Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

       தப்பிக்க முடியுமா?

     
    

ஒரு நாள், பணக்காரன் ஒருவன் தனது வேலைக்காரனோடு தோட்டத்திற்குள் சென்றான். வேலைக்காரன் அங்கே நின்று கொண்டிருந்த மரணத்தைப் பார்த்துப் பயந்து ஓடி, பணக்காரனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு மன்றாடுகிறான்.  பணக்காரனோ அவனிடமிருந்த மிக வேகமாக ஓடக் கூடிய குதிரை ஒன்றை வேலைக்காரனிடம் கொடுக்க, வேலைக்காரன் டெஹரான் பட்டணத்திற்கு ஓடி விடுகிறான். அவன் ஓடிய பிறகு பணக்காரன் சாவைப்பார்த்து, எங்கே வந்தாய் என்று கேட்கிறான். அதற்கு சாவோ, வேலைக்காரனைச் சந்தித்து அவனிடம் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்ல வேண்டும் என்றது. அதற்குப் பணக்காரன் அவனை முக்கியமான வேலைக்காக வெளியில் அனுப்பியுள்ளேன். செய்தியை என்னிடம் சொல். நான் சொல்லி விடுகிறான் என்றான்.
அதற்கு சாவு " ஒன்றுமில்லை! இன்று இரவு அவனது உயிரை நான் டெஹரான் பட்டணத்தில் எடுக்கப் போகிறேன்" என்று சொல்ல வந்தேன் என்றது.

ஆம் மரணம் யாரையும் விட்டு வைக்காது. மரணத்திற்குப் பயந்து யாரும் தப்பித்து ஓடி ஒளியவும் முடியாது. ஏழை, பணக்காரர், வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடும் கிடையாது. மரணத்தை மிகப் பக்குவமாக நம்மால் வரவேற்க முடியும்

விடைபெறுவது, புறப்படுவது, அன்புடன் ஒருவர் கரங்களை மற்றவர் பற்றியபடி பாசத்துடன் பிரிவது ஓர் அருமையான கலை. வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் மட்டுமல்ல, வாழ்வின் நிறைவுக்கும், அதாவது மரணத்துக்கும் இது பொருந்தும்.

இரவு திடீர் என்று எழுந்து தம் சீடரை எழுப்பிச் சில தபால் அட்டைகளைக் கொண்டு வரச் சொன்னார். பிறகு இரவு கண் விழித்து அந்தக் கடிதங்களை எழுதிவிட்டு சீடரிடம் " நாளை காலை இவற்றைத் தபாலில் சேர்த்துவிடு" என்று சொல்லி விட்டு படுத்துக்கொண்டார். மறுநாள் காலை சீடரும் கர்ம சிரத்தையாகக் கடிதங்களை தபாலில் சேர்த்து விட்டு வந்துவிட்டார். கடிதத்தில் எழுதியிருந்த செய்தியையும் படிக்கவில்லை.

கடிதங்கள் எழுதி இரண்டு மூன்று நாட்கள் கடந்த இரவில் குரு மரணமடைந்தார். எல்லோருக்கும் காலை தகவல் அனுப்ப வேண்டும் என்று சீடர் நினைத்து கவலைப்பட்டார். ஆனால், காலை முதல் குருவின் அன்பர்கள் பலரும் செய்தி அறிந்தவர்களாக வரிசையாக வந்து கொண்டிருந்தார்கள். ஆச்சரியப்பட்ட சீடர் " குருவின் மரணம் உங்களுக்கு எப்படி தெரியும்" ? என்று கேட்டதும் பலரும் தபால் அட்டையைக் காட்டினார்கள்;. இன்ன நாள், இந்த நேரம் என்று குறித்து அன்று தாம் மரணம் அடைந்து விட்டதாகக் குருவே தம் கைப்பட கடிதம் எழுதி இருந்தார். மரணம் கூட அவருக்கு வெறும் தகவல் அவ்வளவே. அதையும் அவரே தேர்ந்தெடுக்கிறார். எத்தனைப் பக்குவம் பாருங்கள்.

மரணத்தைக் கூட அழகான விடைபெறும் நிகழ்வாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் நமக்கும் வேண்டும். பழைய நைந்து போன ஆடையை மாற்றிவிட்டு புதிய ஆடையை அணிவது போன்றது, " இறப்புக்குப் பிறகு செத்த உடம்பை உதறிவிட்டு புதிய உடம்பைப் பெறுகிறது நமது ஆன்மா" . என பகவத் கீதை கூட சொல்கிறது.

-பிறக்கும்போது அழுகின்ற மனிதன் இறக்கும்போதும் அழுகிறான் என்றால், இறக்கும்போதும் அவன் குழந்தையாகவே இறக்கிறான் என்பது பொருள்.

-நாம் அனைவருமே சாக மாட்டோம். ஆனால் அனைவருமே வேற்றுரு பெறுவோம்.(1கொரி.15:51) வேற்றுரு பெற நம்மை நாம் அனுதினமும் தயாரிப்போம். அப்போது நாம் மரணத்தைக் கண்டுத் தப்பி ஓடத் தேவையில்லை. பணி நிறைவு பெறும் போது, மன நிறைவுடன் ஓய்வு பெறுவது போல, கட்டாயம் மனநிறைவுடன் மரணத்தை பெறுவோம்.

இறப்புக்குப் பின் நிலை வாழ்வு உண்டு " கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர். தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்பு பெற உயிர்த்தெழுவர்" (யோவான் 5:28,29)

இம் மாதத்தில் இறந்த ஆன்மாக்களுக்காக நாம் செய்ய வேண்டியவை என்ன?
நித்திய இளைப்பாற்றியை இறந்து போன எல்லா ஆன்மாக்களுக்கும் இறைவா தாரும் என அடிக்கடி செபிக்கலாம்.

நம் குடும்பத்தில் இறந்த அனைவருக்காகவும், யாரும் நினையாத ஆத்துமாக்களுக்காகவும் அனுதினமும் குடும்ப செபம் ஒப்புக்கொடுத்து இறைவனிடம் செபிக்கலாம்.

இந்த மாதம் முழுவதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கல்லறைக்கு சென்று, நம்மை அதிகமாக அன்பு செய்து நம்மை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்த அனைவருக்காகவும் செபிக்கலாம்.

நம் குடும்பங்களில் இறந்த அனைத்து ஆன்மாக்களுக்காகவும் திருப்பலி ஒப்புக் கொடுக்கலாம்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கல்லறைக்கு சென்று சிறிது நேரம் தனியாக செபிப்பதில் செலவு செய்யலாம்.

இந்த நாட்களில், நான் ஏன் வாழ்கிறேன்? எதற்;காக வாழ்கிறேன்? எப்படி வாழ்கிறேன்? இந்த சமூகத்திற்கு நான் என்ன செய்திருக்கிறேன்? என்ன செய்யப் போகிறேன்? என்று நம்முடைய வாழ்க்கையை சற்று அலசிப் பார்க்கலாம்.

நம்முடைய நிலையற்ற வாழ்க்கையையும், நாம் இறக்கும் போது, எதையுமே கொண்டு; செல்லப் போவதில்லை என்பதையும் உணர்ந்து கடவுள் முன்னும், நமக்கு அடுத்திருப்பவரின் முன்னும், நம்மை நாம் தாழ்த்திக் கொள்ளலாம்.

நம்மை அதிகமாக அன்புச் செய்து நம்மை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்த நல்லவர்களின் ஒரு சில நல்ல பண்புகளை, நல்ல மதிப்பீடுகளை நம் வாழ்க்கையில் பின்பற்றலாம்.

நாம் ஆண்டவருக்குரிய ஒரு நல்ல வாழ்க்கை வாழவில்லையென்றால், மனம் வருந்தி, மன்றாடி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, அடுத்தவரை மையப்படுத்திய ஒரு புதுவாழ்க்கையைத் துவங்கலாம்.

நம்மை அதிகமாக நேசித்து இறைவனடி சேர்ந்தவர்களின் கனவை நனவாக்கலாம்.

கல்லறைகள் நம்மை பயமுறுத்தும் இடமல்ல. மாறாக நம்முடைய மூதாதையர்கள் இறைவனில் இளைப்பாறும் இடம். எனவே கல்லறைகளை தூய்மையாக்கி, சீர்படுத்தி அனைவரும் செபிக்கின்ற ஒரு புனித இடமாக மாற்றலாம்.

நம்முடைய குடுபங்களில் இறந்து போனவர்களின் நினைவாக, அவர்களுடைய பெயரில் நம்முடைய பங்குகளில் இருக்கும் ஏழைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம்.

நம்முடைய குடும்பங்களில் இறந்து போனவர்களின் நினைவாக, நம்முடைய பங்கில் வீடின்றி இருக்கும் நமது சகோதரர் ஒருவருக்கு ஒரு சிறு வீடாவது கட்டிக் கொடுக்கலாம்.

இப்படிச் செய்து நமக்கும் விண்ணகம் சென்றோருக்கும் புண்ணியங்கள் செய்து கொள்ளலாம்.

 
 

இறைவா இவரது திருப்பயணம்
இனிதே அமைந்திட இறைஞ்சுகின்றோம்