ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

பாஸ்கா 3ஆம் வாரம் - ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)
ஆண்டவரைக் கண்டு கொள்ள வந்திருக்கின்ற அன்பு நெஞ்சங்களே!
திபா 16: 1-2,5. 7-8. 9-10. 11 (பல்லவி: 11a)
பல்லவி: ஆண்டவரே, வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்.

 

எம்மாவுஸ் செல்லும் வழியில் சீடர்களின் மன இருளை அகற்றிய இயேசு இன்று நம் மன கலக்கங்களை அகற்ற பாஸ்கா காலம் 3 வது ஞாயிறு திருப்பலி வழியாக அழைக்கின்றார்.

எம்மாவுஸ் பாதையில் நடந்து சென்ற சீடர்கள் தங்களோடு பேசிக்கொண்டு நடப்பவர் இயேசு தான் என்பதை உணராது பேசிக் கொண்டு வருகிறார்கள்;. இயேசுவோ இன்னும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியவர் போலக் காட்டிக் கொள்கிறார். சீடர்கள் மாலை நேரமாகிறது எங்களோடு தங்கும் என அக்கறையோடு கேட்கிறார்கள். இயேசுவும் தங்குகிறார்.

உணவு உண்ணும் வேளை வந்தபோது அப்பத்தை பிட்கும் போது சீடர்களின் கண்கள் திறக்கப்பட்டு இயேசுவை அடையாளம் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள்;. தங்கள் நடுவில் தங்கிய இயேசுவை கண்டபின் ஆவியின் அருட்துணை பெற்றவர்களாக அவரைக் காணாத மற்ற சீடர்களிடம் சொல்ல ஓடுகிறார்கள். அது முதல் இயேசுவைப் பற்றிய செய்தியை எல்லா இடங்களிலும் துணிவுடன் பேச ஆரம்பிக்கிறார்கள்.

அயலார் மீது அக்கறை காட்டும் போது, நாம் கூட மாலை நேரமாகிறது எங்களோடு தங்கும் என்ற சீடர்களைப் போல செயல்படுகின்றோம். இயேசுவை நம்மோடு தங்கச் சொல்லி நாம் கேட்கும் போது, அவர் நம் வீட்டில் நிச்சயமாக தங்;குவார்;. அப்படி அவர் தங்கும்போது, நிச்சயமாக நம் வீட்டு பிரச்சனைகள் யாவும் தீரும். நம் மகிழ்ச்சியோ மிகுதியாகும்.

நம் மன இருள் அகற்றி, நம் அயலார் வழியாக நம்மை சந்திக்க வரும் இயேசுவை அடையாளம் காட்டிடும் அருளை தரும் திருப்பலி இது. இந்த திருப்பலியில் ஆண்டவரே எங்களோடு தங்கும், எங்கள் மன இருள் அகற்றும் என செபிப்போம்.
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
 

1. எங்கள் வலப்பக்கத்தில் எங்களுக்குத் துணையாக இருக்கின்ற இறைவா!
திருச்சபையை ஆட்சி செய்யும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், இறைமக்கள் அனைவரின் பயணத்திலும் நீரே வலப்பக்க்ததில் துணையாக நின்று வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆள்பார்த்து தீர்ப்பிடாத எங்கள் இறைவா! நாட்டுத்தலைவர்கள்,
rq;கத்தலைவர்கள், கிராமத்துத் தலைவர்கள், குடும்பத்து தலைவர்கள் அனைவருமே ஆள்பார்த்து தீர்ப்பிடாது மக்கள் செயல்பாட்டிற்கு ஏற்ற நல்ல தீர்ப்புக்களை சொல்லி அநீதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, வறுமை இவைகளை அகற்றி சமத்துவ சமுதாயம் படைக்கும் தலைவர்களாக வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்கள் கால்கள் நடந்து செல்ல வேண்டிய பாதையை காட்டும் இறைவா!
எங்கள் கால்கள் மான் கால்களைப் போல மேடு பள்ளங்களில் பயணிக்க வழிகாட்டிடும் ஆன்மீக தந்தைக்கு, உம் அருள் வரங்கள் ஏராளமாய் கிடைக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம்மாவுஸ் சீடர்கள் மன இருள் அகற்றிய இறைவா!
இங்கே கூடி இருக்கின்ற மக்கள் மனங்களில் உள்ள கலக்கங்கள், கண்ணீரை அகற்றி, எங்களோடு தங்கி உமது உயிர்ப்பின் மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. பாதுகாக்கும் பரம் பொருளே இறைவா!
பாரமான வாழ்க்கை, நோயினால் தொல்லை, தனிமை, முதுமை, இழப்பு பிரிவு என வாடுவோரின் வாழ்க்கையை பாதுகாத்து பராமரிக்க, நீர் அவர்களோடு தங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 
மறையுரை சிந்தனைகள்
அன்றாட வாழ்க்கைப் பயணத்தில் இயேசு நம்மோடு பயணிக்கிறார். இறைவார்த்தை வழியாக நமக்கு தெம்பும் தெளிவும் தருகின்றார். அன்றாடம் நாம் இறைவார்த்தையை வாசிக்கும் போது இறைவன் நம்மோடு பேசுகின்றார். ஆனால் அவர் பேசுவதை கேட்க இயலாதவாறு நமது பிரச்சனைகள் கவலைகள் நம் கண்களை மறைத்துவிடுகிறது. "உனது மன்றாட்டு இறைவனிடம் நீ பேசும் வார்த்தை. ஆனால் விவிலியம் வாசிப்பது இறைவன் உன்னோடு பேசும் வார்த்தை என்கிறார்" புனித அகுஸ்தினார். நமது கவலைகளும் கண்ணீரும் பிரச்சனைகளும் அவர் பேசுவதை கவனிக்கவிடாது தடுத்து விடுகிறது.

அப்படியிருந்தும் தொடர்ந்து இறைவன் தன்னை நமக்கு வெளிப்படுத்துகிறார். "நான் இயேசு வாழ்ந்த காலத்தில் வாழவில்லை என வருத்தப்படவில்லை. நான் வாழ்கின்ற காலத்தில் நற்கருணை வடிவத்தில் இயேசு வாழ்ந்து கொண்டிருக்கின்றாரே என்று மகிழ்ச்சி அடைகின்றேன்" என்றார் அவிலா தெரெசாள்.

எந்தெந்த இடத்தில் தெய்வத்தன்மை தோன்றுகிறதோ அந்தந்த இடத்தில் நாம் அன்பு கொண்டு பாராட்டி தெய்வத்தை உள்ளத்தில் பற்றி உறவு கொண்டோமேயானால் அவர் உ்ள்ளத்தில ஒளிர்ந்து காட்சியளிப்பார்..அருளவும் செய்வார்..ஊதுபத்தியில் நெருப்பு பற்றிக் கொண்டால் நாம் அதை ஊதவேண்டியது இல்லை.. தானாகப் பற்றி அந்த நெருப்பு கனிந்து கொண்டேயிருப்பதைப் போல உள்ளத்தில் மற்றதெல்லாம் விட்டுவிட்டு தெய்வத்தைப் பற்றிக் கொண்டால் அவா் அதைக்கனியச் செய்து கொண்டு உள்ளும் புறமும் எப்போதும் நம்மிடையே இருந்து கொண்டு நம்மை வழிநடத்திக் கொண்டிருப்பதை அனுபவ ரீதியாக உணர முடியும்..

அவர் ஒரு அருட்சகோதரி. தனது கடமைகளை மிகச்சிறப்பாக செய்பவர். அன்றாடம் தனது செபங்களை செபிக்கத் தவறமாட்டார். மிக நேர்மையுடன் நடந்து கொள்ளும் அவரை எல்லோரும் நேசிப்பார்கள். இறைவனை நம்பி வாழும் தனக்கு இறையருளும் எந்நாளும் வழி நடத்தும் என்ற நம்பிக்கையை மனம் நிறைய வைத்திருப்பவர்.
ஒரு முறை நீண்ட தூரம் பயணம் செய்ய நேரிட்டது. கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் பேருந்தில் பயணம் செய்தார். திண்டிவனம் அருகில் இறங்க நேரிட்டது. தொடர்ந்து பயணிக்க வேண்டும் காலையில் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு கட்டாயம் செல்லவேண்டும். பேருந்து ஒன்றும் இல்லை.தனி ஆளாக அங்கே அந்த அருட்சகோதரி மட்டும் செய்வதறியாது எப்படிப் போவது என்று திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு முதியவர் வந்து "எங்கே போக வேண்டும்?" என கேட்டார். 'சென்னைக்குப் போக வேண்டும்' என்று சொன்னவுடன் ஒரு லாரியைக் காண்பித்து அதில் ஏறும்படி சொன்னார். அந்த அருட்சகோதரியும் ஏறி அமர்ந்தார். அருகில் அந்த முதியவரும் ஏறி அமர்ந்து கொண்டார். விடிந்தது. அந்த அருட்சகோதரி இறங்கவேண்டிய இடம் வந்தது. முதியவர் சகோதரி இறங்குவதற்கு உதவி செய்தார். இறங்கியபின் அருட்சகோதரி முதியவருக்கு நன்றி சொல்ல நிமிர்ந்து பார்த்தார். அங்கே அந்த முதியவர் இல்லை தன்னோடு பயணம் செய்து தன்னை பாதுகாப்புடன் அழைத்து வந்தவர் ஆண்டவர் என உணர்ந்து உளம் நெகிழ்ந்து. போனார்.

ஒவ்வொரு நாளும் ஆண்டவர் நம்மையும் இப்படி அற்புதமாக நாம் செய்யும் பணிகளுக்கு மத்தியில் பராமரிக்கின்றார்.

வழிநெடுகிலும் வாழ்க்கை நெடுகிலும் நம்மோடு பயணிக்கிறார். ஒவ்வொரு நாளும் நமது செயலுக்கு ஏற்ப நமக்கு கைமாறும் தருகின்றார்.

நாம் அஞ்சத் தேவையில்லை. அன்றாடம் திருப்பலியில் பங்கேற்கும் போதெல்லாம் அவர் நற்கருணை வழியாக நம் இதயத்துக்குள் வருகின்றார். நாம் கேட்பதை எல்லாம் தந்து வழி நடத்துகின்றார். நமது கவலைகளை கண்ணீரைத் துடைக்கின்றார். இதை பல நேரங்களில் உணராமல் வாழ்ந்திருக்கிறோம்.

நமது அன்புக்குரிய உறவுகள் வழியாக, ஆறுதல் நிறைந்த உறவுகள் வழியாக, அன்றாடம் நாம் பங்கேற்கும் திருப்பலி வழியாக தினமும் நம்மை சந்தித்து நமக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகின்றார்.

ஆண்டவர் எப்போதும் நம் கண்முன் உள்ளார். அவர் நம்மை கரம் நீட்டி அரவனைக்கின்றார். கரங்களை விரித்து அழைக்கிறார்.....

அவர் தமது சிறகுகளாலே உன்னை அரவணப்பார். அவர் தம் இறக்கைகளின் கீழ் நீர் புகலிடம் காண்பீர். அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும்.

ஒரு ஊரில் ஏழை பெண் ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு இரண்டு வயதில் ஜெனி என்ற பெண் குழந்தை ஒன்று இருந்தது. ஏழைத் தாயான அவள், கல்குவாரி ஒன்றில் கல் உடைக்கும் சித்தாளாகப் பணிபுரிந்து வந்தாள். அப்படி ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல்லும் போது ஜெனியையும் தூக்கிச் செல்வது வழக்கம். அன்றும் அப்படித்தான் காலை சுமார் மணி 10 இருக்கும். தாய் ஓரிடத்தில் கற்களை உடைத்துக் கொண்டிருக்க, ஜெனி சற்று தொலைவில் விளையாடிக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில், அருகில் வேலை செய்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் கூக்குரலிட்டனர்- "ஜெனி! அங்கே போகாதே! ஓடாதே! நில்! அங்கு வெடி இருக்கிறது... வெடித்து விடும்". திடுக்கிட்ட அந்த தாய் அலறியபடி ஜெனியிடம் ஓடினாள். ஆனால் ஜெனியோ, தாய் தன்னிடம் விளையாடுகிறாள் என்று எண்ணி, இன்னும் வேகமாய் ஓடினாள். பெரும் கற்பாறைகளை உடைப்பதற்காக, அப்பாறைகளில் வெடிகளை பொருத்தி, அதனை வெடிக்கச் செய்து உடைப்பது வழக்கம். அன்றும் அப்படியே பொருத்தியிருந்தனர். அதை அறியாத ஜெனி அந்த பாறையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள். அம்மா தன்னோடு ஓடி விளையாடுகிறார் என்பது அவளுடைய நினைப்பு, பாவம் அந்த ஏழைத்தாய் தவித்து போனாள். செய்வதறியாது ஒரு நொடி திகைத்து நின்றாள். சற்றே யோசித்த பின்னர் ஓடிக் கொண்டிருந்த ஜெனியைப் பார்த்து தன் இருகைகளையும் அகல விரித்து, '"ஜெனி, ஜெனி" என்று கூப்பிட்டாள். திரும்பிபார்த்த ஜெனி, தன் தாயின் நீட்டப்பட்ட கரத்தைப் பார்த்து ஓட்டமாய் ஓடி வந்து அடைக்கலம் புகுந்தாள். தாய் தன் பிள்ளையை அன்போடு அனைத்துக் கொண்டுஅதன் உயிரைக் காத்தாள்.

ஆம்! நம் இயேசுவின் அன்பு ஓர் உலகத் தாயின் அன்பைக் காட்டிலும் பெரியது. இயேசுவே என்னை எவ்வளவு நேசித்தீர் என்று கேட்டதற்கு அவர் இரு கைகளையும் சிலுவையில் அகல விரித்து இவ்வளவாய் என்றார்.. அவ்வளவு நேசம் நம்மீது வைத்திருக்கிறார்..

அநேக நேரங்களில் பாவத்தையும் பிரச்சனைகளையும் நோக்கி ஓடும் வேளையில் தன் அன்பு கரத்தினுள் வந்து விடு மகளே! மகனே! என்று அவர் அழைக்கும் குரலுக்கு நாம் செவி கொடுப்போம் " அவரே நமக்கு உயர்ந்த அடைக்கலாமனவர்." இறைவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர்".

அவரின் அடைக்கலத்திற்குள் நம்மை ஒப்புக்கொடுப்போம். கைவிடாமல் நம்மை பார்த்துகொள்வார். ஒவ்வொரு நாளும் நாம் அருந்தும் நற்கருணை நமக்கு பலம் வாய்ந்த சக்தி தரும் உணவாகும். பக்தியோடு அதை அருந்தும் போது நமக்கும் எம்மாவுஸ் சீடர்களுக்கு கிடைத்த துணிச்சல் கிடைக்கும் நமது கண்கள் திறக்கப்பட்டு நாமும் மனத்திடன் பெற்று நற்செய்தியை அறிவிப்போம்.

80 வயதுடைய ஒரு மனிதரின் இதயத்தில் ஆப்ரேஷன் நடந்தது. நல்லபடியாக நடந்து முடிந்த பின்... அவரிடம் ரூபாய் 8 லட்சத்திற்க்கான பில்லை மருத்துவமனை அதிகாரிகள் அவரிடத்தில் கொடுத்தனர். அந்த பில்லை பார்த்ததும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்பெரியவரின் பரிதாபகரமான அழுகையைப் பார்த்த..... மருத்துவர் கூறுகிறார். அழாதீர்கள் தாங்களுக்கு என்னால் முடிந்த அளவு பில்லை குறைத்துவிடுகிறேன் என்றனர்.

அதற்கு பெரியவரின் பதிலை என்னவென்று பாருங்கள்.....
"எனக்கு அது பிரச்சினையில்லை, பில் 10 லட்சமாக இருந்தாலும் நான் தர தயாராக உள்ளேன்..... ஆனால் 80 வருடமாக எவ்வித பிரச்சினையுமின்றி என் இதயத்தை பாதுகாத்த _இறைவன் ஒரு ரூபாய்கூட பில் கேட்கவில்லையே..... இவ்வளவு நாள், இதனை உணர்ந்ததேயில்லை, இப்போது நினைத்து உணர்ந்தபோது,
கண்ணீர் வழிகிறது, மூன்று மணி நேரம் மட்டும் நீங்கள் பாதுகாத்ததற்கு எட்டு லட்சத்திற்கு பில்....எல்லாம் வல்ல கடவுள் கருணையையும் அன்பையும் நினைத்து அழுதுவிட்டேன்" என்றார்......

இறைவனின் அருட்கொடைக்கு நிகர் இறைவனே.....

- நாம் தான் இறைவனை அடையாளம் காணாமல் அவரின் அற்புதத்தை உணராமல் இந்த மண்ணில் வாழ்கிறோம்.....

எந்த எதிர் பார்ப்புமே இல்லாமல் எப்போழுதும் நம்மை கண்ணும் கருத்துமாக பத்திரமாக பாதுகாப்பவர் அன்பே உருவான இறைவன் மட்டுமே....நாம் வாழ உண்வின் வடிவில் தன்னை வழங்கி நம்மைப் பேணும் கடவுளின் பாதையைக் கண்டு கொள்வோம்.

நமது இயேசு இராஜாவுக்கு நிகரான இராஜா யாருமில்லை.

நமது நற்கருணை உணவுக்குஇணையான உண்வும் எதுவுமில்லை.

நமது முழங்காலுக்கு எதிரான ஆயுதமும் எதுவுமில்லை.

அன்றாடம் திருப்பலியில் பங்கேற்போம். நற்கருணை எனும் தேவ அமுதத்தை தகுந்த தயாரிப்புடன் அருந்துவோம்.

திருப்பலியில் நாம் உண்ணும் நற்கருணை நமக்கு வாழ்வின் வழியை அறியச் செய்யும். நிறை வாழ்வைக் காணச்செய்யும் நாவுக்கு மகிழ்ச்சி தரும்.




 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.

எங்களோடு தங்கும் இயேசுவே....

I. திருத்தூதர் பணி 2:14,22-33
II. 1 பேதுரு 1:17-21
III. லூக்கா 24:13-35

இன்று நாம் அனைவரும் தடை உத்தரவின் பேரில் வீடுகளில் தங்கி இருக்கின்றோம். யாரும் யாருடைய வீட்டிற்கும் செல்வதில்லை. யாருடைய விருந்துகளுக்கும் அழைக்கப்படுவதில்லை. வீட்டில் தங்கி இருக்கின்றோம். ஒரே இடத்தில் இருப்பது பலருக்கு வெறுப்பு. சிலருக்கு விருப்பு. இன்றைய காலகட்டங்களில் இயேசுவோடு நாம் தங்கியிருக்க, இயேசுவை நம்மோடு தங்க அழைக்க, நம்மை இன்றைய வாசகங்கள் வலியுறுத்துகின்றன. துறவிகளும் அருட்பணியினரும் ஏன் ஏனைய மக்களும் தியானம் செய்யும் போது பெரும்பாலானவர்கள் செய்ய வலியுறுத்தப்படுவது, தனித்திரு, விழித்திரு, செபித்திரு. இது இன்றைய காலகட்டத்தில் நமக்கும் பொருந்தும். நாம் தனித்திருக்கிறோம், ஆனால் விழித்திருந்து செபிக்கிறோமா என்பது அவரவர் மனசாட்சியைப் பொருத்தது.

இயேசுவின் சீடர்கள் பலர் இருந்தனர். அவர்களில் எம்மாவுஸ் ஊருக்கு நடந்து சென்றவர் ஒருவர் பெயர் நற்செய்தியில் இடம் பெற்றுள்ளது. மற்றோருவரின் பெயர் யார் என்று தெரியவில்லை. அது நாம் தாம் என்பது மறைவல்லுனர்கள் கூறும் செய்தி.. இவர்கள் இயேசுவின் 12 சீடர்களில் இல்லை என்பது, இவர்கள் எருசலேம் சென்று பதினொருவரையும் அவர்களோடு குழுமி இருந்தவர்களையும் கண்டார்கள் என்ற செய்தி சாட்சி. இவர்கள் இயேசுவின் பரந்து பட்ட பல்லாயிரக்கணக்கான சீடர்களில் இருவர். இவர்களின் பண்பு நலன்கள் தான் இயேசுவை இவர்களோடு தங்க வைக்க செய்தது. அதே குண நலன்களை நாமும் பெற்று இயேசுவை நம்மோடு தங்க அழைப்போம்.

1. இயேசு இறந்தவுடன் அமைதியாக அழுது கொண்டு வீட்டிற்குள்ளேயே இருந்து விடவில்லை. அவரது உயிர்ப்பின் நிகழ்வை, மகதலா மரியாள் போன்றோர் சொன்ன செய்தியை பிறருக்கும் அறிவிக்க செல்கின்றார்கள். நாமும் இக்காலத்தில் உயிர்த்த நம் இறைவனின் மகிமையை பிறருக்கு நேரடியாக சென்று எடுத்துச் சொல்ல முடியாவிட்டாலும் சிறு செய்தி மூலமாக பிறருக்கு நம்பிக்கையை தருபவர்களாக மாறலாம். காலாவதியான செய்திகளை பிறருக்கு அனுப்புவதற்கு பதிலாக என்றும் வாழ்வு தரும் வாழ்வின் வார்த்தைகளாம் விவிலிய வார்த்தைகளை பகிரலாம்.

2. சீடர்களின் உரையாடல் இயேசுவைப் பற்றியதாக மட்டுமே இருந்தது. அவர்களுக்கு அவர் தான் மூச்சாகவும் பேச்சாகவும் இருந்தார். எதைப் பேசுகிறோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம். இது இயற்கை நியதி. நல்லதைப் பேசினால் நல்லதாக மாறுவோம். இப்போது நாம் தேவையற்ற பேச்சுக்களாலே அதீத பயத்தினால் ஆட்கொள்ளப்படுகிறோம். உயிர்த்த ஆண்டவரின் வல்லமையைப் பற்றி மட்டுமே பேசி வலிமை பெறுவோம்.

3. தங்களோடு உடன் வந்தவர், அந்நியரான போதிலும் அவரை மதித்து அவர் கேட்கும் கேள்விகளுக்கு முறையான பதிலை கொடுக்கின்றனர். நாம் இந்நாட்களில் நம்மோடு உடன் இருக்கும் நம் குடும்பத்தார்களை உறவுகளை மதிக்கின்றோமா? அதிகமான குடும்ப உறவுகள் விரிசலில் வீழ்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஒவ்வொருவரின் உணர்வுகளை மதித்து வாழ முயற்சிப்போம்.

4. இயேசுவின் போதனையில் மயங்கி அவரை தங்களோடு இருக்க அழைக்கின்றனர். அவரது மறைநூல் விளக்கத்திற்கு தங்கள் இதயங்களைத் திறக்கின்றனர். நாமும் இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் திருப்பலியினைக் கண்டு கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய இதயங்களை இறைவார்த்தைக்கு திறப்போம்.

5. இயேசு செய்த அடையாளத்தைக் கண்டு இவர் தான் இயேசு என்று அடையாளம் கண்டு கொள்கின்றனர். அவரது அப்பம் பிட்கும் ஒரு செயல் இவர்களுக்கு இயேசுவை அடையாளம் காட்டுகின்றது. நம்முடைய வாழ்விலும் இயேசு பல்வேறு செயல்களை செய்கின்றார். நாம் தாம் அவரை அடையாளம் காணாமல் இருக்கின்றோம். நம் கண்களை மாயை என்னும் உலக நிகழ்வுகள் மறைத்து விடுகின்றன.

6. அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டு கொண்டதும் தங்களது எம்மாவூஸ் பயணத்தை மாற்றி மீண்டும் எருசலேம் திரும்புகின்றார்கள். இயேசு உயிர்த்து விட்டார் என்ற செய்தியை மற்ற சீடர்களுக்கும் அறிவிக்கின்றார்கள். நமது வாழ்வின் திசையை மாற்றி அமைப்போம். பலமிலந்தவர்களுக்கு பலம் கொடுப்பவர்களாக நாம் மாறுவோம்.

இப்படி எம்மாவூஸ் சீடர்கள் போல நாமும் செயல்பட்டால் உயிர்த்த இயேசு நம்மோடும் தங்குவார். நம்மிலும் பல மாற்றங்களை அவர் ஏற்படுத்துவார். உயிர்த்த இறைவனின் ஆற்றல் பெற்றவர்களாக நாமும் மாற நம்மோடு இருப்பவர்களையும் மாற்ற அருள் வேண்டுவோம் எம்மோடு தங்கும் இயேசுவே என்று அனுதினமும் செபிப்போம் தனித்திருப்போம் அவரோடு செபித்திருப்போம் அவரோடு. இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரோடும் இருப்பதாக ஆமென்.

 


 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி

 திசைதிரும்பிய எதிர்பார்ப்புக்கள்

'எதிர்பார்ப்பு' இல்லாமல் நம்மால் வாழ முடியுமா? என்ற ஒரு கேள்வியை நாம் எழுப்பும் அதே நேரத்தில், 'எதிர்பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றம் இல்லை' என்று நம் மனம் சொல்லி முடிக்கிறது.

பெக்கி மற்றும் கான் தம்பதியினர் அருட்சாதனம் முடிந்து இருபது ஆண்டுகள் கழித்து, பெக்கி ஒரு நாள் தன் கணவன் கானிடம், 'நான் உங்களைப் பற்றிய எதிர்பார்ப்புக்களைக் குறைத்துக்கொள்ளலாம் ன நினைக்கிறேன்!' என்கிறாள். அதற்கு கான் அவளிடம், திருமணத்தில் வரும் பெரும்பாலான பிரச்சினைகளையும், மகிழ்ச்சியின்மையும் மூன்று வகையான எதிர்பார்ப்புக்களிலிருந்து வருகிறது என்கிறார்:

(அ) நியாயமற்ற எதிர்பார்ப்பு. அருட்சாதனம் முடிக்கும்போது குடும்பத்தில் நிலவிய பணக்குறையை அறிந்த பெக்கி, கானிடம், தினமும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலை செய்யுமாறு சொல்கிறாள். ஆனால் ஒன்றிரண்டு மாதங்களில் அவனிடம், 'நீங்கள் என்னுடன் நேரம் செலவழிப்பதே இல்லை. வேலை, வேலை என்று இருக்கிறீர்கள்' என்று குறைபட்டுக்கொள்கிறாள். இது பெக்கியின் நியாயமற்ற எதிர்பார்ப்பு. ஏனெனில், கான் ஒரே நேரத்தில் வேலைக்குச் செல்லவும், வீட்டில் இருக்கவும் முடியாது.

(ஆ) தெளிவற்ற எதிர்பார்ப்பு. பத்தாவது திருமண நாளில் பெக்கிக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்புகிறான் கான். என்ன வேண்டும் எனக் கேட்கின்றான். அவள் சேலை, மோதிரம், நெக்லஸ் என நாளுக்கு ஒன்று சொல்கிறாள். குழம்பிப் போகிற கான் அவளுக்கு அழகான சேலை எடுத்துக்கொடுக்கிறான். அது அவளுக்குப் பிடிக்கும் என நினைத்து, ஆவலுடன் அதை அவளிடம் நீட்ட, 'ஐயோ! இதே மாடல், கலர் என்னிடம் ஏற்கனவே இருக்கிறதே!' என அழத் தொடங்குகிறாள் பெக்கி. இங்கே, பெக்கியின் எதிர்பார்ப்பு தெளிவற்றதாய் இருந்ததால் கான் அதை நிறைவேற்ற முடியவில்லை.

(இ) நிறைவேறாத எதிர்பார்ப்பு. சில நேரங்களில் எதிர்ப்பார்ப்புகள் நியாயமானதாகவும், தெளிவானதாகவும் இருக்கும். ஆனால், நிறைவேறாமலேயே போய்விடும். எடுத்துக்காட்டாக, இவர்கள் காதல் செய்யும்போது இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், திருமணத்திற்குப் பின் நடந்த ஒரு விபத்தினால் கருத்தரித்தல் பாதிக்கப்படுகிறது. ஆக, அங்கே இவர்கள் இருவரின் எதிர்பார்ப்புக்களும் நிறைவேறாமலேயே போய்விடுகின்றன.

இவற்றை சொல்லி முடித்த கான், இனி 'எதிர்பார்ப்புக்களைக் குறைத்துக்கொள்ளலாம்' என நினைக்கிற பெக்கியைப் பாராட்டுகிறான்.

கானின் இந்தப் பட்டியலோடு நாம் இன்னும் மூன்று எதிர்பார்ப்புக்களை இணைத்துக்கொள்ளலாம்:

(ஈ) அதீத எதிர்பார்ப்பு. அதாவது, ஒருவருடைய ஆற்றலை அல்லது திறனை நாம் அறிந்தாலும் அதைவிட அதிகம் எதிர்பார்த்தல். இது நபர்களுக்கும் பொருந்தும், பொருள்களுக்கும் பொருந்தும். நினைவுத்திறன் குறைவாக உள்ள என்னுடைய மாணவர் தேர்வில் அனைத்தையும் நினைவுகூர்ந்து எழுதுவார் என நினைப்பதும், நம்முடைய குட்டிக் கார் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும் என நினைப்பதும் அதீத எதிர்பார்ப்புக்களே.

(உ) தாழ்வான எதிர்பார்ப்பு. இது, அதீத எதிர்பார்ப்புக்கு முரணானது. ஒருவரின் ஆற்றலை அறியாத நாம் மிகவும் தாழ்வாக எதிர்பார்த்தல். சில நேரங்களில் இது ஆச்சர்யத்தையும் பல நேரங்களில் அதிர்ச்சியையும் கொடுக்கும். எடுத்துக்காட்டாக, பெலிஸ்தியன் கோலியாத்தைக் கொல்வதற்காக ஒரு கவனுடனும் சில கூழாங்கற்களோடும் அவரை எதிர்கொள்கின்ற தாவீது தன்னிடம் வருவதைப் பார்க்கின்ற கோலியாத், தாவீதிடம் கொண்டிருக்கின்ற எதிர்பார்ப்பு மிகவும் தாழ்வானது. விளைவாக, கோலியாத்து தன்னுடைய தாழ்வான எதிர்பார்ப்பாலேயே இறந்துவிடுகிறார்.

(உ) தவறான எதிர்பார்ப்பு. இது ஏறக்குறைய நியாயமயற்ற எதிர்பார்ப்பை ஒத்திருக்கிறது. பொருந்தாத ஒன்றை எதிர்பார்ப்பது. கோழி முட்டையை அடைகாக்க வைத்துவிட்டு, மயில் குஞ்சுகளை எதிர்பார்ப்பது தவறான எதிர்பார்ப்பு.

இவ்வளவு பெரிய முன்னுரை எதற்கு?

'நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலே மீட்கப் போகிறார் என நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம்.'

'... நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம்' - இப்படித்தான் தங்களுடைய எம்மாவு வழிப்பாதையில் தங்களோடு கரம் கோர்த்த முன்பின் தெரியாத வழிப்போக்கனின் கேள்விக்கு விடையளிக்கின்றார் கிளயோப்பா.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 24:13-35) எம்மாவு நிகழ்வை நம் கண்முன் கொண்டு வருகிறது.

'நாசரேத்து இயேசு இஸ்ரயேலை மீட்கப் போகிறார்' என சீடர்கள் எதிர்பார்த்ததை மேற்காணும் பட்டியலில் எந்த வகையில் சேர்க்கலாம்?

நியாயமற்ற எதிர்பார்ப்பு - ஏனெனில், இறைவாக்கினராக, வல்ல செயல்கள் செய்தவர் உரோமை அரசை எதிர்த்துச் சண்டையிடுவார் என நினைத்தது.

தெளிவற்ற எதிர்பார்ப்பு - இயேசுதரும் விடுதலை அல்லது மீட்பு என்பது அரசியல்சார் நிகழ்வா அல்லது ஆன்மீகம்சார் நிகழ்வா என்ற தெளிவில்லாமல் இருக்கின்றனர் சீடர்கள்.

நிறைவேறாத எதிர்பார்ப்பு - இவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆகவே, எருசலேமை விட்டு எம்மாவு நோக்கிச் செல்கின்றனர்.

மேலும், இவர்களுடைய எதிர்பார்ப்பை அதீத மற்றும் தவறான எதிர்பார்ப்பு வகையிலும் சேர்க்க முடியும்.

இப்படியாக, இங்குமங்கும் அலைக்கழிக்கப்பட்ட அவர்களின் எதிர்பார்ப்புக்களின் திசையைத் திருப்புகின்றார் இயேசு. விளைவாக, அவர்கள் தாங்கள் எங்கிருந்து வந்தார்களோ அதே திசையை நோக்கித் திரும்பிச் செல்ல ஆரம்பிக்கிறார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்புகள் நியாயமற்றவை, தெளிவற்றவை, அதீதமானவை என நினைக்கின்ற இயேசு மறைநூலின் உதவியுடன் அவர்களுக்கு விளக்குகின்றார். இறுதியில், உணவு அருந்தும்போது அவர்கள் கண்கள் திறக்கப்பட்ட அந்த நேரத்தில், தங்களுடைய எதிர்பார்ப்புக்கள் தவறானவை என உணர்கின்றனர்: 'வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?'

சீடர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனதால் நடந்த சிலவற்றை இன்றைய நற்செய்தி நமக்குச் சுட்டிக்காட்டுகிறது:

அ. எதிர்திசை நோக்கிச் செல்கின்றனர்

சீடர்கள் எம்மாவு நோக்கிச் செல்கின்றனர். அவர்களுடைய இல்லம் அங்கே இருந்ததா அல்லது உறவினர்கள் அல்லது நண்பர்களின் இல்லம் அங்கே இருந்ததா என்று தெரியவில்லை. எருசலேமில் இருந்தால் தங்களுக்கும் ஆபத்து என்று தப்பி ஓடுகிறார்களா அல்லது இனி இங்கே இருந்து பயன் ஒன்றுமில்லை, எல்லாம் முடிந்துவிட்டது என்று தப்பி ஓடுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், எருசலேமை தங்கள் முதுகின்பின் தள்ளி எதிர்திசையில் நடக்கின்றனர். இனி இங்கே வரவே கூடாது என்பதுதான் அவர்களுடைய எண்ண ஓட்டமாக இருந்திருக்கும்.

ஆ. நடந்து செல்கின்றனர்

ஏறத்தாழ 11 கிமீ நடந்துசெல்ல முயல்கின்றனர். ஒன்று, அவர்களால் கழுதை அல்லது குதிரை வாகனம் ஏற்பாடு செய்ய முடியாமல் போயிருக்கலாம். அல்லது, அதை எல்லாம் தேடாமல், ஓட்டமும் நடையுமாக யார் துணையுமின்றி ஓடிவிட முயல்கின்றார்கள். மனித விரக்திக்கும் ஆற்றல் உண்டு என்பது இதற்குச் சான்று.

இ. உரையாடிக்கொண்டு செல்கின்றனர்

அமைதியற்ற உள்ளம் நிறையப் பேசும். தாங்கள் இயேசுவால் ஏமாற்றப்பட்டதைப் பேசியே தீர்த்துக்கொள்ள நினைக்கின்றனர். ஊர் போய்ச் சேரும் வரை நன்றாகப் பேசிவிட்டு, உள்ளத்தில் உள்ளதை எல்லாம் கொட்டிவிட்டு, போய் ஒரு நல்ல குளியல் போட்டு, இயேசுவைத் தலைமுழுகி விட வேண்டும் என்பது இவர்களின் எண்ணமாக இருந்திருக்கலாம்.

ஈ. முகவாட்டம்

முன்பின் தெரியாத மற்றொரு வழிப்போக்கன் கேள்வி கேட்டாலும், தங்களுடைய உள்ளுணர்வுகளை மறைக்கத் தெரியாமல், அல்லது மறைக்க முடியாமல் நிற்கின்றனர் அப்பாவி சீடர்கள். அவர்களின் முகவாட்டம் அவர்கள் அடைந்த ஏமாற்றத்தின் அறிகுறி.

உ. கோபம்

'எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் நிகழ்ந்தவை தெரியாதோ!' எனக் கோபம் கொள்கின்றனர். வழக்கமாக, ஏமாந்து போயிருப்பவர் எல்லார் மேலும் கோபப்படுவார். அதுதான் இங்கே நிகழ்கிறது.

ஊ. வரவேற்பு

இறுதியாக, ஏமாந்த உள்ளம் தன்னுடைய கதையைக் கேட்ட ஒருவரை உடனே அரவணைத்துக்கொள்ளும். அப்படித்தான் இங்கேயும் நடக்கிறது. முன்பின் தெரியாத ஒருவரை தங்களோடு இரவில் தங்குவதற்கு அழைக்கும் அளவிற்கு அவர்களுடைய மனம் சோர்ந்து போயிருக்கிறது. முன்பின் தெரியாத இந்த நபர் இரவில் கத்தியை எடுத்துக் குத்தினால் என்ன நடக்கும்? என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அடைந்த ஏமாற்றம் இந்தக் கேள்வியை அப்புறப்படுத்திவிடுகிறது.

அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாததால் அவர்கள் பெற்ற இந்த ஆறு உணர்வுகளையும் செயல்களையும் இயேசுவின் ஒற்றைச் செயல் புரட்டிப்போட்டுவிடுகிறது. அப்பத்தைப் பிட்கும்போது இயேசுவைக் கண்டுகொள்கின்றார்கள்.
'அவர்கள் அந்நேரமே திரும்பிப் போனார்கள்' எனப் பதிவு செய்கிறார் லூக்கா.

அதாவது, உணவருந்தி முடித்த அந்த இரவிலேயே, இரவோடு இரவாக எருசலேம் நோக்கித் திரும்புகிறார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பின் திசையைத் திருப்பிவிடுகிறார் இயேசு.

அவர்களின் இந்த விரைவான பயணத்தில் அவர்கள் தங்களின் மனச்சோர்வு, விரக்தி, ஏமாற்றம் அனைத்தையும் மறந்துவிடுகிறார்கள். 'இயேசு இருக்கிறார்' என்ற அனுபவம் அவர்களின் எதிர்பார்ப்பின் திசையைத் திருப்பிவிடுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 2:14,22-33), பெந்தகோஸ்தே நிகழ்வுக்குப் பின் பேதுரு எருசலேமில் ஆற்றிய பேருரையின் ஒரு பகுதியை வாசிக்கிறோம். தாவீது அரசரின் திருப்பாடல் வரிகளை (காண். திபா 32:11, 2 சாமு 7:12,13) மேற்கோள் காட்டுகின்ற பேதுரு, அவர் தன்னைப் பற்றி அல்ல, மாறாக, தனக்குப் பின் வரும் மெசியா பற்றி முன்னுரைத்திருப்பதாக எழுதுகின்றார். பேதுருவின் உரையின் சாரம் என்னவென்றால், தன்னுடைய சமகாலத்து யூதர்களின் தாழ்வான எதிர்பார்ப்பை இயேசுவின் உயிர்ப்பு தவிடு பொடியாக்கியிருக்கிறது என்பதுதான். இயேசுவைக் கொன்றுவிடலாம் என்பது யூதர்களின் எதிர்பார்ப்பாக இருந்து, அவர்கள் இயேசுவைக் கொல்லவும் செய்கின்றனர். ஆனால், அவருடைய உடல் படுகுழியைக் காணவிடாமல் கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்கிறார். பாதாளத்தைப் பார்த்துக்கொண்டு தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டதாக எண்ணிக்கொண்டிருந்த யூதர்களின் திசையைத் திருப்பி வான் நோக்கிப் பார்க்க அவர்களை அழைக்கின்றார் பேதுரு.

இரண்டாம் வாசகம் (காண். 1 பேது 1:17-21), பேதுருவின் கடந்த வார அறிவுரைப் பகுதியின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இயேசுவின்மேல் நம்பிக்கை கொண்டதால் தாங்கள் அனுபவித்த பல்வேறு துன்பங்களால் மனம் துவண்டு போன மக்களுக்கு ஆறுதல் சொல்லும் பேதுரு, அவர்கள் பெற்ற மீட்பின் மேன்மையை - 'விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை பொன்னும் வெள்ளியும் அன்று, கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தம்' - எடுத்துக்காட்டி, கீழானவற்றிலிருந்து தங்கள் முகத்தை மேலானது நோக்கித் திருப்ப அழைக்கின்றார்.
இறுதியாக,

'நீ விழுந்து கிடக்கும் இடத்தை அல்ல, நீ வழுக்கிய இடத்தையே கவனிக்க வேண்டும்' என்பது பழமொழி. தங்களுடைய எதிர்பார்ப்புகளில், எதிர்பார்ப்புகளால் வழுக்கிய சீடர்களின் திசையைத் திருப்புகின்றனர் இயேசுவும், பேதுருவும்.
திசைதிரும்பிய எதிர்பார்ப்புகள் புதிய பயணத்தின் மைல்கற்கள்!

 
 
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
 


(திப 2: 14, 22-33; 1 பேது 1: 17-21; லூக் 24: 13-35)

கண்களைத் திற

கண்களைத் திறந்த கவிஞர்!

வில்லியம் கெளபர் (William Cowper 1731 1800) என்றொருவர் இருந்தார். தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த துன்பங்களையும் பிரச்சனைகளையும் தாங்கி முடியாமல் தேம்ஸ் நதியில் குதித்து, தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தார் இவர். இதன் நிமித்தம் இவர் ஒரு குதிரை வண்டிக்காரனைத் தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்தார். அவனும் இவருடைய வீட்டிற்கு முன்பாக வந்து நின்றபோது, வண்டியைத் தேம்ஸ் நதிக்கு ஓட்டச் சொன்னார்.

அன்றைக்குப் பனிப்பொழிவு மிகுதியாக இருந்தது. அதனால் வண்டியை ஓட்டிச் செல்வது வண்டிக்காரனுக்குச் சிரமமாகவே இருந்தது. குறிப்பிட்ட தூர்ம் வந்ததும், வில்லியம் கெளபர் தேம்ஸ் நதி வந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு, வண்டியிலிருந்து இறங்கி, கீழே குதித்தார்.

இவர் கீழே குதித்தபோதும் இவருக்கு எதுவுமே ஆகவில்லை; ஏனெனில், இவர் குதித்தது தேம்ஸ் நதியில் இல்லை; இவரது வீட்டிற்கு முன்பாக! உண்மையில், பனிப்பொழிவின் காரணமாக வண்டி இவரது வீட்டை ஒட்டியே சுற்றிக்கொண்டிருந்தது. இதனை அறிந்த இவர், கடவுள், தான் சாகவேண்டும் என்றல்ல, வாழவேண்டும் என்றே விரும்புகின்றார் போலும் என்று நினைத்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குள் வந்து இப்படியொரு கவிதையை எழுதினார்:

கடவுள் மிகவும் ஆச்சரியமாகச் செயல்படுகின்றார், அவரது செயல்கள் அற்புதமானவை. கடலில் அவர் தம் காலடிகளைப் பதிக்கின்றார், புயலில் அவர் பயணம் செய்கின்றார்.

இதற்குப் பிறகு இவர் அறிவுக் கண் திறக்க, வாழ்வின் வழியை அறிந்துகொண்டவராய் மிகப்பெரிய கவிஞராகவும், பாடலாசிரியராகவும் ஆனார். இவரது பாடல்கள் பல திருவழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

தற்கொலை செய்து வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்றிருந்த வில்லியம் கெளபரின் அறிவுக் கண்ணைத் திறந்து, கடவுள் அவரை வாழ்வின் வழியை அறியச் செய்தார். இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை, நாம் நமது கண்களைத் திறக்கவும், வாழ்வின் வழியை அறிந்து, அதன்படி நடக்கவும் அழைப்புத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

கண்களைத் திறந்த சீடர்கள்

சிலர் காதால் தொடர்ந்து கேட்டும், அதைக் கருத்தில் கொள்வதில்லை; கண்களால் பார்த்துக்கொண்டே இருந்தும் உணர்வதில்லை (மத் 13: 14). இவ்வார்த்தைகள் யாருக்கு பொருத்திப் போனதோ இல்லையோ, இயேசவின் சீடர்களுக்கு நன்றாகவே பொருந்திப் போயின.

தாம் பாடுபட்டு இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று இயேசு தம் சீடர்களுக்குப் பலமுறை சொல்லியிருந்தார். அதைவிடவும் அவர் உயிர்த்தெழுந்த பின் மகதலா மரியாவிற்கும், அதன் பிறகு பேதுருவுக்கும் யோவானுக்கும் காட்சியளித்திருந்தார். இச்செய்தியை எம்மாவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இயேசுவின் இரண்டு சீடர்கள் கேள்விப் பட்டிருந்தார்கள். எனினும், அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்ததை நம்பாமல், குருடர்களாகவே இருந்தார்கள்.

எப்போது இயேசு அப்பத்தைப் பிட்டு, கடவுளைப் போற்றி, அவர்களுக்குக் கொடுத்தாரோ அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அதன்பிறகு அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நம்பத் தொடங்ககின்றார்கள். இயேசுவின் சீடர்கள் அவர் உயிர்த்தெழுந்ததைக் காணாமலே நம்பி இருக்க வேண்டும்! (யோவா 20: 29); அவர்களோ இயேசு முன்னறிவித்திருந்த வார்த்தைகளையும் நம்பாது; உயிர்த்த ஆண்டவரை நேரில் கண்டவர்கள் சொன்ன வார்த்தைகளையும் நம்பாமல் இருந்தது வேதனையானது. இந்நிலையில்தான் அப்பம் பிடுகையில் அவர்களது கைகளைத் திறக்கச் செய்கின்றார் இயேசு.

பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலாது (லூக் 6: 39). பார்வையற்றவர்களாய் இருந்த இயேசுவின் சீடர்களுக்கு இயேசு பார்வை கொடுத்து; அல்லது அவர்களது கண்களைத் திறந்து, அவர்களுக்குப் புதுப் பார்வை அளிக்கின்றார் இயேசு.

மற்றவரின் கண்களைக் திறந்த சீடர்கள்

அறியாமையை விடவும் ஆபத்தானது வேறு எதுவும் இல்லை. இதைத் தான் கடவுள் இறைவாக்கினர் ஒசேயா வழியாக, அறிவின்மையால் என் மக்கள் அழிகின்றார்கள் (ஒசே 4:6) என்கிறார். ஒரு காலத்தில் அறிவின்மையால் பார்வையின்றி இருந்த இயேசுவின் சீடர்கள் பார்வை பெற்றதும், அறிவின்மையால் இருந்த மற்றவர்களும் பார்வை பெறுமாறு செய்கின்றார்கள். அதை இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.

யூதர்களின் முப்பெரும் விழாக்களுள் ஒன்றான பெந்தக்கோஸ்து விழாவில் பதினொருவருடன் பேசுகின்ற பேதுரு, நீங்கள் திருச்சட்டம் அறியாதவ்ர்மூலம் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார்... இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள் என்கின்றார். இதற்குப் பிறகு திரண்டிருந்த மக்கள் தங்கள் அறியாமையால் பாவம் செய்ததை உணர்ந்து, மனம் மாறித் திருமுழுக்குப் பெறுகின்றார்கள். இவ்வாறு இயேசுவால் கண்கள் திறக்கப்பட்ட சீடர்கள், அறியாமையில் இருந்த மக்களின் கண்களைத் திறந்து அவர்களும் பார்வை பெறச் செய்கின்றார்கள்.

அவரவர் செயல்களின்படி தீர்ப்பு

அறியாமையால் பார்வையின்றி இருக்கும் மனிதர்கள் பார்வை பெற்று, ஆண்டவரைப் பற்றிய அறிவில் வளர்வதற்கும் அவரது அருள் தேவைப்படுகின்றது. இது யாரும் மறுக்க முடியாத உண்மை.

இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 16 இல் தாவீது, ஆண்டவரே, வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர் என்று மன்றாடுகின்றார். தாவீது ஆண்டவரிடம் மன்றாடியது போலவே, அவரை வாழ்வின் வழியை அறியச் செய்தார். இது நமக்குக் உணர்த்தும் செய்தி, ஆண்டவரின் அருளால்தான் அவரின் வழியை நாம் அறிய முடியும் என்பதாகும். இயேசு தன்னுடைய அருளால் சீடர்களின் கண்களைத் திறந்து அவர்கள் வாழ்வின் வழியை அறியச் செய்தார். அவர்களும் அறியாமையில் இருந்த மக்களின் அறிவுக் கண்களைத் திறந்து அவர்களை வாழ்வின் வழியை அறியச் செய்தார்கள்.

நாம் ஏன் அறிவுக் கண்ணைத் திறந்து, வாழ்வின் வழியை அறியவும், அதன்படி நடக்கவும் வேண்டும் என்ற கேள்வி எழலாம். இதற்கான பதில் இன்றைய இரண்டாம் வாசகத்தில் இருக்கின்றது. நீங்கள் தந்தையே என அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின்படியே தீர்ப்பு வழங்குகிறார் என்று பேதுரு கூறுகின்றார். எனில், கடவுள் நம்முடைய செயல்களின்படியே தீர்ப்பு வழங்குவார் எனில், நம்முடைய செயல்கள் அவருக்கேற்ற செயல்களாக இருக்க வேண்டும். கடவுளுக்கு ஏற்ற செயல் அவர் அனுப்பிய இயேசுவை நம்புவதுதான் (யோவா 6:29).

இயேசுவை நம்புகின்ற ஒருவர் வாழ்வின் வழியை அறிந்து, அதன்படி நடக்கின்றார். அப்போது அவர் ஆள்பார்த்துச் செயல்படாத கடவுளிடமிருந்து மிகுந்த கைம்மாறு பெறுவார். நாம் கடவுளிடமிருந்து மிகுந்த கைம்மாறு பெற, இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அதற்கேற்றாற்போல் வாழ்வோம்.

சிந்தனைக்கு

ஆண்டவரே, எங்களை கண்களைத் திறந்தருளும் (மத் 20: 33) என்று பார்வையற்ற இருவர் இயேசுவிடம் வேண்டுவார்கள். நாமும் கடவுளிடம் நம்முடைய அகக் கண்களைத் திறக்கச் சொல்லி, வாழ்வின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்




 
 
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை

உயிருள்ள சாட்சியங்கள்

பரிசு சீட்டு வாங்குபவர், தனக்குப் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாங்குகிறார். தேர்வு எழுதும் மாணவர், நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறார். நாம் எழுதும் கடிதம், கண்டிப்பாகப் போய் சேரும் என்ற நம்பிக்கைதான், அதைத் தபால் பெட்டியில் போட வைக்கிறது. இந்த நம்பிக்கை நம் வாழ்வையே இயக்குகிறது.

போர் வீரன் அலெக்சாண்டர் போருக்குச் சென்றபோது, எதிரியோடு போர் புரிந்து நோய்வாய்ப்பட்டார். அது எதிரி நாட்டு பாரசீக மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி. பாரசீக மன்னனின் அரண்மனை மருத்துவர், இவரை இந்த நோயிலிருந்து குணமாக்கிவிடுவார் என்று பலரும் சொன்னார்கள். அதற்கு அலெக்சாண்டரின் போர்வீரர்கள், அந்த மருத்துவரை எப்படி நம்புவது? என்று யோசித்தார்கள். ஆனால் அலெக்சாண்டர் மட்டும் தயங்கவில்லை. உடனே அந்த மருத்துவரை அழைத்து வாருங்கள் என்றார். அலெக்சாண்டரின் உடலை மருத்துவர் சோதித்து விட்டு இரண்டு நாட்களுக்குள் மூலிகை மருந்தைக் கொண்டு வந்து, நான் குணமாக்கி விடுகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். அலெக்சாண்டரின் தளபதிகளில் ஒருவர், உங்களிடம் வந்திருந்த எதிரி நாட்டு மருத்துவரை நம்பாதீர்கள். அவர் உங்களுக்குக் கொடுக்க இருப்பது, விஷம் கலந்த மூலிகை, என்று அவசர கடிதத்தை அனுப்பினான். அதைப் படித்த அவர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை. மருத்துவர் கொண்டு வந்து கொடுத்த மூலிகை மருந்தைச் சாப்பிட்டுக் குணமடைந்தார். குணமடைந்த பிறகு தளபதியின் கடிதத்தை மருத்துவரிடம் காட்டினார்.

தன் மீது அலெக்சாண்டர் வைத்திருந்த நம்பிக்கையைப் பார்த்து அப்படியே திகைத்துப் போனார் மருத்துவர். நம்பிக்கை என்ற அச்சாணியை ஆதாரமாக வைத்துதான், இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. பாரசீக மன்னன் எனக்குப் பகைவராக இருந்தாலும், மிகவும் பெரியவர், அவரின் அரண்மனை மருத்துவர் தொழிலில் நேர்மை இல்லாதவராக இருக்கமாட்டார். அப்படி இருந்திருந்தால், அவரை அங்கே வைத்திருக்க மாட்டார்கள் என்று நம்பினேன். எனது நம்பிக்கை வீண் போகவில்லை என்றார். நம்பிக்கை இல்லாவிட்டால். இந்த உலகில் வாழவே முடியாது. அவநம்பிக்கை எப்போதும், அவஸ்தையைத்தான் தரும். எதையும் நம்பிதான், வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க வேண்டியுள்ளது.

இயேசுவின் உயிர்ப்பிலும் அவரது சீடர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. அவரது சொல், செயல், சிந்தனைகளிலும் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால், இயேசு அப்பத்தை பிட்கின்றபோது, அவரை அடையாளம் கண்டுகொண்டு, நம்பிக்கை கொள்கிறார்கள். இயேசுவின் புதுமைகள், போதனைகள், செயல்பாடுகள், இவைகளனைத்தின் உச்சகட்ட வெளிப்பாடுதான், அவர் தன் சீடர்களோடு அப்பத்தையும், இரசத்தையும், தனது உடலாகவும், இரத்தமாகவும் அடையாள வடிவில் பகிர்ந்து கொடுத்தது. இதன் வழியாகவே, இயேசு தன்னை இறை மகனாகவும், மனித மீட்புக்காக தன்னை முழுவதுமாக இழப்பதையும் வெளிப்படுத்தினார். சீடர்கள் உள்ளத்தாலும், உணர்வாலும், புதுவாழ்வையும், நம்பிக்கையையும் பெற்று போதிக்கத் தொடங்கினார்கள்.

மனிதர் முதலில் தன்னை நம்ப வேண்டும். ஆனால், இறைவனின் அருள்துணை இல்லாமல் நம்பிக்கை மட்டும் பயன் தராது, மருத்துவர் மருந்து கொடுக்கிறார். இறைவன்தான் குணப்படுத்துகிறார். இதுதான் உண்மை. ஆனால் ஒருவர் குணம் பெற, மருந்தைவிட, நான் கண்டிப்பாகக் குணம் பெறுவேன் என்ற நம்பிக்கையே குணமடைய வைக்கிறது. மனிதர் சுவாசிப்பதால் மட்டும் உயிர் வாழ்வதில்லை. அவன் நம்பிக்கையைச் சுவாசிப்பதாலும் உயிர் வாழ்கிறார். உயிர்த்த இயேசுவை நம்பாத சீடர்கள், அவரைப் பார்த்ததால் மட்டும் நம்பவில்லை, அப்பத்தைப் பிட்கிறபோதுதான், அடையாளம் கண்டு நம்பிக்கையில் தங்களையே, உறுதிப்படுத்திக் கொண்டனர்.

வாழ்வு தரும் உணவு நானே, என்னிடம் வருபவருக்கு பசியே இராது. என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது (யோவா. 6:35) என்ற இயேசுவின் வார்த்தைகளில் முழுமையான நம்பிக்கை கொள்வோம்.
 
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
நமக்கு மறுவாழ்வு உண்டு

ஒரு காட்டுக்குள்ளே ஒரு துறவற இல்லம். அங்கே மூன்று துறவிகள் வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் மூன்றுபேரின் முகங்களும் எங்கேயும், எப்போதும் மாலையில் மலரும் மல்லிகைப் பூ போல் சிரித்திருக்கும்.

அவர்கள் காட்டைவிட்டு நாட்டுக்குள் புகுந்தால், அவர்கள் இருக்கும் இடம் சிரிப்புக் கடலாக மாறிவிடும்.

இப்படிப்பட்ட மூவரில் ஒருவர் திடீரென ஒரு நாள் இறந்துவிட்டார். மீதி இருந்த இருவரும் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அழவில்லை! ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் பாடையைக் கட்டினார்கள்.

ஊர் மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை! இவர்களோடு சேர்ந்து சிரிப்பதா, இல்லை அழுவதா என்று அவர்களுக்குப் புரியவில்லை.

ஆடிக்கொண்டே பாடையை சுடுகாட்டிற்குத் தூக்கிச் சென்றார்கள். இறந்தவரின் உடலுக்கு முகமலர்ச்சியோடு நெருப்பு வைத்தார்கள்.

அப்போது யாரும் எதிர்பாராத ஒன்று நடந்தது. பாடையோடு சேர்த்து அவர்கள் கட்டிவைத்திருந்த வெடிகள் வெடிக்கத் துவங்கின.

வெடிகள், வெடிக்க, வெடிக்க உயிரோடிருந்த இரண்டு துறவிகளும் ஆனந்தக் கூத்தாடினார்கள்.

மக்களோ, உங்கள் நண்பர் இறந்திருக்கின்றார். நீங்கள் வெடிவெடித்து விழா நடத்துகின்றீர்களா? என்றார்கள்.

அதற்கு அந்தத் துறவிகள் இருவரும் மக்களைப் பார்த்து, இறப்பு என்பது அழிவில்லா மறுவாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வாயில்! முடிவில்லா வாழ்வை. மகிழ்ச்சி நிறைந்த மறுவாழ்வை இவர் அனுபவிக்கச் செல்கின்றார். அப்படிச் செல்கின்றவரை வருத்தத்தோடு அழுதுகொண்டு அனுப்பச் சொல்கின்றீர்களா? என்று கேட்டார்கள். இப்படி கேட்டுவிட்டு அவர்கள் மக்களைப் பார்த்து, இறப்பை, சாவை கொண்டாடுங்கள் என்றனர்.
மேலும் அறிவோம் :

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ(டு) உயிரிடை நட்பு (குறள் : 338).

பொருள்:

உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவு நிலையற்றது! தான் தங்கியிருந்த கூடு அல்லது ஓடு தனித்துக் கிடக்க பறவைக் குஞ்சு நீங்கிச் செல்லும்நிலை சிந்திக்கத்தக்கது!
 
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்

ஒரு திருமணத் திருப்பலியில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலிகட்டிய போது, தாலிக்கயிற்றில் இரண்டு முடிச்சுகளுடன் நிறுத்திக் கொண்டார். மூன்றாவது முடிச்சு ஏன் போடவில்லை? என்று கேட்டதற்கு அவர் கூறியது: "பெண் வீட்டார் வரதட்சணையாக மூன்று இலட்சம் ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இதுவரை இரண்டு இலட்சம்தான் கொடுத்தார்கள். எப்போது மூன்றாவது இலட்சம் கொடுக்கிறார்களோ அப்போதுதான் மூன்றாவது முடிச்சு போடுவேன்." தாலிக்கயிற்றில் மணமகன் மூன்று முடிச்சுப் போடுவதின் ஆழமான பொருள்: மனம் (எண்ணம்), வாக்கு (சொல்), காயம் (செயல்) ஆகிய மூன்றிலும் அவன் தன் மனைவியைத் தவிர வேறு யாரையும் தீண்டமாட்டான் என்று அவன் தனக்கு ஒரு வேலி அமைத்துக் கொள்கிறான்!

தாலிக்கயிற்றில் மூன்று முடிச்சுகள் இருப்பதுபோல, கிறிஸ்தவர்கள் வாழ்விலும் மூன்று முடிச்சுகன் உள்ளன, அவை முறையே திருவிவிலியம், திருவிருந்து, திருச்சபை. இவை மூன்றும் உறுதியாக இருந்தால்தான், கிறிஸ்தவ நம்பிக்கை இறுதிவரை உறுதியாக இருக்கும். இம்மூன்று முடிச்சுகளைப் பற்றி இன்றைய நற்செய்தி கூறுகிறது.

திருவிவிலியம்: கிறிஸ்து இறந்த பிறகு சீடர்கள் கதிகலங்கிப் போனார்கள்; நம்பிக்கை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள். அவ்வாறு நம்பிக்கை இழந்த இரு சீடர்கள் கிறிஸ்து உயிர்த்த ஞாயிறு அன்று எருசலேமிலிருந்து எம்மாவு என்ற ஊருக்குப் பயணித்தனர், உயிர்த்தக் கிறிஸ்து அவர்களுடன் நடந்து சென்றும் அவரைக் கண்டு கொள்ளாதவாறு அவர்கள் பார்வை தடை செய்யப்பட்டிருந்தது. அவர்கள் வாடிய முகத்துடன் காணப்பட்டனர்.

நல்ல பாம்பு ஒன்று வாட்டத்துடன் வழியில் படுத்திருந்தது. ஏன்? என்று கேட்டதற்கு, "நான் எடுத்த படம் ஓடவில்லை" என்றது. திரைப்படம் ஓடவில்லை என்றால் அதை எடுத்தவர்கள் வாடிப் போய் விடுகின்றனர். அவ்வாறே கிறிஸ்து எடுத்த "இறையாசு" என்ற படம் பாதியிலேயே நின்றுவிட்டதே என்று அந்த இரண்டு சீடர்கள் முகவாட்டத்துடன் காணப்பட்டனர். உயிர்த்த கிறிஸ்து அவர்களுடைய முகவாட்டத்தைப் போக்கப் பயன்படுத்திய முதல் ஆயுதம் திருவிவிலியம் மெசியா பாடுபட்டே மாட்சிமை அடைய வேண்டும் என்பதை திருவிவிலியத்தைக் கொண்டு கிறிஸ்து விளக்கினார். "மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்" (லூக் 24:45)

நமது வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், திருவிவிலியத்தைப் பயன்படுத்த வேண்டும். திருப்பா கூறுகிறது: "இளைஞர்கள் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ" (திபா119:9). இன்றைய நவீன உலகின் தீய சக்திகளிலிருந்து இளையோரைப் பாதுகாக்க, அவர்களைத் திரைப்பட உலகிலிருந்து திருவிவிலிய உலகத்துக்குக் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமாகும். திருவிவிலியத்தில் கிறிஸ்துவைச் சந்திக்கின்றோம். அவர் நமது மனக்கண்களைத் திறந்து நம்முடன் வழிநடப்பதை உணர்த்துகிறார். சேறும் சகதியும் நிறைந்த பாதையில் வழுக்கி விடாமல் நடக்க ஊன்றுகோல் தேவைப்படுகிறது. அவ்வாறே வாழ்க்கையில் வழுக்கி விழாதிருக்க ஆன்றோரின் அருள்வாக்கு தேவை என்கிறார் வள்ளுவர்.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் (குறள் 415).

திருவிருந்து: இரண்டு சீடர்கள் கிறிஸ்துவின் விவிலிய விளக்கத்தைக் கேட்டபோது, அவர்களுடைய உள்ளம் பற்றி எரிந்தாலும் அவர்கள் அவரை இன்னும் அடையாளம். கண்டுகொள்ளவில்லை. ஆனால் கிறிஸ்து அவர்களோடு அமர்ந்து, அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுக் கொடுத்தபோதுதான் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டன; அவரை அடையாளம் கண்டுகொண்டனர் (லூக் 24:30-31). எனவே, கிறிஸ்து தம்மை வெளிப்படுத்தப் பயன்படுத்திய இரண்டாவது ஆயுதம், திருவிருந்து (நற்கருணை).

தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடிய போதெல்லாம் அப்பம் பிட்டனர் (திப 2:42), நற்ருணையின்றித் திருச்சபை இல்லை: திருச்சபை இன்றி நற்கருணை இல்லை. இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல, நற்கருணைதான் திருச்சபை வாழ்வின் ஊற்றும் உச்சியும் ஆகும் (திருச்சபை. எண் 11), உயிர்த்த கிறிஸ்து அப்பத்தைப் பிட்டு அந்த இரண்டு சீடர்களுக்குக் கொடுத்தபின் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்து விட்டார். ஏனெனில் அவரது இரண்டாம் வருகைவரை. அப்பம் பிடுவதில், அதாவது நற்கருணைக் கொண்டாட்டத்தில் நாம் அவரை அடையாளம் காண வேண்டும் என்பதே அவரது விருப்பம்.

திருச்சபை: கிறிஸ்தவர்களின் மூன்றாவது முடிச்சு திருச்சபை என்னும் சமூகமாகும். கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொண்ட அந்த இரண்டு சீடர்கள் உடனடியாக எருசலேம் திருச்சபைக்குத் திரும்பி அங்கிருந்த சீடர்களுடன் அவர்கள் அப்பம் பிடுகையில் கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொண்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர் (லூக் 24:33-35). அனைவரும் கிறிஸ்து உயிருடன் இருப்பதை உணர்ந்தனர்.

திருச்சபையின் உறவு ஒன்றிப்பில் நிலைத்து இருந்துதான் திருவிவிலியம் படிக்க வேண்டும்: திருவிருந்தில் பங்கேற்க வேண்டும். திருச்சபையில் இருந்து பிரிந்து போலி சபைகளுக்குச் செல்லுபவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. ஒரு விவசாயி ஒரு குளத்தில் இருந்த ஆமையிடம் தனது வீட்டில் குளத்துத் தண்ணீரை விட இதமான தண்ணீர் இருப்பதாகக் கூறி அதைத் தன் வீட்டுக்குக் கொண்டுபோனார் வீட்டில் ஓர் அடுப்பில் பானையில் தண்ணீரை நிரப்பி அதில் ஆமையை விட்டு அடுப்பைச் சூடுபடுத்தினார். இளஞ்சூட்டில் ஆமை ஆனந்தமாகத் துள்ளியது, ஆனால், சிறிது சிறிதாக இளஞ்சூடு கொதிக்கும் தண்ணீராக, ஆமை அதில் வெந்து செத்தது. விவசாயி அதைச் சாப்பிட்டு மகிழ்ந்தார்.

அவ்வாறே கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்து இதர சபைகளுக்குச் செல்லும்போது ஆரம்பத்தில் ஆனந்தம் அடைகின்றனர். ஆனால் இறுதியில் தங்கள் விசுவாசத்தை இழந்து, உடைமைகளையும் இழத்து, முகவரி இல்லாமல் பரிதாபமாகத் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கின்றனர். இத்தகைய பேராபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள எப்பொழுதும் விழிப்பாயிருக்க வேண்டும்.

ஒவ்வொரு திருப்பலியிலும் கிறிஸ்து எம்மாவுசுக்குச் சென்ற சீடர்களின் கண்களைத் திறக்கப் பின்பற்றிய அதே வழிமுறையைத் திருச்சபை பின்பற்றுகிறது. முதற்பகுதி அருள்வாக்கு வழிபாடு. இரண்டாம் பகுதி நற்கருணை வழிபாடு. திருவிவிலியம், நற்ருணை விருந்து, திருச்சபையின் உறவு ஒன்றிப்பு ஆகிய முப்பெரும் கூறுகளில் ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு, மற்றவற்றை ஒதுக்கிவிடாமல் இருக்க விழிப்பாயிருப்போம்; மூன்றையும் முழுமையாகப் பயன்படுத்தி, இம்மையில் வளமுடன் வாழ்ந்து, முடிவில்லாப் பேரின்ப வாழ்வைப் பெற்று மகிழ்வோம்!


 
 
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
தெருவிலே திருப்பலி

இன்றைய நற்செய்திப் பகுதிக்கு ஏற்றதொரு தலைப்பிட வேண்டுமா? 'தெருவிலே ஒரு திருப்பலி' என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.


- வீதியிலே வார்த்தை வழிபாடு
- வீட்டிலே பலி வழிபாடு.


"மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!" (லூக்.24:26) இதுவன்றோ இறைவனின் திருவுளம்! வழிப்போக்கனாக வந்திணைந்த இயேசுவின் இந்தச் சொற்கள், இறைவனின் திட்டத்தை, விருப்பத்தை அறிந்து ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பே திருப்பலி என்பதை உணர்த்துகின்றன. 'மொழியில் சிறந்தது மௌனம், மருந்தில் சிறந்தது மன்றாட்டு' என்பார்கள். இறை மகிமையை அல்ல, இறை உள்ளத்தை அறிந்து கொள்ள முற்படுவது - இதுவே திருப்பலி!

"இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன (லூக்.24;15,16). அதற்குக் காரணம்?

அச்ச உணர்வு சீடரின் கண்களை மூடியது, காணும் திறனை இழக்கச் செய்தது.
நம்பிக்கைக் குறைவு அவர்களின் அறிவை மழுங்கடித்தது, மந்தமடையச் செய்தது.

இதைப் போலத்தான் நமது வாழ்விலும், அச்சமும் நம்பிக்கை இன்மையும் ஒன்று சேர்ந்து நமது விசுவாசக் கண்களை மறைத்துவிடும். அப்பொழுதெல்லாம் இறைவன் நம்மோடு இருப்பதை உணராமல் கண்டுபிடிக்காமல் போய் விடுகிறோம்.

இயேசுவை மறுதலிக்கும்படி தூய ஜான் கிறிசோஸ்டம் கட்டாயப் படுத்தப்பட்டார். அதற்குக் கிறிசோஸ்டம் மறுப்புத் தெரிவிக்க, அதனால் கோபமடைந்த அந்த நாட்டு ஆளுனர் "உன்னை நான் நாடு கடத்துவேன்' என்று அவரைப் பயமுறுத்தினான். அதற்குக் கிறிசோஸ்டம் கடவுள் எங்கு இல்லையோ அங்கு என்னை நாடு கடத்தினால் மட்டுமே பயப்படுவேனேயொழிய வேறு எங்கு அனுப்பினாலும் நான் பயப்பட மாட்டேன்" என்றார்.

கொந்தளிக்கும் கடல். அதைக் கண்டு அஞ்சி நம்பிக்கை இழந்துவிட்ட சீடர்கள், நீரின் மீது நடந்து வந்த இயேசுவைக் கண்டு ஐயோ பேய் என அச்சத்தினால் அலறினர்" (மத்.14:26, மார்க் 6:49) அச்சம் அவர்களைக் குருடர்களாக்கியது.

இயேசுவின் உடலைக் கல்லறையில் காணாது மரியா அழுகிறாள். இயேசு அங்கே வருகிறார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவள் அறிந்து கொள்ளவில்லை" (யோவான் 20:14) இனி அவரை எங்கே காணப்போகிறோம் என்ற நம்பிக்கை இழப்பு அவளை நிமிர்ந்து ஏறெடுத்துப் பார்க்காதவாறு செய்து விடுகின்றது.

இதைப்போலவே எம்மாவு சென்ற சீடர்களும் உடன்நடந்த இயேசுவை இனம் காணாதபடி அவர்களின் முகவாட்டம் (லூக்.24:17) மனமுடைவு விரக்திக்குத் தள்ளியிருந்தது. அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்" (லூக்.24:20) என்றார்கள். இப்போது அந்த நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். நம்பிக்கை என்னும் உயிரை இழந்துவிட்டவனுக்கு அறிவு எங்கே இருக்கும். எப்படி இயங்கும்? எனவே அறிவிலிகளே, மந்த உள்ளத்தினரே" (லூக்.24:25) என்ற இயேசுவின் கடிந்துரைக்கு ஆளாகிறார்கள்.

வாழ்வு என்னும் ஓடம் எப்பொழுதும் அமைதி ஆற்றில் செல்வதில்லை. துன்பம் என்னும் கடலுக்குள் நுழையும் போது நம்பிக்கை தான் நமக்குக் கண்கள். அது இருந்தால் இறைவன் புயலிலும் இருப்பதை நாம் உணரலாம்.

எத்தனை பெரிய வெள்ளிக்கிழமைகளைச் சந்தித்தால் என்ன? உயிர்த்த ஞாயிறாய் - உதய சூரியனாய் இயேசு நம்மோடு இருக்கிறார் என்பதை இறைவார்த்தையும் இயேசு நிறுவிய திருவருள் சாதனமும் (நற்கருணை) நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும்.

உயிர்த்து உயிர்வாழும் இயேசுவை இனம் கண்டு சந்திக்க இரு வழிகளுக்கு எம்மாவு நிகழ்வு அழுத்தம் கொடுக்கிறது.
1. இறைவார்த்தையைக் கேட்கும் போது (in the spoken word)

"வழியிலே அவர் நம்மோடு பேசி மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? (லூக்.24:32). சீடர்கள் இயேசுவை அடையாளம் காணாவிட்டாலும் இயேசுவின் வார்த்தைகள் ஆறுதல் அளித்தன. இறைவார்த்தைக்குத் தனி ஆற்றல் உண்டு.

ஞாயிறு வழிபாடு முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் வயதான மூதாட்டி. அவளைக் கண்ட இளைஞர்கள் கிண்டலாக, பாட்டி, இன்று மறையுரையில் சாமியார் என்ன சொன்னார்? என்று கேட்டார்கள். வயதான பெண்மணி நினைத்துப் பார்த்தாள். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. "சாமியார் சொல்வது ஒன்றும் நினைவில் பதிவதில்லை என்றால் எதற்காகக் கோவிலுக்குப் போகிறாய்?'' என்று கேட்டுச் சிரித்தனர். ஒரு மூங்கில் கூடையை அவர்களிடம் கொடுத்து அருகில் உள்ள நீரோடையில் அமிழ்த்தித் தண்ணீர் கொண்டு வரச் சொன்னாள். அவர்கள் கொண்டு சென்று நீரில் அமிழ்த்தி வெறுங் கூடையைக் கொண்டு வந்தனர். "இந்தக் கூடையில் எத்தனை ஓட்டைகள். இதில் எப்படித் தண்ணீர் தங்கும்? என்றனர். அவள் சொன்னாள்! "உண்மைதான். கூடையில் தண்ணீர் தங்காது. ஆனால் கூடையை இப்போது பாருங்கள். நீரில் நனைந்ததும் அதன்மேல் படிந்திருந்த தூசி அகலவில்லையா? கூடை இப்போது சுத்தமாக இல்லையா?" அதுபோல் இறைவார்த்தை எனக்குள்ளே பதியவில்லை என்றாலும் அதைக் கேட்கும் போது நான் தூய்மையாவதை உணருகிறேன்'.
2. அப்பத்தைப் பிட்கும் போது (in the broken bread)

"அவர் அப்பத்தைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது... அவர்களும் அவரை அடையாளம் கண்டு கொண்டார்கள்' (லூக்.24:30,31) இயேசுவை இனம் காண உணர்ந்து ஏற்க இறைவார்த்தை மட்டும் போதாது. நற்கருணை என்னும் அருள்சாதனம் வேண்டும்.


இறைவார்த்தை
- மனித சொல்லுரு எடுத்தது. அது விவிலியம்
- மனித உடலுரு எடுத்தது. அது நற்கருணை


கத்தோலிக்குத் திருச்சபை வைத்திருக்கும் கருவூலம் திருவருள் சாதனம். எவ்வளவு பெருமைக்குரியது!


 
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
 
 
 
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி

 
 
புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌, பெங்களூர்
 
 
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌
 
 
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.

 
 
 
 

   உன்னோடு நான் இருக்கின்றேன் சிறுபிள்ளை என்று சொல்லாதே! என்று சொல்லி
என் வாழ்வை நன்கு உயர்த்திடும் ஏணியாக்கினாய்! சுடர் தீபமாக்கினாய்!!