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்"
(15:6) எனப் பதிவு செய்கின்றார் ஆசிரியர். இந்த நிகழ்வு
பகலில் நடந்ததாகவும், பகலிலும் ஆபிராம் விண்மீனைக் கண்டது
நம்பிக்கையால்தான் எனப் பதிவு செய்கின்றது தால்முத் இலக்கியம்.
ஆபிரகாமின் விண்மீன் அவருக்கு நம்பிக்கை தருகிறது.
(ஆ) யோசேப்பின் விண்மீன் (தொநூ 37:9). நிகழ்வில் யாக்கோபு
மிகவும் நேசித்த யோசேப்பு என்னும் இளவல் தன் வீட்டில் உள்ள
அனைவரிடமும் தான் கண்ட இரண்டாவது கனவை இப்டிப் பகிர்கின்றார்:
"நான் மீண்டும் ஒரு கனவு கண்டேன். அதில் கதிரவனும் நிலவும்
பதினொரு விண்மீன்களும் என்னை வணங்கக் கண்டேன்." இக்கனவுக்கு
விளக்கம் தருவது போல கேள்வி ஒன்றைக் கேட்கின்றார்
யாக்கோபு: "நானும், உன் தாயும் உன் சகோதரர்களும் தரை மட்டும்
தாழ்ந்து உன்னை வணங்க வேண்டுமா?" எனக் கேட்கின்றார். இக்காரியத்தை
தம் மனத்தில் கொள்கின்றார் (37:10-11). யோசேப்பின்
விண்மீன் யோசேப்புக்கு எதிர்நோக்கைத் தருகிறது.
(இ) பிலயாமின் விண்மீன் (எண் 24:17). இஸ்ரயேல் மக்களின்
பாலைவனப் பயணத்தில் அவர்களை மோவாபு அரசர் பாலாக்கு எதிர்கொள்கின்றார்.
மக்கள்மேல் வெற்றி கொள்வதற்கு கடவுளர்களின் ஆற்றலைப் பயன்படுத்தினால்தான்
இயலும் என நினைக்கின்ற அவர், பிலயாம் என்னும் இறைவாக்கினரை
அழைத்து இஸ்ரயேல் மக்களைச் சபிக்கும்படி கட்டளையிடுகின்றார்.
ஆனால், ஆண்டவரால் தடுத்தாட்கொள்ளப்பட்ட பிலயாம், இஸ்ரயேல்
மக்களை சபிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு ஆசி
கூறுகின்றார்: "யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்!
இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும். அது மோவாபின்
நெற்றிப் பிறையை நசுக்கும்!" மெசியா பற்றிய முதல் முன்னறிவிப்பாக
இந்த இறைவாக்கு புரிந்துகொள்ளப்படுகிறது. பிலயாமின்
விண்மீன் பிறையை நசுக்கும் அடையாளமாக முன்னுரைக்கப்படுகின்றது.
மேற்காணும் மூன்று நிகழ்வுகளை ஒருங்கே இணைத்துப்
பார்க்கும்போது, ஆபிராமின் விண்மீன் நேரடியாக் காண்கின்ற
ஒன்றாக இருக்கிறது. யோசேப்புக்கு அது கனவில் தோன்றும் ஒரு
வார்த்தைப் படமாக இருக்கிறது. பிலயாமுக்கு அது ஓர் உருவகமாக
உள்ளது.
நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 2:1-12), கீழ்த்திசை ஞானியருக்குத்
தோன்றுகின்ற விண்மீன் முதலில் வார்த்தைப் படமாக, உருவகமாக
ஞானியரின் உள்ளத்தில் தோன்றுகிறது. பின்புதான் நேரடியாக
அவர்கள் அந்த விண்மீனைக் கண்டுகொள்கின்றனர். ஆக, உள்ளத்தில்
விண்மீன் தோன்றாதவரை வெளியில் உள்ள விண்மீனை நாம் அடையாளம்
காண இயலாது. அன்றைய நாளில் எல்லாரும் வானில் தோன்றிய அந்த
வித்தியாசமான விண்மீனைக் கண்டிருப்பார்கள். ஏரோது, மறைநூல்
அறிஞர்கள், எருசலேம்வாழ் மக்கள் என அனைவரும் விண்மீனைக் கண்டனர்.
ஆனால், "அவரது விண்மீன்" அவர்கள் உள்ளத்தில் தோன்றாததால்,
வெளியே உள்ள விண்மீனை அவர்களால் அடையாளம் காண இயலவில்லை.
"அவரது விண்மீனை" அடையாளம் காண நாம் என்ன செய்ய வேண்டும்?
(அ) பயன்பாட்டு மனநிலையிலிருந்து விடுபடுவது
அது என்ன பயன்பாட்டு மனநிலை? கதிரவன் பகலில் ஒளி கொடுக்கிறது.
இரவில் நிலா ஒளி கொடுக்கிறது. ஆக, இவற்றால் நமக்குப் பயன்
உண்டு. ஆனால் விண்மீன்கள் இவற்றைப் போல ஒளி தருவதில்லை.
விண்மீன் ஓர் அழகுப் பொருளே அன்றி, பயன்பாட்டுப் பொருள் அல்ல.
பயன்படாத எதையும் உன்னுடன் வைத்துக்கொள்ளாதே! எனக் கற்பிக்கிறது
இன்றைய உலகம். அதனால்தான், உறவுகளும் பயன்தரவில்லை என்றால்
தூக்கி எறியப்பட்டு மறந்து போகப்படுகின்றன. வானில் தோன்றிய
விண்மீனைக் கண்டதாலும், அதைக் கண்டு புறப்பட்டு வந்ததாலும்
ஞானியருக்கு என்ன கிடைத்தது? வாழ்வின் முக்கியமானவை பயன்பாட்டையும்
கடந்தவை என்று உணர்ந்தனர் இந்த ஞானியர். ஏரோது, மறைநூல் அறிஞர்கள்,
மற்றும் எருசலேம்நகர் மக்கள் பயன்பாட்டு மனநிலையில் இருந்ததால்தான்,
விண்மீனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
(ஆ) லாஜிக் இல்லா மேஜிக்
நம் வாழ்வின் இயக்கங்கள் அனைத்தும் "லாஜிக் படியே நடக்க
வேண்டும்" என நாம் நினைக்கின்றோம். ஒரு சிறிய நட்சத்திரத்தில்
விண்மீனைக் காண்பதும், ஒரு குழந்தையில் யூதர்களின் அரசரைக்
காண்பதும் லாஜிக்குக்குள் அடங்குவதில்லை. இவர்களது நீண்ட
பயணத்தையும் விந்தையான ஆர்வத்தையும் கண்டு ஏரோது
சிரித்திருப்பார். அனைத்தையும் லாஜிக் கொண்டு பார்ப்பவர்கள்,
லாஜிக்குக்குப் புறம்பாக ஒன்று நடக்கும்போது, அதைத் தடுத்து
நிறுத்தி, தங்கள் லாஜிக்கைத் தக்க வைக்க நினைப்பர். அதைத்தான்
ஏரோதும் செய்கின்றார். குழந்தையில் அரசரைக் காண்பதற்குப்
பதிலாக, குழந்தையைக் கொன்றுவிட்டால் தானே அரசர் என்பதை உறுதி
செய்துவிடலாம் என நினைக்கின்றார். ஞானியர் புத்திசாலிகள்!
அவர்கள் விண்மீனின் நகர்வை அறிந்திருந்ததுபோல, தங்கள் உள்ளுணர்வையும்
அறிந்தவர்களாக இருந்தனர். ஆகையால்தான், கனவு போல எழுந்த உள்ளுணர்வால்
எச்சரிக்கப்பட்டு வேறு வழியாக நாடு திரும்புகின்றனர். உள்ளுணர்வு
லாஜிக்கிற்குள் வருவதில்லை. அது மேஜிக் என்னும் தளத்தில்
செயல்படுகிறது.
(இ) உறுதியற்றவற்றைத் தழுவிக்கொள்வது
உறுதியான தங்கள் பாதுகாப்பு மற்றும் ஊரை விட்டு, உறுதியற்ற,
நகரும் விண்மீனைத் தொடர்கின்றனர் ஞானியர். உறுதியான ஏரோதுவைக்
கண்டு, "நீரே யூதர்களின் அரசர்!" என்று பாடிப் பரிசில்
பெற்று தங்கள் நாடு திரும்புவதை விட்டு, வலுவற்ற குழந்தையைக்
கண்டு, நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்குகிறார்கள். நம்
வாழ்வில் நாம் அனைத்தையும் உறுதிசெய்துகொள்ளவே
விரும்புகிறோம். "இன்று நான் இப்படி இருக்கிறேன். நாளை இப்படி
இருப்பேன் அல்லது இருக்க வேண்டும். நாளை நான் இப்படி இருக்க
வேண்டும் என்றால், நான் இன்று இப்படி இருக்க வேண்டும்" என்று
அனைத்தையும் உறுதியாக்கிக்கொள்ள நினைக்கின்றோம். கதிரவன்
போல, நிலா போல அனைத்தும் உறுதியாக இருக்க வேண்டும் என்று
நினைப்பதால்தான், பகலிலும் பார்க்க இயலும் விண்மீன்களை நம்மால்
காண இயலாமல் போய்விடுகிறது.
"அவரது விண்மீனை" அடையாளம் கண்டவுடன் என்ன ஆகும்? நாம்
அவரது விண்மீனாக மாறிவிடுவோம். என்ன ஆச்சர்யம்! கீழ்த்திசை
ஞானியர் அவரது விண்மீனைக் கண்டவுடன் அவரது விண்மீனாக
மாறுகின்றனர். எப்படி? குழந்தையின் முன் படிந்த தங்கள்
கால்கள் அரசன்முன் படியக் கூடாது என்றும், அமைதியின் அரசருக்கு
வணங்கிய தலை, பொறாமை உள்ளம் கொண்ட ஏரோதுவை வணங்கக் கூடாது
என்று வேறு வழி செல்கின்றனர். இதுவே அவர்கள் பெற்ற மாற்றம்.
முதல் வாசகத்தில் (காண். எசா 60:1-6) அப்படியொரு மாற்றத்தையே
வாசிக்கின்றோம். "எருசலேமே! எழு! ஒளி வீசு! உன் ஒளி
தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!"
என்று எருசலேமைத் தட்டி எழுப்புகின்றார் இறைவாக்கினர் எசாயா.
பாபிலோனிய அடிமைத்தனத்தின் இருளிலும், குளிரிலும், இறப்பிலும்
நின்ற மக்கள், அடிமைகளாக வழிகளில் இழுத்துச் செல்லப்பட்ட
மக்கள், தங்கள் பொன்னும், வெள்ளியும், வீடுகளும், கால்நடைகளும்,
விளைநிலங்களும் எதிரிகளால் சூறையாடப்பட்டுப் பறித்துக்கொள்ளப்பட்ட
மக்கள், ஆண்டவரின் தலையீட்டால், "அவரது விண்மீனாக"
மாறுகின்றனர். இருள் ஒளியாக மாறுகின்றது. இழுத்துச் செல்லப்பட்டவர்கள்
தூக்கி வரப்படுகின்றனர். சொத்துகள் மீண்டும் வருகின்றனர்.
மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பதிலாக ஒட்டகத்திரள்
கிடைக்கின்றது. சேபா நாட்டும் பொன்னும் நறுமணப் பொருளும்
எருசலேம் நோக்கி வருகின்றது. என்ன ஒரு தலைகீழ் மாற்றம்!
"அவரது விண்மீனை" தமஸ்கு நகர் செல்லும் வழியில் கண்ட பவுல்
(சவுல்), தானே "அவரது விண்மீனாக" மாறிய நிகழ்வை எபேசு நகரத்
திருச்சபைக்கு எடுத்துச் சொல்கின்றார். தான் மட்டுமல்ல, யூதர்கள்
மட்டுமல்ல, மாறாக, புறவினத்தாரும் - அதாவது, எபேசு நகர மக்களும்
- இறைவெளிப்பாட்டின் வழியாக, கிறிஸ்து இயேசுவின் வழியாக,
உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினருமாக மாறினர் என எழுதுகின்றார்.
ஆக, கிறிஸ்து வழியாக நாம் அனைவரும் "ஆண்டவரின் விண்மீனாக"
மாறியுள்ளோம்.
ஆபிரகாம் எண்ணற்ற விண்மீன்களைக் கண்டார். யோசேப்பு பதினொரு
விண்மீன்களைக் கண்டார். பிலயாம் ஒரே விண்மீனைக் கண்டார்.
கீழ்த்திசை ஞானியரோ, அந்த ஒற்றை விண்மீனே பெத்லகேம் குழந்தை
என்று கண்டனர். இன்றும் "அவரது விண்மீன்" தோன்றுகிறது.
நாம்தான் மின்விளக்குகளைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு,
மெழுகுதிரிகளைப் பார்த்து அழுதுகொண்டே விண்மீனைப் பார்க்கத்
தவறிவிடுகின்றோம். "அவரது விண்மீனை" காணும் அனைவரையும் அவர்,
"அவரது விண்மீனாகவே" மாற்றுகிறார். ஏனெனில், அவரே நம் அரசர்!
(பதிலுரைப்பாடல், காண். திபா 72).
(அருட்தந்தை: யேசு கருணாநிதி)
மதுரை உயர்மறைமாவட்டம்
இரண்டாம் முறை விண்மீன்
'நம் அனைவருக்கும் இரண்டு வாழ்க்கை உண்டு. இரண்டாம்
வாழ்க்கை எப்போது தொடங்குகிறது என்றால், 'இருப்பது ஒரு
வாழ்க்கைதான்' என்ற புரிதல் வரும்போது' என்பது டுவிட்டர்
வாக்கு. 'வாழ்வில் இரண்டாம் வாய்ப்பு வருவதில்லை' என்று சிலர்
சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், வாழ்வில் இரண்டாம்
வாய்ப்புக்கள் வரவே செய்கின்றன. எப்படி?
சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய, 'எ கிறிஸ்மஸ் கேரல்' (ஒரு
கிறிஸ்துபிறப்பு பாடல்) பிரபலமான நாவல். அந்த நாவலின் கதாநாயகன்
எபநேசர் ஸ்க்ரூகே கிறிஸ்துமசுக்கு முந்திய மாலை தன் அலுவலகத்தில்
அமர்ந்திருப்பார். இங்கிலாந்தின் குளிரின் நடுக்கத்தில்
அவருடைய அலுவலக கிளார்க் கூனிக்குறுகி அமர்ந்திருப்பார்.
ஏனெனில், எபரேசர் தன் அலுவலகத்தை வெதுவெதுப்பாக்க பணத்தைச்
செலவிட மாட்டார். எபநேசரின் உறவினர் ஒருவர் அவரை கிறிஸ்துமஸ்
பார்ட்டிக்கு வருமாறு அழைப்பார். அந்த நேரத்தில் இன்னும்
இருவர் கிறிஸ்துமஸ் நன்கொடை கேட்டு வருவார்கள். 'கிறிஸ்துமஸ்
... ஒரு ஹம்பக்!' என்று விரட்டி விடுவார். இரவில் தன் வீடு
திரும்பிய அவருக்கு இறந்து போன தன் பிஸினஸ் பார்ட்னர் ஜேக்கப்
மார்லியின் ஆவி காட்சிதரும். மார்லி தன்னுடைய பழைய தன்னலமான
வாழ்விற்குத் தண்டனையாக பெரிய சங்கிலியைக் கட்டி அவர் இழுத்துக்கொண்டு
செல்வதுபோல காட்சியில் இருக்கும். 'இந்த தண்டனையிலிருந்து
நீ தப்பித்துக்கொள்' என மார்லியின் ஆவி எபநேசரை எச்சரிக்கும்.
'இன்னும் சில இரவுகளில் மூன்று ஆவிகள் உனக்குத் தோன்றும்'
என்றும் சொல்வார் மார்லி. அப்படியே தூங்கிப்போவார் எபநேசர்.
'நேற்றைய கிறிஸ்துமஸ்' என்ற முதல் ஆவி வந்து எபநேசரை அவருடைய
குழந்தைப் பருவத்திற்கு அழைத்துப்போய்க் காட்டும். தன் குழந்தைப்
பருவ, இளமைப்பருவ நிகழ்வுகளை நினைத்து மகிழ்வார் எபநேசர்.
'இன்றைய கிறிஸ்துமஸ்' என்ற இரண்டாம் ஆவி எபநேசரை லண்டன்
தெருக்கள் வழியாக அழைத்துச் செல்லும். அந்த நேரத்தில் தன்
மேலாடைக்குள் 'அறியாமை,' 'தேவை' என்று இரண்டு குழந்தைகள்
ஒளிந்திருப்பதைக் காண்பார் எபநேசர். 'நாளைய கிறிஸ்துமஸ்'
என்ற மூன்றாம் ஆவி இறந்துபோன ஒருவர் படும் துன்பத்தைக்
காட்டும். அந்த இறந்துபோன நபரின் கல்லறையில் 'எபநேசர்' என
எழுதியிருக்க, நம் கதாநாயகர் உடனே, தன் தவற்றை உணர்ந்து, 'என்
'அறியாமை,' மற்றும் என் 'தேவை' இவற்றுக்காக நான் வருந்துகிறேன்'
என்று சொல்லி, வருவோர் போவோர், தேவையில் இருப்போர் அனைவருக்கும்
தன் பணத்தைக் கொடுத்துவிட்டு, தன் உறவினரின் கிறிஸ்துமஸ்
பார்ட்டிக்கு மகிழ்வுடன் செல்வார். இதுபோல அவர் தொடர்ந்து
கருணை, தாராள உள்ளம், அன்பு, பரிவு கொண்டவராக விளங்குவதாக
நாவல் முடிவுறும்.
எபநேசர் ஸ்க்ரூகேயைப் பொறுத்தவரையில் தான் கண்ட காட்சி அவருடைய
இரண்டாம் வாழ்க்கையின் தொடக்கமாக இருக்கிறது. இவரைப் போலவே,
புனித பவுல், அண்ணல் அம்பேத்கர், மகாத்மா காந்தி, அன்னை தெரசா
என்று எல்லாருமே தங்கள் வாழ்வில் இறையனுபவம் பெற்றவுடன் தங்களின்
இரண்டாம் வாழ்க்கையை புதிய பொலிவுடன் மாற்றி எல்லாருக்கும்
எல்லாம் என ஆகின்றனர்.
இன்றைய நாளில் 'இரண்டாம் கிறிஸ்துமஸ்' என்று கிராமங்களில்
சொல்லப்படுகின்ற 'ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவைக்'
கொண்டாடுகிறோம். கீழைத்திருச்சபைகள் இன்றைய நாளைத்தான்
கிறிஸ்து பிறப்பு நாளாகக் கொண்டாடுகின்றனர்.
'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று ஏரோதிடம்
வருகின்ற கீழ்த்திசை ஞானியர், 'முன்பு எழுந்த விண்மீன்
மீண்டும் தோன்றுவதை - இரண்டாம் முறை தோன்றுவதை - கண்டுகொள்கின்றனர்.'
ஆக, இவர்கள் முதல் முறை பார்த்த விண்மீன் இவர்களை ஏரோதின்
அரண்மனைக்குத்தான் அழைத்துச் சென்றது. இரண்டாம் முறை
பார்த்த விண்மீன்தான் இவர்களை பெத்லகேமிற்கு அழைத்துச்
செல்கிறது. இவ்வாறாக, வாழ்வின் ஆச்சர்யங்கள் இரண்டாம் முறைகளிலும்
சாத்தியம் என்பதை உணர்த்துகின்றன இன்றைய வாசகங்கள்.
இன்றைய முதல் வாசகம் (காண். எசா 60:1-6) எசாயா இறைவாக்கினர்
நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள்
திரும்பி வர அனுமதி பெற்ற காலகட்டத்தில் எழுதப்பட்டது இப்பகுதி.
இன்றைய வாசகப் பகுதியில், 'எழு! உலகிற்கு ஒளி வீசு!' என்று
எருசலேமைத் தூண்டி எழுப்புகிறார் எசாயா. ஏனெனில், 'உன் ஒளி
தோன்றியுள்ளது,' 'ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.'
ஒளியும் மாட்சியும் ஆண்டவரின் காணக்கூடிய வெளிப்பாடுகள்
(காண். எசே 1:4, விப 24:15-17). இவ்வாறாக, இருளடைந்து பாழடைந்து
கேட்பாரற்றுக் கிடந்த நகரம் கடவுள் இரண்டாம் முறை வந்ததால்
ஒளிர்கிறது. இவர்கள் அடிமைகளாக்கப்படும் முன் இருந்த ஒளி
அடிமைத்தனத்தால் இருண்டு போனது. இரண்டாம் முறை இப்போது
நகரம் ஒளிருமாறு மக்களைக் கவ்வியிருந்த இருளை அகற்றுகிறார்
கடவுள். கடவுள் இரண்டாம் முறை வந்ததை ஒரு பெரிய ஒருங்கிணைவாக
முன்வைக்கிறார் எசாயா: (அ) பிற இனத்தார் எருசலேம் நோக்கி
வருவர், (ஆ) நாடுகடத்தப்பட்ட, இழுத்துச் செல்லப்பட்ட புதல்வர்,
புதல்வியர் தோளில் தூக்கிவரப்படுவர், (இ) கடலின் திரள்
செல்வம், சொத்துக்கள், ஒட்டகத்தின் பெருந்திரள் எருசலேம்
வரும், (உ) 'பொன்' (அரசனுக்கு), 'நறுமணப்பொருள்' (கடவுளுக்கு)
ஏந்தி வருவர் மக்கள். இவ்வாறாக, கடவுளே அரசனாகவும் இருப்பார்
என்பது குறிக்கப்படுகிறது. இக்கடவுள் எருசலேமிற்கு மட்டும்
கடவுள் அல்ல. மாறாக, அனைத்து நாடுகளுக்கும் கடவுளாகவும்
அரசனாகவும் இருப்பார்.
ஆக, எருசலேம் புத்துயிர் பெற்றதை அகில உலக
புத்துயிர்ப்புக்குமான இரண்டாம் வாய்ப்பாகப் பார்க்கிறார்
எசாயா. நாடுகடத்தப்பட்ட எருசலேம் மக்கள் தங்கள் நாடு
திரும்புகின்றனர். அவர்களின் வருகை அனைத்துலக நாடுகளையும்
சேர்த்துக் கொண்டு வருவதாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள்
பெற்ற இரண்டாம் ஒளி அவர்களுக்கு மட்டுமல்லாமல், உலக மக்களுக்கும்
வெளிச்சமாகவும், மாட்சியாகவும் இருக்கிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 3:2-3, 5-6), 'நற்செய்தியின்
வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும்
ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும்
ஆகியிருக்கிறார்கள் என்னும் மறைபொருள்' தூய ஆவி வழியாகத்
தனக்கும், திருத்தூதருக்கும், இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக
முன்வைக்கின்றார். யூதராக இருந்தால்தான் ஒருவர் கிறிஸ்தவராகவும்,
கிறிஸ்தவ சபையின் உறுப்பினராகவும் இருக்க முடியும் என்ற
புரிதலில் இருந்த எபேசு நகரத் திருச்சபைக்கு, யூதரல்லாத புறவினத்தாரும்
நம்பிக்கையின் வழியாக மறைபொருளில் பங்கெற்க முடியும் என அறிவுறுத்துகின்றார்.
பவுலின் இந்த வார்த்தைகள் இன்று நமக்கு மிகச் சாதாரணமாகத்
தெரியலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தில் இது ஒரு பெரிய மறுமலர்ச்சியை
உண்டாக்கியது. ஏனெனில், பவுலின் இதே உறுதிப்பாட்டால்தான்
இன்று நீங்களும், நானும் கிறிஸ்தவராக இருக்கிறோம்.
ஆக, பிற இனத்தாருக்கு நம்பிக்கையின் வழியாக வழங்கப்படும்
இரண்டாம் வாய்ப்பாக இருக்கிறது கிறிஸ்துவின் மறையுடலாகிய
திருச்சபை.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 2:1-2) 'ஞானிகள் வருகை'
பற்றிப் பேசுகின்றது. நமக்கு மிகவும் தெரிந்த வாசகப் பகுதிதான்.
இவர்கள் ஏன் வர வேண்டும்? இவர்கள் இறையியல் தேவையையும்,
இலக்கியத் தேவையையும் நிறைவு செய்ய வருகின்றனர். 'இயேசுவை
புதிய மோசே' என்ற இறையியலாக்கம் செய்ய விரும்புகிறார் மத்தேயு.
ஆக, பாலன் இயேசுவை எகிப்திற்கு அனுப்பினால்தான் அவரை அங்கிருந்து
அழைத்து வர முடியும். இப்போது திருக்குடும்பம் இருப்பது
பெத்லகேமில். பெத்லகேமில் நடக்கும் இலக்கிய நிகழ்வு எகிப்துக்கு
நகர்ந்தால்தான் இறையியல் சாத்தியமாகும். எனவே, குழந்தையை
எகிப்திற்கு அனுப்ப வேண்டியதன் இறையியல் மற்றும் இலக்கியத்
தேவையை நிறைவு செய்ய வருகின்றனர் 'ஞானிகள்.'
இவர்கள் யார்? இவர்கள் 'ஞானியரோ,' 'அரசர்களோ' அல்லர். இவர்களை
பிரிவினை சபை விவிலியம் 'சாஸ்திரிகள்' என சரியாக மொழிபெயர்க்கிறது.
இவர்கள் வானியல் பண்டிதர்கள். நட்சத்திரங்களையும், அவற்றின்
நகர்வுகளையும், பறவைகள் மற்றும் விலங்குக் கூட்டங்களின்
இடம் பெயர்தலையும் வைத்த வருங்காலத்தைக் கணிக்கத் தெரிந்தவர்கள்.
அவ்வளவுதான்! ஏனெனில், இவர்கள் அரசர்களாக இருந்திருந்தால்,
'நீங்கள் போய்ப் பாருங்கள்' என்று ஏரோது அரசன் இவர்களை அனுப்பியிருக்க
மாட்டான். 'நீங்கள் இங்கே தங்கி இளைப்பாறுங்கள். நான் காவலாளிகளை
அனுப்பி விசாரிக்கிறேன்' என்று இவர்களை அரண்மனையில் அமர்;த்தியிருப்பான்.
மேலும், இவர்கள் மூன்று பேர் அல்லர். இவர்கள் கொண்டு வந்த
காணிக்கைப் பொருள்களை வைத்து நாம் 'மூன்று நபர்கள்' வந்ததாகச்
சொல்கிறோம். மேலும், இவர்கள் 'ஞானியர்' என அழைக்கப்படுகின்றனர்.
ஆனால், 'யூதர்களின் அரசனாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று
யூதர்களின் அரசன் ஏரோதிடம் போய்க் கேட்பது ஞானம் அன்று. ஏரோது
தன் அரியணையைத் தக்க வைக்க தன் குடும்பம் முழுவதின் இரத்தத்தையும்
குடித்தவன். இத்தகைய அரசனிடம் போய் மற்றொரு அரசனைப் பற்றி
விசாரிப்பது 'கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிவதற்குச் சமமாக'
இருந்திருக்கும். ஆனாலும், நம் நிகழ்வின்படி அவர்கள் அரண்மனைக்குத்தான்
செல்கிறார்கள். ஏனெனில், இத்தகையோரின் சேவை அரசர்கள் எதிர்காலத்தைக்
கணிப்பதற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தது. ஆகவேதான், இவர்கள்
அரசனிடம் செல்கிறார்கள். மேலும், இவர்கள் எதையும் மூடி மறைக்காத,
அதே நேரத்தில், துணிச்சல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
'அவரது விண்மீன் எழக் கண்டோம்' - இதுதான் அவர்கள்
பெற்றிருந்த அடையாளம்.
ஏரோது தன் குள்ளநரித்தனத்தால், 'நீங்கள் சென்று குழந்தையைக்
குறித்து திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது
நானும் சென்று குழந்தையை வணங்குவேன்' என்று சொல்லி அவர்களை
அனுப்பிவைக்கின்றான்.
அந்த நேரத்தில்தான் இரண்டாம் முறை அந்த விண்மீன்
தோன்றுகின்றது. அரண்மனையின் உயரமான சுவர்கள் அதை மறைத்ததா?
அல்லது ஏரோதின்முன் இவர்கள் மண்டியிட்டதால் விண்மீன் இவர்களுக்கு
மறைவாயிருந்ததா? - தெரியவில்லை நமக்கு. ஆனால், 'அங்கே
நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி
அடைகிறார்கள்.' மத்தேயு முதல் முறையாக அவர்களின் மகிழ்ச்சி
என்ற உணர்வைப் பதிவு செய்கின்றார். வீட்டிற்குள் செல்லும்
அவர்கள் குழந்தைக்கு தங்கம் (அரச நிலையின் அடையாளம்), தூபம்
(இறை நிலையின் அடையாளம்), வெள்ளைப் போளம் (மனித நிலையின்
அடையாளம்) பரிசளிக்கின்றனர். கனவில் எச்சரிக்கப்பட்டு வேறு
வழியாகத் தங்கள் நாடு திரும்புகிறார்கள்.
இந்நிகழ்வில் இவர்கள் ஏரோதின் அரண்மனைக்கு வந்தது ஒருமுறைதான்.
வந்த வழி ஒருமுறைதான். இயேசுவைக் கண்டதும் ஒருமுறைதான்.
திரும்பும் வழியும் ஒருமுறைதான். ஆனால், விண்மீனைக் கண்டது
மட்டும்தான் இரண்டுமுறை. அதுவும் இரண்டாம் முறை அவர்கள் கண்ட
விண்மீன் அவர்களின் பாதையை முழுவதுமாக மாற்றிப் போடுகின்றது.
இவ்வாறாக, முதல் வாசகத்தில் எருசலேம் இரண்டாம் முறை ஒளி
பெற்று, கடவுளின் மாட்சியால் துலங்குகிறது. இரண்டாம் வாசகத்தில்
புற இனத்தார் நம்பிக்கையின் வழி இரண்டாம் வாழ்வைப்
பெறுகின்றனர். நற்செய்தி வாசகத்தில் இரண்டாம் முறை கண்ட
விண்மீன் சாஸ்திரிகளுக்கு யூதர்களின் அரசனை அடையாளம்
காட்டுகிறது.
வாழ்வின் இனிமைகள் இரண்டாம் முறையிலும் சாத்தியம் என்கிறது
இன்றைய வழிபாடு. ஞானம் என்பது முதல் முறை எழுந்து நிற்பது
அல்ல. மாறாக, முதல் முறை விழுந்து இரண்டாம் முறை எழுந்து
நிற்பது.
இன்றைய நம் உலகம் முதல் முறைகளையே பெரிதும் கொண்டாடுகிறது.
முதல் முறையில் வெல்லாதவர்களைத் தேவையற்றவர்கள் என
முத்திரை குத்திவிடுகிறது. புனித அகுஸ்தினரின் வாழ்வை எடுத்துக்கொள்வோம்.
தன் மனமாற்றத்திற்கு முன் அவருடைய முதல் வாழ்வு அமைதியில்லாமல்
இருக்கிறது. ஆனால், அதை அவர் விரக்தியாக எடுத்துக்கொள்ளவில்லை.
இரண்டாம் வாழ்விற்குள் அடியெடுத்து வைக்கின்றார். மிகப்பெரிய
இறையியலாராக மாறுகின்றார். மானிக்கேய சிந்தனையால் முதல்
வாழ்வைக் கழித்த அவர், இறைவனில் தன் இரண்டாம் வாழ்வைக் கழிக்கிறார்.
2019ஆம் ஆண்டு தொடங்கி சில நாள்கள் கடந்திருக்கின்றன. 'இனி
குடிக்க மாட்டேன்,' 'இனி கோபப் பட மாட்டேன்,' 'இனி
உடல்நலம் கவனிப்பேன்,' 'இனி வாக்கிங் போவேன்,' 'இனி என்
நேரம் வீணாக்க மாட்டேன்' என்று கடந்த ஆண்டு வாக்குறுதிகள்
எடுத்து, நிறைவேற்ற முடியாமல் போயிருப்போம். அல்லது எடுத்த
ஆறு நாள்களுக்குள் மீறியிருப்போம். ஆனால், அதற்காக நம்மை
நாமே சபித்து குற்ற உணர்வு கொள்ள வேண்டாம். மீண்டும்
ஒருமுறை வாழப் பழகுவோம். வாழ்வில் எல்லாமே ஒருமுறைதான்
இந்த உலகம் பல இனியவர்களையும், இனியவைகளையும்
இழந்திருக்கும்.
'தொடங்கியது எல்லாம் இனியதாக முடியும். அப்படி இனியதாக
இல்லை என்றால் அது இன்னும் முடியவில்லை' என்பார் ஆஸ்கார்
வைல்ட். எருசலேம் மக்களின் பயணம் பாபிலோனியாவின் அடிமை
இருளில் முடியவில்லை. புறவினத்தாரின் பயணம் தங்கள் பாவ
வாழ்க்கையோடு முடியவில்லை. சாஸ்திரிகளின் பயணம் ஏரோதின்
அரண்மனையோடு முடியவில்லை. இரண்டாம் முறை ஒளி வந்தது.
இரண்டாம் முறை வாழ்க்கை வந்தது. இரண்டாம் முறை விண்மீன்
வந்தது.
இரண்டாம் முறை வரும் விண்மீனைக் காண மூன்று படிகள்
அவசியம்: (அ) இதுதான் விண்மீன் எனத் தெரிய வேண்டும், (ஆ)
பழைய விண்மீனோடு அதைப் பொருத்திப் பார்க்க வேண்டும், (இ)
'இதுவே அது' என்று முடிவு எடுத்து பயணம் தொடர வேண்டும்.
நாம் சந்தித்த பாபிலோனியாவும், ஏரோதுகளும் போதும். கொஞ்சம்
அண்ணாந்து பார்ப்போம். வாழ்க்கை மீண்டும் விண்மீனாக
ஒளிரும். ஏனெனில், முதல் முறை பார்த்ததும், பார்த்ததை
மறந்ததும் நம் தவறாக, சந்தர்ப்ப சூழலாக இருக்கலாம். ஆனால்,
இரண்டாம் முறை பார்ப்பதும், விண்மீனைத் தொடர்வதும் நம்
தெரிவாக இருக்க வேண்டும். தெரிவு பிறக்க தெளிவு பிறக்கும்.
அந்தத் தெளிவில் பெத்லகேம் குழந்தை நம்மில் ஒளிரும்.
ஏனெனில், முதல் மட்டுமல்ல. இரண்டாவதும் வெற்றியே!
இன்றைய வாசகங்கள்:-
எசாயா 60:1-6
எபேசியர் 3:2-3, 5-6
மத்தேயு 2:1-12
"எழு! ஒளிவீசு"
இருள் நடுவேதான் விளக்கு ஏற்றி வைக்கப்படும்:
ஞாயிறு திருப்பலி முடிந்ததும், பங்குப் பணியாளரைப் பார்க்க
வந்த இளம்பெண் ஒருத்தி, "சுவாமி! எனக்கு வேறு எங்காவது
வேலை இருந்தால் சொல்லுங்கள்; இப்போது நான் பார்க்கும் வேலை
எனக்குப் பிடிக்கவில்லை" என்றார். இந்த இளம்பெண்ணை பங்குப்
பணியாளர் நன்கு அறிவார். இவள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில்
மிகச் சிறப்பான முறையில் பணியாற்றி வந்தாள். இந்நிலையில்
இவள் தனக்கு வேறோர் இடத்தில் வேலை இருந்தால் சொல்லுங்கள்
என்று சொன்னதுதான் பங்குப் பணியாளருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"இப்போது நீ நல்லதொரு நிறுவனத்தில்தானே பணியாற்றுகின்றாய்,
பிறகு எதற்கு இன்னொரு இடத்தில் வேலை இருந்தால் சொல்லுங்கள்
என்கிறாய். உனக்கு என்ன ஆயிற்று?" என்று பங்குப் பணியாளர்
அவளிடம் கேட்டபோது, "நான் பணியாற்றும் இடத்தில் எல்லாரும்
பிற சமயத்தவர்; நான் மட்டும் கிறிஸ்தவள். இதனால் நான்
கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகின்றேன்" என்று வருத்தத்தோடு
சொன்னாள் அவள்.
"சரி, உன்னிடத்தில் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்" என்று
சொல்லிவிட்டுப் பங்குப் பணியாளர் அவளிடம், "விளக்கை எங்கு
ஏற்றி வைப்பார்கள்?" என்றார். "நான் சொன்னதற்கும் நீங்கள்
கேட்கும் கேள்விக்கும் என்ன சம்பந்தம்?" என்று அவள் கேட்டபோது,
பங்குப் பணியாளர் அவளிடம், "சம்பந்தம் இல்லாமல் கேள்வி
கேட்பேனா, நான் கேட்டதற்குப் பதில் சொல்" என்றார். அதற்கு
அவள், "இருள் நிறைந்த இடத்தில்தான் விளக்கேற்றி வைப்பர்"
என்றாள்.
"மிகச் சரியாகச் சொன்னாய். இருள் நிறைந்த இடத்தில்தான் விளக்கேற்றி
வைப்பார்கள். அதுபோன்று கிறிஸ்தவர்களே இடத்தில் ஒரு நல்ல
கிறிஸ்தவராக வாழ்வதுதான் சிறந்தது. பிறர் உன்னைக் கேலியும்
கிண்டலும் செய்கிறார்கள் என்பதற்காக நீ வேறோர் இடத்திற்கு
வேலைக்குச் செல்வது நல்லதல்ல. நீ இருக்கின்ற இடத்திலேயே நல்லதொரு
கிறிஸ்தவளாக வாழ். அதன்பிறகு என்ன நடக்கின்றது என்று பார்"
என்று பங்குப் பணியாளர் அவளிடம் நம்பிக்கை நிறைந்த
வார்த்தைகளைக் கூறி அனுப்பி வைத்தார். இதன்பிறகு அந்த இளம்பெண்
தான் பணியாற்றி வந்த இடத்தில் நல்லதொரு கிறிஸ்தவளாக
வாழ்ந்து வந்தாள். இதனால் அவளோடு பணி செய்த ஒன்பது பேர்
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.
ஆம், பிற சமயத்தவர் மிகுதியாகப் பணியாற்றிய ஒரு நிறுவனத்தில்,
தன்னுடைய எடுத்துக்கட்டான வாழ்வால் எழுந்து ஒளிவீசி, பலரும்
கிறிஸ்துவின்மீது நம்பிக்கைக் கொள்ளக் காரணமாக இருந்தாள்
அந்த இளம்பெண். இன்று நாம் ஆண்டவருடைய திருக்காட்சிப்
பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். மகிழ்ச்சி பொங்கும் இப்பொன்னாளில்
இப்பெருவிழா நமக்கு "எழுந்து ஒளிவீசு" என்ற செய்தியைத் தருகின்றது.
நாம் எப்படி எழுந்து ஒளிவீசுவது என்று சிந்திப்போம்.
எழுந்தார்; ஒளிவீசினார்:
ஆண்டவர் இயேசு பிற இனத்தாராகிய மூன்று ஞானிகளுக்கும் தன்னை
வெளிப்படுத்தியதை இன்று நாம் ஆண்டவருடைய திருக்காட்சிப்
பெருவிழா என்று கொண்டாடுகின்றோம். இயேசு தன்னை மூன்று
ஞானிகளுக்கும் வெளிப்படுத்தியதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும்
என்றால், அவர் விண்மீனாய் எழுந்தார்; ஒளி வீசினார் என்று
சொல்லலாம். அதனாலேயே அவரைக் காண மூன்று ஞானிகளும்
பெத்லேகிமிற்கு வந்தார்கள். இதை உறுதி செய்வதாய் இருக்கின்றது
மூன்று ஞானிகளும் ஏரோதிடம் சொல்லும், "அவரது விண்மீன் எழக்
கொண்டோம்" என்ற வார்த்தைகள். மேலும், இவ்வார்த்தைகள்,
"யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்" (எண் 24:17)
என்ற பாலாமின் இறைவாக்கை நிறைவு செய்கின்றன.
முன்னதாக, இயேசு இடையர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தினார்.
இப்பொழுது அவர் பிற இனத்தாராகிய மூன்று ஞானிகளுக்கும்
வெளிப்படுத்துகிறார். தனது திருமுழுக்கின்போது தன்னை அவர்
உலகிற்கு வெளிப்படுத்துவார். தனது பணிவாழ்வு முழுவதும் தன்மீது
நம்பிக்கைகொண்ட ஏழைகள், பாவிகள், வரிதண்டுவோர், நூற்றுவத்
தலைவர், கானானியப் பெண்மணி, சமாரியப் பெண்மணி, கிரேக்கர்
போன்ற பிற இனத்தவர் பலருக்கும் தன்னை வெளிப்படுத்தினார்.
இவ்வாறு இயேசு விண்மீனாய், உலகின் ஒளியாய் (யோவா 8:12) எழுந்து
ஒளிவீசினார். இவை எல்லாவற்றிற்கும் அவர் இறந்து உயிர்த்து
எழுந்து ஒளிவீசினார். இதன்மூலம் இயேசு நாம் ஒவ்வொருவரும்
நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் எழுந்து ஒளிவீசுவதற்கு
முன்மாதிரி காட்டியிருக்கின்றார்.
எழுந்து ஒளிவீச அழைப்பு
ஆண்டவரின் திருநகராம் எருசலேமை முன்னிட்டு இறைவாக்கினர் எசாயா
கூறும், "எழு! ஒளிவீசு!" என்ற வார்த்தைகள், பாபிலோனியர்களால்
நாடு கடத்தப்பட்டு, எல்லாமே முடிந்துவிட்டு என்றிருந்த
யூதா நாட்டிற்கு புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும்
தரக்கூடிய வார்த்தைகள். என்றாலும், எழுந்து ஒளிவீசு என்ற
அழைப்பானது, ஆண்டவரால் முதுபெரும் தந்தை ஆபிரகாம் மூலம் இஸ்ரயேல்
மக்களுக்குக் கொடுக்கப்பட்டது (தொநூ 12:3). இஸ்ரயேல் மக்கள்
அனைவரும் எழுந்து ஒளிவீசுப் பிற இனத்தாருக்கு ஒளியாக, ஆசியாக
இருந்திருக்க வேண்டும் (எசா 49:6). அவர்ரகள் அவ்வாறு இல்லாமல்
அல்லது உண்மைக் கடவுளை வழிபடாமல், வேற்று தெய்வத்தை வழிபட்டு
பிற இனத்தருக்குத் துன்மாதிரியாய் இருந்ததால், கடவுள்
மீண்டுமாக அவர்களிடம், "எழுந்து, ஒளிவீசு" என்ற அழைப்பினைத்
தருகின்றார்.
மண்ணாக எருசலேமில் இருந்தவர்களுக்கு எழுந்து ஒளிவீச அழைப்புத்
தரப்பட்டிருக்கின்றது என்பதால், விண்ணக எருசலேமில் இடம்பெறப்
போகும் நாம் எழுந்து ஒளி வீசுவது தேவையான ஒன்றாக இருக்கின்றது.
எப்படி நாம் எழுந்து ஒளிவீசுது?
இயேசு தமது வாழ்வாலும் வார்த்தையாலும் எழுந்து ஒளிவீசி இருக்கையில்,
அவரது முன்மாதிரியைப் பின்பற்றி, அவர் வழிநடக்கும் ஒவ்வொருவரும்
எழுந்து ஒளிவீசுவது இன்றியமையாதது. எப்படி எழுந்து ஒளிவீசவது
என்பதற்கான தெளிவினை இன்றைய இரண்டாம் தருகின்றது.
இரண்டாம் வாசகத்தில், "நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும்
கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர் ஆகியிருக்கின்றார்"
என்கிறார் பவுல். அப்படியெனில், ஒருவர் பணக்காரராக, உயர்குடியினராக,
குறிப்பிட்ட இனத்தில் பிறந்தவர் என்பதற்காக அவர் இயேசுவின்
உடன் உரிமையாளர் ஆகிவிட முடியாது. மாறாக, அறிவிக்கப்பட்ட
நற்செய்தியைக் கேட்டு, அதன்மீது, ஆண்டவர்மீது நம்பிக்கை
கொள்வதன் மூலமாகவே ஒருவர் கிறிஸ்துவின் உடன் உரிமையாளர் ஆக
முடியும்.
இயேசுவைக் காணவந்த மூன்று ஞானிகளும் பிற இனத்தாராக இருந்தாலும்,
இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு அவரைத் தேடி வந்ததால், அவர்கள்
கடவுளுக்கு உரியவர்கள் ஆனார்கள். இயேசு எந்த இடத்தில் பிறப்பார்
என்று தெரிந்திருந்தும், அவர் பிறந்தபோது, அவர்மீது நம்பிக்கை
கொள்ளாமல், அவரைக் காணச் செல்லாத மறைநூல் அறிஞர்கள் பிறப்பால்
யூதர்களாக இருந்தாலும் அவர்கள் பிற இனத்தவர் ஆகின்றார்கள்.
ஆதலால், நமது பிறப்பு அல்ல, நாம் வைத்திருக்கும் பணமும் அதிகாரமும்
அல்ல, ஆண்டவர்மீது நாம் கொள்ளும் நம்பிக்கையும் அதற்கான தேடலுமே
நம்மை ஆண்டவருக்கு உரியவர்கள் ஆக்கும்; அப்பொழுது நம்மால்
ஒளிந்து ஒளிவீச முடியும். நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை
கொண்டு, எழுந்து ஒளிவீசத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போல என்றென்றும்
முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர் (தானி
12:3) என்கிறது இறைவார்த்தை. எனவே, நாம் இயேசுவின்
முன்மாதிரியைப் பின்பற்றி எழுந்து, ஒளிவீசுவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறையுரைச் சிந்தனை: அருள்பணி
மரிய அந்தோணி பாளையங்கோட்டை
எல்லாருக்குமான இறைவன்
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளை மறைமாவட்டம்.
நிகழ்வு
டோனி டி மெல்லோவின் கதை இது. ஓர் ஊரில் இறையடியார் ஒருவர்
இருந்தார். அவர் இறைவனைத் தொழாத நாளில்லை. அப்படிப்பட்டவர்
ஒருநாள் இறைவனிடம் மிக உருக்கமாக
வேண்டிக்கொண்டிருக்கும்போது, இறைவன் அவருக்கு முன்பாகத்
தோன்றினார். இறைவனின் தரிசனத்தை சிறிதும் எதிர்பார்த்திராத
இறையடியார், அவருக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
பின்னர் அவர் இறைவனைப் பார்த்து, இறைவா! உன் கருணையோ கருணை.
எளியவன் என்னைப் பார்க்க வந்திருக்கின்றாயே... சொல்லும்
உமக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்கிறேன் என்றார். உடனே
இறைவன் அவரைப் பார்த்து, எனக்கு ஃபுட்பால் ஆட்டம் பார்க்கவேண்டும்
என்று நீண்ட நாள் ஆசை. பக்கத்தில் எங்காவது ஃபுட்பால் ஆட்டம்
நடந்துகொண்டிருந்தால் என்னை அங்கு கூட்டிக்கொண்டு போவாயா?
என்று கேட்டார். இதோ உடனே கூட்டிக்கொண்டு போகிறேன் சாமி
என்று இறையடியார் இறைவனை ஃபுட்பால் ஆட்டம் நடைபெற இருந்த
ஒரு மைதானத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்.
அவர்கள் மைதானத்திற்குள் சென்ற சிறிது நேரத்தில் போட்டி
ஆரம்பமானது. அன்றைய நாளில் போட்டியானது கிறிஸ்தவர்கள் அணிக்கும்
சீக்கியர்கள் அணிக்கும் இடையே நடைபெற்றது. போட்டி தொடங்கிய
சிறுதுநேரத்திலே கிறிஸ்தவர்களின் அணியைச் சேர்ந்தவர்கள் முதல்
கோலைப் போட்டார்கள். இதைப் பார்த்துவிட்டு இறைவன் மிகவும்
உற்சாகமாகக் கத்தினார். தன்னுடைய தலையில் அணிந்திருந்த
தொப்பியை மேலும் கீழும் தூக்கிப் போட்டுப் பிடித்தார். இதைப்
பார்த்த இறையடியாருக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
இறைவன் ஃபுட்பால் ஆட்டத்தை நன்றாக இரசிக்கிறார் போலும்,
இரசிக்கட்டும் என்று நினைத்துவிட்டு, எதுவும் கேட்காமல்
அமைதியாக இருந்தார்.
நேரம் ஆக ஆக, போட்டி இன்னும் சூடுபிடித்தது. யாரும் எதிர்பாராத
தருணத்தில் சீக்கியர்களின் அணியைச் சேர்ந்தவர்கள் ஒரு
கோலைப் போட்டார்கள். இதைப் பார்த்துவிட்டு இறைவன்
முன்புபோல் உற்சாகத்தில் கத்தினார், தன்னுடைய தொப்பியைக்
கழற்றி மேலும் கீழும் தூக்கப் போட்டுப் பிடித்தார். இது இறையடியாருக்கு
இன்னும் ஆச்சரியத்தைத் தந்தது. உடனே அவர் இறைவனை அழைத்து,
இறைவா! நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்? கிறிஸ்தவ மதமா?
சீக்கிய மதமா? என்று கேட்டார். அதற்கு இறைவன், நான் எந்த
மதத்தைச் சார்ந்தவன் என்பதைவிட எல்லாருக்கும் சொந்தமானவன்,
எல்லாரும் என்னுடைய மக்கள். அதனால்தான் நான் இரு தரப்பினரும்
கோல்போட்ட போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன் என்றார்.
இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர். அவரை ஒரு குறிப்பிட்ட
பிரிவிற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட குலத்திற்கோ மட்டும்
சொந்தமாக்குவது அர்த்தமற்ற செயல்.
குழந்தை இயேசுவைத் தேடிவந்த ஞானிகள்
இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையினை
உணர்த்தும் திருக்காட்சி பெருவிழாவை அல்லது மூன்று
ஞானிகளுடைய பெருவிழாவை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம்.
வானவியல் அறிஞர்களான இந்த மூன்று பேருமே வானத்தில் தோன்றிய
விண்மீனைப் பார்த்துவிட்டு, யூதர்களின் அரசர்
தோன்றியிருக்கின்றார் என்று உறுதிசெய்துகொண்டு, அவரைப்
பார்க்க காணிக்கைப் பொருட்களோடு எருசலேமை நோக்கி
வருகிறார்கள். வந்து குழந்தை இயேசுவைச் தரிசிகிறார்கள்.
பின்னர் தங்களுடைய இல்லத்திற்கு மாற்றுப் பாதையில்
திரும்பிச் செல்கிறார்கள்.
இன்று இம்மூன்று ஞானிகளின் விழாவைக் கொண்டாடுகின்ற
இவ்வேளையில், இவ்விழா நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று
சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவன் வாக்கு மாறாதவர்
விண்மீன் வழிகாட்டுதலின் பேரில் எருசலேமிற்கு வந்த மூன்று
ஞானிகளும், அங்கிருந்த ஏரோது மன்னனிடம் சென்று,
யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரை வணங்க
வந்திருக்கிறோம்? என்கிறார்கள். இதைக் கேட்டு ஏரோது
கலங்கினாலும் தலைமைக் குருக்களையும் மறைநூல்கள்
அறிஞர்களையும் கூப்பிட்டு, மெசியா எங்கே பிறப்பார்?
என்று கேட்க, அவர்கள் பெத்லகேம் என்று சொல்கிறார்கள்.
இங்கேதான் நாம் ஒன்றை ஆழமாகச் சிந்தித்துப்
பார்க்கவேண்டும். மெசியா பெத்லகேமில்தான் பிறப்பார் என்ற
செய்தி மறைநூல் அறிஞர்களுக்கும் தலைமைக்குருக்களும்
தெரிந்தபோதும், அவர்கள் மூன்று ஞானிகள் சொன்னதைக் கேட்டு
இயேசுவை/மெசியாவைப் பார்க்கச் செல்லவில்லை. மாறாக மூன்று
ஞானிகள்தான் இறைவார்த்தையை நம்பி, இயேசுவைக் காணச்
செல்கின்றார்கள். கடைசியில் கண்டுகொள்ளவும் செய்கிறார்கள்.
இறைவன் சொன்ன சொல் மாறாதவர் (13:8), அப்படிப்பட்டவருடைய
வார்த்தைகளை நம்பிச் செயல்பட்ட மூன்று ஞானிகளைப் போன்று
நாமும் செயல்பட்டால், இறைவனின் ஆசிரைப் பெறுவது உறுதி.
இயேசு இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர்
இயேசுவைக் காணவந்த மூன்று ஞானிகளுமே யூதர்கள் அல்ல,
அவர்கள் புறவினத்தார். அப்படியிருந்தபோதும் யூதர்களின்
அரசர் (?) என்று அறியப்பட்ட இயேசு, அவர்களுக்கும் தன்னை
வெளிப்படுத்துகின்றார். இது ஆண்டவராகிய இயேசு யூதர்களுக்கு
மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையை மிகத்
தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இறைவன் எல்லாருக்கும்
பொதுவானவர் என்றால், இறைவன் என் குலத்திற்கு, என்
இனத்திற்கு மட்டும்தான் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடுவது
எந்த விதத்தில் நியாயம்? அது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்
தக்க ஒன்று.
இறைவன் எல்லாருக்கும் பொது என்றால், யாவரும் ஓர் குலம்,
ஒரு தாயின் மக்கள் என்பதுதான் நிஜம்
நேர்மையான உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடுவோர், அவரைக்
கண்டுகொள்வர்
திருக்காட்சிப் பெருவிழா நமக்குக் கொடுக்கும் மிக
முக்கியமான செய்தி, நாம் நேர்மையான உள்ளத்தோடு ஆண்டவரைத்
தேடினோம் என்றால், அவரை நிச்சயமாக கண்டுகொள்வோம்
என்பதாகும். மூன்று ஞானிகளும் இயேசுவை முழு மனதாக, அதே
நேரத்தில் நேர்மையான உள்ளத்தோடு தேடினார்கள். இடையில்
அவர்கள் ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்திருக்கக்கூடும்.
அவற்றைக் கண்டெல்லாம் அவர்கள் மனந்தளராமல் ஆண்டவரைத்
தேடினார்கள். இறுதியில் கண்டுகொள்ளவும் செய்தார்கள்.
நாமும் அவர்களைப் போன்று ஆண்டவரைத் தேடினால், நிச்சயம்
கண்டுகொள்வோம் என்பது உறுதி.
சிந்தனை
இன்றைக்கு கடவுளின் பெயராலே பிளவுபட்டுக் கிடக்கின்றோம்.
இந்தக் கோவில் எங்களுக்குத்தான் சொந்தம், அவர்கள் இதில்
வழிபட உரிமை என்று வேற்றுமை பாராட்டுகின்றோம். ஆனால்,
இறைவன் ஒருவர்தான், அவர் எல்லாருக்கும் பொதுவானவர்.
அப்படிப்பட்டவரை நாம் நம்மிடம் இருக்கின்ற வேறுபாடுகளைக்
களைந்து ஒற்றுமை உணர்வோடு வழிபடுவோம். அவரை முழு
உள்ளத்தோடு தேடி, அவருக்கு உகந்த மக்களாவோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
இயேசு ஒரு குறிப்பிட்ட இனத்தார்க்கு மட்டும் சொந்தமல்ல.
அவர் எல்லார்க்கும் சொந்தமானவர் என்பதைச் சுட்டிக்
காட்டுகிறது இன்றையப் பெருவிழா.
எட்டுத் திக்கு மக்களும் இறைவனின் மக்களே என்பதைச்
சுட்டிக்காட்டவே கிழக்கிலிருந்து (மத். 2:1) மூன்று
ஞானிகள் புறப்பட்டு இயேசுவைக் காணச் சென்றார்கள் என்று
திருவிவிலியம் கூறுகிறது.
இயேசு எல்லார்க்கும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக்
கொண்டு வந்தவர். இதனால்தான் அவர் பிறந்தபோது விண்ணகத்
தூதர் பேரணி, உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!
உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! (லூக்.
2:13-14) எனக் கடவுளைப் புகழ்ந்தது! ஆம். இயேசு நன்மனம்
படைத்த அனைவருக்கும் சொந்தமானவர்.
அவர் வாழ்ந்தபோது எந்த இனத்தாரையும் அவர் புறக்கணிக்க
வில்லை! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே,
எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு
இளைப்பாறுதல் தருவேன் (மத். 11:28) என்றார்.
அவர் சாகும்போது, தந்தையே இவர்களை மன்னியும் (லூக். 23:34)
எனச் சொல்லி பாவிகள் எல்லாருக்காகவும் செபித்தார்.
இன்றும் கேட்பவர்கள் அனைவருக்கும் தூய ஆவியைத் தந்து
(லூக். 11:9-13) அருங்கொடைகள் அனைத்திற்கும் ஆதி காரணமாக
விளங்கி வருகிறார்.
நமது ஆண்டவர் அனைவரையும் அன்பு செய்யும் ஆண்டவராக
விளங்குவதால், நாம் எந்த வேற்றுமையும் பாராட்டாது
அனைவருக்கும் அன்பு நண்பர்களாக விளங்க வேண்டும். பிற
இனத்தாரும் நமது பங்காளிகளே என்கிறார் புனித பவுல் (எபே.
3:6).
ஒளிவீசும் ஞாயிறைப் பார்க்கிறோம். அது வேற்றுமை
பாராட்டுவதில்லை !
குளிர் சிந்தும் திங்களைப் பார்க்கிறோம். அது வேற்றுமை
பாராட்டுவதில்லை!
ஆடி வரும் தென்றலைப் பார்க்கிறோம். அது வேற்றுமை
பாராட்டுவதில்லை.
ஓடி வரும் அருவியைப் பார்க்கிறோம். அது வேற்றுமை
பாராட்டுவதில்லை.
மலர், மணம், தேன், சுவை, கடல், கரை இவை யாவும் வேற்றுமை
பாராட்டுவதில்லை! நாம் மட்டும் ஏன் வேற்றுமை பாராட்ட
வேண்டும்? நாம் இயற்கையின் மணி மகுடமல்லவா?
அன்று ஒளியாய்ப் பிறந்து (எசா. 6:1) ஞான ஒளி வீசி பிற
இனத்தாரை தம்மை நோக்கி ஈர்த்தார் இயேசு! வந்தவர் அனைவரும்
அவரைக் கண்டு அவரிடமிருந்து அமைதியும், மகிழ்ச்சியும்,
நம்பிக்கையும் பெற்று வீடு திரும்பினர். அதேபோல
கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர்களை நம்பால் ஈர்க்கும்,
வாழ்வளிக்கும் ஒளி விளக்காகத் திகழ வேண்டும்.
ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா
இன்றைய வாசகங்கள்:-
எசாயா 60:1-6
எபேசியர் 3:2-3, 5-6
மத்தேயு 2:1-12
இயேசு ஒரு குறிப்பிட்ட இனத்தார்க்கு மட்டும் சொந்தமல்ல.
அவர் எல்லார்க்கும் சொந்தமானவர் என்பதைச் சுட்டிக்
காட்டுகிறது இன்றையப் பெருவிழா.
எட்டுத் திக்கு மக்களும் இறைவனின் மக்களே என்பதைச்
சுட்டிக்காட்டவே கிழக்கிலிருந்து (மத். 2:1) மூன்று ஞானிகள்
புறப்பட்டு இயேசுவைக் காணச் சென்றார்கள் என்று திருவிவிலியம்
கூறுகிறது.
இயேசு எல்லார்க்கும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக்
கொண்டு வந்தவர். இதனால்தான் அவர் பிறந்தபோது விண்ணகத் தூதர்
பேரணி, உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில்
அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! (லூக். 2:13-14)
எனக் கடவுளைப் புகழ்ந்த து! ஆம். இயேசு நன்மனம் படைத்த அனைவருக்கும்
சொந்தமானவர்.
அவர் வாழ்ந்தபோது எந்த இனத்தாரையும் அவர் புறக்கணிக்க
வில்லை! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும்
என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்
(மத். 11:28) என்றார்.
அவர் சாகும்போது, தந்தையே இவர்களை மன்னியும் (லூக். 23:34)
எனச் சொல்லி பாவிகள் எல்லாருக்காகவும் செபித்தார்.
இன்றும் கேட்பவர்கள் அனைவருக்கும் தூய ஆவியைத் தந்து
(லூக். 11:9-13) அருங்கொடைகள் அனைத்திற்கும் ஆதி காரணமாக
விளங்கி வருகிறார்.
நமது ஆண்டவர் அனைவரையும் அன்பு செய்யும் ஆண்டவராக விளங்குவதால்,
நாம் எந்த வேற்றுமையும் பாராட்டாது அனைவருக்கும் அன்பு நண்பர்களாக
விளங்க வேண்டும். பிற இனத்தாரும் நமது பங்காளிகளே என்கிறார்
புனித பவுல் (எபே. 3:6).
ஒளிவீசும் ஞாயிறைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை
!
குளிர் சிந்தும் திங்களைப் பார்க்கிறோம். அது வேற்றுமை
பாராட்டுவதில்லை!
ஆடி வரும் தென்றலைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை.
ஓடி வரும் அருவியைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை.
மலர், மணம், தேன், சுவை, கடல், கரை இவை யாவும் வேற்றுமை
பாராட்டுவதில்லை! நாம் மட்டும் ஏன் வேற்றுமை பாராட்ட
வேண்டும்? நாம் இயற்கையின் மணி மகுடமல்லவா?
அன்று ஒளியாய்ப் பிறந்து (எசா. 6:1) ஞான ஒளி வீசி பிற இனத்தாரை
தம்மை நோக்கி ஈர்த்தார் இயேசு! வந்தவர் அனைவரும் அவரைக் கண்டு
அவரிடமிருந்து அமைதியும், மகிழ்ச்சியும், நம்பிக்கையும்
பெற்று வீடு திரும்பினர். அதேபோல கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர்களை
நம்பால் ஈர்க்கும், வாழ்வளிக்கும் ஒளி விளக்காகத் திகழ
வேண்டும்.
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
இயேசு நமக்குக் காட்சி தருவாரா?
கடவுள் யாருக்குக் காட்சி கொடுப்பார் என்பதை இன்றைய விழா
நமக்குக் கற்பிக்கின்றது!
இயேசு பிறந்தபோது அவரை இடையர்கள் தேடிச் சென்றனர்; ஞானிகள்
தேடிச் சென்றார்கள்; ஏரோது மன்னன் தேடினான்; அவனுடைய ஆள்கள்
தேடினார்கள்.
ஆனால் முதல் இரண்டு பிரிவினருக்கு மட்டும்தான் இயேசு
காட்சித் தந்தார். ஏரோதிற்கும், அவனுடைய ஆள்களுக்கும் இயேசு
காட்சி தரவில்லை ! காரணம், இடையர்களும் ஞானிகளும் தங்களிடமுள்ளதை
இயேசுவுக்கு கொடுக்கச் சென்றார்கள். ஆனால் நரரோதும் அவனுடைய
ஆள்களும் இயேசுவின் உயிரை எடுக்க அவரைத் தேடினார்கள் (மத்
2:16-18).
இடையர்கள் தங்களது பாராட்டையும், மகிழ்ச்சியையும், பாடலையும்
இயேசுவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க அவரைத் தேடினார்கள்
(லூக் 2:20).
ஞானிகள் தங்கள் வணக்கத்தையும் (மத் 2:2) பொன்னையும்
சாம்பிராணியையும் வெள்ளைப் போளத்தையும் காணிக்கையாகக்
கொடுக்க இயேசுவைத் தேடினார்கள் (மத் 2:11).
எடுக்க நினைத்தவர்களுக்குக் குழந்தை இயேசு காட்சிக் கொடுக்கவில்லை;
கொடுக்க நினைத்தவர்களுக்கே அவர் காட்சி கொடுத்தார்!
கடவுள் நமக்குக் காட்சி தர வேண்டுமானால், அவரது ஆசியை நாம்
பெற விரும்பினால், நாம் நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும்!
கொடுப்பவர்களுக்கு இறைவனின் ஆசி கிட்டும் என்பதற்கு விவிலியத்திலிருந்து
இதோ இரண்டு உதாரணங்கள்.
ஆபிரகாமுக்கு வயது தொண்ணூற்றொன்பது (தொநூ 17:1). ஆனால் அவருக்குக்
குழந்தை இல்லை! அவரது மனைவி ஒரு கிழவி (தொநூ 18:12). ஆபிரகாம்
கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து வாழ்ந்தவர்! ஆனால் அவர்
கேட்ட பிள்ளை வரம் அவருக்குக் கிடைக்கவில்லை. உயர்ந்த, உன்னதமான
இறை நம்பிக்கையாளருக்குக் கடவுளுடைய ஆசி கிடைக்கவில்லை!
எப்போது அவருக்கு ஆசி கிடைத்தது தெரியுமா? அவர் முன்பின்
தெரியாத மூன்று மனிதர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து
உபசரித்தபோதுதான் அவருக்குக் குழந்தை வரம் கிடைத்தது (தொநூ
18:1-15).
புதிய ஏற்பாட்டில் பெரும்பாவியான சக்கேயு இயேசுவைப்
பார்த்து, ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக்
கொடுத்துவிடுகின்றேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி
எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத்
திருப்பிக் கொடுத்துவிடுகின்றேன் (லூக் 19:8) என்று கூறியபோதுதான்
சக்கேயுவுக்கு இயேசு மீட்பராகக் காட்சியளிக்கின்றார்.
இயேசுவுக்கு ஒருவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது
முக்கியமில்லை. ஞானிகள் கிழக்கிலிருந்து எருசலேமுக்கு வந்தார்கள்.
இயேசுவுக்கு ஒருவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதும்
முக்கியமல்ல (முதல், இரண்டாம் வாசகங்கள்). ஞானிகள் யூத இனத்தைச்
சேர்ந்தவர்கள் அல்ல.
இயேசுவுக்கு வேண்டியதெல்லாம் அவர்களுக்குக் கொடுக்கும் மனம்
உள்ளதா என்பதுதான். நாம் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பது
பாராட்டுக்குரிய ஒன்றாகும். ஆனால் அதே நேரத்தில் புனித
யாக்கோபு சொல்வதையும் நம் நினைவில் கொள்ளவேண்டும். கடவுள்
ஒருவரே என்பதை நீங்கள் நம்புகின்றீர்கள்; நல்லதுதான். பேய்களும்கூட
அவ்வாறு நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன (யாக் 2:19). நம்மிடம்
நம்பிக்கை உண்டு என்றால் அதைச் செயலில் காட்ட வேண்டும்
(யாக் 2:14) என்கின்றார் புனித யாக்கோபு.
செயல்களிலெல்லாம் சிறந்த செயல் நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்குக்
கொடுத்தலாகும் (1 கொரி 13:13).
ஞானிகளிடமிருந்தது போல, நம்மிடம் பொருளிருந்தால்
பெட்டியைத் திறந்து மற்றவர்க்குப் பொருளைக் கொடுப்போம்; அது
இல்லையென்றால் இடையர்களைப் போன்று நமது அர்த்தமுள்ள
வார்த்தைகளை சிறப்பாக வறியோருக்கு வாரி வழங்குவோம்!
அப்போது எந்தக் குழந்தை இயேசு ஞானிகளுக்கு காட்சியளித்தாரோ
அதே குழந்தை இயேசு நமக்கும் காட்சியளித்து நமக்கு ஆசியளிப்பார்.
மேலும் அறிவோம்:
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் (குறள் : 229).
பொருள் : பெரிதும் தேடித் திரட்டிய பொருள் அனைத்தையும் பிறருக்குக்
கொடுத்தால் குறையுமோ என்று தாமே சுவைப்பது, பிறரிடம்
கையேந்திக் கெஞ்சிக் கேட்பதைக் காட்டிலும் கொடிய செயலாகும்.
கத்தோலிக்கர் ஒருவர் விண்ணகம் சென்றார். விண்ணகத்தின்
நடுவே ஒரு பெரிய குறுக்குச் சுவரைக் கண்டு பேதுருவிடம்,
"
இந்தக் குறுக்குச் சுவருக்கு மறுபுறம் யாராவது
இருக்கின்றார்களா?" என்று அவர் கேட்டதற்கு, பேதுரு
அவரிடம், "நீங்கள் விண்ணகத்துக்கு வரமாட்டார்கள் என்று
நினைத்த மற்ற மதத்தைச் சார்ந்தவர்களெல்லாம் மறுபுறத்தில்
இருக்கின்றனர்"
என்றார்! கிறிஸ்தவர்கள் மட்டும்தான்
மீட்படைவார்கள், மற்ற மதத்தினர் எல்லாம் நரகத்துக்குச்
செல்வார்கள் என்று ஒரு சிலர் நினைக்கின்றனர். அவ்வாறே
யூதர்களும் நினைத்தனர், யூதர்கள் தான் மீட்படைவர்; பிற
இனத்தவர் நரகத்தை எரியூட்டும் மரக்கட்டைகளாகக் கடவுளால்
பயன்படுத்தப்படுவர் என்று அவர்கள் தப்பாக நினைத்தனர்.
ஆனால், கடவுள் எல்லா மனிதரும் மீட்படைய விரும்புகிறார் (1
திமொ 2:4). எந்த இனத்தவரும் கடவுளுக்கு அஞ்சி, அவருக்கு
ஏற்புடையதைச் செய்தால் அவர்களும் மீட்படைவர் (திப் 10:35).
மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டும் உரிய தனியுடைமையன்று,
மாறாக அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொதுவுடைமை என்பதை
இன்றைய பெருவிழாவும், இன்றைய அருள்வாக்கு வழிபாடும்
தெளிவாக உணர்த்துகின்றன. மக்களினத்தார் அனைவரும் உன் ஒளியை
நோக்கி வருவர் (முதல் வாசகம்). மக்களினத்தார் அனைவரும்
அவரை வணங்குவர். அவருக்கு ஊழியம் புரிவர் (பதிலுரைப்
பாடல்), நற்செய்தியின் வழியாகப் பிற இனத்தவரும்
சுவாக்குறுதியின் உடன்பங்காளிகள் (இரண்டாம் வாசகம்). பிற
இலாத்தைச் சார்ந்த ஞானிகள் கீழ்த்திசையிலிருந்து பெத்லகேம்
வந்து குழந்தை இயேசுவை ஆராதித்துக் காணிக்கை செலுத்தினர்
(நற்செய்தி).
இன்றைய விழா பிற இனத்தைச் சார்ந்த நம்முடைய விழா. பிற
இனத்தவராகிய நம்மையும் கடவுள் இருளிலிருந்து தமது வியத்தகு
ஒளிக்கு அழைத்துள்ளார். நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம்;
அரச | குருக்களின் திருக்கூட்டம்: தூய மரபினர்; கடவுளின்
உரிமைச் சொத்தான மக்கள் (1 பேது 2:9), எனவே, நாம்
கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். பொன்னையும், தூபத்தையும்,
வெள்ளைப் போளத்தையுமல்ல, நம்மையே கடவுளுக்குக் காணிக்கையாக
ஒப்புக் கொடுப்போம். மற்றவர்களை நமது ஒளிமயமான அன்பு
வாழ்வால் கிறிஸ்துவிடம் கொண்டு வரும் விண்மீனாகச்
செயல்படுவோம், கீழ்த்திசை ஞானிகள் நமக்குக் கற்றுக்
கொடுக்கும் பாடம் என்ன ? எத்தகைய தடைகள் வந்தாலும் நமது
குறிக்கோளை அடைய வேண்டும். நாம் எண்ணுவது திண்ணமாக
இருந்தால் நாம் எண்ணுவதைக் கட்டாயம் அடைவோம் என்பதில்
ஐயமில்லை .
எந்த விண்மீனை நம்பி ஞானிகள் தங்கள் பயணத்தைத் தொடங்கினரோ
அந்த விண்மீன் மறைந்துவிட்டது. ஆனால் அவர்கள் அதனால்
மனமுடைந்து போகவில்லை, முன்வைத்த காலைப் பின்வைக்கவில்லை.
மன்னன் ஏரோது ஒரு கொடுங்கோலன் என்பதை அவர்கள்
அறிந்திருந்தும் அவர்கள் அவனிடம் சென்று தேவையான
தடயங்களைப் பெற்று, தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மறைந்த
விண்மீன் மீண்டும் தோன்றியது. அதன் துணையுடன் பெத்லகேம்
சென்று குழந்தை இயேசுவை அதன் தாய் மரியாவுடன் கண்டு
ஆராதித்து, காணிக்கை செலுத்தினர். "கலப்பையில் கைவைத்தபின்
திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத்
தகுதியுள்ளவர் அல்ல" (லூக் 9:62) என்று ஆண்டவர் கூறிய
அருள்வாக்கிற்கு அவர்கள் சிறந்ததோர் இலக்கணமாகத்
திகழ்கின்றனர்.
நமது வாழ்க்கையில் நமக்கென்று ஓர் இலட்சியம் வேண்டும். ஒரு
மாணவன் ஒரு பாடப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான்.
ஒரு பெரியவர் அவனிடம், "படித்து முடித்தவுடன் என்ன
செய்வாய்?"
என்று கேட்டதற்கு, "புத்தகத்தை மூடிவிடுவேன்"
என்றான். இன்று எத்தனையோ இளைஞர்கள் தங்கள் வாழ்வில்
எத்தகைய கொள்கைப் பிடிப்போ இலட்சியமோயின்றித் தங்கள்
பொன்னான வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர், அவர்களைப்
பார்த்துக் குடியரசுத் தலைவர் "கனவு காணுங்கள்" என்று
அறிவுறுத்துகிறார். ஆனால், அவர்களோ "தாவணிக் கனவுகள்"
காண்கின்றனர். "ஆடிக்குப் பின் ஆவணி, தாடிக்குப் பின்
தாவணி"
என்ற புதிய பழமொழி உருவாகியுள்ளது; வேடிக்கையாகவும்
வேதனையாகவும் உள்ளது. ஒரு சிலர் வாழ்வில் ஏற்பட்ட
தோல்விகளைத் தாங்கிக் கொள்ள இயலாது. தற்கொலை முயற்சியில்
இறங்குகின்றனர். தற்கொலை செய்ய முடிவு கட்டிய ஓர் இளைஞன்
ஒருவருடைய, ஒரு மணி நேரச் சொற்பொழிவைக் கேட்ட பின்பு
அவரிடம், "உங்களின் சொற்பொழிவு எனது தற்கொலை முயற்சியைத்
தடுத்து நிறுத்தி விட்டது" என்றான். சொற்பொழிவாளர்
அவனிடம், "எவ்வாறு?" என்று கேட்டார். அவன் அவரிடம்,
"இவ்வளவு மோசமான சொற்பொழிவு ஆற்றுகிறவர்கள் எல்லாம்
உயிரோடு இருக்கும் போது, நான் ஏன் தற்கொலை செய்யவேண்டும்?"
என்று பதில் சொன்னான்.
. நமது வாழ்வில் நமக்குப் பெரிய எதிரி தாழ்வு மனப்பான்மை,
நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மைக் குறைவாக எடைபோடக்
கூடாது. தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்கள் இங்கிலாந்து
பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர் கூறியுள்ளதை நினைவில்
நிறுத்த வேண்டும், "காலையில் கூவுவது சேவலாக இருக்கலாம்,
ஆனால் முட்டையிடுவது, பெட்டைக் கோழி மட்டும்தான்.
வாழ்க்கை என்பது ஒரு தொடர் தேடல். 'தேடல் உள்ளவர்களுக்கே
வாழ்க்கையில் பசி இருக்கும், தேடல் உள்ளவரை வாழ்வில்
ருசியிருக்கும்", ஞானிகள் தேடினர்; தாங்கள் தேடியதைக்
கண்டடைந்தனர், நாமும் தேட வேண்டும்; நல்லவற்றைத்
தேடவேண்டும். "தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்"
(லூக்
11:9) என்று கிறிஸ்து நமக்கு உறுதி மொழி அளித்துள்ளார்.
வாழ்க்கை என்பது ஒரு கடல், கொந்தளிக்காத கடல் உண்டா?
வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். காயமில்லாத போர்க்களம்
உண்டா? வாழ்க்கை என்பது ஒரு வேள்வி. தீ இல்லாத வேள்வி
உண்டா? வாழ்க்கை என்றால் என்ன என்று ஒரு மலையைக்
கேட்டதற்கு, "ஏறிப் பார் என்றது". வாழ்க்கை என்றால் என்ன
என்று ஒரு ஆற்றைக் கேட்டதற்கு, "குதித்துப் பார்"
என்றது.
ஒருவர் ஓர் எறும்பைப் பார்த்து, "நீ எப்படி இவ்வளவு
சுறுசுறுப்பாய் இருக்கின்றாய்?" என்று கேட்டதற்கு அந்த
எறும்பு, "உன்னைப்போல் வீண்பேச்சுப் பேச எனக்கு நேரமில்லை.
வாழ்வில் முன்னேற வேண்டுமென்றால், என்னோடு தரையில் ஊர்ந்து
வா" என்றது. புலர்ந்துள்ள புத்தாண்டில், ஞானிகளைக் கண்முன்
கொண்டு, புத்தொளி பெறுவோம், தடைக்கற்களைப் படிக்கற்களாகக்
கொண்டு புதிய சாதனை படைப்போம்.
வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சுப் போல சுவாசிப்போம்.- திரைப்படப்பாடல்
அமெரிக்காவில் மூலதனம் இருக்கலாம். ஆனால் இந்தியாவில்
மூளைதனம் இருக்கிறது. சிந்திப்போம்! செயல்படுவோம்!
ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா
இன்றைய வாசகங்கள்:-
எசாயா 60:1-6
எபேசியர் 3:2-3, 5-6
மத்தேயு 2:1-12
கத்தோலிக்கர் ஒருவர் விண்ணகம் சென்றார். விண்ணகத்தின் நடுவே
ஒரு பெரிய குறுக்குச் சுவரைக் கண்டு பேதுருவிடம், "இந்தக்
குறுக்குச் சுவருக்கு மறுபுறம் யாராவது இருக்கின்றார்களா?"
என்று அவர் கேட்டதற்கு, பேதுரு அவரிடம், "நீங்கள் விண்ணகத்துக்கு
வரமாட்டார்கள் என்று நினைத்த மற்ற மதத்தைச் சார்ந்தவர்களெல்லாம்
மறுபுறத்தில் இருக்கின்றனர்" என்றார்! கிறிஸ்தவர்கள் மட்டும்தான்
மீட்படைவார்கள், மற்ற மதத்தினர் எல்லாம் நரகத்துக்குச்
செல்வார்கள் என்று ஒரு சிலர் நினைக்கின்றனர். அவ்வாறே யூதர்களும்
நினைத்தனர், யூதர்கள் தான் மீட்படைவர்; பிற இனத்தவர் நரகத்தை
எரியூட்டும் மரக்கட்டைகளாகக் கடவுளால் பயன்படுத்தப்படுவர்
என்று அவர்கள் தப்பாக நினைத்தனர். ஆனால், கடவுள் எல்லா மனிதரும்
மீட்படைய விரும்புகிறார் (1 திமொ 2:4). எந்த இனத்தவரும்
கடவுளுக்கு அஞ்சி, அவருக்கு ஏற்புடையதைச் செய்தால் அவர்களும்
மீட்படைவர் (திப் 10:35). மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டும்
உரிய தனியுடைமையன்று, மாறாக அது எல்லா இனத்தாருக்கும் உரிய
பொதுவுடைமை என்பதை இன்றைய பெருவிழாவும், இன்றைய அருள்வாக்கு
வழிபாடும் தெளிவாக உணர்த்துகின்றன. மக்களினத்தார் அனைவரும்
உன் ஒளியை நோக்கி வருவர் (முதல் வாசகம்). மக்களினத்தார் அனைவரும்
அவரை வணங்குவர். அவருக்கு ஊழியம் புரிவர் (பதிலுரைப் பாடல்),
நற்செய்தியின் வழியாகப் பிற இனத்தவரும் சுவாக்குறுதியின்
உடன்பங்காளிகள் (இரண்டாம் வாசகம்). பிற இலாத்தைச் சார்ந்த
ஞானிகள் கீழ்த்திசையிலிருந்து பெத்லகேம் வந்து குழந்தை இயேசுவை
ஆராதித்துக் காணிக்கை செலுத்தினர் (நற்செய்தி).
இன்றைய விழா பிற இனத்தைச் சார்ந்த நம்முடைய விழா. பிற இனத்தவராகிய
நம்மையும் கடவுள் இருளிலிருந்து தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளார்.
நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம்; அரச | குருக்களின்
திருக்கூட்டம்: தூய மரபினர்; கடவுளின் உரிமைச் சொத்தான மக்கள்
(1 பேது 2:9), எனவே, நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவோம்.
பொன்னையும், தூபத்தையும், வெள்ளைப் போளத்தையுமல்ல, நம்மையே
கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுப்போம். மற்றவர்களை
நமது ஒளிமயமான அன்பு வாழ்வால் கிறிஸ்துவிடம் கொண்டு வரும்
விண்மீனாகச் செயல்படுவோம், கீழ்த்திசை ஞானிகள் நமக்குக் கற்றுக்
கொடுக்கும் பாடம் என்ன ? எத்தகைய தடைகள் வந்தாலும் நமது
குறிக்கோளை அடைய வேண்டும். நாம் எண்ணுவது திண்ணமாக இருந்தால்
நாம் எண்ணுவதைக் கட்டாயம் அடைவோம் என்பதில் ஐயமில்லை .
எந்த விண்மீனை நம்பி ஞானிகள் தங்கள் பயணத்தைத் தொடங்கினரோ
அந்த விண்மீன் மறைந்துவிட்டது. ஆனால் அவர்கள் அதனால் மனமுடைந்து
போகவில்லை, முன்வைத்த காலைப் பின்வைக்கவில்லை. மன்னன் ஏரோது
ஒரு கொடுங்கோலன் என்பதை அவர்கள் அறிந்திருந்தும் அவர்கள்
அவனிடம் சென்று தேவையான தடயங்களைப் பெற்று, தங்கள் பயணத்தைத்
தொடர்ந்தனர். மறைந்த விண்மீன் மீண்டும் தோன்றியது. அதன்
துணையுடன் பெத்லகேம் சென்று குழந்தை இயேசுவை அதன் தாய் மரியாவுடன்
கண்டு ஆராதித்து, காணிக்கை செலுத்தினர். "கலப்பையில்
கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு
உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" (லூக் 9:62) என்று ஆண்டவர்
கூறிய அருள்வாக்கிற்கு அவர்கள் சிறந்ததோர் இலக்கணமாகத் திகழ்கின்றனர்.
நமது வாழ்க்கையில் நமக்கென்று ஓர் இலட்சியம் வேண்டும். ஒரு
மாணவன் ஒரு பாடப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான்.
ஒரு பெரியவர் அவனிடம், "படித்து முடித்தவுடன் என்ன
செய்வாய்?" என்று கேட்டதற்கு, "புத்தகத்தை மூடிவிடுவேன்"
என்றான். இன்று எத்தனையோ இளைஞர்கள் தங்கள் வாழ்வில் எத்தகைய
கொள்கைப் பிடிப்போ இலட்சியமோயின்றித் தங்கள் பொன்னான
வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர், அவர்களைப்
பார்த்துக் குடியரசுத் தலைவர் "கனவு காணுங்கள்" என்று அறிவுறுத்துகிறார்.
ஆனால், அவர்களோ "தாவணிக் கனவுகள்" காண்கின்றனர். "ஆடிக்குப்
பின் ஆவணி, தாடிக்குப் பின் தாவணி" என்ற புதிய பழமொழி உருவாகியுள்ளது;
வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. ஒரு சிலர் வாழ்வில்
ஏற்பட்ட தோல்விகளைத் தாங்கிக் கொள்ள இயலாது. தற்கொலை முயற்சியில்
இறங்குகின்றனர். தற்கொலை செய்ய முடிவு கட்டிய ஓர் இளைஞன்
ஒருவருடைய, ஒரு மணி நேரச் சொற்பொழிவைக் கேட்ட பின்பு அவரிடம்,
"உங்களின் சொற்பொழிவு எனது தற்கொலை முயற்சியைத் தடுத்து
நிறுத்தி விட்டது" என்றான். சொற்பொழிவாளர் அவனிடம், "எவ்வாறு?"
என்று கேட்டார். அவன் அவரிடம், "இவ்வளவு மோசமான சொற்பொழிவு
ஆற்றுகிறவர்கள் எல்லாம் உயிரோடு இருக்கும் போது, நான் ஏன்
தற்கொலை செய்யவேண்டும்?" என்று பதில் சொன்னான்.
நமது வாழ்வில் நமக்குப் பெரிய எதிரி தாழ்வு மனப்பான்மை, நம்மை
மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மைக் குறைவாக எடைபோடக் கூடாது.
தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்கள் இங்கிலாந்து பிரதமராக இருந்த
மார்கரெட் தாட்சர் கூறியுள்ளதை நினைவில் நிறுத்த வேண்டும்,
"காலையில் கூவுவது சேவலாக இருக்கலாம், ஆனால் முட்டையிடுவது,
பெட்டைக் கோழி மட்டும்தான்". வாழ்க்கை என்பது ஒரு தொடர் தேடல்.
"தேடல் உள்ளவர்களுக்கே வாழ்க்கையில் பசி இருக்கும், தேடல்
உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்", ஞானிகள் தேடினர்; தாங்கள்
தேடியதைக் கண்டடைந்தனர், நாமும் தேட வேண்டும்; நல்லவற்றைத்
தேடவேண்டும். "தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்" (லூக்
11:9) என்று கிறிஸ்து நமக்கு உறுதி மொழி அளித்துள்ளார்.
வாழ்க்கை என்பது ஒரு கடல், கொந்தளிக்காத கடல் உண்டா?
வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். காயமில்லாத போர்க்களம் உண்டா?
வாழ்க்கை என்பது ஒரு வேள்வி. தீ இல்லாத வேள்வி உண்டா?
வாழ்க்கை என்றால் என்ன என்று ஒரு மலையைக் கேட்டதற்கு, "ஏறிப்
பார் என்றது". வாழ்க்கை என்றால் என்ன என்று ஒரு ஆற்றைக்
கேட்டதற்கு, "குதித்துப் பார்" என்றது. ஒருவர் ஓர் எறும்பைப்
பார்த்து, "நீ எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாய் இருக்கின்றாய்?"
என்று கேட்டதற்கு அந்த எறும்பு, "உன்னைப்போல் வீண்பேச்சுப்
பேச எனக்கு நேரமில்லை. வாழ்வில் முன்னேற வேண்டுமென்றால்,
என்னோடு தரையில் ஊர்ந்து வா" என்றது. புலர்ந்துள்ள
புத்தாண்டில், ஞானிகளைக் கண்முன் கொண்டு, புத்தொளி
பெறுவோம், தடைக்கற்களைப் படிக்கற்களாகக் கொண்டு புதிய சாதனை
படைப்போம்.
வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சுப் போல சுவாசிப்போம்.- திரைப்படப்பாடல்
அமெரிக்காவில் மூலதனம் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் மூளைதனம்
இருக்கிறது. சிந்திப்போம்! செயல்படுவோம்!
தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
இன்றைய வாசகங்கள்:-
எசாயா 60:1-6
எபேசியர் 3:2-3, 5-6
மத்தேயு 2:1-12
நான்காவது ஞானி - திருக்காட்சிப் பெருவிழா
ஒருநாள் வான்வெளியில் சூரியன், சந்திரன், விண்மீன்களுக்கு
இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. "நானே பெரியவன். நான் இல்லாமல்
ஒளியேது? உயிரேது? நிலவு கூட என்னிடமிருந்துதான் ஒளியைப்
பெறுகிறாய்" என்றது சூரியன். "அழகு என்றாலே நான் தானே. கவிஞனின்
கண்ணில் படுகிறேன். கனவாக என்னை நினைத்த மனிதனே தேடிவந்து
என்னில் கால் பதித்து விட்டான்" என்றது சந்திரன். மௌனமாக
இருந்த விண்மீன் வாய்திறந்து சொன்னது: "இறைவன் குழந்தையாகப்
பிறந்த போது என் ஒளிதானே அவரது பிறப்பை அறிவித்தது.
கீழ்த்திசை ஞானிகளை வழிநடத்தி அவரைக் கண்டடையச் செய்தது.
இன்று கூட அவருடைய பிறப்பு விழாவுக்குக் கிறிஸ்மஸ் நட்சத்திரமாக
எவ்வளவு சிறப்புச் சேர்க்கிறேன்..." அதற்கு மேல் சூரியனால்,
சந்திரனால் எதுவும் பேச முடியவில்லையாம்!
அந்த விண்மீன் "யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்.
இஸ்ரயேலிலிருந்து செங்கோல் என்று எழும்பும்" எனத் தூய ஆவியால்
ஏவப்பட்டு பிலயாம் உரைத்த யாக்கோபின் குலக்கொழுந்தாக இருக்கலாம்
(எண்.2417). இறைவாக்கினர் எசாயா குறிப்பிட்டது போல் "எழு!
ஒளி வீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்
மேல் உதித்துள்ளது. பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்" (எசா.
60:1-3). இஸ்ரயேல் மக்கள் மேல் பெருமளவில் தோன்றிய இறைமாட்சிமையாக
இருக்கலாம். கீழ்த்திசை ஞானிகள் கண்டது அந்த மாட்சிமையின்
வெளிப்பாடு.
கிறிஸ்துதான் உலகை மீட்கும் உன்னத ஒளி என்ற இறைவெளிப்பாட்டினைத்
தொடக்ககாலத் திருச்சபையில் பவுல் எபேசியரோடு எப்படியெல்லாம்
பகிர்ந்து கொள்கிறார்! "நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும்
கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும்
வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே
அம்மறைபொருள்" (எபே.3:6)
ஒளியானது பாவ இருளைச் சுட்டெரிக்கும் தீப்பிழம்பாகும். இருளைப்
புறங்காணச் செய்யும். இருண்ட இதயத்தில் நம்பிக்கைத் தீபத்தை
ஏற்றும். பகைமையை நீக்கும். பாசத்தைப் பெருக்கும். அப்படிப்
பட்ட ஒளியாய் இயேசுவைக் கண்டு வணங்கி மகிழ்ந்தனர். பிற இனத்து
ஞானிகள். ஆனால் இயேசுவின் பிறப்பைக் கேட்டதும் "ஏரோது அரசன்
கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று"" (மத்.2:3)
பிறருடைய அரசை வீழ்த்தவா இயேசு வந்தார்? எல்லா மக்களும்
வாழ்வு பெற வேண்டும் என்றுதானே அவர் பிறப்பெடுத்தார்!
திறந்த மனம், தேடும் ஏக்கம் இருந்தால் எந்த நிலையிலும் அந்தத்
தெய்வத்தைக் காணலாம்.
"நான்காவது ஞானி" (The fourth magi) என்பது ஒரு கற்பனைக்
கதை. அருத்தாபன் என்ற நான்காவது ஞானி மற்ற மூவருடன் தொடர்பு
கொண்டு மெசியாவைத் தரிசிக்கச் செல்ல ஏற்பாடாகி இருந்தது.
குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அறிவிக்கப் பட்டிருந்தார்.
ஆனால் இவர் தாமதமாகிவிடவே, மற்ற மூவரும் மூன்று திசைகளிலிருந்து
புறப்பட்டு விண்மீன் வழியே நடக்க ஆரம்பித்து விட்டனர். அருத்தாபன்
வந்த போது ஞானிகளைக் காணவில்லை. அவர் கையில் விலையுயர்ந்த
மூன்று முத்துக்கள். அவர்கள் சென்ற பாதையைக் கேட்டறிந்தார்.
அதுவோ மிகப் பெரிய பாலைவனம். தன் குதிரையால் கடக்க
முடியாது. ஆனால் மெசியாவைத் தரிசிக்க வேண்டும். என்ன செய்வது?
மெசியாவுக்கென வைத்திருந்த மூன்று முத்துக்களில் ஒன்றை
விற்று ஒட்டகம் வாங்கினார். பாலைவனம் கடந்தார். பல ஆண்டுகளாயின.
மெசியாவை மட்டும் பார்க்க முடியவில்லை. அங்கு
விசாரித்தார். ஒருவருக்கும் தெரியவில்லை. தான் இருப்பது பாலஸ்தீன்
நாடு என்பது மட்டும் தெரிந்தது. இரண்டு முத்துக்களைப்
பொக்கிஷம் போல் பாதுகாத்து மெசியாவுக்கென வைத்திருந்தார்.
அதோ, தொலைவில் ஒரு பெண் தலைவிரி கோலமாக ஒடி வருகிறாள்.
பின்னால் ஒரு பெரிய யூதக் கூட்டமே அவளைத் துரத்தி வருகிறது.
அந்தப் பெண் ஓடிவந்து இவர் காலில் விழுந்து கதறுகிறாள். விபச்சாரத்தில்
பிடிபட்டவளாம், கல்லால் எறிந்து கொல்லப் போகிறார்களாம்.
புரிந்தது அருத்தாபனுக்கு. அவளைப் பின்னுக்குத் தள்ளி, தலைமைக்
குருவைத் தனியே அழைத்துப் பேசி அவர் கையில் இரண்டாவது
முத்தை அழுத்தினார். கற்கள் எல்லாம் கீழே விழுந்தன. கண்ணீரோடு
நன்றி சொன்னாள் அந்தப் பெண்.
சில ஆண்டுகள் கழிந்தன. அருத்தாபனுக்கு வயதாகிவிட்டது. சாவதற்கு
முன்பாவது மெசியாவை நான் பார்க்க முடியுமா? என்ற கேள்வியை
நெஞ்சத்திலும் எஞ்சிய ஒரு முத்தைக் கையிலும் வைத்துக்
கொண்டு கூனிக்கூனிச் சென்ற அர்த்தாபனுக்கு அந்தக்கூட்டம்
புரிபடவில்லை. கேட்டார். யாரோ மெசியாவாம். தெய்வ நிபந்தனைக்காக
அந்த மனிதனைக் கொல்லப் போகிறார்களாம். ஒடினார். எங்கும்
கூட்டம் காவலர்கள் தடுத்தனர். வீட்டின் தாழ்வாரத்தில்
நின்று மெசியாவைப் பார்க்க கடைசி முத்தையும் கொடுத்து
விட்டு ஏறி நின்றார். மெசியாவின் பின்புறம் மட்டும் அவர்
கண்ணில் பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் கூரை சரிய ஒடுகள்
அருத்தாபனின் தலையைத் தாக்க, ரத்தம் வழியக் கீழே
விழுகிறார். அருத்தாபன் சாகும் தறுவாயில் நினைவற்று அவர்
முனகுவதை அருகிலிருந்த காவலர்கள் கேட்கின்றனர்: "எப்போது
ஆண்டவரே நான் உம்மைப் பார்த்தேன்? எப்போது ஆண்டவரே நான்
உமக்கு உதவி செய்தேன்?..
இறைவன் ஏதோ ஒரு விதத்தில் தன்னை வெளிப்படுத்தத்தான்
செய்கிறார். மிகச்சிறியவற்றிலும் மிக எளியவற்றிலும் தன் முகத்தைக்
காட்டக் கூடும். அதைக் கண்டுபிடிக்கும், உணர்ந்து அறியும்
ஞானம் நமக்கு வேண்டும். கனவுகள், நிகழ்வுகள், உள்மன எச்சரிப்புகள்,
அனுபவ உணர்வுகள் இவை எல்லாவற்றையும் புரிந்து வாழ்க்கையில்
உண்மையையும் நன்மையையும் தேடிக் கண்டுபிடிப்பவர்களாக நாம்
இருக்க வேண்டும். அப்போது நாமும் ஞானிகளே!
திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
திட்டங்கள்...
திட்டவட்டமான செயல்கள்
மகன் தந்தையிடம் புதிர் கேள்வியொன்றைத் தொடுத்தான். "
ஒரு
குளத்தின் கரையில் மூன்று தவளைகள் அமர்ந்திருந்தன.
அவற்றில் ஒன்று குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. மீதி
எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?"
என்று கேட்டான். "
இது
என்ன பெரிய புதிர்... மீதி இரண்டு தவளைகள் இருக்கும்"
என்று பெருமையாகச் சொன்னார் தந்தை.
"
அப்பா, கேள்வியைச் சரியாகப் புரிந்து கொண்டு பதில்
சொல்லுங்கள். மூன்று தவளைகளில் ஒன்று குளத்தில் குதிக்கத்
தீர்மானித்தது. மீதி எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?"
என்று கேள்வியை மீண்டும் சொன்னான்.
அப்பா எதையோ புரிந்து கொண்டவர் போல், "
ஓ, புரிகிறது...
கரையில் ஒன்றும் மீதி இருக்காது. ஒரு தவளை குதித்ததும்,
மற்றவைகளும் குளத்திற்குள் குதித்துவிடும்"
என்று
சொன்னார். அவரது அறிவுத் திறனை அவரே மெச்சிக்
கொண்டதைப்போல் புன்னகை பூத்தார். "
அப்பா, மீண்டும் தவறாகச்
சொல்கிறீர்கள்"
என்று மகன் தலையில் அடித்துக்கொண்டு,
விளக்கத் தொடங்கினான்: "
மூன்று தவளைகளும் கரையில்தான்
இருக்கும். அவைகளில் ஒன்று குளத்திற்குள் குதிக்கத்
தீர்மானம் செய்ததே ஒழிய, இன்னும் குதிக்கவில்லை"
என்று
விளக்கம் கொடுத்தான். தந்தையின் முகத்தில் இறுக்கம்
தெரிந்தது. இலேசாகக் கொஞ்சம் அசடும் வழிந்தது.
சில நாட்களுக்கு முன் நாம் ஆங்கிலப் புத்தாண்டு நாளைக்
கொண்டாடினோம். ஒவ்வோர் ஆண்டின் துவக்கத்திலும் நாம்
புத்தாண்டுத் தீர்மானங்கள் எடுக்கிறோம், திட்டங்கள்
தீட்டுகிறோம். தீர்மானங்களும், திட்டங்களும் மனதளவில்
நின்றுவிட்டால் பயனில்லை. அவை செயல்வடிவம் பெறவேண்டும்.
தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவேண்டும் என்ற பாடத்தை
இன்றையத் திருக்காட்சிப் பெருவிழா நமக்குச்
சொல்லித்தருகிறது. மூன்று இராசாக்கள், மூன்று அரசர்கள்,
மூன்று ஞானிகள் என்று பலவாறாக அழைக்கப்படும் இன்றைய விழா
நாயகர்கள் நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். எந்தத் தடை
வந்தாலும், எடுத்தத் தீர்மானத்தில் உறுதியாய் இருந்த
இவர்களை, தீர்மானங்களின் பாதுகாவலர்கள் எனக் கொண்டாடலாம்.
மூன்று ஞானிகளும் ஒரு விண்மீனைக் கண்டதால், கடினமானதொரு
பயணம் மேற்கொண்டனர். இவர்கள் கண்ட அதே விண்மீனை இன்னும்
பல்லாயிரம் பேர் பார்த்திருப்பர். ஆனால், ஏனையோருக்கு அது
வெறும் விண்மீனாய் பளிச்சிட்டது, நமது புத்தாண்டுத்
தீர்மானங்களைப் போல... அவ்வளவுதான்... மூன்று ஞானிகளுக்கோ
அந்த விண்மீன் ஓர் அழைப்பாகத் தெரிந்தது. அவர்கள் அந்த
விண்மீனைத் தொடரத் தீர்மானித்தனர். அவர்களது தீர்மானத்தைக்
கேட்ட அவரது குடும்பத்தினர், உறவினர், ஊர்மக்கள் அவர்களைக்
கேள்விக்குறியுடன் பார்த்திருக்கலாம். கேலி
செய்திருக்கலாம். அவர்களது கேள்விகளும், கேலிகளும்
இம்மூன்று ஞானிகளின் உறுதியைக் குறைக்கவில்லை. விண்மீனைத்
தொடர்ந்தனர்.
விண்மீன்களின் ஒளியில் இந்த ஞானிகள் வழி நடந்தனர்
என்றும்,. இறைவனைச் சந்தித்தபின் இவர்கள் வேறு வழியாகச்
சென்றனர் என்றும் இன்றைய நற்செய்தி சொல்கிறது.
வாழ்க்கையில் எந்த விண்மீன்களின் ஒளியில் நாம் நடக்கிறோம்
என்றும், இறைவனைச் சந்தித்தப்பின் நம் வாழ்வில் மாற்றங்கள்
ஏற்படுகிறதா என்பது பற்றியும் சிந்திக்கலாம்.
விண்மீன்கள் என்றதும் நட்சத்திரங்கள், ஸ்டார்கள் என்ற
சொற்களும், இச்சொற்களுடன் தொடர்புகொண்ட பல எண்ணங்களும்
உள்ளத்தில் எழுகின்றன. திரைப்படம், விளையாட்டு போன்ற
துறைகள் உருவாக்கும் செயற்கையான 'ஸ்டார்களும்' 'சூப்பர்
ஸ்டார்களும்' எவ்வளவு தூரம் இளையோர் வாழ்வை
ஆக்கிரமித்துள்ளன என்பதை எண்ணிப்பார்க்க இது நல்லதொரு
தருணம். இந்த ஸ்டார்களைச் சுற்றி வட்டமிட்டு, வாழ்வை
வீணாக்கும் விட்டில் பூச்சிகளை நினைத்தால், வேதனையாய்
இருக்கிறது.
வானில் தோன்றும் விண்மீன்களைத் தொடர்வது எளிதான செயல்
அல்ல. விண்மீன் இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.
பகலில் தெரியாது. எனவே இந்த ஞானிகள் இரவில் தங்கள் பயணத்தை
அதிகம் செய்திருக்கவேண்டும். பயண வசதிகள் மிகக் குறைவாக
இருந்த அக்காலத்தில் இரவில் மேற்கொள்ளும் பயணங்கள்
எளிதல்ல. அதுவும் பல்லாயிரம் விண்மீன்களுக்கு நடுவே ஒரு
சிறு விண்மீனை மீண்டும் மீண்டும் அடையாளம் கண்டு, அந்த
விண்மீனைத் தொடர்வது அவ்வளவு எளிதல்ல. பல இரவுகள்
மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும்.
அந்த நேரங்களில் மேகமும், பனியும் விலகும்வரைக்
காத்திருந்து, மீண்டும் விண்மீனைப் பார்த்து... எத்தனை
எத்தனை இரவுகள் அவர்கள் நடந்திருக்க வேண்டும்? இத்தனை
இடர்கள் மத்தியிலும் ஒரே குறிக்கோளுடன் பல ஆயிரம் மைல்கள்
பயணம் செய்த அந்த ஞானிகளின் மன உறுதி நமக்கெல்லாம்
நல்லதொரு பாடம்.
இந்த மூன்று ஞானிகளை, பாரம்பரியமாக, மூன்று அரசர்கள் என்றே
அழைத்து வந்துள்ளோம். இக்கண்ணோட்டத்தில் பார்க்கும்போது,
இன்றைய நற்செய்தி (மத்தேயு 2:1-12) நான்கு அரசர்களைப்
பற்றி கூறுகிறது. ஆம், இந்த மூன்று அரசர்களுடன் நாம் ஏரோது
அரசனையும் இணைத்துப் பார்க்கிறோம். இவர்கள் நால்வரும்
இயேசுவைத் தேடினார்கள். விண்மீன் வழிநடத்த, பல நூறு
மைல்கள் பயணம் செய்த மூன்று அரசர்கள், எவ்வித உள்நோக்கமும்
இல்லாமல் இயேசுவை உண்மையிலேயேத் தேடினர். இயேசுவைக்
கண்டதும் தங்களையே அர்ப்பணம் செய்ததன் அடையாளமாக,
காணிக்கைகளை அக்குழந்தையின் காலடியில் சமர்ப்பித்தனர்...
அதன்பின், வேறுவழியில் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர்.
இந்த நிகழ்வுக்குப் பின், அவர்களைப் பற்றி விவிலியத்தில்
எந்தத் தகவலும் இல்லை. திரும்பிச்சென்ற வழியில், ஏதோ
காற்றோடு காற்றாக அவர்கள் கரைந்துவிட்டதைப் போல்
தெரிகிறது.
இறைவனைத் தேடி, கண்டுபிடித்து, அவரை உண்மையாகவேச் சந்தித்த
பலரது நிலை இதுதான். எடுத்துக்காட்டாக, எருசலேம் கோவிலில்
குழந்தை இயேசுவைக் கையிலேந்திய சீமோன் இயேசுவைக் கண்டதால்
உண்டான மகிழ்வுடன் இவ்வுலகிலிருந்து விடைபெற விரும்பினார்.
(லூக்கா 2:25-32) இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு
யோவானின் நிலையும் (யோவான் 3:30) "
இனி வாழ்பவன் நான் அல்ல:
கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்"
(கலாத்தியர் 2:20) என்று
முழங்கிய புனித பவுலின் நிலையும் இதைப் போன்றதே. இறைவனை
உண்மையிலேயேக் கண்டு, நிறைவடைந்த அனைவருமே தங்கள் வாழ்வை
அவரிடம் அர்ப்பணித்துவிட்டு மறைவதையே விரும்புவர். இந்த
அழகியப் பாடத்தை மூன்று அரசர்கள் நமக்குச் சொல்லித்
தருகின்றனர்.
இதற்கு நேர்மாறாக, நான்காவது அரசன் ஏரோதுவின் செயல்பாடுகள்
அமைந்தன. அவனும் இயேசுவைத் தேடினான். எதற்காக? அவரைக்
கொல்வதற்காக. அவரைக் கண்டு வணங்கப் போவதாக மூன்று
ஞானிகளிடம் பொய் சொன்னான். அவனது தேடுதல் வெறியாக மாறி, பல
நூறு பச்சிளம் குழந்தைகளை அவன் கொன்று குவித்தான்.
இயேசுவைக் கண்ட மகிழ்வில் மறைந்துபோன மூன்று அரசர்களுக்கு
நேர்மாறாக, ஏரோது இயேசுவை மறைக்க, அழிக்க வழி தேடினான்.
காரணம் என்ன? அவன் இயேசுவைவிட முக்கியமான ஒரு கடவுளைக்
கண்டுவிட்டதாக நினைத்தான். அவனைப் பொருத்தவரை, அவனது
அரியணையே அவன் வணங்கிய கடவுள். அரியணை என்ற இந்தக்
கடவுளுக்கு, அவன் தன் மனைவியரையும், பிள்ளைகளையும் பலி
கொடுத்தான் என்று சொல்லப்படுகிறது. இயேசுவையும் பலி
கொடுக்க முயன்றான். ஏரோதின் வாழ்க்கை சொல்லித்தரும்
எச்சரிக்கைப் பாடங்களையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது
அவசியம்.
மூன்று ஞானிகளின் கதை வேறு பல அழகான கற்பனைக் கதைகளுக்கு
வித்திட்டுள்ளது. அவைகளில் ஒன்று Henry Van Dyke எழுதிய
"
The Other Wise Man"
மற்றுமொரு ஞானி என்ற கதை. இந்தக்
கதையில் வரும் ஞானியின் பெயர் Artaban. தான் சந்திக்கச்
செல்லும் மன்னனுக்குப் பரிசுகள் ஏந்திச்செல்ல நினைத்த
Artaban, தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று,
விலையுயர்ந்த மாணிக்கம், வைரம், முத்து ஆகியவற்றை
வாங்கிக்கொண்டார்.
அவர் செல்லும் வழியில், நோயுற்று சாகும் நிலையிலிருந்த ஒரு
யூதரைப் பார்த்தார். நோயாளியை விட்டுவிட்டுச் செல்ல
நினைத்தார். ஆனால் மனம் இடம் தரவில்லை. தன்னிடம் இருந்த
மாணிக்கத்தை விற்று, அந்தப் பணத்தைக்கொண்டு நோயாளிக்குத்
தேவையான உதவிகளைச் செய்தார். இதனால், அவரது பயணம் கொஞ்சம்
தாமதமானது. அவர் பெத்லகேமை அடைந்தபோது, மற்ற மூன்று
ஞானிகளும் மீண்டும் தங்கள் நாட்டுக்குப் போய்விட்டதை
அறிந்தார். அதைவிட, பெரும் ஏமாற்றம்... குழந்தை இயேசுவை
அவரது பெற்றோர் எகிப்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்ற
செய்திதான். Artaban எகிப்து நோக்கி தன் பயணத்தைத்
துவக்கியபோது, மன்னன் ஏரோதின் படைவீரர்கள் அங்குள்ள
குழந்தைகளைக் கொல்வதற்கு வருவதைப் பார்த்தார். தன்னிடம்
இருந்த வைரத்தைப் படைத் தளபதியிடம் கொடுத்து, ஒரு
குழந்தையை அவர் காப்பாற்றினார்.
பின்னர், Artaban 33 ஆண்டுகள் தனது மன்னனைத் தேடி வந்தார்.
சென்ற இடமெல்லாம், தன்னால் இயன்ற அளவு பிறருக்கு உதவிகள்
செய்து வந்தார். இறுதியில் அவர் எருசலேம் வந்து
சேர்ந்தார். அங்கு, இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கு
ஏற்கனவே கல்வாரிக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்று
கேள்விப்பட்டார். தன் கையிலிருக்கும் விலையுயர்ந்த முத்தை
அந்த வீரர்களிடம் கொடுத்து இயேசுவை மீட்டுவிடலாம் என்று
கல்வாரி நோக்கி விரைந்தார். போகும் வழியில், அடிமையாக
விற்பதற்கென்று ஒரு பெண் இழுத்துச் செல்லப்படுவதைக்
கண்டார். அப்பெண்ணை விடுவிக்க, தன்னிடம் இருந்த கடைசி
பரிசான அந்த முத்தையும் கொடுத்தார். அந்நேரத்தில், திடீரென
இருள் சூழ்ந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டது. Artaban தலையில்
அடிபட்டு கீழே விழுந்தார். அவருக்கு மட்டும் கேட்கும்
விதமாக: "இந்தச் சிறியவர்களுள் ஒருவருக்கு நீர் இதைச்
செய்யும்போது, எனக்கேச் செய்தீர்." என்ற குரல் கேட்டது.
இக்குரலைக் கேட்டதும், Artaban தான் தேடி வந்த அரசனைக்
கண்டுகொண்ட மகிழ்வோடு, நிறைவோடு கண்களை மூடினார்.
மனதுக்கு நிறைவைத்தரும் ஒரு கதை. விண்மீனைக் கண்டு பயணம்
புறப்பட்டவர்களெல்லாம் கடவுளை நேரில் கண்டனரா? இல்லையே.
எத்தனையோ பேர், கடவுளை நேரில் காணாதபோதும், அந்தக்
கடவுளின் நியதிகளை வாழ்நாள் முழுவதும் பின்பற்றினர்.
இதனால், அவர்களே பலரை, கடவுளிடம் அழைத்துச்சென்ற
வின்மீண்களாயினர் என்பதை Artaban புரிய வைக்கிறார்.
உண்மையான விண்மீன்களைப் பார்த்ததால், அந்த விண்மீன்
காட்டிய பாதையில் சென்றதால் தங்கள் வாழ்க்கைப் பாதையையே
மாற்றிய ஞானிகளைப்போல், Artabanஐப் போல், எத்தனையோ நல்ல
உள்ளங்கள் தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள்.
தீர்மானமாய் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் கண்ட
ஞானிகளைப் போல், இப்புத்தாண்டின் துவக்கத்தில் நாமும்
இறைவனைக் காணவும், அவரிடம் மற்றவர்களை அழைத்துவரும்
விண்மீன்களாய்த் மாறவும் தேவையான இறையருளை வேண்டுவோம்.
மறையுரை
முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க்
கழகம் பெங்களூர்
திருக்காட்சி திருவிழா
முதல் வாசகப் பின்னணி (எசா. 60:1-6)
இந்த வாசகத்தின் அறை௯வல் அடிமை தளையிலிருந்து நாடு
திரும்பியவர்களுக்காய்க் கூறப்பட்டது. இவர்கள்
இறைவாக்கின் முழுமைக்காகக் காத்திருந்தனர், தங்களின்
வலியும், கண்ணீரும் மறைகின்ற நாளுக்காய்க்
காத்திருந்தனர். இவர்கள் தங்கள் ஆலயம் கட்ட முடியாத
சூழலில் வலிமையற்று விளங்கும் வேளையில், எசாயா தூர
தேசங்களில் இருந்து அரசர்கள் செல்வம் கொண்டு வருவர் என
வாக்கு கூறும் பகுதிகள் இவை.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபே. 3:2-3, 5-6)
இங்கு பவுலடிகளார், நடைமுறை சட்டங்கள் மற்றும்
சம்பிரதாயங்களால் மனம் வெதும்பியவராய்க்
காணப்படுகிறார். இறை இயேசுவின் முற்போக்கு சிந்தனைகள்
இவரின் வார்த்தைகளில் காணப்படுகின்றன. பாரம்பரிய
யூதர்களாய் இருந்து கிறிஸ்தவர்களாய் மாறியவர்களுக்கும்,
புறவினத்தவராய் இருந்து கிறிஸ்தவர்களாய்
மாறியவர்களுக்கும் இடையே நடைபெறும் கசப்புணர்வின்
வெளிப்பாடாய் அமைகின்றன இவ்வார்த்தைகள். புறவினத்தாரும்
இயேசுவின் அங்கமே என விளக்குகிறார் தூய பவுல்.
ஞானிகளின் வாழ்க்கை அர்த்தம் பெற்றது. அவர்களின்
தேடலால், இறைவனின் காலடியில் முழுமை பெற்றது. மண்ணுலக
அரசரைத் தேடி வந்தவர்களுக்கு விண்ணக அரசரின் காட்சி!
இவர்கள் மறைநூல் அறிஞர்கள் அல்லர், தோராவைப்
புரிந்தவர்களும் அல்லர், புறவினத்தவர் என்றும்,
ஒதுக்கப்பட்டவர்கள் என்றும் கருதப்பட்டவர்கள், ஆனால்
விண்ணகத்தின் அறை கூவலை இவர்கள் கேட்டனர்!
"
ஓவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை
அறிவிக்கின்றது. அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடை
கின்றது. அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை
எட்டுகின்றது' (தி.பா. 19:24).
எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், தோரா மட்டும் தான்!
என்று தங்களின் கண்களில் லாயம் கட்டிக்கொண்டு இருந்த
அறிஞர்களால் புரிந்துக் கொள்ள முடியலில்லை படைப்பின்
பரவசம்! முழுக்க நிறைந்தச் சாடியில் எதுதான் புக
முடயும்? தங்களைச் சட்டங்களால் நிரப்பிக் கொண்டவர்கள்
நீக்கமற நிறைந்த இறைவனைக் கண்டுகொள்ள முடியவில்லை.
ஞானிகள் உணர்ந்தனர், ஒளியைத் தொடர்ந்தனர். "
இருள்
அகன்று போகிறது. உண்மை ஒளி ஏற்கெனவே ஒளிர்கிறது''
(யோவான் 2:58).
யாவே இஸ்ராயேலைத் தேர்ந்து கொண்டார், தன் அன்பைப்
பொழிந்தார், அது வழி தவறியபோது தன்னவர்களால் நெறி செய்ய
விழைந்தார். இது எல்லாம் போதாது என்று தன் மகனையே
அதற்காய் வழங்க விழைந்தார், இவை அனைத்தும்
அவர்களுக்குத் தெரியும், ஆனால் கண்கள் இருந்தும்
குருடராய் வாழ்ந்தனர்! இதனால் இறைவன் அவர்களின்
பங்கினை மற்றவர்களுக்கு அளிக்கின்றார்.
இதே கருத்தைத்தான் புனித பவுலடிகளாரும் எபேசியருக்கு
எழுதியத் திருமுகத்தில் விளக்குகின்றார்:
"நற்செய்தியின் வழியாகப் பிற இனத்தாரும் கிறிஸ்து
இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒர உடலின்
உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும்
ஆகியிருகிறார்கள்' (எபே, 36).
நற்செய்தியின் ஒளியை வாஞ்சையோடு பார்ப்போர் எல்லாரையும்
தன் வசப்படுத்துகின்றது. அதற்கு யூதன் என்றும்,
கிரேக்கன் என்றும், எத்தியோப்பியன் என்றும்
வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாது.
தகுதியுள்ளவைர்களுக்குத் தகுந்த நேரத்தில் இறைவாக்கு
வழங்கப்படுகின்றது.
எத்தனை முறைதான் இஸ்ராயேல் தன் தலைவனை மறந்தாலும்,
உடன்படிக்கையின் தேவன் இஸ்ராயேலுக்குத் தன் மீட்பைக்
காட்டுகின்றார்.
"
யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்!
இஸ்ராயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்! (எண்.
24:7).
ஒளி ஒளிர்ந்தும் காணவில்லை பலர், கண்ட சிலர்
பேறுபெற்றோர் ஆயினர், ஞானிகளைப் போல். யூதகுல அரசனின்
வருகைப் புறவினத்தார் என்று கருதப்பட்டவர்களுக்கு
விளங்கியது, ஏனெனில் அவர்கள் இறைவனை ஏற்றுக் கொண்டனர்.
உண்மையை ஏற்றுக்கொண்டனர். இந்த உண்மை நமக்கு இன்று
சொல்லும் செய்தி என்ன?
பிறமதச் சகோதர சகோதரிகள் என்று நாம் கருதும் அவர்கள்
இறைவனுக்கு உகந்த வாழ்வு வாழ்கின்றனர். நாம்? விவிலியம்
தெரியாதவர்கள் விண்ணரசின் மதிப்பீடுகளைக்
கடைப்பிடிக்கின்றனர். நாம்? எல்லோரும் இலஞ்சம்
வாங்ருகின்றோம், குடிக்கின்றோம், சண்டை போடுகின்றோம்
என்ற ஆட்டு மந்தை வாழ்வு வாழவா இயேசு தன் ஒளியை நம்மீது
இறங்கச் செய்தார்?
பொறாமை, கசப்பு, காழ்ப்புணர்வு, பகைமை என எத்தனை இருள்
நம்முன்னே! இத்தனையும், நம்மிடமிருந்தால் நம்மால்
எப்படி இறை ஒளியைக் காண முடியும்? இந்நிலை
நீடிக்குமாயின் நம்மோடு வாழும் இயேசுவை நாம் காண
இயலாது, நாமும் அன்றையப் பரிசேயர்கள் போல் இயேசுவைக்
குறை கூறுவாம், பின் நமக்கு முன் யாரை நாம் பாவிகள்
என்று தீர்ப்பிட்டோமோ அவர்கள் விண்ணரசில் இருப்பார்கள்!
மற்றவரைப் பார்க்காது நம்மைப் பார்ப்போம், நம் நிலை
உணர்ந்தால் இறை உறவு மலரும்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
🕀 இயற்கையின் அறைககூவல், இயற்கை அச்சிடபடாத
வார்த்தைகள் அடங்கிய விவிலியம், இறை வார்த்தை என்றும்
தன்னில் தாங்கி இதுநாள் வரைச் செயல்படும் இயற்கையை
நாம் எத்துனை தூரம் உணர்ந்திருக்கின்றோம்?
🕀 விண்மீனை மறைத்த மனித சக்தி, எருசலேமில் விண்மீன்
மறைந்த விந்தை, இயற்கையே மனிதனின் அவலட்சனம் கண்டு
ஒதுங்கும் கொடுமை, ஏரோதின் காமவெறியும்,
சுயநலப்போக்கும் எப்படி இறையைத் தேடுவோருக்கு இடையூறு
விளைவிக்கின்றது?
🕀 இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார். அவரது
வெளிப்பாட்டை நாம் ஏற்றுக்கொள்கிறோமா? அதன்படி
வாழ்கின்றோமா?
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான்
பாப்டிஸ்ட் பெங்களூர்
ஆண்டவரின் திருக்காட்சி
இன்று தாயாம் திருஅவை ஆண்டவரின் திருக்காட்சிப்
பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. இதன் நோக்கம்
குழந்தையாய் பிறந்த இயேசு உலகிற்கு எவ்வாறு
வெளிப்படுத்தப்பட்டார் என்பதை விளக்குவதாகும். இன்றைய
நாளின் திருநூல் வாசகமாக ஞானியர் இயேசுவைச் சந்தித்த
நிகழ்வு நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வைப் பற்றிய
வரலாற்று விவரங்களை விளக்குவதைவிட அது தரும் இறையியல்
மற்றும் கிறிஸ்தியல் செய்திகளை விளங்கிக் கொள்வது
பயன்தரும்.
பின்னணி
இன்றைய நற்செய்தி மத்தேயு நற்செய்தியின் இரண்டாம்
அதிகாரத்தின் முதல் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட
தாகும். இதற்கு முந்தைய அதிகாரம் "
இயேசு யார்?"
என்னும் வினாவிற்கு தாவீதின் மகனும் ஆபிரகாமின்
மகனும் என தலைமுறை அட்டவணை மூலமாகவும் (காண். மத்
1:1-17), யோசேப்பு எப்படி. இயேசுவின் தந்தையானார் என பிற
நிகழ்வுகள் மூலமாகவும் (காண். மத் 1:18-25)
விளக்குகின்றார். மத்தேயு நற்செய்தியின் இரண்டாம்
அதிகாரம் "
எங்கே?"
எனும் வினாவிற்கு விடையளிக்கின்றது:
எருசலேம் (வச. 1-6), பெத்லகேம் (வச 7-12), எகிப்து (வச.
13-15), பெத்லகேம், ராமா (வச. 1618), எகிப்து மற்றும்
நாசரேத்து (வச. 19-23) என பல இடங்கள் இயேசுவின் பிறப்பு
நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. இனி இன்றைய
நற்செய்திப் பகுதி தரும் இறையியல் மற்றும்
கிறிஸ்தியல் செய்திகளைக் காண்போம்.
1. மோசே பயோல...
இயேசுவின் பிறப்பு நிகழ்வுகளை மத்தேயு நற்செய்தியின்படி
வாசிக்கின்றபோது பழைய ஏற்பாட்டின் விடுதலைப் பயண நூலில்
மோசே வாழ்வின் பல நிகழ்வுகளோடு ஒத்துப்போவதை
காண்கின்றோம்: எகிப்தின் கொடுங்கோல் மன்னன் பார்வோன்
எபிரேயக் குழந்தைகளை கொல்லக் கட்டனளையிடுதல் (காண்.
விப 1:16, 22), பார்வோனின் மகள் வழியாக மோசே
வியக்கத்தக்க விதமாக காப்பாற்றப்படல்(காண்.விப 2:1-10),
இளம்மோசே பார்வோனுக்கு பயந்து, மிதியான் நாட்டுக்கு
ஓடிப்போதல் (காண். விப 2:15), பார்வோனின்
இறப்புக்குபின் (காண். விப 2:23) ஆண்டவர் மோசேவை
எகிப்துக்குத் திரும்ப அழைத்தல் (காண். விப 4:19).
இவ்வாறு மோசேவின் வாழ்வு போல இயேசுவின் இளமைக் கால
நிகழ்வுகள் அமைந்திருந்தன என்று கூறுவதோடு யூதேயாவில்
இருந்தது கொடுங்கோல் ஆட்சி என்றும், யூத இனமும்
எருசலேம் நகரும் குழந்தை இயேசுவைக் கண்டுகொள்ளாமல்
அவரைப் புறக்கணித்தது எனும் செய்திகளையும் மத்தேயு தம்
நற்செய்தியின் வழியாகத் தெளிவுபடுத்துகின்றார்.
2. பிலயாம் போல. . .
இயேசுவை ஞானியர் தேடி வந்து தரிசித்து, வணங்க, பரிசுப்
பொருள் தந்து சென்றது, பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல்
மக்களைச் சபிக்குமாறு அரசன் பாலாக்கனால் நியமிக்கப்பட்ட
பிலயாம் அவர்களை வாழ்த்தி ஆசிகூறிய நிகழ்வையும் நமக்கு
நினைவூட்டுகின்றது (காண். எண் 22-24). இதில் முக்கிமாக,
"
யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்!
இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்!"
(எண்
24:17) என்னும் இறைவாக்கை நிறைவேற்றும் விதமாக ஞானியர்,
"
யூதர்களின் அரசராகப் பிறந்திருக்றெவர்"
(வச. 2)
பற்றியும் "
அவரது விண்மீனைப்"
(வச. 2) பற்றியும்
பேசுகின்றனர். மீண்டும் வச. 7 மற்றும் 9, 10 ஆகெ
இடங்களிலும் விண்மீன் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு யூதர்களாலும், யூத அரசன் ஏரோதாலும், யூத
மைய்யமான எருசலேமாலும் கண்டுபிடிக்கப்படாமல், அஞ்சி
புறக்கணிக்கப்பட்ட இயேசு எனும் யூதர்களின் அரசரை,
பிலயாம் போல பிற இனத்தாரான ஞானியர் இனம்கண்டு, விண்மீன்
போன்ற இயற்கையில் இறைவன் தந்த வெளிப்பாடுகளை மட்டும்
அடையாளமாய் கொண்டு அவரைத் தேடிவந்து, கண்டுபிடித்து,
"
நெடுஞ்சாண்டையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்;
தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும்
வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்"
(வச.
11). இவ்வாறு அவரை அரசர் (பொன்), கடவுள் (சாம்பிராணி),
மனிதர் (வெள்ளைப்போளம் அடக்கத்தைக் குறிப்பது) என்று
ஏற்றுக் கொண்டனர். எனவே
இயேசுயூதர்களால்புறக்கணிக்கப்பட்டாலும், பிற
இனத்தவர்களால் இனங்கண்டுகொள்ளப்பட்டு ஏற்றுக்
கொள்ளப்பட்டார் எனும் கிறிஸ்தியல் செய்தியையும் இன்றைய
நற்செய்தி நமக்குத் தருகின்றது.
3. யேசுவின் இறப்யை மூன்குறித்து... இன்றைய நற்செய்தி
இயேசுவை மோசே, பிலயாம் ஆகியோரை பின்குறித்துக்
காட்டியதோடு, இயேசுவின் பாடுகள் மரணம் ஆகியவற்றையும்
முன்குறித்துக் காட்.வெதையும் நாம் காணத்தவறக் கூடாது.
இயேசுவின் பாடுகள், மரணம் ஆகயெ விவரிப்பில்
பயன்படுத்தப்படும் பல சொல்லாடல்கள் இங்கும்
பயன்படுத்தப்பட்டுள்ளதை நோக்க வேண்டும். உ-ம்:
"
யுதூர்களின் அரசர்"
(வச..2), எருசலேம் (வச.1),
வணங்குதல் (வச. 2), கலக்கம் (வச. 3), தலைமைக்
குருக்கள், மறைநூல் அறிஞர் (வச. 4), வெள்ளைப் போளம்
(வச. 10). அதோடு இயேசுவைக் கொல்ல ஏரோது நடத்திய
சதியாலோசனையையும் (வச. 4-8) குறிப்பிடலாம். எனவே
இயேசுவின் பிறப்பு முதலே மரணம் அவரை தொட்டுத்
தொடர்ந்துவந்து கொண்டிருந்தது. . இயேசுவின் வாழ்நாள்
முழுவதும் சிலுவையை நோக்கிய பயணமாகவே இருந்தது. பேராயர்
புல்டன்ஷீன் கூறுவதுபோல "
வெவுலகில் மனிதர்
வாழ்வதற்கென்றே பிறக்கின்றனர். ஆனால் சாவதற்கென்றே
பிறந்தவர் இயேசு ஒருவர்தான்."
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி
சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
ஆண்டவரின் திருக்காட்சி
முதல் வாசகம்: எசா 60:1-6
பாபிலோனிய அடிமைத் தளையாலே அழிந்துபட்ட எருசலேழுக்கும்,
அல்லல்பட்ட இஸ்ரயேலருக்கும் ஆறுதல் மொழிகளாக
எழுதப்பட்டவை (எசா 40; 55; 60-62 ஆகிய அதிகாரங்கள்).
எருசலேம் புத்துயிர் கொள்ளும் என்று நம்பிக்கையூட்டும்
இன்றைய வாசகம் இயேசுவின் இறைக் காட்சியால் அனைத்து
மக்களும் வாழ்வு பெறுவர் என்பதைக் காட்டுகிறது.
எருசலம் நாமே
பாபிலோனியத் தளை விரைவில் முடிந்துவிடும். ஆண்டவருடைய
மாட்சி முன்பு சீனாய் மலையில் தங்கியது போல (விப 24 :
15), இப்போது அவரது மகிமை எருசலேம் மீது உதயமாகும் (எசா
80 : 2) ஆண்டவர் அதன்மேல் தங்குவார். ''சீயோனைச்
சுற்றிச் செல்லுங்கள்... ஆதன் கொத்தளங்களை எண்ணிப்
பாருங்கள்... அப்போது இனிவரும் தலைமுறைகளை நோக்கிச்
சொல்வீர்கள்: கடவுள் எவ்வளவு மேலானவர் என்று" (திபா:
48: 13-14) அந்தச் சீனாய் மலையே நாம்; அந்தச் சீயோன்
மலையே நாம்; அந்த எருசலேமே நாம். இரக்கத்தின் நம்மேல்
எழுந்துள்ளார். நம்மைச் சூழ இருக்கும் பாதுகாப்பு
மலைகளாக "இப்போதும் எப்போதுமே ஆண்டவர் நம்மைச்
கூழ்ந்துள்ளார்" (திபா 25 :1-12). ஆம், கடவுள் நம்மோடு,
நம்மேல் இருக்கிறார். என்னே மகிமை நமக்கு! இதை உணர்ந்து,
கிறிஸ்து நம்மிடையே பிறந்ததற்காக நன்றி கூறுகிறோமா?
கிறிஸ்து நம்மோடிருப்பது பிறருக்காக
எருசலேமின் மகிமையைக் கண்டு புறவினத்தார் அதை நோக்கி
ஓடிவந்தது போல (80 : 3), பெத்லகேமில் இயேசுவின் ஒளியைக்
காணக் கீழ்த்திசை ஞானிகள் வந்ததுபோல (இன்றைய நற்செய்தி),
நம்மிலே, நம்முடைய நடை உடை பாவனைகளிலே, சொல் செயல்களிலே
கிறிஸ்துவைக் காண, கண்டு அனுபவிக்கப் பிறமக்கள் வர
வேண்டும். நம்மிடமிருக்கும் கிறிஸ்து காந்தசக்தியாக
அமைந்து, கிறிஸ்துவை அறியாதவரை நம்மைச் சுற்றி வரச்செய்ய
வேண்டும். கிறிஸ்துவாகிய காந்த சக்தி நம்மில் செயல்பட
வைக்கிறோமா? புதிய எருசலேமில் "
ஆட்டுக்குட்டியே அதன்
விளக்கு; ஆதன் ஒளியிலே எல்லா நாட்டு மக்களும் நடந்து
செல்வர்... அங்கு இரவே இராது" (திவெ 21: 24) என்பார்
திருவெளிப்பாடு ஆசிரியர். நம்மைப் பார்த்துப் பிறரும்
ஆண்டவரது ஒளி அவனிடம், அவளிடம் உள்ளது: "அங்கு இரவே
இராது"
என்று கூறமுடியுமா?
கிறிஸ்து நம்மோடிருப்பது இந்தியாவுக்காக
"
எகிப்து தன் வேலைப் பயனாகிய செல்வங்களோடும்,
எத்தியோப்பியா தன் வணிகத்தால் கிடைத்த வருமானத்தோடும்,
செபா தன் உயர்ந்து வஎர்ந்த குடிகளோடும், இஸ்ரயேலே,
உன்னிடம் வந்து சேரும் (எசா 48: 14) என்பார் எசாயா.
இன்றைய வாசகத்திலும் மக்களினங்களின் செல்வம் உன்னிடம்
வந்து சேரும்... மீதியான, எப்பாகு நாட்டு இளம்
ஒட்டகங்களும் வரும். சேபா நாட்டினர் அனைவரும்
பொன்னும் தூபமும் ஏந்தி வருவர் (எசா 60 : 5-5)
என்கிறார். "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி
மூத்தகுடிகளைக் கொண்ட நம் பாரத அன்னை, ஆன்மீக
வாழ்விலும், பண்பாடு, கலாச்சாரத்திலும் முன் நின்ற
இந்திய நாடு, ஈராயிரம் ஆண்டளவாக நற்செய்தியைக் கேட்க
வாய்ப்புப் பெற்றிருந்த பழம்பெரும் கீழ்த்திசை நாடு.
ஏன் இன்னும் இயேசுவைக் கண்டுகொள்ளவில்லை? நம்முடைய ஒளி
மரக்காலின் கீழ்வைத்த விளக்காகிவிடவில்லையா? (மத் 5 :
15-16). இருளைப் பழிப்பதில் பொருளில்லை. இருளிலே
நம்முடைய சிறு தீபங்களை ஏற்றுவோம். கீழ்த்திசை ஞானிகளை
இயேகவிடம் இட்டுச் சென்ற விண்மீன்களாக ஒளிர்வோம். நமது
நடத்தை அதற்குச் சான்று பகரட்டும். பற்பல சிறு ஒளிகள்
கூடித்தானே பேரொளியை உண்டு பண்ணுகின்றன!
( எருசலேமே எழுந்து ஒளி வீசு)
கீழ்த்திசை ஞானிகள் பாலன் இயேசுவைக் கண்டு ஆராதித்தது
ஒரு அடையாளம், ஒரு மறைபொருள். யூதருக்கு மட்டும் இயேசு
அரசான்று, மக்களினத்தார் அனைவருக்கும் அவர் மன்னர்
என்பதைச் கட்டுகிறது இந்நிகழ்ச்சி (மத் 2:1-12). பவுல்
அடியாரும் இப்மறைபொருளின் கருத்தை அறிந்து,
புறவினத்தாருக்காகப் பாடுபட்டு உழைப்பதை விளக்குகிறது
இன்றைய வாசகம்.
அருள் அளிப்பவர் கடவுள்
கிறிஸ்துவ வாழ்வின் தொடக்கம், அடிப்படை, அனைத்தும்
கடவுளது கொடையே என்பது பவுல் அடியாரின் துணிவு, பாவிகளை
மீட்சுவே இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார் என்னும்
மொழி உண்மையானது. அந்தப் பாவிகளிலெல்லாம் பெரும் பாவி
நானே. இருப்பினும் இறைவனின் இரக்கத்தைப் பெற்றேன்" (1
திமொ1:15-16) என்கிறார். "
நான் கடவுளின் தனிப்பட்ட
அருளைப் பெற்றவன் (உரோ 15:15, 1கொரி 3:10, கலா
1:15-16,2:9) என்று அடிக்கடி அவர் கூறுவதன் மூலம் தனது
இயலாமையையும், இறைவனின் அளவுகடந்த பரிவையும், அவர்
தன்னை ஆட்கொண்ட அருளையும் நினைவுறுத்துகிறார்.
நாம் அருள்பெற்றது பிறர் நலனுக்காக
அவருக்குக் கொடுக்கப்பட்ட அருளானது "
நமது நன்மைக்காகவே
(3; 2). அந்த அருள்தான் என்னைப் புறவினத்தாருக்காகக்
கிறிஸ்து இயேசுவின் தொண்டனாக்கிற்று'' (உரோ 15-15)
நற்செய்தியைப் புறவினத்தாருக்கு அறிவிப்பதற்காகவே (கலா 1
; 15-16 ) இவ்வருள் வழங்கப்பட்டது. பவுல் அடியாருக்குப்
போன்றே நமக்கும் இறையருள் அபரிமிதமாகக்
கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வருளுக்கு நாம் காட்டும்
நன்றி, நற்செய்திக்காகப் பணிபுரிவதேயாகும், நம்முடைய
வாழ்வில் நற்செய்தி மதிப்பீடுகள் முக்கிய இடம்
பெறும்போதுதான், நாமும் கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு,
பவுல் அடியார் போன்று சாட்சியம் பகர முடியும், இன்று
இறைக்காட்சித் திருநாள். இறைவன் நம் வழியாகப்
பிறருக்குக் காட்சியளிக்க வேண்டும். பிற சமய மக்களிடையே
வாழும் நாமே பிறருக்கு இறைவனின் வெளிப்பாடுகளாக அமைய
இறைவன் நமக்கு அருள் பாலிப்பாராக.
ஆவியாரின் அருனால் செயல்படுவோம்
மறைபொருளின் விளக்கும் தருபவர் தேவ ஆவி (3: 5).
"
ஏனெனில் இறைவாக்கு ஒருபோதும் மனிதரின் விருப்பத்தால்
உண்டானதில்லை. மனிதர் பரிசுத்த ஆவியாரால் தூண்டப்பட்டு,
கடவுளின் ஏவுதலால் பேசினர்" (2 பேதுரு 1 : 21). மறைநூலை
அறியவும், மறை பொருளைக் கண்டுணரவும் தூய ஆவியாரின்
அருள் நமக்கு எ(1 சாமு3: 19) என்ற திறந்த உள்ளத்தோடு
ஆவியாரின் அருளை நாடுவோம். ஆவியாரின் அருளே நமக்கு
"ஞானமும் மெய்யுணர்வும் ஆலோசனையும் வல்லமையும்
அறிவும் ஆண்டவரைப்பற்றிய அச்சமும்" எசா 11: 3) தரவல்லது.
அதே ஆவியாரின் அருளே நம்மைப் புறவினத்தாருக்கு
நற்செய்தியின் தூதுவர்களாக மாற்றக்கூடியது.
இறைக்காட்சித் திருநாளாகிய இன்று ஆவியாரால்
ஆட்கொள்ளப்பட்டு, "எளியோருக்கு நற்செய்தி அறிவிக்க...
கட்டுண்டவர்களுக்கு மீட்புச் செய்தியை வெளிப்படுத்த (எசா
61:1-3) முயற்சி செய்வோம். இவ்வாறுதான் நாம்
கொண்டாடும் இறைக்காட்சி விழா அணைந்து பொருள் தர
வேண்டும்.
(பிற இனத்தவரும் நம்மோடு சேர்ந்து ஒரு உரிமைப்
பேற்றுக்கு வாரிசுகள்.)
(நற்செய்தி :மத் 2:1-12)
ஞானிகளின் வருகை மீட்பு வாலாற்றில் ஒரு
புதுத்திருப்பம். இதுவரை இடையர்கள், சிமியோன், அன்னா
ஆகிய யூத இனத்தவர்க்கே காட்சி கொடுத்த கடவுள் குமாரன்,
இன்று பிற மறையினர், பிற இனத்தவரான கீழ்த்திசை
ஞானிகளுக்குத் தன்னை வெளிப்படுத்துகிறார். நமதாண்டவர்
அனைத்து மக்களுக்கும் உரியவர் என்பதை இக்காட்சி
நமக்குக் கற்பிக்கிறது.
(பெத்லகேமில் இயேசு)
விண்ணிலே நடக்கும் விபரீதங்களைக கொண்டு, மண்ணிலே
நடக்கும் நிகழ்ச்சிகளைக் கணிக்கும் கீழ்த்திசை
ஞானிகள், எருசலேமை அடைந்து "
யூதர்களின் அரசராகப்
பிறந்திருக்கிறவர் எங்கே?" என்று கேட்டார்கள்.(2:2)
தனக்கு மாற்று அரசன் பிறந்துவிட்டானோ என்று ஏரோதன்
கலங்கினான் (2 : 3). மெசியாவின் பிறப்பிடத்தைத்
தேடும்படி கட்டளை விடுத்தான். தலைமைக் குருக்களும்
மறைநூல் அறிஞரும் வேதநூல் வழிநின்று பெத்லகேமின்
வரலாற்றை ஆராய்ந்தனர். யாக்கோபு தன் மனைவி இராக்கேலை
அடக்கம் செய்தது பெத்லகேமில்தான் (தொநூ: 48 : 7): ரூத்
வாழ்ந்த இடமும் இதுவே (ரூத் 2:1): தாவீது பிறந்த ஊர்
இதுவே (சாமு16 :1; 17:12). தாவீதின் வாரிசாக,
பெத்லகேமில் யூதர்களின் அரசர்-இஸ்ரயேலின் மீட்பர் -
தோன்றுவார் என்பது இறைவாக்கெனத் தெளிவுபடுத்தினார்,
ஞானிகள் அவரைக் காண விரைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மூன்றுவித மக்களைச் சந்திக்கின்றோம்.
எரோதன்: பதவிவெறி பிடித்தவன்; தனக்கு எதிராக எழும்
எவரையும் கொன்று குவிப்பவன்; தன் மகனையும் அவன்
விட்டு வைக்கவில்லை. புதிய அரசனின் பிறப்பில் தன்
அறியணைக்கே ஆபத்து வந்ததென, தெய்வத் திருமகனைத்
நீர்த்துக்கட்ட முடிவு செய்தான். "குழந்தையைக் கண்டபின்
என்னிடம் வந்து தெரிவியுங்கள். நானும் சென்று
ஆராதிக்கவேண்டும் என்று நெஞ்சாரப் பொய் சொன்னான்.
தலைமைக் குருக்கள், மறை நூல் அறிஞர்கள் மற்றொரு ரகம்:
வேத நூல்களை நன்றா அறிந்தவர்கள்: விளக்கம்
அளிப்பவர்கள், ஆனால் உண்மையின் ஊற்றிடம்
செல்வதுபற்றிக் கவலைப்படாதவர்கள். ஞானிகளோ, ஞானத்தின்
இருப்பிடத்தைத் தேடி அலைந்தனர். எத்துணை இடர்ப்பாடுகள்
ஏற்படினும் அவற்றை முறியடித்துத் தம் பயணத்தின்
குறிக்கோளைக் கண்டடைந்தவர்கள். எனவே இயேசுவர்கு எதிராக
எழுபவர் ஏரோது. அவனப் பற்றி, பற்றோ, பாசமோ, பகையோ
அற்றவர்கள், தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்.
இறுதியாக, அவரைக் காணத் துடிக்கும் ஞானிகள்: இவ்வாறு
மூன்று பிரிவினர். நான் எவர் பக்கம்?
ஞானிகளின் விசுவாசத்திற்கு ஒரு சோதனை
அவர்கள் எதிர்பார்த்தது அரண்மனையில் பிறந்துள்ள குழந்தை.
யூதர்களின் அரசனோ அரண்மனையில் பிறக்காது, மாட்டுத்
தொழுவத்தில் மரியின் மடியில் மலரெனத்
துமில்கொண்டிருந்தார். அவரைத் தெண்டனிட்டு வணங்கினர்.
"
தம் பேழைகளைத் திறந்து பொன்னும், தூபமும், வெள்ளைப்
போளமும் அவருக்குக் காணிக்கையாகச் செலுத்தினர்''(2 :
1). இந்நிகழ்ச்சியை ஏற்கனவே எசாயா சுட்டிக்
காட்டியுள்ளார். "
எருசலேமே எழுந்திரு, எழுந்து ஒளி வீச:
ஏனெனில் உனது ஒளி வந்துவிட்டது... மக்களினங்கள் உன் ஒளி
நோக்கி வருவார்கள்... ஒட்டகங்களின் கூட்டம் உன்னை
நிரப்பும்" (எசா 60 :1-6 திபா 72 : 10-15)
இயேசு அரசர், குரு, மீட்பர்
உலோகங்களில் அரசு செலுத்துவது பொன். அதுவே அரசரின்
அடையாளப் பொருள், ''அவரது தந்தையான தாவீதின் அரியணையை
ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர்
யாக்கோப்பின் குலத்தின்மீது என்றென்றும் அரசாள்வார்''
(லூக் 1:33). இயேசுவைத் தம் அரசராய் ஏற்றுப் பொன்னை
வழங்கினர். வழிபாட்டில் தூபம் இடம் பெறுகிறது. இயேசு
தம்மையும் இறைவனையும் இணைக்கும் பாலம்; நித்திய பலி
செலுத்தும் நிலையான குரு இவர். இதைக் குறிப்பதே தூபம்.
இயேக இறப்பதற்காகவே பிறந்துள்ளார். இதைக் குறிப்பதே
போளம். பெத்லகேம் குடிலில் இயேசு அரசராக, நித்திய
குருவாக, உலக மீட்பராக ஆராதிக்கப்படுகிறார். யூதரல்லாத
அனைத்து மக்களின் சார்பில் இந்த ஞானிகள் அவரை
ஆராதித்தனர். நாமும் அவர்களுடன் இணைந்து
நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து ஆராதிப்போம்.
விட்டிற்குள் போய் பிள்ளையை, அதன் தாய் மரியாவுடன்
கண்டு தெண்டனிட்டு வணங்கினர்.
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ