சிலுவை அடையாளம் கடவுளின் அருளைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை
யுடன் வருகை தந்துள்ள அன்பு இறை மக்களே, உங்கள் அனைவரையும்
திருச்சிலுவையின் மாட்சி விழா வழிபாட்டிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
திருச்சிலுவை தியாகத்தின் சின்னம், மீட்பின் சின்னம். வெற்றியின்
சின்னம். அத்தகைய சிலுவையை மாட்சிப்படுத்து வதன் மூலம் நிலை
வாழ்வில் பங்கெடுத்து இறையனுபவம் பெற்றிட இன்றைய விழா நம்மை அழைக்கிறது.
திருச்சிலுவைவிழா, கடவுள் நமக்குச் செய்த வியத்தகு செயல்களை நன்றியோடு
நினைத்துப் பார்க்கும் நன்றியின் விழா. சிலுவை துன்பத்தின் சின்னம்
என்று பயந்து ஓடாமல், அது மூவொரு இறைவனின் பிரசன்னம் என்பதை உணர்ந்து
வாழ இன்றைய விழா நமக்கு அழைப்பு விடுக்கிறது. மூவொரு இறைவன் நம்மீது
வைத்திருக்கின்ற அன்பு, இரக்கம் முதலான பண்புகளுக்கு சிலுவை
சான்றாக அமைகிறது.
பாலை நிலத்தில் மோசேயால் வெண்கலப் பாம்பு உயர்த்தப்பட்ட நிகழ்ச்சி
இயேசுவின் சிலுவை மரணத்துக்கு முன் அடையாள மாகும். வெண்கலப்
பாம்பைக் கண்டோர் இவ்வுலக வாழ்வைப் பெற்றுக் கொண்டது போல,
சிலுவையில் உயர்த்தப்பட்ட இறை மகனைக் கண்டுணர்வோர் மறுவுலக
வாழ்வைப் பெற்றுக்கொள்வர். கடவுளின் ஒரே மகன்மீது நம்பிக்கை
கொள்ளும்போது நாம் ஒளிமயமான நிலைவாழ்வை உரிமை யாக்கிக்கொள்ள
முடியும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
ஆணவம், அகங்காரம், சுயநலம், தற்புகழ்ச்சி, இறுமாப்பு போன்ற அழுக்கு
களை கழுவி நம் அகம், புறங்களைச் சுத்தமாக்கி, தாழ்ச்சி என்ற ஆடை அணிந்து,
சிலுவை அடையாளங்களைத் தரித்து, நமது கிறிஸ்தவ வாழ்விற்கான எல்லா
நலன்களையும் திருச்சிலுவை வழியாக பெற்று மீட்பின் மக்களாய் வாழ இத்திருப்பலியில்
இறையருளை வேண்டுவோம்.
திருச்சிலுவையின் மகிமை விழா
வருகைப் பல்லவி
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில்தான் நாம் பெருமை
பாராட்ட வேண்டும். அவரிலேதான் நமக்கு மீட்பும் வாழ்வும் உயிர்த்தெழுதலும்
உண்டு. அவர் வழியாகவே நாம் மீட்கப்பெற்றோம்; விடுதலை அடைந்தோம்.
திருப்பலி முன்னுரை
அன்பிற்கினியவர்களே, இயேசுவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என்
அன்பான வாழ்த்துக்கள்.
இன்று நாம் திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.
சிலுவை என்பது ஒரு காலத்தில் சாபத்தின், அவமானத்தின் சின்னமாக இருந்தது.
ஆனால், இயேசு கிறிஸ்து சிலுவையில் தன்னையே பலியாக்கி, அதன் வழியாக
நமக்கு மீட்பைக் கொடுத்ததால், சிலுவை இன்று வெற்றியின் அடையாளமாக,
மீட்பின் கொடியாக உயர்ந்து நிற்கிறது. சிலுவையின் வழியாகவே நாம்
கடவுளின் எல்லையற்ற அன்பையும், இரக்கத்தையும் கண்டுகொள்கிறோம். இந்த
சிலுவையானது, மரணத்தின்மேல் வாழ்வு கொண்ட வெற்றியையும், பாவத்தின்மேல்
அருள் கொண்ட ஆட்சியையும் நமக்கு வெளிப்படுத்துகிறது.
இந்தத் திருப்பலியில், சிலுவையின் வழியாக நமக்குக் கிடைத்த
மீட்புக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். மேலும், நம் வாழ்வின்
சோதனைகளையும், துன்பங்களையும் இயேசுவின் சிலுவையோடு இணைத்து, அவற்றைப்
பொருளுள்ளதாக்க இந்தத் திருப்பலி நம்மை அழைக்கின்றது. கிறிஸ்துவோடு
சிலுவையில் அறையப்பட்டு, அவரோடு உயிர்த்தெழுந்து, புதியதோர்
வாழ்வைத் தொடங்குவோம். வாருங்கள், இந்தத் திருப்பலியில் முழுமையாகப்
பங்கேற்று, சிலுவையின் வல்லமையைப் பெற்று, நம் வாழ்வை வளமுள்ளதாக்குவோம்.
திருப்பலி முன்னுரை 2
இறையேசுவில் அன்பிற்குரிய சகோதரிகளே, சகோதரர்களே, அன்னையாம் திருஅவை
இன்று திருச்சிலுவையின் மகிமையைக் கொண்டாடி மகிழ்கின்றது. சிலுவை
என்பது நமது மீட்பின் சின்னம். கடவுளின் உச்சக்கட்ட அன்பின் அடையாளம்.
ஆனால் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிலுவை என்றால்
அது அவமானத்தின் சின்னம். ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்குப்பின்
கான்ஸ்டான்டைன் என்ற அரசன் தன்னை கிறிஸ்தவராக அறிவித்தார். அதன்
பின்பு சிலுவை கிறிஸ்தவர்களின் அடையாளமாகக் கருதப்பட்டது. அவர்
திருச்சிலுவையின் மகிமையை அறிந்து போருக்குச்செல்வதற்கு முந்திய
நாள் கனவில் இந்த சிலுவை அடையாளத்தையும் அதன்கீழ் இந்த சிலுவை அடையாளத்தினால்
வெற்றி பெறுவாய் என்று எழுதியிருந்ததையும் கண்டார். உடனே மறுநாள்
போருக்குச் செல்லுமுன் கொடிகளில் சிலுவை அடையாளம் வரைந்து
சென்றார். மிகுந்த வெற்றியோடு திரும்பினார். இவருடைய அன்னை கெலன்
கல்வாரி மலையில் இயேசுவின் சிலுவையைக் கண்டெடுத்தார்.
கி.பி. 614ம் ஆண்டு பாரசீக மன்னன் 2ம் கோஸ்மாஸ் படையெடுத்து வர
இந்தச் சிலுவை மீண்டும் அரசர் கைவசம் வந்தது. அரசர் எருசலேமுக்குப்
பயபக்தியுடன் தோளில் சிலுவையை சுமந்து வந்தார். கல்வாரி மலையில்
அவரால் நுழைய முடியவில்லை. அரச ஆபரணங்களுடன் சுமந்து வந்ததைப்
பார்த்த எருசலேம் ஆயர் அரச ஆடைகளைக் களைந்து தவ உடைகளைத் தரித்து
வரச்சொன்னபோது அவரால் கல்வாரி மலைக்கு வர முடிந்தது.
திருக்கல்லறையில் திருச்சிலுவையை அரசர் வைத்தார். அன்று முதல்
திருச்சிலுவை மகிமை என்ற விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
அவமானத்தின் சின்னமான சிலுவை மீட்பின் சின்னமாக வான் வீட்டின்
வழிகாட்டியாகத் திகழ்கிறது. நம் அன்றாட வாழ்வில் வரும் சிறுசிறு
துன்பம் என்னும் சிலுவையை இயேசுவுக்காக ஏற்று அவர் வழியில் நடக்க
இத்திருப்பலியில் பங்கேற்போம்.
திருப்பலி முன்னுரை 3
ஆண்டவருக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்துநான்காம் ஞாயிறு
திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
இனியவர்களே! திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவை
கொண்டாடுகின்றோம். யூதர்கள் அரும் அடையாளங்களையும், கிரேக்கர்கள்
ஞானத்தையும் நாட, நாங்களோ சிலுவையில் அறையுண்ட இயேசுவை அறிக்கை
செய்வதில் அக்கறை காட்டுகின்றோம் என்று பவுல் அடிகளார்
கூறுகின்றார். இயேசுவே சிலுவையை சுமந்ததால், அவமானத்தின் சின்னமான
சிலுவை மகிமைப் பெற்றது. இச்சிலுவையை தூக்கிக் கொண்டு என்னை
பின்பற்றுகின்றவனே என்னுடைய சீடன் என்ற தகுதியைப் பெறுகின்றார்
என்கின்றார். வாழ்வின் எந்த நிலையையும் மாற்றியமைக்க இறைவனால்
முடியும். எனவே நம்முடைய இன்ப துன்பமான நிலையை அவருடைய பாதத்தில்
ஓப்புக் கொடுத்து, நம்பிக்கை கொள்வோமேயானால், அன்றாட வாழ்வின்
சிலுவையை நம்பிக்கையோடு எடுத்துச் செல்ல முன்வருவோமேயானால், அவர்
நம்பிக்கைக்குரியவர், அழுகையின் முக்காட்டை மாற்றி, மகிழ்ச்சியால்
நம்மை நிரப்புவார். பக்தியுடனே பலியிலே பங்கேற்று செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை:
பாம்பு கடியினால் பரிதவித்துக் கொண்டிருந்த இஸ்ரயேல் மக்கள்,
மோசே உயர்த்திய வெண்கலப் பாம்பைப் பார்த்து நலம் பெற்றனர்.
அதுபோல, பாவத்தினால் துன்புற்றுக் கொண்டிருந்த மனிதகுலம்
சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்ப்பதால் நிலைவாழ்வை
அடையும். தீமைக்கு எதிராகக் கடவுள் தரும் வெற்றியையும்,
மனிதர்கள் மீது அவர் கொண்டுள்ள எல்லையற்ற அன்பையும்
சுட்டிக்காட்டும் இந்த முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
கடவுள் வடிவில் உயர்நிலையில் இருந்தவர் இயேசு. அவர் தம்மைச்
சிலுவைச் சாவு மட்டும் தாழ்த்தி, கீழ்ப்படிந்ததால் கடவுள் அவரை
மிகவே உயர்த்தி மேன்மையுறச் செய்தார். கீழ்ப்படிதலுக்கும்
பணிவுக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த
இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் செவிசாய்ப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. திருச்சிலுவையின் மகிமையை கொண்டாடுகிற இந்நாளில்,
தாயாம் திரு அவையும், அதன் தலைவராம் திருத்தந்தை லியோ,
ஏனைய ஆயர்கள், குருகுலத்தார், துறவறத்தார், பொதுநிலையினர்
ஆகிய அனைவரும், இயேசுவின் திருச்சிலுவையை ஆராதிப்பதோடு
நின்றுவிடாமல், சிலுவையின் பாதையில் உறுதியுடன் பயணிக்கும்
எதிர்நோக்கின் திருப்பயணிகளாக விளங்கிட, அருள்தர
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. இறைவன் அருளும் அமைதியின் பாதையில் நடவாமல், சண்டை
- சச்சரவுகள், போர் - போராட்டங்கள், வன்முறை - தீவீரவாதம்
போன்ற அழிவின் பாதைகளைத் தேர்வுசெய்யும் உலகினை,
நீர்தாமே நல்வழிக்கு அழைத்து வரவும், உலகத்தலைவர்களும்,
எம்நாட்டுத் தலைவர்களும், தம் பொறுப்புணர்ந்து செயல்படவும்,
அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல்,
நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும்
அளவுக்கு, உலகின் மேல் அன்பு கூர்ந்த இறைத்தந்தையின்
அன்பினை, உலக மக்கள் அனைவரும், சாதி, மத, இன பேதமின்றி
உணரவும், கிறித்தவர்களாகிய நாங்கள் அந்த இறையன்பை பற்றுறுதியுடன்
வெளிப்படுத்தும் மக்களாக விளங்க வேண்டுமென்றும், இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
4. தம்மையே வெறுமையாக்கி, கீழ்ப்படிந்து,
தாழ்த்திக்கொண்டதனால் விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும்
மண்டியிடும் அளவிற்கு கடவுளால் உயர்த்தப்பட்டு, எப்பெயருக்கும்
மேலான பெயர் அருளப்பட்ட இயேசுவைப் பின்பற்றி, இங்கே
கூடியுள்ள நாங்கள் அனைவரும், தாழ்ச்சியை அணிந்தவர்களாகவும்,
துன்பத்தைக் கண்டு அஞ்சாதவர்களாகவும் வாழ்ந்திட வரமருள
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இயேசு கிறிஸ்து ஆண்டவர் என நாவாலே அறிக்கையிடுவதோடு
நில்லாமல், வாழ்வாலும் சான்று பகரவும், வாழ்வின் எல்லாச்
சூழல்களிலும், சிலுவையைப் புறந்தள்ளாமலும், சிலுவையைக்
கண்டு பயந்தொளியாமலும் வாழ, வரமருள வேண்டுமென்று, இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
6. இயேசுவின் திருச்சிலுவை, எல்லா நோய்களுக்கும் மருந்தாகவும்,
துன்பங்களில் ஆறுதலாகவும், தனிமையில் துணையாகவும் இருக்க,
நோயால் அவதிப்படுவோர், தனிமையில் வாடுபவர், ஏழ்மையால்
தவிப்பவர் அனைவரையும் உம் இரக்கத்தின் கரத்தால் தாங்க
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
7. சிலுவையின் பாதையில் தம் வாழ்வை நிறைவுசெய்து உம்மை
வந்தடைந்த ஆன்மாக்களுக்கு நித்திய அமைதியை அளிக்கவும்,
சிலுவையின் நம்பிக்கையில் வாழும் நாங்களும், எமதாண்டவராகிய
இயேசு கிறிஸ்துவின் வழியில் புனிதமாக வாழ்ந்து, உம் இல்லத்தில்
நிலைவாழ்வு பெற்றிட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறைத்திரு. அமிர்தராச
சுந்தர் ஜா.
திருச்சிலுவையின் மகிமை
விழா
திருப்பலி முன்னுரை
இனியவர்களே! திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவை
கொண்டாடுகின்றோம்.
யூதர்கள் அரும் அடையாளங்களையும், கிரேக்கர்கள் ஞானத்தையும் நாட,
நாங்களோ சிலுவையில் அறையுண்ட இயேசுவை அறிக்கை செய்வதில் அக்கறை
காட்டுகின்றோம் என்று பவுல் அடிகளார் கூறுகின்றார்.
இயேசுவே சிலுவையை சுமந்ததால், அவமானத்தின் சின்னமான சிலுவை மகிமைப்
பெற்றது. இச்சிலுவையை தூக்கிக் கொண்டு என்னை பின்பற்றுகின்றவனே என்னுடைய
சீடன் என்ற தகுதியைப் பெறுகின்றார் என்கின்றார்.
வாழ்வின் எந்த நிலையையும் மாற்றியமைக்க இறைவனால் முடியும். எனவே நம்முடைய
இன்ப துன்பமான நிலையை அவருடைய பாதத்தில் ஒப்புக் கொடுத்து, நம்பிக்கை
கொள்வோமேயானால், அன்றாட வாழ்வின் சிலுவையை நம்பிக்கையோடு எடுத்துச்
செல்ல முன்வருவோமேயானால், அவர் நம்பிக்கைக்குரியவர், அழுகையின்
முக்காட்டை மாற்றி, மகிழ்ச்சியால் நம்மை நிரப்புவார். பக்தியுடனே
பலியிலே பங்கேற்று செபிப்போம்.
மன்றாட்டுகள்:
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
சிலுவையில் அறையுண்ட மெசியா! நாட்டை ஆள்வோர், மக்களின் மீது
சிலுவைகளை சுமத்தாமல், அன்றாட வாழ்வில், மக்கள் சுமக்கும்
சிலுவைகளை இறக்கி வைக்க துணைநிற்க அருள்தர இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
சிலுவையில் அறையுண்ட மெசியா! பலியிலே பங்கேற்கும் நாங்கள், எங்களது
சிலுவைகளை மட்டும் பாராமல், மற்றவர்களது சுமைகளை இறக்கி வைக்க துணை
நிற்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
சிலுவையில் அறையுண்ட மெசியா! தங்களது துறவற சபை நாம விழாவையும்,
தங்களது பெயர் கொண்ட திருநாளையும், கொண்டாடும் அன்பர்கள்
திருச்சிலுவையின் மகிமையை எடுத்து சொல்லும் விதத்தில் வாழ அருள்தர
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஞாயிறு வாசகங்கள்
எண்ணிக்கை 21:4-9
பிலிப்பியர் 2:6-11
யோவான்: 3:13-17
திருப்பலி
முன்னுரை
கிறிஸ்தவ நம்பிக்கையின் அடையாளம் என அறியப்படும்
திருச்சிலுவையின் திருநாளை இன்று நாம் கொண்டாடுகிறோம்.
துன்பம் என்ற வாழ்வியல் எதார்த்தத்தை நாம் கொண்டாடக்
கற்றுத் தந்துள்ளார் நம் கடவுள். நமக்கு வாழ்க்கைப்
பாடம் எடுக்க அவர் தேர்ந்துகொண்ட வகுப்பறையும்
கரும்பலகையும்தான் சிலுவை.
பொதுக்காலம் ஆண்டின் 24 ம் ஞாயிறு வழிபாட்டிற்கு,
இறையருள் வேண்டி, கிறிஸ்து அரசரின் திருப்பாதம் தேடி
வந்துள்ள பங்கு மக்களாகிய உங்களை, இன்றைய ஞாயிறு
வழிபாட்டைச் சிறப்பு செய்யும், பங்கு வின்சென்ட் தே
பவுல் சபை மற்றும் கோல்பிங் உறுப்பினர், பயனாளிகள்
அனைவரும், பங்குத் தந்தை, இருபால் துறவியருடன்
இணைந்து, இறை இயேசுவின் இனிய நாமத்தில், அனைவருக்கும்
நல்வாழ்த்துகள் கூறி, அன்புடன் வரவேற்கின்றோம்.
குற்றம் செய்தோருக்கான கொடிய தண்டனைக் கருவியாக
விளங்கிய சிலுவையை இயேசு சுமந்து, அதில் அறையப்பட்டு
மரித்ததால், அது "திருச்சிலுவை" என்ற சிறப்புத்
தகுதியுடன் மாட்சி பெற்றது. ஆம். "சிலுவை நமது
பெருமை"
யூதர்கள் அரும் அடையாளங்களையும், கிரேக்கர்கள்
ஞானத்தையும் நாட, நாங்களோ சிலுவையில் அறையுண்ட இயேசுவை
அறிக்கை செய்வதில் அக்கறை காட்டுகின்றோம் என்கிறார்
புனித பவுலடியார். இயேசுவே சிலுவையை சுமந்ததால்,
அவமானத்தின் சின்னமான சிலுவை மகிமைப் பெற்றது.
இச்சிலுவையை தூக்கிக் கொண்டு என்னை பின்பற்றுகின்றவனே
என்னுடைய சீடன் என்றார் இயேசு.
கடவுளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நமக்கு
நல்வாழ்வளிக்கும் ஆற்றல் கொண்டவை. அதில் ஒன்றுதான்
நிலைவாழ்வு. மனிதரின் இறுதி இலக்கும் நிலைவாழ்வு
தான். இந்த நிலைவாழ்வை ஆண்டவராகிய இயேசுவில்
நம்பிக்கை கொள்ளும் எல்லாரும் பெற்றுக் கொள்வர்.
இந்த நிலைவாழ்வை எல்லாரும் பெற வேண்டும் என்ற
தந்தையின் திருவுளத்தின்படி இயேசு சிலுவையில்
தம்மையே கையளித்தார்.
வாழ்வின் எந்த நிலையையும் மாற்றியமைக்க இறைவனால்
முடியும். எனவே நம்முடைய இன்ப துன்பமான நிலையை அவருடைய
பாதத்தில் ஒப்புக் கொடுத்து, நம்பிக்கை கொள்வோம்,
அன்றாட வாழ்வின் சிலுவையை நம்பிக்கையோடு எடுத்துச்
செல்ல முன்வருவோம், அவர் நம்பிக்கைக்குரியவர், நம்
அழுகையின் முக்காட்டை மாற்றி, மகிழ்ச்சியால் நம்மை
நிரப்புவார் என்ற நம்பிக்கையுடன் இத்திருப்பலியில்
பங்கெடுப்போம்.
கடவுள் வடிவில் உயர்நிலையில் இருந்தவர் இயேசு.
அவர் தம்மைச் சிலுவைச் சாவு மட்டும் தாழ்த்தி,
கீழ்ப்படிந்ததால் கடவுள் அவரை மிகவே உயர்த்தி
மேன்மையுறச் செய்தார். கீழ்ப்படிவோருக்கு மிகச்
சிறந்த எடுத்துக்காட்டாக வழங்கப்படும் இரண்டாம்
வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1.) திருச்சிலுவையின் மகிமையை கொண்டாடுகிற இந்நாளில்,
தாயாம் திருச்சபை, அதன் தலைவராம் திருத்தந்தை லியோ,
ஏனைய ஆயர்கள், குருகுலத்தார், துறவறத்தார்,
பொதுநிலையினர் ஆகிய அனைவரும், இயேசுவின்
திருச்சிலுவையை ஆராதிப்பதோடு நின்றுவிடாமல்,
சிலுவையின் பாதையில் உறுதியுடன் பயணிக்கும்
எதிர்நோக்கின் திருப்பயணிகளாக விளங்கிட, அருள்தர
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2.) இறைவன் அருளிய விடுதலை வாழ்வின் மேன்மையை உணராமல்,
அவருக்கு எதிராகப் பேசி, தம்மீது தண்டனையை
வருவித்துக்கொண்ட இஸ்ராயேலரைப் போலவே, இறைவன் அருளும்
அமைதியின் பாதையில் நடவாமல், பணம், பதவி, பட்டம்,
சொத்து சுகம் என்று அழிவின் பாதைகளைத் தேர்வுசெய்யும்
கிறிஸ்தவர்களை, தூய ஆவியானவர்தாமே நல்வழிக்கு அழைத்து
வரவும், கிறிஸ்தவர்கள் தம் பொறுப்புணர்ந்து
செயல்படவும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
3.) தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும்
அழியாமல், நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே
அளிக்கும் அளவுக்கு, உலகின் மேல் அன்பு கூர்ந்த இறைவா!
உலக மக்களும், குறிப்பாக கிறிஸ்தவர்களும், சாதி, மத,
இன பேதமின்றி வாழவும், கிறித்தவர்களாகிய நாங்கள் அந்த
இறையன்பை பற்றுறுதியுடன் வெளிப்படுத்தும் மக்களாக
விளங்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4.) தாழ்ச்சியும் சாந்தமும் உளள இயேசு இறைவா! தம்மையே
வெறுமையாக்கி, கீழ்ப்படிந்து, தாழ்த்திக்கொண்டதனால்
விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடும்
அளவிற்கு கடவுளால் உயர்த்தப்பட்டு, எப்பெயருக்கும்
மேலான பெயர் அருளப்பட்ட உம்மைப் பின்பற்றி, கிறிஸ்து
அரசர் பங்கு மக்கள் அனைவரும், தாழ்ச்சியை
அணிந்தவர்களாகவும், துன்பத்தைக் கண்டு
அஞ்சாதவர்களாகவும் வாழ்ந்திட, வரமருள வேண்டுமென்று,
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5.) "இயேசு கிறிஸ்து ஆண்டவர்" என நாவாலே
அறிக்கையிடுவதோடு நில்லாமல், வாழ்வாலும் சான்று
பகரவும், வாழ்வின் எல்லாச் சூழல்களிலும், சிலுவையைப்
புறந்தள்ளாமலும், சிலுவையைக் கண்டு பயந்தொளியாமலும்
வாழவும், சிலுவையை உற்று நோக்கும் நாங்கள், எங்களுக்கு
மீட்பு தரும் இயேசுவே மட்டுமே, வணங்கி, வழிபட்டு,
ஆராதிக்க அருள்தர, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
தந்தை தஞ்சை டோமி
மறையுரைச்சிந்தனை
GNANA OLI ***
சிலுவைக்கு ஒரு விழாவா? என்று சிலர் எண்ணலாம். ஆம், இது
எல்லா விழாக்களையும் விட மிக முக்கியமான விழா. ஏனென்றால்
ஒரு மரத்தினால் இழந்த வாழ்வை ஒரு மரத்தினாலேயே
பெற்றுக் கொண்டோம். வான்வீட்டின் வழிகாட்டி சிலுவை
விண்ணக வாசலின் திறவுகோல் சிலுவை! கிறிஸ்தவர்களின்
புனித அடையாளம்! நம் மீட்பின் சின்னம்! கடவுளின் பேரன்பின்
உச்சக்கட்ட அடையாளம்! ஆபத்தில் பாதுகாக்கும் கேடயம்!
மகிமையின் அடையாளம்! சிலுவை, பாடுகளைத் தராது! துன்பங்களை
நீக்கும் பேராயுதம்! வெற்றியின் சின்னம்...! என்று இன்னும்
எத்தனையோ சிலுவையைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம். ஆனால்,
இன்றும் கூட சிலுவையைக் கண்டு சிலர் அஞ்சுவதைக் காணலாம்.
தங்கள் வீடுகளில் வைத்திருப்பதை கூட விரும்புவதில்லை.
இங்கு நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து
கொள்ள விரும்புகின்றேன்.
ஒரு நாள் காலை என் கணவர் காலை 6 மணி திருப்பலிக்குச்
சென்று விட்டு வெளியே வரும்போது ஒரு சிலுவை கீழே கிடந்ததாக
என்னிடம் காட்டினார். நானும் வாங்கிப் பார்த்துவிட்டு
அவரிடமே திருப்பிக் கொடுத்தேன். அதைத் தன் சட்டைப்
பையில் வைத்துக் கொண்டார். அப்பொழுது என் உறவினர் ஒருவர்
என் கணவரைப் பார்க்க வந்தார். இரண்டு வீதிகள் தள்ளி
அவர் வீடு உள்ளது. அரசு வேலையில் உள்ளவர்தான்.
வேலைக்குப் போவதற்கு முன் சும்மா உங்களைப் பார்ப்பதற்காக
வந்தேன் என்றார். அவருடன் பேசிக்கொண்டிருந்த என் கணவர்
"இதோ பாருப்பா, ஒரு சிலுவை காலையில் திருப்பலி
முடிந்து வரும்போது கீழே கிடந்தது. இதை நீ
வைத்துக்கொள். இந்தச் சிலுவையில் மரித்து உயிர் பெற்றவர்
உனக்கு எல்லா நேரத்திலும் உதவியாக இருப்பார்" என்று
கூறி சிலுவையை அவரிடம் கொடுத்தார். ஆனால் அவர் உடனே
",ஐயோ! இந்தச் சிலுவையை எல்லாம் என்னிடம் கொடுக்காதீர்கள்.
எனக்கு வேண்டாம். என் வாழ்க்கையில் எனக்கு வரும்
சிலுவைகளே ஏராளம். அதுல இது வேறயா?' என்று மறுத்துவிட்டு,
நான் கொண்டு வந்து கொடுத்த காபியைக் குடித்து விட்டுச்
சென்று விட்டார். என் கணவர் என்னிடம் கூறினார் "இதோட
மகிமை தெரியாமல் உதாசீனம் பண்ணிவிட்டு போகிறான் பார்"
என்று. ஒரு மணி நேரம் கடந்திருக்கும் நான் காலை உணவுக்கு
ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தேன். அப்பொழுது என்
மகனின் நண்பன் ஓடிவந்து, காலையில் எங்கள் வீட்டிற்கு
வந்தவரின் பெயரைச் சொல்லி அவர் லாரியில் அடிபட்டுக் கிடக்கிறார்
அப்பா. பயங்கரக் கூட்ட நெரிசல். போக்குவரத்தும் தடைபட்டு
விட்டது. சீக்கரம் வாருங்கள் என்று சொல்லி, அவனது இரண்டு
சக்கர வாகனத்தில் வைத்து கூட்டிச் சென்றான். அங்கு
குற்றுயிராக, லாரி சக்கரத்தில் இழுத்துச் செல்லப்பட்டு
உடம்பில் ஒரு துணி கூட இல்லாமல் உள்ளாடை ஒன்று மட்டும்
இருக்க, அலங்கோலமாக கோலத்தில் உயிர் ஊசலாடக் கிடந்தார்.
பின் அங்கிருந்தவர்கள் மற்றும் காவல்துறையினரின் அனுமதியோடு
அரசு மருத்துவமனைக்கு அள்ளிச் சென்றிருக்கிறார்கள். ஆனால்,
மருத்துவர்கள் வந்து பார்ப்பதற்குள் எல்லாமே
முடிந்துவிட்டது. வியப்பும், திகைப்பும், துக்கமும்,
துயரமும் நெஞ்சடைக்கும் வேதனையும் என்னை விட்டு அகல ஒரு
வாரம் ஆயிற்று. நான் நினைத்தேன் ",கொடுத்த சிலுவையை
வாங்கி சட்டைப் சட்டைப் பையில் வைத்திருந்தால் இந்த விபத்து
நடந்திருக்காதோ?", என்று. உண்மைதான். சிலுவை ஆபத்தில்
பாதுகாக்கும் கேடயம். பாடுகளையும், துன்பங்களையும்
நீக்கவல்லது.
அன்று இஸ்ரயேல் மக்கள் பாலைவனப் பயணத்தின்போது
மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள்.
இதனால் கடவுள் அவர்கள்மீது சினம் கொண்டு கொள்ளிவாய்ப்
பாம்புகளை அனுப்பி சாகடிக்கிறார். ஆனால், மோசே
மீண்டும் அம்மக்களுக்காக கடவுளிடத்தில் மன்றாடுகிறபோது
அவர்கள்மீது இரக்கம் கொண்டு "வெண்கலப் பாம்பு ஒன்றைச்
செய்து, அதனை மக்கள் நடுவே வை. அப்போது பாம்பினால் கடிபட்ட
எவரும் அதனைப் பார்க்கிறபோது உயிர் பிழைப்பார்கள்" என்று
மோசேயிடம் கூறினார். மோசேயும் அவ்வாறே செய்ய, இஸ்ரயேல்
மக்கள் உயிர் பிழைக்கிறார்கள். இங்கு வெண்கலப் பாம்பு
திருச்சிலுவையின் முன் அடையாளமாக இருக்கிறது. வெண்கலப்
பாம்பைப் பார்த்தவர்கள் வாழ்வு பெற்றது
போல திருச்சிலுவையைப் பார்ப்பவர்கள் வாழ்வு
போல
பெறுவார்கள்.
பொதுவாக சிலுவை மரணம் மிக இழிவாகக் கருதப்பட்டது. இது
கொடியவர்களுக்கும், கொலை, கொள்ளைக்காரர்களுக்கும்,
நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கும் தான் வழங்கப்படும்.
ஆனால், அப்படிப்பட்ட சிலுவைச் சாவை இறைமகன் நம்மீது
கொண்ட அன்பினால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறார்.
"சிலுவை யூதர்களுக்குத் தடைக்கல்லாகவும், பிற இனத்தார்க்கு
மடமையாகவும் இருந்தது", (1 கொரி 1:23). ஆனால், நமதாண்டவர்
இயேசுவின் பாடுகள்
மற்றும் உயிர்ப்பின் வழியாக வழியாக அதனை அதனை
வெற்றியின் சின்னமாக மாற்றிவிட்டார். எனவே, நாம் நமக்கு
வரும் பாடுகளையும், துன்பங்களையும், பற்றாக்குறை, கடன்
தொல்லைகள், நோய் வருத்தங்கள், இயற்கைப் பேரிடர்கள் அனைத்தையும்
பொறுமையாக ஏற்றுக்கொண்டு, அனைத்தையும் இயேசுவின் பாடுகளோடு
சேர்த்து இறைவனுக்கு ஒப்புக்கொடுப்போம். ஆன்மாக்களை
மீட்போம். எல்லாவற்றையும் நமது நித்திய வாழ்விற்கு ஏதுவாக
மாற்றிக் கொள்வோம்.
சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே!
அனைவரும் என்னிடம் வாருங்- கள். நான் உங்களைத்
தேற்றுவேன்" என்று சொன்ன இயேசு நமது வாழ்க்கைச் சிலுவைகளிலிருந்து
நம்மை தேற்றமாட்டாரா? என்ன? எனவே, வாழ்வில் நமக்கு வரும்
துன்பச் சிலுவைகளைக் கண்டு துவண்டு விடாமல், நம்பிக்கையோடு
அவை நமக்கு மீட்பைத் தரவல்லது என்கிற உணர்வோடு ஏற்றுக்கொள்வோம்.
சிலுவை நம் இறைவன் விண்ணையும், மண்ணையும் இணைக்கப் பயன்படுத்திய
பாலம். மனிதனையும், இறைவனையும் இணைத்தது இச்சிலுவையே. இச்சிலுவையில் இயேசு உயர்த்தப்பட்டபோது தான் அன்பு,
தியாகம், தாழ்ச்சி, கீழ்ப்படிதல் இவற்றின் உண்மை முகம்
உலகுக்கு உயர்த்திக்
காண்பிக்கப்பட்டது. இக்குணங்களை
நாமும் ஏற்று, நாள்தோறும் நமக்கு வரும் சிலுவைகளை
பொறுமையோடு சுமந்தால் இயேசுவைப் போல் நாமும் உயர்த்தப்படுவோம்
என்பதை நினைவுறுத்தத்தான் இந்த விழா.
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
மறையுரைச்சிந்தனை -
அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
இன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். எருசலேமில்
கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று
ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த மக்கள்
14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து சிலுவையை அடையாளமாக
வைத்து வழிபட்டனர். 5ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா
செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது.
சிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது? சிலுவைச் சாவு என்றால் அது
உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின் கருத்து. ஆனால் உலகின் பல்வேறு
அரசியல் அமைப்பு முறைகளை ஆராய்ந்தால் இந்தியர்கள், கிரேக்கர்கள்,
எபிரேயர்கள், உரோமையர்கள் என எல்லா 'கலாச்சாரங்களிலும்' ஏதோ ஒரு வகையில்
மக்கள் மரத்தால் அழிக்கப்பட்டிருக்கின்றனர். செலவில்லாத மரண தண்டனை
சிலுவைத் தண்டனை. ஆகையால் தான் உரோமையர்கள் இதைக் கைக்கொள்கின்றனர்.
எதற்காக அழியப்போகும் கைதிகள் மேல் பணத்தைச் செலவழிக்க வேண்டும்.
மேலும் சிலுவை மரணத் தண்டனையில் யாரும் அருகில் இருந்து கவனிக்க
வேண்டும் என்பதும் இல்லை.
இயேசுவின் காலத்தில் சிலுவைச் சாவு பல்வேறு வகைகளில் நிகழ்த்தப்பட்டது.
வழக்கமாக மரண தண்டனை பெறுவோர் கொல்லப்பட்ட சிலுவை மரத்தில் ஏற்றப்பட்டனர்.
சிலுவையில் ஒருசிலர் அறையப்பட்டதாகவும், மற்றும் சிலர் கட்டப்பட்டதாகவும்
ஜோசப் பிலேவுயுஸ் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். உயிருடன்
யாராவது சிலுவையில் அறையப்பட்டால் அவர்களின் நாக்கு அறுக்கப்பட
வேண்டும் எனவும், அவர்களின் ஆண்குறிகள் சிதைக்கப்பட வேண்டும் எனவும்,
ஆடையின்றி அறையப்பட வேண்டும் எனவும் செசரோவின் அரசியல்
டைரிக்குறிப்புகள் தெரிவிக்கின்றனர். மேலும் சிலுவையில் அறையப்பட்ட
உடல்களை யாரும் கல்லறையில் அடக்கம் செய்ய மாட்டார்கள். அவர்களின்
உடல் வானத்துப் பறவைகளுக்கும், காட்டு நாய்களுக்கும் உணவாகப்
போய்விடும். சில மாதங்கள் கழித்து சிலுவையில் தொங்கும் எலும்புக்
கூட்டை எடுத்து ஒரு பள்ளத்தாக்கில் போடுவார்கள். அப்படி அவர்கள் பல
ஆண்டுகளாக எலும்புக் கூடுகளை நிறைத்த இடம்தான் கொல்கொத்தா. இதன் மற்றொரு
பெயர் மண்டை ஓட்டு இடம்.
சிலுவை மரணம் உரோமையருக்கு எதிராக அரசியல் குற்றம் புரிவோருக்கு என
நியமிக்கப்பட்டிருந்தது. மேலும் சிலுவை மரணம் அனைவரும் பார்க்கும்
வண்ணம் பொதுவாக நிறைவேற்றப்பட்டது. அப்படி இருந்தால் தான் அதைப்
பார்ப்பவர்கள் திருந்துவர் என்பது அவர்களின் நம்பிக்கை.
இயேசு தலைமைக்குருவின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டபோது அவர் மேல்
சுமத்தப்பட்ட ஒரே குற்றச்சாட்டு 'இவன் தன்னையே கடவுளின் மகன் என்று
சொல்லி கடவுளுக்கு இணையாக்கிக் கொண்டான்!' என்பதுதான். கடவுளுக்கு
எதிராக பேசும் ஒருவருக்கு யூத சட்டம் அனுமதித்த மரண தண்டனை 'கல்லெறிதல்'.
ஆனால் இயேசுவுக்கு அரசியல் குற்றத்திற்கான தண்டனை வழங்கப்படுகிறது.
இயேசு சிலுவையில் அறையப்பட்டதற்கு வரலாற்றுக் குறிப்புகளை விட, 'ஆன்மீகக்
குறிப்புகளே' மேலோங்கியுள்ளன. மானிடமகன் உயர்த்தப்பட்டபின் அனைவரையும்
தன்னிடம் ஈர்த்துக்கொள்வார் என்று இயேசு நிக்கதேமிடம்
கூறுகின்றார். இங்கே உயர்த்தப்படுதல் என்பது இயேசுவின் உயிர்ப்பை
குறிக்கிறது என சிலர் வாதிட, மற்றவர்கள் சிலுவையில் அறையப்படுதலைக்
குறிப்பிடுவதாகச் சொல்கின்றனர். மற்ற நற்செய்தியாளர்கள் 'உயர்த்தப்படுதல்'
குறித்து எழுதவேயில்லை. வெறும் நற்செய்திக் குறிப்புகளை வைத்து இந்த
விழாவிற்கு நம்மால் அர்த்தம் காண முடியாது.
வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும் போது சிலுவை இயேசுவுக்கு தந்த வலியை
விட மனுக்குலத்திற்கு இன்னும் அதிக வலியைத் தந்திருக்கிறது.
சிலுவைப் போர்களினால் மேற்கத்திய நாடுகள் ஒன்றைறொன்று அடித்துக்
கொண்டதோடு மட்டுமல்லால், யூதர்கள், இஸ்லாமியர்கள் என மற்ற மதத்தினர்
மேலும், தங்கள் காலனி ஆதிக்க நாடுகள் மேலும் போர் தொடுத்து
செந்நீரும், கண்ணீரும் சிந்தி பலர் உறவுகளையும், உடைமைகளையும், உயிர்களையும்
இழந்தது என்ற உண்மை நம் கன்னத்தில் அறைகிறது.
இந்தப் போர்களில் வெற்றி பெற்றவர்கள் வழியாகத் தான் திருச்சிலுவை
மகிமை பெற்றதா? ஒருசிலரின் சுயநலத்திற்கான, அதிகாரத் தக்கவைப்பிற்கான
முயற்சிக்காக சிலுவை பயன்பட்டதென்றால், அது அன்பின் சின்னமாக, இரக்கத்தின்
சின்னமாக, மன்னிப்பின் சின்னமாக, மீட்பின் சின்னமாக எப்படி இருக்க
முடியும்? என்பதும் நாம் கேட்க வேண்டிய கேள்வி.
நம் வழிபாடுகள், நம் பயணங்கள் அனைத்தையும் சிலுவை அடையாளமிட்டுத்
தொடங்குகிறோம். சிலருக்கு சிலுவை இன்னும் துன்பத்தின் சின்னமாகக்
கருதப்படுகிறது. சிலர் ஆராதிக்கின்றனர். சிலர் அலறி ஓடுகின்றனர்.
இந்தச் சிலுவை நமக்கு இன்று சொல்வது மூன்று:
1. வெறுமை. கடவுள் தன்மையை தன் பிறப்பில் இழக்கின்ற இயேசு, தன் மனிதத்தன்மையை
சிலுவையில் இறக்கின்றார். முந்தையதை விட அதிக வலி தருவதாக இது இருந்திருக்கும்.
'இது எனக்கு! இன்னும் எனக்கு!' என்று அனைத்தையும் சேர்த்துக்கொண்டே
போகும் நம் நவீன கலாச்சாரத்திற்கு மாற்றுதான் இயேசுவின் வெறுமை. 'இது
உனக்கு! இன்னும் உனக்கு!' என்று மாற்றுச்சிந்தனையைத் தருவதுதான்
சிலுவை.
2. சிலுவை ஒரு துணிச்சல். என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்!
என்று துணிந்ததால் தான் இயேசுவால் சிலுவையை அரவணைக்க முடிகின்றது.
நம் வாழ்வை நாம் முழுமையாக வாழத் தடையாக இருப்பது நம்மிடம்
குறைந்து வரும் துணிச்சல். 'அதெல்லாம் நமக்கெதுக்குப்பா!' என்று
ஒதுங்கும் மனநிலை வாழ்க்கையை நம்மால் முழுமையால் வாழ முடியாமல்
செய்து விடுகிறது. துணிந்தவுனுக்கு தூக்கு மேடை ஒரு பொருட்டல்ல
என்பதை உணர்ந்தவர்தான் இயேசு.
3. ரெட்கிராஸ், ஆஸ்பத்திரி என நாம் திரும்பும் பக்கமெல்லாம் சிலுவை
நிற்கின்றது. சிலுவை என்றால் நலம் எனவும், உயிர்ப் பாதுகாப்பு
எனவும் அர்த்தப்படுத்தப்படுகின்றது. நாம் சிலுவை அடையாளம்
வரைவதாலும், சிலுவையால் அலங்காரம் செய்வதாலும் திருச்சிலுவைக்குக்
கிடைக்காத பெருமை நாம் நலம் காப்பதிலும், உயிர் காப்பதிலும் தானே
கிடைக்கிறது.
அருள்பணி ஏசு கருணாநிதி
உற்றுப்பாரு... உருமாறு...
இறையேசுவில் இனியவா்களே! திருச்சிலுவை மகிமை பெருவிழா
திருப்பிலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும்
வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன்.
இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல
உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக
அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம்
மன்றாடுகிறேன்.
இன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக்
கொண்டாடுகிறோம். எருசலேமில் கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர்
13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று ஒரு ஆலயம்
எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த
மக்கள் 14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து
சிலுவையை அடையாளமாக வைத்து வழிபட்டனர். 5ஆம்
நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா செப்டம்பர் 14ஆம்
தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது.
சிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது? சிலுவைச் சாவு
என்றால் அது உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின்
கருத்து. ஆனால் உலகின் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளை
ஆராய்ந்தால் இந்தியர்கள், கிரேக்கர்கள், எபிரேயர்கள்,
உரோமையர்கள் என எல்லா 'கலாச்சாரங்களிலும்' ஏதோ ஒரு வகையில்
மக்கள் மரத்தால் அழிக்கப்பட்டிருக்கின்றனர். செலவில்லாத
மரண தண்டனை சிலுவைத் தண்டனை. ஆகையால் தான் உரோமையர்கள்
இதைக் கைக்கொள்கின்றனர். எதற்காக அழியப்போகும் கைதிகள்
மேல் பணத்தைச் செலவழிக்க வேண்டும். மேலும் சிலுவை மரணத்
தண்டனையில் யாரும் அருகில் இருந்து கவனிக்க வேண்டும்
என்பதும் இல்லை.
இயேசுவின் காலத்தில் சிலுவைச் சாவு பல்வேறு வகைகளில்
நிகழ்த்தப்பட்டது. வழக்கமாக மரண தண்டனை பெறுவோர்
கொல்லப்பட்ட சிலுவை மரத்தில் ஏற்றப்பட்டனர். சிலுவையில்
ஒருசிலர் அறையப்பட்டதாகவும், மற்றும் சிலர்
கட்டப்பட்டதாகவும் ஜோசப் பிலேவுயுஸ் என்ற வரலாற்று
ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அவமானமாக கருதப்பட்ட சிலுவை
அன்பர் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதால் சிறப்பானது.
பரிசுத்தரால் பரிசுத்தமாக்கப்பட்டது. திருச்சிலுவை மரமாக
மாட்சிப் பெற்றது.
சிலுவையை பார்க்கும் நம் ஒவ்வொருவருடனும் அது பேசுவதற்கு
தவறுவதில்லை. நீங்கள் சிலுவையை பார்ப்பது உண்டா? இப்போது
பாருங்கள் அது உங்களோடு பேசுகிறது.
1. மனிதா வெறுமையாக்கு உன்னை:
கடவுள் தன்மையை தன் பிறப்பில் இழக்கின்ற இயேசு, தன்
மனிதத்தன்மையை சிலுவையில் இழக்கின்றார். முந்தையதை விட
அதிக வலி தருவதாக இது இருந்திருக்கும். 'இது எனக்கு!
இன்னும் எனக்கு!' என்று அனைத்தையும் சேர்த்துக்கொண்டே
போகும் நம் நவீன கலாச்சாரத்திற்கு மாற்றுதான் இயேசுவின்
வெறுமை. 'இது உனக்கு! இன்னும் உனக்கு!' என்று
மாற்றுச்சிந்தனையைத் தருவதுதான் சிலுவை. இதை இன்றே செய்ய
வேண்டும்.
2. மனிதா துணிச்சலாக்கு உன்னை
என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்! என்று துணிந்ததால்
தான் இயேசுவால் சிலுவையை அரவணைக்க முடிகின்றது. நம் வாழ்வை
நாம் முழுமையாக வாழத் தடையாக இருப்பது நம்மிடம் குறைந்து
வரும் துணிச்சல். 'அதெல்லாம் நமக்கெதுக்குப்பா!' என்று
ஒதுங்கும் மனநிலை வாழ்க்கையை நம்மால் முழுமையால் வாழ
முடியாமல் செய்து விடுகிறது. துணிந்தவனுக்கு தூக்கு மேடை
ஒரு பொருட்டல்ல என்பதை உணர்ந்தவர்தான் இயேசு. அதை இன்று
நாமும் செய்ய வேண்டும்.
3. மனிதா நலமாக்கு உன்னை
நாம் சிலுவை அடையாளம் வரைந்து நம் நலத்தை காக்க வேண்டும்.
நெற்றி, தலை, வாய், நாக்கு என உடல் உடறுப்புக்களில் சிலுவை
அடையாளம் வரைந்து நம்மை நலமாக்க வேண்டும். நாள்தோறும் நாம்
இடும் சிலுவை அடையாளம் நம்மை நலமாக்கும்.
ரெட்கிராஸ், ஆஸ்பத்திரி என நாம் திரும்பும் பக்கமெல்லாம்
சிலுவை நிற்கின்றது. சிலுவை என்றால் நலம் எனவும், உயிர்ப்
பாதுகாப்பு எனவும் அர்த்தப்படுத்தப்படுகின்றது. சிலுவையால்
அலங்காரம் செய்வதாலும் திருச்சிலுவைக்குக் கிடைக்காத
பெருமை நாம் நலம் காப்பதிலும், உயிர் காப்பதிலும் தான்
கிடைக்கிறது. அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மனதில் கேட்க
1. நான் சிலுவையை உற்றுப்பார்த்து அதிலிருந்து பாடம்
கற்றது உண்டா?
2. சிலுவை துன்பத்தின் சின்னம் அல்ல துணிச்சலின் சின்னம்.
நான் துணியலாமா?
மனதில் பதிக்க
சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே.
ஆனால், மீட்புப்பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை" (1கொரி
1:17)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
மறையுரைச் சிந்தனை 05
சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையதளம் ஒன்றில் மக்களுக்கு
மிகவும் பரிச்சயமான அடையாளம் எது என்று காண ஒரு சர்வே
நடத்தப்பட்டது. இஸ்ரயேலைக் குறிக்கும் நட்சத்திரம்,
கிறிஸ்தவர்களைக் குறிக்கும் சிலுவை, பௌத்தர்களைக்
குறிக்கும் சக்கரம், மெக்டொனால்டைக் குறிக்கும் 'எம்'
என்னும் எழுத்து என நிறைய அடையாளங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இறுதியில் மெக்டொனால்டைக் குறிக்கும் 'எம்' என்னும்
எழுத்தே மிகவும் பரிச்சயமானது என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், கிறிஸ்தவர்களாகிய நமக்கு பரிச்சயமான மற்றும் அல்ல,
மாறாக, நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டு ஓர் அடையாளம்
திருச்சிலுவை. இத்திருச்சிலுவையின் மகிமையை இன்று
விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றோம்.
இந்த விழாவின் பின்புலம் அல்லது மரபாகக் கருதப்படுவது
என்ன? கிபி இரண்டு முதல் நான்கு நூற்றாண்டுகளில் இயேசு
அறையப்பட்டு உயிர்நீத்த சிலுவையைக் கண்டுபிடிக்க வேண்டும்
என்னும் ஆர்வம் உரோமையர்கள் மற்றும் தொடக்கக்
கிறிஸ்தவர்களிடையே இருந்தது. இதன்படி 326-ஆம் ஆண்டு
எருசலேமில், கான்ஸ்டான்டைன் பேரரசரின் தாய் புனித ஹெலனா
அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட
திருச்சிலுவை பல இடங்களுக்குப் பவனியாகக்
கொண்டுவரப்பட்டதன் பின்புலத்தில்தான் திருச்சிலுவையின்
மகிமை விழா தொடங்கியது.
திருச்சிலுவை நமக்கு வெறும் அடையாளம் மட்டுமல்ல. மாறாக,
நம் வழிபாட்டை திருச்சிலுவை அடையாளத்தால் தொடங்குகிறோம்,
நிறைவு செய்கிறோம். ஆசீர் அளிக்கும்போதும் இதே
அடையாளத்தையே பயன்படுத்துகின்றோம். அணிகலனாக, ஆபரணமாக,
இல்லங்களில், ஆலயங்களில் என எங்கும் சிலுவையே
வீற்றிருக்கின்றது.
இயேசு சிலுவையை எப்படிப் பார்த்தார் என்பதையும், பவுல்
எப்படிப் பார்த்தார் என்பதையும் இன்றைய இறைவார்த்தை
வழிபாட்டில் வாசிக்கக் கேட்கின்றோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவா 3:13-17) நிக்கதேமிடம்
உரையாடுகின்ற இயேசு, 'பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு
உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்'
என்கிறார். 'உயர்த்தப்படுதல்' என்பதுற்கு யோவான்
நற்செய்தியில் இரு பொருள்கள் உண்டு: ஒன்று, இயேசு
சிலுவையில் உயர்த்தப்படுவது. இரண்டு, இறப்புக்குப் பின்னர்
உயிர்த்தெழுந்தவராய் இயேசு விண்ணேறிச் செல்வது. இந்த
இடத்தில் முதல் பொருளே மேலோங்கி நிற்கிறது. நிக்கதேம் ஒரு
யூதர் என்பதால் முதல் ஏற்பாட்டு நிகழ்வை அறிந்திருக்க
வாய்ப்புண்டு. அந்த நிகழ்வின்படி (இன்றைய முதல் வாசகம்)
பாலைநிலத்தில் தனக்கு எதிராக முணுமுணுத்த மக்களைத்
தண்டிக்கும்படி ஆண்டவராகிய கடவுள் பாம்புகளை அவர்கள் நடுவே
அனுப்புகின்றார். பின்பு அவர்கள் தன்னை நோக்கிக் கூக்குரல்
எழுப்பியபோது, அவரே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து
கம்பத்தில் உயர்த்துமாறு மோசேக்குச் சொல்கின்றார்.
வெண்கலப் பாம்பைப் பார்க்கும் அனைவரும் நலம் பெறுகின்றனர்.
உயர்த்தப்பட்ட பாம்பு மக்களுக்கு நலம் தருகின்றது.
சிலுவையில் உயர்த்தப்படும் இயேசுவும் அனைவருக்கும் மீட்பு
தருகின்றார்.
தாங்கள் நொறுக்கப்பட்டதன் அடையாளமாக அவர்கள் வெண்கலப்
பாம்பை நோக்கிக் கண்களை உயர்த்துகின்றனர். நாம் சிலுவையை
நோக்கி நம் கண்களை உயர்த்தும்போதும் நமக்காக இயேசு
நொறுக்கப்பட்டதை நாம் உணர்கின்றோம்.
இரண்டாம் வாசகத்தில், பிலிப்பி நகர மக்களுக்கு எழுதுகின்ற
பவுல், தன் சமகாலத்தில் விளங்கிய கிறிஸ்தியல் பாடல் ஒன்றை
மேற்கோள்காட்டி, இயேசுவின் தற்கையளிப்பை ஓர் இறையியலாக
வடிக்கின்றார். கடவுள் தன்மையில் இருந்த இயேசு
அத்தன்மையைப் பற்றிக்கொண்டிராமல் தன்னையே வெறுமையாக்கி
சிலுவைச் சாவுக்குத் தன்னை உட்படுத்துகின்றார். இயேசுவின்
நொறுங்குநிலை, தாழ்ச்சி, மற்றும் உருக்குலைந்த நிலையின்
அடையாளமாகச் சிலுவை திகழ்கின்றது.
இயேசு தன் பாடுகளை முன்னுரைக்கும் இடத்தில் எல்லாம் சிலுவை
துன்பத்தின் அடையாளமாக இருப்பதாகத் தெரிகின்றது.
பேதுருவும் கூட அத்தகையதொரு புரிதலைக்
கொண்டிருந்ததால்தான், 'ஆண்டவரே! இது உமக்கு வேண்டாம்'
என்று இயேசுவைத் தடுக்கின்றார்.
இத்திருவிழா நமக்குச் சொல்லும் பாடம் என்ன?
துன்பத்தின் அடையாளமாக இருக்கின்ற சிலுவையே நம் மீட்பின்
அடையாளமாக இருக்கின்றது. இதுதான் வாழ்வின் இருதுருவ நிலை.
சிலுவை என்பது வாழ்வின் இரு துருவ நிலையின் அடையாளம். ஒரே
நேரத்தில் அது விண்ணை நோக்கி நம் கண்களை உயர்த்துமாறு
அழைக்கிறது. அதே வேளையில் இந்த மண்ணுடன் நம் கால்களை ஆணி
அடித்து இறுக்குகிறது. நேர்கோடும் குறுக்குக் கோடும் என
வாழ்க்கையின் பாதைகள் மாறி மாறி மறைவதையும், நெட்டையும்
குட்டையும் இணைந்ததே நாம் என்றும் நினைவூட்டிக் கொண்டே
இருக்கின்றது.
இன்றைய நாளில் திருச்சிலுவையின்முன் சற்று நேரம் அமர்ந்து,
அதைப் பற்றித் தியானித்து, அதனோடு நம்மையே பிணைத்துக்கொள்ள
முயற்சி செய்யலாம்.
அருள்பணி ஏசு கருணாநிதி
சிலுவை அமைதியின் அடையாளம்
ஒருநாள் சிறுவன் இயேசு தனது நண்பன் பைடஸ் என்பவனை பார்த்து
நீ பெரியவனாகி என்ன செய்யப் போகிறாய்? என்றார்..அதற்கு
அவன் நான் தலை சிறந்த தட்சனாகி ஒரு சிம்மாசனம் செய்து,
அந்த சிம்மாசனத்தில் அரசனை அமர வைப்பேன். எங்கிருந்து
பார்த்தாலும் அந்த சிம்மாசனம் தெரியும் என்றான். இப்படி
பேசிய நண்பன் தன் பெற்றோரோடு ஜப்ஃபா நகருக்கு
குடிபெயர்ந்து சென்றுவிட்டான். 18 ஆண்டு காலங்கள்
உருண்டோடின இயேசுவுக்கு வயது 33 ஆக உயர்ந்தது. இயேசுவுக்கு
சிலுவை செய்ய பைடஸ் அழைத்து வரப்பட்டான். இயேசுவுக்கு தான்
சிலுவை செய்யப்போகிறோம் என்பது அவனுக்கு தெரியாது. அவன்
செய்த சிலுவையை இயேசுவின் மீது சுமத்தி அவரை கல்வாரிக்கு
இழுத்துக்கொண்டு சிலுவையில் அறைந்தார்கள். பைடஸ்
மற்றவர்களின் வழியாக உண்மையை உணர்ந்த போது சிலுவை அடியில்
விழுந்து அழுதான். இயேசுவோ 18 வருடங்களுக்கு முன்னால் நீ
சொன்னதை செய்து முடித்து விட்டாய். சிம்மாசனம் ஒன்று
செய்வேன் என்றாய். இந்த சிலுவை தான் அந்த சிம்மாசனம்.
அரசன் ஒருவனை அதில் அமர வைப்பேன் என்றாய். நான் தான் அந்த
அரசன். எங்கிருந்து பார்த்தாலும் அந்த சிம்மாசனம் தெரியும்
என்றாய். இந்த சிலுவை எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்
என்றார்.
இயேசுவின் சிறுவயதோடு தொடர்புபடுத்தி கூறக்கூடிய கதைகளுல்
இதுவும் ஒன்று.
தந்தையே இவர்களை மன்னியும் ஏனென்றால் தாங்கள் செய்கிறது
இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை (லூக்கா 23 : 34)
இவ்வார்த்தைகளை இயேசு உதித்தது சிலுவையிலிருந்தே...
இன்று நாம் தாய் திருஅவையானது திருச்சிலுவை மகிமை விழாவை
முன்னெடுத்துச் செல்கிறது. இம்மண்ணில் உதித்த இயேசு
கிறிஸ்து, சிலுவை மரணத்தை ஏற்று,சிலுவையில் தன்னுயிரை
இழந்ததன் காரணமாக இன்று அவர் அறையப்பட்ட சிலுவை மகத்துவம்
மிக்கதாக மாறியுள்ளது.
பொதுவாகவே குற்றவாளிகளுக்கு மட்டுமே சிலுவை மரணம்
வழங்கப்படும். அதுவும் ஊரோமை அதிகாரிகளால் தான் தண்டனை
கொடுக்கப்படும். ஆனால் குற்றம் ஏதும் செய்யாத இயேசுவுக்கு
ஊரோமை ஆளுநர் பிலாத்துவின் வழியாக மரணதண்டனை தீர்ப்பு
எழுதப்பட்டு, இயேசுவின் மீது சிலுவை சுமத்தப்பட்டு,
சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்துறந்தார். அதுவரை
அவமானத்தின் சின்னமாக கருதப்பட்ட அந்த சிலுவை வெற்றியின்
அடையாளமாக மாறியது. தியாகத்தின் மறு உருவமாக மாறியது.
இன்றைய வாசகங்களில் நாம் வாசிக்க கேட்டது போல அன்று
பாம்பின் சிலை உயர்த்தப்பட்டது யாரெல்லாம் அந்த வெண்கலப்
பாம்பு சிலையை உற்று நோக்குகிறார்கள் அவர்கள் எல்லாம்
குணம் பெற்றார்கள். அதுபோலவே இன்று இயேசுவின் சிலுவை
உயர்த்தப்பட்டுள்ளது நம்பிக்கையோடு அச்சிலுவையை நோக்கக்
கூடிய அனைவரும் தாங்கள் கேட்பதை பெற்றுக் கொள்வார்கள் என்ற
நம்பிக்கை இன்றும் நிலவுகிறது.
நாடெங்கும் கொரோனா தொற்றுநோய் அச்சத்தின் காரணமாக அஞ்சிக்
கொண்டிருந்த சூழலில், மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய
வகையில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் திருவுருவச்
சிலையை திருத்தந்தை அவர்கள் எடுத்து மக்களுக்கு ஆசி
வழங்கியதன் வாயிலாக பலர் மனதளவில் நம்பிக்கை பெற்றார்கள்
என்பது மறுக்கவியலாத உண்மை.
பொதுவாக சிலுவை என்றாலே துன்பத்தின் அடையாளம் என்று
கூறுவார்கள். ஆனால் சிலுவை வெற்றியின் அடையாளம்.
சிலுவை வீரத்தின் அடையாளம்.
சிலுவை தியாகத்தின் அடையாளம்.
சிலுவை அமைதியின் அடையாளம்.
சிலுவை நட்பின் அடையாளம்.
இன்னும் பல வழிகளில் சிலுவையை நாம் அடையாளப்படுத்தலாம்.
இன்று நாம் வாழக்கூடிய உலகத்தில் பெரும்பாலும் மக்கள்
சிலுவையை ஏற்றுக் கொள்ள அஞ்சுகிறார்கள். சிலுவை என்பதை
துன்பம் என கருதி துன்பத்தை வெருக்கிறார்கள். ஆனால் இயேசு
இன்முகத்தோடு துன்பத்தை ஏற்று மக்களுக்குத் தொண்டாற்றி
மாமனிதராக இன்றும் மதிக்கப்பட்டும், நினைக்கப்பட்டும்
வருகிறார். கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து கடவுளுக்கு
இணையாக இருக்கும் நிலையை அறிந்து பற்றி கொண்டிருக்க
வேண்டிய ஒன்றாக கருத வில்லை ஆனால் தம்மையே வெறுமையாக்கி
அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.
மனித உருவில் தோன்றிய அவர் சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும்
சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே
தாழ்த்திக் கொண்டார். இவ்வாறு இயேசு மக்களுக்கு தொண்டாற்ற
அவமானத்தின் சின்னமாக கருதப்பட்ட சிலுவை மரணத்தை
அச்சமின்றி ஏற்றார். இன்று நாம் வாழக்கூடிய இந்த
உலகத்திலும் துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல்,
இயேசுவைப் போல உறுதி கொண்டவர்களாக, மக்களுக்கு தொண்டாற்ற
வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு, துன்பங்களை ஏற்றுக் கொண்டு,
மக்களுக்கு பணியாற்ற நாம் முன்வர இன்றைய வாசகங்கள் வழியாக
இறைவன் நம்மை அழைக்கின்றார்.
தொண்டுள்ளம் கொண்ட தோழனே
அடர்த்தியான அன்பின் ஆழமான செயல்வடிவம் தொண்டு.
நம்மை நேசிக்க மறந்தாலும் நாம் நேசிக்கும் ஒருவருக்கு
செய்யும் உதவி தான் தொண்டு.
அடுத்தவர் கண்ணீரைத் துடைப்பது தொண்டு.
தோல் வலித்தாலும் பிறருக்காக துடுப்பு வலிப்பது தொண்டு.
பூமியை சலவை செய்து புதுப்பிப்பது தொண்டு.
அத்தகைய தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே...
என்ற வாக்கிற்கிணங்க மக்களுக்கு தொண்டாற்ற ஆண்டவர்
இயேசுவின் உண்மை தொண்டர்களாக நாம் இச்சமூகத்தில் வலம்வர
திருச்சிலுவையை முன்னுதாரணமாகக் கொண்டு இயேசுவின் வழியில்
தொண்டாற்ற உண்மையான இயேசுவின் தொண்டர்களாக பயணிப்போம்.
அருள்பணி ஏசு கருணாநிதி
சிலுவை வாழ்வின்
குறி
கிறிஸ்தவர்களாகிய நமக்கு பரிச்சயமான மற்றும் அல்ல, மாறாக,
நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டு ஓர் அடையாளம்
திருச்சிலுவை. இத்திருச்சிலுவையின் மகிமையை இன்று
விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றோம். இந்த விழாவின்
பின்புலம் அல்லது மரபாகக் கருதப்படுவது என்ன? கிபி இரண்டு
முதல் நான்கு நூற்றாண்டுகளில் இயேசு அறையப்பட்டு
உயிர்நீத்த சிலுவையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும்
ஆர்வம் உரோமையர்கள் மற்றும் தொடக்கக் கிறிஸ்தவர்களிடையே
இருந்தது. இதன்படி 326-ஆம் ஆண்டு எருசலேமில்,
கான்ஸ்டான்டைன் பேரரசரின் தாய் புனித ஹெலனா அவர்களால்
கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட திருச்சிலுவை பல
இடங்களுக்குப் பவனியாகக் கொண்டுவரப்பட்டதன்
பின்புலத்தில்தான் திருச்சிலுவையின் மகிமை விழா
தொடங்கியது.
திருச்சிலுவை நமக்கு வெறும் அடையாளம் மட்டுமல்ல. மாறாக,
நம் வழிபாட்டை திருச்சிலுவை அடையாளத்தால் தொடங்குகிறோம்,
நிறைவு செய்கிறோம். ஆசீர் அளிக்கும்போதும் இதே
அடையாளத்தையே பயன்படுத்துகின்றோம். அணிகலனாக, ஆபரணமாக,
இல்லங்களில், ஆலயங்களில் என எங்கும் சிலுவையே
வீற்றிருக்கின்றது. இயேசு சிலுவையை எப்படிப் பார்த்தார்
என்பதையும், பவுல் எப்படிப் பார்த்தார் என்பதையும் இன்றைய
இறைவார்த்தை வழிபாட்டில் வாசிக்கக் கேட்கின்றோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவா 3:13-17) நிக்கதேமிடம்
உரையாடுகின்ற இயேசு, பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு
உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்
என்கிறார். உயர்த்தப்படுதல் என்பதுற்கு யோவான்
நற்செய்தியில் இரு பொருள்கள் உண்டு: ஒன்று, இயேசு
சிலுவையில் உயர்த்தப்படுவது. இரண்டு, இறப்புக்குப் பின்னர்
உயிர்த்தெழுந்தவராய் இயேசு விண்ணேறிச் செல்வது. இந்த
இடத்தில் முதல் பொருளே மேலோங்கி நிற்கிறது. நிக்கதேம் ஒரு
யூதர் என்பதால் முதல் ஏற்பாட்டு நிகழ்வை அறிந்திருக்க
வாய்ப்புண்டு. அந்த நிகழ்வின்படி (இன்றைய முதல் வாசகம்)
பாலைநிலத்தில் தனக்கு எதிராக முணுமுணுத்த மக்களைத்
தண்டிக்கும்படி ஆண்டவராகிய கடவுள் பாம்புகளை அவர்கள் நடுவே
அனுப்புகின்றார். பின்பு அவர்கள் தன்னை நோக்கிக் கூக்குரல்
எழுப்பியபோது, அவரே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து
கம்பத்தில் உயர்த்துமாறு மோசேக்குச் சொல்கின்றார்.
வெண்கலப் பாம்பைப் பார்க்கும் அனைவரும் நலம் பெறுகின்றனர்.
உயர்த்தப்பட்ட பாம்பு மக்களுக்கு நலம் தருகின்றது.
சிலுவையில் உயர்த்தப்படும் இயேசுவும் அனைவருக்கும் மீட்பு
தருகின்றார். தாங்கள் நொறுக்கப்பட்டதன் அடையாளமாக அவர்கள்
வெண்கலப் பாம்பை நோக்கிக் கண்களை உயர்த்துகின்றனர். நாம்
சிலுவையை நோக்கி நம் கண்களை உயர்த்தும்போதும் நமக்காக
இயேசு நொறுக்கப்பட்டதை நாம் உணர்கின்றோம்.
இரண்டாம் வாசகத்தில், பிலிப்பி நகர மக்களுக்கு எழுதுகின்ற
பவுல், தன் சமகாலத்தில் விளங்கிய கிறிஸ்தியல் பாடல் ஒன்றை
மேற்கோள்காட்டி, இயேசுவின் தற்கையளிப்பை ஓர் இறையியலாக
வடிக்கின்றார். கடவுள் தன்மையில் இருந்த இயேசு
அத்தன்மையைப் பற்றிக்கொண்டிராமல் தன்னையே வெறுமையாக்கி
சிலுவைச் சாவுக்குத் தன்னை உட்படுத்துகின்றார். இயேசுவின்
நொறுங்குநிலை, தாழ்ச்சி, மற்றும் உருக்குலைந்த நிலையின்
அடையாளமாகச் சிலுவை திகழ்கின்றது.
இயேசு தன் பாடுகளை முன்னுரைக்கும் இடத்தில் எல்லாம் சிலுவை
துன்பத்தின் அடையாளமாக இருப்பதாகத் தெரிகின்றது.
பேதுருவும் கூட அத்தகையதொரு புரிதலைக்
கொண்டிருந்ததால்தான், ஆண்டவரே! இது உமக்கு வேண்டாம்
என்று இயேசுவைத் தடுக்கின்றார்.
இத்திருவிழா நமக்குச் சொல்லும் பாடம் என்ன? துன்பத்தின்
அடையாளமாக இருக்கின்ற சிலுவையே நம் மீட்பின் அடையாளமாக
இருக்கின்றது. இதுதான் வாழ்வின் இருதுருவ நிலை. சிலுவை
என்பது வாழ்வின் இரு துருவ நிலையின் அடையாளம். ஒரே
நேரத்தில் அது விண்ணை நோக்கி நம் கண்களை உயர்த்துமாறு
அழைக்கிறது. அதே வேளையில் இந்த மண்ணுடன் நம் கால்களை ஆணி
அடித்து இறுக்குகிறது. நேர்கோடும் குறுக்குக் கோடும் என
வாழ்க்கையின் பாதைகள் மாறி மாறி மறைவதையும், நெட்டையும்
குட்டையும் இணைந்ததே நாம் என்றும் நினைவூட்டிக் கொண்டே
இருக்கின்றது. இன்றைய நாளில் திருச்சிலுவையின்முன் சற்று
நேரம் அமர்ந்து, அதைப் பற்றித் தியானித்து, அதனோடு நம்மையே
பிணைத்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.
அருள்பணி ஏசு கருணாநிதி
இன்று திருச்சிலுவையின் மகிமை பெருவிழாவை கொண்டாடுகிறோம்.
இன்று நாம் அருவருப்பான ஒன்றைப் பார்த்தால் 'ஹாரிப்ல்'
என்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உரோமையர்கள்
'எக்ஸ் க்ருசே' ('சிலுவையிலிருந்து') என்பார்கள்.
மனிதர்கள் பார்வையில் அருவருப்பான ஒன்றை இன்று நாம்
மகிமையின் சின்னமாகக் கொண்டாடுகிறோம்.
சிலுவை நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. எங்கு
பார்த்தாலும் சிலுவை நம் கண்முன் நிற்கிறது.
கணிதத்தில் க்ராஸ் என்பது கூட்டல் அல்லது பெருக்கல்.
அல்ஜிப்ராவில் க்ராஸ் என்பது வெறுமை.
டிராஃபிக்கில் க்ராஸ் என்றால் ஆம்புலன்ஸ்.
பேட்டரியிலும், இரத்த வகையிலும் க்ராஸ் என்பது பாஸிட்டிவ்.
அடையாளங்களில் க்ராஸ் என்றால் 'தடை செய்யப்பட்டது'
ஏ பி சி டி இயில் க்ராஸ் என்றால் எக்ஸ்
சாலைகளில் க்ராஸ் என்றால் சந்திப்பு
உரோமை எழுத்தில் க்ராஸ் என்றால் பத்து
விடைத்தாளில் க்ராஸ் என்றால் தவறு
ஏடிஎம் பின்னை பதிவு செய்யும் போது க்ராஸ் என்றால்
சீக்ரெட்
இப்படி திரும்பும் எல்லாப் பக்கமும் தெரியும் க்ராஸ்
நமக்குச் சொல்வது என்ன?
'சிலுவை' என்றால் என்னைப் பொறுத்தவரையில் 'வாழ்வின் அடுத்த
பக்கம்.'
இளமையிலிருந்து பார்க்கும் அதன் அடுத்த பக்கம் முதுமை
சிலுவை.
பிறப்பின் சிலுவை இறப்பு.
விருப்பின் சிலுவை வெறுப்பு.
உடல்நலத்தின் சிலுவை நோய்.
நாம் ஒன்றை எடுக்கும்போதே அதன் அடுத்த பக்கமும் வருகிறதே.
அந்த அடுத்த பக்கம்தான் சிலுவை. ஒரு புத்தகத்தின் முதல்
பக்கத்தை திறக்கும் நாம் அதன் கடைசி பக்கத்தில் அதை
மூடித்தான் வைக்க வேண்டும். திரைப்படத்தின் தொடக்கத்தைப்
பார்க்கும் நாம் அதன் முடிவையும் வாசிக்க வேண்டும்.
ஒன்றைத் தொடங்கும்போது அதன் முடிவும் நம் முன்
வந்துவிடுகிறது. அந்த அடுத்த பக்கம்தான் சிலுவை.
சிலுவை என்றால் நம் நொறுங்குநிலை.
சிலுவை என்றால் நம் உறுதியில்லாத நிலை.
சிலுவை என்றால் நம் உடையும்நிலை.
சிலுவையை நோக்கிய நம் பார்வையை மூன்று நிலைகளில் விவிலியம்
பதிவு செய்கிறது:
அ. 'இந்தச் சிலுவை உமக்கு வேண்டாம்' என இயேசுவிடம்
சொல்கிறார் பேதுரு.
சில நேரங்களில் நாமும் சிலுவை வேண்டாம் என நினைக்கிறோம்.
ஆனால் இது எதார்த்தம் அல்ல.
ஆ. 'இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கும்'
என்கின்றனர் வழிப்போக்கர்கள்.
இந்நிலையில் நாம் சிலுவையிலிருந்து பாதியிலிருந்து ஓடிவிட
நினைக்கிறோம்.
இ. 'நீர் அரசுரிமை பெற்று வரும்போது என்னை நினைவுகூறும்'
என்கிறார் நல்ல கள்வன்.
இவர்தான் சிலுவையை சரியாகப் புரிந்தவர். சிலுவையை
அரியணையாகவும், இயேசுவை அரசராகவும், அவரின் முள்முடியை அரச
கிரீடமாகவும், கையின் ஆணிகளை ஆயுதங்களாகவும் பார்க்க
இவரால் மட்டுமே முடிந்தது.
ஆக, சிலுவையின் மறுபக்கத்தையே பார்க்க வைத்தவர் இவரே.
வாழ்வின் மறுபக்கம்தான் சிலுவை.
இன்று திருச்சபையானது திருச்சிலுவை மகிமை விழாவைக் கொண்டாடுகிறது.
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இவ்விழா
திருச்சிலுவையின் மகிமை, சிலுவையின் வெற்றி, பெருமைமிகு
திருச்சிலுவை நாள்",, உயிர்வழங்கும் அரிய சிலுவை உயர்த்தப்பட்ட
நாள் என பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது.
இப்பெருவிழாவைக் கொண்டாடும் வேளையிலே, இவ்விழா நமக்கு உணர்த்தும்
செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்க்கும்முன் இதனுடைய வரலாற்றுப்
பின்புலத்தை சற்று ஆய்ந்து பார்ப்போம்.
நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கான்ஸ்டன்டைன் என்ற உரோமைப் பேரரசரின்
அன்னை, புனித ஹெலெனா அவர்கள், ஒருமுறை புனித பூமிக்கு திருப்பயணம்
மேற்கொண்டபோது அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூமியை அகழ்வதற்கு
அவர்கள் தூண்டப்பட்டார். அவ்விடத்தை அகழ்ந்தபோது, மூன்று சிலுவைகள்
கண்டுபிடிக்கப்பட்டன. அம்மூன்று சிலுவைகளில் இயேசு அறையப்பட்டச்
சிலுவை எது என்பதைக் கண்டுபிடிக்க, புனித ஹெலெனா ஒரு சோதனையை
மேற்கொண்டார். அதாவது மரணப் படுக்கையில் போராடிக் கொண்டிருந்த ஒரு
பெண்ணை அவர் அவ்விடத்திற்குக் கொணர்ந்தார். அப்பெண், முதல் இரு
சிலுவைகளைத் தொட்டபோது, அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
மாறாக மூன்றாவது சிலுவையை அவர் தொட்டதும் குணமடைந்தார். எனவே, அச்சிலுவையே
இயேசு அறையப்பட்டச் சிலுவை என புனித ஹெலெனா அறிந்துகொண்டார்.
அச்சிலுவையைக் கண்டுபிடித்த இடத்தில், புனித கல்லறைக் கோவில் நிறுவப்பட்டது.
இக்கோவில், 335ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு, செப்டம்பர் 13, 14 ஆகியத்
தேதிகளில் அர்ச்சிக்கப்பட்டது. இந்த அர்ச்சிப்பின் நினைவாகத்தான்
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 14ம் தேதியன்று திருச்சிலுவை உயர்த்தப்பட்டத்
திருநாள் என்று திருச்சபை கொண்டாடப்படுகிறது. இயேசு அறையப்பட்ட
சிலுவையின் ஒரு பெரிய துண்டு புனித கல்லறைக் கோவிலில் பாதுக்காக்கப்பட்டு
வருகின்றது.
614 ஆம் ஆண்டு பெர்சிய நாட்டு அரசன் மெசபத்தோமியாவின்மீது (புனித
நாடுகள் இருக்கும் பகுதி) படையெடுத்துக் சென்று அங்கிருந்த குருக்கள்,
கன்னியர்கள் கிறிஸ்தவர்கள் என்று பல்லாயிரக்கணக்கான மக்களை
கொன்றொழித்து, அங்கே இருந்த திருச்சிலுவையை எடுத்துக்கொண்டு
போய்விட்டான். அதை 627 ஆம் ஆண்டு ஹெராக்ளியஸ் என்ற அரசன்தான்
மீட்டுக்கொண்டு வந்து மீண்டும் அதே இடத்தில் நிறுவினான். அன்றிலிருந்து
மகிமை பொருந்திய திருச்சிலுவை அதே இடத்தில் இருந்து அனைவருக்கும்
அருள்பாலித்துக்கொண்டிருக்கிறது.
தூய ஆண்ட்ருஸ் இவ்வாறு கூறுவார், ",திருச்சிலுவை நம்மை இருளிலிருந்து,
ஒளிக்கு அழைத்து வந்தது. அதுவே நமக்கு வாழ்வு தந்தது; விண்ணகத்தின்
கதவைத் திறந்து தந்தது", என்று. ஆம், இது எவராலும் மறுக்கமுடியாத உண்மை.
பவுலடியார் கூட இதே கருத்தை 1 கொரி 1:18 ல் வலியுறுத்துவார்.
",சிலுவையைப் பற்றிய போதனை அழிவுறுவோருக்கு மடமை, ஆனால் மீட்புப்
பெறும் நமக்கோ கடவுளின் வல்லமை", என்று.
இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் ஏதோம் என்ற நாட்டைச்
சுற்றி வரும்போது, ஓர் என்ற மலையிலிருந்து ",செங்கடல் சாலை", வழியாகப்
பயணப்படும்போது மோசேக்கும், கடவுளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள்.
இதனால் கடவுள் அவர்கள்மீது சினம் கொண்டு கொள்ளிவாய்ப் பாம்புகளை அனுப்பி
சாகடிக்கிறார். ஆனால் மோசே மீண்டும் கடவுளிடத்தில் மன்றாடுகிறபோது,
அவர் அவர்கள்மீது இரக்கம் கொண்டு, ",வெண்கலப்பாம்பு ஒன்றைச் செய்து,
அதனை மக்கள் நடுவே வை, அப்போது பாம்பினால் கடிபட்ட எவரும் அதனைப்
பார்க்கிறபோது உயிர்பிழைப்பார்கள்", என்று மோசேயிடம் கூறுகிறார்.
மோசேயும் அவ்வாறே செய்ய, இஸ்ராயேல் மக்கள் உயிர்பிழைக்கிறார்கள்.
இப்பகுதியில் வரக்கூடிய வெண்கலப்பாம்பு திருச்சிலுவையின் முன் அடையாளமாக
இருக்கிறது. எவ்வாறெனில் வெண்கலப்பாம்பைப் பார்த்தவர்கள்
வாழ்வுபெற்றதுபோல திருச்சிலுவையை பார்ப்பவர்கள் வாழ்வு பெறுவார்கள்.
பொதுவாக சிலுவை மரணமானது அல்லது சிலுவையானது மிகவும் இழிவாகக் கருதப்பட்டது.
இது கொடியவர்களுக்கும், நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கும்தான்
வழங்கப்படும். ஆனால் அப்படிப்பட்ட சிலுவைச் சாவை ஆண்டவர் இயேசு நம்மீது
கொண்ட அன்பினால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் படிக்கின்றோம், ",கடவுள் தன்மையில் விளங்கிய
அவர், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார்.
மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச்
சாவையே ஏற்கும் அளவுக்கு கீழ்படிபவரானார்", என்று. ஆம், இயேசு தன்னை
வெறுமையாக்கி, அடிமையின் கோலம்கொண்டு, சிலுவை மரணம் ஏற்றார் என்றால்
அது அவர் நம்மீது கொண்ட அளவுகடந்த அன்புகொண்டிருக்கிறார் என்பதே உண்மை.
தந்தைக் கடவுள் தன் மகனாகிய இயேசுவையே இவ்வுலகிற்கு அளித்தார் என்றால்,
இயேசு அதனைச் செயல்படுத்தினார். அதனால்தான் கடவுள், ஆண்டவர் இயேசுவை
எப்பெயருகும் மேலாக உயர்த்துகிறார். நாமும் இறைவனின் திட்டத்தின்படி
வாழ்ந்தோம் என்றால் கடவுள் நம்மை மேலும், மேலும் உயர்த்துவார்.
இயேசுவின் குழந்தைப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சியாகச் சொல்வர்.
ஒருமுறை இயேசு, பைட்ஸ் என்ற சிறுவனோடு பேசிக்கொண்டிருந்தபோது அவனித்தில்,
",எதிர்காலத்தில் நீ என்னவாக போகிறாய்?", என்று கேட்டார். அதற்கு
பைட்ஸ், ",நான் மிகப்பெரிய தச்சராக மாறி, அரசர் அமர்வதற்கான சிம்மாசனம்
ஒன்றைச் செய்வேன். அரசர் அதில் அமர்ந்துகொண்டு எல்லா மக்களுக்கும்
ஆசி வழங்குவார்", என்றான். இயேசுவும் சரி என்று சொல்லிவிட்டு
சென்றுவிட்டார். பைட்ஸ் சில நாட்களுக்குப் பிறகு ஜாப்பா என்ற ஓர்
இடத்திற்கு குடிபெயர்ந்தார்.
ஆண்டுகள் பல கழிந்தன. அப்போது இயேசுவை சிலுவையில் அறைய, பிரத்யோகமான
சிலுவைமரம் ஒன்று தேவைப்பட்டது. எனவே அப்படிப்பட்ட சிலுவைமரம் செய்வதற்குப்
பெயர்போன பைட்ஸ் அங்கே அழைத்துவரப்பட்டான். அவன் இயேசுவுக்குதான்
சிலுவை செய்ய வந்திருக்கிறோம் என்று தெரியாமல் செய்தான்.
ஒரு சில நாட்களுக்கு பிறகு உண்மையை அறிந்துகொண்டு இயேசு அறையப்பட்டிருந்த
சிலுவையை நோக்கி ஓடினான். அவரைப் பார்த்ததும் ",நானே உமக்கு சிலுவை
செய்யும்படி ஆகிவிட்டதே", என்று கண்ணீர்விட்டு அழுதான். அப்போது இயேசு
அவனிடம், ",நீ சிறுவயதில் என்னிடம் என்ன சொன்னாய் என்று யோசித்துப்
பார். அரசன் அமர்வதற்காக சிம்மாசனம் செய்வேன், அதிலே அரசர் அமர்ந்துகொண்டு
எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குவார் என்று சொன்னாய். இப்போது அனைத்துலகின்
அரசனாகிய நான் இந்த சிலுவை என்ற சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு எல்லாருக்கும்
ஆசி வழங்குகிறேன் பார்", என்று சொன்னார். இதைக் கேட்டு அவன் அமைதி
அடைந்தான்.
சிலுவை அவமானச் சின்னமல்ல, அது அரியாசனம்; அது வெற்றியின் சின்னம்
என்பதையே இந்நிகழ்வு உணர்த்துகிறது.
நாம் நமக்கு மீட்பைத்தரும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் அன்பை
உணர்ந்து, அவரைப் போன்று இறைவழியில் நடப்போம். இறையாசிரை
நிறைவாய்ப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்
நிகழ்வு: மிகச்சிறந்த மறைபோதரும்
பேராயருமான புல்டன் ஷீன் ஒருமுறை குறிப்பிட்ட வார்த்தைகள்:
"நான் பல்வேறு நூல்களை எழுதியிருக்கின்றேன். அவையெல்லாம்
ஏதோ ஒரு கேள்விக்கு பதில் சொல்வதாக இருக்கும். ஆனால் நான்
எழுதிய இயேசுவின் வாழ்க்கை வரலாறு (Life of Christ) என்ற
புத்தகம் சிலுவையின்மீது அறையப்பட்ட இயேசுவின் பேரன்பை,
அவர் இந்த மனுக்குலத்தின்மீது கொண்டிருந்த இரக்கத்தை
உணர்ந்துகொள்வதாகவே எழுதப்பட்டது. சிலுவையில் அறையப்பட்டு
உயிர்நீத்த கிறிஸ்துவின் பேரன்பை விளக்கிச் சொல்வதற்கு
வார்த்தைகள் இல்லை".
வரலாற்றுப் பின்னணி
312 ஆம் ஆண்டு, அக்டோபர் 20 ஆம் நாள், உரோமையை ஆண்டுவந்த
கொன்ஸ்டன்டின் என்ற மன்னன் மாஜென்சியஸ் என்ற மன்னனோடு
போர்தொடுக்கச் சென்றான். அவ்வாறு அவன் எதிரி நாட்டுப்
படையோடு போர்தொடுக்கச் செல்லும்போது சிலுவை பொறித்த
கொடிகளை ஏந்திச் சென்றான். இதனால் அவன் அந்தப் போரில்
வெற்றிபெற்றான். அதன் நிமித்தமாக கிறிஸ்தவ மதத்தை அரசாங்க
மதமாக அறிவித்தான்.
இது நடந்து 13 ஆம் ஆண்டுகள் கழித்து, கொன்ஸ்டன்டின்
மன்னனின் தாயார் தூய ஹெலனா என்பவர் எருசலேம் நகருக்குப்
புனித பயணம் மேற்க்கொண்டார். அவர் கல்வாரி மலைக்குச்
சென்று, அகழ்வாராட்சியில் ஈடுபட்டபோது, அங்கே மூன்று
சிலுவைகள் இருப்பதைக் கண்டார். இந்த மூன்று சிலுவைகளில்
எது இயேசு கிறிஸ்து அறையப்பட்ட சிலுவை என்ற குழப்பம்
ஏற்பட்டது. எனவே, அவர் ஒரு கைசூம்பிய மனிதனை அழைத்து, அந்த
மூன்று சிலுவைகளையும் தொடுமாறு சொன்னார். உடனே அம்மனிதன்
மூன்று சிலுவைகளையும் தொட்டபோது, அதிலிருந்த ஒரு
சிலுவையிலிருந்து ஆற்றல் வெளிப்பட அம்மனிதருடைய கை
குணமடைந்தது. இதைப் பார்த்த தூய ஹெலனா அந்த திருச்சிலுவையை
உரோமை நகருக்குத் தூக்கிகொண்டு வந்து, ஆலயம் ஒன்றைக் கட்டி
எழுப்பி, அதில் திருச்சிலுவை வைத்தார். அவர்
திருச்சிலுவையை உரோமையில் உள்ள ஆலயத்தில் நிறுவிய நாள் 326
ஆம் ஆண்டு, செப்டம்பர் 14 ஆம் நாள். அன்றிலிருந்து
திருச்சிலுவை உயர்த்தப்பட்ட நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு
வருகின்றது.
அதன்பிறகு 614 ஆம் ஆண்டு, பெர்சிய மன்னன் சொஸ்ரோஸ்
(Chosroas) என்பவன் உரோமை நகரின் மீது படையெடுத்துச்
சென்று, திருச்சிலுவையை தூக்கிச் சென்றான். இதனைக்
கேள்விப்பட்ட ஹெரக்லியுஸ் என்று மன்னன் 628 ஆம் ஆண்டு,
பெர்சியா நாட்டின்மீது படையெடுத்துச் சென்று,
திருச்சிலுவையை மீட்டுக்கொண்டு வந்தான். திருச்சிலுவையை
மீட்டுக்கொண்டு வரும்போது அதனை ஆடம்பரமாக அலங்கரித்து,
தூக்கிப்பார்த்தான். அவனால் ஒரு அடிகூட நகர்த்த
முடியவில்லை. அப்போது அங்கிருந்த ஆயர், "இயேசு சுமந்து
வந்த சிலுவை எளிமையின் அடையாளம், அதனை நீ ஆடம்பரமாக
தூக்கிப் பார்த்தால் எப்படி நகரும்" என்று சொன்னார். இதைக்
கேட்ட அரசன், தாழ்ச்சியோடு திருச்சிலுவையை தூக்கினான்.
இப்போது திருச்சிலுவை எளிதாக நகர்ந்தது. பின்னர் அவன்
திருச்சிலுவையை உரோமை நகரில் உள்ள ஆலயத்தில் போய்
நிறுவினான்.
இப்படியாக திருச்சிலுவைக்கு வணக்கம் செலுத்தும் வழக்கம்
திருச்சபை முழுவதும் படிப்படியாக வளர்ந்தது. 1970 ஆம்
ஆண்டு வரை இவ்விழா திருச்சிலுவை உயர்த்தப்பட்ட நாள் என்றே
கொண்டாடப்பட்டு வந்தது. 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு
இவ்விழா திருச்சிலுவையின் மகிமை விழா என்ற பெயரில்
கொண்டாடப்பட்டு வருகின்றது.
அவமானத்திற்கு உரிய சிலுவைமரணம் அல்லது சிலுவைச்சாவு
என்பது நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கும்
துரோகிகளுக்கும் தான் கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட கொடிய
தண்டனைமுறை தொடக்கத்தில் பொனிசியர்களால்
கண்டுபிடிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
அதன்பிறகுதான் உரோமையர்கள் அவர்களிடமிருந்து இப்படிப்பட்ட
தண்டனைமுறையை எடுத்துக்கொண்டு, தங்களுக்கு எதிராக
செயல்பட்டவர்களுக்குக் கொடுத்தார்கள். இயேசு ஒரு பாவமும்
அறியாதவர்; ஒரு குற்றமும் செய்யாதவர். அப்படிப்பட்டவருக்கு
சிலுவைச் சாவு தண்டனையாகக் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்,
அவமானமாகக் கருத்தப்பட்ட சிலுவையை, தன்னுடைய மரணத்தினால்
வெற்றியின் சின்னமாக மாற்றுகின்றார். ஆகவே, சிலுவை என்பது
அவமானத்தின் சின்னம் கிடையாது. மாறாக, அது வெற்றியின்
சின்னம் என்பதை இயேசு தன்னுடைய மரணத்தினால்
நிரூபிக்கின்றார்.
எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பாக சிலுவை அடையாளம்
போட்டு, தொடங்குகின்ற நாம், அதற்கு எவ்வளவு
மதிப்பிருக்கின்றது, அதற்கு நாம் எப்படி மரியாதை
செலுத்தவேண்டும் என்பதை சிந்தித்து பார்ப்போம்.
திருச்சிலுவை கற்றுத்தரும் பாடம்
திருச்சிலுவையின் மகிமை விழாவைக் கொண்டாடும் நாம், இவ்விழா
நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப்
பார்த்து நிறைவு செய்வோம்.
1. திருச்சிலுவை: இயேசு இந்த மனுக்குலத்தின்மீது கொண்ட
அன்பின் வெளிப்பாடு
தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார்,
"நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது.
ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக்
கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே
கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு
கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை
எடுத்துக்காட்டியுள்ளார் (உரோ 5: 7-8). ஆம், நாம் பாவிகளாக
இருந்தும் கிறிஸ்து நமக்காக உயிர்கொடுக்கிறார் என்றால்,
அது உண்மையிலே கடவுள்/ இயேசு கிறிஸ்து நம்மீது கொண்ட அன்பை
வெளிக்காட்டுவதாகவே இருக்கின்றது.
ஆகையால் ஒவ்வொருமுறையும் நாம் சிலுவையை உற்றுப்
பார்க்கின்றபோது கடவுள் / நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து
நம்மீது கொண்ட அளவு கடந்த அன்பினை ஆழமாக
உணர்ந்துகொள்ளவேண்டும்.
2. திருச்சிலுவை: நன்மைகளின் ஊற்று
திருத்தந்தை பெரிய சிங்கராயர், "திருச்சிலுவை நன்மைகளின்
ஊற்று" என்று குறிப்பிடுகின்றார். அது முற்றிலும் உண்மை.
எப்படியென்றால் நம்முடைய கிறிஸ்தவ வாழ்விற்கான எல்லா
நலன்களையும் திருச்சிலுவையிடமிருந்து பெறுகின்றோம்.
ஒருசமயம் புண்ணிய வாழ்வு வாழ்ந்து வந்த குருவானவர் ஒரு
கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் நடுத்தீர்ப்புக்காக
கடவுளின் அரியணை முன்பாக நிறுத்தப்பட்டார். ஒருபக்கம்
சாத்தான் நின்றுகொண்டு அவர் மண்ணுலகத்தில் வாழ்ந்தபோது
செய்த தவறுகளாக ஒவ்வொன்றாக பட்டியலிட்டது. எல்லாவற்றையும்
பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த குருவானார்,
"எல்லாவற்றையும் சொல்லிவிட்டாய். ஆனால் இன்னும் ஒன்றே
ஒன்று மட்டும் விட்டுவிட்டாய்" என்றார். "அது என்ன?" என்று
கேட்டது சாத்தான். அதற்கு குருவானார், "இயேசு சிலுவையில்
சிந்திய தன்னுடைய விலை மதிக்கப்பெறாத இரத்தத்தினால்
என்னுடைய பாவம் முழுவதையும் முற்றிலுமாக கழுவிப்போக்கி
விட்டார்" என்றார். இதைக் கேட்ட சாத்தான் எதுவும் பேசாது
அமைதியானது. ஆம், இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தினால்
நம்முடைய பாவங்கள் அனைத்தும் முற்றிலுமாகக் கழுவிப்
போக்கிவிட்டார். இப்போது நாம் மாசற்றவர்களாக
இருக்கின்றோம்.
ஆகையால் நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டதோடு
மட்டுமல்லாமல், நன்மைகளை அதிகதிகமாக பெற்றுக்கொள்கின்றோம்
எனப் புரிந்த்கொள்ளவேண்டும்.
3. திருச்சிலுவை: அவமானத்தின் சின்னமல்ல, வெற்றியின்
சின்னம்
தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில்
கூறுவார், "யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று
கேட்கின்றார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால்,
நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்
பறைசாற்றுகின்றோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும்
பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருக்கின்றது. ஆனால்,
அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும்,
அவர்களுக்கு கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய்
இருக்கின்றார்" ( 1 கொரி1: 22-24). சிலுவை நமக்கு மீட்பின்
சின்னமாக, வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது என்பதையே
பவுலின் வார்த்தைகளிலிருந்து நாம் படித்து அறிகின்றோம்.
கிறிஸ்தவர்களாகிய நாம் சிலுவையை எத்தகைய கண்ணோட்டத்தோடு
பார்க்கின்றோம் என சிந்தித்துப் பார்க்கவேண்டும். சிலுவையை
துன்பமாகப் பார்க்கின்றோமா? அல்லது துன்பங்களையும்
தாங்கிக்கொண்டு மீட்பைப் பெற்றுத்தந்த இயேசுவின் சிலுவையை
வெற்றியின் சின்னமாகப் பார்கின்றோமா? என சிந்தித்துப்
பார்க்கவேண்டும்.
"திருச்சிலுவை மரமிதோ, இதிலேதான் தொங்கியது உலகத்தின்
இரட்சணியம்" என்று புனித வெள்ளியன்று குருவானவர்
திருச்சிலுவையை கையில் ஏந்தி பாடுவதைக் கேட்டிருப்போம்.
சிலுவையினாலே நமக்கு மீட்பு வந்தது, சிலுவையினாலேயே நமக்கு
சிம்மாசனம் வந்தது என்பது அவ்வார்த்தைகள் கற்றுத்தரும்
பாடம்.
ஆகவே, திருச்சிலுவை மகிமை விழாவைக் கொண்டாடும் இன்று, நாம்
திருச்சிலுவைக்கு தகுந்த மரியாதை செலுத்துவோம். இயேசுவைப்
போன்று நம்முடைய வாழ்வில் வரும் சிலுவைகளைத் துணிவோடு
ஏற்றுக்கொள்வோம். இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்
புண்ணிய வாழ்வு வாழ்ந்து வந்த துறவி
ஒருநாள் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் இறந்து
மேலுலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். மேலுலகில் அவர்
இறுதித் தீர்ப்புக்காக கடவுளுக்கு முன்பாக
நிறுத்தப்பட்டார். அவருக்குப் பக்கத்தில் சாத்தான் கையில்
ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு, அதிலிருந்து துறவி செய்த
தவறுககளை (?) அடுக்கிக்கொண்டே போனது.
தான் செய்யாத தவறுகளையெல்லாம்கூட சாத்தான் அடுக்கிக்கொண்டே
போனதால், துறவி அதிர்ச்சியடைந்து நின்றார். சாத்தான்
எல்லாவற்றையும் வாசித்து முடிக்கும்வரை துறவி பொறுமையாக
இருந்தார். வாசித்து முடித்ததும் துறவி சாத்தானைப்
பார்த்து, ",நீ இன்னும் ஒன்றை வாசிக்க மறுத்துவிட்டாய்",
என்றார். சாத்தான், ",அது என்ன?", என்று கேட்டு நின்றது.
அதற்கு துறவி, ",என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நான் செய்த
பாவங்கள் அனைத்தையும் சிலுவையில் சிந்திய இரத்ததினால்
கழுவிப் போக்கிவிட்டார். இதுதான் நீ உன்னுடைய புத்தகத்தில்
எழுதாத ஒன்று", என்றார். இதைக் கேட்டதும் சாத்தான் ஒரு
வார்த்தையும் பேசாமல் அமைதியானது. ஆம், நாம் செய்த
பாவங்கள் அனைத்தையும் ஆண்டவர் இயேசு, தான் சிலுவையில்
சிந்திய இரத்ததினால் கழுவிப் போக்கிவிட்டார். இப்போது நாம்
துயவர்களாக இருக்கின்றோம்.
இன்று நாம் திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக்
கொண்டாடுகின்றோம். சிலுவை யூதர்களுக்கு தடைக்கல்லாகவும்,
புறவினத்தாருக்கு மடமையாகவும் இருந்தது ( 1 கொரி 1:23)
ஆனால் ஆண்டவர் இயேசு தன்னுடைய பாடுகள் மற்றும் உயிர்ப்பின்
வழியாக அதனை வெற்றியின் சின்னமாக மாற்றினார். எனவே சிலுவை
என்பது அவமானத்தின் சின்னம் கிடையாது, அது வெற்றியின்
சின்னமாகும். இந்த வேளையில் திருச்சிலுவை மகிமை விழா
எப்படி வந்தது, இவ்விழா நமக்கு உண்மை என்ன என்று
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
கிபி. 312 ஆம் ஆண்டில் உரோமைப் பேரரசை யார் ஆட்சி செய்வது
என்ற குழப்பம் கான்ஸ்டாண்டிநோபுலுக்கும்,
மாக்ஜெஸ்டியுசுக்கும் இடையே ஏற்பட்டது. இந்த நேரத்தில்
கான்ஸ்டாண்டிநோபுள் கிறிஸ்தவர்களின் ஜெப உதவியை நாடினான்.
கிறிஸ்தவர்களும் அவனுக்காக ஜெபித்தார்கள். அப்போது ஒருநாள்
வானத்தில் சிலுவை அடையாளம் தோன்றி கான்ஸ்டாண்டிநோபுள்
வெற்றிபெறுவான் என்று சொல்லியது. அதைபோன்றே
கான்ஸ்டாண்டிநோபுள் வெற்றிபெற்று அரசனானான். அன்றே அவன்
கிறிஸ்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்தான். சிலுவை
கான்ஸ்டாண்டிநோபுலுக்கு வெற்றியைக் கொணர்ந்தது.
அதன்பிறகு கி.பி. 326 ஆம் ஆண்டு ஹெலினா என்ற புனிதர்
எருசலேம் நகர் சென்றபோது அங்கே இயேசு அறையப்பட்ட சிலுவையை
கண்டுபிடித்தார். அதைத் திருச்சிலுவையாக போற்றிப்
பெருமைப்படுத்தினார். மக்களுக்கும் அதற்கு வணக்கமும்,
மரியாதையும் செலுத்தத் தொடங்கினார்கள். ஆனால் கி.பி.614
ஆண்டு பெர்சிய மன்னனாகிய சொஸ்ரோஸ் என்பவன் இந்த
திருச்சிலுவையை கைப்பற்றிக்கொண்டு சென்று ஈரானில்
வைத்தான். இதனை ஹெராகிளியஸ் என்று மன்னன் 629 ஆம் ஆண்டு
மீட்டு, கால்நடையாகவே அதனை எருசலேமில் கொண்டுவந்து
சேர்த்தான். அவன் திருச்சிலுவையைக் கொண்டுவந்த நாள்
செப்டம்பர் 14. அதன் நினைவாகத் தான் திருச்சிலுவை மகிமை
விழாவை உலகம் முழுவதும் செப்டம்பர் 14 ஆம் தேதி
கொண்டாடுக்கின்றோம்.
இப்போது இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று
சிந்தித்துப் பார்ப்போம். தொடக்கத்தில் சொன்னது போல சிலுவை
அவமானத்தின் சின்னம் கிடையாது. வெற்றியின் சின்னம்.
உரோமையர்கள் நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கும்,
திருடர்களுக்கும் சிலுவை மரத்தைத் தந்தார்கள். ஆனால்
ஆண்டவர் இயேசுவோ ஒரு தவறும் செய்யாதவர். அப்படியிருந்தும்
அவருக்கு அந்த சிலுவை மரணம் கொடுக்கப்பட்டது. இயேசு
தனக்குக் கொடுக்கப்பட்ட சிலுவையை சிலுவை மரணத்தை -
வெற்றியாக மாற்றினார். ஆகவே இந்த உண்மையை நாம்
உணர்ந்துகொண்டு வாழவேண்டும்.
அடுத்ததாக இயேசுவின் சீடர்களாகிய நாம் ஒவ்வொருவரும்,
இறையாட்சிப் பணியாளர்களும் சிலுவையை துணிவோடு சுமக்க
முன்வரவேண்டும். நற்செய்தியில் இயேசு கூறுவார், ",என்னைப்
பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தன் சிலுவையை
நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்", என்று.
( லூக் 9:23). ஆம், இயேசுவின் சீடர்களாகிய நாம் ஒவ்வொரும்
சிலுவையை சாபமாக அல்ல, மாறாக வரமாகத் தூக்கிக்கொண்டு
அவரைப் பின்பற்றவேண்டும். அப்போதுதான் அவருடைய உண்மையான
சீடர்களாக இருக்க முடியும்.
நிறைவாக அன்றாடம் நாம் பயன்படுத்தும் சிலுவை அடையாளத்தை
பொருள் உணர்ந்ந்து பயன்படுத்த வேண்டும். காரணம் சிலுவை
வாழ்வைத் தரக்கூடியது. இஸ்ரேயல் மக்கள் பாம்பினால்
கடிபட்டு, இறந்தபோது அவர்கள் வெண்கலத்தால் ஆனா பாம்பைப்
பார்த்தார்கள். வாழ்வைப் பெற்றார்கள். அதுபோன்று நாமும்
வாழ்வில் துன்பம், துயரம் இவற்றையெல்லாம் சந்திக்கின்றபோது
சிலுவையப் பார்த்தோமென்றால் வாழ்வைப் பெறுவோம் என்பது
உறுதி.
எனவே சிலுவை அடையாளத்தை பொருள் உணர்ந்து பயன்படுத்துவோம்,
சிலுவையின் உண்மைப் பொருளை உணர்வோம். சிலுவையின் பாதையில்
நடப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்
சிலுவையடியில் நின்று கொண்டிருக்கிறாள் அன்னை மாமரி. அவளது
நெஞ்சத்தில் நிழலாடியது கடந்த கால நிகழ்வொன்று. இயேசுவின்
குழந்தைப் பருவத்தில் நடந்ததாம். தன் குழந்தையை மடியில்
வைத்துக் கொண்டு பிதற்றுவதிலும் புலம்புவதிலும்
பெண்களுக்கு ஈடோ இணையோ இல்லை. அன்னை மரியா அதற்கு
விதிவிலக்கா என்ன? ஒரு நாள் தனது இரண்டு வயதுக் குழந்தை
இயேசுவை முத்தமிட்டு, ",என் அன்புச் செல்வமே, என்னை நீ
எவ்வளவு நேசிக்கிறாய்?", என்று கேட்டாளாம். குழந்தை என்ன
பதில் சொல்லும்? எவ்வளவு சாப்பிட்டாய் என்று கேட்டால்கூட
இவ்வளவு என்று தன் இரு கைகளையும் அகல விரிக்கும். அதுபோலத்
தன் இரு கைகளையும் அகல நீட்டி, ",இவ்வளவு", என்று சொன்னதாம்.
கண்ட அன்னையின் உள்ளத்தில் கற்கண்டுப் பூரிப்பு! ஆரத்தழுவி
முத்தமிட்டு இறுக அணைத்துக் கொண்டாள்.
அடுத்த கனம் நிமிர்ந்து பார்க்கிறாள். துணுக்குறுகிறது
அவளது நெஞ்சம். இரு கைகளையும் விரித்திருந்த அந்தச்
சின்னஞ்சிறு உருவம், திறந்திருந்த கதவு வழி வந்த கதிரவன்
ஒளியில் கன்னங்கரிய சிலுவையாகத் தரையில் நிழலிட்டதுதான்
காரணம். அதே நேரத்தில் அடுத்திருந்த தச்சுப் பட்டறையில்
யோசேப்பு உளிகொண்டு எதையோ ஓங்கி அறைந்து கொண்டிருந்தார்.
அப்படியே குழந்தையை மார்போடு அழுந்த அன்னை அணைத்துக்
கொண்டாள். "உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்" (லூக்.
2:35) என்ற சிமியோனின் இறைவாக்கு நினைவுக்கு வந்தது. கால்
செருப்பு கழன்று விழக் குழந்தை இயேசு நடுங்க நோக்கும் சகாய
அன்னையின் திருப்படத்துக்கான பின்னணி இதுதான்.
இன்று சிலுவையடியில் அந்த இறைவாக்கு எழுத்துக்கு எழுத்து
நிறைவேறுவது கண்டு அன்னையின் நெஞ்சம் இரத்தக் கண்ணீர்
வடிக்கிறது: இவ்வளவு பேரன்பா இறைவனுக்கு!
சிலுவை என்பது இறையன்புக் காவியம். "சிலுவையில்
உயர்த்தப்படும்போது நான் அனைவரையும் ஈர்த்துக் கொள்வேன்",.
வெறும் இரு கட்டைகளின் இணைப்பான சிலுவை சிறுமையின்,
கேவலத்தின், அவமானத்தின், வேதனையின் சின்னம். அது
வெற்றியின், விடுதலையின், மீட்பின் சின்னமாக வேண்டுமா?
ஒன்றில் அதில் கிறிஸ்து தொங்க வேண்டும், இன்றேல்
கிறிஸ்தவன் தொங்க வேண்டும். ",என்னைப் பின்பற்ற விரும்பும்
எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு
என்னைப் பின்பற்றட்டும்", (மத். 16:24). ",தம் சிலுவையைச்
சுமக்காமல் என்பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க
முடியாது" (லூக். 14:27).
இங்கேதான் - சிலுவையில்தான் கிறிஸ்தவர்களாகிய நம் வாழ்க்கை
தொடங்குகிறது. இப்போது சிலுவை பற்றிய திருத்தூதர் பவுலின்
புரட்சிச் சிந்தனை புரிகிறது. "நாங்களோ சிலுவையில்
அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம்", (1
கொரி. 1: 23-24). சிலுவை யூதர்களுக்கு இடறல்
கிரேக்கர்களுக்கு மடமை. அழைக்கப்பட்ட நமக்கோ கடவுளின்
ஞானம். கடவுளின் வல்லமை, கடவுளின் பேரன்பு. அதனால்தான்
பெருமையின் சின்னமாக, பெருமிதப்பொருளாக எண்ணித்
திருத்தூதர் பவுல் இயம்புவார்: ",நானோ நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவின் சிலுவையையன்றி வேறு எதைப்பற்றியும் ஒரு
போதும் பெருமை பாராட்டமாட்டேன்", (கலா. 6:14). ஏனெனில்
அதிலேதான் நமக்கு உயிரும் உயிர்ப்பும். அதனாலேதான் நமக்கு
மீட்பும் விடுதலையும்.
கிறிஸ்துவுக்காக உலகக் கண்களுக்கு முன்னே அறிவிருந்தும்
முட்டாளானோர் உண்டு. தெளிவிருந்தும் பைத்தியமானவர் உண்டு.
செல்வமிருந்தும் பிச்சைக்காரர் ஆனோர் உண்டு - புனித அசிசி
பிரான்சிஸ் போல, அருளாளர் பரதேசி பீற்றர் போல.
முட்டாள்தனமே முழு ஞானம் என்பது சிலுவைக்குத்தான்
முற்றிலும் பொருந்தும். ஆனால் அவர்கள் சிலுவைவழி கண்டது
வாழ்வின் நிறைவு. ",என் பொருட்டுத் தன் உயிரை இழப்பவன்
அதனைக் காத்துக் கொள்கிறான்", என்பதன் வாழ்க்கை அனுபவம்.
சிலுவை என்பது தியாகம். ஆனால் இன்றோ அதைத் துன்பம் என்று
எண்ணித் தூர ஓடுகிறான் மனிதன் - தற்கொலை எல்லைவரை.
தற்கொலைக்கு இட்டுச் செல்லும் அளவுக்கு மனிதனைத் துன்பம்
வாழ்க்கையின் விளிம்பில் கொண்டு போய் நிறுத்துகிறது.
தற்கொலை கோழைத்தனத்தின் வெளிப்பாடு. மடத்தனத்தின்
செயல்பாடு. பல் இருப்பதால்தானே பல்வலி, பல்லை உடைத்துக்
கொண்டால் என்ன என்று எவனாவது நினைப்பானா? உயிர்
இருப்பதால்தானே தொல்லையும் துன்பமும். உயிரை மாய்த்துக்
கொண்டால் என்ன என்று எண்ணுவதும் அப்படித்தான்.
துன்பம், நாவல்போல், நாடகம்போல், காடு, மலை, கடற்கரை,
பூங்கா என்று எல்லாக் காட்சிகளிலும் காதலனும் காதலியும்
ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள், கட்டிப் பிடித்துப்
புரள்கிறார்கள் என்றால் போரடிக்காதா? இவர்களுக்கு வேறு
வேலையே இல்லையா என்று கேட்கத் தோன்றாதா? கதைக்குச்
சுவையூட்டுவது எது? ஒரு துன்பம், ஒரு தோல்வி, ஏமாற்றம்,
எதிர்பாராத அதிர்ச்சி ... இவைகள்தாமே! துன்பத்தை
நாடகமாக்கிப் பார்த்து இரசிக்கும், நாவலாக்கிப் படித்து
மகிழும் மனிதன் ஏன் துன்பத்தை வாழ்வாக்கி ஏற்கத்
தயங்குகிறான்? தவறுகிறான்?
துன்பம் என்பது விசுவாசப் பயிற்சி. இங்கிலாந்து நாடு.
கடும் பனிக்காலம். நடுங்கும் குளிர். ஏழைத்தாய் ஒருத்தி
கந்தையில் பொதிந்த மழலையைக் கைகளில் ஏந்தி காட்டின் வழியே
நடந்து கொண்டிருந்தாள். அந்த நேரம் அவ்வழியே வந்த வண்டி
அவளைக் கண்டதும் நின்றது. ஏறிக் கொண்டாள். வண்டி வேகமாக
ஓடியது. உறைய வைக்கும் குளிர்காற்றின் வேகம் வேறு.
குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டாள். அவளது பற்கள்
வெடவெட என ஆடின. முடிவில் இறுகக் கட்டிக்கொண்டன. வண்டி
ஓட்டித் திரும்பிப் பார்த்தான். 'அம்மா' என்றான். அவளால்
வாய் திறக்க முடியவில்லை. நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி,
'கீழே இறங்கு' என்றான் அதட்டலுடன். பயந்து நடுங்கி அவள்
இறங்கிக் கொண்டிருந்தாள். வெடுக்கெனப் பிள்ளையைப்
பிடுங்கிக் கொண்டு குதிரையைத் தட்டி விட்டான். சிட்டாகப்
பறந்தது. அவளோ, ",என் பிள்ளை, என் பிள்ளை", என்று கதறிக்
கொண்டு வண்டிக்குப் பின்னாலேயே ஓடினாள். சிறிது தூரம்
சென்றதும் வண்டியை நிறுத்திப் பதறித் துடித்த அவளிடம்
பிள்ளையைக் கொடுத்தான்.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. நிமிர்ந்து, ",ஏன்பா
இப்படிச் செய்தாய்?", என்று கேட்க, அவன் ",இப்பக் குளிருதா?",
என்று கேட்டான். ",இல்லை. நன்றாக வேர்த்து விட்டது", என்று
அவள் சொல்ல, சிரித்துக் கொண்டே அவன் சொன்னான்,
"இதற்காகத்தான் ஓட வைத்தேன்".
ஓடு ஓடு என்றால் நாம் ஓடமாட்டோம். அதனால் கடவுள் சில சமயம்
ஓட்டம் காட்டுகிறார். தெய்வத்தின் இந்தத் திருவிளையாடலைப்
பற்றித்தான் திருப்பாடல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
"எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே. அதனால் உம்
விதிமுறைகளை நான் கற்றுக் கொண்டேன்" தி.பா. 119:71)
இறைமகன் இயேசுவின் பலிபீடம் திருச்சிலுவை. இவ்வுலக
மனிதருக்குப் புகலிடம் திருச்சிலுவை.
",சிலுவையிலே சிந்தை வைத்தால் தீமையெல்லாம் அகலும்
செகமெல்லாம் சோதரமாய்த் திகழ்தல் பெறலாமே", என்று
தமிழ்த்தென்றல் திரு. வி.க. பாடுகிறார்.
பழைய உடன்படிக்கையில் பாலை நிலத்தில் பாம்பால்
கடியுண்டவர்கள், மோசே கோலில் உயர்த்திய வெண்கலப் பாம்பைப்
பார்த்து உயிர் பிழைத்தனர். இந்த வெண்கலப் பாம்பு
திருச்சிலுவைக்கு முன் அடையாளம். சுருங்கச் சொல்லின்
விண்ணரசுக்குக் குறுக்கு வழி இல்லை. குறுகிய வழிதான்
உண்டு. குறுக்குவழி சிலுவையைத் தவிர்ப்பது. குறுகிய வழி
சிலுவையை உவந்து ஏற்பது.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
சிந்தனைப்பயணம் திரு. சின்னப்பன் டி சில்வா.
வெலிங்டன்
",அவரோடு செல் அவருக்காக நில்",
செப்டம்பர் 14ம் நாளைக் கத்தோலிக்கத் திருஅவை
"திருச்சிலுவை மகிமை நாள்", ஆகச் சிறப்பிக்கின்றது. மரத்
துண்டுகளால் ஆன கொடியவர்களின் உயிர் போக்கும் ஒரு கொலை
கருவி, உலகோர் பார்வையில் ஒர் அவமானத்தின் சின்னம் - இன்று
அதே உலக மக்களின் பார்வையில் மகிமைக்குரிய பொருளாய்
சின்னமாய் மாறியது எப்படி?...
இந்த மாற்றத்தின் முதல் காரணம் சேர்க்கை. பூவோடு சேர்ந்த
நாறும் மணம் பெறும் என்பது தமிழ் முதுமொழி. இயேசுவுக்கு
முன் பல மனிதர்களோடு இணைந்து அதே கல்வாரியில் அவமானத்தின்
சின்னமாய் நின்ற சிலுவை இயேசுவோடு இணைந்த பின் அவருடைய
பாடுகள் மரணம் மற்றும் குறிப்பாக அவருடைய உயிர்ப்பிற்குப்
பின் உலகில் வெற்றியின் சின்னமாகவும் மீட்பின்
அடையாளமாகவும் நிலை நிற்கின்றது. இயேசு என்றால் சிலுவை ;
சிலுவை என்றால் இயேசு என்ற உன்னத நிலைக்கு உலகோர்
பார்வையில் உயர்வு பெற்றிருக்கிறது.
இந்தச் சிலுவை பாரமிக்கதாகவும், கொடிய விஷமுட்கள்
கொண்டதாகவும், விகாரமானதாகவும் இருந்தது. இருப்பினும்,
இயேசுவின் விருப்பத்திற்கு அவரோடு இணைந்து சென்றதால்,
அவருக்காக நின்றதால், மகிமையைத் தனதாக்கிக் கொண்டது.
பூவோடு நார் இணைந்தால் போதுமா?... பூக்களை இணைத்து
மாலையாக்கி மன்னவன் கழுத்தில் விழப் பயன்படும் போதுதானே
அந்த நாருக்கும் அரசமரியாதை உரித்தாகுகிறது. ஆம்,
யூதர்களின் அரசன் என்று அறிக்கையிடப்பட்ட இயேசு செந்நீரை
ஆடையாய், முள்முடியை மகுடமாய், மூன்று ஆணிகளைத் தன்
சிம்மாசனமாய் - கொண்டு விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையில்
தனது இறையாட்சியின் கட்டளைகளைப் பிரகடனப்படுத்தியபோது இந்த
மரச்சிலுவை அவரைத் தாங்கியவண்ணம் தோளோடு தோள் கொடுத்து
அவரோடு அவருக்காக அவருடைய உயிருள்ள வார்த்தைகளின் மௌன
சாட்சியாக நின்றது.
1) இயேசு, மண் (மனிதம்) இனிக்க மன்னிப்பு என்று தனக்குத்
தீமை செய்தோரை மன்னித்திட இறைவேண்டல் ஏறெடுத்த போதும்
(லூக்கா நற்செய்தி 23:34)
2)இருபுறம் விரித்த கரங்களின் கனியான அன்பால் தன்னை
நேசித்து மதித்த நல்ல கள்ளனுக்கு வான் வீடு வழங்கிய போதும்
(லூக்கா நற்செய்தி 23:41-42)
3) அதே கரங்களின் மற்றொரு கனியான அரவணைப்பால் தனக்குப்
பின் தரணியில் தனித்து விடப்படும் தன் அன்னைக்கும் தன்னை
நேசித்த சீடனுக்கும் தாய் பிள்ளை உறவைப் பாதுகாப்பான
அன்பின் அரவணைப்பில் உறுதி செய்த போதும் (யோவான் நற்செய்தி
19:26-27)
4) முடிவாக அனைத்தும் நிறைவேறிற்று என்று உணர்ந்தபோது,
தனது ஆவியைத் தந்தையின் கரத்திற்குள் ஒப்படைத்து தனது முழு
அர்ப்பணத்தை அகிலம் அறியச் செய்த போதும் (லூக்கா நற்செய்தி
23:46)
இயேசுவிற்கு உறுதுணையாக இந்த மரச்சிலுவை முழுமையான
சாட்சியாக் கல்வாரியில் நின்றது. இறைமகன் இயேசு
கல்வாரியில் வெளிப்படுத்திய மன்னிப்பு, அன்பு, அரவணைப்பு,
அர்ப்பணம் ஆகிய விண்ணையும் மண்ணையும் இணைக்கும் உன்னதச்
சத்தியங்களுக்குச் சலனமற்ற சாட்சியாக இந்த மரச்சிலுவை
நிற்கின்றது.
வெறும் இயேசுவின் சேர்க்கை மட்டும் போதுமா?... போதாது.
மாறாக, வாழ்க்கை பயணத்தில் எளிமையாக இயேசுவோடு துணை போகும்
பண்பும், கல்வாரியில் இயேசுவின் வார்த்தைகளுக்குச்
சாட்சியாக உடன் நிற்கும் உறுதியும் எப்படி மரச்சிலுவையைத்
திருச்சிலுவையாக மாற்றியதோ அதுபோல; இப்பண்புகள் நமக்கும்
எதிர் நோக்கின் மகிமையை உறுதி செய்கின்றன. இன்று,
இத்திருச்சிலுவைத நமக்குக் கூறுவது.
என்னைப் போல் நீங்களும் இயேசுவால் மகிமை அடைய வேண்டுமெனில்
1) வாழ்க்கை பயணத்தில் அவரோடு துணிந்து துணை செல்லுங்கள்
2) அவரின் வார்த்தைகளுக்கு உயிருள்ள சாட்சியாகச் சாட்சிய
வாழ்வு வாழுங்கள். என்பதாம்.
எதிர்நோக்கின் பயணிகளாக எதிர்காலத்தைக் கணிக்கும் நாம்,
நிகழ்காலத்தில் ",வேதத்தை - வார்த்தையை", வாழ்வாக்குவோம்.
நிச்சயம் - நம் கடந்த காலக் கல்வாரி நினைவுகள் நம்
வழிகளைச் செம்மைப்படுத்தும்.
",அவரோடு செல் - அவருக்காக நில்", என்ற விருது வாக்கு
நம்மையும் திருச்சிலுவை மகிமையின் பங்காளிகள் ஆக்கும்.
செல்வோம், நிற்போம், உலகை வெல்வோம்.
அருள்தந்தை குமார்ராஜா
சிலுவையின் மாட்சி !
இயேசுவில் இனிய அன்பர்களே, இன்று திருச்சிலுவையின் மகிமைப்
பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். சிலுவை என்பது அவமானத்தின்
சின்னமாக, தோல்வியின் அடையாளமாக இருந்தது. இயேசு அதனை
வெற்றியின் சின்னமாக, மாட்சியின் அடையாளமாக மாற்றினார்.
தொடக்க காலத்திலிருந்தே நாமும் சிலுவை அடையாளத்தை
அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம். காலை எழுந்ததிலிருந்து,
வேலை தொடங்குமுன், வழிபாட்டில், உணவு உண்ணுமுன்,
ஆலயங்களைக் கடந்துசெல்லும்போது... என்று வாய்ப்புக்
கிடைக்கும்போதெல்லாம் சிலுவை அடையாளத்தை நம்மீது
வரைந்துகொள்கிறோம்.
அதே வேளையில் அந்த சிலுவை குறித்துக்காட்டுகிற இறையியல்
செய்திகளையும் நம் வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
சிலுவை இயேசுவின் கீழ்ப்படிதலைக் குறிக்கிறது. சாவை
ஏற்குமளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு
இயேசு கீழ்ப்படிந்தார் (பிலி 2:6-11) என்று பவுலடியார்
கூறுகிறார். நாமும் இறைவனுக்கு, திருச்சபைக்கு,
அதிகாரிகளுக்கு, பெரியவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
இரண்டாவதாக, சிலுவை துன்பங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வதைக்
குறிக்கிறது. இயேசு அந்தச் சிலுவைத் துன்பத்தை அகற்ற
மன்றாடினார். ஆனால், அதுதான் இறைவனின் விருப்பம் என்று
உணர்ந்ததும் மனம் விரும்பி ஏற்றுக்கொண்டார். ஆகவே, இறைவன்
அவருக்கு வெற்றியும், மாட்சியும் தந்தார். நமது வாழ்வில்
தவிர்க்க முடியாமல் வரும் சிக்கல்கள், நோய்கள்,
துன்பங்கள், அவமானங்கள் இவற்றை ஏற்றே தீர வேண்டும் என்னும்
நிலை வரும்போது இயேசுவைப் போல நாமும் மனம் உவந்து அவைகளை
ஏற்போம். அப்போது தந்தை இறைவன் இயேசுவுக்குச் செய்ததுபோல,
நமக்கும் அவரது வெற்றியிலும். மாட்சியிலும் பங்கு தருவார்.
மன்றாடுவோம்: சிலுவை வழியாக மீட்பு தந்த இயேசுவே, உம்மைப்
போற்றுகிறேன். துன்பத்தின், அவமானத்தின் சின்னமான
சிலுவையை, மீட்பின், மாட்சியின் அடையாளமாக மாற்றினீரே.
இந்த சிலுவைக்காக உமக்கு நன்றி. எனது வாழ்விலும் சிலுவை என
நான் கருதும் அனைத்தையும், உம்மோடு சுமந்து, உமது
வெற்றியிலும், மாட்சியிலும் நானும் பங்கு பெறுவேனாக.
உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
அருள்தந்தை குமார்ராஜா
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறந்த
சிலுவையானது சாதாரண பொருளாக அல்ல. மாறாக, தியாகத்தின் சின்னமாக,
நினைவாகக் கருதப்படுகிறது. இயேசுவின் பாடுகள், அவருடைய இறப்பு
மற்றும் உயிர்ப்பு தான் கிறிஸ்தவத்தின் விசுவாசத்தை உலகிற்கு
கொண்டு வந்தது. எனவே தான் தூய பவுலடியார் கொரிந்தியருக்கு
எழுதிய முதல் திருமுகத்தில் (1: 17, 18) ",திருமுழுக்கு
கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை
அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை
அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை
பொருளற்றுப்போய்விடும். சிலுவை பற்றியச் செய்தி அழிந்து
போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப்பெறும் நமக்கோ அது
கடவுளின் வல்லமை", என்று கூறுகிறார்.
நான்காம் நூற்றாண்டின் முதல் பகுதியில் திருச்சிலுவையின்
பக்தி முயற்சியை நாம் காண முடிகிறது. அலெக்சாண்டிரியன்
குறிப்பேடு வழங்கும் சான்றுப்படி கான்ஸ்டன்டைன் தாயான ஹெலன்
(இலேனம்மாள்) அரசி தான், ஆண்டவரின் திருச்சிலுவையை செப்டம்பர்
14, 320 அன்று கண்டுபிடித்தார். அதன்பின் 13 செப்டம்பா்
335 அன்று, திருச்சிலுவையின் ஆலயமும், எருசலேமில் உள்ள
கொல்கத்தா என்னும் இடத்தில் அர்ச்சிக்கப்பட்டது. அதற்கு அடுத்தநாள்
ஹெலனால் கண்டுபிடிக்கப்பட்ட திருச்சிலுவை வணக்கம் செய்யப்படும்
பக்தி முயற்சிக்காக வைக்கப்பட்டது. அன்றிலிருந்து அது ஒரு
விழாவாக மாறியது. கூட்டத்தின் காரணமாக திருச்சிலுவை உயர்த்தி
நிறுத்தப்பட தொடங்கியது. அதிலிருந்து அவ்விழாவிற்கு
திருச்சிலுவை உயர்த்தப்பட்ட விழா என்ற பெயர் வரத்தொடங்கியது.
உண்மையிலேயே திருச்சிலுவை உயர்த்தப்பட்டது என்பது
சிலுவையினால் பாவத்தின் மீதும் சாத்தானின் மீதும் கிறிஸ்து
கொண்ட வெற்றியினைக் குறிப்பதாகும். இவ்விழாவின் மையக்கருத்துயாதெனில்
திருச்சிலுவையில் இயேசுவின் இறப்பினால் அவர் நமக்காக
மீட்பைப் பெற்றுத்தந்தார் என்பதேயாகும்.
சிலுவை என்பது நமக்கு மீட்பைப் பெற்றுத்தரும் கருவி.
வாழ்வில் நமக்கு துன்பங்களான சிலுவைகள் வருகிறபோது,
துவண்டுவிடாமல், நம்பிக்கையோடு, அது நமக்கு
மீட்பைப்பெற்றுத்தர வல்லது என்கிற உணர்வோடு
மகிமைப்படுத்துவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
2019ஆம் ஆண்டு நான் திருத்தொண்டராக எம் மறைமாவட்டத்தில் உள்ள
பங்கு ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தினந்தோறும் அப்பங்கில்
திருப்பலி நடைபெறும். அருள்சகோதரிகள் திருப்பலிக்குத்
தேவையான பொருட்களையெல்லாம் எடுத்து வைப்பார்கள். பீடத்தையும்
அவர்கள்தான் தயாரிப்பார்கள். பீட அலங்காரமும் அவர்கள்தான்
செய்வார்கள். ஒரு நாள் மாலை சரியாக 05.45 மணி இருக்கும்,
ஆலயப்பணி செய்கின்ற அருள்சகோதரிகளில் ஒருவர் பங்குத்தந்தையிடம்
வந்து, பாதர் பீடத்தில் வைத்திருந்த சிலுவையைக் காணோம்
என்று பதற்றத்துடன் சொன்னார். பங்குத்தந்தையும் தேடிப்
பார்த்தீர்களா, வேறு சிஸ்டர்ஸ் யாரும் எங்கையாவது
வைத்திருக்க போகிறார்கள் என்று சொன்னார். அதை கேட்ட அருள்சகோதரி,
நான் எல்லா இடத்திலும் தேடிட்டேன். எங்க சிஸ்டர்ஸ் எல்லாத்திட்டையும்
கேட்டேன் என்றார். உடனே நான் சொன்னேன்: பாதர் கேமரால
பாருங்க, யாரும் எடுத்துட்டு போறாங்களானு. சற்றும் தாமதிக்காமல்
பங்குத்தந்தை ஆலயத்தில் பொருத்தபட்டுள்ள கேமிராவில்
பார்த்தார். வயதான பெண் ஒருவர் பீடத்திற்கு அருகே சென்று
அங்கிருந்த திருச்சிலுவையை எடுத்து தன் புடவையில் முடித்து
யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு அதை எடுத்து
செல்கிறார். யார் அது என்று நாங்கள் கண்டுபிடித்து
விட்டோம். பாதர் சொன்னாங்க, சிஸ்டர் அந்த அம்மா வசதி
வாய்ப்புகளோடு வாழ கூடியவர்கள். அவருடைய மகன், மகள் எல்லாம்
வெளிநாட்டில் செட்டில் ஆனவர்கள். இவர்கள் ஏன் இப்படி
செய்தார்கள் என்று புரியவில்லையே என்றார். அதற்கு அருள்சகோதரி
சரி பாதர், விடுங்க. நான் அந்த அம்மாவ பார்த்து கேட்டு
வாங்குறேன் என்று கூறிவிட்டு சென்றார். இரண்டு நாட்கள் கழித்து
அந்த அம்மாவைப் பார்த்து, அருள்சகோதரி நடந்தவற்றையெல்லாம்
கூறினார். அப்போது அந்த அம்மா நான்தான் எடுத்தேன். நாளை
கொண்டு வந்து தந்துவிடுகிறேன் என்று சொன்னார். அதன்படியே
அடு;த்த நாள் அந்த அம்மா பீடத்தில் இருந்த சிலுவையைக்
கொண்டு வந்து கொடு;த்தார். அப்போது அருள்சகோதரி கேட்டார்:
அம்மா நீங்கள்தான் வசதி வாய்ப்போடு இருங்கீங்களே அப்புறம்
ஏன் இத எடுத்தீங்க இல்ல சிஸ்டர் எவ்வளவு காசு கொடுத்து
வாங்கினாலும் கிடைக்காத, இப்பீடத்திலிருக்கிற இந்த
திருச்சிலுவையின் ஆசீர்வாதம் என் குடும்பத்திற்கு வேணும்னு
நினைத்தேன். அதான் எடுத்தேன், மன்னிச்சிடுங்க சிஸ்டர் என்றார்.
என்னே! அத்தாயின் திருச்சிலுவையின் மீதான பற்று.
இறைஇயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே!
இன்று நம் அன்னையாம் திருஅவை திருச்சிலுவையின் மகிமை
விழாவைக் கொண்டாடுகின்றது. இன்றைய வாசகங்கள் அனைத்துமே
திருச்சிலுவையினால் வரும் மீட்பைக் குறித்து ஆழமாய்
எடுத்துரைக்கின்றன. கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நமக்கு
திருச்சிலுவையாலன்றி வேறு எதனாலும் மீட்பு இல்லை என்பதை
உறுதியாய் உரக்கச் சொல்கிறது இன்றைய ஞாயிறு வழிபாடு.
வழக்கமாகவே திருச்சிலுவையின் மீது யாருக்கும் அவ்வளவு
பற்று இருப்பதில்லை. சிலுவை என்றாலே அது துன்பத்தின்
அடையாளம். இன்னலின் இருப்பிடம், வேதனையின் வாசல்தளம் என்று
எதிர்மறை கண்ணோட்டத்தோடே பார்க்க பழகிவிட்ட நமக்கு இன்று
புதிய பார்வையை, திருச்சிலுவை குறித்த ஆழமான இறைச்செய்தியை
கொடுக்க விழைகிறது இத்திருச்சிலுவை மகிமை நாள். கத்தோலிக்க
திருஅவையில் ஒரு விழா என்றால் அதற்கு நான் அடிப்படை
தளங்கள் உள்ளன. 1. விவிலியம், 2. வரலாறு, 3. மரபு, 4.
திருச்சபை ஆசிரியம் இந்த நான்கின் அடிப்படையில்தான்
எந்தவொரு விழாவும் தனக்கான விளக்கத்தைப் பெறுகின்றது.
அர்த்தத்தையும் உணர்த்துகிறது.
இவ்விழாவிற்கான வரலாற்றுப் பின்னணி என்ன?
நான்காம் நூற்றாண்டில் கிறித்தவ சமயம் அரசுசமயமாய்
உருவெடுத்தது. அப்போதைய அரசன் கான்ஸ்டான்டின்
கிறித்தவத்தின் மீதான தன் நம்பிக்கையை ஆழப்படுத்தினார்.
அக்கணம் அவருடைய தாய் புனித ஹெலனா உரோமைப் பேரரசு
முழுவதும் ஆலயங்கள் கட்டுவதிலும், கிறிஸ்தவத்தைப்
பரப்புவதிலும் ஆர்வம் காட்டினார். கி.பி.326ஆம் ஆண்டு அவர்
எருசலேமுக்குப் புனித பயணம் மேற்கொள்கிறார். அங்கு இயேசுவை
அடக்கம் செய்த கல்லறைக்குப் போகிறார். இரண்டாம்
நூற்றாண்டில் அதன் மேல் கட்டப்பட்டிருந்த ஓர் உரோமைக்
கடவுள் கோயிலை இடிக்க உத்தரவு விடுகிறார். அப்போது அவர்
மூன்று சிலுவைகளைக் கண்டுபிடிக்கிறார். அதில் இயேசுவின்
சிலுவை எது என தெரியாமல் தவிக்கிற பொழுது, ஒரு பரிசோதனையை
நம்பிக்கையின் அடிப்படையில் முன்னெடுக்கிறார். நோயினால்
துன்புறும் ஒரு பெண்மணியின் கையையும், இறந்த படைவீரர்
ஒருவரின் கையையும் அந்த சிலுவையில் வைக்க செய்கிறார்.
முதல் இரண்டு சிலுவையிலிருந்து எந்த மாற்றமும்
ஏற்படவில்லை. மூன்றாவது சிலுவையில் கை வைத்தவுடன் நோயினால்
வருந்திய பெண்மணிக்கு நோய் நீங்கிற்று, மரித்த படைவீரர்
உயிரோடு எழுந்தார். இதனைக் கண்டு புனித ஹெலனா மகிழ்ச்சி
கொண்டார். மிகுந்த மரியாதையோடும், மதிப்போடும், தெய்வீகத்
தன்மையோடு கி.பி. 326 ஆண்டில் அவ்விடத்தில் ஆலயம்
கட்டியெழுப்ப கான்ஸ்டான்டின் உத்தரவிட்டார். ஏறக்குறைய
9ஆண்டுகள் கழித்து கி.பி. 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம்
தேதி அவ்வாலயம் புனிதம் செய்யப்பட்டு, செப்டம்பர் 14ஆம்
நாள் திருச்சிலுவையானது நிறுவப்பட்டு, மக்களால் வணக்கம்
செலுத்தப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை திருச்சிலுவையின்
மகிமை நாளை நாம் கொண்டாடி மகிழ்கின்றோம்.
பிரியமானவர்களே,
இந்நிகழ்வைப் போன்று கத்தோலிக்க திருஅவை வரலாற்றில்
சிலுவையைக் குறித்து நிறைய காரியங்களைப் பார்க்கின்றோம்.
திருச்சிலுவையின்றி கத்தோலிக்க கிறித்தவ வாழ்வே இல்லை
எனலாம். இதைத்தான் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித
தியோடார் நம் தொடக்க பெற்றோர் ஆதாம் - ஏவாள் வீழ்ந்த
நிகழ்வை ஒப்பிட்டு இவ்வாறு சொல்கிறார்: ஒரு மரம் நம்மை
அழித்தது. இன்னொரு மரம் நம்மை மீட்டது (A tree once
destroyed us; another tree now brought us life). இவர்
மட்டுமல்ல கி.பி. 347 முதல் கி.பி. 407 வரை
கான்ஸ்தாந்திநோபிளின் ஆயராக இருந்த புனித ஜான் கிறிசோஸ்டம்
சிலுவையைக் குறித்து பின்வருமாறு தன் மறையுரையில்
குறிப்பிடுகிறார்: ",சாத்தானுக்கு எதிரான வெற்றிப் பதக்கம்
சிலுவை! பாவத்திற்கு எதிரான வாள் சிலுவை! தொடக்கப்
பாம்பைக் குத்திக் கொல்ல இயேசு பயன்படுத்திய கத்தி சிலுவை!
தந்தைக் கடவுளின் உளவிருப்பம் சிலுவை! மகன் கடவுளின் மகிமை
சிலுவை! தூய ஆவியாரின் சந்தோ~ம் சிலுவை! சம்மனசுகளின்
அலங்காரம் சிலுவை! திருஅவையின் அரண் சிலுவை! பவுலடியாரின்
பெருமை சிலுவை! புனிதர்களின் கோட்டை சிலுவை! உலகின் ஒளி
சிலுவை!",
இத்தனை மாண்புக்குரியதாக சிலுவைப் பார்க்கப்படுகின்றது
என்றால் இத்திருச்சிலுவை உணர்த்தும் அல்லது
கற்றுக்கொடுக்கும் படிப்பினைகள் என்னென்ன சிந்திப்போம்!
திருச்சிலுவை மீட்பின் அடையாளம்:
இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும் நமக்கு ஒருசேர
சொல்கிற ஒரே ஒரு பாடம். பார்த்தோர் பிழைத்தனர். பார்ப்போர்
பிழைப்பர் என்பதுதான். திருச்சிலுவையை உற்றுநோக்கி
செபிக்கிற எல்லோருமே மீட்பைத்தான் சுவைக்கிறார்கள். எல்லா
ஆலயங்களிலும் திருச்சிலுவையைத்தான் மையமாக நாம்
வைத்திருக்கின்றோம். பாடுபட்ட இயேசுவின்
திருச்சிலுவையிலிருந்து பொங்கிவழியும் இரத்தத்துளிகளால்
நாம் மீட்பைப் பெறுகிறோம். தானி 9:5இல் ",நாங்கள் பாவம்
செய்தோம். வழிதவறி நடந்தோம். பொல்லாதவர்களாய் வாழ்ந்து
உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதி
நெறிகளையும் கைவிட்டோம்", என்று நாம் வாசிக்கின்றோம்.
இவற்றை நம் வாழ்வில் வைத்திருப்பதால்தான் நம்முடைய
மீட்பைப் பெற முடியாமல் போனோம். இதைக்கண்ட கடவுள் தன் ஒரே
பேறான மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார். எதற்காக? இழந்து
போனதைத் தேடி மீட்க, எனவேதான் லூக் 19:10இல் ",இழந்து போனதை
தேடி மீட்கவே மானிடமகன் வந்துள்ளார்", என்று
வாசிக்கின்றோம். அத்தகைய மீட்பை நமக்கு வழங்குவதுதான்
திருச்சிலுவையின் மகிமை. இதைத்தான் புனித பேதுரு தன் முதல்
திருமுகத்தில், ",சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை
அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக
வாழ்வதற்கே இவ்வாறு செய்தார்", (1பேதுரு2:24) ஆக இறைமகன்
இயேசு கிறிஸ்து தன் திருச்சிலுவையால் மீட்பை வழங்குகிறார்.
அம்மீட்பைப் பெற நம்மை நாமே தகுதிப்படுத்துவோம்!
திருச்சிலுவை விடுதலையின் அடையாளம்:
இயேசு சிலுவையில் தொங்கிய பொழுது: எல்லாம் நிறைவேறிற்று
(யோவா 19:30) என்று ஏழு சிலுவை மொழியில் ஒன்றாக
உச்சரிக்கிறார். இயேசு உச்சரித்த இந்த வார்த்தையின்
கிரேக்க மூலத்தை நோக்கினால், அதன் வார்த்தை இவ்வாறு
வருகிறது telelestai.. இது கிரேக்க வார்த்தைகளில்
பயன்படுத்தப்படும் கணக்குப் பதிவியல் கணக்கீடு ஆகும்.
குறிப்பாக கடன் பெற்றோரின் வரவு-செலவு கணக்குகளை இந்த
வார்த்தையைச் சொல்லித்தான் கேட்பார்களாம். அதற்கு
ஆங்கிலத்தில் Paid in Full என்று அர்த்தம்.
அப்படியென்றால் இயேசு கிறிஸ்து தன்னை முழுவதுமாக நம்
பாவக்கடனுக்கான சிலுவையில் கையளித்தார் என்பது
தெளிவாக்குகிறது. இதைத்தான் புனித பவுல் கொலோசையருக்கு
எழுதிய திருமுகம் 2:14,15 இல் பின்வருமாறு கூறுகிறார்:
",நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை
அவர் அழித்து விட்டார். தம் சிலுவையினால் கிடைத்த
வெற்றியால் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகியோரின்
படைக்கலன்களைக் கிறிஸ்து பிடுங்கிக் கொண்டு அவர்களை
இகழ்ச்சிக்குள்ளாக்குமாறு ஊர்வலமாக இழுத்துச் சென்றார்.",
ஆக எல்லாப் பாவக்கடனுக்கும் பரிகாரமாக இயேசு தன்னையே
சிலுவையில் கையளித்து நமக்கு விடுதலை வாழ்வு
வழங்கியுள்ளார். அத்தகைய சிலுவையின் வழியாய் பெற்ற விடுதலை
வாழ்வை இன்று நாம் உளமார கொண்டாடுவோம்!
திருச்சிலுவை நம்பிக்கையின் அடையாளம்:
இயேசுவின் சிலுவையின் மீது நம்பிக்கையோடு கை வைத்து
செபித்தால் நிச்சயம் நன்மை நடக்கும், நல்லது நடக்கும்
என்று நான் அடிக்கடி கூறுவேன். வரலாற்றில் காணும் போது
சிலுவைப் போர் என்பதும், புனித ஹெலனாவின் திருச்சிலுவைப்
பயணம் என்பதும் நம்பிக்கையின் அடையாளங்கள்தான். சிலுவையை
நம்பிக்கையோடு தூக்கினால், சுமந்தால், கை வைத்து
செபித்தால் நிச்சயம் நமக்கு அருளும், ஆசீரும் கிடைக்கும்
என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. காரணம், எபிரேயருக்கு
எழுதப்பட்ட திருமுகத்தில் 12:2 இல் ",நம்பிக்கையைத் தொடங்கி
வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது
கண்களைப் பதிய வைப்போம்", என்று வாசிக்கின்றோம்.
நம்பிக்கையோடு சிலுவையில் வீற்றிருக்கும் இயேசுவைக்
கண்டால் நிச்சயம் நம் வாழ்வில் நலமும் வளமும் கிடைக்கும்!
திருச்சிலுவை தாழ்ச்சியின் அடையாளம்:
தாழ்ந்தோர் வீழ்வதில்லை என்று சொல்கிறோம். தாழ்ச்சியே
புண்ணியங்களில் எல்லாம் தலைசிறந்த புண்ணியமாய்
பார்க்கப்படுகிறது. தாழ்ச்சியோடு வாழ்ந்தோர் எல்லோரும்
மாட்சியை மட்டுமே கண்டுள்ளனர். அன்னை மரியா தாழ்ச்சியோடு
வாழ்ந்தமையால் இன்று பேறுபெற்ற அன்னையாக விளங்குகிறார்
(லூக் 1:48). புனித யோசேப்பு தாழ்ச்சியோடு இறைத்தந்தையின்
வார்த்தைக்கு செவிசாய்த்ததால்தான் (மத் 1:24) இன்று
திருஅவையின், குடும்பத்தின் பாதுகாவலராக இருக்கின்றார்.
இறைமகன் இயேசுகிறிஸ்துவும் தாழ்ச்சியோடு தன் வாழ்வை
அளித்து, நம் பாவங்களுக்காக திருச்சிலுவையில் ஏறினார்.
இதைத்தான் பிலி 2:8 இல் ",சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும்
சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே
தாழ்த்திக் கொண்டார்", என்று வாசிக்கின்றோம்.
திருச்சிலுவையைப் பார்க்கும் நாம் அனைவருமே அத்தகைய
தாழ்ச்சியைத் தமதாக்கிக் கொள்ள இத்திருச்சிலுவை மகிமை நாள்
அழைக்கிறது.
திருச்சிலுவை வல்லமையின் அடையாளம்:
கி.பி. 326இல் புனித ஹெலனா மூன்று சிலுவைகளில் எது
இயேசுவின் சிலுவை என்று கண்டறிய அவர் செய்த செயலில்
தென்பட்டது கடவுளின் வல்லமையே. சிலுவையின் வல்லமையை
புதுமையாக நாம் காண்கிறோம். இயேசுவின் சிலுவையைத்
தொட்டவுடன் வல்லமை வெளிப்பட்டதால்தான் அப்பெண்மணியும்,
படைவீரரும் சுகமடைவதைப் பார்க்கிறோம். அப்படியென்றால்
திருச்சிலுவை வல்லமையின் அடையாளமாய் கொண்டாடப்படுகிறது.
இதைத்தான் புனித கொரிந்திருக்கு எழுதிய முதல்
திருமுகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: ",சிலுவை பற்றியச்
செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால் மீட்புப்
பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை", . திருச்சிலுவையின்
மீது யாரெல்லாம் நம்பிக்கையோடு தங்கள் எண்ணத்தை, ஏக்கத்தை,
எதிர்பார்ப்பைப் பதிக்கிறார்களோ அவர்கள் நிச்சயம்
சிலுவையின் வல்லமையைக் காண்பார்கள்.
இதுபோன்றே திருச்சிலுவையானது மன்னிப்பின் அடையாளமாகவும்,
ஆசீர்வாதத்தின் அடையாளமாகவும், வாழ்வின் அடையாளமாகவும்
விளங்குகிறது. ஆகவே திருச்சிலுவையின் மகிமை நாளில் இயேசு
தன்னுயிரைக் கையளித்த சிலுவையின் மாண்பையும், மதிப்பையும்
உணர்ந்து திருச்சிலுவையைக் கொண்டாடுவோம்! திருச்சிலுவையின்
மகிமையைப் பறைசாற்றுவோம்!!
",நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப்
பறைசாற்றுகிறோம்", (1கொரி 1:23)
அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
அன்பார்ந்த நண்பர்களே!
யோவான் நற்செய்தியில் கடவுள் உலகத்தின்மீது கொண்டுள்ள
அன்பு அழகாக விளக்கப்படுகிறது. இந்த உலகத்தைப் படைத்து,
அதில் மரம் செடி கொடிகள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றை
உருவாக்கி, இறுதியில் அனைத்தையும் மனிதரின் பொறுப்பில்
கொடுத்தார் கடவுள். இவ்வாறு கடவுள் படைத்த உலகம் அழகு
வாய்ந்ததாக இருந்தது (காண்க: தொநூ 1:31). இந்த உலகம்
கடவுளின் அன்பிலிருந்து பிறந்தது; அவருடைய அன்பில்
நிலைகொண்டுள்ளது; அவருடைய அன்பினால் மீட்புப் பெற்றது.
எனவே, உலகத்தின் மீது கடவுள் கொண்டுள்ள அன்பு எந்நாளும்
தொடர்கின்ற ஒன்று. அதே நேரத்தில் உலகத்தில் தீமை
இருப்பதையும் யோவான் நற்செய்தி கோடிட்டுக் காட்டுகிறது.
கடவுளால் அனுப்பப்பட்ட அவர்தம் திருமகன் இயேசுவை ஏற்க
மறுத்தவர்கள் ஒளியைக் கண்டும் இருளை விரும்பியவர்களுக்கு
ஒப்பாவார்கள் (காண்க: யோவா 1:9-11). இவர்கள் இயேசுவை ஏற்க
மறுத்தார்கள்.
ஆயினும் கடவுள் இந்த உலகத்தை அழிப்பதற்கோ, அதற்குத்
தண்டனைத் தீர்ப்பு அளிக்கவோ தம் மகனை அனுப்பவில்லை. மாறாக,
அவர் வழியாக இவ்வுலகிற்கு மீட்பு வழங்கவே அவர் இயேசுவை
அனுப்பினார். இங்கே கடவுளின் எல்லையற்ற அன்பு துலங்குவதை
நாம் தெளிவாகக் காண்கின்றோம். அன்பே உருவான கடவுள் தம்மில்
பொங்கியnழுந்த அன்பின் பெருக்கால் தூண்டப்பட்டே இவ்வுலகைப்
படைத்தார். மனிதர்கள் அவரை விட்டு அகன்ற போதிலும் அவருடைய
அன்பு ஒருநாளும் குறைவுபடவில்லை. மாறாக, தம்மைவிட்டுப்
பிரிந்தவர்களையும் அவர் தாராள உள்ளத்தோடு அன்புசெய்கிறார்.
அவர்கள் தம் தவற்றினை உணர்ந்து மீண்டும் தம்மிடம்
திரும்புவார்கள் என்னும் நம்பிக்கை நம் அன்புக் கடவுளுக்கு
என்றுமே உண்டு. இயேசு வழியாக நாம் பெற்ற மீட்பு நம்மைப்
பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் விடுவித்தது. அந்த
விடுதலை அனுபவத்தைப் பெற்ற நாம் கடவுளையும் கடவுள்
அன்புசெய்கின்ற உலகத்தையும் அதில் வாழ்கின்ற மனிதர்களையும்
நன்மனத்தோடு ஏற்று அன்புசெய்திட அழைக்கப்படுகிறோம்.
இயேசுவே நமக்கு அன்பின் வழியைக் கற்றுத் தந்துள்ளார்.
குறிப்பாக, தன்னலம் மறந்து, பிறர் நலம் நாடுகின்ற பண்பை
அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். மனிதர் மேல் கொண்ட
அன்பால் அவர் சிலுவைச் சாவையும் சந்திக்கத் தயங்கவில்லை.
ஆனால் உலகம் கேவலமாகக் கருதிய அச்சிலுவை இயேசுவின்
மரணத்தால் அன்பின் அடையாளமாக மாறிற்று; நமக்கு
வாழ்வளிக்கும் ஊற்றாக விளங்குகிறது. சிலுவையில்
உயர்த்தப்பட்ட இயேசு உண்மையிலேயே கடவுளுக்கு நிகராக
''உயர்த்தப்பட்டார்''. இதையே யோவான் நற்செய்தி,
''பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல
மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம்
நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்'' (யோவா
3:14-15) எனக் கூறுகிறார். நிலைவாழ்வு பெற விரும்புவோர்
சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவை ''உற்று நோக்க
வேண்டும்''; அவரையே தங்கள் வாழ்க்கை நெறியாகக் கொள்ள
வேண்டும். அப்போது தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகாமல்
மீட்பின் கொடையைப் பெற்று மகிழ்வார்கள்.
மன்றாட்டு: இறைவா, இவ்வுலகை அன்புசெய்கின்ற உம்மை நாங்கள்
முழு உள்ளத்தோடு அன்புசெய்திட அருள்தாரும்.
அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்,
பெங்களூர்
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
திருச்சிலுவையின் மகிமை விழா - மறையுரை
1
அறிமுகம்:
அன்பு சகோதர சகோதரிகளே, இன்று நாம் திருச்சிலுவையின் மகிமை
விழாவைக் கொண்டாடுகிறோம். இந்த விழா, இயேசு கிறிஸ்துவின்
திருச்சிலுவையை மையப்படுத்தி, அவரது பலியின்
மகத்துவத்தையும், அதன் மூலம் நமக்கு வந்த மீட்பையும்
நினைவுகூர்கிறது. திருச்சிலுவை வெறும் மரக்கட்டைகள் அல்ல;
அது கடவுளின் அன்பின் அடையாளம், மனித குலத்தின் மீட்பின்
அடையாளம், நம்பிக்கையின் அடையாளம். இன்றைய மறையுரையில்,
திருச்சிலுவையின் மகிமையையும், அது நமது வாழ்வில்
ஏற்படுத்தும் தாக்கத்தையும் சிந்திப்போம்.
விவிலியப் பின்னணி இன்றைய முதல் வாசகத்தில் (எண்ணிக்கை
21:4-9), இஸ்ரயேல் மக்கள் பாவம் செய்தபோது, அவர்களைத்
தண்டிக்க விஷப்பாம்புகளை அனுப்பிய கடவுள், மோசேயிடம் ஒரு
வெண்கலப் பாம்பை மரத்தில் உயர்த்தி வைக்கச் சொன்னார்.
அதைப் பார்த்தவர்கள் குணமடைந்தனர். இது இயேசுவின் சிலுவையை
முன்னறிவிக்கிறது. நற்செய்தியில் (யோவான் 3:13-17), இயேசு
தம்மைப் பற்றி, ",மனித மகன் உயர்த்தப்பட வேண்டும், அவர்மீது
நம்பிக்கை கொள்பவர்கள் நித்திய வாழ்வு பெறுவார்கள்", என்று
கூறுகிறார். இந்த வார்த்தைகள், சிலுவையின் மூலம்
கிடைக்கும் மீட்பை தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
திருச்சிலுவையின் மகிமை
🕇1 அன்பின் வெளிப்பாடு: திருச்சிலுவை, கடவுளின் எல்லையற்ற
அன்பின் மிகப்பெரிய அடையாளம். ",தம் ஒரே மகனை அனுப்பும்
அளவுக்கு கடவுள் உலகை நேசித்தார்", (யோவான் 3:16). இயேசு
தம் உயிரைப் பலியாக்கி, நம்மைப் பாவத்திலிருந்து மீட்டார்.
இந்த அன்பு நம்மை மாற்றவும், நம்மைச் சுற்றியவர்களை
நேசிக்கவும் நம்மை அழைக்கிறது. 🕇2 வெற்றியின் அடையாளம்:
உலகின் பார்வையில், சிலுவை தோல்வியின் அடையாளமாகத்
தோன்றலாம். ஆனால், கிறிஸ்தவ நம்பிக்கையில், அது
பாவத்தையும் மரணத்தையும் வென்ற வெற்றியின் சின்னம். இயேசு
சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்ததன் மூலம், நமக்கு
நித்திய வாழ்வைப் பெற்றுத் தந்தார். இந்த வெற்றி, நமது
வாழ்வில் நம்பிக்கையையும் உறுதியையும் அளிக்கிறது. 🕇3
நம்பிக்கையின் அழைப்பு: திருச்சிலுவை நம்மை நம்பிக்கையுடன்
வாழ அழைக்கிறது. வாழ்க்கையில் துன்பங்களும் சவால்களும்
வரும்போது, சிலுவையைப் பார்த்து, கடவுள் நம்மை ஒருபோதும்
கைவிடமாட்டார் என்பதை உணர்கிறோம். சிலுவையைத் தழுவுவது,
கடவுளின் வாக்குறுதிகளை நம்புவதாகும்.
நமது வாழ்வில் திருச்சிலுவையின் பொருள்
🕇 அன்பு சகோதரர்களே, இன்றைய உலகில், திருச்சிலுவையின்
செய்தி நமக்கு முக்கியமான பாடங்களைத் தருகிறது.
🕇 தியாகம்: இயேசு தம் உயிரைத் தியாகம் செய்தது போல,
நாமும் மற்றவர்களின் நன்மைக்காக தியாகம் செய்ய
அழைக்கப்படுகிறோம்.
🕇 மன்னிப்பு: சிலுவையில் இயேசு தம் எதிரிகளை மன்னித்தார்.
நாமும் மற்றவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
🕇 நம்பிக்கை: துன்பங்களுக்கு மத்தியில், சிலுவை நமக்கு
நம்பிக்கையை அளிக்கிறது. கடவுளின் திட்டத்தில் எல்லாம்
நன்மைக்கே என்று நம்புவோம்.
முடிவுரை:
அன்பு சகோதர சகோதரிகளே, திருச்சிலுவையின் மகிமை விழா,
இயேசுவின் பலியை மட்டுமல்ல, அவரது அன்பையும் வெற்றியையும்
நினைவுகூர்கிறது. இந்த விழாவில், நாம் நமது வாழ்வை
சிலுவையின் ஒளியில் பரிசீலிப்போம். நமது பாவங்களை
ஒப்புக்கொண்டு, மனமாற்றம் பெற்று, இயேசுவைப்
பின்பற்றுவோம். திருச்சிலுவையை நம் வாழ்வின் மையமாக
வைத்து, கடவுளின் அன்பில் வளர்ந்து, மற்றவர்களுக்கு அந்த
அன்பைப் பகிர்ந்தளிப்போம். இறைவேண்டல் அன்பின் இறைவா, உமது
ஒரே மகனின் திருச்சிலுவையின் மூலம் எங்களை மீட்ட உமக்கு
நன்றி. எங்கள் வாழ்வில் உமது அன்பையும் வெற்றியையும்
பிரதிபலிக்க உதவி செய்யும். திருச்சிலுவையின் மகிமை வாழ்க!
ஆமென்.
திருச்சிலுவையின் மகிமை சிறப்பு மறையுரை 2
நேச மானிடரே, திருச்சிலுவையின் மகிமை விழாவின் இந்தப்
புனித நாளில், நாம் நம் மீட்பரான இயேசு கிறிஸ்துவின்
சிலுவையின் மகிமையையும், அதன் மூலம் வெளிப்படுத்தப்பட்ட
கடவுளின் அளவிட முடியாத அன்பையும் சிந்தித்து
போற்றுகிறோம்.
சிலுவை, மனித கண்ணோட்டத்தில் வெட்கக்கேடான தோல்வியின்
சின்னமாக தோன்றலாம். ஆனால், கிறிஸ்தவ நம்பிக்கையின்
பார்வையில், அது தான் கடவுளின் மிகப் பெரிய வெற்றி மற்றும்
மகிமையின் சின்னம். புனித பவுல் தமது கலாத்தியர்
நிருபத்தில், "எனக்கு நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்
சிலுவையைத் தவிர வேறெதையும் பற்றிப் பேசப் பழக்கமில்லை"
(கலா 6:14) என்று கூறுகிறார். ஏன்? ஏனெனில் சிலுவையில்,
கடவுளின் ஞானமும் வல்லமையும் முழுமையாக
வெளிப்படுத்தப்பட்டன.
நாம் இன்று நினைவுகூரும் இந்த மகிமை என்ன?
1. அன்பின் மகிமை: சிலுவை கடவுளின் அன்பின் உச்சத்தை
நமக்குக் காட்டுகிறது. "கடவுள் உலகத்தை அவ்வளவாய்
நேசித்ததால், தம் ஒரே மகனைத் தந்தார்" (யோவா 3:16).
நம்முடைய பாவங்களுக்காக தண்டனை அனுபவிக்க, நமது
குறைகளுக்காக துன்பப்பட, நம்மை மீட்பதற்காக சாவை ஏற்க
கடவுளின் மகன் சிலுவையில் ஒப்புக்கொண்டார். இதைவிடப் பெரிய
அன்பு வேறெது இருக்க முடியும்?
2. தியாகத்தின் மகிமை: சிலுவை தன்னலமற்ற தியாகத்தின்
உன்னதமான பாடம். இயேசு, "தம் உயிரை யாரும் எடுத்துக் கொள்ள
முடியாது, ஆனால் தாமாகவே அதை விட்டுக் கொடுக்கிறார்" (யோவா
10:18). இது ஒரு கட்டாயப்படுத்தப்பட்ட மரணம் அல்ல; இது ஒரு
சுதந்திரமான, முழுமையான, அன்பான தியாகம். தன்னை
முழுமையாகக் கொடுத்து, பிறருக்கு வாழ்வு அளிக்கும் மகிமை.
3. மீட்பின் மகிமை: சிலுவை வெற்றியின் குறியீடு. அங்குதான்
பாவமும் மரணமும் தோற்கடிக்கப்பட்டன. அங்குதான் நமக்கு
மன்னிப்பும் மீட்பும் வாங்கித் தரப்பட்டன. சிலுவை
வழியாகவே, நாம் கடவுளின் மக்களாக ஏற்கப்பட்டோம், நித்திய
வாழ்வுக்கான வாய்ப்பு கிடைத்தது. இது நமது நம்பிக்கையின்
அடித்தளம்.
4. வலிமையின் மகிமை: புனித பவுல் கூறுவது போல்,
"சிலுவையின் சத்தம் அழிபவர்களுக்கு மூடன்தன்மைதான்; ஆனால்
நம்மை மீட்பவர்களுக்கு அது கடவுளின் வல்லமை" (1 கொரி
1:18). சிலுவை, மனித வலிமையைக் காட்டுவது அல்ல; அது
துன்பத்தின் நடுவே காட்டப்படும் கடவுளின் வல்லமை,
மன்னிப்பின் வல்லமை, நம்பிக்கையின் வல்லமை.
நம் வாழ்க்கைக்கான அழைப்பு:
நம் வாழ்வில், நாமும் நமது சொந்த சிலுவைகளைச் சுமக்கிறோம்
- துன்பங்கள், சோதனைகள், தியாகங்கள். இன்றைய விழா, நமது
சிலுவைகளைப் பார்ப்பதற்கான ஒரு புதிய பார்வையை நமக்குத்
தருகிறது. நமது ஆண்டவர் நம்மோடு இருப்பதால், நம் சிலுவைகள்
மகிமையை நோக்கிய பாதையாக மாறும். நமது சிறு தியாகங்கள்,
அவரது பெரிய தியாகத்தோடு இணைந்து, மீட்பின் பணியில் பங்கு
பெறும்.
நமது துன்பங்களில் நாமும் சிலுவையைப் பற்றி பிடிக்க
முடியும். அதன் மூலம், அவரது உயிர்த்தெழுதலுக்கும்,
மகிமைக்கும் பங்கு பெற முடியும். நம் சகோதர, சகோதரிகளின்
துன்பத்தில், நாம் கிறிஸ்துவின் திருஉடலைக் காண்கிறோம்.
அவர்களுக்கு சேவை செய்வதன் மூலம், சிலுவையைச் சுமக்கும்
கிறிஸ்துவுக்கே சேவை செய்கிறோம்.
முடிவுரை:
ஆகையால், அன்பான சகோதர, சகோதரிகளே, இன்று நாம்
திருச்சிலுவையின் மகிமையை வியப்போடும் நன்றியோடும்
போற்றுவோம். நம் வாழ்வின் சிலுவைகளைத் தைரியமாக ஏற்று,
கடவுளின் சித்தத்தில் அர்ப்பணிப்போம். நம்மை நேசித்து,
நமக்காகத் தம்மை அர்ப்பணித்த இயேசு கிறிஸ்துவின் அன்பைப்
பிரதிபலிக்க முயற்சிப்போம். நம் சக மனிதர்களுக்கு அன்பும்
சேவையும் செய்வோம்.
நம்மை மீட்டெடுத்த திருச்சிலுவையின் மகிமை, நம்
வாழ்வையும், நம் மரணத்தையும் புனிதமாக்கும். நம் வாழ்க்கை
முழுவதும், சிலுவையின் மகிமை நமக்கு வழிகாட்டியாகவும்,
ஆறுதலாகவும், வலிமையாகவும் இருக்கும்.
ஆண்டவரின் அமைதியும், சிலுவையின் மகிமையும், நம்
அனைவரோடும் இருப்பதாக.
ஆமென்.
திருச்சிலுவையின் மகிமை விழா சிறப்பு மறையுரை 3
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
இன்று நாம் திருச்சிலுவையின் மகிமை விழாவை கொண்டாடுகிறோம்.
இந்த திருநாளில் நாம் மரணத்தின் குறியீடாக இருந்த
சிலுவையை, மீட்சியின் மற்றும் வாழ்வின் அறிகுறியாக
கொண்டாடுகிறோம்.
மனித வரலாற்றில், சிலுவை என்பது மிகக் கொடூரமான
தண்டனையாகவே இருந்தது. ஆனால் கிறிஸ்து அந்த சிலுவையை
ஏற்று, அதில் தம்மை பலியாகச் செய்ததின் மூலமாக, அதே சிலுவை
நமக்காக ஒரு மகிமையான வெற்றிக்கொடி ஆகியது.
சிலுவையின் வழியே நமக்கு மீட்பு
முதல் வாசகத்தில் நாம் காணும் இடத்தில், இஸ்ரயேல் மக்கள்
வனாந்தரத்தில் பாம்புகளால் கடிக்கப்படுகின்றனர். மோசே ஒரு
வெண்கலப்பாம்பை தூக்கி வைத்தபோது, அதை நோக்கியவர்கள் உயிர்
பெற்று விடுகின்றனர். இது யேசுவின் சிலுவையை நோக்கி
நம்பிக்கையுடன் வருகிற நம்மை மீட்கும் சம்பவத்தின்
முன்னோடியாகும்.
யோவான் நற்செய்தியில், "மனிதகுமாரன் உயர்த்தப்பட வேண்டும்"
என்கிறார். அது நமக்கு ஒரு அழைப்பு: நாம் எப்போதும்
சிலுவையை நோக்கிப் பார்வையிடவேண்டும். நாம் வலியை
சந்திக்கும்போதும், துக்கத்தில் மூழ்கும்போதும், நம்முடைய
வாழ்வில் குழப்பம் ஏற்படும்போதும், அந்த உயர்த்தப்பட்ட
சிலுவையிலேயே நம்முடைய துயரத்திற்கு தீர்வு இருக்கிறது.
பிலிப்பியர் எழுதும் மறைக்காப்பு: தாழ்மை மற்றும் மகிமை
பிலிப்பியர் கடிதத்தில், பவுல் எங்களை பின்வரும்
வார்த்தைகளால் அழைக்கிறார்:
"தம்மைத் தாழ்த்தி, மரணத்திற்கு ஆயத்தமாகவும், சிலுவை
மரணத்திற்கு உட்பட்டவராகவும் ஆனார். அதனாலே, கடவுள் அவரை
மிக உயர்வாக உயர்த்தினார்..."
இங்கு நாம் காணும் விஷயம் என்னவென்றால், யேசுவின்
தாழ்மையான மரணம் தான் அவருடைய மகிமையின் அடிப்படை. நம்
வாழ்க்கையிலும் இதுவே உண்மை: நம்முடைய தியாகங்கள்,
நம்முடைய துன்பங்களை நம்பிக்கையுடன் ஏற்கும் மனோபாவம்
தான், இறைவனின் மகிமையை நம்மில் வெளிப்படுத்தும்.
சிலுவை: நம் வாழ்வின் வழிகாட்டி
இன்று நம் வீடுகளில், தேவாலயங்களில், நம் கழுத்தில்
நம்முடன் இருப்பது சிலுவைதான். ஆனால் அது வெறும் ஒரு
ஆபரணமாக இல்லாமல், நம் வாழ்க்கையின் பாதையை வழிநடத்தும்
ஒளியாக இருக்கவேண்டும்.
🕇சிலுவை என்பது தியாகத்தின் அடையாளம்.
🕇சிலுவை என்பது அன்பின் உச்சக்கட்டம்.
🕇சிலுவை என்பது வெற்றியின் அடையாளம்.
முடிவுரை: சிலுவையை வாழ்வில் எடுத்துச் செல்லுங்கள்
அன்புள்ளவர்களே, திருச்சிலுவையின் மகிமை விழாவான
இந்நாளில், நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் சிலுவையை
ஏற்று, அதை நம்பிக்கையுடனும் அன்புடனும் தாங்குவோம்.
நம்முடைய குற்றங்களை மன்னிக்கும் கர்த்தரின் அன்பை
நினைவுகூர்வோம். அவருடைய உயிர்ப்பை நம்மில்
வெளிப்படுத்தும் சாட்சியாக வாழுவோம்.
🕇திருச்சிலுவை நமக்காக ஒரு மீட்சியின் வழி!
🕇திருச்சிலுவை நமக்குள் ஒரு வாழ்வின் வலி!
🕇திருச்சிலுவை நம்மூடாக ஒரு அன்பின் வெற்றி!
🕇ஆமென்.
திருச்சிலுவையின் மகிமை சிறப்பு மறையுரை 4
",மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும் அவரிடம் நம்பிக்கை
கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.",
சிறப்பு மறையுரை:
இன்று நாம் திருச்சிலுவையை மகிமைப்படுத்துகிறோம். இது ஒரு
மரணக் கருவி அல்ல; இது உயிர்ப்பின் மரம். இது தண்டனையின்
அடையாளம் அல்ல; இது அன்பின் அடையாளம். இயேசு சிலுவையில்
உயர்த்தப்பட்டபோது, மனித வரலாற்றின் மிகப்பெரிய மாற்றம்
நிகழ்ந்தது - இருள் ஒளியாக மாறியது, மரணம் வாழ்வாக
மாறியது, சாபம் ஆசீர்வாதமாக மாறியது.
மோசே பாலைநிலத்தில் பாம்பை உயர்த்தியபோது, அதைப்
பார்த்தவர்கள் வாழ்ந்தனர். அது ஒரு முன்னோட்டம். இயேசு,
உண்மையான பாம்பாக, சிலுவையில் உயர்த்தப்பட்டார். ஆனால்
இம்முறை, அவரைப் பார்க்கும் நாம் மட்டுமல்ல, உலகம்
முழுவதும் வாழும் மக்கள் நித்திய வாழ்வு பெறுகிறார்கள்.
ஏனெனில், அவர் நம்மை நோக்கி அல்ல, நம்மை மீட்க வந்தார்.
சிலுவை நமக்கு சொல்கிறது:
🕇 கடவுளின் அன்பு எல்லையற்றது.
🕇 மன்னிப்பு கடவுளின் இயல்பாகும்.
🕇 நம்முடைய வாழ்க்கையும், நம்முடைய துன்பங்களும்,
கடவுளின் அன்பில் பொருள் பெறுகின்றன.
இன்று நாம் சிலுவையை முத்தமிடுகிறோம். அது ஒரு அடையாளம்
மட்டுமல்ல; அது நம்முடைய வாழ்வின் பாதை. நாம் நம்முடைய
சிலுவைகளைச் சுமக்கும்போது, இயேசுவின் சிலுவையை நினைவில்
கொள்வோம். அவர் நம்மைத் தனியாக விடவில்லை. அவர் நம்முடன்
சிலுவையில் இருந்தார்; இன்றும் நம்முடன் இருக்கிறார்.
சிலுவையை மகிமைப்படுத்துவது என்றால் என்ன?
🕇அது நம்முடைய வாழ்வில் அன்பை தேர்ந்தெடுப்பது.
🕇நம்முடைய பகைவர்களை மன்னிப்பது.
🕇துன்பத்தில் நம்பிக்கையை இழக்காமல் இருப்பது.
🕇இயேசுவைப் போல, நம்மையே அடுத்தவருக்காக அர்ப்பணிப்பது.
இறுதி அழைப்பு:
சிலுவையை முத்தமிடுவோம்.
ஆனால் அதைவிட முக்கியம் சிலுவையின் அன்பை நம் இதயத்தில்
ஏற்றுக்கொள்வோம்.
சிலுவையை மகிமைப்படுத்துவது இயேசுவைப் போல வாழ்வதே.
ஆமென்.
இறையேசுவில் பிரியமானவர்களே,
இன்று நாம் திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக்
கொண்டாடுகிறோம். சிலுவை என்பது நம் மனதில் எத்தகைய
எண்ணங்களை ஏற்படுத்துகிறது? ஒரு காலத்தில் சிலுவை என்பது
மரண தண்டனையின், அவமானத்தின், வன்முறையின் அடையாளமாக
இருந்தது. ஆனால், இயேசு கிறிஸ்து சிலுவையில் தம்மையே
பலியாகக் கொடுத்து, அதை மீட்டுக்கொண்டார். சிலுவையின்
வழியாய், அது இழிவின் சின்னமாக இல்லாமல், வெற்றியின்,
மகிமையின், நித்திய வாழ்வின் அடையாளமாக மாறியது.
சிலுவை: மீட்பின் அடையாளம்
விவிலியத்தில், இஸ்ரயேல் மக்கள் வெண்கலப் பாம்பைப்
பார்த்து உயிர்பெற்ற நிகழ்வை முதல் வாசகத்தில் கேட்டோம்.
பாலைநிலத்தில் பாம்புகளால் கடிக்கப்பட்டு, மரணத்தின்
வாயிலில் நின்ற மக்களுக்கு, உயர்த்தப்பட்ட அந்த வெண்கலப்
பாம்பை பார்ப்பது மட்டுமே வாழ்வைத் தந்தது. அதேபோல,
பாவத்தாலும், தீமையாலும் அழிவின் பிடியில் சிக்கியிருந்த
மனிதகுலத்திற்கு, சிலுவையில் உயர்த்தப்பட்ட கிறிஸ்துவை
நோக்குவது, நித்திய வாழ்வைத் தருகிறது. சிலுவை என்பது
வெறுமனே ஒரு மரம் அல்ல, அது இறைவனின் எல்லையற்ற அன்பின்
வெளிப்பாடு. "கடவுள் தம் ஒரே மகனை நம்புவோர் எவரும்
அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அவரை அளிக்கும்
அளவுக்கு உலகின்மேல் அன்பு கூர்ந்தார்" (யோவா. 3:16) என்று
இன்றைய நற்செய்தி நமக்கு நினைவூட்டுகிறது. இந்த அன்புதான்
சிலுவையின் மையப்புள்ளி.
சிலுவை: தாழ்ச்சியின் வழி
இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், கிறிஸ்து தம்மையே
தாழ்த்தி, ஊழியர் வடிவெடுத்ததைப் பற்றிப் பேசுகிறார்.
கடவுளுக்கு நிகராக இருந்த இயேசு, தம்மை வெறுமையாக்கி,
சிலுவைச் சாவுவரை கீழ்ப்படிந்தார். இந்தத் தாழ்ச்சியும்,
கீழ்ப்படிதலும்தான் அவரை கடவுள் எல்லாப் பெயர்களுக்கும்
மேலாக உயர்த்தக் காரணமானது. இன்று நாம் நம் வாழ்க்கையில்
சிலுவையைச் சுமப்பது என்பது துன்பங்களை, தோல்விகளை,
அவமானங்களை ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல; அது இயேசுவின்
தாழ்ச்சியையும், கீழ்ப்படிதலையும் நம் வாழ்வின் நெறியாகக்
கொள்வதாகும்.
சிலுவை: நமது வாழ்வு
சிலுவை என்பது வெறும் கடந்த கால நிகழ்வு அல்ல, அது நம்
ஒவ்வொரு நாளின் அனுபவம். நமது குடும்பத்தில் உள்ள
பிரச்சனைகள், வேலையிடத்தில் உள்ள சவால்கள், நோய், தனிமை,
எதிர்பாராத தோல்விகள் இவை அனைத்தும் நமது சிலுவைகள்.
இயேசுவின் சிலுவை, இந்த சிலுவைகளை அர்த்தமுள்ளதாக்குகிறது.
இயேசுவின் அன்பை உணர்ந்து, இந்த சிலுவைகளை ஏற்றுக் கொண்டு
சுமக்கும்போது, அவை நம்மை வதைக்கும் சுமையாக இல்லாமல்,
நம்மை ஆண்டவரிடம் நெருங்கிச் சேர்க்கும் வழிகளாக மாறும்.
அன்பார்ந்தவர்களே, இன்று நாம் சிலுவையை ஆராதிக்கும்போது,
நம் வாழ்வின் சிலுவைகளை தைரியத்துடன் ஏற்கவும், இயேசுவைப்
பின்பற்றி தாழ்ச்சியுடன் வாழவும் உறுதி எடுப்போம். சிலுவை
நமக்கு அளிக்கும் நம்பிக்கை, சிலுவை நமக்கு அளிக்கும்
வலிமை, சிலுவை நமக்கு அளிக்கும் நிலைவாழ்வு இவை
அனைத்திற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். ஆமென்.
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ