புனிதர்கள் என்று சொன்னவுடனே மிக நல்ல மனிதர்கள்,
இறைவனுக்கும் மனிதருக்கும் பிரியமான மனிதர்கள், அற்புதமான வாழ்க்கை
வாழ்ந்தவர்கள், எவருக்கும் எப்போதும் துன்பம் விளைவிக்காதவர்கள்,
தங்களுக்கு ஏற்பட்ட துன்பதுயரங்களை அவமானங்களை பொறுமையோடு ஏற்றுக்
கொண்டவர்கள், அதனால் விண்ணகத்தில் இறைவனை முகமுகமாய் தரிசிப்பவர்கள்
பெயர்ப்பட்டியலில் முதலிடம் பெற்றவர்கள் என்றுதான் நம்நினைவுக்கு
வருகின்றது.
ஆம், உண்மையும் அதுதான் மண்ணகத்தில் இறைவனுக்கும், அயலாருக்கும்
பிரியமான வாழ்க்கை வாழ்ந்த புனிதர்கள், இன்று பெருவிழாத்திருப்பலி
வழியாக, எங்களைப்போல வாழ்ந்து, விண்ணகத்தில் புனிதர்கள் பட்டியலில்
இடம்பெற வாருங்கள் என நம்மை இத்திருப்பலிக்கு வரவேற்றிருக்கிறார்கள்.
எம்மிடமுள்ள தகாத பழக்கவழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். நல்ல
மனிதர்களாக, புனிதர்களாக வாழ நினைவுபடுத்தும் புனிதர்களின்
வாழ்க்கைப் பழக்கவழக்கங்களை அடிபிறழாமல் நெஞ்சிலே பதித்துக்
கொள்ளுவோம். அதற்கான அருளைத் தரும்படி இத்திருப்பலியில் இணைந்து
nஐபிப்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
புனிதத்தின் ஊற்றே எம் இறைவா!
இறையன்பினால் உருவாக்கப்பட்ட திருச்சபையை அதே அன்பில்
வளர்த்தெடுத்து வருகின்ற எங்கள் திருத்தந்தை, ஆயர்கள்,
குருக்கள், துறவியர், பொதுநிலையினரை புனிதர்களிடம் விளங்கச்
செய்த அருட்செல்வங்களால் நிறைத்து வழிநடத்திட
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
விண்ணகத்தந்தையே இறைவா!
விண்ணிலுள்ள புனிதர்களுக்கு இன்று பக்தியோடு விழா எடுக்கின்றோம்.
மண்ணில் வாழும் மக்களுக்கு ஒருமைப்பாட்டையும், அமைதியையும்
அளிக்கக்கூடிய அரசாட்சி அமைக்க எங்கள் நாட்டுத்தலைவர்களுக்கு
அருள்வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்;
வாழ்வுதரும் வள்ளலே இறைவா!
வாழ்விழந்து வலுவிழந்து பாதிக்கப்பட்டு, துன்பங்களை துயரங்களைச்
சுமந்து கொண்டிருக்கும் எல்லா மக்களுக்கும் புனிதர்களின்
அருள்வரங்கள் புதுத்தெம்பு தந்து வாழ்க்கைக்கு வலுவூட்ட
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எங்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்ட இறைவா!
பல்வேறுபட்ட பிரச்சனைகளாலும் நோய்நொடிகளாலும் இங்கே
வரஇயலாத எங்கள் நண்பர்கள் உற்றார் உறவினர்களுக்கும் குழந்தைப்பேறு
இல்லாதோர்க்கும், பிரிந்து வாழும் தம்பதியினர்க்கும்
ஆதரவற்ற நிலையிலுள்ள அனைவர்க்கும் புனிதர்களின் அருட்துணை
இன்று மிகுந்த ஆறுதலைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
துன்புறுவோருக்குத் துணையான இறைவா!
இங்கே மனங்களில் பல்வேறு சுமைகளை, வேதனைகளை, கவலைகளை
ஏந்தி வந்திருக்கும் இறைமக்களுக்காக பரிந்துபேசும்
புனிதர்களின் வழியாக நாங்கள் ஆவலோடு கெஞ்சிக்கேட்கும்
அனைத்து வரங்களையும் தந்து எங்கள் அனைவரையும ஆசீர்வதிக்க
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம.
திருப்பலி முன்னுரை
நமதாண்டவர் இயேசு நமக்கு அருட்பெருங்கொடைகளாக - பரிந்துரைக்கும்
திருத்தாய் மரியாளையும், நம்மை ஞானத்தில் பயிற்றுவிக்கும் ஒன்றாக,
திருச்சபையையும் வழங்கியிருக்கின்றார்.
"புனிதர்களுடைய சமூக
உறவை விசுவசிக்கின்றேன்" என்பது நம்மை வழிநடத்தும் திருச்சபையால்
வரையறை செய்யப்பட்ட விசுவாச சத்தியங்களில் ஒன்று. இந்த விசுவாச
சத்தியத்தை நாம் விழா எடுத்துச் சிறப்பிக்கும் நாளே இன்று. ஆராதனையும்,
வழிபாடுகளும் ஆண்டவராம் கடவுளுக்கு மட்டுமே உரியன என்பதை நாம்
அறிந்தே இருக்கின்றோம். புனிதர்களின் இணக்கமான தோழமையை நாம்
நாடுவதற்கும், வணக்கத்துடன் கூடிய புகழ்ந்தேற்றலை அவர்களுக்கு
புரிவதற்கும் அவர்களின் முன்மாதிரிகை மற்றும் நன்னெறி விட்டு
விலகாத தூய வாழ்க்கையுமே காரணங்கள். மறைசாட்சிகளையும்,
மற்றுமுள்ள அனைத்துப் புனிதர்களையும் நாம் நினைவு கூர்ந்து
கொண்டாடும் செயல், மனுக்குமாரன் இயேசுவின் மகத்துவத்தை
மண்ணுலகு எங்கும் இன்னும் அதிகமாய், நற்செய்தியை பரப்பும்
பணிக்கு தூண்டுகோல் ஆகிறது; துணை நிற்கின்றது;
வலுச்சேர்க்கின்றது.
திருச்சபை வழிபாட்டு அட்டவணையில் இடம்பெறாத புனிதர்கள்
எத்தனையோ பேர் உண்டு. அவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக
இறைவனுக்கு நன்றி செலுத்த இன்று நாம் அழைக்கப்படுகிறோம்.
திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களை மட்டுமல்லாமல்
அங்கீகரிக்கப்படாத நல்வாழ்வு வாழ்ந்த எல்லோரையுமே புனிதர்களாக
நினைவுகூர்ந்து விழா எடுக்கிறோம். நாமும் ஒரு நாள் இவர்கள்
கூட்டத்திலே சேர்வோம் என்ற நம்பிக்கையின் விழா இது.
இன்றைய புனிதர்கள் விழா, நமக்குள் இருக்கும் கடவுள் தன்மையை
அதிகமாக உணரவும் விலங்கின் தன்மையை நம்மிடமிருந்து- அகற்றவும்
நமக்கு அழைப்பு விடுக்கிறது. இது எளிதான காரியம் அல்ல.
இருப்பினும் நம்மைப் படைத்தவர், நல்வாழ்வுக்கு நம்மை அழைத்தவர்
இதற்கான ஆற்றலை நமக்குத் தந்து நம்மை வழிநடத்துவார் என்று
நம்பிக்கையோடு புனித வாழ்வில் நடை போடுவோம். இறைவார்த்தைகளை
சிந்தையில் இறுத்திச் செயலாற்றும் நல்ல பங்கினைத்
தேர்ந்தவர்களாய் வாழ்ந்து சிறக்கும் வரம்வேண்டி,
இத்திருப்பலியை ஒப்புக்கொடுத்து வேண்டுவோம்.
முதல் வாசக முன்னுரை
கிறிஸ்தவ விசுவாசிகள் அச்சுறுத்தவும், துன்புறுத்தவும்பட்ட
வேதகலாப்பனை காலத்து நூலான திருவெளிப்பாட்டிலிருந்து நாம்
முதல் வாசகம் கேட்கயிருக்கின்றோம். அன்றைய காலச்சூழல்
கருத்தில் கொள்ளப்பட்டு அடையாளங்கள் மற்றும் காட்சிகள் மூலம்
செய்திகள் தரப்பட்டுள்ளன. திருச்சபை ஒரு இலட்சத்து நாற்பத்து
நான்காயிரம் என்ற எண் கொண்டும், கிறிஸ்து இயேசுவை
ஆட்டுக்குட்டி' என்றும், மறைசாட்சிகளை
'வெண்ணாடை அணிந்தவர்கள்
என்றும் அடையாளப்படுத்தும் வாசகம் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
இரண்டாம் வாசகமாக நாம் இப்போது கேட்க இருப்பது திருத்தூதர்
புனித யோவானின் முதல் திருமுகத்திலிருந்து தரப்பட்டிருக்கிறது.
இந்த திருமுகம் அன்புகூர்தலுக்கு முக்கியத்துவம் தருவதால் இதனை
அன்புக் கடிதம் என்று அழைக்கின்ற சிறப்பினைப் பெற்றிருக்கிறது.
தம் மக்கள் என்று நம்மை அன்பொழுக இறை தந்தை அழைப்பதோடு, நாம்
தூயவர்களாய் திகழவும், ஆவலாய் அவரை எதிர்நோக்கவும் அழைப்பு
விடுகிறது வாசகம். அதனை செவியேற்கும் ஆர்வம் மேலோங்கட்டும்
நமக்கு.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. இனிய இயேசுவே - எங்கள் நேசரே - எம் இறைவா! நீரோடைகளை
வாஞ்சித்து தேடும் கலைமான்களிலும் மேலாக உம்மை
நேசித்ததாலும் - வாழ்வளிக்கும் இறைவார்த்தைகளை ஆழ்ந்து
தியானிப்பதில் அகமகிழ்வு கொண்டதாலும் எம்மிடையே
மண்ணகத்தில் வாழ்ந்த பலர், இன்று விண்ணகப் புனிதர்களாக
விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.எங்கள் ஆண்டவரும்,
மீட்பருமான உமது அருளால் இறை ஞானத்திலும், இறையன்பிலும்
நாங்கள் மென்மேலும் வளரும் வரம் வேண்டி திருச்சுதனே -
உம்மை மன்றாடுகிறோம்.
2. இனிய இயேசுவே - எங்கள் நேசரே - எம் இறைவா! தங்களுக்கு
தரப்பட்டிருந்த தாலந்துகளை தக்க விதமாய்
பயன்படுத்தியதாலும் - சிறிய பொறுப்புகளில் சிந்தையோடு
செயல்பட்டு, நம்பிக்கைக்கு உரிய நல்ல ஊழியர்களாய்
சிறந்ததாலும், எம்மிடையே மண்ணகத்தில் வாழ்ந்த பலர், இன்று
விண்ணகப் புனிதர்களாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் ஆண்டவரும், மீட்பருமான உமது அருளால் எங்கள்
வலுவின்மையில் உமது வல்லமை பரிபூரணமாக நிறைந்து பயனுள்ள
ஊழியர்களாக நாங்கள் சிறக்கும் வரம்வேண்டி திருச்சுதனே
உம்மை மன்றாடுகிறோம்.
3. இனிய இயேசுவே - எங்கள் நேசரே - எம் இறைவா! இடுக்கமும்,
குறுகலுமான வாழ்வின் வழியை கண்டுபிடித்து, தொடர்ந்து அதில்
நடக்கத் துணிந்ததாலும் - எதிர்பட்ட இடையூறுகளை ஏற்க
துணிந்ததோடு, வாட்டிய உடல் வருத்தங்களை சகித்து, தடைபடாது
ஆற்றிய கடமையினாலும், எம்மிடையே மண்ணகத்தில் வாழ்ந்த பலர்,
இன்று விண்ணகப் புனிதர்களாக விளங்கிக்
கொண்டிருக்கின்றார்கள். எங்கள் ஆண்டவரும், மீட்பருமான உம்
வழியாய் உள்ளே செல்லும், வெளியே வரும் மற்றும் மேய்ச்சல்
நிலத்தை கண்டுபிடித்து நிறைவடையும் வரம்வேண்டி திருச்சுதனே
- உம்மை மன்றாடுகிறோம்.
4. இனிய இயேசுவே - எங்கள் நேசரே - எம் இறைவா! புரிந்த பல
நற்செயல்களால் மக்களிடையே சுடராக ஒளிரிந்ததாலும் - அதனால்
மக்கள் இறைதந்தையைப் போற்றி அவரின் மனதை குளிர்வித்ததாலும்
எம்மிடையே மண்ணகத்தில் வாழ்ந்த பலர் இன்று விண்ணகப்
புனிதர்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். நற்செயல்கள்
புரியும் அருங்குணத்தினை புனிதர்களிடமிருந்து நாங்கள்
கற்றுக்கொள்ளவும், உலகின் ஒளியாகிய உம்மிடமிருந்து
வாழ்விற்கு வழிகாட்டும் ஒளியை பெற்றுக் கொள்ளவும்
வரம்வேண்டி திருச்சுதனே - உம்மை மன்றாடுகிறோம்.
5. இனிய இயேசுவே - எங்கள் நேசரே - எம் இறைவா! காரியங்கள்
பலவற்றைக் குறித்து கவலையும், உள்ளத்தில் கலக்கமும்
கொள்ளாதிருக்க மார்த்தாவிற்கு கற்பித்தீரே. இறைவார்த்தைகளை
கருத்தாய்க் கேட்பதில் காலத்தை பயன்படுத்தவும்,
இறைவார்த்தைகளை சிந்தையில் இறுத்திச் செயலாற்றும் நல்ல
பங்கினைத் தேர்ந்தவர்களாய் வாழ்ந்து சிறக்கும்
வரம்வேண்டியும், இந்த தொற்றுநோய்காலத்தில் சுயநலமின்றி
உழைத்து எம்மை விட்டு அனைவரையும் உம் புனிதர்கள் கூடத்தில்
சேர்க்க வேண்டுமென்று திருச்சுதனே - உம்மை மன்றாடுகிறோம்.
6. எம் குற்றங்களையும், குறைகளையும் நினையாத எம் இறைவா!
இந்தத் தொற்றுநோய் காலத்தில் உமது மக்களாகிய நாங்கள் படும்
துன்பங்களை நீர் அறிவீர். விரைவில் நாங்கள் இதிலிருந்து
விடுபடவும், அனைவரும் மீண்டும் தம் வளமையான வாழ்விற்குத்
திரும்பத் தேவையான சூழலைத்தர வேண்டியும், மாணவச்செல்வங்கள்
நல்ல மனநிலையும், ஞானத்தையும் பெற்று நிம்மதியாகக் கல்விக்
கற்றுத் தேர்ந்திடவும் உமது அருளைப் பொழியுமாறு இறைவவா
உம்மை மன்றாடுகிறோம்.
7. நலம் அளிக்கும் வல்லவரே! எம் இறைவா! தொற்றுநோயின்
தாக்கத்திலிருந்து எங்களைக் காத்துவந்தவரே, நோயின் வீரியம்
குறைந்து மக்கள் அனைவரும் நலமுடனும், வளமுடனும் வாழத்
தேவையான அருளையும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை
அனைவரும் தொற்றுநோயினால் ஏற்பட்ட மனஅழுத்தத்திலிருந்து
விடுபடவும் தேவையான நல்ல சுகாதார, வளமான நல்ல சூழ்நிலையைத்
தரவேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.
இறைஇயேசுவில் அன்பிற்குரியவர்களே, இன்று அனைத்து புனிதர்களின்
பெருவிழாவை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய
நாமத்தில் அன்பான வணக்கங்கள். இந்நாளில் புனிதர்களின் நாமம்
தாங்கிய ஒவ்வொருவருக்கும் நாம விழா நல்வாழ்த்துக்கள்.
"புனிதம்" அல்லது "புனிதர்" என்பதை எபிரேய மொழியில் "குவதோஸ்" என்றும்,
கிரேக்க மொழியில் "ஆகியோன்" என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு
பிரித்தெடுக்கப்பட்ட" அல்லது "வேறுபடுத்தப்பட்ட" என வார்த்தையளவில்
பொருள் கொள்ளப்படுகிறது. கிறிஸ்தவர்கள், புனிதம் என்பது கடவுளையும்,
அவரை வழிபட பயன்படுத்தப்படும் பொருட்களையும், இடங்களையும் மட்டும்
சார்ந்ததாக கருதி வந்தனர். பின்னர், மிகக் குறிப்பாக, இயேசுவுக்காக
இரத்தம் சிந்தி உயிர் துறந்த அனைவரையுமே தொடக்ககால திருச்சபை புனிதர்கள்
என்றே அழைத்துள்ளது. இதை புனித பேதுருவின் முதல் திருமுகத்திலே
நாம் காணலாம்.
"புனிதர்கள் யார்? " என்று நாம் ஒவ்வொருவருமே நம்மில் கேட்டுப்
பார்க்கின்றபோது, கிடைக்கின்ற பதில், "புனிதர்கள் இறைவனின் திருவுளப்படி
தங்கள் வாழ்வை அவருக்காகவே, அனைத்தையும் துறந்து, அர்ப்பணித்தவர்கள்."
என்பதுவே. ஆம். புனிதர்கள் வாழ்வு நமக்குக் கற்றுத் தரக்கூடியதும்
அதுவே.
இறைமகன் இன்றைய நற்செய்தியில் போதித்தவை அனைத்தும் "நான் எதற்காக
வந்திருக்கின்றேன், எனது பணி யாருக்காக... என்னைப் பின்பற்ற
விரும்புகிறவர்களும் இவற்றின்வழி வாழ வேண்டுமென்பதையும்" மிகத்
தெளிவாக கூறுகின்றார். இம்மலைப்பொழிவை வாழ்வாக்கியவர்களே இன்று
நாம் போற்றிக் கொண்டாடும் புனிதர்கள்.
யாருமே பிறக்கும்போதே புனிதர்களாகப் பிறப்பதில்லை. அவர்களும், நம்மைப்
போல சாதாரண மனிதர்களாக பிறந்தவர்கள்தான். நம்மைப் போல நிறை, குறை
உடையவர்கள்தான். ஆனால், தங்கள் வாழ்வை இறைதிருவுளம் உணர்ந்து, இறைவார்த்தையின்படி
வாழ்ந்து, இறைவனுக்காகவும், பிறருக்காகவும் அனைத்தையும் துறந்து,
வாழ்ந்து, மரித்து, இறைபாதம் சேர்ந்து, அவரை முகமுகமாய் தரிசிக்கும்
பேற்றினை பரிசாக பெற்றுக் கொண்டவர்கள்.
புனிதர்கள் வணக்கம் கடவுளுக்கு எதிரானதல்ல. அவர்கள் வழியாக நாம் இன்னும்
கிறிஸ்தவ வாழ்வை அர்த்தமுள்ளதாக்க துணைபுரிபவை என்று எண்ணுதலே சிறந்தது.
நமக்கு முன்மாதிரியாக திகழ்பவர்கள். நாம் இறைநம்பிக்கையில் வளர
துணைபுரிபவர்கள். கடவுளின் அன்பை உணர்ந்து வாழ்ந்து காட்டிய, மற்றும்
அவரின் மதிப்பீடுகளை வாழ்வாக்கிய, புனிதர்களின் வாழ்க்கை முறையை
நாமும் பின்பற்றி, இயேசுவின் சாட்சிகளாக வாழ்ந்திட அருள் வேண்டி,
இத்தெய்வீகத் திருப்பலியில் இணைந்திடுவோம்.
முதல் வாசக முன்னுரை:
திருவெளிப்பாடு 7: 2-4, 9-14
இறப்புக்குப்பின் நிலைவாழ்வு ஒன்று உண்டு'என்பது கிறிஸ்தவத்தின்
தொன்மை வாய்ந்த நம்பிக்கைகளுள் ஒன்றாகும். அதன்படி உலக வாழ்வில்
மேற் கொள்ளப்பட்ட செயல்களின்படி ஒருவருக்குத் தீர்ப்பு வழங்கப்படும்.
விண்ணகக் கொடையை உடனடியாகப் பெறுவது என்பது எதிர்பார்ப்பாகும். அதன்படி
புதுவாழ்வு பெற்ற புனிதர் கூட்டத்தை தம் காட்சியில் கண்ட திருத்தூதர்
யோவான் விவரிப்பதை எடுத்துக்கூறும் முதல் வாசகத்தைக் கவனமுடன்
கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை: 1 யோவான் 3: 1-3
வானகத் தந்தை தூயவராய் இருக்கிறார். எனவேதான் விண்ணக தூதரணி அவரை
எப்போதும் "தூயவர்" எனப் புகழ்ந்தேத்துகிறது. நமது தந்தை எப்படியோ
நாமும் அப்படியே ருக்க வேண்டும். அப்போது தான் வானகத் தந்தையின்
உரிமைப் பிள்ளைகள் நாம் என்ற பேறு நமக்கு என்றும் நிலைக்கும். தொடக்க
முதல் முடிவு வரை தூய்மையயே நமது நிலைப்பாடு என வாழத் தூண்டும் இன்றைய
இரண்டாவது வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
மன்றாட்டுகள்
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. "மண்முகத்தே மழையைப் பொழிபவரும், வயல் முகத்தே நீரைத் தருபவரும்
அவரே" என்ற இறைவா,
நீர் அழகுற படைத்த இயற்கையை நாங்கள் சுயநலத்தால் அழித்து,
சுற்றுச்சூழலையும் பாழ்படுத்தி வருகின்றோம். அதனால், பருவநிலைகளும்
மாறி, வானம் பொய்த்து, நீரின்றி வறண்ட நிலையிலிருக்கின்றது. இறைவா,
எங்களின் தவறுகள், பாவங்களை உமது பேரிரக்கத்தால் மன்னித்து, தக்க
காலத்தில் மழையைத் தந்து, நிலம் செழித்திடவும், குடிநீர் பற்றாக்குறை
நீங்கிடவும் அருள்பொழிய வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
2. "என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன், மதிப்பு மிக்கவன், நான்
உன்மேல் அன்பு கூர்கிறேன்" என்ற இறைவா,
இந்த உலகம் பிறர் வாழ்வை எப்போதும் விமர்சனம் செய்து, குறை கூறி
அவர்களின் திறமைகள், ஆற்றல்கள் இவற்றை ஏற்றுக் கொள்ளாது, கீழே
வீழ்த்த முற்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களின் விமர்சனங்கள், ஏற்றுக்
கொள்ளாத நிலையில் மனம் சோர்ந்து, தளர்ந்திடாது, திறமைகள், உழைப்பை
முடக்கி விடாது, எத்தகைய நிலையிலும் முன்னேற்றப் பாதையிலிருந்து விலகிடாது,
அவர்களின் தரமற்ற விமர்சனங்களை புறம் தள்ளி, இந்த உலகம் ஒதுக்கினாலும்,
ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், நாங்கள் உமது பார்வையில் மதிப்புக்குரியவர்களாக
இருக்கிறோம் என்ற உள்ளார்ந்த நிறைவுடன், வாழ்வின் கடமைகளை,
பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றக்கூடிய, இலட்சியங்களில் தொடர்ந்து
பயணிக்கக்கூடிய திடமான, வலிமையான மனதினைத் தந்தருள வேண்டுமென்று,
இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
3. 'தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல், நான் உங்களைத் தேற்றுவேன்"
என்ற இறைவா,
வாழ்வில் ஆதரவற்று, துணையின்றி, ஆறதலின்றி தவிக்கும் மாந்தர்களை,
அவர்களின் மனத் துயரை, மனப்பாரங்களை, கண்ணீரை கண்ணோக்கும். அவர்களின்
மனத்துயரை மாற்றிட, உடனிருந்து ஆறுதல், அன்பை அளித்து, அவர்களை ஊக்கப்படுத்தி,
அவர்களைத் தேற்றி, அவர்கள் வாழ்வு ஏற்றம் கண்டிடும் வகையில், அவர்கள்
மகிழ்வில் உம்மைக் காணும் மாந்தர்களாக நாங்கள் வாழ்ந்திடக் கூடிய,
நல்இதயத்தை தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. "வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்" என்ற இறைவா,
முப்பத்தெட்டு ஆண்டுகளாக குளத்தில் இறக்கிவிட ஆளின்றி, எத்துணை
பொறுமையோடு காத்திருந்திருந்த, மனிதருக்கு நீர்; சுகம் தந்து
வாழ்வு கொடுத்தீர், பதினெட்டு ஆண்டுகளாக தீய ஆவி பிடித்து, கூன்
விழுந்து உடல்நலம் குன்றிய பெண்ணைக் குணப்படுத்தினீர். இவர்களின்
பொறுமை இன்று எங்களிடம் காணாமற் போய்விட்டது. இன்று மாந்தர்களிடம்
இல்லாத ஒரு "மை"யாக பொறுமை வலம் வருகிறது. எதையும்; காத்திருந்து
பெற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு, பொறுமையில்லாதவர்களாக வாழ்ந்து
கொண்டிருக்கிறோம். உடன் வாழும் மாந்தரிடமும், பணித்தளத்திலும், எங்கள்
விசுவாச வாழ்விலும் பொறுமையிழந்து, எரிச்சல்பட்டு, நிம்மதியின்றி
வாழும் மனநிலையை மாற்றி, பொறுமை என்னும் உன்னத பண்பினைப் பெற்று,
வாழ்ந்திட, வரமருள, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
5. "ஒரு சொல் ஒரு கொடையை விட மேலானது" என்ற இறைவா,
நாங்கள் பேசுகின்ற வார்த்தைகள், பலரை காயப்படுத்துவதாக, வீழ்த்துவதாக,
கண்ணீரில் ஆழ்த்துவதாக அமையாமல், பலரும் பயன்பெறக்கூடிய பண்பான, கனிவான,
ஊக்கம் தரக்கூடியதான வார்த்தைகளாக அமைந்திடவும், எங்கள் வீண்
வார்த்தை ஒவ்வொன்றுக்கும் நாங்கள் கணக்கு கொடுக்கும் வேண்டுமென்பதை
உணர்ந்தவர்களாக, தவறான வார்ததைகளை பேசாமல், எங்கள் நாவைக் காத்துக்
கொள்ளவும், இனிய சொற்களால், பல இதயங்களை இதமாக்கி, இன்பத்தை கொடுக்கவும்,
தேவையற்ற வார்த்தைகளை தவிர்க்கவும், எங்கள் நாவினை பயன்படுத்திட ஆற்றல்
தந்தருள வேண்டுமென்று, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
கடவுளின் மக்களென அழைக்கப்படுபவரும், கடவுளின் மக்களாகவே
வாழ்பவர்களுமான அன்பு இறைமக்களே, உங்கள் அனைவரையும் புனிதர்
அனைவர் பெருவிழாவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
வாழும்போது இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ்ந்து, எந்தச்
சூழ்நிலையிலும் விசுவாசத்தில் உறுதியுடன் நிலைத்து நின்று,
உலக மக்கள் யாவரும் நிலை வாழ்வை பெற சமரசமின்றி உழைத்து,
இம்மண்ணைவிட்டு மறைந்தாலும், இன்று விண்ணக வாழ்வை
சுவைத்துக் கொண்டிருக்கும் புனிதர்களின் பெருவிழாவினை இன்று
நாம் கொண்டாடுகிறோம்.
தனக்காகவும் பிறருக்காகவும் வாழ்கிறவன் மனிதன், பிறருக்காகவும்
கடவுளுக்காகவும் வாழ்கிறவன் புனிதன். அடுத்தவரின் வாட்டத்தைப்
போக்க இயன்றதைச் செய்பவன் மனிதன், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடுபவன் புனிதன். தவறுகளைத் திரும்பத் திரும்ப செய்யத்
துணிபவன் மனிதன். தவறுகளை உணர்ந்து திருந்தி, வீழ்ந்தாலும்
மீண்டு எழுபவன் புனிதன். அத்தகைய புனிதர்கள்
விழாவினைக் கொண்டாடி மகிழ, அவர்களது பரிந்துரையால்
நிலைவாழ்வைப் பெற, மனிதர்களாக வாழும் நாம் ஒவ்வொருவரும்
புனிதர்களாக மாற திருஅவை நம்மை அழைத்துள்ளது.
ஒவ்வொரு புனிதரும் தங்கள் வாழ்வால், கடவுளோடு கொண்ட
நெருங்கிய உறவால், எத்தகைய சூழ்நிலையிலும் கடவுளின் திட்டத்தை
செயல்படுத்தியதால், அவர்கள் இம்மண்ணுலகில் மறைந்தாலும்
விண்ணுலகில் கடவுளை முகமுகமாய் தரிசிக்கும் வரத்தைப்
பெற்று, நமக்கும் கடவுளுக்கும் பாலமாக விளங்குகிறார்கள்.
நமது தேவைகளையும் விண்ணப்பங்களையும் கடவுளின் கவனத்திற்குக்
கொண்டு சென்று நமக்காக பரிந்து பேசுகிறார்கள்.
புனிதர்கள் விழாவைக் கொண்டாடும் நாம் அப்புனிதர்களைப் போல்
தூய்மை மிகுந்த வாழ்க்கை வாழ, விசுவாசத்தில் உறுதியுடன்
நிலைத்து வாழ, சாட்சிய வாழ்வு வாழ இத்திருப்பலி வழியாக இறையருளை
வேண்டுவோம். நமது விண்ணப்பங்களை கடவுளிடம் பரிந்துரைக்க
புனிதர்களை மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை
இம்மண்ணில் வாழும்போது கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து
அதற்கு விண்ணகக் கொடையை பரிசாக பெற்ற புனிதர் கூட்டத்தை தம்
காட்சியில் கண்டு மகிழ்ந்ததை திருத்தூதர் யோவான் விவரிப்பது
இன்றைய முதல் வாசகமாக கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணகத்திற்கு
உரியவர்களான நாம் அனைவரும் புனித வாழ்வு வாழ வேண்டும் என
அழைப்பு விடுக்கும் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
ஒவ்வொரு கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குடும்பமும் இறைக்குடும்பத்தின்
அங்கம் என்ற மேன்மையை இன்றைய இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கிறது.
திருமுழுக்கின் வழியாக தெய்வீக வாழ்வைப் பெற்று புனிதராக
வாழ அழைக்கப்பட்ட நாம் அப்புனிதர்களின் அடிச்சுவட்டைப்
பின்பற்றி நடப்போம் என்ற உறுதியுடன் இவ்வாசகத்தைக்
கேட்போம்.
மறையுரைச்சிந்தனை -
Gnaoli
I திருவெளிப்பாடு 7: 2-4,9-14
II 1 யோவான் 3: 1-3
III மத்தேயு 5: 1-12a
இறைமகன் இயேசு கிறிஸ்துவில் பிரியமுள்ள எனது அன்பு சகோதரிகளே
சகோதரர்களே உங்கள் அனைவருக்கும் நம் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவின் அற்புத நாமத்திலே வாழ்த்துக்களையும் வணக்கங்களையும்
தெரிவித்து கொள்கிறேன்
இன்றைய நற்செய்தியில் பார்க்கிறபொழுது இயேசு மலைமீது ஏறி
அமர அவருடைய சீடர்கள் அவரருகே வந்தனர் என்று பார்க்கிறோம்.
ஏன் அவர் மலைமீது ஏறி அமர வேண்டும் என்று பார்க்கிறபொழுது
யூத ரபிகள் என்ன செய்வார்கள் என்றால் தாங்கள் போதிக்கிறது
அதிலும் சிறப்பாக அதிகார பூர்வமாக எதை அறிவிக்கிறார்கள் அதை
அவர்கள் அமர்ந்துகொண்டு அறிவிப்பார்கள்.
ஆகவேதான் ஒவ்வொரு இடத்திலும் அந்த அமர்ந்துகொண்டு அறிக்கை
விடுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
அதை நாம் திரு அவையிலும் சிறப்பாக பார்க்கிறோம் என்றால்
பாப்பரசர் உலகம் முழுவதற்குமான ஒரு அறிக்கையை கொடுக்கிற
பொழுது அதை அவர் பேதுருவின் உடை அந்த இருக்கையில் அமர்ந்து
உலகிற்கு வெளிப்படுத்துவார். ஆகவேதான் அது அவ்வளவு முக்கியத்துவம்
வாய்ந்ததாக இருக்கிறது என்று நம் திரு அவையில்
பார்க்கிறோம். அது வழி வழியாக நமக்கு கொடுக்கப்படுகிற ஒரு
முறையாக இருக்கிறது
ஆகவே தான் அமர்ந்துகொண்டு அறிவிப்பது என்பது மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
அதை அமர்ந்துகொண்டு அறிவிக்கிறார். அதிலும் சிறப்பாக துயருறுவோர்
பேறுபெற்றோர் என்று அவர் அறிக்கை விடுகிறார். இந்தத் துயரம்
என்பது எதைக் குறிக்கிறது என்று பார்க்கிறபொழுது அது சாவை
குறிக்கவில்லை மாறாக இது முதலிலே குறிப்பது பாவங்களுக்காக
அழுது புலம்புவது என்பதை குறிக்கிறது
துயருறுவோர் என்பது ஆங்கிலத்தில் மோர்நிங் என்று
சொல்லுவார்கள் அதைத்தான் நாம் தமிழிலேயே துயருறுவோர் என்று
சொல்லுகிறோம். நம்முடைய தனிப்பட்ட பாவங்களுக்காக நாம் அந்த
ஒரு செயலை செய்ய வேண்டும் என்பதை இயேசு இங்கே
சுட்டிக்காட்டுகிறார். 1சாமுவேல்15/ 35 ஆவது இறைவார்த்தை
16/1 மற்றும் ஆகியவற்றில் நாம் பார்க்கிறோம் சாமுவேல் சவுலை
குறித்து அவர் துக்கம் கொண்டாடுவார், ஆண்டவர் அரசபதவியில்
இருந்து நீக்கிவிட்டார் என்பது குறித்து துயருற்று
துக்கம் கொண்டாடுவார். இங்கே அவரவர் செய்த பாவங்களுக்காக
என்று கூறுகிறார் என்பதை குறித்துக் காட்டுகிறது.
2கொரிந்தியர் 12/21 முன்பு பாவம் செய்தவர்கள் பலர் தங்களுடைய
ஒழுக்கக்கேடு பரத்தமை காம வெறி ஆகியவற்றைக் குறித்து மனம்
மாறாமல் இருப்பதைக் கண்டு துயருற்று அழ வேண்டி இருக்குமோ
என்னவோ என்று பவுல் அடியார் கூறுகிறார் ஆக நம்முடய பாவங்களுக்காக
அழவேண்டும் என்பதைத்தான் இது நமக்கு சுட்டிக் காட்டுகிறது
நாம் பாவம் செய்கிற பொழுது எப்படி நாம் துயருற்று அந்த பாவங்களுக்காக
அழுகிரோம் என்பதை நினைத்துப்பாருங்கள். இரண்டாவதாக இந்த
உலகத்தினுடைய பாவங்களுக்காக துயரம் கெண்டாடுவது. இந்த உலகின்
பாவங்களுக்காக துயரப்படுகிறவர்கள் பேறு பெற்றவர்கள். ஏன்
என்றால் பாவிகளுடைய பாவங்களுக்காக அவர்கள் பரிகாரம்
செய்கிறார்கள் அவர்களுக்காக அழுது புலம்புகிறார்கள் துயரப்படுகிறார்கள்
என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. புனித அனானிமுஸ் இப்படியாக
சொல்லுவார்
தன்னுடைய பாவங்களுக்காக அழுது புலம்புகிறார்கள் துயருபவர்கள்
பேறுபெற்றவர்கள்அதிலும் சிறப்பாக மற்றவர்களுடைய பாவங்களுக்காக
துயருறுபவர்கள் இன்னும் பேறு பெற்றவர்கள் என்று அவர்
குறிப்பிடுகிறார். மற்றவர்களுடைய பாவங்களுக்காக துயரப்படுகிறவர்கள்
என்று பார்க்கிற பொழுது, அவர்கள் சோகமாக இருப்பது இல்லை.
மாறாக
ஜெபத்திலே பாவிகளுக்காக அழுது புலம்புவார்கள் என்பதைத்தான்
இது சுட்டிக்காட்டுகிறது. அவர்களுடைய பாவங்களுக்காக நாம்
அழுது புலம்புகிறது. கடவுளுடைய அருளும் ஆசீர்வாதம் இன்னும்
அதிகமாக இருக்கும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. ஆகவே
நம்முடைய பாவங்களுக்காகவும் மற்றவர்களுடைய பாவங்களுக்காகவும்
துயரப்பட்டு அழுது புல்ம்பி இறைவனிடமிருந்து அபரிவிதமான ஆசீர்வாதங்களை
பெற்று கொள்ள முயற்சி செய்வோம். ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
புனிதத்தின் முன்சுவை
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி திருத்தந்தை 14-ஆம்
லியோ இரண்டு பேரை கார்லோ அகுதிஸ் மற்றும் பியர் ஜோர்ஜோ
ஃபிரஸ்ஸாத்தி என்னும் இரண்டு இளவல்களை புனிதர் நிலைக்கு
உயர்த்தினார். புனிதர் நிலை என்பது அனைவருக்கும் சாத்தியம்
என்ற எதிர்நோக்கு இந்த நிகழ்வின் வழியாக பலருக்குக்
கிடைத்தாலும், கார்லோ அகுதிஸைவிட துன்பப்பட்டவர்களோ, அல்லது
ஜோர்ஜோ ஃபிரஸ்ஸாத்தியைவிட கூர்நோக்கு கொண்ட இளவல்களும் எங்கள்
நாட்டிலும் இருக்கிறார்கள் என்ற ஏக்கம் பலர் உள்ளங்களில்
எழுந்தது.
புனிதர் அனைவரையும் திருஅவை கண்டுகொள்வது சாத்தியம் இல்லை!
அல்லது அது சில நேரங்களில் கண்டுகொள்ளவில்லை!
கார்லோ அகுதிஸ் அவர்களுடைய திருப்பண்டத்தைச் சேகரித்து அதை
நம் ஆலயங்களில் நிறுவி காணிக்கை எடுக்கும் அக்கறையை நாம்
நம் பங்கின் இளையோர்களை ஊக்குவிப்பதிலோ, அல்லது கார்லோ
அகுதிஸ் போல கணினி கற்பிப்பதிலோ நாம் காட்டுவதில்லை.
புனிதர்கள் என்பவர்கள் நம் வாழ்வின் துன்பங்களைப்
போக்குபவர்கள், நோய், வறுமை, இறப்பு ஆகியவற்றினின்று
விடுவிப்பவர்கள் என்று நாம் அவர்களுடைய மேன்மையைக்
குறைத்துவிட்டதும் வருத்தத்திற்குரியது.
இன்னொரு பக்கம், புனித தேவசகாயம் அவர்கள் பொதுநிலையினரின்
பாதுகாவலர் என்று அறிவிக்கப்பட்டார். புனித தேவசகாயம்
அவர்கள் துன்புற்றபோது திருஅவை அவருடன் நிற்கவில்லை.
ஆனால், அவர் இறந்த பின்னர் அவரைப் புனிதராகக்
கொண்டாடுகிறது. கந்தமாலில் சமயத் துன்புறுத்தலுக்கு ஆளாகி
இறந்தவர்களை புனிதர்களாக அறிவிக்க இப்போது முயற்சிகள்
எடுக்கப்படுகின்றன. ஒருவர் நம்மோடு இருந்து துன்புறும்போது
அவருக்கு ஆதரவாகச் செயல்படாமல் இருந்துவிட்டு அவரைப்
புனிதராக்கி தேரில் தூக்கிச் செல்வதால் (அவருக்கு) என்ன
பயன்?
பிரான்சு நாட்டின் முக்கிய நகரில் வாழும் ஒரு பெண்
கண்பார்வை இழந்த தன் கணவரையும், 23 ஆண்டுகளாக மனநோயால்
பாதிக்கப்பட்டுள்ள மகனையும் ஒருநாள் விடாமல் பாதுகாத்து
பராமரித்து வருகிறார்.
படுத்த படுக்கயாகக் கிடக்கிற தன் தாய்க்குப் பக்குவம்
பார்த்து, நினைவுக்குறைவால் வருந்தும் தன் சகோதரிக்குத்
தேவையானதைச் செய்துவிட்டு விரைவாக அலுவலகம் செல்கிறார் ஒரு
பெண்.
தந்தையின் இறப்பால் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர்
கடன்சுமையைச் சுமக்க தன் கல்லூரிப் படிப்பை இடையில் விட்டு
வேலைக்குச் சென்று குடும்பத்தின் சுமையைச் சுமக்கிறார்
இளைஞர் ஒருவர்.
திருஅவையின் அட்டவணைக்குள் வராதவர்கள், ஆனால், புனித
வாழ்வை வாழ்ந்தவர்கள், அல்லது திருஅவையின் போதனைப்படி
'மகிமைபெற்ற திருஅவையில்'இருக்கும் அனைத்து இனியவர்களின்
திருநாள் இன்று. இன்றைய முதல் வாசகம் (காண். திவெ
7:2-4,9-14) இவர்களை முத்திரையிடப்பட்டவர்கள்
என்றழைக்கின்றது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் யோவான், நாம்
இங்கேயே கடவுளின் மக்களாக இருக்கிறோம் என்று புனித நிலையை
இவ்வுலகம் சார்ந்ததாகப் பதிவு செய்கிறார். நற்செய்தி
வாசகத்தில் இயேசுவின் மலைப்பொழிவில் காணப்படும்
பேறுபெற்றோர் பாடத்தை வாசிக்கின்றோம். இக்குணங்களைக்
கொண்டிருப்பவர்கள் புனித நிலையை அடைகிறார்கள் அல்லது
விண்ணரசை உரிமையாக்கிக்கொள்கிறார்கள் என்று நாம்
புரிந்துகொள்ள முடியும்.
உரோமையில் புனிதர் பட்டமளிப்பு விழா நடந்த மறுநாளில்
இணையதள தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றில் அதே செய்தி
வெளியிடப்பட்டிருந்தது. அதற்குப் பின்னூட்டம் இட்டவர்களில்
ஒருவர், 'மனிதர்களாகச் சேர்ந்து ஒருவரை எப்படி புனிதராக்க
முடியும்?'என்ற கேள்வியைக் கேட்டிருந்தார்.
புனிதராக்குகின்ற மனிதர்கள் இறைவனின் பெயரால், திருஅவையின்
பெயரால், அல்லது இறைமக்களின் பெயரால் இந்நிகழ்வை
நடத்துகிறார்கள் என்று நாம் சொன்னாலும் அவருக்கு அப்பதில்
ஏற்புடையதாக இருக்காது.
'நான் நீதிமான்களை அல்ல. பாவிகளையே அழைக்க வந்தேன்'என்று
சொன்ன இயேசு, 'அனைத்துப் புனிதர்கள் விழா'கொண்டாட
விரும்புவாரா? என்று கேட்டார் என் நண்பர். இயேசு ஒருவேளை
நம்மோடு இருந்தால் 'அனைத்துப் பாவிகள் விழா'தான்
கொண்டாடியிருப்பார் என்றார் அவர்.
புனிதர்களை நாம் மிகவும் கொண்டாடி அவர்களை
அந்நியப்படுத்திவிடும், அல்லது உடுப்பி ஓட்டல் சர்வர்
நிலையில், நம்மிடம் 'ஆர்டர்'எடுத்து, அதைக் கொண்டு வந்து
நம் தட்டில் வைக்கும் நபராகப் பார்க்கும் போக்கும்
நம்மிடையே இருக்கத்தான் செய்கிறது.
அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நாம் வாழ்வதோ, அல்லது அவர்கள்
விட்டுச்சென்ற விழுமியங்களை வாழ்வாக்குவதோ நமக்குக்
கடினமாக இருக்கும் என்று, அவர்களின் வழித்தோன்றல்களாக
இருப்பதற்குப் பதிலாக, அவர்களது பக்தர்களாக மாறும் எளியை
வழியைத் தெரிவுசெய்துகொண்டோமோ என்று கேட்கவும்
தோன்றுகிறது.
இந்தத் திருநாள் நமக்குத் தரும் செய்தி என்ன?
ஒன்று,
'உங்களுக்குப் புனிதராக விருப்பமா?'என்று நம்மிடம்
யாராவது கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம்? புனிதர்களும்
நம்மைப் போன்ற மனிதர்கள்தாம். ஆனால், சாதாரண மனிதர்களைவிட
அவர்கள் கொஞ்சம் 'எக்ஸ்ட்ரா'செய்தார்கள். அந்தக் கொஞ்சம்
'எக்ஸ்ட்ரா'தான் அவர்களைப் புனிதர் நிலைக்கு
உயர்த்துகிறது. அவர்கள் யாரும் செல்லாத பாதையில் நடந்து
சென்றார்கள்.
பயத்தால் பீடிக்கப்பட்ட மக்கள் நடுவே கொஞ்சம் எக்ஸ்ட்ரா
துணிச்சல் கொண்டார்கள் செபஸ்தியார் போல! தன் திறமை
மதிக்கப்படாத இடத்தில் கொஞ்சம் எக்ஸ்டரா பொறுமை
காத்தார்கள் பதுவை அந்தோனியார் போல! சொத்துக்கள் நிறைய
வேண்டும் என்று நினைத்தவர்கள் நடுவில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா
கொடுத்தார்கள் பிரான்சிஸ் அசிசி, வனத்து அந்தோனியார்
போல! இவர்கள் சேரி மக்கள். இவர்களுக்கு என்ன செய்ய
முடியும்? என்று கேட்டவர்கள் நடுவில், அந்த மக்களுக்காக
கொஞ்சம் எக்ஸ்ட்ரா தன் ஆற்றலையும் நேரத்தையும்
கொடுத்தார்கள் அன்னை தெரசா போல! இப்படி இவர்கள் கொஞ்சம்
கொஞ்சம் எக்ஸ்டரா செய்தார்கள். அவ்வளவுதான்!
நம்முடைய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, உடன்பிறந்தவர்கள்,
நண்பர்கள் என்று நம்மிடையே வாழ்ந்து இன்று மறைந்தவர்களும்
கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்தவர்கள்தாம் அவர்களும் இன்று
புனிதர்களே! ஆக, நாம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்யும்போதும்,
எக்ஸ்டரா மைல் நடக்கும்போதும் புனிதராகிறோம்.
இரண்டு, இருப்பது அல்ல, மாறுவது. இருப்பது அல்ல, மாறுவதே
மதிப்பு பெறுகிறது. மாற்றம் கூடக்கூட மதிப்பு கூடுகிறது.
பால் மதிப்புக்குரியதுதான். ஆனால், பால் தயிரானால் அதன்
மதிப்பு கூடுகிறது. வெண்ணெய் அல்லது பாலாடைக்கட்டியானால்
இன்னும் கூடுகிறது. பால்கோவா, பால் அல்வா ஆனால்
இன்னும்கூடுகிறது. நெய் ஆனால் இன்னும் அதிக மதிப்பு
பெறுகிறது. ஆனால், இந்த மாற்றம் எளிதான செயல் அல்ல. இந்த
மாற்றத்திற்கு தன்னையே உட்படுத்த பால் நிறைய சூட்டைத்
தாங்க வேண்டும், பாத்திரம் விட்டு பாத்திரம் மாற வேண்டும்,
மத்தால் திரிக்கப்பட வேண்டும், கையால் சுரண்டப்பட
வேண்டும்.
புனிதர்கள் சொல்லும் இரண்டாம் பாடம் இதுதான். நாம்
இருப்பதில் அல்ல. நாம் எப்படி மாறுகிறோம் என்பதில்தான்
மதிப்பு இருக்கிறது.
பாரக் ஒபாமா அவர்களின் மனைவி மிஷல் ஒபாமா தன்னுடைய
வாழ்க்கை வரலாற்றை, 'பிகமிங்'என்ற தலைப்பில் நூலாக
உருவாக்கியுள்ளார். 'நான் என்னவாக மாற விரும்புகிறேன்'
என்ற கேள்வி நம்முடைய இருப்பையே புரட்டிப்போடும்
என்கிறார். 'அவரால் முடியும், அவளால் முடியும். என்னால்
ஏன் முடியாது?'என்று கேட்டதால்தான் லொயோலா இஞ்ஞாசியார்
மாற்றத்தின் கருவியாகிறார். ஆக, நாம் எப்படி மாற வேண்டும்
என்பதைக் கற்றுத்தருகிறார்கள் புனிதர்கள்.
மூன்று, எதிர்நோக்கு. 'எல்லாம் கடந்துவிடும்'என்பர். சரி!
கடந்தால் என்ன? கடந்தாலும் காத்திருத்தல்தான் எதிர்நோக்கு.
'எல்லாம் கடந்துவிடும்'என நினைப்பவர்கள் புனிதர்கள் ஆக
முடியாது. 'துன்பம் கடந்துவிடும்'என்று செபஸ்தியார்
நினைத்திருந்தால் ஓய்ந்திருப்பார் இல்லையா? எதிர்நோக்கு
கொண்டிருந்தார். கடந்துவிடுவதற்கு முன் துன்பத்தை
ஏற்கின்றார். நம் வாழ்வில் எதிர்நோக்கு என்னும்
மெழுகுதிரியை நாம் அணையாமல் காத்துக்கொள்ள நம்மைத்
தூண்டுகின்றனர் புனிதர்கள். கொஞ்சம் எக்ஸ்ட்ரா, கொஞ்சம்
மாற்றம், கொஞ்சம் எதிர்நோக்கு இதுவே புனிதம்!
நாம் எல்லாருமே புனிதர்கள், இப்போது வரை. ஆனால் இன்னும்
நாம் புனிதர்களாக நம்மை முழுமையாக வெளிப்படுத்தவில்லை
நமக்கு, பிறருக்கு, இந்த உலகத்திற்கு. ஆனால் கடவுளுக்குத்
தெரியும் நாம் எந்த சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்று.
அவருக்குத் தெரியும் நாம் யாரைப்போல உருப்பெற்றவர்கள்
என்று. அவருக்குத் தெரியும். அவருக்குத் தெரியும் நாம்
புனிதர்களென்று!
இதோ! கொஞ்சம் கொஞ்சமாக நாம் புனிதர்களாக வளர்கிறோம்.
நம்மிலிருந்து நாம் வெளியே வருகிறோம். நம் கூட்டை நாமே
கொத்திக் கொத்தி உடைத்துக் கொள்கிறோம். நம்மை நாமே
படைத்துக் கொண்டிருக்கிறோம். கடவுளே நம் உள்ளிருந்து
செயலாற்றிக் கொண்டிருக்கிறார். இது எப்படி நடக்கிறது என்று
நமக்குத் தெரியாது. ஆனால் நம்மால் மட்டும் தான் அதை உணர
முடியும் கொஞ்சம் கொஞ்சமாக, நம் இயல்பு நிறைவு பெறும்
போது!
அப்படியென்றால், யார் புனிதர்? புனிதர் என்பவர்
மனச்சுதந்திரம் பெற்றவர். தன் வாழ்வின் ஆதாரத்தோடு தொடர்பு
கொண்டிருப்பவர். தன் மையம் எது என்ன என்பதைக்
கண்டுகொண்டவர். புனிதருக்குத் தெரியும் தான் எங்கிருந்து
வந்தோம் என்பதும் எங்கே செல்கிறோம் என்பதும்! தான்
வலுவற்றவன் தான் என்றாலும், தான் படைக்கப்பட்டது
நிரந்திரத்திற்கு என்பதை அவருக்குத் தெரியும்!
புனிதர் என்பவர் ஒரு சுதந்திரப் பறவை! அவர் தன்
வேர்களிலிருந்தும், தன் குணாதிசயத்திலிருந்தும், தன்
வரையறைகளிலிருந்தும், தன் பாவங்களிலிருந்தும்
விடுவிக்கப்பட்டவர் அல்ல இவைகளிலிருந்து
விடுவிக்கப்பட்டால் தான் அவர் புனிதரா? புனிதர் என்பவர்
இவைகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர் அல்ல. மாறாக, இவைகள்
வழியாகவும், இவைகளிலும் சுதந்திரமாகக் கடந்து செல்பவர்.
புனிதர் தன் உள்ளார்ந்த போராட்டங்களை வென்று வெற்றிகரமாக
வெளியே வந்தவர்! புனிதர் எந்த நிலையிலும் தன்னை மட்டும்
காத்துக் கொள்ள வேண்டும் என்று நினையாதவர்! புனிதர் கடவுளை
நோக்கி கதறியழத் தெரிந்தவர். சின்னக் குழந்தை போல
எல்லாவற்றையும் நம்பத் தெரிந்தவர்.
தன்னோடும், தன் அருகில் இருப்பவரோடும் சமாதானம் செய்து
கொள்பவர். புனிதர் தன்னிடம் இல்லாததை நினைத்து வருந்துபவர்
அல்ல. இருப்பதை வைத்து மகிழ்பவர்.
புனிதருக்கு நடிக்கத் தெரியாது. முகமூடி அணியத் தெரியாது.
மற்றவரின் வாழ்வைப் போல தன் வாழ்வை அவர் அமைத்துக் கொள்ள
ஒருபோதும் அவர் நினைப்பதில்லை. மற்றவரைப் போல வாழ வேண்டும்
என்றும் எண்ணுவதில்லை. தன்னைப் போல இருப்பதே தனக்குப்
போதும் என்று உறுதியாக நம்புபவர். புனிதருக்கு தன் உண்மை
என்ன என்று தெரியும்! தான் யாரென்று தெரியும்! காற்று
நிரப்பப்பட்ட பலூன் அல்ல அவர். காற்றே இல்லாத பலூனும் அல்ல
அவர். ஆற்றலோ, ஆசைகளோ, ஆண்மையோ இல்லாதவர் அல்ல அவர்.
புனிதர் தானே உலகைப் படைத்து அதை பரிசாக தன் கடவுளுக்குப்
படைப்பவர் அவர். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்,
சந்திக்கும் ஒவ்வொரு நபரிலும், சிந்தும் ஒவ்வொரு துளிக்
கண்ணீரிலும், வியர்வையிலும் கடவுள் ஒளிந்திருப்பது
அவருக்குத் தெரியும்.
புனிதர் பொருட்களையும், உடலையும், உடலின் மணத்தையும்,
சுகத்தையும், அதன் நிறத்தையும், வழுவழுப்பையும் அன்பு
செய்பவர். வாழ்வின் எதார்த்தங்கள் ஒரு இசை போல ஒழுங்கானவை
என்றும் அதே நேரத்தில் கடினமானவை என்பதையும்
உணர்ந்தவர்.புனிதர் எல்லாரையும் விட்டு ஒதுங்கி நிற்பவர்
அல்ல. சாதாரணமானவர்களோடு சாதாரணமாக நிற்பவர். வாழ்வோடு
முழுமையாகக் கலந்தவர். தன் உடலின் உணர்வுகளோடு வாழத்
தெரிந்தவர். ஆனால் அவர் எதையும் மிகைப்படுத்துவதில்லை.
புனிதர் சாந்தமானவர். ஆகையால் தான் இந்த உலகை அவர்
உரிமையாக்கிக் கொள்கிறார். அங்கே மகிழ்ச்சியாக அவர்
வாழ்கிறார். புனிதர் தனக்குத் தானே சிரிக்கத் தெரிந்தவர்.
தன்னைப் பார்த்தும் சிரிக்கத் தயங்காதவர். புனிதர் தன்னால்
இயன்றவற்றை முழுமையாகச் செய்பவர் தன் முழு ஆற்றலோடு
செய்பவர். தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பார்.
இந்த உலகத்தைத் தான் ஒருவர் தான் மாற்ற முடியும் என்றும்
மீட்க முடியும் என்றும் அவர் நினைப்பதில்லை. புனிதர்
தன்னைக் கடவுளாக எண்ணிக்கொள்வதில்லை. புனிதர் மனிதர்களை
மட்டுமல்ல, மனிதர்கள் அல்லாதவரையும் அன்பு செய்பவர்.
அவைகளோடு தான் இணைக்கப்பட்டுள்ளதை அறிந்தவர் அவர். புனிதர்
உண்மையானவர்.
புனிதர் சில நேரங்களில் கடவுளை அறிவதில்லை! அவர்கள் கடவுளை
மறந்து விடுவார்கள்! அவர்கள் கடவுளை திட்டுவார்கள்!
அவர்கள் கடவுளிடம் சண்டை போடுவார்கள்! ஆனால் அவர்களுக்குத்
தெரியும் கடவுள் நம்பிக்கைக்குரியவர் என்று.
இனிய திருநாள் வாழ்த்துக்கள்! புனிதர்களாகிய உங்கள்
அனைவருக்கும்!
புனிதத்தின் முன்சுவையை நாம் இன்று அனுபவிக்க நம்மை
அழைக்கிறது இத்திருநாள்.
அருளின் கனியே புனிதம்
இன்று புனிதர் அனைவர் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம்.
பயணம் செய்யும் திருஅவை, மகிமை பெற்ற திருஅவை, துன்புறும்
திருஅவை என்னும் நம் திருஅவையின் மூன்று நிலைகளில்
இரண்டாம் நிலையின் திருநாள் இது. இவர்கள் தூய்மை அல்லது
புனித நிலையை அடைந்தவர்கள்? 'நான் ஒருவரே தூயவர்' என்று
கடவுள் சொல்ல, தூய்மை அல்லது புனிதம் என்பது கடவுளின்
பண்பு என வரையறுக்கப்பட்டிருக்க, 'மனிதர்களாகிய' நாம்
புனித நிலையை அடைய முடியுமா? அல்லது சிலர் சொல்வது போல,
'மனிதமே புனிதமா'?
மனிதப் புனிதம் அல்லது தூய்மை என்பது கடவுளின் அருளுக்கு
நாம் செய்யும் தொடர் பதிலிறுப்பு எனவும், அவரின் அருளைப்
பெற்ற நாம் அவருக்குக் கொடுக்கும் கனிகள் என்றும் நாம்
புரிந்துகொள்ளலாம்.
ஒரு சிறிய உருவகத்தோடு தொடங்குவோம். பள்ளிக்கூடத்திற்குக்
குழந்தைகள் வருவதைப் பார்த்திருக்கிறீர்களா? குழந்தைகள்
வரும் நிகழ்வை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: (அ) சில
குழந்தைகளை அவர்களுடைய அம்மா, அல்லது அப்பா, அல்லது
ஆட்டோக்காரர் கொண்டு வந்து விடுவார், (ஆ) சில குழந்தைகள்
வீட்டிலிருந்து நடந்து வருவார்கள், (இ) சில குழந்தைகள்
அப்பா வாங்கிக் கொடுத்த சைக்கிளை ஓட்டிக்கொண்டோ, அல்லது
அப்பா தந்த பணத்தைக் கொண்டு பொதுப் போக்குவரத்திலோ வருவர்.
முதல் வகை குழந்தைகளுக்கு எல்லாமே அவர்களது பெற்றோரால்
கொடுக்கப்பட்டுவிடுகிறது. அவர்களது வேலையெல்லாம்
படிப்பதும், பெற்றோரின் எதிர்பார்ப்பின்படி நடப்பதும்தான்.
இதே போல, கடவுள் சிலருக்கு அவர்களது பிறப்பிலேயே
புனிதத்தைக் கொடுத்துவிடுகிறார். புனிதம் என்பது
இவர்களுக்குக் கடவுள் கொடுத்த கொடை. எடுத்துக்காட்டாக,
அன்னை கன்னி மரியாள். இரண்டாம் வகைக் குழந்தைகள் தாங்களே
நடந்து செல்ல வேண்டும். முதுகில் சுமை, வயிற்றில் பசி,
பள்ளி மணி ஒலிக்கும் அவசரம் எனக் குழந்தைகள் நடந்து செல்ல
வேண்டும். சில குழந்தைகள் பள்ளிவரை செல்லும், சில
குழந்தைகள் வழியில் யாரிடமாவது லிஃப்ட் கேட்கும், சில
குழந்தைகள் தங்களால் இயலாது என்று பாதி வழி நின்றுவிடும்.
இத்தகைய மனிதர்கள் புனிதத்தை அடையப் போராடுபவர்கள்.
ஏறக்குறைய புனித நிலையை அடைபவர்கள். இவர்களுக்கு
மற்றவர்களின் உதவி தேவைப்படும். இவர்கள்தாம் உத்தரிக்கிற
நிலை ஆன்மாக்கள் அல்லது துன்புறும் திருஅவையின்
உறுப்பினர்கள். மூன்றாவதாக உள்ள குழந்தைகள், தங்கள்
பெற்றோர் கொடுத்த அருள் என்னும் மிதிவண்டியைப்
பயன்படுத்துவதுடன், தாங்களே மிதித்து பள்ளிக்கு
வருவார்கள். இவ்வகை மனிதர்கள், கடவுளின் அருள் அல்லது
அழைப்பைத் தங்கள் வாழ்வில் ஏற்று, அதற்கேற்ற பதிலிறுப்பு
செய்து, தங்கள் வாழ்விலும் வாழ்வாலும் கனி தந்தவர்கள்.
இம்மூன்றாம் வகை மனிதர்களைத்தான், அவர்கள் அடைந்த புனித
நிலையைத்தான், இன்றைய நாளில் 'புனிதர் அனைவர்
பெருவிழாவில்' கொண்டாடி மகிழ்கிறோம். பள்ளிக்குள்
வந்துவிட்டால் அனைத்துக் குழந்தைகளும் ஒன்றென
ஆகிவிடுகிறார்கள். அது போல, இறைவனின் திருமுன்னிலையில்
அனைத்துப் புனிதர்களும் ஒன்றென ஆகிவிடுகின்றனர்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். திவெ 7:2-4,9-14),
திருவெளிப்பாடு நூல், கடவுளின் புனித மக்கள் பற்றிய
வியத்தகு காட்சியை நம்முன் கொண்டுவருகிறது. கடவுளின் புனித
மக்கள் இரு குழுவினர்களாக இருக்கின்றனர். முதல்
காட்சியில், அல்லது முதல் குழுவில் உள்ளவர்கள்
'முத்திரையிடப்பட்டவர்கள்.' முத்திரை என்பது ஒருவருக்கு
அது உடைமை என்பதையும், ஒருவர் அதன்மேல் உரிமை
கொண்டாடுகிறார் என்பதையும் குறிக்கிறது. 144 ஆயிரம் மக்கள்
அவ்வாறு முத்திரையிடப்பட்டுள்ளதாக யோவான் காண்கிறார்.
முத்திரையிடப்பட்ட இவர்கள் அனைவரும் கடவுளின் மக்கள்.
இங்கே, '144' என்பது ஓர் உருவக அல்லது அடையாள எண்.
இஸ்ரயேலின் 12 குலங்களும், அவற்றின் வழி மரபுகளாக 12
ஆயிரம் மக்களின் பெருக்கல் தொகையே 144 ஆயிரம் (காண். திவெ
7:5-8). இந்த முதல் குழு இஸ்ரயேல் மக்களைக் குறிக்கின்றது.
இந்த மக்களையே கடவுள் தன் சொந்த மக்களினமாகத்
தெரிந்தெடுத்து, தனக்குப் பணி செய்யவும், தன் செய்தியை
அனைத்துலக்குக்கும் அறிவிக்கவும் பணித்தார் (காண். விப
19:5-6).
இரண்டாம் குழுவினர் 'வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்கள்.'
இவர்கள், 'கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள். தங்களின்
தொங்கலாடைகளை ஆட்டுக் குட்டியின் இரத்தத்தில் துவைத்து
வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.' இவர்கள் கிறிஸ்துவைப்
பின்பற்றியவர்கள், கிறிஸ்துவுக்காகத் துன்பம் ஏற்றவர்கள்.
அவர்களின் வெண்ணிற ஆடை தூய்மை மற்றும் வெற்றியைக்
குறிக்கிறது. கிறிஸ்துவைப் போல அவர்கள் இருந்ததால் அவர்கள்
செம்மறியின் விருந்தில் பங்கேற்கின்றனர். அவர்கள் இப்போது
அனுபவிக்கும் புனிதம் அல்லது தூய்மை என்பது கடவுள்
அவர்களுக்கு அளித்த கொடை. இஸ்ரயேல் மக்கள் கடவுளால்
முத்திரையிடப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் அனைவரும்
பாஸ்காச் செம்மறியின் இறப்பால்
புனிதப்படுத்தப்படுகின்றனர்.
புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் வாசகம் (காண். 1 யோவா 3:1-3),
கடவுளின் அன்பு மற்றும் அன்பின் விளைவுகள் பற்றிச்
சிந்திக்கும் அழைப்போடு தொடங்குகிறது. யோவானின்
குழுமத்தினர் கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்றதால்
துன்புறுகின்றனர். ஆனால், அத்துன்பம் தற்காலிகமானது
என்றும், நம்பிக்கையாளர்களின் நோக்கம் தூய்மையை அடைவது
என்றும் அறிவுறுத்துகின்றார் யோவான்.
நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:1-12), மத்தேயு
நற்செய்தியில் காணும் மலைப்பொழிவின் தொடக்கப் பகுதியை
வாசிக்கின்றோம். எட்டு பேறுபெற்ற நிலைகள் இங்கே
முன்வைக்கப்படுகின்றன. இவற்றின் நோக்கம் கடவுளின் ஆசீரை
நமக்கு வழங்குவதும், அதன் வழியாக நம்மைப் புனிதத்துக்கு
இட்டுச் செல்வதுமே.
முதல் நான்கு பேறுபெற்ற நிலைகள் நம்பிக்கையாளரைக்
கடவுளோடும், இரண்டாவது நான்கு பேறுபெற்ற நிலைகள்
நம்பிக்கையாளர்களை ஒருவர் மற்றவரோடும் இணைக்கின்றன.
முதலில், 'ஆன்மீக ஏழ்மை அல்லது எளிமை'
முன்வைக்கப்படுகிறது. இது ஒருவர் கடவுள்மேல் கொண்டுள்ள
சார்புநிலையைக் குறிக்கிறது. இரண்டாவது, துயருறுவோர்
பற்றியது. துயரம் கடவுள் தரும் மீட்பை முன்குறிக்கிறது.
மூன்றாவது பேறுபெற்ற நிலை திபா 37:11இலிருந்து
எடுக்கப்பட்டுள்ளது. கனிவுடையோர் நாட்டை
உரிமையாக்கிக்கொள்கின்றனர். நாடு என்பது கடவுள் அளிக்கும்
கொடை. நான்காவது, நீதிக்கான ஏக்கம் கொள்வோர் பெறும் நிறைவை
எடுத்துச் சொல்கிறது. நீதி என்பது கடவுளோடும், ஒருவர்
மற்றவரோடும் ஒருவர் ஏற்படுத்திக்கொள்ளும் சரியான
உறவுநிலையைக் குறிக்கிறது. ஐந்தாவது, இரக்கம் காட்டுபவர்
இரக்கம் பெறுவார். இரக்கம் என்பது ஒருவர் மற்றவர்மேல்
காட்டும் உடல் மற்றும் உள்ளம்சார் அன்பைக் குறிக்கிறது.
ஆறாவதாக, தூய்மையான உள்ளம் என்பது ஒருவரின் நாணயத்தையும்,
நம்பகத்தன்மையையும் காட்டுகிறது. உறவுகளில் தூய்மையாக
இருக்கும் இவர்கள் கடவுளின் திருமுன்னிலை நோக்கி
ஈர்க்கப்படுவார்கள், ஏனெனில், கடவுள் தூயவராக இருக்கிறார்.
ஏழாவது, அமைதியை ஏற்படுத்துவது. அமைதி என்பது ஒருங்கிணைந்த
இசைவு நிலை. அந்த இசைவு நிலையில் ஒருவர் இந்த உலகத்தோடு
தான் கொண்டுள்ள இணைப்பைக் கண்டுணர்கிறார். எட்டாவது
பேறுபெற்ற நிலை, நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுபவர்
பற்றிப் பேசுகிறது. இவர்கள் கடவுளுக்குப் பிரமாணிக்கமாய்
இருப்பதால், கடவுளின் அரசில் பங்கேற்கின்றனர்.
நற்செய்தி வாசகத்தின் இறுதிப் பகுதி, 'மகிழ்ந்து
அக்களியுங்கள்' என்ற வாழ்த்தோடு நிறைவுறுகிறது. இந்த
வார்த்தைகளைக் கொண்டே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
புனிதம் பற்றிய திருத்தூது ஊக்கவுரையை (2018)
எழுதுகின்றார்.
ஆக, முதல் வாசகத்தில், கடவுளின் அருளை அனுபவித்தவர்கள்
அவருக்காக மறைசாட்சியம் ஏற்றதால் கனி தருகின்றனர்.
இரண்டாம் வாசகத்தில், புனிதம் என்பது நாம் அடைய வேண்டிய
இலக்காக வரையறுக்கப்படுகின்றது.
நற்செய்தி வாசகம், பேறுபெற்ற நிலைகளை முன்வைப்பதுடன்,
மகிழ்ச்சிக்கான இயேசுவின் அழைப்பே புனிதத்தின் தொடக்கம் என
முன்வைக்கிறது.
பதிலுரைப் பாடல் ஆசிரியரும், இதையொட்டி, 'ஆண்டவரை
நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே' (காண். திபா 24)
துள்ளிக் குதிக்கின்றார்.
இறுதியாக,
புனிதர்கள் வானத்திலிருந்து கீழே குதித்தவர்கள் அல்லர்.
மாறாக, நம்மைப் போல வாழ்ந்து, நமக்கு முன் கடந்து
சென்றவர்கள். இங்கு செய்யப்பட்டு அங்கே ஏற்றுமதி
செய்யப்படுபவர்கள் இவர்கள். தாங்கள் பெற்ற அருளுக்கு ஏற்ற
கனிகள் தருபவர்கள் இவர்கள். இவர்கள் விழுந்தாலும்
எழுபவர்கள். புனித மரிய வியான்னி சொல்வது போல, 'புனிதர்கள்
சரியாகத் தொடங்கவில்லை என்றாலும், மிகச் சரியாக
முடித்தார்கள்.' நாம் அனைவரும் சரியாக, நல்லதாக முடிக்க
முடியும். புனிதம் என்பது நாம் மேற்கொள்ள வேண்டிய தெரிவு.
அந்தத் தெரிவின்மேல் கொள்ள வேண்டிய மனவுறுதி.
மதிப்பற்றவை நீண்ட நாள்கள் நீடிப்பதில்லை. மதிப்பு மிக்கவை
என்றும் நீடிக்கின்றன.
அன்றாட தெரிவுகள் தெளிவானால், புனிதம் என்பது உணர்வு
அல்லது செயல் என்பது தெளிவானால், நாமும் புனிதர்களே.
- Yesu Karunanidhi
இறைவனைப் பிரதிபலிப்பவர்களாவோம்"
புனிதர் அனைவர் பெருவிழா
நவம்பர் 01
I திருவெளிப்பாடு 7: 2-4,9-14
II 1 யோவான் 3: 1-3
III மத்தேயு 5: 1-12a
"இறைவனைப் பிரதிபலிப்பவர்களாவோம்"
நிகழ்வு
எப்பொழுதும் ஏதாவது ஒரு கேள்வியைத் தன் தந்தையிடம்
கேட்டுக்கொண்டிருக்கும் சிறுவன் ஒருவன், ஒரு ஞாயிற்றுக்கிழமைக்
காலையில் தந்தையுடன் திருப்பலிக்குச் செல்லும்பொழுது,
"அப்பா! புனிதர்கள் என்றால் யார்?" என்றான். தன் மகன்
கேட்ட கேள்விக்குத் தந்தை உடனடியாகப் பதிலளிக்கவில்லை. பங்குக்கோயிலை
அடைந்ததும், மகனைக் கூட்டிக்கொண்டு உள்ளே நுழைந்த தந்தை,
கண்ணாடி சன்னல்களில் வரையப்பட்டிருந்த புனிதர்களின்
திருவுருவங்களைக் காட்டி, இவர்கள்தான் புனிதர்கள்" என்றார்.
அவர் இவ்வாறு சொன்னபொழுது, காலைக் கதிரவன் கண்ணாடி சன்னல்களில்
பட்டு கோயில் எங்கும் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. அதைப்
பார்த்துவிட்டு மகன் தன் தந்தையிடம், "புனிதர்கள் என்றால்
யார் என்று எனக்கு இப்பொழுது நன்றாகப் புரிகின்றது... கடவுளைத்
தங்கள் வழியாகப் பிரதிபலிக்கின்றவர்களே புனிதர்கள்" என்றான்.
தன் மகன் இப்படி அறிவுப்பூர்வமாகப் பேசிவதைக் கேட்டுப்
பெரிதும் மகிழ்ந்த தந்தை அவனை உச்சி முகர்ந்து முத்தமிட்டார்.
'இறைவனைப் பிரதிபலிக்கின்ற யாவருமே புனிதர்கள்'என்று அந்தச்
சிறுவன் தன் தந்தையிடம் சொன்ன பதில், புனிதர்கள் என்றால்
யார் என்பதற்கு சொல்லப்பட்ட மிகத் தெளிவான விளக்கம் என்றே
சொல்லலாம். இன்று தாயாம் திருஅவை புனிதர் அனைவரின்
விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இந்த நல்ல நாளில், இன்று
நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு என்ன செய்தியைச்
சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பாப்போம்.
புனிதர்கள் - கடவுளின் மக்கள்
'புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகிறேன்'என்று அறிக்கையிடுகின்ற
நாம், திருத்தந்தை நான்காம் கிரகோரி கி.பி. 837 ஆம் ஆண்டு,
'புனிதர் அனைவர்'விழாவை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்த
நாளிலிருந்தே இவ்விழாவைக் கொண்டாடி வாழ்கின்றோம்.
திருஅவை ஒவ்வொரு நாளுக்கும் ஒரு புனிதரை நினைவுகூர்ந்து
கொண்டாடுகின்றபொழுது, புனிதர் அனைவருக்கும் என தனியாக ஒரு
நாளை ஒதுக்கி, அவர்களுக்கு விழாக் கொண்டாடுவது பொருத்தமானதா?
என்ற கேள்வி எழலாம். இதற்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன.
ஒன்று, ஓர் ஆண்டில் வருகின்ற 365 அல்லது 366 புனிதர்கள்
போக எத்தனையோ பேர் கடவுளைத் தங்களுடைய வாழ்வாலும்
வார்த்தையாலும் பிரதிபலித்திருக்கின்றார்கள் (திவெ 8: 9).
அவர்கள் அனைவரையும் நினைவுகூர்வதற்காக இந்தப் புனிதர் அனைவர்
விழா கொண்டாடப்படுகின்றது. இரண்டு, புனிதர்கள் அனைவரும்
விண்ணகத்தில் இறைவனின் திருமுன் நமக்காகப் பரிந்து
பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்களை நன்றியோடு
நினைவுகூர்வதற்காகவும், அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றி
நாம் நடப்பதற்காகவும் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.
திருஅவையால் புனிதர்கள் என அங்கீகரிக்கப்பட்ட, கடவுளைத் தங்கள்
வாழ்வாலும் வார்த்தையாலும் பிரதிபலித்தும் திருஅவையால்
புனிதர்கள் என அங்கீகரிக்கப்படாமல் இருக்கின்ற யாவரும் கடவுளின்
மக்களாக இருக்கின்றார்கள் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில்
புனித யோவான் எடுத்துக் கூறுகின்றார். புனித யோவான் கூறக்கூடிய
கடவுளின் மக்களாவது எல்லாராலும் சாத்தியப்படுமா...? அந்த
நிலையை அடைய ஒருவர் என்ன செய்யவேண்டும்...? என்பன குறித்து
தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
எல்லாராலும் கடவுளின் மக்களாக, புனிதராக முடியும்
கடவுளின் மக்களாவது அல்லது புனிதராவது ஒருசிலரால்தான்
முடியுமா? என்றால், நிச்சயமாக இல்லை என்று சொல்லிவிடலாம்.
ஏனென்றால், திருவெளிபாடு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
முதல் வாசகத்தில், எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும்
சார்ந்த, யாராலும் எண்ணிக்கையிட முடியாதவர்கள் அரியணைக்கும்
ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்ததை தான் கண்டதாக
யோவான் கூறுகின்றார். எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும்
சார்ந்தவர்கள் விண்ணகத்தில் இருந்தார்கள் எனில், எல்லாராலும்
மக்களின் மக்களாக, புனிதர்களாக முடியும் என்பதுதான் உண்மை.
இன்னும் சொல்லப்போனால், மண்ணகத்தில்தான் பாகுபாடும்
வேற்றுமையும் இருக்குமே ஒழிய, விண்ணகத்தில் பாகுபாடு இருக்காது.
அதனால் எல்லாரும் கடவுளின் மக்களாக, புனிதர்களாக முடியும்.
இதையே புனித அகுஸ்தின், "கிறிஸ்துவைப் பின்பற்றித்
தூய்மையாக எத்தனையோ ஆண்களும் பெண்களும் வாழ்ந்திருக்க,
நான் ஏன் வாழக்கூடாது" என்பார். அப்படியெனில் நாம் ஒவ்வொருவரும்
கடவுளின் மக்களாக, புனிதர்களாக மாறமுடியும். இந்த நிலையை
நாம் அடைவதற்கு உதவியாக இருப்பவைதான் நற்செய்தியில் இயேசு
சொல்லக்கூடிய எட்டுவிதமான பேறுகள்.
புனிதர்கள் விண்ணுலகில் மிகுந்த கைம்மாறு பெறுவார்கள்
மத்தேயு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி
வாசகத்தில், ஆண்டவர் இயேசு, ஏழையரின் உள்ளம், துயருறுதல்,
கனிவு, நீதியை நிலைநாட்டும் வேட்கை, இரக்கம், தூய்மையான உள்ளம்,
அமைதி, நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படல் ஆகிய எட்டுவிதமான
பேறுகளைச் சுட்டிக்காட்டுகின்றார். இதற்கு விளக்கம் அளிக்கின்றபொழுது
முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், மலைப்பொழிவில்
இடம்பெறுகின்ற எட்டுவிதமான பேறுகளும் இயேசுவிடத்தில் இருப்பவை.
அதனால் அது தன்னிலை விளக்கமே என்று கூறுவார். அவ்வாறெனில்,
நாம் இயேசுவைப் போன்று அல்லது மலைப்பொழிவில் இடம்பெறுகின்ற
எட்டுவிதமான பேறுகளின்படி நாம் நடக்கின்றபொழுது, நாம் கடவுளின்
மக்களாகவும், புனிதர்களாகவும் ஆகின்றோம் என்பது உண்மையாகின்றது.
இத்தகைய வாழ்க்கையை நாம் வாழ்கின்றபொழுது, இன்றைய நற்செய்தியின்
இறுதியில் இயேசு சொல்வது போல், நமக்கு விண்ணுலகில் மிகுந்த
கைம்மாறு கிடைக்கும் என்பதும் உறுதி.
ஆதலால், நாம் எத்தனையோ பேர் தங்களுடைய வாழ்வாலும்
வார்த்தையாலும் கடவுளைப் பிரதிபலித்துப் புனிதர்களாகியிருக்கும்பொழுது,
நம்மால் புனிதர்களாக முடியும் என்ற நம்பிக்கையோடு இயேசுவின்
முன்மாதிரியைப் பின்பற்றி கடவுளின் மக்களாக, புனிதர்களாக
வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
'கடவுளின் பார்வையில் எதுவும் சிறியதும் அல்ல, யாரும் சிறியவரும்
அல்லர். எல்லாருமே விலையேறப்பெற்றவர்கள்! அதனால் நாம் செய்யக்கூடிய
ஒவ்வொன்றையும் அன்போடு செய்வோம்'என்பார் குழந்தை இயேசுவின்
புனித தெரேசா. ஆகையால், நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும்
அன்போடு செய்து, கடவுளின் பார்வையில் விலையேறப்பெற்றவர்கள்,
புனிதர்களாய் ஆவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
I திருவெளிப்பாடு 7: 2-4,9-14
II 1 யோவான் 3: 1-3
III மத்தேயு 5: 1-12a
கடவுளின் மக்கள்
நிகழ்வு
ஜெர்மனியில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்தவர் பெலிக்ஸ்
அட்லர் (Felix Adler 1851-1933). மிகப்பெரிய சிந்தனையாளரும்
எழுத்தாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான இவர் கதாநாயகன்
யார், புனிதர் யார் என்பதற்கு இப்படியொரு விளக்கத்தைக்
கொடுக்கின்றார்: "காதாநாயகன் என்பவர் பெரிய பெரிய ஒளி விளக்குகளை
அமைத்து, இவ்வுலகின் இருளைப் போக்குகின்றவர். புனிதர் என்பவரோ
தாமே ஒளியாய் இருந்து, இவ்வுலகின் இருளைப் போக்குகின்றவர்."
ஆம், புனிதர் என்பவர் பெலிக்ஸ் அட்லர் சொல்வது போல், நம்
ஆண்டவர் இயேசு சொல்வது போல் உலகிற்குக் ஒளியாய் இருப்பவர்.
இப்படித் தங்கள் வாழ்வாலும் வார்த்தையாலும் உலகிற்கு ஒளியாய்
இருந்த அனைவரையும், திருஅவை 'புனிதர் அனைவர்'என்ற பெயரில்
பெருவிழா எடுத்துக் கொண்டாடுகின்றது. இப்பெருவிழா நமக்கு
உணர்த்தும் செய்தி என்ன, நாமும் புனிதர்கள் கூட்டத்தில்
இடம்பெற என்ன செய்வது என்பன குறித்துச் சிந்திப்போம்.
யார் வேண்டுமானாலும் புனிதர் ஆகலாம்!
ஓர் ஆண்டில் 365 அல்லது 366 நாள்கள்தானே உள்ளன, இந்த 366
நாள்களுக்குள் எல்லாப் புனிதர்களையும் நினைவுகூர முடியாதே!
அப்படியானால் எல்லாப் புனிதர்களையும் நினைவுகூர்வதற்கு ஏற்படுத்த
பெருவிழாதான் புனிதர் அனைவர் பெருவிழா. இப்பெருவிழா நமக்கு
உணர்த்துகின்ற முதன்மையான செய்தி, யாரும் புனிதராகலாம் என்பதுதான்.
இன்றைக்குப் பல இடங்களில் எல்லா சமூகத்தாராலும் ஊராட்சி மன்றத்
தலைவராகிவிட முடிவதில்லை அல்லது எல்லா சமூகத்தாராலும் இந்தியக்
கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துவிட முடிவதில்லை. அதற்கென்று
எழுதப்படாத சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன; ஆனால், புனிதராவதைப்
பொறுத்தவரையில் இதுபோன்ற எந்தக் கட்டுப்பாடுகளும்
கிடையாது. ஒருவர் எந்த நாட்டைச் சார்ந்தவராக இருந்தாலும்,
எந்த குலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், இந்த இனத்தைச்
சார்ந்தவராக இருந்தாலும்; ஏன், எந்த மொழியைப் பேசுபவராக இருந்தாலும்
அவரால் புனிதராக முடியும். இதை திருவெளிப்பாடு
நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் தெளிவாக விளக்குகின்றது.
"இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக்
கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினங்களையும்
மொழியையும் சார்ந்தவர்கள்" என்று இன்றைய முதல் வாசகத்தில்
வருகின்ற வார்த்தைகள் ஒருவர் எந்த நாட்டைச் சார்ந்தவராக இருந்தாலும்,
எந்த மொழியைப் பேசுபவராக இருந்தாலும், அவரால் புனிதராக
முடியும் என்கிற உண்மையை உரக்கச் சொல்கின்றது. இதற்கு
சான்றாக இருப்பவர்கள்தான் பல நாடுகளைச் சார்ந்த புனிதர்கள்.
இச்செய்தி நாமும் ஒருநாள் புனிதர் ஆகலாம் என்ற நம்பிக்கையை
நமக்குள் விதைக்கின்றது.
புனிதர்கள் கடவுளின் மக்கள்
யார் வேண்டுமானாலும் புனிதர் ஆகலாம் என்கிற நம்பிக்கைச்
செய்தியை இன்றைய முதல் வாசகம் தருகின்ற அதே வேளையில், இன்றைய
இரண்டாம் வாசகம் புனிதர்கள் என்பதற்கு மற்றொரு பெயரைத் தருகின்றது.
அது என்ன பெயர் எனில், 'கடவுளின் மக்கள்'என்பதாகும். ஆம்,
புனிதர்கள் கடவுளின் மக்களாக இருக்கின்றார்கள். இவ்வாறு
புனிதர்களாக, கடவுளின் மக்களாக இருப்பதற்கு என்ன
செய்வேண்டும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
கடவுளின் மக்கள் யார்? என்பதற்குப் புனித பவுல் விளக்கம்
தருகின்றபோது, "கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின்
மக்கள்" (உரோ 8:14) என்பார். ஆம், இன்றைக்குப் பலர் கடவுளின்
ஆவியால் இயக்கப்படுவதற்குப் பதில் ஊனியல்பால், அலகையால்
இயக்கப்படுகின்றார்கள். ஊனியல்பால் இயக்கப்படுகின்றவர்கள்
பரத்தமையிலும் கெட்ட நடத்தையிலும் சண்டை சச்சரவிலும், இன்னும்
இது போன்ற செயல்களிலும் ஈடுபடுவார்களே அன்றி வேறு எதையும்
செய்யமாட்டார்கள் (கலா 5:19-21). ஆனால், கடவுளின் ஆவியால்
இயக்கப்படும் அவரது மக்கள் அப்படிக் கிடையாது. அவர்கள் இவ்வுலகு
சார்ந்தவற்றை அல்ல, மேலுலகு சார்ந்தவற்றை நாடுவார்கள். அதனால்
அவர்கள் விண்ணகத் திருக்கூட்டத்தில் இடம்பெறுவார்கள்.
இயேசுவே நமக்கு முன்மாதிரி
புனிதர்களுக்கு மற்றொரு பெயர் கடவுளின் மக்கள். அவர்கள் ஊனியல்பால்
அல்ல, கடவுளின் ஆவியால் இயக்கப்படுவதாலேயே கடவுளின் மக்களாக
இருக்கின்றார்கள் என்று பார்த்தோம் கடவுளின் ஆவியால் இயக்கப்பட்டு,
கடவுளின் மகனாவதற்கு அல்லது மகளாவதற்கு இயேசுவே நமக்கு மிகப்பெரிய
முன்மாதிரி. ஆம், தூய ஆவியரால் அருள்பொழிவு செய்யப்பட்ட இயேசு
(திப 10:38), அந்த ஆவியால் இயக்கப்பட்டதால் கடவுளின் அன்பார்ந்த
மகனானார் (மத் 3:17, 17:5). அப்படிப்பட்டவர் நாமும் கடவுளின்
மக்களாக மாறுவதற்கு எப்படி வாழவேண்டும் என்று கற்பிக்கின்றார்.
அப்படி அவர் கற்பிப்பவைதான், ஏழையரின் உள்ளம், துயர், கனிவு,
நீதி நிலைநாட்டும் வேட்கை, இரக்கம், தூய்மையான உள்ளம், அமைதி,
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுதல் என்ற எட்டுவிதமான
பேறுகள். இந்த எட்டுவிதமான பேறுகளின்படி வாழ்கின்றபோது ஒருவர்
கடவுள் மகனாக அல்லது மகளாகின்றார் என்பது இயேசு கற்பிக்கும்
செய்தி.
இந்த இடத்தில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக் தன்னுடைய
Jesus of Nazareth என்ற நூலில் குறிப்பிடுகின்ற செய்தியை
நம்முடைய கருத்தில் கொள்வது அவசியம். "மலைப்பொழிவில் இயேசு
குறிப்பிடுகின்ற எட்டு விதமான பேறுகளும், அவரது தன்னிலை விளக்கமே"
- இதுதான் திருத்தந்தை பதினாறாம் பெனடிக் தன்னுடைய நூலில்
குறிப்பிடுகின்ற செய்தியாகும். அப்படியெனில், ஒருவர் இயேசுவைப்
போன்று ஏழையரின் உள்ளத்தவராக, துயருறுபவராக, கனிவுடையவராக.....
வாழ்கின்றபோது, அவர் கடவுளின் மகனாக, மகளாக மாறுகின்றார்
என்பது உறுதி.
இயேசு மலைப்பொழிவில் கற்பிப்பவை இந்த உலக கற்பிப்பதைவிட
முற்றிலும் மாறுபட்டதாக இருந்தாலும், அவையே நம்மைக் கடவுள்
மக்களாக மாற்றக்கூடியவை. ஆகவே, நாம் இயேசுவின்
முன்மாதிரியைப் பின்பற்றி வாழ்ந்து புனிதர்களாக, கடவுளாக
மக்களாக மாறுவோம்.
சிந்தனை:
'கிறிஸ்துவைப் பின்பற்றித் தூய்மையாய் எத்தனையோ ஆண்களும்
பெண்களும் வாழ்ந்திருக்க, நான் ஏன் வாழக்கூடாது'(சுயசரிதை
8:27) என்பார் புனித அகுஸ்தின். ஆகையால், நாம்
கிறிஸ்துவைப் பின்பற்றித் தூய்மையாய் வாழ்ந்து, புனிதர்களாய்,
கடவுளின் மக்களாய், பேறுபெற்றவர்களாய் ஆவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
இன்று திருச்சபையானது புனிதர் அனைவரின் பெருவிழாவைக்
கொண்டாடுகின்றது. ஒவ்வொரு புனிதரும் தங்கள் மனநிலை ஆளுமைத்தன்மையிலும்,
ஆன்மீக தனிவரங்களிலும் ஒருவருக்கொருவர் வேறுபட்டு
நின்றாலும் அனைவரும் இயேசுவின் அன்பின் பதிப்புக்களாகவும்,
சிலுவையின் சாட்சிகளாகவும் ஒன்றிணைந்து நிற்பார்கள் என்பார்
நமது முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள்.
மேலும் இறையடியார் ஒருவர் புனிதர் எனப்படுபவர் யார் என்பதற்கு
பின்வருமாறு விளக்கம் தருவார், புனிதர்கள்
1)மனிதராகப் பிறந்தவர்கள்,
2) இவ்வுலகில் வாழ்ந்தபோது இறைவனுக்கு ஏற்புடையவர்களாய்
திகழ்ந்தவர்கள்,
3) தங்களது சான்று வாழ்வின் வழியாக இறைவனைப் பலருக்கு அறிமுகப்படுத்தியவர்கள்,
4) என்றும் இறைவனோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்,
5) தம்மை நோக்கி மன்றாடுபவர்களுக்காக இறைவனிடம் பரிந்துரைப்பவர்கள்,
6) தங்கள் உயிரையே இறைமாட்சிக்காகக் கையளித்தவர்கள் என்று.
ஆம், திருச்சபை பல்வேறு இறையடியார்களை, இறைவழி வாழ்ந்தவர்களைப்
புனிதர்களாக அங்கிகரித்திருந்தாலும், இன்னும் எத்தனையோ மனிதர்கள்
கிறிஸ்துவின் விழுமியங்களின்படி வாழ்ந்திருக்கிறார்கள்.
எனவே அவர்களையெல்லாம் நினைவுகூர்ந்து விழா கொண்டாட
வேண்டும் என்பதற்குதான் திருச்சபை நவம்பர் ஒன்றாம் தேதியை
புனிதர்கள் அனைவரின் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றது.
அனைத்துப் புனிதர்களுடைய பெருவிழா பல்வேறு இடங்களில், பல்வேறு
நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தபோது திருத்தந்தை மூன்றாம்
கிரகோரியார்தான் (827 -844) இதனை ஒழுங்குபடுத்தி, நவம்பர்
மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப் பணித்தார்.
முன்னதாக கி.பி. 600 ஆம் ஆண்டில் உரோமையில் இருந்த அனைவரும்
கிறிஸ்த மதத்தைத் தழுவினார்கள். இதனால் எல்லாக் கடவுளது
சிலைகளும் வைக்கப்பட்டிருந்த பான்தேயேன் கோவிலானது அன்னை
மரியாளுக்கும், அனைத்துப் புனிதர்களுக்கும் நேர்ந்தளிக்கப்பட்டது.
அக்கோவிலில் ஏற்கனவே இருந்த வேற்று தெய்வக் கடவுளின் சிலைகளானது
திருந்தந்தை நான்காம் போனிபஸ் அவர்களின் உத்தரவின் பேரில்
அடித்து நொறுக்கப்பட்டது. இப்பெருவிழா நாளில் பெந்தேயன்
கோவிலுக்குச் சென்று மக்கள் யாவரும் இறையருளைப் பெற்றுச்
செல்வார்கள்.
அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில்
திருச்சபையும், இறைவார்த்தையும் நமக்கு என்ன செய்தியை தருகிறது
என்று சிந்தித்துப் பார்ப்போம்.
திருவெளிப்பாட்டு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகத்தில் எல்லா இனத்தைச் சேர்ந்த, மொழியைப் பேசக்கூடிய
எண்ணிக்கையில் அடங்காத மக்கள் அரியணைக்கும், ஆட்டுக்குட்டுக்கும்
இடையில் இருந்து இறைவனை வாழ்த்திக் கொண்டிருந்தார்கள் என்று
படிக்கின்றோம். இவர்கள் யார்?. இவர்கள் வேறு யாருமல்ல, இறைவழியில்
நடந்து கடவுளையும், அயலாரையும் அன்பு செய்த தூயவர்கள்
புனிதர்கள் கடவுளின்மக்கள் - ஆவர்.
இவர்களைப் போன்று இறைவனின் திருமுன் நிற்பததற்கு நாம் என்ன
செய்யவேண்டும் என்பதற்கான பதிலைதான் இன்றைய நற்செய்தி வாசகத்திலே
படிக்கின்றோம். ஆண்டவர் இயேசு தந்த மலைப்பொழிவை
யாராரெல்லாம் தங்களுடைய வாழ்வில் கடைப்பிடித்து வருகிறார்களோ,
அவர்களே இறைவன் தரும் விண்ணரசை உரிமைச் சொத்தாகப் பெறமுடியும்.
எளிய உள்ளத்தோராய், தூய இதயத்தோராய், நீதியின்மீது தாகமுடையோராய்,
அமைதிக்காக உழைப்போராய், கனிவுடையோராய், நீதிக்காக துன்பங்களை
அனுபவிப்பவராய், இன்னும் பல்வேறு இறையாட்சியின் விழுமியங்களின்படி
வாழுகின்றபோது இறைவன் தரும் விண்ணரசு நமக்கு எப்போதும் உண்டு
என்பதில் எந்தவித மாற்றுக் கருத்து இல்லை.
நாம் நமது அன்றாட வாழ்வில் இயேசுவின் போதனைகளின் படி
வாழ்கின்றோமா? நம்மோடு வாழும் எளியோரை, இறைவனை அன்பு
செய்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அரசியும்,
புனிதையுமான புனித ஹங்கேரி நகர எலிசபெத். இவர் 1207 ஆம் ஆண்டு
ஹங்கேரி நாட்டு அரசர் அந்திரேயாவுக்கு மகளாகப் பிறந்தவர்.
1221 ஆம் லண்ட்ரவேயின் அரசன் நான்காம் லூயி மன்னனுக்கு தன்னுடைய
பதிமூன்றாம் வயதிலேயே மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்.
அரசியான எலிசபெத் தான் அரசி என்றெல்லாம் பாராது ஏழைகள், வறியவர்
யாவருக்கும் உதவி செய்துவந்தார். ஒருமுறை நாட்டில் கொள்ளை
நோய் பரவியபோது ஏராளமான மக்கள் மடிந்துபோனார்கள். அத்தகைய
வேளையில் அரசி துன்புறக்கூடிய மக்களுக்கு ஓடோடிச் சென்று
உதவி செய்தார். இது அவளுடைய அத்தைக்குப் பிடிக்கவில்லை.
இதனால் அவளது அத்தை, அதாவது மன்னன் லூயின் தாயார் தன்னுடைய
மகனிடம் மருமகளைப் பற்றிக் குறைகூறினாள். ஆனால் மன்னனோ தன்
மனைவியின்மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்ததால் அதனை அவன்
கண்டுகொள்ளவில்லை.
ஒருநாள் அரசி எலிசபெத் தெருவோரத்தில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த
தொழுநோயாளி ஒருவரை அழைத்துவந்து, தன்னுடைய வீட்டில்வைத்து
சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அவளுடைய
அத்தை, தன்னுடைய மகனிடம் சென்று, எல்லாவற்றையும்
முறையிட்டாள். உடனே அவன், தன் தாயோடு வீட்டில் என்ன நடக்கிறது
என்று பார்ப்பதற்காக அரசியின் அறைக்கு வந்தான். அங்கே படுக்கையில்
இயேசுவின் உருவில் தொழுநோயாளர் படுத்துக் கிடந்தார். அவருக்கு
அரசி சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி
அடைந்த மன்னரின் தாயார், தன்னுடைய மருமகளின் காலில்
விழுந்து அவளைத் தவறாகப் புரிந்துகொண்டதற்கு மன்னிப்புக்
கேட்டார். அதன்பிறகு தன்னுடைய மருமகள் பிறர் நலப்பணிகள்
புரிவதற்கு அவர் உறுதுணையாக இருந்து வந்தார்.
அயலாருக்குச் செய்யும் சேவை யாவும் ஆண்டவருக்கு செய்யக்கூடியவை
என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகிறது. புனிதர்கள்
என்பவர் வேறு யாருமல்ல, அவர்கள் மனிதரை அன்பு செய்து, அவர்களுக்கு
சேவைசெய்ததன் வழியாக இறைவனை அடைந்தவர்கள்.
ஆகையில் அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில்
புனிதர்களைப் போன்று இயேசு நமக்குப் போதித்த விழுமியங்களின்
படி மலைப்பொழிவின் படி வாழ்வோம். இயேசுவுக்கு நமது
வாழ்வால், வார்த்தையால் சான்று பகர்வோம். அதன் வழியாக இறையருளை
நிறைவாய் பெறுவோம்.
புனிதர்கள் தூயவர்கள் வானதூதர்களைப் போன்று விண்ணகத்திலிருந்து
தோன்றியவர்கள் அல்ல, மாறாக அவர்கள் நம்மைப் போன்று மண்ணகத்திலிருந்து
தோன்றியவர்கள்; சாதாரண மனிதர்கள். அப்படியிருந்தாலும் தங்களுடைய
வாழ்வால், பணியால் புனிதர்களாக உயர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களுக்குத்
தான் இன்றைய நாளில் நாம் விழா எடுத்துக் கொண்டாடுகின்றோம்.
ஆம், இன்றைய நாளில் திருச்சபை அனைத்துப் புனிதர்களுடைய
விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது.
இந்த மண்ணுலகத்தில் வாழ்ந்த புனிதர்களின் எண்ணிக்கை வெறும்
365 மட்டுமே, ஏராளமான புனிதர்கள் இருக்கிறார்கள்.
திருவெளிப்பாடு நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில்
படிப்பது போன்று, யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும்
திரளான புனிதர்கள் இருக்கிறார்கள் (திவெ 7: 9). எனவே அவர்களையெல்லாம்
நினைவுகூர்ந்து பார்ப்பதற்குத்தான் திருச்சபை ஒருநாளை ஒதுக்கி,
அவர்களைச் சிறப்பு செய்கிறது.
முதலில் அனைத்துப் புனிதர்களின் விழா தோன்றியதன் வரலாற்றுப்
பின்னணியை சிந்தித்துப் பார்த்து, அதன்பின் இவ்விழா நமக்கு
உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவு செய்வோம்.
இவ்விழா கொண்டாடப்பட்டதன் வரலாற்றுப் பின்னணியை ஆராய்ந்து
பார்க்கும்போது நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தைப்
பின்பற்றியதற்காக மறைசாட்சிகளாக உயிர்நீத்தவர்களுக்கு விழா
எடுத்துக் கொண்டாப்பட்டதற்கான ஒரு சில குறிப்புகள் இருக்கின்றன.
ஆனாலும் அது சிறிய அளவில்தான் நடந்திருக்கின்றது. ஆறாம்
நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தந்தை நான்காம் போனிபெஸ்தான்
(608 -615) ரோம் நகரில் இருந்த பந்தேயோன் என்று அழைக்கப்படுகின்ற
அனைத்துக் கடவுள்களின் கோவிலை இடித்துத் தள்ளி, அந்த இடத்தில்
கிறிஸ்துவுக்காக மறைசாட்சிகளாக உயிர்நீத்தவர்களின் நினைவாக
ஆலயம் ஒன்று எழுப்பினார். அன்றிலிருந்துதான் அனைத்துப்
புனிதர்களின் விழா படிப்படியாக வளர்ந்தது.
கி.பி 993 ஆம் ஆண்டிலிருந்து இவ்விழா உலகம் முழுவதும்
கொண்டாடப் பணிக்கப்பட்டது. இப்படிதான் அனைத்துப் புனிதர்களின்
விழா நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடும் நிலை ஏற்பட்டது.
இப்போது இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று
சிந்தித்துப் பார்ப்போம். முதலாவதாக இவ்விழா புனிதர்கள்
தூயவர்கள் ஆகியோரின் எடுத்துகாட்டான வாழ்வை
நினைவுகூர்ந்து பார்க்க நமக்கு அழைப்புத் தருகின்றது. எபிரேயருக்கு
எழுதப்பட்ட திருமுகம் 13:7 ல் வாசிக்கின்றோம், உங்களுக்கு
கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை
நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப்
பார்த்து, நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுடையவர்களாய்
இருங்கள் என்று. ஆம், இன்றைய நாளில் நாம் அவர்களை சிறப்பாக
நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும்.
இரண்டாவதாக புனிதர்கள் தூயவர்கள் எப்போதும் இறைவனின்
திருமுன் நின்றுகொண்டு எப்போதும் நமக்காக பரிந்துபேசுபவர்களாக
இருக்கிறார்கள். எனவே அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி
செலுத்தவேண்டும்.
மூன்றாவதாக புனிதர்களைப் போன்று நாமும் நல்வழியில் நடந்து
புனித நிலையை அடையவேண்டும். அதனைத்தான் இவ்விழா நமக்கு சிறப்பாக
எடுத்துக் கூறுகின்றது. தூய அகுஸ்தினார் கூறுவார், அவனும்
அவளும் புனிதராக, புனிதையாக மாறும்போது, ஏன் உன்னால்
முடியாது? என்று. ஆம், நம்மாலும் புனித நிலையை அடையலாம்.
அதற்கான வழிமுறைகளைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு
எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எட்டு விதமான பேறுபெற்றவர்களைப்
பற்றி பேசுகின்றார். நாம் ஏழையரின் உள்ளம் கொண்டவராக, இயேசுவுக்காக
துயருறுவோராக, கனிவுடையோராக........ இருக்கின்றபோது நம்மாலும்
புனித நிலையை அடையலாம் என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது.
நாம் இயேசு குறிப்பிடுகின்ற வழிமுறைகளின்படி வாழ்கின்றோமா?
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஓர் ஆசிரியரிடம் பாடம் கற்ற முன்னாள் மாணவன் ஒருவன் அந்த
ஆசிரியரை சந்திக்கச் சென்றான். அவர் தன்னிடம் இருந்த உடைமைகள்
அனைத்தையும் ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்துவிட்டு ஒரு
சாதாரண குடிசையில் வாழ்ந்துவந்தார். இதைப் பார்த்த மாணவனுக்கு
ஆச்சரியம் தாங்க முடியவில்லை. எவ்வளவு பெரிய ஆசிரியர்
நீங்கள், எத்தனையோ மனிதர்களுடைய வாழ்வில் ஒளி ஏற்றியவர்கள்
நீங்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு சாதாரண குடிசையில் வாழ்வதா?
என்று கேட்டார். அதற்கு அவர், இந்த உலகத்தில் நான் ஒரு
பயணிதான் என்றார்.
பின்னர் அவர் மேலே சுட்டிக்காட்டி, விண்ணகம் என்னுடைய (நம்முடைய)
நிலையான வீடு. அங்கே வாழ்வதற்குத்தான் நான் என்னுடைய செல்வத்தை
எல்லாம் அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.
ஆம், இந்த மண்ணுலகில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு நாம்
செய்யும் உதவியாவும் விண்ணுலகில் சேர்க்கும் செல்வமாகும்.
அப்படிப்பட்ட வாழ்வு வாழும்போது நாமும் தூயவர்கள் ஆகின்றோம்.
ஆகவே அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இந்த
நாளில் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி
நாமும் தூயவர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய்
பெறுவோம்.
இலையுதிர் காலம் என்றால் மரணமல்ல. வசந்த காலத்தின் தொடக்கம்.
சூரியன் மறைவது மறைவல்ல. சந்திரன், விண்மீன்கள் உதயத்திற்குத்
தொடக்கம்.
மலர் கருகி விடுவது முடிவல்ல. காய், கனிக்கு இடம் தருகிறது.
கோதுமை மணி மடிவது இழப்பல்ல. அது மடிந்தால் தான் பயிர்
முளைத்துப் பலன் தரும்.
எனவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இறந்து கிடந்த
சிறுமியைப் பார்த்து, அவள் சாகவில்லை , உறங்குகிறாள்
(லூக். 8:52) என்றும், நம் நண்பர் இலாசரும் தூங்குகிறான்;
நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன் என்றும் (யோவா.
11:11) கூறினார். ஏனெனில் உலகில் நடக்கும் இயற்கையான இறப்பு
எதார்த்தமானது. அது பாவத்தின் கூலி (உரோ. 6:23). ஆனால் இயேசுவில்
நம்பிக்கை கொண்டு, இறை - மனித உறவோடு வாழ்ந்து இறப்பவர்களுக்கு
இந்த உலக இறப்பு, இறைவனில் கிடைக்கும் ஓய்வாகிறது (யோவா.
11:25). இதை விளக்கும் வகையில் தான், ஆண்டவருக்குள் இறந்தவர்கள்
செய்த நன்மைகள் அவர்களோடு கூட வரும் (திவெ. 14:13). அவர்கள்
தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள் என்று
திருவெளிப்பாடு நமக்குத் தருகிறது.
இன்று தாயாகிய திருச்சபை, அன்புக்கு அடிமையாகி, அன்பினால்
புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட புனிதர்களின் திருவிழாவைக்
கொண்டாடுகிறது. புனிதம் என்பது புண்ணிய தீர்த்தத்தில்,
புனித ஆற்றில் குளிப்பதால் மட்டும் வந்து விடுவதில்லை.
முழுக்க முழுக்க வாழ்வைச் சார்ந்தது. மனிதம் என்ற
சொல்லுக்கும் புனிதம் என்ற சொல்லுக்கும் உள்ள வேற்றுமை முதலில்
உள்ள ஒரு எழுத்து மட்டும் தான். ஆம், மனிதம் என்றாலே புனிதம்
பிறக்கிறது. மனிதமும், புனிதமும், நாணயத்தின் இரு பக்கங்கள்
போன்றவை. நாம் ஒவ்வொருவரும் தூயவராக வாழ்வதற்காக (1 யோவா.
3:3) அழைக்கப்பட்டிருக்கிறோம். (முதல் வாசகம்). ஏழ்மையையும்,
துன்பத்தையும், நோயையும், பொறுமையோடு ஏற்று வாழ்பவர்களே
புனிதர்கள், பேறு பெற்றவர்கள் என்று இயேசு அழைக்கிறார்
(மூன்றாம் வாசகம் ).
அன்பார்ந்தவர்களே, புனிதம் என்பது நேற்று பெய்த மழையால் இன்று
முளைத்த காளான்கள் போல் அல்ல. மாறாக மனித உள்ளத்தில்
புதைந்து கிடக்கும் புனிதத்தை வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்
மடியும் கோதுமை மணிபோல் (யோவா. 12:24) வளர்த்து எடுக்க
வேண்டிய ஒன்று. கடவுள் நம்மோடு இருக்க நமக்குத்தான் வெற்றி
என்று அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கனுக்கு அவரது காரியதரிசி
ஆறுதல் சொன்னபோது, "நண்பா! கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பது
தெரியும். ஆனால் நாம் கடவுளோடு இருக்கிறோமா?" என்பது தான்
கவலை என்றார் லிங்கன். ஆம், நாம் இறைவனோடு இணையும்போதுதான்
(யோவா. 15:5) நாம் புனிதம் அடைவோம். இத்தகைய எண்ணற்ற புனிதர்கள்
இந்த உலகில் சாட்சிய வாழ்வு வாழ்ந்து, இறந்தும் வாழ்கிறார்கள்
என்பதைத்தான் நாம் நினைவு கூறுகிறோம். ஏனெனில் தூய பவுல்
கூறுவதுபோல் சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது (1 கொ.
15:55). நாமும் இவர்களைப்போல, நான் யார் ? எதற்காக இங்கே
வந்தேன்?, எங்கிருந்து வந்தேன்?, எங்கே போகிறேன்? என்பதை
உணர்ந்து வாழ்வோம். இதற்காக புனிதர்களிடம் மன்றாடுவோம்.
புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகிறேன் என்ற நம்பிக்கை
அறிக்கையின் இந்தக் கோட்பாட்டுக்கு நாம் எடுக்கும்
விழாதான் புனிதர் அனைவர் பெருவிழா.
இவ்வுலகில் இறையன்பையும் பிறர் அன்பையும் உந்துசக்தியாகக்
கொண்டு இறைவன் திருவுளத்தை ஏற்று வாழ்ந்து இறந்தவர்களே
புனிதர்கள். இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தைத் தொடங்கி
வைத்த திருத்தந்தை 23ஆம் யோவான் சொல்வார்: "கத்தோலிக்க மரபின்படி,
புனிதர்களுக்குக் காட்டும் வணக்கம் மரியாதை மட்டுமன்று. ஆழ்ந்த
அடிப்படையில் அமைந்த ஞான உறவாகும். அவர்கள் நமக்குத் தந்துள்ள
நன்மாதிரியும் பாடலும் நமக்கு மகிழ்ச்சியூட்டும், ஊக்குவிக்கும்
உதவிகளாகும்."
"உங்களுக்குக் கடவுள் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள்
தலைவர்களை நினைவு கூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப்
பார்த்து நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுடையவர்களாய்
இருங்கள்" (எபி. 13:7).
புனிதர் பெருவிழா என்று இன்று கொண்டாட நான்கு காரணங்களைப்
பட்டியலிடலாம்.
1. எல்லப் புனிதர்களுக்கும் வெற்றி முடிசூடிய இறைவனுக்கு
நன்றி சொல்ல.
கடவுள் மனிதனுக்கு வைத்திருக்கும் மாட்சி மகத்தானது. புனிதம்
என்பது நிறைவான மீட்பு. மனிதனுடைய வாழ்வில் கடவுளின் அருள்
எப்படி ஆற்றலோடு செயல்படுகிறது! தெய்வ மாட்சி வெளிப்படுகிறது!
அளவில்லா மாட்சிமையும் மகத்துவமும் உள்ள இறைவனுக்கு நமது
புகழ்ச்சி தேவையில்லை. ஏனெனில் அவர் தன்னிலே மாட்சி மிக்கவர்.
புனிதர் திருப்பலி தொடக்கவுரையில் இப்படிப் பாடுகிறோம்.
"புனிதர்கள் கூட்டத்தில் நீர்தாமே புகழ் பெறுகின்றீர். அவர்களின்
பேறு பலன்களுக்கேற்ப நீர் அவர்களுக்கு வெற்றிவாகை
சூட்டும்போது உம் அருள் கொடைகளுக்கே மணிமுடி
சூட்டுகின்றீர்". வெற்றித் திருஅவையோடு இணைந்து இறைவனைப்
புகழ போரிடும் திருஅவையான நாம் அழைக்கப்படுகிறோம்.
2. புனிதர்களின் எடுத்துக்காட்டான வாழ்வை நாம் பின்பற்றி
நடக்க நம்மைத் தூண்ட.
புனிதர்கள் நம்மைப் போல் துன்பத்திற்கு ஆளானவர்கள். தோல்விகளைச்
சந்தித்தவர்கள். ஆனால் வாழ்க்கைச் சமரிலே உறுதியோடு இறைவனின்
அருள்துணையோடு போராடி வென்றவர்கள். வாழ்க்கைச் சிக்கல்களில்
நாம் துவளும்போது இவர்களின் முன் மாதிரியான வாழ்க்கை நமக்குத்
தூண்டுதலாகிறது. சோதனைகளில் அவர்களைப் போல நாமும் இறைவனிடம்
அடைக்கலம் தேடி ஓடத் தூண்டுகிறது. "இவர்கள் கொடிய வேதனையிலிருந்து
மீண்டவர்கள். தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில்
துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்" (தி.வெ. 7:14).
எடுத்துக்காட்டாக, புனித அகுஸ்தீனைக் குறிப்பிடலாம். அவர்
நீண்டநாள் பாவப் பழக்கத்திலிருந்து விடுபட எவ்வளவு கடினமாக
முயன்றார். புனிதர் வரலாற்றைப் படித்தபின்பு, "அவளால்
அவனால் முடியும் என்றால் என்னால் ஏன் முடியாது?" என்று
கேட்டார். விளைவு? அவரே புனிதரானார். புனித வாழ்வு நமக்கு
ஒரு சவாலாக அமைகிறது.
3. எண்ணற்ற புனிதர்களின் வல்லமைமிக்கப் பரிந்துரையைக்
கேட்க.
புனிதர்களின் வேண்டுதல் நமக்குப் பேராதரவு. கலை,
மருத்துவம், கல்வி, குடும்பம் என எல்லாத் துறைகளிலும்
நமக்குப் புனிதர்கள் பாதுகாவலாய் இருக்கிறார்கள்.
வானகம் என்பது புனிதர்கள் வாழும் பூங்கா.அங்குதான் எத்தனை
வகையான மலர்கள்! எத்தனை விதமான புனிதர்கள்! அன்னையர் என்ன,
கன்னியர் என்ன, அரசர்கள் என்ன, துறவியர் என்ன, விதவைகள்
என்ன? இரத்த சாட்சிகள் என்ன... இப்படி எல்லாருக்கும்
வழிகாட்ட, பாதுகாக்க எத்தனை புனிதர்கள்!
4. திருஅவையால் பறைசாற்றப்பட்டு மகிமைப்படுத்தப்படாத
மறைந்து வாழும் புனிதர்களையும் நினைவு கூர்ந்து
சிறப்பிக்க.
பீடத்தில் வைத்து வணங்கும் பேற்றுக்கு உரியவர்கள்
மட்டும்தானா புனிதர்கள்? நமது குடும்பத்தில், நமது ஊரில்
வாழ்ந்து இறந்த நம்முடைய முன்னோர்கள் எல்லாம் நல்லவர்கள்
இல்லையா? புனித பாதையில் நடந்தவர்கள் இல்லையா?
அவர்களையெல்லாம் எப்போது நினைப்பது? எப்படி
மாட்சிப்படுத்துவது? அதற்காகத்தான் இந்த நாள்!
விண்ணகம் சென்றதும் ஒருவர் அங்கிருந்த கூட்டத்தைப்
பார்த்துப் பேதுருவிடம், "இந்தக் கூட்டத்தில் எத்தனைபேர்
இந்துக்கள்?" என்று கேட்டார். அதற்குப் பேதுரு "அப்படி
யாரும் இல்லை" என்றார். "இஸ்லாமியர் எத்தனை பேர்?".
"அப்படி யாரும் இல்லை. "அப்படியானால் அனைவரும்
கிறிஸ்தவர்களா?" என்று கேட்க "அப்படியும் இங்கே யாரும்
இல்லை" என்று பதில் வந்தது. இறுதியில் "யார்தான் அவர்கள்?"
என்று கேட்க, அதற்குப் பேதுரு அளித்த பதில், "அவர்கள்
அனைவரும் புனிதர்கள்".
"இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான
மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும்
மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்" (தி.வெ. 7:9).
அவர்கள் அனைவரும் இறைவனை உரத்த குரலில் பாடிப்போற்றுவதாக
இன்றைய முதல் வாசகம் கூறுகிறது.
இவர்கள் அனைவரும் எப்படி விண்ணரசை அடைந்தார்கள்? இன்றைய
நற்செய்தி (மத். 5:1-12) அதற்கான பதிலைத் தருகிறது. எளிய
உள்ளத்தினராய், கனிவுடன், துயரைக் கண்டு துவளாமல்,
தூய்மையான உள்ளத்துடன், இரக்கம் உடையோராய், நீதியின் மேல்
தாகம் கொண்டு அதற்காகத் துன்புறவும் துணிந்தவர்கள்.
சுருங்கச் சொன்னால் இறைத்திருவுளத்தின்படி வாழ்ந்து
இம்மண்ணில் இறையாட்சி மலர தங்களை அருப்பணித்தவர்கள்.
இறையாட்சியின் விழுமியங்களில் வாழும் எந்தச் சமய, மொழி
இனத்தைச் சார்ந்தவர்கள் ஆனாலும் அவர்களுக்கு இறையரசு
நிச்சயம். நாமும் புனிதர்களாக மாற, வாழ இறைவன்
விரும்புகிறார் அழைக்கிறார்.
புனித அலோய்சியுஸ் கொன்சாகா என்ற ஞானப்பிரகாசியார் ஒரு
நாள் தன் அன்னையிடம், "அம்மா, நான் புனிதராவதற்கு என்ன
செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அவரது தாய்,
"மகனே, முதலில் நீ புனிதராக வேண்டும் என ஆசைப்படு. அது
போதும். அந்த உன்னுடைய விருப்பமே உன்னைப்
புனிதராக்கிவிடும்" என்றாள். தான் விரும்பியபடியே
ஞானப்பிரகாசியார் பிற்காலத்தில் புனிதரானார்.
புனிதராவது கடினமல்ல. புனிதராக வேண்டும் என்று
விரும்புவதுதான் கடினம். ஏதோ ஒரு தீய பழக்கத்திலிருந்து
விடுபட விரும்பாமல் "மாறிவிட்டால் என்ன செய்வது? எதையோ
இழந்துவிடுவோமோ!" என்ற பயம்தான் விருப்பத்திற்கே தடை.
விரும்புதல் மாற்றத்திற்கு அடிப்படை. மகதல மரியா பாவ
வாழ்க்கையிலிருந்து வெளியேற விரும்பியதால்தான் அவளை
நல்லவளாக மாற்றுவது இயேசுவுக்கு எளிதாக இருந்தது.
இயேசுவைப் பார்க்க வேண்டும் என்ற நல்ல ஆசை சக்கேயுவிடம்
இருந்ததால், இயேசுவால் அவரை எளிதாக மாற்ற முடிந்தது.
மாற்றத்தை விரும்பாத பரிசேயர்களை இயேசுவால் மாற்ற
முடியவில்லை. நாமும் புனிதராக மாற விரும்பாதவரை இயேசு
நம்மைப் புனிதராக்க முடியாது.
புனிதர் அனைவர் பெருவிழா நாமும் அவர்களைப் போல் புனிதராக
வேண்டும் என்ற விருப்பத்தை வளர்த்துக் கொள்வதற்கான
வாய்ப்பாக இருக்க வேண்டும். எந்த நிலையில் உள்ளவர்களும்
புனிதராக முடியும் என்பதற்குக் கட்டியம் கூறுவதுதான்
அனைத்துப் புனிதர் விழா. வரலாற்றில் குறிக்கப்படாத
புனிதர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். அவர்களின் ஒருவராக
நாமும் இருக்க முடியும்.
இயல்பாக நம்மில் எழும் நல்ல எண்ணங்கள், நல்ல பழக்கங்கள்
எல்லாமே தூய ஆவியாரின் தூண்டுதல்களே! தூய ஆவியாரில்
வாழ்வதற்கான அழைப்புக்களே!
"கடவுள் மனிதரை நேர்மையுள்ளவராகவே படைத்தார். ஆனால்
வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும் மனிதன் தேடிக் கொண்டவையே"
என்கிறார் சபை உரையாளர் (7:29).
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
நவம்பர் 1 அனைத்துப் புனிதர்களின் திருவிழா.
நவம்பர் 2 இறந்தோர் அனைவரின் நினைவு நாள். இவ்விரு நாட்களும்
ஒன்றையொன்று தொடர்ந்து வருவது மனதில் ஒரு சில எண்ணங்களை எழுப்புகிறது.
இவ்விரு நாட்களும் முன்பின் முரணாக வந்துள்ளனவோ என்று சில
சமயங்களில் நான் நினைப்பதுண்டு. இறப்புக்குப் பின் புனிதமா?
அல்லது புனிதம் அடைந்தபின் இறப்பா?
பொதுவாக ஒருவர் இறந்ததும் அவரைப் பற்றிய நல்லவைகள் பேசப்படும்.
மரணம் ஒருவரது குறைகளைக் குறைத்துவிடும் வல்லமை பெற்றது.
ஒருவர் இறந்தபின், மறைந்தபின் அவரைப் பற்றி நாம் கூறும் நல்லவைகளை
அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது முன்னிலையில், அவர் காதுபட
கூறியிருந்தால், அவர் இன்னும் நல்ல வழியில்
வாழ்ந்திருப்பாரே. இறந்த பின் வழங்கப்படும் புகழ் மாலைகளை,
நல்லவர் என்ற மரியாதையை வாழும்போதே ஒவ்வொருவருக்கும் நாம்
கொடுத்தால், இவ்வுலகில் வாழும் புனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகுமே.
புனிதர்கள் விண்ணுலகில்தான் இருக்கவேண்டும் என்றில்லையே.
தாங்கள் நல்லவர்கள் என்று வாழ்நாள் எல்லாம் உணரும் மனிதர்கள்,
புனிதர்களான நிறைவோடு இவ்வுலகை விட்டு விடைபெற்று போகலாமே.
இந்த எண்ணத்தை வலியுறுத்தும் நோக்கத்தில்தான் திருச்சபை அனைத்துப்
புனிதர்கள் நாள், இறந்தோரின் நினைவு நாள் என்ற வரிசையில்
இவ்விரு நாட்களையும் கொண்டாட நம்மை அழைக்கிறதோ? சிந்திக்க
வேண்டிய கருத்து.
"தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்." திருப்பாடல்
23ன் மூன்றாம் வரிகளின் பிற்பகுதியில் நம் சிந்தனைகளைச்
சென்ற விவிலியத் தேடலில் ஆரம்பித்தோம். வாழ்வில் நாம்
மேற்கொள்ளும் நேரிய வழி, நீதி வழி ஆகியவை ஜியோமிதி அல்லது
வடிவக் கணிதத்தில் நாம் படிக்கும் நேர்கோடு அல்ல. வளைந்து
நெளிந்து செல்லும் வழிகள் இவை, பல சமயங்களில் சிக்கலான,
நமது பொறுமையைச் சோதிக்கும் வழிகள் இவை என்பவைகளைச் சென்ற
விவிலியத் தேடலில் சிந்தித்தோம். இந்தச் சிக்கலான வாழ்வுப்
பாதையில் இறைவன் நம்மை எவ்விதம் வழி நடத்துகிறார் என்பதை
இன்று சிந்திப்போம்.
நாம் அனைவரும் குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்தவர்கள். இப்பருவத்தில்
நாம் தவழ்ந்து, நடந்து வந்த அனுபவங்களைச் சிறிது அசைபோடுவோம்.
பிறந்ததும், ஒவ்வொரு குழந்தையும் வானத்தைப் பார்த்தபடியே
படுத்திருக்கும். சில மாதங்களில் குழந்தை குப்புறப் படுக்கும்.
அப்போதுதான் தான் பிறந்துள்ள இந்தப் பூமியை அக்குழந்தை
பார்க்கும். இன்னும் சில மாதங்களில் இரு கைகளையும், கால்களையும்
தரையில் ஊன்றி, தன் படுக்கையை விட்டு, தொட்டிலை விட்டு
வெளியேறி, ஒரு சிறு உலகைச் சுற்றி வரும். பின்னர், தட்டுத்
தடுமாறி நிற்கும், முதல் அடிகளை எடுத்து வைக்கும்.
குழந்தைகள் தமது சொந்த முயற்சியில் எடுத்து வைக்கும் முதல்
அடிகள் எல்லாக் குடும்பங்களிலும் பெருமிதமாகக் கொண்டாடப்படும்
நாள். குழந்தை எழுந்து நடக்கும் போது, தந்தையோ, தாயோ அக்குழந்தைக்குப்
பின்புறமாய் இருந்து குழந்தை நடப்பதை உற்சாகப்படுத்துவர்.
அல்லது, முன்னே நின்று கொண்டு குழந்தையைத் தங்களிடம் வரச்
சொல்வார்கள். அந்த முதல் நாட்களில் குழந்தை கீழே விழ
வாய்ப்புக்கள் அதிகம். அந்த வாய்ப்புக்களைக் குழந்தைக்கு
அளிக்கப் பயந்து, குழந்தையைத் தரையிலேயே விடாமல் தூக்கிச்
சுமக்கும் பெற்றோர் குழந்தையின் வளர்ச்சியைக் கெடுத்து
விடுவார்கள். விழுந்து, எழுந்து பழகினால்தான் குழந்தை தனியே,
சுதந்திரமாக நடை பயில முடியும். இந்த நடை பயிற்சிகள் எல்லாமே
குழந்தைக்கு மிகவும் பழக்கப்பட்டச் சூழ்நிலையில்,
வீட்டுக்குள் நடக்கும் பயிற்சிகள்.
இதற்கு அடுத்தபடியாக, அக்குழந்தை வெளி உலகில் அடியெடுத்து
வைக்கும்போது, தந்தையின் அல்லது தாயின் கைகளைப் பற்றியவாறு
குழந்தை நடக்கப் பழகும். தந்தை அல்லது தாயின் ஒரு விரல்
போதும் அக்குழந்தை நடப்பதற்கு. இன்னும் சில மாதங்களில்
அந்த விரலும் தேவைப்படாது. குழந்தைகள் சிறுவர்களாய் அல்லது
சிறுமிகளாய் இந்த உலகை வலம் வரத் துவங்குவார்கள். இவை
அனைத்தும் உடல் அளவில் குழந்தை பெறும் வழி நடத்துதல்.
நம் ஒவ்வொருவருக்கும் தேவையான வழி நடத்துதல் இன்னும் பிற
வழிகளிலும் நமக்குக் கிடைத்துள்ளது. பள்ளிப் படிப்பு,
கல்லூரி படிப்பு, வேலை, என்று வாழ்வின் பல்வேறு நிலைகளில்,
வாழ்வின் பல முக்கிய முடிவுகளில் தாய், தந்தை, ஆசிரியர்,
உற்றார், நண்பர் என்று பலர் நமக்கு வழி காட்டியதை நினைத்து
பார்க்கலாம். பல குடும்பங்களில் இந்த முக்கியமான
நேரங்களில் இறைவனின் வழி நடத்துதலையும் வேண்டுகிறோம்.
கடவுள் எவ்வகையில் வழி நடத்துவார்? "தம் பெயர்க்கேற்ப எனை
நீதி வழி நடத்திடுவார்."
வாழ்வில் இறைவனின் வழிநடத்துதலைத் தேடுவோர் பலருக்கு
திருப்பாடல் 23ன் இவ்வரிகள் அறிவுரையாக, செபமாகத்
தரப்படும். இதேபோல், நீதிமொழிகள் 3: 6ல் சொல்லப்பட்டுள்ள
வரிகளும் பயன்படுத்தப்படும். "நீ எதைச் செய்தாலும்,
ஆண்டவரை மனதில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன்
பாதைகளைச் செம்மையாக்குவார்." செம்மையாக்கப்பட்ட,
சீராக்கப்பட்ட, நேராக்கப்பட்டப் பாதைகளைக் குறித்து இறை
வாக்கினர் எசாயா கூறும் வார்த்தைகள் இவை:
எசாயா 40: 3-4
குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக
வழியை ஆயத்தமாக்குங்கள்: பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக
நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம்
நிரப்பப்படும்: மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்:
கோணலானது நேராக்கப்படும். கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.
ஆங்கிலத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு கூற்று
உண்டு: "God writes straight with crooked lines." அதாவது,
கோணல் மாணலான வரிகளிலும் கடவுள் நேராக எழுதுவார். பாதைகள்
நேராக்கப்படும், கரடுமுரடானவைகள் சமமாக்கப்படும் என்ற
வார்த்தைகளைக் கேட்கும் போது, மனதில் ஓர் எண்ணம்
பிறக்கிறது. இறைவன் வந்துவிட்டால், எல்லாம் எளிதாகிவிடும்
என்ற எண்ணம்.
பாதைகளை நேராக்க, சீராக்க, சமமாக்க, கோணல் வரிகளிலும்
நேராக எழுத கடவுளுக்கு வலிமையுண்டு. சந்தேகமில்லை. ஆனால்,
இந்த வல்லமைகளைக் கொண்டு அவர் நமது வாழ்வுப் பாதையை
நீண்டதொரு நேர்கோடாக மாற்றி, வாழ்வில் எப்போதும் நம்மைத்
தூக்கிக் கொண்டே நடந்தால், நாம் நடக்கும் திறனை
இழந்துவிடுவோம். இறைவனின் வழி நடத்துதல் இவ்விதம்
இருக்காது.
நேர்கோடான பாதைகள் ஆபத்தானவை என்பதையும் நாம் அறிய
வேண்டும். சாலைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது,
ஆங்காங்கே வளைவுகள், திருப்பங்கள் இருப்பது நல்லது,
அவசியமும் கூட. வாகன ஓட்டிகளுக்கு முன் சாலைகள் நீண்டதாய்,
நேராய் இருந்தால், இரு ஆபத்துக்கள் உண்டு. ஒன்று... வேகம்.
நீண்ட நேரான பாதையில் அதிலும் எதிரே எந்தவித வாகனமும்
இல்லை என்பதைக் காணும் போது, அளவுக்கு மீறிய வேகம்
தலைதூக்கும் ஆபத்து உண்டு. இரண்டாவது ஆபத்து அயர்வு...
நீண்ட, நெடிய பாதைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது
கண்ணயரும் ஆபத்தும் உண்டு. வாழ்வுப் பாதையும் நீண்ட
நேர்கோடாய் இருந்தால், வேகத்தையும், சலிப்பையும்
உண்டாக்கும்.
இறைவன் நடத்திச் செல்லும் நம் வாழ்வுப் பாதைகள் வளைந்து,
நெளிந்து செல்லும் பாதைகள், திருப்பங்கள் நிறைந்த பாதைகள்.
எதிர்பார்த்த, எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த இந்தப்
பாதைகளில் ஒன்று மட்டும் நிச்சயம். கடவுள் நம்மோடு
நடக்கிறார். நம்மை வழி நடத்துகிறார். பாதைகளை நேராக,
எளிதாக மாற்றுவதை விட, நம் பார்வைகளை இறைவன்
தெளிவாக்குகிறார். திருப்பாடல் 23ன் மையக் கருத்தை
மீண்டும் உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். ஆண்டவர் நமது
ஆயனாக இருப்பதால், இம்மண்ணுலகம் ஒரு நொடியில் விண்ணுலகமாய்
மாறி விடாது. நாம் நடக்கும் பாதைகள் எல்லாம் மலர்கள்
மட்டும் பூத்துச் சிரிக்கும் பட்டு மெத்தையாய் மாறி
விடாது. இருளும், துயரும் நிறைந்த இம்மண்ணுலகில்,
மலர்களோடு முள்ளும் புதர்களும் உள்ள சிக்கலானப் பாதையில்
இறைவன் நம்முடன் இருக்கிறார். இதுதான் திருப்பாடல் 23
நமக்குத் தரும் நம்பிக்கை.
வாழ்க்கைப் பாதையைப் பற்றி சிந்திக்கும் போது, வேறொரு
எண்ணமும் மனதில் எழுகிறது. நமது இந்திய மரபில் நாம்
அடிக்கடி பயன்படுத்தும் 'தலையெழுத்து' என்ற எண்ணத்துடன்
வாழ்க்கைப் பாதையை இணைத்துச் சிந்திப்பது பயனளிக்கும்.
நாம் பிறந்த நேரம், நட்சத்திரம், நம் குலம், குடும்பம்
இவைகளை வைத்து நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை
நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்பதைத் தான் நம்
'தலையெழுத்து' என்ற எண்ணம் வலியுறுத்துகிறது. இந்தக்
கண்ணோட்டத்தில் பார்த்தால், நமது வாழ்க்கைப் பாதை நாம்
நடக்க ஆரம்பிக்கும் முன்பே தெளிவாக வரையப்பட்டுவிட்டது,
தீர்மானிக்கப்பட்டு விட்டது. வேறு வழிகளில் நம்மால் செல்ல
முடியாது, இறைவன், அல்லது நமது விதி, அல்லது நமது
தலையெழுத்து வரைந்துள்ள பாதையில் நாம் அனைவரும் சாவி
கொடுக்கப்பட்ட பொம்மைகள் போல நடக்கிறோம். தலையெழுத்துடன்
தொடர்புள்ள இந்த எண்ணங்கள் அனைத்தும் தவறானவை.
ஆயனாம் இறைவன் நம்மை வாழ்வுப் பாதையில் வழிநடத்திச்
செல்வதற்கும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு பாதையில்
நம்மைக் கட்டி இழுத்துச் செல்வதற்கும் ஏகப்பட்ட
வேறுபாடுகள் உண்டு. மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள
வேறுபாடுகள் இவை.
நம்மைப் படைத்து, தினமும் நம்மைப் பேணி வளர்த்து வழி
நடத்திச் செல்வது இறைவன் தான். ஆனால், அவர் நம்மை வழிநடத்த
நமது சம்மதம் தேவை.
ஆயன், ஆடுகள் என்ற மையக் கருத்துடன் இத்திருப்பாடலை நாம்
சிந்தித்து வருவதால், அவைகளுடன் தொடர்புடைய ஒரு கதை
நினைவுக்கு வருகிறது.
ஆயன் ஒருவர் தன் கிடையில் ஆடுகளைச் சேர்த்துவிட்டு உறங்கச்
செல்கிறார். அடுத்த நாள் காலையில் கிடையிலிருந்து ஓர் ஆடு
காணவில்லை. வேலியில் உள்ள ஒரு ஓட்டை வழியே அது வெளியேச்
சென்றுவிடுகிறது. காணாமல் போன ஆட்டை மிகச் சிரமப்பட்டுத்
தேடி மீண்டும் கொண்டு வந்து கிடையில் சேர்க்கிறார்.
அடுத்த நாளும் அந்த ஆடு காணாமல் போகிறது. மீண்டும் தேடிக்
கண்டு பிடிக்கிறார். பல முறை இவ்வாறு ஆனதால், அவரது நண்பர்
ஒருவர் அவருக்கு ஆலோசனைத் தருகிறார். "அந்த ஆட்டைக்
கட்டிப் போடு. அதே நேரம் அந்த வேலியில் உள்ள ஓட்டையை
அடைத்து விடு." என்பது நண்பரின் ஆலோசனை. ஆயன் அவரிடம்,
"வேலியில் உள்ள ஓட்டையை அடைத்தாலோ, ஆட்டைக் கட்டிப்
போட்டாலோ அந்த ஆட்டின் சுதந்திரம் பறிபோய்விடும். அப்படி
நான் செய்ய மாட்டேன்." என்று சொல்கிறார்.
நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு பதில். ஆனால், ஆயனின் இந்த
பதில் ஆண்டவனாம் ஆயன் நடந்து கொள்ளும் முறையைத்
தெளிவுபடுத்தும் ஒரு பதில். கட்டிப் போடுதல், கடிவாளம்
மாட்டி, வலுக்கட்டாயமாய்த் தான் வகுத்த பாதையில் இழுத்துச்
செல்லுதல், வேறு பாதைகளையெல்லாம் மூடிவிடுதல் போன்றவை நம்
சுதந்திரத்தைப் பறிக்கும் முயற்சிகள். நாம் எத்தனை முறைகள்
காணாமல் போனாலும், நம்மைத் தேடிவரும் ஆயன், நம்மை மீண்டும்
தன்னுடன் இணைத்துக் கொள்ள முயல்வாரே தவிர, தன்னுடன் நம்மை
கட்டிப் போட மாட்டார். நாம் தவறிச் செல்லும் போது,
தவறுகளைச் சுட்டிக் காட்டுவார், தட்டிக் கேட்பார். ஆனால்,
தவறக்கூடிய பாதைகளை அடைத்து விட மாட்டார். பாதைகளை
அடைத்து, வேலிகளை மூடி, நம்மைச் சிறைப்படுத்துவது இறைவனின்
பணி அல்ல, இறைவனின் பாணி அல்ல.
நாமாகவே மனம் உவந்து, உளம் மகிழ்ந்து, முழு மன
சுதந்திரத்துடன் அவர் காட்டும் பாதையில் செல்வதைத் தான்,
"தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்." என்ற
வரியில் சொல்கிறார் திருப்பாடலின் ஆசிரியர். அந்தப்
பாதையில் தட்டுத் தடுமாறினாலும், தவறி விழுந்தாலும்
அருகில் வந்து நம்மை எழுப்பி விட்டு மீண்டும் நம்மை
நடக்கத் தூண்டுபவர் தாயாய், தந்தையாய், ஆயனாய் நம்மை வழி
நடத்தும் இறைவன்.
அருள்தந்தை குமார்ராஜா
நாமும் புனிதர்களே!
புனிதர்கள் மொத்தம் எத்தனை பேர் என்று உங்களுக்குத்
தெரியுமா? நினைவிலிருந்து சில பெயர்களைச் சொல்லச்
சொன்னால், இருபது பெயர்களுக்குப் பிறகு யோசிக்கத் தொடங்கி
விடுவோம். புனிதர்களின் பிரார்த்தனையில் ஏறக்குறைய 50 புனிதர்களின்
பெயர்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இணைய தளத்தில்
நுழைந்து பார்த்தால், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புனிதர்களின்
பெயர்களைப் பார்க்கலாம். இவர்களெல்லாம் திருச்சபையால் புனிதர்கள்
என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவர்கள்தான். உண்மையில்,
இறைத் திருவுளத்தின்படி வாழ்ந்து, இன்று விண்ணி;ல் இறையின்பத்தை
அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் என்னும் பார்வையில்
பார்த்தால், இலட்சக்கணக்கான புனிதர்களை எண்ணலாம்.
இன்றைய நாளில் திருச்சபை அனைத்துப் புனிதர்களையும்
நினைவுகூர்ந்து, இறைவனைப் போற்றுகிறது. நன்றி கூறுகிறது.
பெயர் தெரிந்த, பெயர் தெரியாத அனைத்துப் புனிதர்களையும் இன்று
எண்ணிப்பார்க்கிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். புனிதர்கள் என்பார்
யார்? தங்களுடைய வாழ்வையும், பணியையும் இறைவனின் விருப்பத்துக்கேற்ப
அமைத்துக்கொண்டவர்கள்தான் புனிதர்கள். இன்றைய நற்செய்தி வாசகத்தில்
நாம் கேட்கும் மலைப்பொழிவைத் தம் வாழ்வாக்கிய அனைவருமே
புனிதர்கள்தான். இந்த நாள் நமக்கு விடுக்கும் அழைப்பு:
நாமும் புனிதராக வாழவேண்டும். புனித வாழ்வை விரும்ப
வேண்டும். புனிதர்கள் என்பவர்கள் நமக்கு அப்பாற்பட்டவர்கள்,
வியத்தகு வரங்களைப் பெற்றவர்கள் என்று எண்ணாமல், அவர்களும்
நம்மைப் போன்ற நிறைகளும், குறைகளும் கொண்டவர்களே என்பதையும்,
ஆனால், நாள்தோறும் தங்கள் வாழ்வை இறைவார்த்தையின்படி நடத்தியவர்கள்
என்பதையும் நினைவுகூர்ந்தால், நாமும் புனிதர்களாக வாழலாம்,
முயற்சி செய்யலாம்.
மன்றாடுவோம்: புனிதர்களின் பேரின்பமே இறைவா, தங்கள்
வாழ்வில் உம்மை மாட்சிப்படுத்தி, இன்று உம்மோடு வாழும்
பேறுபெற்ற அனைத்துப் புனிதர்களுக்காகவும். அவர்களுக்கு
நீர் அளித்த மாட்சியின் மணிமுடிக்காகவும் உம்மைப்
போற்றுகிறோம். இறைவா, எங்கள் வானகத் தந்தையாகிய நீர் தூயவராய்,
இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல. நாங்களும் வாழவும், அதன்வழி
புனிதர்களாய் மாறவும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே
நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
-- அருள்தந்தை குமார்ராஜா
அன்னை தெரசாவின் சகோதரி ஆகா. ஜனவரி 04.1970 அன்று, தனது
தங்கை ஆக்னசஸ் என்ற அன்னை தெரசாவுக்கு கடிதம் ஒன்றை
எழுதியிருந்தார்.
"அம்மாவின் உடல் நிலை மிக மோசமாக உள்ளது. கடைசியாக ஒரு
முறை உன்னைப் பார்க்க விரும்புகிறார்!" வாசித்ததும்
கலங்கிப் போன அன்னை, துறவு நிலைத் தடுத்தாலும் புறப்படத்
தயாரானார். என் அம்மா தானே, என் பணி வாழ்வில் முதன்மைக்
குரு சாவை நெருங்கும் குருவைப் பார்ப்பது சீடரின்
கடமையல்லவா? முடிவெடுத்தபடி அல்பேனிய அரசின் அனுமதி
வேண்டினார்.
அந்த அல்பேனிய அரசு எச்சரிக்கை ஒன்றை வைத்தது. " இங்கே
உங்கள் தாயாரைப் பார்க்க வரலாம். எந்தத் தடையுமில்லை.
ஆனால்.... இங்கு வந்த பிறகு உங்களை இந்தியாவுக்கு திருப்பி
அனுப்புவோம். என்ற செய்தி உறுதி கிடையாது." நிபந்தனையைக்
கேட்டு அதிர்ந்து போன கனத்த இதயத்தோடு பயணத்தை ரத்து
செய்துவிட்டார். அம்மாவுக்காகப் பிரார்த்தனை செய்துவிட்டு
வழக்கமான வேலைகளில் இறங்கி விட்டார்.
அதன் பிறகு எட்டாண்டுகள் கழித்து அல்பேனிய அரசே அன்னைக்கு
சிவப்புக் கம்பளம் விரித்து அழைப்பு விடுத்தது. 1978
மார்ச் 28, அன்று அன்னை தனது சொந்த ஊரான ஸ்காப்ஜேயில்
காலடி எடுத்து வைத்தார். ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பே
அவரது சகோதரி ஆகாவும் அம்மாவும் இறந்து போயிருந்தனர்.
ஆயிரக்கணக்கான அனாதைகளுக்கு ஆதரவாய் வாழ்ந்தவர் அனாதை
அனுபவம் பெற்றார்.
ஆண்டவருக்காக ஏழைகளுக்காக நாம் வாழும் காலத்திலேயே நாளும்
பொழுதும் வாழ்ந்து மரித்த அன்னை இன்று புனித தெரசாவாக
உலகமே போற்றிப் புகழ்கின்றது.
நாமும் அன்னை தெரசாவிடம் நமது விண்ணப்பங்களை எடுத்து
வைப்போம் அவர் நமக்காய் ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து
பேசுவார். புனிதர்கள் உறவைத் தொடர புனிதர்களின் விழா
நாளில் சிறப்பாக செபிப்போம்.
திருச்சபையின் முதல் நூற்றாண்டுகளில் திருச்சபையால்
வந்திக்கப்பட்ட புனிதர்கள் அனைவரும் வேத சாட்சிகளே.
வேதசாட்சிகளிலும் அனைவரது விழாக்களும் தனித்தனியாக
கொண்டாடப்படுவதில்லை. வேதசாட்சிகளைத் தவிர ஏராளமான
புனிதர்களும் மோட்சத்தில் புனிதர்களாக பேரின்ப பாக்கியம்
அனுபவித்து வருகிறார்கள்.
இன்று நாம் மோட்சத்தில் இருக்கும் புனிதர் அனைவரையும்
நினைவு கூர்கிறோம். அவர்களது மகிமையையும், மாட்சிமையையும்
திருச்சபை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. புனிதர் பட்டம்
பெற்றவர்கள் மட்டுமல்ல, என்ன முடியாத வேறு நீதிமான்களையும்
நாம் காண்கிறோம். அவர்கள் பழைய ஏற்பாட்டிலும் புதிய
ஏற்பாட்டிலும் வாழ்ந்தவர்கள். அவர்கள் கடவுளைப்
புகழ்கிறார்கள். கடவுளுடைய செம்மறியானவரையும் அவர்கள்
வாழ்த்துகிறார்கள்.
"இறப்புக்குப்பின் நிலைவாழ்வு ஒன்று உண்டு" என்பது
கிறிஸ்தவத்தின் தொன்மை வாய்ந்த நம்பிக்கைகளுள் ஒன்றாகும்.
அதன்படி உலக வாழ்வில் மேற்கொள்ளப்பட்ட செயல்களின்படி
ஒருவருக்குத் தீர்ப்பு வழங்கப்படும். விண்ணகக் கொடையை
உடனடியாகப் பெறுவது என்பது எதிர்பார்ப்பாகும். அதன்படி
புதுவாழ்வு பெற்ற புனிதர் கூட்டத்தை தம் காட்சியில் கண்ட
திருத்தூதர் யோவான் விவரிப்பதை முதல் வாசகம் எடுத்துக்
கூறுகிறது
வானகத் தந்தை தூயவராய் இருக்கிறார். எனவேதான் விண்ணக
தூதரணி அவரை எப்போதும்" தூயவர்" எனப் புகழ்ந்தேத்துகிறது.
நமது தந்தை எப்படியோ நாமும் அப்படியே இருக்க வேண்டும்.
அப்போது தான் வானகத் தந்தையின் உரிமைப் பிள்ளைகள் நாம்
என்ற பேறு, நமக்கு என்றும் நிலைக்கும். தொடக்க முதல்
முடிவு வரை தூய்மையயே நமது நிலைப்பாடு என வாழத்
தூண்டுகிறது இன்றைய இரண்டாவது வாசகம்.
புனிதமிக்க நம் சகோதரர்களுடன் நாமும் கூடி மகிழ்வோம்.
நம்மோடு வாழ்ந்து மறைந்ததால் அவர்களுடன் நாம் தொடர்பு
கொண்டிருக்கிறோம்.
மோட்சத்திலிருக்கும் புனிதர்களுடன் தேவபயத்துடன்
வாழ்வதுடன் கடவுளது கட்டளைகளை அனுசரித்து நடக்க வேண்டும்.
எளிய மனத்தோராய் சாந்த குணம், வேதனைகளில் பொறுமை, நீதி,
அனுதாபம், கற்பு, துன்பங்களில் சகிப்பு என்னும்
புண்ணியங்களை அனுசரிக்க வேண்டும். நமது உழைப்புகளிலும்
பிரச்சனைகளிலும் இயேசுவிடமே இளைப்பாற்றி காணவேண்டும்.
"கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை'' (யோவான் 1:18). ஆனால்
நம்மிடையே மனிதர்களாகப் பிறந்து புனிதர்களாக மாறியவர்களின்
வழியாகத்தான் இறைவன் தமது மாட்சியை
வெளிப்படுத்திக்கொண்டுள்ளார்.
"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம்
சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்''
(மத்தேயு 16:24) என்ற இறைமகன் வாக்குக்கு சாட்சியாக
வாழ்ந்தவர்கள் புனிதர்கள்.
இயேசுவின் சீடரான தூய இராயப்பர் (பேதுரு) தொடங்கி
இந்தியாவின் முதல் புனிதையான தூய அல்போன்சம்மா வரை
மேற்கண்ட இறைவார்த்தையாக வாழ்ந்து மறைந்தார்கள்;
புனிதர்களாக நம்மோடு இன்றும் வாழ்கிறார்கள்; நமக்காக
செபிக்கிறார்கள்; நமக்காக பரிந்துபேசி அரும் அடையாளங்களை
நமக்கு வழங்கிக் கொண்டுள்ளார்கள். தன் வாழ்நாளெல்லாம்
செபத்திலேயே கழித்த தூய தெரசாள் இறப்பதற்கு முன்பு, "என்
பணி இனிமேல்தான் ஆரம்பமாகிறது'' என்று கூறி விண்ணகத்தில்
உலக மக்களுக்காகப் பரிந்து பேசி செபிக்கப் போவதாக
அறிவித்துச் சென்றாள்.
புனிதர்கள் "தங்களது வலிமையால் நற்பெயர் பெற்றார்கள்.
தங்களது அறிவுக்கூர்மையால் அறிவுரை வழங்கினார்கள்; இறை
வாக்குகளை எடுத்துரைத்தார்கள். தங்கள் அறிவுரையாலும்
சட்டம் பற்றிய அறிவுக் கூர்மையாலும் மக்களை நடத்தினார்கள்.
நற்பயிற்சியின் சொற்களில் ஞானிகளாய் இருந்தார்கள். அவர்கள்
அனைவரும் தங்கள் வழி மரபில் மாட்சி பெற்றார்கள். தங்கள்
வாழ்நாளில் பெருமை அடைந்தார்கள். அவர்களுள் சிலர் புகழ்
விளங்கும்படி தங்கள் பெயரை விட்டுச் சென்றார்கள்.
அவர்களின் வழி மரபு என்றும் நிலைத்தோங்கும். அவர்களின்
மாட்சி அழிக்கப்படாது. அவர்களுடைய உடல்கள் அமைதியாய்
அடக்கம் செய்யப்பட்டன.
அவர்களுடைய பெயர் தலைமுறை தலைமுறைக்கும் வாழ்ந்தோங்கும்.
மக்கள் அவர்களுடைய ஞானத்தை எடுத்துரைப்பார்கள். அவர்களது
புகழைச் சபையார் பறைசாற்றுவார் (சீராக் 44:1-15)'' என்ற
தூய சீராக்கின் ஞான உரையைக் கண்ணோக்குகின்றபோது, நம்
வாழ்வில் தீய எண்ணங்கள், உலக இச்சைகள், சிற்றின்பங்கள்
போன்றவற்றில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அவர்கள் நமக்காக
வாழ்ந்தார்கள் என்பது புலனாகிறது. அவர்களின் மேன்மையை நாம்
நினைக்க, சிந்திக்க வேண்டியுள்ளது.
"என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும்
வாழ்வடைவார்'' (மத்தேயு 16:25) என்ற இறைமகன் இயேசுவின்
வாக்குக்கு உண்மை சாட்சியாக நின்ற அன்னை மரியாள், தூய
சூசையப்பர், தூய இராயப்பர், தூய அந்தோணியார், தூய
செபஸ்தியார், தூய சின்னப்பர், தூய அருளப்பர், தூய தெரசாள்,
தூய அல்போன்சம்மாள் போன்றோர்களின் பெயரைச் சொல்லி
"எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்'' என்று அவர்களிடம்
செபங்கள் மூலமாக கேட்கின்றபோது, நம் தேவைகளை
நிறைவேற்றவும், நம்மை பீடித்திருக்கின்ற நோய்களை,
துன்பங்களை நீக்குவதற்காகவும் இறைவனிடம் நாள்தோறும்
பரிந்து பேசுகிறார்கள்.
"விண்ணகத்தில் புனிதர்கள் தங்களிடம் இறை மக்களின் செபங்கள்
வரும்போது, கிறிஸ்துவின் அரியணை முன் இந்த செபக்
காணிக்கையையே தூபமாக அர்ப்பணிக்கிறார்கள்''
(திரு.வெளி:5-8).
கடவுளை வழிபடுகிற நாம், அவரோடு நெருங்கிய உறவு கொண்டு
நமக்காக பரிந்து பேசுகிற புனிதர்களுக்கு வணக்கம்
செலுத்துவது நமது கடமை.
"புனிதம்" அல்லது" புனிதர்" எனபதை எபிரேய மொழியில்"
குவதோஸ்" என்றும், கிரேக்க மொழியில்" ஆகியோன்" என்றும்
சொல்லப்படுகிறது. இதற்கு பிரித்தெடுக்கப்பட்ட" அல்லது"
வேறுபடுத்தப்பட்ட" என வார்த்தையளவில் பொருள்
கொள்ளப்படுகிறது. கிறிஸ்தவர்கள், புனிதம் என்பது
கடவுளையும், அவரை வழிபட பயன்படுத்தப்படும் பொருட்களையும்,
இடங்களையும் மட்டும் சார்ந்ததாக கருதி வந்தனர். பின்னர்,
மிகக் குறிப்பாக, இயேசுவுக்காக இரத்தம் சிந்தி உயிர்
துறந்த அனைவரையுமே தொடக்ககால திருச்சபை புனிதர்கள் என்றே
அழைத்துள்ளது. .இதை புனித பேதுருவின் முதல் திருமுகத்திலே
நாம் காணலாம்." புனிதர்கள் யார்? " என்று நாம்
ஒவ்வொருவருமே நம்மில் கேட்டுப் பார்க்கின்றபோது,
கிடைக்கின்ற பதில்," புனிதர்கள் இறைவனின் திருவுளப்படி
தங்கள் வாழ்வை அவருக்காகவே, அனைத்தையும் துறந்து,
அர்ப்பணித்தவர்கள்." என்பதுவே. ஆம்; புனிதர்கள் வாழ்வு
நமக்குக் கற்றுத் தரக்கூடியதும் அதுவே. இறைமகன் இன்றைய
நற்சய்தியில் போதித்தவை அனைத்தும்" நான் எதற்காக
வந்திருக்கின்றேன், எனது பணி யாருக்காக... என்னைப்
பின்பற்ற விரும்புகிறவர்களும் இவற்றின்வழி வாழ
வேண்டுமென்பதையும்" மிகத் தெளிவாக கூறுகின்றார்.
இம்மலைப்பொழிவை வாழ்வாக்கியவர்களே இன்று நாம் போற்றிக்
கொண்டாடும் புனிதர்கள். யாருமே பிறக்கும் போதே
புனிதர்களாகப் பிறப்பதில்லை. அவர்களும், நம்மைப் போல
சாதாரண மனிதர்களாக பிறந்தவர்கள்தான். நம்மைப் போல நிறை,
குறை உடையவர்கள்தான். ஆனால், தங்கள் வாழ்வை இறைதிருவுளம்
உணர்ந்து, இறைவார்த்தையின்படி வாழ்ந்து, இறைவனுக்காகவும்,
பிறருக்காகவும் அனைத்தையும் துறந்து, வாழ்ந்து, மரித்து,
இறைபாதம் சேர்ந்து, அவரை முகமுகமாய் தரிசிக்கும் பேற்றினை
பரிசாக பெற்றுக் கொண்டவர்கள்.
புனிதர்கள் வணக்கம் கடவுளுக்கு எதிரானதல்ல. அவர்கள் வழியாக
நாம் இன்னும் கிறிஸ்தவ வாழ்வை அர்த்தமுள்ளதாக்க
துணைபுரியும் விழா என்று எண்ணுதலே சிறந்தது.
நமது வாழ்க்கைக்கு
இறைவனின் அழைப்பைப் பெற்று அனைத்தையும் துறந்து இயேசுவைப்
பின் தொடர்ந்தவர்கள். நமக்கு முன்மாதிரியாக திகழ்பவர்கள்.
நாம் இறை நம்பிக்கையில் வளர துணைபுரிபவர்கள். ஜெபம், தவம்,
தியானம் இவற்றால் ஆழ்ந்த இறையனுபவத்தை பிறரோடு பகிர்ந்து
கொண்டவர்கள்.
இறை வார்த்தையின்படி வாழ்ந்தவர்கள்.
கடவுளின் அரசை நம் நடுவில் நிலை நிறுத்தியவர்கள்.
நமது வாழ்க்கையின் வழிகாட்டிகள்.
புனிதர்கள் வாழ்க்கையை சிந்திப்போம்...
அவர்கள் தடம் பதித்த பாதையில் நாமும் தடம் பதித்து நடக்க
நாள் தோறும் முயல்வோம்.
M.Arul
இலையுதிர் காலம் என்றால் மரணமல்ல. வசந்த காலத்தின் தொடக்கம்.
சூரியன் மறைவது மறைவல்ல. சந்திரன், விண்மீன்கள் உதயத்திற்குத்
தொடக்கம்.
மலர் கருகி விடுவது முடிவல்ல. காய், கனிக்கு இடம் தருகிறது.
கோதுமை மணி மடிவது இழப்பல்ல. அது மடிந்தால் தான் பயிர்
முளைத்துப் பலன் தரும்.
எனவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இறந்து கிடந்த
சிறுமியைப் பார்த்து, அவள் சாகவில்லை , உறங்குகிறாள்
(லூக். 8:52) என்றும், நம் நண்பர் இலாசரும் தூங்குகிறான்;
நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன் என்றும் (யோவா.
11:11) கூறினார். ஏனெனில் உலகில் நடக்கும் இயற்கையான இறப்பு
எதார்த்தமானது. அது பாவத்தின் கூலி (உரோ. 6:23). ஆனால் இயேசுவில்
நம்பிக்கை கொண்டு, இறை - மனித உறவோடு வாழ்ந்து இறப்பவர்களுக்கு
இந்த உலக இறப்பு, இறைவனில் கிடைக்கும் ஓய்வாகிறது (யோவா.
11:25). இதை விளக்கும் வகையில் தான், ஆண்டவருக்குள் இறந்தவர்கள்
செய்த நன்மைகள் அவர்களோடு கூட வரும் (திவெ. 14:13). அவர்கள்
தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள் என்று
திருவெளிப்பாடு நமக்குத் தருகிறது.
இன்று தாயாகிய திருச்சபை, அன்புக்கு அடிமையாகி, அன்பினால்
புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட புனிதர்களின் திருவிழாவைக்
கொண்டாடுகிறது. புனிதம் என்பது புண்ணிய தீர்த்தத்தில்,
புனித ஆற்றில் குளிப்பதால் மட்டும் வந்து விடுவதில்லை.
முழுக்க முழுக்க வாழ்வைச் சார்ந்தது. மனிதம் என்ற
சொல்லுக்கும் புனிதம் என்ற சொல்லுக்கும் உள்ள வேற்றுமை முதலில்
உள்ள ஒரு எழுத்து மட்டும்தான். ஆம், மனிதம் என்றாலே புனிதம்
பிறக்கிறது. மனிதமும், புனிதமும், நாணயத்தின் இரு பக்கங்கள்
போன்றவை. நாம் ஒவ்வொருவரும் தூயவராக வாழ்வதற்காக (1 யோவா.
3:3) அழைக்கப்பட்டிருக்கிறோம். (முதல் வாசகம்). ஏழ்மையையும்,
துன்பத்தையும் , நோயையும், பொறுமையோடு ஏற்று வாழ்பவர்களே
புனிதர்கள், பேறு பெற்றவர்கள் என்று இயேசு அழைக்கிறார்
(மூன்றாம் வாசகம்).
அன்பார்ந்தவர்களே, புனிதம் என்பது நேற்று பெய்த மழையால் இன்று
முளைத்த காளான்கள் போல் அல்ல. மாறாக மனித உள்ளத்தில்
புதைந்து கிடக்கும் புனிதத்தை வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்
மடியும் கோதுமை மணிபோல் (யோவா. 12:24) வளர்த்து எடுக்க
வேண்டிய ஒன்று. கடவுள் நம்மோடு இருக்க நமக்குத்தான் வெற்றி
என்று அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கனுக்கு அவரது காரியதரிசி
ஆறுதல் சொன்னபோது, "நண்பா! கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பது
தெரியும். ஆனால் நாம் கடவுளோடு இருக்கிறோமா?" என்பதுதான்
கவலை என்றார் லிங்கன். ஆம், நாம் இறைவனோடு இணையும்போதுதான்
(யோவா. 15:5) நாம் புனிதம் அடைவோம். இத்தகைய எண்ணற்ற புனிதர்கள்
இந்த உலகில் சாட்சிய வாழ்வு வாழ்ந்து, இறந்தும் வாழ்கிறார்கள்
என்பதைத்தான் நாம் நினைவு கூறுகிறோம். ஏனெனில் தூய பவுல்
கூறுவதுபோல் சாவு வீழ்ந்தது. வெற்றி கிடைத்தது (1 கொ.
15:55). நாமும் இவர்களைப்போல, நான் யார்? எதற்காக இங்கே வந்தேன்?,
எங்கிருந்து வந்தேன்?, எங்கே போகிறேன்? என்பதை உணர்ந்து
வாழ்வோம். இதற்காக புனிதர்களிடம் மன்றாடுவோம்.
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்,
பெங்களூர்
அனைத்து தூயவர்கள் (நவம்பர் 1)
"தனக்காகவும் பிறருக்காகவும் வாழ்கிறவன் தான் மனிதன்;
பிறருக்காகவும் கடவுளுக்காகவும் மட்டும் வாழ்கிறவன்
புனிதன்". நாம் ஒவ்வொருவரும் புனிதர்களாக வாழ, இன்றைய
நாளில் இறைவன் நம்மை அழைக்கிறார்.
புனிதர்கள் யார்? புனிதர்கள் கடவுளா? புனிதர்களை நாம்
வழிபடுகின்றோமா? வணங்குகின்றோமா? புனிதர்களிடம் நாம்
மன்றாட வேண்டுமா? ஏன், நமது தாய்த் திருச்சபை
புனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது? இவ்வாறான
நம்முடைய, மற்றும் பிற சபையைச் சார்ந்தவர்களுடைய பல
கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் இன்றைய பெருவிழா நமக்கு
விளக்கம் தருகிறது.
புனிதர்கள் என்பவர்கள் இவ்வுலகில் இறைவனுக்கு
ஏற்புடையவர்களாக விசுவாசத்தில் உறுதிகொண்டு மற்றவர்களுக்கு
இறைவனைக் காண்பித்து இன்று விண்ணக வாழ்வைச் சுவைத்துக்
கொண்டிருப்பவர்கள். எபிரேயருக்கு எழுதியத் திருமுகம்
12:22- 23-இல் கடவுளின் நகர் விண்ணக எருசலேம். அதனைப்
பல்லாயிரக் கணக்கான வானதூதர்கள் சூழ்ந்துள்ளனர்.
விண்ணகத்தில் தாய்த் திருச்சபை விழா கூட்டமென அங்கே
கூடியுள்ளது என்று கூறும் இறைவார்த்தை நமக்கு இதனை
உறுதிப்படுத்துகிறது. திருச்சபையின் முதல் நூற்றாண்டுகளில்
திருச்சபையால் நினைவு கூறப்பட்ட புனிதர்கள் அனைவரும் வேதச்
சாட்சிகளே. வேதசாட்சிகளைத் தவிர ஏராளமான புனிதர்களும்
மோட்சத்தில் புனிதர்களாகப் பேரின்பப் பாக்கியம் அனுபவித்து
வருகிறார்கள். புனிதர்களாக யாரும் பிறப்பதில்லை.
மனிதர்களாகப் பிறந்து புனித நிலைக்குத் தங்களையே மாற்றிக்
கொண்டவர்கள்தான் புனிதர்கள். இவர்கள் தங்கள் வாழ்வை
இறைவனுக்காக அர்ப்பணித்து, கிறிஸ்தவ விசுவாசத்தில் ஊன்றி
நின்று, ஒரு எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்தவர்கள்.
புனிதர்கள் தவறு செய்தவர்கள் தான், ஆனால் உணர்ந்து
திருந்தியவர்கள். ஒரேயடியாக வீழ்ந்துவிடவில்லை,
வீழ்ந்தாலும் எழுந்தவர்கள்.
கி.பி. 153-ஆம் ஆண்டு ஆயர் பொலிக்கார்ப் என்பவர் மறைசாட்சி
முடி பெற்றார். இதை வானகப் பிறப்பு நாளாகத் தொடக்கக்
கிறிஸ்தவர்கள் கொண்டாடினர். நமக்கு முன்சென்ற இவர்களின்
வானகப் பிறப்பு நாளைக் கொண்டாடும்போது நாமும் சாட்சி பகர
நம்மையேத் தயாரித்துக் கொள்கிறோம்.
பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியாகக் கி.பி. 387-ஆம்
ஆண்டு நிசயாவில் இரண்டாவது பொதுச்சங்கம் கூட்டப்பட்டது.
இதில் புனித உருவங்களை நாம் பார்க்கும்போது இவைகள் எந்த
ஆட்களைக் குறிக்கின்றனவோ அவர்களை நினைவு படுத்துகின்றன
என்றும் அவர்களை நினைத்துக்கொள்வதனால், அவர்களைப் பின்பற்ற
முயலுகிறோம். அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம் என்றும்
விளக்கம் கொடுக்கப்பட்டது.
கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலேயே நவம்பர் ஒன்றாம் தேதி
அனைத்துப் புனிதர்கள் பெருவிழாக் கொண்டாடப்பட்டது.
குறிப்பாகப் பிரான்சு, இங்கிலாந்து நாடுகளில். கி.பி.
9-ஆம் நூற்றாண்டில் இத்திருவிழாவின் முக்கியத்துவத்தை
உணர்ந்து மற்ற பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. கி.பி.
10-ஆம் நூற்றாண்டில் உரோமாபுரியில் இரவு செபத்தோடு
உபவாசமிருந்து கொண்டாடப்பட்டது. இவ்வாறாகத் திருச்சபை
வரலாற்றில் இப்பெருவிழா முக்கிய இடம் பெற்றது. உலகில் உள்ள
எல்லாருமே கடவுளின் சாயலாகப் படைக்கப்- பட்டவர்கள்.
கடவுளின் பண்பைப் பெற்றுள்ள நாம் எந்தச் சூழ்நிலையிலும்
நன்மையையேச் செய்திட அழைக்கப்பட்டுள்ளோம். இவ்வழைத்தலை
ஏற்று வாழும்போது ஒருவர் புனிதராகிறார்.
புனிதர்கள் கடவுளா?
இல்லை. புனிதர்கள் கடவுள் இல்லை. கடவுள் முழுமை யானவர்,
அனைத்தையும் படைத்தவர் கடவுள். அனைத்தையும் கடந்து உள்
நிற்பவர். ஆனால் புனிதர்கள் கடவுளால் படைக்கப்பட்ட சாதாரண
மனிதர்கள். தங்கள் வாழ்வால் புனித நிலைக்கு
உயர்த்தப்பட்டவர்கள். அவர்கள் கடவுளோடு கொண்ட நெருங்கிய
உறவால் அந்த முழுமையை நோக்கிப் பயணம் செய்தவர்கள்.
கடவுளுக்காகக் கடவுளின் திட்டப்படி இவ்வுலகில்
வாழ்ந்தவர்கள். அதற்குப் பரிசாகக் கடவுளை முகமுகமாய்த்
தரிசிக்கும் வரத்தைப் பெற்று விண்ணகத்தில் நமக்காகப்
பரிந்துப் பேசுகின்றவர்கள்.
கிறிஸ்தவர்களாகிய நாம், புனிதர்கள் யார்? கடவுள் யார்?
என்ற வேறுபாட்டைத் தெரிந்து கொள்வது அவசியம். பலர் ஆதித்
திருச்சபையில் வேதகலாபனை நேரத்தில் விசுவாசத்தைக்
காப்பாற்ற பல வேதனைகள் பல கஷ்டங்களை எதிர்கொண்டார்கள், ஏன்
தங்கள் உயிரையேத் தியாகம் செய்தார்கள். இவர்களை
மறைசாட்சிகள் என்றழைக்கிறோம். பின்பு, பலர் சாதாரண மரணம்
அடைந்தாலும் தங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு
எடுத்துக்காட்டான விசுவாச வாழ்வு வாழ்ந்ததால் இவர்களைப்
புனிதர்கள் என்றழைக்கிறோம். ஆதலால் புனிதர்கள் கடவுள்
அல்லர், கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் என்ற தெளிவானச்
சிந்தனை கொள்வோம்.
புனிதர்களுக்கு நாம் செலுத்துவது வழிபாடா? வணக்கமா?
புனிதர்களை நாம் வழிபடுவதில்லை. ஆராதிப்பதில்லை.
புனிதர்களுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம். வழிபாடு
கடவுளுக்கு மட்டும் உரித்தானது.
* மரியாதை - நாம் நம் பெரியவர்களுக்குச் செலுத்துவது
* வணக்கம் - நாம் புனிதர்களுக்குச் செலுத்துவது
* மகத்தான வணக்கம் - நாம் புனித கன்னி மரியாள், இறைவனின்
தாய்க்குச் செலுத்துவது
* ஆராதனை வழிபாடு - நாம் கடவுளுக்குச் செலுத்துவது
எந்தப் புனிதரும் தங்களைக் கடவுள் நிலைக்கு
உயர்த்தியதில்லை. கடவுளுக்குச் சமமாக நினைத்ததில்லை.
நான்தான் கடவுள் என்று கூறியதுமில்லை. இவர்கள் கடவுளுக்காக
வாழ்ந்தவர்கள். விண்ணக வீட்டில் வாழ்கிறவர்கள். நமக்காக
இடைவிடாமல் கடவுளிடம் மன்றாடுகிறவர்கள். நாம் புனிதர்கள்
மூலம் கடவுளிடம் வேண்டுகிறோம். இவர்கள் நம்
விண்ணப்பத்திற்கு ஒரு பாலமாக, ஒரு இணைக் கருவியாகத்
திகழ்கிறார்கள்.
திருத்தந்தை 23-ஆம் யோவான் "கத்தோலிக்க மரபின்படி
புனிதர்களுக்குக் காட்டும் வணக்கம் வெறும் மரியாதை
மட்டுமன்று; அல்லது வேளா வேளைகளில் எழுப்பும் சிறு சிறு
மன்றாட்டு மட்டுமன்று; ஆழ்ந்த அடிப்படையிலமைந்த ஞான
உறவாகும். அவர்கள் நமக்குத் தந்துள்ள விலைமதிக்கப் பெறாத
முன்மாதிரிகையும் பாடமும் நமக்கு மகிழ்ச்சியூட்டும்
ஊக்குவிக்கும் உதவிகளாகும்" என்று கூறுகிறார்.
புனிதர்களுக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய வணக்கம்
அவர்களுடைய புனிதத்துவமான வாழ்வு முறையைப் பின்பற்றுவதே.
புனிதர்கள் அனைவரும் நாம் எவ்வாறு கடவுளின் விருப்பப்படி
வாழ வேண்டும் எனக் கற்றுத் தருகிறார்கள்.
புனிதர்களிடம் ஏன் மன்றாட வேண்டும்?
மனிதர்களால் எல்லாம் சாத்தியமில்லை. லூக்கா எழுதிய
நற்செய்தி 5:17-26-இல் முடக்குவாதமுற்ற ஒருவரைக்
குணமாக்கக் நான்குபேர் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து
அவரைக் கட்டிலோடு இயேசுவுக்குமுன் இறக்கி அவனைக் குணமடையச்
செய்ததாக வாசிக்கிறோம். அந்த நால்வரின் விசுவாசத்தால் அவன்
குணம் பெற்றான். அந்த நான்கு நபர்கள் முடக்குவாதமுற்றவன்
குணம்பெற உதவியாக இருந்தார்கள். அதேபோல் நம்முடைய இயலாத
நிலையில் புனிதர்கள் நமக்காக இறைவனிடம் மன்றாடுவார்கள்.
மேலும் புனிதர்களின் பரிந்துரையை நாம் மேலான முறையில்
விரும்ப வேண்டும். ஏனெனில் நாம் நமது மன்றாட்டினால்
பெறமுடியாத நன்மைகளை அவர்களின் மன்றாட்டின் பயனாகப்
பெறலாம். இதனால்தான் திருத்தொண்டர், குருத்துவ, ஆயர்
திருநிலைப்பாடு மற்றும் துறவறசபையினரின் நித்திய
வார்த்தைப்பாடு நடைபெறும் போதும் பாஸ்கா திருவிழிப்பு
ஞாயிறன்றும் புனிதர்களின் மன்றாட்டு மாலை முக்கிய இடம்
பெறுகிறது.
திருச்சபை ஏன் புனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது
என்ற கேள்விக்குப் பதிலாக, புனிதர்களும் திருச்சபையின்
அங்கத்தினர்கள். நம் குடும்பத்தில் ஒருவரின் வெற்றி
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அதேபோல் கிறிஸ்தவத் திருச்சபை என்ற நம் குடும்பத்தில் பலர்
புனிதர்களாக வாழ்ந்து இறந்திருக்கிறார்கள். அவர்களுடன்
நாமும் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடுவதுதானேச் சிறந்தது.
அதற்காகத் திருச்சபை நமக்குத் தரும் ஒரு அரியச்
சந்தர்ப்பம்தான் இப்பெருவிழா.
இப்பெருவிழாவின் முக்கிய நோக்கம் புனிதர்களை
மகிழ்ச்சிப்படுத்துவதோ, பெருமைப்படுத்துவதோ அல்ல. மாறாக,
நாமும் இவர்களைப் போலப் புனித நிலைக்கு உயர்த்தப்பட,
இவர்களைப் போல வாழத் திருச்சபை அறிவுறுத்துகிறது. புனித
வாழ்வு வாழ்ந்தவர்கள் ஏராளம் ஏராளம். புனிதர்கள் பட்டம்
பெற்றவர்கள் மட்டுமல்ல; எண்ண முடியாத வேறு நீதிமான்களையும்
நாம் காண்கிறோம். அவர்கள் கடவுளையும் அவருடையச்
செம்மறியாகிய இயேசுவையும் புகழ்கிறார்கள். புனிதர்கள்
எத்தனையோ பேர் திருச்சபைப் பட்டியலில் இடம்பெறவில்லை.
ஆனால் கடவுளின் பட்டியலில் அவர்கள் விடுபடவில்லை. இவ்வாறு
திருச்சபையின் பட்டியலில் இடம்பெற்ற, இடம்பெறாத அனைத்துப்
புனிதர்களையும் நினைவு கூர்ந்து கொண்டாடும் இத்திருநாளில்
நாமும் கடவுளின் பட்டியலில் இடம்பெற்று விண்ணக வாழ்வைச்
சுவைக்கப் புனிதமிக்க வாழ்வு வாழ்ந்து, வரும் தலைமுறைக்கு
வழிகாட்டிகளாக வாழ்வோம்.
நாம் விசுவாசப் பிரமாணத்தில் புனிதர்களுடையச் சமூதிதப்
பிரயோசனத்தை விசுவசிக்கிறேன் என்று அறிக்கையிடும்போது,
விண்ணக எருசலேமை நினைவு கூர்ந்து அவ்விடம் நோக்கிப் பயணம்
செய்ய நம் வாழ்வை ஆயத்தமாக்குகிறோம். அவர்களுடைய பெயரை
நமக்குச் சூட்டியிருக்கிறோம். அப்புனிதரைச் சந்தித்து
நாமும் அவரைப் போல் வாழ முயற்சிப்போம்.
நாம் அனைவரும் பயணிகள். விண்ணகத்தை நோக்கியுள்ளப்
பயணத்தில் நாம் புனிதர்களாக மாற முயற்சி எடுப்போம்.
முயற்சிகள் தவறலாம். ஆனால் முயற்சி செய்யத் தவறாதே என்ற
விருதுவாக்கோடு அனைத்துப் புனிதர்களிடம் இன்று மன்றாடிப்
புனித நிலைக்கு நம்மை மாற்றிக் கொள்ள முயற்சி எடுப்போம்.
மனிதனாகப் பிறந்தோம். புனிதனாக வாழ்ந்து சாவோம்.
மனிதர்களாக இவ்வுலகிற்கு வந்தோம், புனிதர்களாக வாழ்ந்து
விண்ணகத்திற்குச் செல்வோம்.
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
அனைத்து தூயவர்கள் (நவம்பர் 1)
"தனக்காகவும் பிறருக்காகவும் வாழ்கிறவன் தான் மனிதன்; பிறருக்காகவும்
கடவுளுக்காகவும் மட்டும் வாழ்கிறவன் புனிதன்". நாம் ஒவ்வொருவரும்
புனிதர்களாக வாழ, இன்றைய நாளில் இறைவன் நம்மை அழைக்கிறார்.
புனிதர்கள் யார்? புனிதர்கள் கடவுளா? புனிதர்களை நாம் வழிபடுகின்றோமா?
வணங்குகின்றோமா? புனிதர்களிடம் நாம் மன்றாட வேண்டுமா? ஏன்,
நமது தாய்த் திருச்சபை புனிதர்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கிறது? இவ்வாறான நம்முடைய, மற்றும் பிற சபையைச்
சார்ந்தவர்களுடைய பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் இன்றைய
பெருவிழா நமக்கு விளக்கம் தருகிறது.
புனிதர்கள் என்பவர்கள் இவ்வுலகில் இறைவனுக்கு ஏற்புடையவர்களாக
விசுவாசத்தில் உறுதிகொண்டு மற்றவர்களுக்கு இறைவனைக்
காண்பித்து இன்று விண்ணக வாழ்வைச் சுவைத்துக் கொண்டிருப்பவர்கள்.
எபிரேயருக்கு எழுதியத் திருமுகம் 12:22- 23-இல் கடவுளின்
நகர் விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக் கணக்கான வானதூதர்கள்
சூழ்ந்துள்ளனர். விண்ணகத்தில் தாய்த் திருச்சபை விழா கூட்டமென
அங்கே கூடியுள்ளது என்று கூறும் இறைவார்த்தை நமக்கு இதனை
உறுதிப்படுத்துகிறது. திருச்சபையின் முதல் நூற்றாண்டுகளில்
திருச்சபையால் நினைவு கூறப்பட்ட புனிதர்கள் அனைவரும் வேதச்
சாட்சிகளே. வேதசாட்சிகளைத் தவிர ஏராளமான புனிதர்களும் மோட்சத்தில்
புனிதர்களாகப் பேரின்பப் பாக்கியம் அனுபவித்து வருகிறார்கள்.
புனிதர்களாக யாரும் பிறப்பதில்லை. மனிதர்களாகப் பிறந்து
புனித நிலைக்குத் தங்களையே மாற்றிக் கொண்டவர்கள்தான் புனிதர்கள்.
இவர்கள் தங்கள் வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்து, கிறிஸ்தவ
விசுவாசத்தில் ஊன்றி நின்று, ஒரு எடுத்துக்காட்டான வாழ்வு
வாழ்ந்தவர்கள். புனிதர்கள் தவறு செய்தவர்கள் தான், ஆனால்
உணர்ந்து திருந்தியவர்கள். ஒரேயடியாக வீழ்ந்துவிடவில்லை,
வீழ்ந்தாலும் எழுந்தவர்கள்.
கி.பி. 153-ஆம் ஆண்டு ஆயர் பொலிக்கார்ப் என்பவர் மறைசாட்சி
முடி பெற்றார். இதை வானகப் பிறப்பு நாளாகத் தொடக்கக்
கிறிஸ்தவர்கள் கொண்டாடினர். நமக்கு முன்சென்ற இவர்களின் வானகப்
பிறப்பு நாளைக் கொண்டாடும்போது நாமும் சாட்சி பகர நம்மையேத்
தயாரித்துக் கொள்கிறோம்.
பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியாகக் கி.பி. 387-ஆம் ஆண்டு
நிசயாவில் இரண்டாவது பொதுச்சங்கம் கூட்டப்பட்டது. இதில்
புனித உருவங்களை நாம் பார்க்கும்போது இவைகள் எந்த ஆட்களைக்
குறிக்கின்றனவோ அவர்களை நினைவு படுத்துகின்றன என்றும் அவர்களை
நினைத்துக்கொள்வதனால், அவர்களைப் பின்பற்ற முயலுகிறோம்.
அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம் என்றும் விளக்கம்
கொடுக்கப்பட்டது.
கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலேயே நவம்பர் ஒன்றாம் தேதி அனைத்துப்
புனிதர்கள் பெருவிழாக் கொண்டாடப்பட்டது. குறிப்பாகப்
பிரான்சு, இங்கிலாந்து நாடுகளில். கி.பி. 9-ஆம்
நூற்றாண்டில் இத்திருவிழாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து
மற்ற பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. கி.பி. 10-ஆம்
நூற்றாண்டில் உரோமாபுரியில் இரவு செபத்தோடு உபவாசமிருந்து
கொண்டாடப்பட்டது. இவ்வாறாகத் திருச்சபை வரலாற்றில் இப்பெருவிழா
முக்கிய இடம் பெற்றது. உலகில் உள்ள எல்லாருமே கடவுளின் சாயலாகப்
படைக்கப்- பட்டவர்கள். கடவுளின் பண்பைப் பெற்றுள்ள நாம் எந்தச்
சூழ்நிலையிலும் நன்மையையேச் செய்திட அழைக்கப்பட்டுள்ளோம்.
இவ்வழைத்தலை ஏற்று வாழும்போது ஒருவர் புனிதராகிறார்.
புனிதர்கள் கடவுளா?
இல்லை. புனிதர்கள் கடவுள் இல்லை. கடவுள் முழுமை யானவர்,
அனைத்தையும் படைத்தவர் கடவுள். அனைத்தையும் கடந்து உள்
நிற்பவர். ஆனால் புனிதர்கள் கடவுளால் படைக்கப்பட்ட சாதாரண
மனிதர்கள். தங்கள் வாழ்வால் புனித நிலைக்கு
உயர்த்தப்பட்டவர்கள். அவர்கள் கடவுளோடு கொண்ட நெருங்கிய
உறவால் அந்த முழுமையை நோக்கிப் பயணம் செய்தவர்கள்.
கடவுளுக்காகக் கடவுளின் திட்டப்படி இவ்வுலகில்
வாழ்ந்தவர்கள். அதற்குப் பரிசாகக் கடவுளை முகமுகமாய்த்
தரிசிக்கும் வரத்தைப் பெற்று விண்ணகத்தில் நமக்காகப்
பரிந்துப் பேசுகின்றவர்கள்.
கிறிஸ்தவர்களாகிய நாம், புனிதர்கள் யார்? கடவுள் யார்?
என்ற வேறுபாட்டைத் தெரிந்து கொள்வது அவசியம். பலர் ஆதித்
திருச்சபையில் வேதகலாபனை நேரத்தில் விசுவாசத்தைக்
காப்பாற்ற பல வேதனைகள் பல கஷ்டங்களை எதிர்கொண்டார்கள், ஏன்
தங்கள் உயிரையேத் தியாகம் செய்தார்கள். இவர்களை
மறைசாட்சிகள் என்றழைக்கிறோம். பின்பு, பலர் சாதாரண மரணம்
அடைந்தாலும் தங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு
எடுத்துக்காட்டான விசுவாச வாழ்வு வாழ்ந்ததால் இவர்களைப்
புனிதர்கள் என்றழைக்கிறோம். ஆதலால் புனிதர்கள் கடவுள்
அல்லர், கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் என்ற தெளிவானச்
சிந்தனை கொள்வோம்.
புனிதர்களுக்கு நாம் செலுத்துவது வழிபாடா? வணக்கமா?
புனிதர்களை நாம் வழிபடுவதில்லை. ஆராதிப்பதில்லை.
புனிதர்களுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம். வழிபாடு
கடவுளுக்கு மட்டும் உரித்தானது.
* மரியாதை - நாம் நம் பெரியவர்களுக்குச் செலுத்துவது
* வணக்கம் - நாம் புனிதர்களுக்குச் செலுத்துவது
* மகத்தான வணக்கம் - நாம் புனித கன்னி மரியாள், இறைவனின்
தாய்க்குச் செலுத்துவது
* ஆராதனை வழிபாடு - நாம் கடவுளுக்குச் செலுத்துவது
எந்தப் புனிதரும் தங்களைக் கடவுள் நிலைக்கு
உயர்த்தியதில்லை. கடவுளுக்குச் சமமாக நினைத்ததில்லை.
நான்தான் கடவுள் என்று கூறியதுமில்லை. இவர்கள் கடவுளுக்காக
வாழ்ந்தவர்கள். விண்ணக வீட்டில் வாழ்கிறவர்கள். நமக்காக
இடைவிடாமல் கடவுளிடம் மன்றாடுகிறவர்கள். நாம் புனிதர்கள்
மூலம் கடவுளிடம் வேண்டுகிறோம். இவர்கள் நம்
விண்ணப்பத்திற்கு ஒரு பாலமாக, ஒரு இணைக் கருவியாகத்
திகழ்கிறார்கள்.
திருத்தந்தை 23-ஆம் யோவான் "கத்தோலிக்க மரபின்படி
புனிதர்களுக்குக் காட்டும் வணக்கம் வெறும் மரியாதை
மட்டுமன்று; அல்லது வேளா வேளைகளில் எழுப்பும் சிறு சிறு
மன்றாட்டு மட்டுமன்று; ஆழ்ந்த அடிப்படையிலமைந்த ஞான
உறவாகும். அவர்கள் நமக்குத் தந்துள்ள விலைமதிக்கப் பெறாத
முன்மாதிரிகையும் பாடமும் நமக்கு மகிழ்ச்சியூட்டும்
ஊக்குவிக்கும் உதவிகளாகும்" என்று கூறுகிறார்.
புனிதர்களுக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய வணக்கம்
அவர்களுடைய புனிதத்துவமான வாழ்வு முறையைப் பின்பற்றுவதே.
புனிதர்கள் அனைவரும் நாம் எவ்வாறு கடவுளின் விருப்பப்படி
வாழ வேண்டும் எனக் கற்றுத் தருகிறார்கள்.
புனிதர்களிடம் ஏன் மன்றாட வேண்டும்?
மனிதர்களால் எல்லாம் சாத்தியமில்லை. லூக்கா எழுதிய
நற்செய்தி 5:17-26-இல் முடக்குவாதமுற்ற ஒருவரைக்
குணமாக்கக் நான்குபேர் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து
அவரைக் கட்டிலோடு இயேசுவுக்குமுன் இறக்கி அவனைக் குணமடையச்
செய்ததாக வாசிக்கிறோம். அந்த நால்வரின் விசுவாசத்தால் அவன்
குணம் பெற்றான். அந்த நான்கு நபர்கள் முடக்குவாதமுற்றவன்
குணம்பெற உதவியாக இருந்தார்கள். அதேபோல் நம்முடைய இயலாத
நிலையில் புனிதர்கள் நமக்காக இறைவனிடம் மன்றாடுவார்கள்.
மேலும் புனிதர்களின் பரிந்துரையை நாம் மேலான முறையில்
விரும்ப வேண்டும். ஏனெனில் நாம் நமது மன்றாட்டினால்
பெறமுடியாத நன்மைகளை அவர்களின் மன்றாட்டின் பயனாகப்
பெறலாம். இதனால்தான் திருத்தொண்டர், குருத்துவ, ஆயர்
திருநிலைப்பாடு மற்றும் துறவறசபையினரின் நித்திய
வார்த்தைப்பாடு நடைபெறும் போதும் பாஸ்கா திருவிழிப்பு
ஞாயிறன்றும் புனிதர்களின் மன்றாட்டு மாலை முக்கிய இடம்
பெறுகிறது.
திருச்சபை ஏன் புனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது
என்ற கேள்விக்குப் பதிலாக, புனிதர்களும் திருச்சபையின்
அங்கத்தினர்கள். நம் குடும்பத்தில் ஒருவரின் வெற்றி
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அதேபோல் கிறிஸ்தவத் திருச்சபை என்ற நம் குடும்பத்தில் பலர்
புனிதர்களாக வாழ்ந்து இறந்திருக்கிறார்கள். அவர்களுடன்
நாமும் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடுவதுதானேச் சிறந்தது.
அதற்காகத் திருச்சபை நமக்குத் தரும் ஒரு அரியச்
சந்தர்ப்பம்தான் இப்பெருவிழா.
இப்பெருவிழாவின் முக்கிய நோக்கம் புனிதர்களை
மகிழ்ச்சிப்படுத்துவதோ, பெருமைப்படுத்துவதோ அல்ல. மாறாக,
நாமும் இவர்களைப் போலப் புனித நிலைக்கு உயர்த்தப்பட,
இவர்களைப் போல வாழத் திருச்சபை அறிவுறுத்துகிறது. புனித
வாழ்வு வாழ்ந்தவர்கள் ஏராளம் ஏராளம். புனிதர்கள் பட்டம்
பெற்றவர்கள் மட்டுமல்ல; எண்ண முடியாத வேறு நீதிமான்களையும்
நாம் காண்கிறோம். அவர்கள் கடவுளையும் அவருடையச்
செம்மறியாகிய இயேசுவையும் புகழ்கிறார்கள். புனிதர்கள்
எத்தனையோ பேர் திருச்சபைப் பட்டியலில் இடம்பெறவில்லை.
ஆனால் கடவுளின் பட்டியலில் அவர்கள் விடுபடவில்லை. இவ்வாறு
திருச்சபையின் பட்டியலில் இடம்பெற்ற, இடம்பெறாத அனைத்துப்
புனிதர்களையும் நினைவு கூர்ந்து கொண்டாடும் இத்திருநாளில்
நாமும் கடவுளின் பட்டியலில் இடம்பெற்று விண்ணக வாழ்வைச்
சுவைக்கப் புனிதமிக்க வாழ்வு வாழ்ந்து, வரும் தலைமுறைக்கு
வழிகாட்டிகளாக வாழ்வோம்.
நாம் விசுவாசப் பிரமாணத்தில் புனிதர்களுடையச் சமூதிதப்
பிரயோசனத்தை விசுவசிக்கிறேன் என்று அறிக்கையிடும்போது,
விண்ணக எருசலேமை நினைவு கூர்ந்து அவ்விடம் நோக்கிப் பயணம்
செய்ய நம் வாழ்வை ஆயத்தமாக்குகிறோம். அவர்களுடைய பெயரை
நமக்குச் சூட்டியிருக்கிறோம். அப்புனிதரைச் சந்தித்து
நாமும் அவரைப் போல் வாழ முயற்சிப்போம்.
நாம் அனைவரும் பயணிகள். விண்ணகத்தை நோக்கியுள்ளப்
பயணத்தில் நாம் புனிதர்களாக மாற முயற்சி எடுப்போம்.
முயற்சிகள் தவறலாம். ஆனால் முயற்சி செய்யத் தவறாதே என்ற
விருதுவாக்கோடு அனைத்துப் புனிதர்களிடம் இன்று மன்றாடிப்
புனித நிலைக்கு நம்மை மாற்றிக் கொள்ள முயற்சி எடுப்போம்.
மனிதனாகப் பிறந்தோம். புனிதனாக வாழ்ந்து சாவோம்.
மனிதர்களாக இவ்வுலகிற்கு வந்தோம், புனிதர்களாக வாழ்ந்து
விண்ணகத்திற்குச் செல்வோம்.
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
அனைத்துப் புனிதர் (நவம்பர் -1)
முதல் வாசகம் : திவெ. 7 : 2-4. 9-14
திவெ 7-ஆம் அதி. புதிய இஸ்ரயேல் பற்றிக் கூறுகிறது. இஸ்ரயேல்
மக்களின் 12 குலங்களிலிருந்து கணக்கிலடங்காத மக்கள்
முத்திரையிடப் பட்டிருக்கின்றனர் (7:4-8). இவர்கள் அழிவின்
மீதும் சாவின் மீதும் வெற்றி கொண்டவர்கள். (முத்திரையிடப்பட்டோர்
ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் என்பது
முழுமையையும்-12x12x1000 - அதே வேளையிலே எண்ணிலடங்காத ஒரு
பெரிய தொகையையும் கட்டும்). அனைத்துப் புனிதர் திருநாளன்று,
இவ்வாசகம், நாம் அனைவரும் விண்ணகத்திற்கு உரியவர்கள்; புனிதவாழ்வு
வாழ வேண்டும் என்று நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
நாம் முத்திரை பதிக்கப்பெற்றுள்ளோம்
முத்திரை ஆனது நாம் இறைவனுக்குச் சொந்தமானவர்கள் என்ற உரிமையை
அளிக்கிறது. சாத்தானும் சாவும் நம்மைத் தொட முடியாது என்பதைச்
சுட்டுகிறது. நாம் பெற்ற முத்திரை "பிதா சுதன் தூய ஆவியாரில்"
நாம் பெற்ற திருமுழுக்கே எனலாம். "உன் வழிமரபினர் மீது என்
ஆவியைப் பொழிவேன். உன் வழித்தோன்றல்களுக்கு என் ஆசியை வழங்குவேன்."
"நான் ஆண்டவருக்கு உரியவன்" என்பான் ஒருவன்...
"ஆண்டவருக்குச் சொந்தம்" என்று இன்னொருவன் தன் கையில் எழுதி,
"இஸ்ரயேல்" என்று பெயரிட்டுக்கொள்வான்" (எசா 44: 3-5) என்பது
அன்று இறைவன் இஸ்ரயேலருக்குத் தந்த ஆசிமொழி; இன்று அது நம்
திருமுழுக்கில் நிறைவேறுகிறது. கடவுளாலே குறித்து வைக்கப்பட்ட
மக்கள் நாம், தேர்ந்தெடுக்கப்பட்ட இனம். இத்தகைய ஒரு
பேராசியை இறைவன் நமக்குத் தந்தமைக்கு நாம் நன்றி
செலுத்துவோம். முத்திரை குலையாது இறைவனுக்குகந்த வாழ்வு
வாழ முயற்சிகள் எடுப்போம். முத்திரை பதிக்கப்பட்டு
விண்ணில் உள்ள நம் முன்னோருக்கும், முத்திரை பதிக்கப்பட்டு
மண்ணில் உள்ள நமக்கும் உள்ள உறவை வளர்ப்போம். "புனிதர்களுடைய
உறவை விசுவசிக்கிறேன்."
முத்திரை வாழ்வு பொறுப்புள்ள வாழ்வு
விண்ணிலிருக்கும் நம் முன்னோர் தம் முத்திரையைப் பாதுகாக்க
இரத்தம் சிந்தவும் தயங்கவில்லை (22: 14). உரிமையிருக்குமிடத்தில்
கடமையும் உண்டு. இறைவனின் பிள்ளைகள் என்ற உரிமைப்பேற்றைப்
பெற்றவர்கள் அவ்இறைவனின் பிள்ளைகளுக்குரிய கடமைகளை
நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். "ஆகவே
என் வலுவின்மை யிலும் இகழ்ச்சியிலும், இடரிலும் இன்னலிலும்
நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன்.
ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்"
(2 கொரி 12:10) என்பார் பவுல். அதே பவுல் "பன்முறை
சிறையில் அடைபட்டேன்... தடியால் அடிபட்டேன்... ஒருமுறை கல்லெறிபட்டேன்...
மூன்று முறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும்
ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில்
ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும்
இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள்..." (2
கொரி 11: 23-29) என்று கூறுவதையும் காண்க. ஆதிக் கிறிஸ்தவர்களும்
சரி, நம் நாட்டுப் புனிதர்களும் சரி (சவேரியார், அருளானந்தர்).
இக்காலத்திய கிறிஸ்தவர்களும் சரி (மாக்சிமிலியான் கோல்பே,
மிக்கேல் புரோ) தாம் பெற்ற இறைமுத்திரையைக் காக்க எத்துணைத்
துயரங்களை அனுபவித்தனர்? கிறிஸ்துவ வாழ்வு சிலுவை வாழ்வு
என்பதை உணர்கிறோமா!
முத்திரை வாழ்வு மகிழ்ச்சி வாழ்வு
விண்ணவர்கள் இறைவனைப் "போற்றி, போற்றி"யென்று பாடுகின்றனர்
(7:10-12). தம்மை மீட்ட இறைவனை ஏத்துகின்றனர். அவருடைய பலத்தையும்,
வல்லமையையும், மாட்சியையும் புகழ்கின்றனர். என்றும் மகிழ்ச்சி,
எங்கும் மகிழ்ச்சி, எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஆம், நாமும்
இத்தகைய மகிழ்ச்சி வாழ்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம்.
நம் வாழ்நாளிலும் நாம் நல்வாழ்வு வாழ்ந்து, நாம் மகிழ்ச்சியாயிருந்து,
அம்மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் மகிழ்ச்சியின்
திருத்தூதர்களாக மாற வேண்டும்.
போற்றியும் மகிமையும் என்றென்றும் கடவுளுக்கே.
இரண்டாம் வாசகம் : 1யோ 3:1-3
கிறிஸ்துவ வாழ்வு நம்பிக்கை வாழ்வு
இறைமக்கள் அனைவரும் புனிதராகும்படி அழைக்கப்பட்டவர்கள்.
"கிறிஸ்துவின் பெயரை எங்கும் போற்றித் தொழுகின்ற அனைவரோடும்
கூடப் புனிதராயிருக்கும்படி அழைக்கப்பட்ட உங்களுக்கு";
"ஆண்டவ ராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தராக்கப்பட்ட
உங்களுக்கு" (1கொரி 1:2) என்ற பவுலின் வாக்குகள் கிறிஸ்தவ
அழைப்பின் மேன்மையைச் சுட்டுகின்றன. "கிறிஸ்தவர்கள் இறைமக்கள்
சமுதாயத்தின் உறுப்பினர்; கடவுளுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள்"
(எபே 2: 19; காண் 1 தெச 3:13) என்று கிறிஸ்தவர்களை இறைக்
குடும்பத்தின் அங்கமாகக் காண்கிறார் பவுல். அனைவரும் இந்த
இலட்சிய வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், ஒருசிலரே
அதை அடைந்ததாகத் திருச்சபை வெளிப்படையாகப் பிரகடனம்
செய்துள்ளது. எனினும் ஏராளமான மக்கள் இறைவனது திருச்சித்தத்திற்கு
அமைந்து, அவரது கட்டளைகளை அனுசரிப்பதிலே தியாகங்கள் பல
புரிந்து, தம் கடமைகளைக் கருத்துடன் செய்து, எவரும் அறியாத
வகையில், புனிதமான வாழ்வு வாழ்ந்துள்ளனர். இன்று விண்ணிலே
வீற்றிருக்கும் இத்தகைய மண்ணவர் அனைவர்க்கும் விழா: நாமும்
ஒருநாள் இவர்கள் கூட்டத்திலே சேருவோம் என்ற நம்பிக்கை விழா;
அனைத்துப் புனிதர்களின் விழா.
கிறிஸ்துவ வாழ்வு கடவுள் பிள்ளையின் வாழ்வு
இயேசுவின் இறுதி மன்றாட்டுக்களில் ஒன்று, "நீதியுள்ள
தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை
அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும்
அறிந்துகொண்டார்கள்" என்பதாகும் (யோ 17 : 25). நாம்
இறைவனால் அவருக்காகவே படைக்கப் பட்டோம். நாம் அவரது
சாயலாகப் படைக்கப்பட்டோம் (தொநூ. 1: 26). கிறிஸ்து வழியாக
இறைவனுடன் என்றென்றும் வாழ்வதே எம்வாழ்வின் குறிக்கோள்.
"நாம் பிள்ளைகளாயின், உரிமையாளர்களுமாய் இருக்கிறோம்; ஆம்,
கடவுளின் செல்வத்திற்கு உரிமையாளர்கள்: கிறிஸ்துவோடு உடன்
உரிமையாளர்கள் (உரோ. 8 : 17). நாம் கடவுளின் மக்கள் என
அழைக்கப்படுவது மட்டுமன்று; நாம் உண்மையிலேயே கடவுளின்
மக்களாகவே இருக்கிறோம் என்கிறார் யோவான். தன்
தந்தையிடமிருந்து வாழ்வைப் பெற்றுக்கொண்ட பிள்ளையை, இவன்
இத்தந்தையின் மகன் என்று அடையாளம் கண்டுகொள்ளுகிறோம்.
நாமும் திருமுழுக்கு வேளையில், கிறிஸ்து வழியாகத் தெய்வீக
வாழ்வைப் பெற்றுக் கொண்டதால் இறைமக்களாக இருக்கிறோம். இதை
முழுமையாக வாழ்ந்தால் இயேசுவுடன் விண்ணிலே என்றும்
வீற்றிருப்போம். "இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா;
கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா. ஏனெனில் அரியணை
நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்;
வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும்.
கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்"
(திவெ.7: 16-17; காண் எசா. 49:10; 25:8).
கிறிஸ்துவ வாழ்வு புனித வாழ்வு
நமதாண்டவரின் மரணத்துடன் அவரது வெளித்தோற்ற வாழ்வு
முடிந்து, உயிர்ப்பிலே அவரது மகிமை வாழ்வு தொடங்கியது. இது
முடிவற்ற வாழ்வு. பரலோக மட்டும் பரவசமான பவுல் தான்
அனுபவித்த பரலோக பேரின்பத்தை வருணிக்கச் சொற்களைத் தேடித்
தடுமாறுகிறார் (காண் 2 கொரி 12:1-41கொரி 13: 12-13).
இறைவனை உள்ளது உள்ளபடியே அறிந்து ஆராதிப்பதே விண்ணக
வாழ்வு, இத்தெய்வீகப் பிரசன்னத்தை இழந்து விடுவோமோ என்ற
அச்சம் அங்கில்லை. இவ்வாழ்வைப் பெற நாமும் இயேசுவைப் போல்
குற்றமற்றவர்களாய் இருக்க வேண்டும் (3:3). "தூய உள்ளத்தோர்
பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" என்பது
இயேசுவின் வாக்கு. இயேசுவைப் பின்பற்றி, அவரைப் போல்
வாழ்ந்த புனிதர்களே இன்று விண்ணிலே அவர் செல்லுமிடமெல்லாம்
சென்று அவர் புகழ் பாடுகின்றனர் (திவெ. 7:10).
இப்புனிதர்களின் அடிச்சுவட்டில் நடக்க நான் என்ன செய்ய
வேண்டும்?
நாம் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுகிறோம்: அவருடைய
மக்களாகவே இருக்கிறோம்.
நற்செய்தி: மத் 5:1-12
மலைப்பொழிவின் (மத் 5-7) தொடக்கமான "இறைப்பேறுகள்"
(5:1-12) இன்றைய வாசகமாயமைகின்றன. இறைப்பேறுகளுக்கெல்லாம்
முதலும் இடையும் கடையுமான இயேசுவையே இக்கூற்றுகள்
படமெடுத்துக் காட்டுகின்றன எனலாம். புனிதர் எனப்படுவோர்
இயேசுவை இவ்வுலகில் முழுவதும் பின்பற்றிய நிலையிலே,
இயேசுவோடு மறுவுலகில் கலந்துவிட்டனர். ஆதலின் அனைத்துப்
புனிதர் விழாவன்று இவ்வாசகம் பொருந்தி அமைகிறது.
இவ்வுலகிலே நாமும் புனிதத்திற்காக அழைக்கப்பட்டுள்ளோம் (I
பேது 2: 9) என்ற முறையிலே இவ்வாசகம் நமது வாழ்விற்குச்
சவாலாயமைகிறது.
தம்மைப் பொறுத்தமட்டில் இயேசு புனிதர்
இறைவனின் திருமகன் இயேசு. "அவர் கட்புலனாகாத கடவுளது
சாயல்" (கொலோ 1:15). எனவே அவர் தூய உள்ளத்தவர் (5:8).
"பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்" (எசா.6: 3; திவெ 4 :
8) என விண்ணவரால் போற்றப்படுவர். அலகையை, அதன் சோதனைகளை
எதிர்த்து நின்று, ஆண்டவராகிய கடவுளை எப்போதும் அணுகிச்
செல்பவர் (யாக். 48). "என்னை அனுப்பியவரின் திருவுளத்தை
நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே
என் உணவு" (யோ 4:34) என்ற முறையில் தம் குறிக்கோள் தவறாது
வாழ்ந்தவர். ஆம், இயேசு தூய உள்ளத்தினர். புனிதர்
எனப்படுவோர் இயேசுவின் இத்தூய்மையிலே பங்குபெற்றவர்கள்.
"தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர் அவர்கள் கடவுளைக் காண்பர்"
(5:8) என்பது இப்போது நம்பால் உண்மைப்படுமா? 370 மனிதன்
என்ற முறையிலே இயேசு நம்மோடு நாமாக வாழ்கிறார். அவரது எளிய
வாழ்வும் (5 : 3) துயர்மிக்க வாழ்வும் (5: 4) அவரை ஒரு
சாதாரண மனிதனாகவே நமக்குக் காட்டுகிறது. "நரிகளுக்குப்
பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும்
உண்டு, மானிடமகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை" (லூக் 9:
58) என்பது அவரது ஏழ்மை வாழ்வின் சுருக்கக் கதை.
"எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆக
வேண்டியதாயிற்று" (எபி 2: 17).
பிறரைப் பொறுத்தமட்டில் இயேசு புனிதர்
ஏழ்மையினின்று பிறப்பது சாந்தம் (5: 5). இச்சாந்த குணம்
தன்னைச் சார்ந்த குணம் என்பதோடு கூட, பிறரை அடுத்தது;
இளகிய மனத்தோடு பழகுவது என்ற பொருள்ளது. இயேசுவே "நான்
கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்" (மத் 11 : 29) என்பார்.
இரக்க குணமும் (5 : 7) ஏழ்மையின் வெளிப்பாடே. ஏழைகள் தான்
ஏழையைக் கண்டு இரங்க முடியும். ஏனெனில், ஏழ்மைத் தன்மையின்
இழிவை உணர்ந்தவர்கள் அவர்கள். துன்புறுவோர் மீது இயேசு
மனம் இரங்கியதாகப் பல்முறை பு.ஏ. இல் காட்டப்பட்டுள்ளது
(காண் : மாற் 7: 34; லூக் 7 : 13). அடுத்து, இறைவனின்
நீதியை உலகிற்கு வெளிப்படுத்தவே இயேசு வந்தார். இவ்வுலகில்
வாழ்ந்தபோது, நீதியின்மேல் "பசிதாகமுள்ளவராக" வாழ்ந்தவர்
(5:6). நீதிக்காகவே துன்புறுத்தப்பட்டு உயிர் நீத்தார் (5:
10). "என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும்
அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே எனது உணவு" (யோ
4:34) என்று இயேசு கூறுவதன் மூலம் நீதிக்கடவுளாகிய தம்
தந்தையின் (காண் உபா 10 : 18) வெளிப்பாடே இயேசு என்பது
புலனாகின்றது. மேலும் ஓய்வு நாள் சட்டத்தை எதிர்த்து,
நோயாளிகளுக்கு உதவி புரிந்ததிலும் இயேசுவின் நீதி வேட்கை
தெற்றெனப் புலப்படுகிறது. இறுதியாக இயேசுவே சமாதானம் தரும்
கடவுள் (5:9). அவரே தந்தையோடு, தம்மோடு, மக்களோடு
நிறையுறவு கொண்டவர். எனவே அவரே சமாதானம். "அமைதியை
உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு
அளிக்கிறேன்" (யோ 14:27) என்று அவர் ஒருவரே சொல்லக்கூடும்.
"கிறிஸ்துவே நம் சமாதானம், அவரே யூத இனத்தையும் பிற
இனத்தையும் ஒன்றாய் இணைத்தார். தடைச்சுவரென நின்ற
பகைமையைத் தம் ஊனுடலில் தகர்த்தெறிந்தார். கிறிஸ்துவின்
சாந்தம், இரக்கம், அவர் நீதியின் மேல் கொண்ட பசிதாகம்,
அவரது சமாதானப் பணி, நம் வாழ்வுக்கு உந்துதலும் ஊக்கமும்
தர வேண்டுவோம்.