Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் இஞ்ஞாசியார் ✠(St. Ignatius of Loyola)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை/ July 31)
✠ புனிதர் இஞ்ஞாசியார் ✠(St. Ignatius of Loyola)

 கத்தோலிக்க குரு/ இயேசு சபை நிறுவனர் :
(Catholic Priest/ Founder of Society of Jesus (Jesuits)

பிறப்பு : அக்டோபர் 23, 1491
அஸ்பெய்டா, லயோலா, கிபுஸ்கோவா, பாஸ்க் நாடு, கேஸ்டில் அரசு (தற்போதைய ஸ்பெயின்)
(Azpeitia, Loyola, Gipuzkoa, Basque Country, Kingdom of Castille (Currently Spain)

இறப்பு : ஜூலை 31, 1556 (வயது 64)
ரோம் நகரம், திருத்தந்தையர் மாநிலங்கள்
(Rome, Papal States)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)

முக்திபேறு பட்டம் : ஜூலை 27, 1609
திருத்தந்தை ஐந்தாம் பவுல்
(Pope Paul V)

புனிதர் பட்டம் : மார்ச் 12, 1622
திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி
(Pope Gregory XV)

நினைவுத் திருவிழா : ஜூலை 31

சித்தரிக்கப்படும் வகை :
நற்கருணை, குருக்களின் உடை, நூல், திருச்சிலுவை

பாதுகாவல் :
சான் செபாஸ்டியன் மற்றும் பில்பாவோ மறைமாவட்டங்கள் (Dioceses of San Sebastin and Bilbao); பிஸ்கே & கிபூஸ்கோவா (Biscay and Gipuzkoa); பாஸ்க் நாடு (Basque Country); பிலிப்பைன்ஸ் இராணுவ கட்டளையகம் (Military Ordinariate of the Philippines); இயேசு சபை (Society of Jesus); வீரர்கள் (Soldiers); கல்வியாளர் மற்றும் கல்வி (Educators and Education), பெலோ ஹொரிசோன்ட் (Belo Horizonte), மினாஸ் கேரைஸ் (Minas Gerais), பிரேசில் (Brazil); ஜூனின் (Junín), பீனோஸ் எயர்ஸ் (Buenos Aires), அர்ஜென்டினா (Argentina), ஏன்ட்வேர்ப் (Antwerp), பெல்ஜியம் (Belgium)

புனிதர் லயோலா இஞ்ஞாசியார், ஸ்பெயின் நாட்டின் "பாஸ்க்" (Spanish Basque priest) குடும்பத்தைச் சேர்ந்த கத்தோலிக்க குருவும், இறையியலாளரும் (Theologian), இயேசு சபை (Society of Jesus) என்றழைக்கப்படும் ஆன்மீக துறவு சபையினை நிறுவியவருமாவார். அவரே அச்சபையின் முதல் பெரும்தலைவருமாவார். இவர் கத்தோலிக்க மறுமலர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்தவர் ஆவார். கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரம் மற்றும் நிலைமுறைக்கு எதிர்ப்பின்றி கீழ்ப்படிதல் தமது தலையாய கடமை என்ற இவர், தமது சபையினரையும் அவ்வாறே செயல்பட ஊக்குவித்தார்.

"இனிகோ லோபெஸ் டி லயோலா"(ínigo López de Loyola) எனும் இயற்பெயர் கொண்ட இவரது திருமுழுக்குப் பெயர் "இனிகோ"(ínigo) ஆகும். இவர் தமது திருமுழுக்குப் பெயரான "இனிகோ"என்பதை விடுத்து, இலத்தீன் பெயரான "இக்னேஷியஸ்"(Latin name "Ignatius") எனும் பெயரை எப்போது ஏற்றுக்கொண்டார் என்பதற்கான தெளிவான குறிப்புகள் ஏதும் இல்லை. தமது பெற்றோரின் பதின்மூன்று குழந்தைகளில் கடைசி குழந்தையான இவர் பிறந்து சிறிது காலத்திலேயே இவரது தாயார் மரித்துப் போனார். உள்ளூரிலுள்ள இரும்புக்கொல்லன் ஒருவரின் மனைவியான "மரியா டி கரின்"(María de Garín) என்பவரால் வளர்க்கப்பட்டார்.

இளைஞன் இனிகோவிற்கு இராணுவத்தின் மீதும், இராணுவ பயிற்சிகளின் மீதும் தீராத மோகம் இருந்தது. இராணுவத்தில் சேர்ந்து பெரும் புகழ் பெறவேண்டும் என்ற ஆசையும் இருந்தது. இனிகோ தமது பதினேழு வயதில் இராணுவத்தில் சேர்ந்தார். பதினெட்டு வயது முதல், தமது இராஜதந்திர மற்றும் தலைமைத்துவ குணங்களால் பல போர்களில் சிறு காயம்கூட இல்லாது வெற்றி பெற்று திரும்பினார். ஆனால் 1521ம் ஆண்டு நடந்த "பாம்பிலோனா"போர் (Battle of Pamplona) பெரும் மாற்றம் தந்தது. ஒரு பிரெஞ்சு-நவரேச் (French-Navarrese expedition) அதிரடி தாக்குதல் படை, மே 20, 1521ல் பாம்பிலோனாவை தாக்கியது. ஒரு பீரங்கி குண்டு வெடித்ததில் அவரது கால்கள் மோசமாக காயமடைந்தன. கால்களில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இனிகோ லயோலாவிலுள்ள தமது தந்தையின் கோட்டைக்குத் திரும்பினார். மருத்துவத்தில், மயக்க மருந்தியல் (Anesthetics) பற்றின விழிப்புணர்வுகளோ அது சம்பந்தமான கண்டுபிடிப்புகளோ இல்லாத சகாப்தத்தில், அவரது கால்களில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவுகளை சரிசெய்வதற்காக பல அறுவை சிகிச்சைகள் நடந்தன. இந்த அறுவை சிகிச்சைகளின் இறுதியில், அவரது இடது கால் வலது காலைவிட சிறிதே குள்ளமாகிப் போனது. இனிகோ தமது வாழ்நாள் முழுதும் நொண்டி நடக்கும் ஊனமாகவே வாழ்ந்தார்.

அறுவை சிகிச்சைகளின் பின்னர் ஓய்வின்போது, அவர் ஒரு ஆன்மீக மனமாற்றத்தை உணர்ந்தார். அது அவரை ஆன்மீக வாழ்க்கைக்கு அழைப்பு விடுத்தது. அக்காலத்தில், மருத்துவமனைகள் ஆன்மீக சபைகளாலேயே நடத்தப்பட்டன. படுக்கையிலிருந்த நோயாளிகளுக்காக படிப்பதற்காக ஆன்மீக புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. அவ்விதம், இனிகோ தமக்கு கிடைத்த புத்தகங்கள் மூலம் இயேசுவின் வாழ்க்கை மற்றும் புனிதர்களின் வாழ்க்கை பற்றின தொடர்களை படிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. "சாக்ஸோனியின் லூடால்ஃபின் டி விட்டா கிறிஸ்டி" (De Vita Christi of Ludolph of Saxony) எனும் புத்தகம் அவருள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புத்தகம் அவரது முழு வாழ்க்கையையும் பாதித்தது. கடவுளுக்கு தன்னை அர்ப்பணிப்பதற்கு ஊக்கமளித்தது. அசிசியின் பிரான்சிஸ் மற்றும் இதர பெரும் துறவிகளின் உதாரணத்தை பின்பற்ற உதவியது.

மார்ச் மாதம் 1522ம் ஆண்டு, மீண்டும் நடக்குமளவிற்கு அவர் குணமானார். ஸ்பெயின் நாட்டின் "கடலோனியாவிலுள்ள"(Catalonia) "மான்ட்செர்ராட்"(Montserrat) மலையிலுள்ள தூய மரியாளின் "பெனடிக்டைன்"துறவு (Benedictine monastery of Santa Maria de Montserrat) மடத்திற்கு சென்றார். அங்கே அவர் தங்கியிருந்த இரவு விழித்திருந்த தியானத்தின்போது, அன்னை மரியாள் கைகளில் குழந்தை இயேசுவுடன் இனிகோவுக்கு காட்சியளித்தார். பின்னர், அவர் அங்கிருந்த அன்னை மரியாளின் தூய சொரூபத்தின் முன்பு தமது குத்து வாளையும் பட்டயத்தையும் தொங்க விட்டார்.

1523ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இனிகோ புனித பூமிக்கு பயணமானார். அங்கேயே தங்கிவிடும் எண்ணத்துடன் சென்ற அவரை ஃபிரான்சிஸ்கன் (Franciscans) சபையினர் திருப்பி ஐரோப்பாவுக்கு அனுப்பினர்.

"பார்சிலோனாவுக்கு"(Barcelona) திரும்பிச் சென்ற இனிகோ, தமது முப்பத்துமூன்று வயதில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்காக ஆயத்தம் செய்யும் வகையில், ஒரு பள்ளியில் சேர்ந்து இலக்கணம் கற்க ஆரம்பித்தார். பின்னர் "அல்காலா" (University of Alcal) பல்கலையில் இணைந்து 1524 முதல் 1534 வரை இறையியலும் இலத்தீன் மொழியும் கற்றார். பின்னர் பாரிஸ் சென்று புகழ் பெற்ற பாரிஸ் பல்கலையில் இணைந்து படித்தார்.

ஆகஸ்ட் மாதம், 15ம் தேதி, 1534ல் இக்னேஷியசும் அவரது ஆறு துணைவர்களும் லயோலாவிலுள்ள "தூய பேதுரு ஆலய சிற்றாலயத்தில்" (chapel of church of Saint Peter) சந்தித்து வாழ்நாள் முழுது இணைந்து பணியாற்றுவதற்கான சத்திய பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.

1539ம் ஆண்டு, இக்னேஷியஸ் "புனிதர் பீட்டர் ஃபாபெர்"(Saint Peter Faber) மற்றும் "புனிதர் ஃபிரான்சிஸ் சேவியர்"(Saint Francis Xavier) ஆகியோருடன் இணைந்து "இயேசு சபையை"(Society of Jesus) உருவாக்கினார். இச்சபை 1540ம் ஆண்டு திருத்தந்தை "மூன்றாம் பவுல்"(Pope Paul III) அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. இக்னேஷியஸ் இச்சபையின் முதல் பெரும் தலைவராக (Superior General) தேர்வு செய்யப்பட்டார். இக்னேஷியஸ் தமது துணைவர்களை ஐரோப்பா முழுதும் அனுப்பி பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் குருத்துவ கல்லூரிகளை நிறுவினார்.

ரோம் மற்றும் இத்தாலி முழுதும் பரவியிருந்த மலேரியா காய்ச்சலுக்கு பலியான இக்னேஷியஸ், 1556ம் ஆண்டு, ஜூலை மாதம், 31ம் நாளன்று, மரித்தார். திருத்தந்தை ஐந்தாம் பவுல் (Pope Paul V) இவருக்கு 1609ம் ஆண்டு முக்திபேறு பட்டம் அளித்தார். திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி (Pope Gregory XV), 1622ம் ஆண்டு இவரை புனிதராக அருட்பொழிவு செய்வித்தார்.

1922ம் ஆண்டு, இவரை அனைத்து ஆன்மீக தியானத்திற்கு (All spiritual retreats) பாதுகாவலராக திருத்தந்தை "பதினொன்றாம் பயஸ்"(Pope Pius XI) அறிவித்தார்.

இவரின் நினைவுத் திருவிழா நாள் ஜூலை 31 ஆகும்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா