![]() |
||
தூய ஆவியார் நவநாள் - நாள்-02 தொடக்க செபம் தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென். எளியவர் தந்தாய், வந்தருள்வீர். நன்கொடை வள்ளலே வந்தருள்வீர். இருதய ஒளியே வந்தருள்வீர். தூய ஆவியே, எங்கள் ஆருயிரே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். எங்களில் ஒளியேற்றி எங்களை வழி நடத்தியருளும். எங்களுக்குத் திடம் அளித்து எங்களைத் தேற்றியருளும். நாங்கள் செய்ய வேண்டியவற்றை எங்களுக்குச் சொல்லி ஆணையிடும். உமது திட்டத்தை எங்களுக்குத் தெரியப்படுத்தினால் போதும். எப்படி நாங்கள் நடக்க வேண்டுமென்று நீர் விரும்புவதை நாங்கள் அன்புடன் ஏற்று அடிபணிகிறோம். ஆமென். தூய ஆவியாரை நோக்கி செபம் தூய ஆவியே எழுந்தருள்வீர். வானினின்று எமது பேரொளியின், அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர். எளியவர் தந்தாய், வந்தருள்வீர். நன்கொடை வள்ளலே வந்தருள்வீர். இருதய ஒளியே வந்தருள்வீர். உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தண்மையும் தருபவரே, உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே, உன்னத பேரின்ப ஒளியே, உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர். உமதருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை. நல்லது அவனில் ஏதுமில்லை. மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர். வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதைக் குளிர் போக்கிடுவீர். தவறிப்போனதை ஆண்டருள்வீர். இறைவா, உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர். புண்ணிய பலன்கள் வழங்கிடுவீர். இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர். அழிவிலா இன்பம் அருள்வீரே. ஆமென். வாசகம் : யோவான் 14 : 15 17, 26 27 தேவ பயம் என்னும் கொடை: தூய ஆவியார் அருளும் தேவ பயம் என்னும் கொடை, நாம் கடவுள் மீது இறையாண்மை கொண்ட மரியாதை கொள்ள நம்மை நிரப்பி, நமது கொடிய பாவத்தினால் நாம் கடவுளுக்கு எவ்வித வருத்தமும் விளைவிக்காமல் இருக்கச் செய்கிறது. இது, நமது சிந்தனையிலிருக்கும் நரகத்தைப் பற்றிய பயமல்ல. நமது விண்ணகத் தந்தையின் மேலுள்ள இறை பக்தியின் உணர்வினாலும் நாம் அவரது பிள்ளைகள் என்ற மரியாதையினாலும் எழுகின்ற பயம். இதுவே நம்மை இவ்வுலகச் சிற்றின்பங்களிலிருந்து பிரித்து, எவ்விதத்திலும் கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்க முடியாது என்ற நமது ஞானத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் பயம். கடவுளுக்கு பயப்படுவோர் தங்கள் இதயத்தைத் திடப்படுத்தி, அவருடைய கண்களுக்கு முன்பாகத் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வர். செபம் : ஓ தெய்வீகத் தேவ பயத்தின் ஆவியாரே வாரும். வந்து என் உள்மனதை ஊடுருவி, என் கடவுளும் ஆண்டவருமாகிய உம்மை நோக்கி என்றென்றும் என் முகத்தைத் திருப்பி, உம்மை வருந்தச் செய்யும் எல்லா செயல்களைக் களையும்படிச் செய்து, விண்ணகத்தில் உம்முடைய தெய்வீக மகத்துவத்தின் தெளிவான கண்களுக்கு முன்பாக என்னைத் தகுதியுள்ளவராக்கியருளும். மூவொரு கடவுளின் ஒன்றிப்பில், உலகம் முடியும் வரை என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென். கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை) மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை) மூவொரு இறைவன் புகழ் செபம் (7 முறை) தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம் (ஒன்பது நாள்களும் சொல்ல வேண்டும்) விண்ணகத் தந்தையோடும் அவரது திரு மகனாம் இயேசு கிறிஸ்துவோடும் உறவாடும் தூய ஆவியாரே! விண்ணகச் சாட்சிகளின் பெருங்கூட்டத்திற்கு முன் முழந்தாள்படியிட்டு, என்னையும், என் ஆன்மாவையும், என் உடலையும் அர்ப்பணிக்கிறேன். உமது தூய்மையின் பிரகாசத்தையும், உமது தவறாத நீதியின் திறமையையும், உமது அன்பின் வலிமையையும் நான் போற்றிப் புகழ்கிறேன். என் ஆன்மாவின் வல்லமையும் ஒளியும் நீரே. நான் இருப்பதும் இயங்குவதும் வாழ்வதும் உம்மாலே தான். என் அவநம்பிக்கையினாலும் என் அற்பப் பாவங்களினாலும் உம்மை நான் ஒருபோதும் துயரத்துக்குள்ளாக்காமலிருக்க என் முழு உள்ளத்தோடு உம்மை நோக்கி மன்றாடுகிறேன். என் ஒவ்வொரு சிந்தனைகளையும் இரக்கத்துடன் காத்து, உமது ஒளியைக் காணவும், உமது குரலைக் கேட்கவும், உமது இரக்கமுள்ள ஊக்கங்களைப் பின்பற்ற தயை புரியும். நான் உம்மை என்றும் பற்றிக் கொண்டு, என் பலவீனத்திலே என்னைக் காக்கும்படி என்னை உமக்களிக்கிறேன். இயேசுவின் துளையுண்ட கால்களைப் பிடித்து, அவருடைய ஐந்து திருக் காயங்களையும் பார்த்து, அவருடைய திரு இரத்தத்தில் நம்பிக்கை கொண்டு, குத்தித் திறக்கப்பட்ட விலாவையும் இதயத்தையும் வணங்கி, ஆராதனைக்குரிய ஆவியாரே, என் பலவீனத்தின் உதவியாளரே, நான் என்றும் உமக்கு எதிராகப் பாவம் செய்யாதவாறு, உம் அருளினால் என்னைக் காத்தருளும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் தூய ஆவியாரே, ஆண்டவரே பேசும். உம் அடியான் கேட்கிறேன் என்று நான் எங்கும் எப்பொழுதும் சொல்ல உமதருளைப் பொழிந்தருளும். ஆமென். தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம் (ஒன்பது நாள்களும் சொல்ல வேண்டும்) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, விண்ணகத்திற்குச் செல்லும் முன் உமது திருத்தூதர்கள் மற்றும் சீடர்களின் ஆன்மாக்களின் வேலைகளை நிறைவேற்ற தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித்தீரே. உமது இரக்கத்தின் அன்பின் வேலைகளை எங்கள் ஆன்மாக்களில் முழுமையாக்க, அதே தூய ஆவியாரை எங்களுக்கும் தந்தருளும். அழிந்து போகும் இவ்வுலகச் செல்வங்கள் மீது பற்று கொள்ளமல், நிலைவாழ்வை அளிக்கும் உன்னதச் செல்வத்தின் மீது ஆசை கொள்ள உமது ஞானத்தின் ஆவியைப் பொழிந்தருளும். உமது தெய்வீக உண்மையின் ஒளியால் எங்களது மனதை விழிப்பூட்ட உமது புரிந்துணர்வின் ஆவியைப் பொழிந்தருளும். கடவுளை மட்டும் மகிழ்வித்து விண்ணகத்தை அடையும் வழியைத் தேர்ந்தெடுக்க உமது ஆலோசனையின் ஆவியைப் பொழிந்தருளும். எங்கள் மீட்புக்கு எதிரானத் தடைகளைச் சகித்து, எங்களது சிலுவையை சுமந்து உம்மைப் பின்செல்ல உமது வலிமையின் ஆவியைப் பொழிந்தருளும். கடவுளை அறிய, எங்களை அறிய, புனிதர்களின் வழியைப் பின்பற்றி முழுமை அடைய உமது அறிவின் ஆவியைப் பொழிந்தருளும். கடவுளுக்கு செய்யும் சேவையில் இனிமையும் மகிழ்ச்சியும் அடைய உமது பக்தியின் ஆவியைப் பொழிந்தருளும். நாங்கள் கடவுளிடம் அன்பான பயபக்தி கொண்டு, கடவுளை வருத்தப்படுத்தும் எந்தச் செயலையும் செய்யமலிருக்க உமது தேவபயத்தின் ஆவியைப் பொழிந்தருளும். ஆண்டவரே உமது உண்மைச் சீடர்களின் அடையாளத்தால் எங்களை முத்திரையிட்டு, உமது ஆவியால் எங்களை வழிநடத்தியருளும். ஆமென். இறுதி செபம் என்றென்றும் வாழும் இறைத் தந்தையே!உம்மை ஆராதிக்கிறோம், எங்களை ஆசீர்வதியும். என்றென்றும் வாழும் இறை மகனே! உம்மை ஆராதிக்கிறோம், எங்களை ஆசீர்வதியும். என்றென்றும் வாழும் இறை ஆவியே! உம்மை ஆராதிக்கிறோம், எங்களை ஆசீர்வதியும். மூவொரு கடவுளாகிய எங்கள் இறைவா! உம்மை ஆராதிக்கிறோம், எங்களை ஆசீர்வதியும். எம்மைப் படைத்தத் தூய தந்தையே!உமக்கு நன்றி கூறுகின்றோம். எம்மைப் மீட்டத் திரு மகனே! உமக்கு நன்றி கூறுகின்றோம். எம்மைத் தூய்மைப்படுத்தும் தூய ஆவியே! உமக்கு நன்றி கூறுகின்றோம். தூய ஆவியே என்றும், வற்றாத இறை அன்பே!உம்மை வணங்கி ஆராதிக்கிறோம். தூய ஆவியாரின் பத்தினியாகிய தூய கன்னி மரியாவே!எங்கள் ஆன்மாவைத் தூய ஆவியாரின் இல்லமாக்க பரிந்துரை செய்தருளும். செபிப்போமாக நிறையுள்ளவராகிய எங்கள் வானகத் தந்தையே! பனி போலத் தூய ஆவியாரை எங்கள் இதயத்தின் ஆழத்தில் இறங்கி வரச் செய்து எங்களைத் தூயவராக்கி, எங்கள் ஆன்மா வளம் பெறச் செய்தருள்வீராக. ஆமென். தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே ஆமென். மரியே வாழ்க |