Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் விடாலியன் ✠(St. Vitalian of Capua)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / Juill- 16)
 ✠ புனிதர் விடாலியன் ✠(St. Vitalian of Capua)
 
ஆயர் :
(Bishop)

பிறப்பு : தெரியவில்லை
கௌடியம்
(Caudium)

இறப்பு : கி. பி. 699
மோன்ட் வர்ஜின்
(Monte Vergine)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள் : ஜூலை 16

பாதுகாவல் :
கடன்ஸரோ (Catanzaro); ஸ்பெரனைஸ் (Sparanise); சேன் விடாலியனோ (San Vitaliano)

புனிதர் விடாலியன், "கபுவா" (Capua) மறைமாவட்டத்தின் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஆயர் ஆவார்.

ரோமன் கத்தோலிக்க மறைசாட்சிகளின் பதிவுகள் (Roman Martyrology) மற்றும் புனிதர் ஜெரோம் (Saint Jerome) எழுதிய மறைசாட்சிகளின் பதிவுகள் (Martyrologium Hieronymianum) ஆகியவற்றின்படி, புனிதர் விடாலியன் பண்டைக்கால "கௌடியன்" (Caudium) நகர வாசி என்று அறியப்படுகிறது. இந்நகர், இன்றைய "மான்டசர்சியோ" (Montesarchio) நகருக்கு ஒத்திருக்கிறது. அவர் கபுவாவின் (Capua) இருபத்தி ஐந்தாவது ஆயராகவும், "பெனெவென்டோ" (Benevento) மறைமாவட்ட ஆயர் என்றும் கருதப்படுகிறார்.

"பெனெவென்டோ" (Benevento) மறைமாவட்டத்தின் பன்னிரெண்டாம் நூற்றாண்டின் சரித்தியவியலாளர்களின் கூற்றின்படி, விடாலியன், "மோன்ட் வர்ஜின்" (Monte Vergine) எனுமிடத்தில் ஒரு சிற்றாலயம் கட்டுவதில் ஈடுபட்டிருந்தார்.

உண்மையில், விடாலியனின் விருப்பத்திற்கு மாறாகவே அவர் கபுவாவின் ஆயராக அறிவிக்கப்பட்டார். ஆனால், உடனடியாக அவரது எதிரிகளால் பல்வேறு குற்றங்களும் பாவங்களும் அவர்மீது சுமத்தப்பட்டன. விடாலியன் தன்னை பாதுகாக்க முயற்சிகள் செய்தார். அவர் தாம் குற்றமற்றவர் என நிரூபித்ததன் பின்னர் நகரை விட்டு சென்றார். துரதிர்ஷ்டவசமாக பிடிபட்ட அவர், ஒரு தோல் பையில் அடைக்கப்பட்டு, மத்திய இத்தாலியிலுள்ள "கரிக்லியானோ" (Garigliano) ஆற்றில் எறிந்தனர்.

திருச்சபை பாரம்பரியத்தின்படி, விடாலியன் தெய்வீக அருளால் ஆற்றிலிருந்து காப்பாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், விடாலியன் "ஒஸ்டியா" (Ostia) நகர் சென்றார். இதற்கிடையே, பாவமற்ற விடாலியனை தண்டித்த காரணத்திற்காக கபுவா நகரம் இறைவனால் சோதிக்கப்பட்டது. அங்கே பஞ்சம் மற்றும் பிளேக் போன்ற கொள்ளை நோய்கள் தலை விரித்தாடின. கபுவா மக்கள், திரும்பி வருமாறு விடாலியனை கெஞ்சினர். ஆனால், அதனை மறுத்துவிட்ட அவர், "மோன்ட் வர்ஜின்" (Monte Vergine) சென்றார். அங்கே ஒரு சிற்றாலயம் கட்டி, இறைவனின் அதி தூய கன்னித் தாய் மரியாளுக்கு அதனை அர்ப்பணித்தார். பின்னர், கி.பி. 699ம் ஆண்டு அங்கேயே அவர் மரித்தார்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா